Tuesday, February 17, 2015

நடத்தை காட்டும் நல்வழி!

 - 13 -

அவர் எனக்கு அறிமுகமானது 1983ம் ஆண்டு.

நாங்கள் பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவர்களாக 83 - 84 காலப் பிரிவில் பயின்ற காலம் அது. உள்நாட்டுப் போர் வெடித்து இனக்கலவரம் நாட்டைக் கொளுத்திய காலம்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஆண்கள், பெண்கள் என முஸ்லிம் ஆசிரிய மாணவர்கள் 45 பேரளவில் வௌ;வோறு துறைகளில் கற்றோம்.

நண்பர் கணிதப் பயிற்சி ஆசிரியர். மன்னாரைச் சேர்ந்தவர். சாதாரண இளைஞனுக்குரிய ஆனால் உறுதியான உடற்கட்டு. குனிந்த பார்வை. முகம் நிறையக் கரு கருவென வளர்ந்து பொங்கிய தாடி. கருத்த உதடுகள். மிக அமைதியான சுபாவம். இதுதான் எனது நண்பர். முதிர் இளைஞனாக இருந்த போதும் சுருட்டே புகைப்பார்.

முஸ்லிம் நண்பர்கள் நிறைய இருந்தார்கள். உடற்கல்வி, விஞ்ஞானம், கணிதம், விவசாயம், ஆங்கில மொழி என்று அநேகமாக எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் ஆசிரிய மாணவர்கள் இருந்தார்கள். உடற்கல்வித் துறையில் மாத்திரமே அதிகம் பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். அப்போது எனக்கு வயது 23.

எல்லாத் துறைகளிலும் மொழியும் ஒரு பாடமாக இருந்ததைப் போல அவரவர் சமயமும் ஒரு பாடமாக இருந்தது. இஸ்லாம் வெள்ளிக் கிழமை இரண்டு பாட வேளைகள் - ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெறும்.  இதற்காக யாழ. பல்கலைக் கழக விரிவுரையாளரான எம்.எச். காலிதீன் மௌலவி அவர்கள் வருகை தருவார். அன்று ஒரே வகுப்பில் நாங்கள் அனைவரும் இணைவோம். கலாசாலை விடுதியில் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கு தொழுவதற்குத் தனியறை இருந்தது எங்களுக்கு. அது பள்ளிவாசல் என்றே அழைக்கப்பட்டது.

முதிர் இளைஞனான நண்பரிடம் நான் மிகுந்த பக்குவப்பட்ட தன்மையைக் கண்டேன்.   நான் மட்டுமல்ல, ஏனையோரும் அதைக் கண்டார்கள். ஆனால் அதை ஒரு தனித்துவமாக அவர் வைத்துக் கொள்ள ஒரு போதும் முனைந்ததில்லை.  எங்களுடன் எல்லா நடவடிக்கைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கலந்து கொள்ளுவார். எங்களது நகைச்சுவைகளில், கிண்டல்களில் கலந்து கொண்டாடுவார். அவரும் நிறைய நகைச்சுவை சொல்லுவார். தான் ஒரு 'தாஈ' என்று அவர் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளவோ, விலகி நிற்கவோ, தஸ்பீஹ் உருட்டவோ ஏன் எங்களிடம் பிரசாரம் செய்யவோ கூட அவர் ஒருபோதும் முனைந்ததில்லை.

இன்று இஸ்லாமியப் பிரசாரம் பல கிளைகளை விரித்து விட்டது. அறிவுபூர்வமாகவும் விசால சிந்தனைகளோடும் களமாடும் அதிகம் பேரை இன்று நான் காண்கிறேன். பலரைத் தூர இருந்தும் அவதானித்து வருகிறேன். ஒளிவட்டங்களோடும் இறுமாப்போடும் செயல்படுவோர், கண்டும் காணாதவர்போல் விலகிச் செல்பவர்கள், நேருக்கு நேர் சந்திதால் ஸலாத்தைக் கூட ஒரு வில்லனைப் போல் நிமிர்ந்து பார்த்துத் தடிப்பு மிகுந்த வார்த்தைகளால் சொல்லுவோர், உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும் என்கிற தினிசில் நடப்பவர்கள், கதைப்பவர்கள், தன்னால் மாத்திரமே அதை விளங்கப்படுத்த முடியும் என்று எண்ணும் மனப்போக்குடையவர்கள், காலாகாலமாக வெய்யிலும் மழையும் குளித்த பாறையைப் போல் கடின முகத்துடையோர், வாய்ப்புக்கும் வசதிக்கும் வளைந்து கொடுப்போர் என்று ஏராளமானோரைப் பார்க்கிறேன். அதே வேளை மென்மையாகவும் புன்னகையோடும் அணைந்து செல்பவர்களையும் அமைதியும், நேர்மையும் கொண்டவர்களையும் காண்கிறேன்.

இற்றைக்கு நண்பருடனான நட்புக்கு 30 வருடங்கள் கழிந்து போய் விட்டன. அவர் வடக்கிலிருந்து துரத்தப்பட்டுப் பல்வேறு இடங்களில் அகதியாக அலைந்து திரிந்து ஒவ்வோர் இடங்களில் வாழ்ந்து வந்தார். இந்தக் காலப் பகுதிக்குள் இரண்டு முறை கொழும்பு வந்து என்னை வந்து சந்தித்து அதே உற்சாகத்துடன் உரையாடிச் சென்றார்.

ஒரு நாள் நாங்கள் அவரைச் சுற்றி வளைத்திருந்து அவரையும் தப்லீக் ஜமாஅத்தையும் மொத்தமாகக் கழுவி ஊற்றினோம். வினாவுக்கு மேல் வினா எழுப்பினோம். இன்றைய நிலையில் அந்தக் கேள்விகளுக்கொத்த கேள்விகளை ஏதாவதொரு அழைப்பு இயக்கச் சகோதரரிடம் நாங்கள் எழுப்பியிருப்பாமானால் அது நிச்சயமாக ஒரு கொலையில் முடிவுற்றிருக்கும். ஆனால் அவர் செய்ததெல்லாம் எல்லாவற்றுக்கும் அமைதியான ஒரு புன்னகையுடன் பதில் தந்தது மட்டுமே!

30 வருடங்கள் கழிந்து அனுபவங்களும் அதிகரித்த இன்றைய நிலையில் அவரைப் பற்றிச் சிந்திக்கும் போது எனக்குப் பிரம்மிப்பாக இருக்கிறது. பெரும் பொறுமையும், அமைதியும், பக்குவமும் அக்காலப் பிரிவிலேயே அவரிடம் எப்படி ஏற்பட்டது என்று எனக்குள் கேள்வி எழும் போதெல்லாம் வியப்பாகவே இருக்கிறது.

இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியை அவர் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார் என்பதே இன்று எனக்குள் கிடைத்த விடையாக இருக்கிறது. புரிந்து கொள்ளாமல், தெளிவு இல்லாமலே மற்றவர்களைப் புரிந்து கொள்ளவும் மார்க்கத்தைப் புரிந்து கொள்ளவும் மற்றவர்களுக்குத் தெளிவு படுத்தவும் ஆரம்பிக்கின்ற போது அது ஒரு வேடிக்கையான செயற்பாடாக மாறி விடுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எனது வாழ்க்கைக் காலத்தில் நான் சந்தித்த 'தாஈ'க்களில் மறக்க முடியாமலே எனது நண்பர் றபீக் மனதில் பதிந்து போகக் காரணம் நடைமுறைப் பண்புகளில் அழகிய நடைமுறையைப் பிரதிபலித்த அவரது பக்குவம்தான்.

பக்குவம் இல்லையென்றால் எதுவுமே ருசிக்காதுதானே!

(நன்றி - மீள்பார்வை)

Friday, February 6, 2015

குகை வாசிகள்!

 - 12 -

சூரா பகரா 201 வது வசனம் சொல்கிறது...

'றப்பனா ஆத்தினா பித்துன்யா ஹஸனத்தன் வபில் ஆகிறத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.'

'எங்கள் இறைவனே இவ்வுலகில் நல்லதையும் மறு உலகில் நல்லதையும் தந்தருள்வாயாக. இன்னும் நரக செருப்பின் வேதனையிலிருந்தும் எம்மைக் காத்தருள்வாயாக!'

நாம் அன்றாடம் கேட்கும் முக்கியமான பிரார்த்னைகளில் ஒன்று இது. இந்தப் பிரார்த்தனை மறு உலகைப் போலவே இந்த உலகத்திலும் நல்லவற்றைத் தந்தருளக் கோருகிறது. இவ்வுலக வாழ்வு சரியாக இருக்குமானால் மறுமை வாழ்க்கையும் சரியாக இருக்கும். இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்ட இம்மை வாழ்க்கை பிறழுமாக இருந்தால் மறுஉலக வாழ்வும் அபாயத்துக்குள்ளாகும்.

இவ்வுலக வாழ்க்கையை வாழ்வதற்காக நமக்கு வழங்கப்பட்டிருப்பது ஒரு சம்பூரணமான வாழ்க்கைத் திட்டம். இது பற்றி இஸ்லாமியப் பிரசாரகர்கள் முழங்குகிறார்கள். நூலாசிரியர்கள் விரிவுரைகளை எழுதுகிறார்கள். குழுமங்குழுமங்களாகப் பிரிந்து நின்றாலும் இந்த அடிப்படையைக் கொண்டே தூதை எத்தி வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் குத்பா மேடைகளில் குறிப்பிட்ட அம்சங்களை மட்டுமே பேசும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஸஹாபாக்களின் வாழ்நாள் சம்பவங்களையும் எடுத்துரைக்கிறார்கள். இறையச்சம், அண்ணலார் அகிலத்துக்கோர் அருட்கொடை, ஸஹாபாக்களின் தியாகம், உம்மஹாத்துல் முமினீன், தொழுகை, நோன்பு, ஹஜ், ஈமான், ஸதகா. சுவர்க்கம், நரகம்  என்பன போன்ற அம்சங்களையே தொடர்ந்தும் பேசி வருகிறார்கள்.

சுருங்கிப் போன இன்றைய உலகில் பல்வேறு துறைகளிலும் விசாலமாகிவிட்ட இன்றைய நிலையில் முழுமையாக எல்லா வாழ்வியல் அம்சங்களையும் ஏன் மிம்பர் மேடைகள் பேசுவதில்லை என்பது ஒரு கேள்வியாகவே நின்று கொண்டிருக்கிறது. இஸ்லாம் என்பது ஆலிம்களுக்கு மட்டுமே பொறுப்பானது என்கிற சமூகத்தின் முடிவு எங்கு எப்படி ஏற்பட்டது என்பது எனக்குப் புரியவில்லை.

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசத்திலும் பலநூறு பிரச்சனைகள் உள்ளன. இப்பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆராய்வதும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் இஸ்லாம் ஆகாதா? இந்தப் பிரச்சனைகளை மிம்பரில் பேசுவதால் இஸ்லாத்துக்குத் துரோகம் இழைத்ததாக ஆகிவிடுமா?

ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலையிலும் ஒரு கொப்பி வாங்க முடியாத, சப்பாத்துக்கு வழியற்ற பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள். ஓவ்வொரு ஊரிலும் பொதுவான பிரச்சனைகள் உள்ளன. பல இளைஞர்கள் சரியான பொழுது போக்கின்பால் வழி காட்டப்படாமல் தெருக்களில் நின்று இளம்பெண்களை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். திருமணம் செய்ய முடியாமல் பல இளம் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். படித்து விட்டுத் தொழிலின்றிப் பலர் தெரு மேய்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் இவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இஸ்லாம் ஆகாதா? இவற்றை மக்கள் முன் வைக்க மிம்பர் மேடைகளைப் பயன்படுத்த முடியாதா?

ஊரின் பொதுப் பிரச்சனைகளை வகைப்படுத்தி, அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டியவை எவை, ஊராரே முன்னின்று செய்ய வேண்டியவை எவை என்று அடையாளம் காண முடியாத நிலையில் ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல் நிர்வாக சபையும் இருக்குமானால் இந்த நூற்றாண்டில் இதைவிடப் பெரிய வெட்கக் கேடு எதுவுமே கிடையாது. லெப்பைக்கும் முஅத்தினாருக்கும் சம்பளம் கொடுப்பதற்கு ஒரு நிர்வாக சபை அவசியமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

சில இடங்களில் ஒரு ஆலிம் ஜூம் ஆ பிரசங்கம் நிகழ்த்த மற்றொருவர் தொழுகை நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். துறைசார்ந்த நபர்களைக் கொண்டு இவ்வாறான நல்ல விடயங்களை ஜூம்ஆ பிரசங்கமாக நிகழ்த்தி விட்டு ஆலிம்களைக் கொண்டு அரபி குத்துபாவையும் தொழுகையையும் நடத்தினால் தீட்டாகி விடுமா?

சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் எல்லாவற்றையும் இஸ்லாமிய நெறிமுறைகளூடாக அணுகவும் இலகுவானதும் தெளிவானதுமான ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் அது பற்றிச் சிந்திக்காமல் மற்றவரில் என்ன குறை காணலாம் என்பதைப் பற்றியே சதாவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

மஸ்ஜிதுகள் சமூகத்தின் மத்திய ஸ்தலமாக மாறும் வரை மூஸ்லிம் சமூகத்தில் ஒரு சாராருக்கு இஸ்லாம் தொழிலாகவும் இன்னொரு சாராருக்கு வியாபாரமாகவுமே இருக்கும்!

நன்றி - மீள்பார்வை

Tuesday, February 3, 2015

ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய நூல் வெளியீடு - சென்னை


காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வடித்த மற்றொரு காப்பியமான “நாயனொடு வசனித்த நன் நபி” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 25.01.2015 அன்று மாலை சென்னை மண்ணடியில் அமைந்திருக்கும் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் நடைபெற்றது. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பல கவிஞர்கள், இலக்கியவாதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கவிஞர் மு.மேத்தா மற்றும் ஏர்வாடி இராதா கிருஷ்ணன் ஆகியோர் பிரதம பேச்சாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


அஷ்ரஃப் சிஹாப்தீன்


கவிஞர் அல் அஸூமத்


கவிஞர் ஹிலால் முஸ்தபா


பேரா. சாய்பு மரைக்கார்


கவிஞர் அதிரை தாஹா


சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்


கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன்


கவிஞர் மு.மேத்தா


பிரதம அதிதி உரை
பேரா. காதர் முகைதீன் அவர்கள்


பொன்னாடை அணிவிக்கும் கவிஞர் சொரணபாரதி குழுவினர்


பொன்னாடை அணிவிக்கும் பேரா. அகமது மரைக்காயர்