Monday, March 28, 2016

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்

------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர். தாஸிம் அகமது

வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் மகுடத்தின் கீழ் இலங்கை கலை இலக்கிய கர்த்தாக்களை கௌரவித்து வரலாறு கண்ட பெருந்தகை கௌரவ ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆவார். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக அவர் இருந்த போது, 1994களில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு மணிவிழா ஒன்று அவ் அமைச்சினால்; கொழும்பில் வெகு விமரிசையாக எடுக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேராசிரியர் உவைஸ் அவர்களை கௌரவிக்கும் முகமாக மணிவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அம்மலரின் ஆசிரியர் கல்விமான் அல்ஹாஜ். எஸ்.எச்.எம். ஜெமீல் ஆவார்.

பாராட்டு, மணிவிழா மலர் வெளியீடு ஆகியவை மண்டபம் நிறைந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இலக்கிய ஜாம்பவான்கள் மத்தியில் நிகழ்ந்தது. அந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெரு வெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ் அவர்கள் அவ்விழாவின் போது மிகவும் அடக்கத்துடன் அமர்ந்திருந்தார். அறிஞர்களின் வாழ்த்துரைகளும், பேருரைகளும் அன்னாரை எவ்வித சலனத்துக்கும் உட்படுத்தவில்லை. அப்பெருந்தகையின் பெரும் சேவை அவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றே.

பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்கள் 1922ம் ஆண்டு கொழும்பு, காலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் பிறந்தார். தகப்பன் பெயர் மகுமூது லெப்பை தாயார் பெயர் சைனம்பு நாச்சியார் இவ்விருவருக்கும் இவர் ஒரே மகனாவார். ஆரம்ப கல்வியை ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்க முல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயத்தில் கற்றார். அதே விததியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். புhளியைக் கற்றதன் விளைவு பிற்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டுக்கு வழி வகுத்திருக்கலாம். 1938ம் ஆண்டு தமிழ் மொழி மூலம் கல்வி பெற்ற பேராசிரியர் உவைஸ் 1946ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆசிரியர் எவரும் இல்லாமலே தமிழ் கற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

1945ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு ஒன்று உவைஸ் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்றது. அதே ஆண்டில் பல்கலைகழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை தோற்றுவிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஒரு உறுப்பினராக இருந்தார். நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைஸிடம் சுவாமி விபுலானந்தர் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைஸுக்கும்  பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள் அவர்கள் கூறியது உவைஸுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சவாலாக மாறியது.

Tuesday, March 8, 2016

அஷ்ரஃப் சிஹாப்தீனின் அழகியல் மீள்நடுகை!


மன்ஸூர் ஏ. காதர்

ஈழத்துக்கான போராட்டத்தின் கடந்தகாலப் போக்கில் 1985இல் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் விளைந்த உள்ளகச் சச்சரவு நமது காலத்தின் ஒரு கறை படிந்த பயங்கரமாகும். அந்த அதிர்ச்சி உப தேசியவாதத்தின் தோற்றுவாயாக ஈழத்து முஸ்லிம் மக்களிடம் பிரதி பலித்தது. பிரதிபலித்த அந்த உப தேசிய வாதத்தின் அச்சொட்டான குறியீடே 'ஸெய்த்தூன்' என்ற கவிதையாகும். அன்றைய நிலைவரத்தில் அது ஒரு முதன்மையான படைப்பாகவும் அமைந்திருந்தது. இந்தக் கவிதையின் சொந்தக்காரன் யார் என்ற விசாரணையும் ஆச்சரியமும் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்ற ,இலக்கிய ஆளுமையைப் பற்றிய தேடலை தமிழ் இலக்கிய உலகிலே உண்டாக்கிற்று. அவரின் கவிதா ஆளுமையின் வீச்சு பிற்காலத்தில் ஒரு குடம் கண்ணீரையே கொண்டு வந்து தந்துள்ளது. இந்த ஆரம்பமானது ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளனின் ஆடம்பரங்களை விடவும் ஒரு படைப்பாளிக்கான கனதியையும் தன்னடக்கத்தையும் அவருக்கு வழங்கிற்று.

அஷ்ரப் சிஹாபுத்தீன் சமகாலங்களில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் செலுத்த முனைந்துள்ளார். பலஸ்தீனக் கவிதைகளை மொழி பெயர்க்க பேராசிரியர் நுஃமான் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் முதலியோர் செலுத்திய அதே உத்வேகத்தை அஷ்ரப் சிஹாபுத்தீன் அரபு மொழி மூலம் ஆங்கிலத்துக்கு வந்த சிறுகதைகளில் செலுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் சிறியதும் பெரியதுமான எட்டுச் சிறுகதைகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தன்னுடைய தகைசான்ற ஆங்கிலப் புலமை மட்டுமன்றி இக்கதைகளின்  மூலமொழியான அரபியில் இவருக்கிருந்த பரிச்சயமும் நாட்டமுமே இம்முயற்சிக்கான முழுத் தைரியத்தையும் இவருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.


மன்ஸூர் ஏ. காதர்

இலக்கியங்களை மொழி பெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேக மான மண் வளத்தையும் கால நிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண் வளத்தையும் வேறொரு கால நிலையையும் கொண்ட இன்னொரு வித்தியாசமான சுற்றாடலுக்குக் கொண்டுபோய் மீள் நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும். இந்த ' மீள் நடுகை'யின் பின்னர் அத்தாவரத்தின் தப்பிப் பிழைத்தலை ஒத்ததுதான் மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் நிலையுமாகும். அதுவும் கிழக்கத்தைய கலாசாரங்களுடன் பிசையப்படாத ஒரு மொழியின் இலக்கியங்களை கிழக்கத்தைய கலாசார மொழிகளுடன் ஊடுபாவச் செய்வது மிகுந்த சிரம சாத்தியமாகும்.

முதலில் இந்தச் சிரமத்தை பொறுப்புணாச்சியுடன் சிந்தைக்கு எடுத்தவர்களால் மாத்திரமே மொழிபெயாப்பு இலக்கியங்களின் ஆன்மா வைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல் சார் பலங்கள் அல்லது பலவீனங்கள் யாவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் இந்தத் தொகுதி பற்றிய எமது சிந்தனைப் போக்கிற்கு நாம் கடிவாளம் இட்டுக் கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல்சார் பலமும் அதேவேளை அதன் பலவீனமும் பின்வரும் எல்லைக்குள் மட்டுப்படுத்தத் தக்கதாகும்.

இலக்கியங்களை மொழிபெயர்த்தல் தொடர்பான புலமைசார் அறிஞராகக் கருதப்படும் யங்ஃபாங் ஹூ இது பற்றிக் குறிப்பிடும்போது நடைமுறைப்படுத்தப்படும் நோக்கங்களுக்காக ' மூலமொழியைச் சார்ந்து செல்லும்' (source language oriented) மொழிபெயர்ப்புக்கள் என்றும், மொழிபெயர்க்கப்படும் ' இலக்கு மொழியைச் சார்ந்து செல்லும்' (target language oriented)  என்றும் மொழிபெயர்ப்புக்களின் அவசியமான அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கூறுகின்றார்;.

மொழிபெயர்ப்பாளன் இந்த இரண்டு நிலைகளையும்; முழு அவதானத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய தவிர்க்க முடியாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தவறும் பட்சத்தில் விளையும் ஆபத்து, வித்தைக் காரனுக்கு ஏற்படும் ஆபத்தைப் போன்றதே. இந்த சமநிலைத் தன்மையில் காட்டப்பட வேண்டிய அதீத கவனம் மூலமொழி ஆசிரியனின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு வாசகனைக் கொண்டுவந்து சேர்க்கும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்கான மேற்படி வரையறை களைக் கொண்ட இந்த பரிசோதனைக் குழாய்க்குள் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்பவரும் போடப்பட்டே ஆகவேண்டி உள்ளது.

அத்துடன் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் மூலமொழிக்கும் மொழி பெயர்க்கப்படும் மொழிக்கும் இடையிலான முழுமையான மனவெழுச்சிசார் நெருக்கடிகள,; ஒருமைப்பாடுகள,; பழக்கங்கள், வழக்கங் கள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், பெறுமானங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய வற்றுக்கான ' வெளிப்பாட்டுத் திறனுடன்கூடிய வெளிப் படைத்தன்மை' பிரதான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த முயற்சி பற்றிக் கவனக் குறைவாக கருதுபவர்களுக்குத் தழிழ் வகுப்பொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி தந்த ஒரு பயிற்சியை வாசகர்களிடம் கொடுக்க விரும்பு கின்றேன். அதாவது ' அவள் பூவோடும் பொட்டோடும் வாழ்கின்றாள்' என்பதனை வெறுமனே மொழியியல் ரீதியான தொடர்ச்சியுடன் ஆங்கிலமாக்குவதும் அதனைத் தமிழர் வாழ்வியல்சார் அல்லது இந்திய கலாசாரம்சார் தெளிவான அறிவுடன் ஆங்கிலமாக்குவதும் ஒரே வகை யான மொழிக் கையாளுகையுடன் நடைபெறமாட்டாது. இரண்டும் இரண்டு வகையான ஆங்கில மொழித் தொடர்களைக் கையாள மொழி பெயர்ப்பாளனைத் தூண்டும்.

இந்த அடிப்படை நியமங்களை வைத்துக்கொண்டு அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த எட்டு சிறுகதைகளையும் எனது தராசில் போட்டு நிறுத்துப் பார்க்க நான் ஆசைப்படுகின்றேன்.