Thursday, October 13, 2022

எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கள்தான் உறை!

 


                                                                                    அடோனிஸ்


1930ம் ஆண்டு சிரியாவில் ஓர் ஏழ்மை மிகுந்த விவசாயக் கிராமத்தில் நான் பிறந்தேன். எனது கிராமத்தில் பாடசாலைகள் இல்லை. தொலைபேசி வசதிகள் இல்லை. மின்சாரமும் கிடையாது. எதுவுமே கிடையாது. எனது பதின் மூன்று வயது வரை நான் ஒரு காரைக் கண்டதும் இல்லை.

எனது தந்தையார் பாரம்பரிய அறபுக் கலாசாரத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். நானும் அந்தப் பின்னணியோடுதான் வளர்க்கப்பட்டேன். அறபுக் கலாசாரத்தின் சாரமாக அமைந்தது கவிதைதான். எனவே, அனைத்துக் கவிஞர்களதும் கவிதைகளை வாசிக்க எனது தந்தையார் என்னைத் தூண்டினார். இஸ்லாத்துக்கு முந்திய காலப்பிரிவிலிருந்து இஸ்லாம் அறிமுகமான பின்னர் தோன்றிய அனைத்துக் கவிஞர்களும் அதற்குள் அடங்குவார்கள். மிகப்பிரபல்யம் வாய்ந்த அல் முதனப்பி, அபு தம்மாம், அல் மஆரி, ஏன் இம்ரஉல் கைஸ், அபூ நவாஸ் அடங்கலாக எல்லோருடைய கவிதைகளையும் நான் படித்தேன். இப்படியொரு சூழலில்தான் நான் வளர்ந்து வந்தேன்.

இப்படியிருக்கும் போது நானும் தன்னிச்சையாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். இது இயல்பாகவே நடந்தது. 

1943ம் ஆண்டில் ஒரு நாள் சிரியா சுதந்திரம் அடைந்தது. அப்போது எனக்கு வயது பதின்மூன்று. ஷூக்ரி அல் குவாத்லி முதலாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தனது நாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நோக்கில் சிரியாவின் எல்லா மாகாணங்களுக்கும் விஜயம் செய்ய விரும்பினார். இந்தத் தகவல் எங்கள் கிராமத்திலும் பேசப்பட்டது. எனக்கு எப்படி அந்த எண்ணம் தோன்றியது என்று ; தெரியாது, எமக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடு முகமாகவும் அவரை வரவேற்கு முகமாகவும் ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்தக் கவிதையில் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோள் விடுப்பது போலவும் அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பாடசாலை வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று அது அமையக் கூடிய வகையில்  கற்பனை செய்தேன். அந்தக் கவிதையை அவ்வாறே எழுதி என் தந்தையிடம் வாசித்துக் காட்டிய போது மிக நன்றாக அது அமைந்திருக்கிறது என்று சொன்ன அவர், இதை எப்படி அவரை நெருங்கி நீ வாசித்துக் காட்டுவாய் என்று கேட்டார். ஏதோ ஒரு வழியில் முயற்சிக்க வேண்டும் என்று தந்தையாரிடன் சொன்னேன். 'உனக்கு எனது வாழ்த்துக்கள். உனது முயற்சி வெற்றி பெறட்டும்;'என்று அவர் என்னை வாழ்த்தினார்.

எமது கிராமத்துக்கு அருகேயுள்ள நகருக்கு ஜனாதிபதி வருகை தந்தார். (கதை நீண்டுவிடும் என்பதால் சுருங்கச் சொல்கிறேன்.) அன்று கிராமத்துப் பாரம்பரிய ஆடையையும் ஒரு நைந்து கிழிந்த பாதணியையும் நான் அணிந்திருந்திருந்தேன். உண்மையில் நான் வெறுங்காலுடன் நடக்கப் பழக்கப்பட்டவன்தான். ஓர் அதிசயமான சூழலில் அவருக்கு அந்தக் கவிதையை என்னால் வாசித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அவருக்கு அந்தக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. எனது கவிதையிலிருந்து ஒரு வசனத்தை அவர் எடுத்துத் தனது உரையில் பயன்படுத்தினார். அந்த வரிகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. 'எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கதான் உறை'. இவைதாம் அவ்வரிகள்.

அவர் தன்னை வந்து சந்திக்குமாறு என்னிடம் சொன்னதற்கேற்ப, நான் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றேன். என்னை ஆரத் தழுவிக் கொண்டு 'உனக்கு என்ன வேண்டும் மகனே?' என்று கேட்டார். 'நான் பாடசாலைக்குப் போக வேண்டும்' என்று சொன்னேன். 'உனது கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும், நீ பாடசாலைக்குச் செல்வாய்' என்று சொன்னார். இப்படித்தான் அதாவது கவிதையால்தான் பாடசாலைக்குச் சென்று கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதைக்காகவே நான் பிறந்தேன் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. 

அடோனிஸ் என்ற பெயர் எனக்கு எப்படி வந்தது என்று நான் சொல்ல வேண்டும். பாடசாலைக் கல்விக்குப் பின்னர் இரண்டாம் நிலைக் கல்விக்காக டார்ட்டுஸ் நகர பிரஞ்சுப் பாடசாலையில் சேர்ந்தேன். அங்கே ஒன்றரை வருடமளவில் கற்றேன். 1945ல் அப்பாடசாலை மூடப்பட்டு வி;ட்டது. அதற்குப் பின்னர் அரச பாடசாலைக்குச் சென்றேன். 

அப்போதே கவிதைகள் எழுதிப் பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு அனுப்பினேன். கவிதையில் எனது உண்மைப் பெயரான் அலி அஹமத் செய்த் எஸ்;;:பர் என்று குறிப்பிட்டேன். ஆனால் அவை என்னுடைய கவிதைகளைப் பிரசுரிக்கவில்லை. ஆகவே அவற்றின் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. ஓரிரவு கோபத்துடன் இருந்த நான் அடோனிஸ் பற்றிய புராணக் கதையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கதையில் அடோனிஸூம் இஸ்தாரும் காதல் கொள்கிறார்கள். அடோனிஸ் வேட்டைக்குச் செல்லும் பழக்கமுள்ளவன்.  அடோனிஸ் என்ற பெயரில் லெபனானில் ஓர் ஆறு இருந்தது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த ஆற்றின் பெயரைப் பின்னர் இப்றாஹீமின் ஆறு என்று பெயர் மாற்றி விட்டார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியாது. அடோனிஸ் ஒரு நாள் காட்டுப் பன்றி வேட்டைக்குச் சென்றான். வேட்டையின் போது காட்டுப் பன்றிதான் அவனை வேட்டையாடியது. அவன் இறந்து போனான். அவனுடைய இரத்தத்திலிருந்து ஒரு பூ மலர்ந்தது. அதற்கு நட்சத்திரப் பூ என்று பெயர். இந்தப் புராணக் கதை எனக்குப் பிடித்திருந்தது. அன்றிலிருந்து எனது கவிதைகளை எழுதிய தாளில் எனது பெயரை அடோனிஸ் என்று குறிப்பிட்டேன். ஏனெனில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அந்தக் காட்டுப் பன்றியைத்தான் விரும்பியிருந்தன. அதனால்தான்  அவர்கள் என்னைக் கொல்ல முயன்றார்கள்.

என்னுடைய கவிதைகளை முன்னர் நிராகரித்த பத்திரிகையொன்றுக்கு அடோனிஸ் என்ற பெயரில் ஒரு கவிதையை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரித்தார்கள். அத்துடன் அன்புள்ள அடோனிஸ் எமது காரியாலயத்துக்கு ஒரு முறை வாருங்கள் என்ற அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றேன். அப்போது எனக்கு பதினைந்து வயது கூட நிறைந்திருக்கவில்லை. என்னைக் கண்ட அவர்களுக்குத் திகைப்பு ஏற்பட்டது. உண்மையில் நீர்தான் அடோனிஸா என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே பிரதம ஆசிரியருக்கு அடோனிஸ் என்பவர் வந்திருக்கிறார் என்று தகவல் கொடுத்தார்கள். அவரும் கூட என்னைக் கண்டு திகைத்து நின்றார்;. பிறகு 'உண்மையில் நீர் அடோனிஸ் தானா என்று கேட்டார். நான் ஆம் என்றேன். இப்படித்தான் அடோனிஸ் என்ற பெயரை நான் சூட்டிக் கொண்டேன். இப்போதெல்லாம் என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தால் எனது உண்மையான பெயரை அலி அஹமத் என்று எழுதுகிறேன்.

எனது சொந்தக் கலாசார, கவிதை சார் வரலாற்றைப் புதிய நோக்குடன் உருவாக்க முயற்சி செய்திருக்கிறேன். அது சொந்த வரலாறும் சொந்த நோக்கும் சொந்த உலகத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். பிற்காலங்களில் எனது போக்கையும் நோக்கையும் முழு அரபுப் பாரம்பரியத்துக்குள்ளும் கொண்டு செல்லவும் முயற்சியெடுத்தேன்.  அறபு வரலாற்றை நகர்த்துவதற்கு  கல்வித்துறை சார்ந்த சட்டகத்திலிருந்து அதாவது மார்க்கம், பாடசாலைகள், பழக்கவழக்கங்களிலிருந்து பிடுங்கி நவீன உலகின் முன்னால் மீள் வாசிப்புக்காக வைக்கும் முயற்சி அது. அதாவது அறபுக் கலாசாரத்தின் நிலையானதும் மாறுவதும் குறித்த மறுபரிசீலனை.

இந்த முயற்சி அறபுக் கலாசாரம் குறித்த புதிய புரிதல்களுக்கு அடித்தளமிட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

அறபுக் கவிதையின் போக்கிலும் ஒரு மாறுதலை நான் உண்டு பண்ணினேன். அறபுக் கவிதைகளிலிருந்து எவற்றை நான் தேர்ந்தெடுத்தேனோ அவை குறித்து நவீன வாசகருடன் நான் பேசினேன். அவற்றை ஒரு தொகுதியாக்கி அறிமுகத்தையும் எழுதினேன். அறபுக் கவிதை குறித்து ஒரு நூலையும் எழுதினேன். அழைப்பின் பேரில் பிரெஞ்சுக் கல்லூரியில் அது குறித்து விரிவுரைகளும் நடத்தினேன். பின்னர் அறபு மொழியின் உரை நடை குறித்து மீள்வாசிப்புச் செய்ய முடிவு செய்தேன். அது பற்றி ஒரு புத்தகத்தை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டேன். நவீன வாசகருடனான உரையாடலுக்கான படைப்புகளையும் அதில் சேர்த்தேன். நான் வெறுமனே கவிதையோடு மட்டும் நின்று விடவில்லை. அறபுக் கலாசாரம், அறபுக் கவிதை, அறபு உரை நடை, அறபு இலக்கியம் என்று ஒரு புதிய வரலாற்றுப் போக்கைத் தொடக்கினேன்.  

உங்களுக்குத் தெரியும். ஒரு மரம்தான் ஒரு வனத்தை உருவாக்கும். நானும் ஒரு தனி மரம்தான். ஆனால் என்னைச் சுற்றி அறபுக் கவிஞர்களால், எழுத்தாளர்களால், புத்திஜீவிகளால் ஒரு வனத்தை நான் உருவாக்கினேன். என்னுடனான உறவு அறபுக் கவிஞர்களுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நான் இயங்கிவாறு எல்லா அறபுக் கவிஞர்களும் இயங்குவார்கள் என்றும் பழையவற்றையே மீட்டுப் பேசிக் கொண்டிருக்காமல் அவர்களுக்கான புதிய உலகங்களை ஏற்படுத்துவார்கள் என்றும்  எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் என் முயற்சியைத் தொடர்வதை என்னால் காண முடியவில்லை. எனவே அவர்களைப் பற்றிப் பேசுவதை நான் தவிர்த்து வந்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்து முயற்சிகளுக்கு என்னிடம் மிகுந்த மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவற்றை மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை. இதனால்தான் அவை நவீன அறபுக் கவிதைக்குள் வரும்போது - அதாவது கலீல் கிப்ரான் காலத்திலிருந்து இன்று வரை - அவற்றை வகைப்படுத்த நான் முனையவில்லை. 

(அடோனிஸ் வழங்கிய பேட்டியிலிருந்து பெரும் பகுதி)


Saturday, March 19, 2022

நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன் - நூலுக்கான அணிந்துரை


ஷெய்க்ஹா ஜெலீலா ஷபீக்
(முன்னாள் அதிபர் - கள்எலிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி,
முன்னாள் அதிபர் ஆயிஷா சித்தீக்கா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி)

அவர்கள் “நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்“ நூலுக்கு வழங்கிய அணிந்துரை.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி...

அகிலங்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட கண்மணி நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களைப் பின்பற்றி வாழ்வோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் நிறைவாய்ப் பொழிய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் மார்க்கம். இதனை நபி (ஸல்;) அவர்கள், 'நான் உங்களை ஒரு பிரகாசமான பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவுகூடப் பகல்போல் வெளிச்சமானது,' எனக் குறிப்பிட்டார்கள். இந்த வாழ்க்கை நெறிக்குச் சொந்தக்காரர்கள் தாம் முஸ்லிம்கள். 

இவ்வுயர் மார்க்கத்தின் போதனைகளையும் வழிகாட்டல் களையும் முஸ்லிம்கள் தம் வாழ்வியலாக அமைத்துக் கொண்டி ருந்தால் அவர்கள் வாழும் பிரதேசங்கள் மாத்திரமன்றி முழு உலகும் அமைதியும் சமாதானமும் அரசோச்சும் இடமாக மாறியிருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களின் நடை, உடை, பாவனைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமாக அமைந்து விட்டமையால் அவர் களுக்கு இழிவும் அழிவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சோதனைகளும் வேதனைகளும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் இந்நிலையிலிருந்து அனைவரையும் பாதுகாப்பானாக.

இன்று அல்குர்ஆனை ஓதப் பழகுவதிலும் அதனைத் தமாம் செய்வதிலும் முஸ்லிம்கள் காட்டும் அக்கறை அது கூறும் செய்திகளை விளங்குவதிலோ அவற்றைத் தம் வாழ்வியலாக மாற்றுவதன் மூலம் மற்றவர்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டு வருவதிலோ காட்டுவதில்லை. நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம், புனித மிஃறாஜ் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு முக்கியத் துவம் கொடுக்கின்ற பலரும் அவர்களின் வாழ்வொழுங்கையும் முன்மாதிரியையும் தம் வாழ்வியலாகக் கொள்ளாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

இந்நிலையைச் சீர் செய்து இஸ்லாமிய சிந்தனையை முன்வைத்துச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நமது உலமாக்களின் வெள்ளி மேடைப் பிரசங்கங்களும் இஸ்லாமிய நூல்களும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் உரைகளும் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் மேற்குலகில் வாழும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களான பெண் ஆளுமைகள் பதின்மரின் கருத்தாழம் கொண்ட ஆங்கில உரைகளின் தமிழாக்கமே 'நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்,' என்ற மகுடம் தாங்கி நமது கைகளில் தவழும் இந்நூல் ஆகும். வித்தியாசமான தலைப்புகளில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் மிக அழகாகவும் தெளிவாகவும் அதே வேளை, கேட்போரின் உள்ளங்களைத் தொட்டுச் செல்லும் கவர்ச்சித் தன்மையுடனும் அவற்றை அவர்கள் முன்வைக்கும் பாங்கு அருமையானது.
சிலபோது நாம் சிறிதும் கவனத்திற் கொள்ளாத நுணுக்கமான வாழ்வியல் அம்சங்களை இவ்வுரைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணமாக, 'முஸ்லிம்களாகிய எமக்கு அல்லாஹ்வைப் பற்றிய புரிதலில் ஏற்பட்ட தவறுதான் நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது, எம்மை விரக்திக்குக் கொண்டு செல்கிறது. அல்லாஹ் கருணையாளன். எல்லாக் கருணைகளுக்கு மான ஊற்றே அவன்தான். 

ஒரு குழந்தையிடம் தாயொருத்தி வைத்திருக்கும் பாசத்தை விடப் பன்மடங்கு நம்மில் பாசத்தைக் கொண்டிருப்பவன்தான் அல்லாஹ் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மையை முதல் எண்ணக் கருவாக எமது சிறாருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்,' என்று குறிப்பிடும் சகோதரி யெஸ்மின் முஜாஹிதின் உரையைக் குறிப்பிடலாம். அவரது உரையின் தலைப்பே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

சகோதரி துன்யா ஷுஐப் அவர்களின், 'ஏன் எனக்கு இப்படி?' என்ற தலைப்பினைத் தாங்கிய உரை வாழ்வில் ஏற்படும் தொடர் நோதனைகள், துன்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்பவற்றால் கடுமையாக மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ள பல நூறு உள்ளங்களுக்குச் சிறந்த ஒத்தடமாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் நாம் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய உரை அது.

'இஸ்லாம் சாந்தி மயமான மார்க்கம். அது வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டி என இஸ்லாத்தின் சிறப்பம்சங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதல்ல முஸ்லிம்களின் பொறுப்பு. அந்தத் தூய இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாக நமது வாழ்வில் செயல்படுத்திச் சொல்லாலும் செயலாலும் சான்று பகர்வோராய் இருக்க வேண்டும்' என்பதைச் சகோதரி லிண்டா சர்ஸூர் 'இஸ்லாமும் பெண்ணுரிமைகளும்' என்ற ததனது உரையில் அழகாக முன்வைத்துள்ளார்.
இவ்வாறு இந்தப் பத்து உரைகளும் ஒன்றை ஒன்று விஞ்சிய தரத்தில் மிகப் பொருத்தமான தலைப்புகளில் நம் கவனயீர்ப்புக்குரிய காத்திரமான கருத்துக்களைக் கொண்டனவாயும் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவனவாயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உரைகளை நிகழ்த்தியவர்கள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களையும் அநியாயங்களையும் எட்ட நின்று பார்த்துக் கருத்துக் கூறியவர்கள் அல்லர். அவற்றைக் கண்டும் எதிர் கொண்டும் மனம் தளராது, முடங்கி விடாது பொறுமையுடனும் உறுதியுடனும் தலை நிமிர்ந்து நிற்கும் மக்களோடு இரண்டறக் கலந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளே அவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு அஞ்சித் துவண்டு போகாது, முடங்கி விடாது அவற்றைத் தட்டிக் கேட்டு, அவற்றுக்கெதிராகக் குரல் கொடுப்பதோடு, அவற்றைக் களையவும் முயற்சி செய்வது நமது கடமை என்ற செய்தியையும் இவ்வுரை களுக்கு ஊடாக அவர்கள் நமக்குத் தந்துள்ளனர்.

இவ்வுரைகளைத் தேடிப் பெற்று, செவிமடுத்து, அவற்றின் கவர்ச்சியும் கருத்தாழமும் குன்றாமல் மொழி மாற்றம் செய்து தந்திருப்பவர், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறந்த படைப்பாளர், பல்துறை ஆளுமை கொண்டவர், இலக்கியத்துக்கான இலங்கை அரசின் உயர் விருதான சாஹித்திய விருதுகளைப் பெற்றவர், நாடறிந்த எழுத்தாளர்; எனப் பல சிறப்புகளுக்குமுரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். நிச்சயமாக அவர் முஸ்லிம் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.

நாட்டிலுள்ள பல பெண்கள் அறபுக் கல்லூரிகளில் மார்க்கம் கற்றுத் தேர்ந்த ஆலிமாக்கள் மட்டுமன்றி பொதுக் கல்வியிலும் உயர் நிலையடைந்த பல நூறு பேர் இருந்தும் அவர்களைச் சமூக வெளிகளில் காணக் கிடைப்பதில்லை என்ற சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே. இஸ்லாமியத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களின் பொறுப்பை உணர்த்திக் களத்தில் இறங்கிப் பணி செய்யத் தூண்டுவதும்கூட இவரது இப்படைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இம்மாபெரும் பணியை முன்னெடுக்க அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்! தமக்கு இறைவன் அளித்த ஆற்றல்கள் திறமைகள் என்பவற்றை அமானிதமாகக் கருதி, அவற்றைப் பயன்படுத்தி உறுதியான இறை விசுவாசத்துடன் இஸ்லாமிய சமூகத்துக்கு வழிகாட்;டுவதற்காக இவ்வுரைகளை நிகழ்த்திய அந்தச் சகோதரிகளையும் அவர்களைப் போல் களத்தில் பணியாற்றுகின்ற அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

இவ்வுரைகளை அவற்றின் தரமும் கருத்தாழமும் மாறாமல் அழகு தமிழில் மொழிமாற்றம் செய்து எமக்களித்திருக்கும் மதிப்புக்குரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இப்பணியை அங்கீகரித்து நற்கூலி வழங்குவானாக!

'தூண்டல் இன்றித் துலங்கள் இல்லை' அல்லவா? இவ்வுரை கள் வாசிப்போரை இஸ்லாமிய அறிவைப் பெற்று, அதனைச் செயற் படுத்தி, பிறரையும் வழிப்படுத்தத் தூண்டும் தூண்டுகோலாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். 

இஸ்லாத்தின் உயர் போதனை களை வாழ்வியலாகக் கொள்ளும் போது உள்ளங்கள் அமைதி பெறும். உலகமும் அமைதிப் பூங்காவாக மாறும். நம்மனைவரதும் அவாவும் பிரார்த்தனையும் அதுவேயல்லவா?

அல்லாஹ் நம்மனைவரதும் முயற்சிகiயும் அங்கீகரித்து நேர் வழியில் வாழ வைத்து, அவனது அருளுக்குச் சொந்தக் காரர்களாக ஆக்குவானாக. ஆமீன்!

'இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக. (01 - 05 - 06)