Friday, April 27, 2012

ராஜ ராஜேஸ்வரி!


ஜீரணமாகாத உணவு வயிற்றில் அவஸ்தையை ஏற்படுத்துவது போல சிந்தையின் நிம்மதியை அவ்வப்போது கலைத்துப் போட்டுக் கொண்டேயிருக்கிறது ராஜேஸ்வரி அக்காவின் இழப்பு.

ராஜேஸ்வரி அக்காவுடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றியது மட்டுமல்ல, புத்தி தெரிந்த காலம் முதல் அவரது குரலையும் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்ததும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

அக்காவிடம் பல விசேட தன்மைகள் இருந்தன. நல்ல முன்மாதிரியான பண்புகள் இருந்தன. இவையும் அக்காவை உறவுகளில் ஒன்றாக மனது வரித்துக் கொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.

அக்காவிடம் எப்போதும் ஒரு Perfection ஐப் பார்த்து வந்திருக்கிறேன். அவரது அறிவிப்பு, நடிப்பு, உடை, உணவு, மற்றோருடனான உறவு - இவையெல்லாவற்றிலுமே அந்த முழு நிறைவு இருந்து வந்திருக்கிறது. இதை இன்னும் சொல்லப் போனால் அவரது எல்லா நடவடிக்கைகளிலுமே ஒரு நறுவிசுத் தன்மையும் அழகும் இருந்திருக்கிறது.
 


நல்லதை மனந்திறந்து பாராட்டுவது அவரது நற்பண்புகளில் ஒன்று. சிறப்பான ஒரு செயலை ஒரு சிறியவர், இளையவர் செய்தால் பெரியவர்கள் பெரும்பாலும் அதைக் கண்டு கொள்வதில்லை. அவ்வாறு பாராட்டுவதற்கு மிகப் பரந்த மனம் வேண்டும். அது அக்காவிடம் இருந்தது. பாராட்டுவதோடு மட்டும் அவர் நின்று விடுவதில்லை. அதை மற்றவர்களிடமும் எடுத்துச் சொல்வது அந்நற்பண்பின் உச்சம்.

ஓர் இரவுச் செய்திக்குப் பிறகு நான் வாசித்த மரண அறிவித்தலில் ‘அழகு மீனாள்’ என்றொரு பெயர் வந்தது. அடுத்த நாள் என்னைக் கண்ட வேளை, “அழகு மீனாள் எப்படியிருப்போளோ தெரியவில்லை... ஆனால் நீ அதை உச்சரித்த விதத்தில் அவள் பேரழகியாக என் மனதில் பதிந்து விட்டாள்” என்று சொன்னார். இதை ஒரு முறை சொன்னதோடு அவர் நிறுத்தி விடவில்லை. அவ்வப்போது சொல்லி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். இதுதான் எங்கள் அன்பான ராஜேஸ்வரி அக்கா!

Monday, April 23, 2012

“யாத்ரா” ஒன்றுகூடல் - கொழும்பு


ஏ.பி. மதன்
ஆசிரியர் - தமிழ் மிரர்

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் பற்றி மும்முரமாக பேசப்படுகின்ற இத்தருணத்திலே, யாத்ரா - 20 கவிதை, இலக்கிய சஞ்சிகை பற்றிப் பேசக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இலக்கிய உலகின் ஜாம்பவான்களினால் வெளியிடப்படுகின்ற சில சஞ்சிகைகள் உலகளாவியில் குறிப்பிட்ட சில வாசகர் மட்டத்தில் மட்டும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை தெரிந்ததே.

இருப்பினும், இலக்கிய முன்னோடிகளின் வழிகாட்டல்களுடன் இலக்கிய நுகர்வோர்க்கு வழிகாட்டியாக இருக்கின்ற சில சஞ்சிகைகளும் பல வாசகர்களின் இலக்கியப் பசி ஆற்றி வருகின்றமை சிறப்பானதாகும்.

யாத்ரா சஞ்சிகை, இவ்வளவு காலமும் பல்வேறுபட்ட கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இச்சஞ்சிகையூடாக கவியாற்றலுள்ள பல கவிஞர்களின் கைவண்ணங்களுக்கு களம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

கவி உணர்வுள்ள வரிகளை யாத்ராவின் ஆசிரியர் குழாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற போது தேர்ச்சிமிக்க கவிஞர்களால் அக்கவிதை புடம்போடப்பட்டு புத்துயிர் பெறுகின்றபோது கவியாத்த கவிஞர்களெல்லாம் மனங்குளிர்ந்து மகிழ்ந்ததினை மறந்துவிட முடியாது.

அஷ்ரப் சிகாப்தீனை நான் ஊடகப் பணிக்கு வந்த ஆரம்பக் காலங்களிலேயே அறிவேன். இலக்கிய பாண்டித்தியம் இல்லாத போதிலும் இலக்கிய நுகர்வோர் என்ற ரீதியில் அஷ்ரப் சிகாப்தீனின் படைப்புகளின் உயிரோட்டம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அப்படிப்பட்ட மொழியை வசப்படுத்தும் ஆற்றல்மிக்க ஓர் எழுத்தாளனால் யாத்ரா செதுக்கியெடுக்கப்பட்டமை சிறப்பானது.

கவிதைச் சஞ்சிகையாக மட்டும் இருந்த யாத்ரா இப்பொழுது இலக்கியச் சுவையுள்ள பல விடயங்களையும் உள்தாங்கி மீள்வருகை தந்திருக்கின்றமை இலக்கிய ஆர்வலர்களுக்குத் தித்திப்பான செய்தியாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

பல சஞ்சிகைகளுடன்; சம்பந்தப்பட்டிருந்தவன் என்ற ரீதியில் ஒரு சஞ்சிகையின் பிரசவ வலி எனக்கும் நன்கு தெரியும். முதலீட்டு முதலாளிகள் முன்வரிசையில் காத்திருந்த போதிலும் முழுமையாக சஞ்சிகைகள் வெளிவராமல் போன வரலாறும் நன்கறிவேன்.

சுவையுள்ள சஞ்சிகை ஒன்று வருகின்ற சந்தோஷத்திலும் பார்க்க அச்சஞ்சிகை தொடர்ந்து வெளிவராமல் நிற்கின்ற போது சந்தோஷப்படுபவர்களும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் யாத்ரா சஞ்சிகை மீள் பிரசவமடைந்திருக்கின்றமை மன மகிழ்வைத் தருகின்றது. எனக்கு மட்டுமல்ல, இலக்கிய நுகர்வுக்காய் நொந்துபோய் காத்திருக்கும் உள்ளங்கள் அனைவருக்கும் இது இனிப்பான ஒரு விடயமே.

யாத்ரா 20 சஞ்சிகையின் உள்ளோட்டங்களை பார்க்கின்ற போது இந்நாட்டில் மேலும் பல இலக்கியவாதிகள் உருவாவது நிச்சயம் என்பது தௌ;ளத் தெளிவாகின்றது. தங்களுடைய புலமைகளை வெளிக்காட்டுவதிலும் பார்க்கப் பொத்திவைத்த ஆசைகளை கொட்டித் தீர்க்க இடமின்றி புழுங்கித் தவிக்கின்ற ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு யாத்ரா சஞ்சிகையின் மீள் வருகை நிச்சயமாய் புண்ணியமாகும்.

எழுத்து நுகர்வாளர்களை எழுத்துலகில் எழுந்துநிற்கத் தூண்டுபவர் கவிஞர் அஷ்ரப் சிகாப்தீன். அவரோடு கைகோர்த்திருக்கின்ற இளம் கவிஞர்களும் புது யுகத்தில் புன்னகைப் பூக்களாய்த் திகழுபவர்கள். அதிகரித்த தொழில்நுட்ப அவசரத் தேவையில் ஆற அமர்ந்து அலாதியாய்ப் பயணிக்கும் ஆற்றல்மிக்க இளைஞர் கூட்டம் இப்போது யாத்ராவோடு கைகோர்த்துள்ளது.

எனவே இம்முயற்சி, இலங்கை இலக்கிய வரலாற்றில் தனக்கென தனியிடமொன்றினை வகுத்துக்கொள்ளுமென்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கிருக்கின்றது. திறமையுள்ளவர்களை இனங்கண்டு அத்திறமைகளுக்கு களம் கொடுத்து அவர்கள் ஆழ்மனதின் அழுத்தங்களை நிவர்த்திசெய்து பக்குவமடைந்த இலக்கியவாதிகளால் மிளிருவதற்கு அழகான, உறுதியான அச்சாரமாக யாத்ரா விளங்கியிருக்கின்றது, விளங்கும்.

நன்றி,

இப்படிக்கு என்றென்றும் அன்புடன்,
ஏ.பி.மதன்

“யாத்ரா” ஒன்றுகூடற் காட்சிகள்”


“யாத்ரா” இதழை பிரதம அதிதி வழங்க புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்கிறார்.



தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத், அறிமுக உரை திரு. அந்தனி ஜீவா

Tuesday, April 17, 2012

உள்ளந் திறந்து...

அன்பிற்கினிய வாசகர்களுக்கும்


இலக்கிய நெஞ்சங்களுக்கும்.....
எல்லாமே மாறும் என்பது மட்டுமே மாறாத விதி என்பதற்கொப்ப 'யாத்ரா"வும் மாற்றம் பெற்றிருக்கிறது. 21வது இதழிலிருந்தே மாற்றம் இடம் பெறும் என்று நாம் அறிவித்த போதும் இந்த 20ம் இதழிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டோம். மாற்றம் குறித்து ஒட்டியும் வெட்டியும் பலர் கருத்துத் தெரிவித்த போதும் மாற்றம்தான் விசாலமாக இயங்க வழிசெய்யும் என்று நினைத்தோம்.

கவிதைக்கென இப்போது பல இதழ்கள் வர ஆரம்பித்து விட்டன. எதிர்காலத்தில் இன்னும் பல இதழ்கள் வருவதற்கான சூழலும் சாத்தியமும் இருக்கின்றன. 'யாத்ரா" மாற்றமடைந்தாலும் கூடக் கவிதைக்கான முன்னுரி மையை அது எப்போதும் வழங்கி வரும்.

'யாத்ரா'வின் வருகை தடைப்பட்ட பிறகுதான் அதன் இடைவெளி பெரியது என்பது பலராலும் எமக்கு உணர்த்தப் பட்டது. ‘யாத்ரா’ 15வது இதழுக்குப் பிறகு அதன் வருகைக்காக நண்பர்கள் பலர் அவ்வப்போது பொருளாதார ரீதியாக உதவி வந்துள்ளனர். கவிஞர்களான டாக்டர் தாஸிம் அகமது, பொறியியலாளர் நியாஸ் ஏ சமத், பொத்துவில் பைஸால் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

‘யாத்ரா’வைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து அவ்வப்போது கூடிப் பேசுவதும் வெளியே சொல்ல முடியாத சில காரணங்களால் முயற்சி தடைப்படுவதுமாகவே காலம் கழிந்தது. இவ்வாறான ஒரு சூழலில் பொருளாதார ரீதியாக ‘யாத்ரா’வுக்கு உதவுவதற்காக ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க சகோதரர் நாச்சியாதீவு பர்வீன் முன்வந்தார். ‘யாத்ரா’ வெளிவரத் தொடங்கிய காலம் முதல் ஓர் ஆத்மார்த்த தொடர்பை அவர் ‘யாத்ரா’வுடன் பேணிவந்துள்ளார். எனவே அவரது முயற்சிக்கு நான் வழிவிட்டதோடு மாத்திரமன்றி சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும் இயங்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். பல இளைய இலக்கிய இதயங்களை ஒன்றிணைத்துக் கொண்டு சஞ்சிகையை முன் கொண்டு செல்வதற்கான அவரது முயற்சி முதலாவது மைல் கல்லைத் தொட்டது. அதன் விளைவாகவே ‘யாத்ரா’ 20வது இதழ் உங்கள் கைகளை அடைந்திருக்கிறது.

‘யாத்ரா’வை மீண்டும் கொண்டு வருவதில் சில நல்லுள்ளங் கொண்டவர்கள் தங்கள் சக்திக்கு மீறிய பண உதவியைச் செய்துள்ளனர். அவர்கள் தமது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கையிலும் இலங்கைக்கு அப்பாலும் வசிக்கும் இந்த நல்லுள்ளங்களின் உதவி கொண்டுதான் இந்த ஆண்டில் வெளிவரப்போகும் இதழ்கள் வெளிவரவுள்ளன.

‘யாத்ரா’ 17வது இதழ் வெளிவந்த பிறகு சஞ்சிகை ஆரம்பித்தது முதல் கடைசி வரை பெறப்பட்ட அனுபவங்களை அவ்வப்போது எழுதி வருமாறு ‘யாத்ரா’வின் இணையாசிரியர்களுள் ஒருவராக இருந்த கவிஞர் ஏ.ஜி.எம். ஸதக்கா என்னை வலியுறுத்தி வந்துள்ளார். அதன் மூலம் ‘யாத்ரா’ பற்றிய தகவல்களை ஒருவர் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பது மட்டு மன்றி ‘யாத்ரா’வின் பின்னணியில் எவற்றைச் சாதிக்க முடிந்தது என்பதைப் பற்றி எழுதிக் கொண்டு வரும் போது சஞ்சிகையின் வாழ்வும் சாதனையும் பதியப் பட்டு விடும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அத்துடன் அதுவரை தமிழ்க் கவிதை இதழ் என்ற வகையில் ஒரு சஞ்சிகை அளவில் எச்சஞ்சிகையும் 17 இதழ்களைத் தொட்டிருக்கவும் இல்லை என்பதும் அவதானிக்கத் தக்கது. ஒரு கூட்டத்தைக் கூட்டி நான்கைந்து பொன்னாடைகளைப் போர்த்திப் படம் எடுத்துப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்குப் போதுமான காரணிகள் நிறைய இருந்தன. இனிப்பானதும் கசப்பானதுமான பல அனுபவங்கள் இருந்த போதும் குறிப்பிட்ட சில இதழ்கள் வெளியிடப் பட்ட நிலையில் பெரிதாகச் சாதித்து விட்டதாகப் பேசச் சங்கோஜமாக இருந்தது.

கவிஞர் ஸதக்கா இன்று எம்முடன் இல்லை!

Tuesday, April 3, 2012

எனது குளியற் கோப்பை


அது ஒரு பெரிய அலுமினியக் கோப்பை. காலையில் குளியல றைக்குள் நுழைந்ததும் அந்தக் கோப்பை எனது சிந்தனையைப் பல்வேறு கோணங்களுக்கு இழுத்துக் கொண்டு செல்லும்.

பெரிய பிளாஸ்டிக் வாளியில் நீர் நிறைத்து அள்ளிக் குளிப்பது எனது வழக்கம். அந்தக் காலத்தில் ஊரில் கிணற்று நீரைத் துலாவில் உள்ள வாளியினால் இறைத்துக் குளித்துப் பழகியவன் நான். என் வய தொத்த கிராமப்புறங்களில் பிறந்த ஜீவன்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். என்னதான் ‘மழைப் பைப்பு’ (shower)வில் மிருதுவாக நீர் உடலில் இறங்கினாலும் அள்ளிக் குளிக்கும் சுகத்தை அது தருவதில்லை. இளைய வயதில் இறைத்துக் குளித்துப் பழகியவர்கள் அந்த சிலிர்ப்பு மிக்க அனுபவங்களை இன்னும் வாயோயாமல் கதைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

அந்தக் கோப்பையில் நீர் அள்ளி ஒற்றைக் கையினால் தூக்க முடியாது. பாரம் ஒரு காரணமாக இருந்த போதும் அந்தக் கோப்பையின் விளிம்பில் சுற்றி வரப் பத்து இடங்களில் உடைந்து அடிப்பகுதி நோக்கி அரை அங்குலம் , ஒரு அங்கும், ஒன்றை அங்குலம் எனக் கிழிந்து போயிருக்கிறது. மிக மென்மையான கனம் கொண்டதாகத் தயாரிக் கப்பட்டுள்ள அந்தக் கோப்பையை இருகரங்களாலும் பிடித்து நீரை அள்ளி ஒரு சிறு வயதுப் பிள்ளை குளிப்பது போல் நான் குளிப்பேன். அந்தக் கோப்பையின் கிழிசல்களின் நீளம் அதிகரித்தால் கோப்பை ஒரு கணத்தில் இரண்டு துண்டுகளாகி விடும்.

எனவே குனிந்து குனிந்து வாளிக்குள் இருக்கும் நீரை அள்ளுவேன். குனிந்து நிமிரவேண்டியேற்படுவதால் அது ஒரு நல்ல பயிற்சி என்று நினைப்பேன். தவிரக் குனிந்து பழகாவிட்டால் இக்காலத் தில் பிழைப்பதும் கஷ்டமாகி விடும். குனிய மறுப்பதால்தான் நாட்டில் நிறையப் பிரச்சினைகள். குனிந்து நடக்கத் தெரிந்தவர்கள் மிகப் பெரும் வெற்றி பெற்றவர்களாகவும் செயற்றிறன் மிக்கவர்களாகவும் உலா வருகிறார்கள். குனிந்து நடந்து பழகி அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமக்கு முன்னால் மற்றவர்கள் குனிந்து நடக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் என்ன தப்பு இருக்கிறது?

அந்தக் கோப்பையை மாற்ற வேண்டும் என்று நீர் அள்ளிக் குளிக்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு. ஆனால் குளியலறை யிலிருந்து வெளியே வந்தால் அந்த விடயம் மறந்து போய்விடுகிது. இந்த மறதி பொல்லாதது. கூடிய விரைவில் அந்தக் கோப்பையைப் பத்திரப்படுத்தும் ஏற்பாட்டை நான் மேற்கொள்ள வேண்டும். அப்படி வேறு ஒரு கோப்பையைக் குளிப்பதற்கு நான் பயன்படுத்தினாலும் இந்த அலுமினியக் கோப்பையைப் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.