Thursday, December 26, 2013

ஃபத்வா வாங்கலையோ... ஃபத்வா!!


ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!!

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

உம்மாவுக் கொரு ஃபத்வா
வாப்பாவுக் கொரு ஃபத்வா
சும்மாவும் ஒரு ஃபத்வா
சுண்டெலிக்கும் ஒரு ஃபத்வா

பெரியம்மாக் கொரு ஃபத்வா
பெரியப்பாக் கொரு ஃபத்வா
தெரிந்தவருக் கொரு ஃபத்வா
தெரியாதவருக் கும் ஃபத்வா!

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

ட்ரஸ்டிக்கு ஒரு ஃபத்வா
ரஸ்தியாதிக் கொரு ஃபத்வா
புரட்சிக்கு ஒரு ஃபத்வா
புண்ணாக்குக் கொரு ஃபத்வா!

அஞ்சுக்கு ஒரு ஃபத்வா
ஐம்பதுக்கு ஒரு ஃபத்வா
கஞ்சுக்கு ஒரு ஃபத்வா
கந்தலுக்கும் ஒரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

அயல்வீட்டுக் கொரு ஃபத்வா
மயில்வீட்டுக் கொரு ஃபத்வா
ஒயில்வீட்டுக் கொரு ஃபத்வா
வயல்வீட்டுக் கொரு ஃபத்வா

மச்சானுக் கொரு ஃபத்வா
மற்றவனுக் கொரு ஃபத்வா
பிச்சைக்கு ஒரு ஃபத்வா
பீத்தலுக்கும் ஒரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

Friday, December 20, 2013

எல்லாவற்றுக்கும் பிறகு...


- Gகோரன் சிமிக் (பொஸ்னியக் கவிஞர்)

எனது தாயாரின் உடலை
அடக்கம் செய்து விட்டு
ஷெல்கள் மழையாகப் பொழிகையில்
மையவாடியை விட்டு ஓடிய பிறகு

சுருங்கிய முரட்டுத் துணியில் 
எனது சகோதரனை 
திரும்பக் கொண்டு வந்த போது
அவனது எஞ்சிய உடைமைகளை 
இராணுவத்தினரிடம்
ஒப்படைத்த பிறகு

நிலக்கிடங்கை நோக்கி ஓடும்
கிலியூட்டும் எலிகளுடன் 
சேர்ந்து ஓடும்
எனது குழந்தைகளின் கண்களில்
சுவாலைகளைக் கண்ட பிறகு

பயத்தில் நடுங்கிய ஒரு மூதாட்டியை
அடையாளம் கண்டு
அவளது முகத்தை
ஒரு கந்தல் துணியால் 
துடைத்து விட்ட பிறகு

தனது காயத்திலிருந்து வழியும் குருதியை
தெருமுனையில் அமர்ந்து
நக்கிக் கொண்டிருக்கும்
பசியுற்ற ஒரு நாயைக் கண்ட பிறகு

இவை அனைத்தையும் மறந்திருக்க -
வெறுமையானதும் உற்சாகமற்றதுமான
செய்தியறிக்கையைப் போல
ஒரு கவிதை எழுத விரும்பினேன்

அந்த வேளை
தெருவில் சிலர் என்னைக் கேட்டார்கள் -

'அக்கறையற்ற செய்தியாளரைப் போல
எதற்காக நீ
கவிதை எழுதுகிறாய்?'

Thursday, December 12, 2013

கொம்பனித் தெரு முஸ்லிம்கள் நடுத்தெருவுக்கு வந்த கதை!


 - லத்தீப் பாரூக் -
மூன்று ஆண்டுகளுக்கு முன், 2010, மே மாதம், 8 ஆம் நாள். பிற்பகல் வேளை. பாதுகாப்பமைச்சின் கீழ் இயங்குகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பின் மத்திய பகுதியான கொம்பனித் தெரு மீவ்ஸ் வீதியில்  இருக்கின்ற வீடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக, பொலிஸ் மற்றும் விசேட துருப்பினரைக் களத்தில் இறக்கியது.
தமிழர் ஒருவரினால் உரிமை கொள்ளப்பட்டிருந்த ஒரு வீடு தவிரஇவற்றில் ஏனைய சகல வீடுகளுமே முஸ்லிம்களுடையவையாகும். அவர்களது உடமைகள் பாதையில் தூக்கி எறியப்பட்ட நிலையில்அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
 காணி உரிமைப் பத்திரம்வீடுகள் சட்டபூர்வமானவை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும்பல தசாப்தங்களாக தாம் இவ்விடத்தில் வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் பணி புரிந்ததும்அவர்களது பிள்ளைகள் பாடசாலை சென்றதும் இதன் சுற்று வட்டாரத்தில்தான்.
மனிதாபிமானம் அற்ற முறையில் அவர்களது வீடுகள் தகர்க்கப்பட்ட போது,அவர்களது கனவுகளும் இரவோடிரவாகத் தகர்ந்து போயின. மட்டக்குலியில் பலகையால அமைக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். 
இவ்வெளியேற்றத்தை நியாயப்படுத்திதேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் விடுத்திருந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மீவ்ஸ் தெருவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைப் பாடசாலை (Defence Services School)உடன் இணைந்த காணியில் வசித்து வந்தஅனுமதி வழங்கப்படாத குடியிருப்பாளர்களை அகற்றும் பணிமிகவும் நீதியானமனிதாபமானசட்ட ஒழுங்குகளுக்கு இயைபான முறையில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த இந்நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமானதாகும். முறையான அனுமதி பெறாத நிலையில் குடியிருப்பாளர்கள் வசித்து வந்த போதிலும்மனிதாபமான ரீதியான காரணங்களைக் கருத்திற்கொண்டுஅவர்கள் நஷ்டஈடு வழங்கப்பட்டதோடு,நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டோடுமாற்றுத் தங்குமிடங்களும் வழங்கப்பட்டன. சட்ட விரோதக் குடியிருப்பைக் காலி செய்யுமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த போதும்அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில்நஷ்டஈடும்மாற்றுக் குடியிருப்புக்களும் வழங்கப்பட்டுமே 7 ஆம்திகதி, 2010 வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
நாட்டைப் பயங்கரவாதத்திடம் இருந்து பாதுகாப்பதற்காக சுயநலமற்ற உறுதியோடும்தியாகத்தோடும் செயல்பட்ட பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்குப் போதுமான கல்வி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கத்துடன்சில ஆண்டுகளுக்கு முன்பு Defence Service Schoolஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் தற்போதைய வசதிகளை மேம்படுத்திஅதனை அபிவிருத்தி செய்வதற்குகுறித்த நிலத்தை சுவீகரிப்பது அவசியமானதாக இருந்தது. எனவேதான்அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்தது. அது மிகவும் நீதியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது”. இவ்வாறு அவ்வூடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
si evitஎதிர்பார்க்கப்பட்டது போலவேவீடுகள் தகர்க்கப்பட்ட போதுபதட்ட நிலையொன்று உருவானது. குடியிருப்பாளர்களுக்கும்பொலிஸாருக்கும் இடையில் நடந்தமோதலில்,பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்தார். சில நாட்கள் கழித்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், இருக்கமான பாதுகாப்பிற்கு மத்தியிலும், வீட்டு உரிமையாளர்கள் வீதிப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். மே, 14, 2010 அன்று இது தொடர்பாக பின்வருமாறு டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருந்தது. லிப்டன் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசுகையில், நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையை வழிநடாத்துகின்ற பாதுகாப்புச் செயலாளருக்கு மக்களைப் பலவந்தமாக வெளியேற்ற எந்த உரிமையும் இல்லை. அவர் தனது சகோதரர் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துபவரே அல்லாமல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர். இம்மக்கள் வெளியேற்றப்பட்ட முறை கருணையற்றதாகும். இரண்டு மணித்தியாலத்திற்குப் பதிலாக குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இவர்கள் காலக்கெடு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்”.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார்கள். தெமடகொடவில் மாற்று இட வசதி செய்து தருவதாக இதன் போதுநகர அபிவிருத்தி அதிகார சபையும் இணங்கியது. புதிதாகக் கட்டப்பட்டு வந்த தொடர்மாடிக் குடியிருப்பில் இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என சட்டமா அதிபர் அவர்களும் இணங்கியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் சொன்ன மாதிரி தெமடகொடையில் வீடுகளை அமைத்தது. துரதிஷ்டவசமாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஆதரவாளர்களான பொரல்லையைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அவை பங்கு வைக்கப்பட்டன.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷகொழும்பு மேயர் A.J.M. முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிகழ்வில்மிஹிந்து சேன்புர என்ற இந்த வீட்டுத் தொகுதிஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. முன்பு கொழும்பில் சிறு குடில்களில் வசித்து வந்தவர்கள் மத்தியில் இவ்வீடுகள் கட்சி பேதமின்றிப் பங்கு வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Wednesday, December 11, 2013

பெட்டை நாய்


மிருணாள் பாண்டே

நான்கு வயதுப் பெண் பிள்ளைக்கு ஒரு நாயைத் திருமணம் செய்து வைத்ததாகப் பத்திரிகையில் செய்தி ஒன்று வந்திருந்தது. குடும்ப தோஷத்தைக் கழிப்பதற்காக நடத்தப்பட்ட திருமணம் இது.

ஒரு கையில் இரண்டு தும்புத் தடிகளுடனும் மறுகையில் பேணியொன்றுடனும் வீடு சுத்தம் செய்பவளான கௌரி உள்ளே வந்தாள். பெங்காலிக்காரியான கௌரி சட்டபூர்வமற்ற சேரிப்புறக் குடியிருப்பில் வசிப்பவள். நான்கு பிள்ளைகளின் தாயான அவளை அவளது கணவனான ஹரன் கைவிட்டு விட்டுப் போய்விட்டான். அதிகம் உழைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டில் அவள் வேலை செய்யவில்லை. உண்மையில் கௌரியின் மகளான சுமித்ராதான் எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து வந்தவள். கணவனால் கைவிடப்பட்ட சுமித்ரா வேறொருவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக யமுனை நதிக் கரையோரத்திலுள்ள சேரிப்புறக் குடிசைப் பகுதிக்குச் சென்று விட்டாள்.

'ரி.வி. மேடம்' வீட்டு வேலையைத் தன்னைப் பொறுப்பெடுக்குமாறும் ஒவ்வொரு அறையாக உனக்குப் பின்னால் வந்து அவங்க பார்த்துக் கொண்டிருக்கமாட்டாங்க என்றும் நீ கொண்டு போகும் பிளாஸ்டிக் பையைச் சந்தேகப்பட்டுச் சோதனை போட மாட்டாங்க என்றும் சுமித்ரா தனக்குச் சொன்னதாக கௌரி என்னிடம் சொன்னாள்.

'ஒதுங்குங்க!'

கௌரி எனக்குக் கட்டளையிட்டாள். நான் எனது கால்களைத் தூக்கி சோபாவில் வைத்தேன். மூங்கிலாலான துடைப்பத்தால் சுத்தப்படுத்தத் தயாரானாள்.

'முதல்ல... இங்க வா!'

அவளை அழைத்துப் பத்திரிகையில் இருந்த சிறிய பெட்டை நாயின் படத்தைச் சுட்டிக் காட்டினேன்.

'பாரு... இவள் உங்க ஏரியாதான்... ஆக நான்கு வயசுதான் ஆகுது இவளுக்கு. இவளுடைய பெற்றோர் இவளுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்காங்க - ஒரு நாயை!'

நாடகப்பாணியில் ஒரு இடை வெளி விட்டு வசனத்தை முடித்தேன்.

'ஓஹோ...!'

என்றவள் தனது வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்:-

'இனியென்ன? அவள் அவங்க மகள். அவங்க அவளை அவங்க விரும்பிமாதிரி யாருக்கு வேணுண்ணாலும் கல்யாணம் முடிச்சுக் கொடுக்கலாம்தானே!'

'ஆனா இது சட்ட விரோதம்னு உனக்குத் தெரியாதா? பொலீஸ்...'

'எந்தப் பொலீஸூ?'

'உள்ளூர் பொலீஸ்தான்....'

'இல்ல.. இல்ல.. பொலீஸ் எதுக்குக்குத் தொந்தரவு செய்யணும்?'

'ஏனென்டா.. ஒரு பெண் பிள்ளை 18 வயசாக முந்திக் கல்யாணம் முடிக்க ஏலாது.. அதுதான் சட்டம்..'

'இனியென்ன... அவள் ஒரு ஆம்பிளையை முடிக்கல்லியே...'

'கௌரி... உனக்குத் தெரியாதா... அவளின் பெற்றோர் இப்பவே சிறைக்குப் போற நிலையிலதான் இருக்காங்க... இந்தக் காரியத்துக்காக....'

'அவங்களுக்கெதிரா யாரு பேசுவாங்க... நாயா...?'

கௌரி சிரிப்புத் தாங்காமல் நிலைகுலைந்தாள்.

'இது சிரிக்கிற விஷயமில்லை...'

நான் சொன்னேன். ஆனால் நானும் சிரித்தேன்.
'ஓ......... ம்மா...  குறைஞ்சது குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து அது அவளை அடிக்காது. ரிஸ்ட் வாட்ச் கேட்டு இல்லாட்டி பைசிக்கிள் வாங்கித் தரச் சொல்லி அவளது கையை முறுக்காது.. எவ்வளவு கெதியா முடியுமோ அவ்வளவு கெதியா அவளைக் கர்ப்பிணியாக்கிப் போட்டு இன்னொருத்தியை இழுத்துட்டு ஓடிப் போகாது. மனிசனின் மகனை விட ஒரு பெட்டை நாயின் மகன் எல்லா நாளும்... ம்மா.. எல்லா நாளும் சிறந்தது...'

'ஆனா அந்தப் பொண்ணு...'

'பொண்ணுக்கு என்ன... அவள் பார்க்கச் சந்தோசமாத்தானே இருக்கிறாள். நிறைய சுவீட்ஸ் சாப்பிட்டிருப்பாள்.. புதிய ஆடை அணிந்திருப்பாள்... இதுக்கு மேல ஒரு பிள்ளைக்கு என்ன வேணும்?'

Friday, December 6, 2013

காலம் என்பது ஒரு கனவு!


30.01.2000 அன்று “விபவி”, வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு நிறுவகத்தில் புத்தாயிரப் பிறப்பை முன்னிட்டு கவியரங்கு ஒன்றை நடத்தியது. கவிதை படித்தவர்கள் இருவர்தான். ஒருவர் நண்பர் சிதம்பரப் பிள்ளை சிவகுமார். மற்றது நான். இந்தக் கவிதையை எனது பழைய கோப்பு அடுக்குகளிலிருந்து இன்றுதான் கண்டெடுத்தேன். அக்கவியரங்கின் ஞாபகார்த்தமாக அக்கவிதையின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.

ஆண்டுகள் மாறியபோதெல்லாம்
அடையாளம் காட்டியது
நெருப்புத்தான்!

ஒரு பெருந்தீ எழுந்தபோது
ஒரு யுகம் முடிந்து போனது
ஒரு யுகம் மலர்வதானது...

பழைய ஆயிரத்தாண்டும்
புதிய ஆயிரத்தாண்டும்
பெருநெருப்பில்தான்
கைகுலுக்கிக் கொண்டன...

நான் -
வான - வாண வேடிக்கை
விநோதங்களைச் சொல்கிறேன்

நெருப்பு -
ஒரு புதிய விஷயமல்ல
ஆடையற்ற ஆதி விஞ்ஞானியின்
அரிய கண்டுபிடிப்பு அது

நம் முன்னோரை விட
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை

அவன் ஆடையில்லாதிருந்தான்
நாம்
ஆடையிழக்க அவதிப்படுகிறோம்

அவன் அவித்துச் சாப்பிட்டான்
நாமும்
அவித்துக் கொண்டிக் கொள்கிறோம்

அவன் மிருகங்களைக் கொன்றான்
நாம்
மனிதர்களையும் சேர்த்துக் கொல்கிறோம்

அவன் சிந்தனையில் ஏறுவரிசை
நம் சிந்தனையில் இறங்குவரிசை

அவன் தெரிந்து கொள்ள முயன்றான்
நாம் மறந்துவிட முயல்கிறோம்

அவனுக்கும் அவசியமாயிருந்தது நெருப்பு
நமக்கும் அவசியமாயிருக்கிறது நெருப்பு -
யாருக்கேளும் வைப்பதற்கு!

ஆக நம் முன்னோரை விட 
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை!

00

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்த போது
கும்மாளமிட்டுக் குதூகலித்தது 
ஒரு கூட்டம்

அதே நெருப்பு வயிற்றில் சிரித்தபோது
வாழ்த்துச் சொல்வதற்கும் வலுவின்றி
வாடிக் கிடந்தது
ஒரு கூட்டம்

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது ஒரு கூட்டம்
அது -
மது!

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது மற்றொரு கூட்டம்
அது- 
கண்ணீர்!

நெருப்பு வாழ்க்கை முழுவதும்
நெருங்கியே இருக்கிறது

நெருப்பு
பயமாகப் பரவி வருகிறது
இன ஒதுக்கலாய் எழுந்து நிற்கிறது
வறுமையாய் வடிவம் எடுக்கிறது
யுத்தங்களாய்
யுகங்கள் தாண்டி வருகிறது

00

புத்தாயிரம் வந்து விட்டதில்
புதுமை என்ன இருக்கிறது

புத்தாயிரம் -
காலம்!

காலத்துக:கு வரவு சொல்லும்
கவியரங்கு இது!

காலம் -
ஒருபோதும் வருவதில்லை
அது -
செல்கிறது!

காலம் என்பது ஒரு கனவு
அது தொடர்வதே இல்லை

காலம் என்பது ஓர் அரிதட்டு
அதில் எதுவும் எஞ்சுவதில்லை

காலம் என்பது
ஓர் ஓட்டைப் பாத்திரம்
அது எப்போதுமே நிரம்புவதில்லை

நாளை என்றொரு நாள்
நம்மைத் தேடி
வருவதேயில்லை!


Monday, November 25, 2013

இளம்பிறை எம்.ஏ.றஹ்மான் இலங்கை வருகை


கடந்த 23.11.2013 அன்று “இளம்பிறை” எம்.ஏ. றஹ்மான் அவர்கள் இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அன்று பிற்பகல் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் சார்பில் அவருக்கு வரவேற்பும் அவரது ஐந்து நூல்கள் வெளியீடும் நடைபெற்றது.


இலங்கையில் அவர் வசித்த காலத்தில் “இளம்பிறை” சஞ்சிகை வெளியிடப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் பெயர் பெற்ற ஓர் இலக்கியச் சஞ்சிகையாக அது விளங்கியது. இதனால் அவருடைய பெயருடன் அச்சஞ்சிகையின் பெயர் இணைந்து கொண்டது.


நூல்களின் முதற் தொகுதியைப் புரவலர் அல்ஹாஜ் பாயிக் மக்கீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அனைவரும் அவருடனான நட்பு குறித்தும் அவரது வெளியீடுகள், மற்றும் சஞ்சிகை குறித்தும் ஞாபகித்துப் பேசினார்கள்.


எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் “இளம்பிறை”ச் சஞ்சிகையின் அட்டைப் படம் ஒன்றைக் கொண்டு வந்து அனைவருக்கும் காட்டிப் பேசினார். அவ்வட்டையில் வ.மி. சம்சுதீன் அவர்களின் படம் பிரசுரமாகியிருந்தது. வ.மி. சம்சுதீன் இலங்கையில் வாழ்ந்த பெருமகன். இவர் அக்காலத்தில் மற்றொரு தமிழறிஞருடன் சேர்ந்து “ருபாயாத்” தை மொழிபெயர்த்து வெளியிட்டவராவார். 2007ல் சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இந்நூல் மீள் பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


எம்.ஏ.றஹ்மான் அவர்கள் ஒரு எழுத்தாளராகவும் சஞ்சிகையாளராகவும் மட்டுமன்றி பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். புலவர் மணி ஆ.மு ஷரிபுத்தீன் அவர்களின் “நபிமொழி நாற்பது”, வ.அ. இராசரத்தினம் அவர்களது “தோணி”, அறுபதுகளில் மருதமுனையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான ”இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள், “அண்ணல் கவிதைகள்”, மகாகவியின் “குறும்பா”, “கண்மணியாள் காதை”, சானாவின் “பரியாரியார் பரமர்”, எஸ்.பொ. வின் “வீ” என்பன உட்படப் பல நூல்களை தனது “அரசு வெளியீடு” மூலம் பதிப்பித்தவர்.


இலங்கையில் அவர் வாழ்ந்த காலத்தில் எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்திருந்தவர். முற்போக்கு அணிக்கு எதிராகச் செயற்பட்ட அணியில் இருந்ததோடு எஸ்பொ.வுடன் இணைபிரியா நண்பராகவும் இருந்தவர்.


அவருடனான நாடக அனுபவங்களை கலைஞர் கலைச் செல்வன் பேசினார். 


தனது தந்தையாரான நீலாவணனுடன் எப்படி றஹ்மான் குடும்ப நண்பராக இருந்தார் என்பதையும் அவரது பதிப்பகத்துள் சென்ற ஞாபகங்களையும் எஸ்எழில் வேந்தன் எடுத்துச் சொன்னார். “வரலாற்றில் வாழ்தல்” என்ற நூலில் நிறையப் பொய்கள் இருப்பதாக மு.பொன்னம்பலம் குறிப்பிட்டார். இதுபற்றிய கவனத்தை அந்தனி ஜீவாவும் தனது உரையில் கவர்ந்தார்.


நான் றஹ்மானை இதற்கு முன்னர் சந்திததில்லை. ஆனால் அக்காலத்திலேயே பிரமாதமாக இருந்த அரசு வெளியீடுகள், இளம்பிறை சஞ்சிகை ஆகியவை என்னைக் கவர்ந்திருந்ததையும் அதற்காகவே அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்ததையும் நான் குறிப்பிட்டேன். இளம்பிறை சஞ்சிகைதான் தன்னை வளர்த்து விட்டது என எழுத்தாளர் மொயீன் சமீன் குறிப்பிட்டார்.


கே.எஸ்.சிவகுமாரன், எஸ்.எச்.எம். ஜமீல், மு.பொன்னம்பலம், ஏ.எம். நஹியா, கலைச்செல்வன், அல்ஹாஜ் பாயிக் மக்கீன், எஸ்.எழில்வேந்தன், கலைவாதி கலீல், யாழ் அஸீம், டாக்டர் தி.ஞானசேகரன், மொயின் சமீன், காத்தான்குடி பௌஸ், மானா மக்கீன், த.மணி, திக்குவல்லை கமால், பொத்துவில் அஸ்மின், குமரன், தில்லை நடராஜா, ஜூனைதீன், திருஞானசுந்தரம், வேலணை வீரசிங்கம், இளநெஞ்சன் முர்ஷிதீன், எம்.ஏ.எம். நிலாம், எஸ்.ஐ.நாகூர்கனி, கே.பொன்னுத்துரை, நியாஸ் ஏ. சமத், கதிர்காமநாதன், மர்ஸூம் மௌலானா, ராமதாஸ், அஷ்ரஃப் சிஹாப்தீன், ஸ்ரீதரசிங், தமிழ்த்தென்றல் அலி அக்பர், நஸ்முல் ஹூஸைன், எம்.எஸ்.எம். ஜின்னாஹ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள்.



இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார் இளம்பிறை எம்.ஏ.றஹ்மான்.

வெளியிடப்பட்ட நூல்கள்
------------------------------------
01. இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்
02.காந்தி போதனை
03.மரபு
04.இளமைப் பருவத்திலே
05. சிறுகை நீட்டி

(புகைப்படங்கள் தெளிவின்மைக்கு வருந்துகிறேன்!)


Sunday, November 24, 2013

அண்டர் எஸ்டிமேற்!


'டேவிட் கமரூன் நூறு என்ஜியர்மார இலங்கைக்கு அனுப்பப் போறாராம்' என்றார் எனது நண்பர்.

'இப்பதானே வந்து திரியில நெருப்ப வச்சிட்டுப் போயிருக்காரு.. இனி இன்னம் என்னத்துக்கு என்ஜினியர்மார அனுப்போணும்?'

'அவரோட எத்தனை யாவாரிங்க வந்தாங்கன்னு தெரியாதா உங்களுக்கு?'

'ம் கேள்விப்பட்டேன்... அதுக்கும் என்ஜினியர்மார அனுப்புத்துக்கும் என்ன சம்பந்தம்?'

'நம்ம நாட்டுலமாதிரி றோட்டுத் தோண்டுறது பற்றி ட்ரெயினிங் எடுக்கத்தான்!'

'வெள்ளக்காரனுக்குத் தெரியாத சிஸ்டமா... நமக்கிட்டயா படிக்கோணும்?'

'நீங்க இப்பிடிச் சொல்றீங்க.. விசயம் தெரிஞ்சா ஒபாமாவே 500 என்ஜினியர்மார அனுப்பிடுவாரு!'

'ம்.. தோண்டுறதும் மூடுறதும் மறுவாத் தோண்டுறதும் பள்ளமும் மேடுமா றோட்டுக் கிடக்கிறதையும் அமெரிக்கனும் பிரிட்டிஷ்காரனும் நமக்கிட்டதான் படிக்கணுமாக்கும்!'

'சரியா அதுக்குத்தான் வரப்போறாங்க...!'

'கொஞ்சம் வெளக்கமாச் சொல்லன்டாப்பா!'

'ஒரு கிலோ மீற்றருக்குள்ள 40 இடத்தில தோண்டுறது வேற எந்த நாட்டுல நடக்கும்? இந்த சிஸ்டம் படிக்கிறதுன்னா இலங்கைல மட்டும்தான் படிக்கலாம். மேலதிகமா இருக்கிற பொலிஸ்காரங்களை வாகன நெருக்கடிக்கு உபயோகப்படுத்துறது என்டு ஏகப்பட்ட படிப்பு இருக்கு!'

'கிண்டல் பண்றீங்க... நல்லது நடந்தாலும் நம்ம நாடுன்னா நாம் அண்டர்ஸ்டிமேற் பண்ணிப் பேசிப் பழகிட்டம். நம்மள நாமே தாழ்த்திக்கிறம்!'

'தோண்டுறதுக்கு ஒரு கணக்கு. மூடுறதுக்கு ஒரு கணக்கு. அப்புறம் சரியா மூடல்ல.. சீமெந்து சிலப் போட்டு பேவ்மன்ட செய்றதுக்கு ஒரு கணக்கு... அப்புறம் அதை இடிச்சி சின்னக் கல்லுப் பதிக்கிறதுக்கு ஒரு கணக்கெண்டு கணக்குக் கணக்காவே எழுதலாம்தானே... கொமிசன் வேறயா வரும்!'

'ஓ...!'

'நீங்க சொல்லுறமாதிரி அன்டர்ஸ்டிமேற் இல்ல இது. ஆனால் இதுவும் ஒரு வகையான அண்டர் எஸ்டிமேற்தான். புரிஞ்சுதா?'

Thursday, November 21, 2013

இரண்டாவது வாழ்க்கை!


Dunya Mikhail 
(Iraq)



இந்த வாழ்க்கைக்குப் பிறகு
நமக்கு அவசியம் இரண்டாவது வாழ்க்கை
முதல் வாழ்க்கையில் கற்றதை
நடைமுறைப்படுத்த...

ஒன்றுக்குப் பின் இன்னொன்றாக
நாம் பிழைகள் விடுகிறோம்
இரண்டாவது வாழ்க்கை 
நமக்கு அவசியம்
அவற்றை மறப்பதற்கு

நாம் ரங்கராட்டினம் விளையாடுகிறோம்
இரண்டாவது வாழ்க்கை
நமக்கு அவசியம்
அன்புக்காக மட்டும்

எமது சிறைத் தண்டனையை
முடித்துக் கொள்ள
நமக்குக் காலம் தேவைப்படுகிறது
அதற்குப் பிறகு 
இரண்டாவது வாழ்க்கையில்
சுதந்திரமாக வாழ முடியும்

நாம் புதிய மொழியைக் கற்கிறோம்
அதைப் பிரயோகிக்க
இரண்டாம் வாழ்க்கை அவசியம்

எல்லா இடங்களிலும்
முண்டியடிக்கிறோம்
இரண்டாம் வாழ்க்கை அவசியம்
படங்களை எடுப்பதற்கு

நாம் கவிதைகள் எழுதுகிறோம்
இரண்டாம் வாழ்க்கை அவசியம்
அவை குறித்து
விமர்சகர் கருத்தைத் தெரிந்து கொள்ள

துயரமானது காலத்தை எடுத்துக் கொள்கிறது
வீணாக
இரண்டாம் வாழ்க்கை அவசியம்
தெரிந்து கொள்வதற்கு
துயரின்றி வாழ்வது எப்படி என்று!

(அரபுக் கவிதை - ஆங்கில வழித் தமிழாக்கம்)




Friday, October 25, 2013

மார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்

மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் அவர்கள். ஆளுமையும் பேணுதலும் மார்க்க மற்றும் உலக அனுபவ ஞானம் மிக்கவர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார்.

மஸ்ஊத் ஆலிம் சாஹிப் ஓரிடத்தில் நிற்கிறார் என்றால் அல்லது வருகை தருகிறார் என்றால் அந்த இடம் மரியாதைக்குரிய இடமாக மாறிவிடும். தயங்கித் தயங்கி மரியாதையுடன் அவரிடம் உரையாடிய பல விற்பன்னர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் அவர்களை எதிர்கொள்ளவே தயங்கினோம். அதற்குக் காரணம் அவர் மீதிருந்த கண்ணியமேயாகும்.

மிகச் சாதாரண ஒரு மனிதராகத் தோற்றமளிக்கும் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் பேச ஆரம்பித்தால் கணீர் என்ற அவரது குரலில் கேட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் கட்டுண்டு கிடப்பார்கள்.  சன்மார்க்க விடயங்களில் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. பிழையைப் பிழை என்றும் சரியைச் சரி என்றும் நேரடியான மொழியில் எடுத்துச் சொல்வதில்தான் அவர் கவனமாக இருப்பார். பிற்காலத்தில் மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பின்பற்றி அவரைப் போலவே சில ஆலிம்கள் பேச முயன்றிருக்கிறார்கள் என்றால் அவரது ஆளுமை எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இன்றுவரை விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஆலிம்களின் பேச்சு மொழியை அந்தக் காலத்திலேயே அவர் மிக அழகாகக் கையாண்டார். அவர் எடுத்தாளும் விடயங்கள் மிகத் தெளிவாகவும் கேட்போர் மனதில் இயல்பாகப் பதிவும் வண்ணமும் அவரது மொழி அமைந்திருக்கும். அதற்குக் காரணம் அவரது ஓயாத வாசிப்பு. முதன்முதலாக அவர்களது வீட்டுக்குச் சென்ற போது அவர்களது நூலகத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். 'ஷஜருத்துர்' என்றொரு முஸ்லிம் வரலாற்று நாவல். சலாஹூத்தீன் ஐயூபியின் மருமகளைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட பெரிய நாவல் அது. அந்த நாவலை ஜாமிஆ நளீமியாவில் கற்கும் காலத்தில் ஜாமிஆ நூலகத்தில் படித்திருக்கிறேன். மஸ்ஊத் ஆலிம் அவர்களின் வீட்டு நூலகத்தில் தவிர வேறெங்கும் அந்நாவலின் மற்றொரு பிரதியை நான் கண்டதில்லை. இதில் குறித்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அந்நாட்களில் நாவல் படிப்பது அதுவும் ஆலிம்கள் படிப்பது வீண் வேலை அல்லது விரும்பத்தகாத செயலாக இருந்தது என்பதுதான்.

பல நூறு ஆலிம்கள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பேசியிருக்கிறார்கள், பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் மஸ்ஊத் ஆலிமின் உரை என்றால் அதற்கு ஒரு தனி மரியாதையும் கண்ணியமும் இன்றுவரை இருக்கிறது. அவர்கள் வழங்கிய ஸஹர் சிந்தனைகள், ஹஜ் பற்றிய வழிகாட்டல் உரைகள் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அறிவிப்பாளர்கள் பொதுவாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாகவிட்டு அடுத்த நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவது அல்லது வேறு வேலைகளைக் கவனிப்பது வழக்கம். ஆனால் மஸ்ஊத் ஆலிம் அவர்களது உரை ஒலிபரப்பாகும் வேளை நான் அதையே கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குக் காரணம் அவரது பேச்சு ஆரம்பிக்கும் போதே அவரது குரல் நம்மை அவர் அருகே இழுத்துச் சென்று விடும் வல்லமையுள்ளதாக இருந்தது. ஏனைய அறிவிப்பாள நண்பர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா ஆலிம்களும் மௌலவிகளும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வந்தே தமது உரைகளை ஒலிப்பதிவு செய்வது வழக்கம். ஆனால் மஸ்ஊத் ஆலிம் அவர்களது உரையை ஒலிப்பதிவு செய்வதற்குத் தயாரிப்பாளர் அவர் இருக்குமிடத்துக்குச் செல்வார். அங்கேதான் ஒலிப்பதிவும் நடைபெறும். பின்னாளில் முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகப் பணிபுரிந்த மௌலவி இஸட்.எல்.எம். முஹம்மத் அவர்கள்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தபோது மஸ்ஊத் ஆலிம் அவர்களின் அநேக உரைகளை அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று ஒலிப்பதிவு செய்தவர். இந்த அனுபவங்களை மௌலவி இஸட். எல்.எம். முகம்மத் அவர்கள் என்னிடம் பகிர்ந்துள்ளார்.

மஸ்ஊத் ஆலிம் அவர்களது மூத்த புதல்வனோடு ஒரே வகுப்பில் படித்த காரணத்தினால் குறுகிய காலம் அவர்களது குடும்பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக இருந்திருக்கிறேன். அப்போதும் கூட மஸ்ஊத் ஆலிம் அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் நான் மிகுந்த சங்கோஜமுடையவனாக இருந்திருக்கிறேன். அகஸ்மாத்தாக சந்தித்துக் கொண்டல் 'வாப்பா எப்படியிருக்காரு?' என்பதே அவரது முதலாவது கேள்வியாக இருக்கும். காலி, பஹ்ஜத்துல் இப்றாஹீமிய்யாவில் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் ஜூனியர்களில் ஒருவராக என் தந்தை இருந்தது அந்த விசாரிப்புக்குக் காரணம். 'எனது ஸலாத்தை வாப்பாவுக்கு எத்தி வையுங்கள்!' என்பது அவரது அடுத்த வார்த்தையாக இருக்கும். படிப்பு விடயங்களை விசாரிப்பாரோ என்ற பயத்தில் அவரது மூன்றாவது வார்த்தைக்கு முன்னர் நாங்கள் இடம் மாறிவிடுவோம். ஜாமிஆ நளீமியாவின் ஆலோசகர் குழுவில் மஸ்ஊத் ஆலிம் அவர்களுக்கு முக்கிய இடம் இருந்தது.

ஒரு முன்மாதிரி ஆலிமாக விளங்கிய மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பற்றி பின்னால் வந்த பரம்பரையினரில் அநேகருக்குத் தெரியாது. குறைந்தது ஆயிரக் கணக்கில் பெருகியிருக்கும் ஆலிம்கள் கூட அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. குறிப்பாக ஆலிம்கள் மஸ்ஊத் ஆலிம் சாஹிபைப் பற்றித் தெரிந்திருக்க வெண்டும் என்று நான் குறிப்பிடுவது பெயர்பெற்ற ஒரு மார்க்க அறிஞராக அவர் விளங்கினார் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் தன்னை எத்தகைய ஆளுமையுள்ளவராக மாற்றியிருந்தார் என்பதைப் புரிந்து அவர்களும் தம்மை அவ்வாறு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவாவினாலேயாகும்.

சமூக சேவையில் ஈடுபட்ட பலரை அவ்வப்போது சமூகம் ஞாபகப்படுத்திய போதும் மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் உரையை வானொலியில் கேட்பதோடு அவரைச் சமூகம் மறந்து விட்டதா என்றொரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மஸ்ஊத் ஆலிம் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் இன்னும் பலர் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்று அவர்களைப் பற்றிய ஒரு நூல் வெளிக் கொணரப்பட வேண்டும் என்று முன்மொழிகிறேன்.

(மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களது புகைப்படம் அவரது பேத்தியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி!)

Wednesday, October 23, 2013

கோபக்காரக் கவிஞனின் செய்யுள்

நிஸார் கப்பானி

நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி 34 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டவர். இவரது பாடல்கள் பிரபல பாடகர்களால் பாடப்பட்டுள்ளன.

அமெரிக்க மத்தியஸ்தத்தின் பெயரில் இஸரேல் - பலஸ்தீன் உடன்படிக்கை ஒஸ்லோவில் கைச்சாத்திடப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்துக் கவிதை எழுதினார் நிஸார் கப்பானி. எதிரிகளுக்குப் பணிந்து சமரசம் செய்து கொள்வதை அவர் அவமானமாகக் கருதினார். மிக எளிமையான சொற்களைக் கொண்டு நேரிடையாகத் தாக்கம் மிக்க கவிதைகளைத் தருவதில் வல்லரான அவரது கவிதை கவிதைத்துறையில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

இங்கே தரப்பட்டுள்ள இந்தக் கவிதை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் காலித் எம்.அமைராஹ். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர் கவிஞர் எம்.கே.எம். ஷகீப். இரண்டு மொழி தாண்டியும் மிகுந்த கோபத்துடன் நிஸார் கப்பானியின் வார்த்தைகள் வந்து விழுகிறன. ஜாமிஆ நளீமியாவின் மாணவர்களில் ஒருவரான எம்.கே.எம். ஷகீப் 'சரிநிகர்' பத்திரிகையில் பணிபுரிந்தவர். தற்போது தொழில் நிமித்தம் கட்டாரில் வாழ்ந்து வருகிறார். 1997ல் 'நிகரி' வெளியீடாக வந்த 'நாளை இன்னொரு நாடு' என்ற ஷகீபின் கவிதைத் தொகுதியில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.

எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்றான இக்கவிதையை நான் மீண்டும் மீண்டும் படிப்பதுண்டு. கப்பானியின் கோபத்திலுள்ள நியாயங்கள் எப்படியிருந்த போதும் அவரது கோபமும் அதை அவர் வெளிப்படுத்தியுள்ள விதமும் போற்றத்தக்கது, ரசிக்கத் தக்கது. உணர்வு குன்றாமல் கவிதையை அதற்கேயுரிய உயிரோட்டத்துடன் மொழிபெயர்த்த இரண்டு கவிஞர் களுக்கும்தான் அதற்கான நன்றி உரித்துடையது.

கோபக்காரக் கவிஞனின் செய்யுள்

எமது இறுதிக் கண்ணியச் சுவரும்
வீழ்ந்து போனது
நாம் சந்தோஷித்தோம்!
ஆடிக் களித்தோம்
ஒப்பமுமிட்டோம்
'கோழைகளின் சமாதானம்' என
எம்மை ஆசீர்வதித்தார்கள்
இதைவிட
...எதுவும் எம்மை தலைகுனிந்து
வெட்கப்பட வைக்காது...
எம் பெருமிதத்தின்
இரத்தக் குழாய்களெல்லாம்
வரண்டு வற்றியாயிற்று

2
ஐம்பதாவது தடவையாகவும்
எம் மானம், நேர்மை, ஒழுக்கம், கண்ணியம்
எல்லாம் போயாகி விட்டது
எதுவிதப் பதற்றமோ
எந்தச் சத்தங்களோ... எம்மிடம் இல்லை
எல்லாம் இழந்து...
இரத்தத்தைப் பார்க்கையில் ஏற்படுகிற
அற்ப அதிர்வுமற்று
மொத்தமாய் எல்லாம் போயிற்று
ஐம்பதாவது தடவையாகவும்
நாம் ஓடித் திரிகின்ற காலத்தில்
நுழைந்தோம்
அறுவைக் கடைக்கு முன்னால்
ஆட்டு மந்தைகளைப் போல
வரிசையாய் நாம் நின்றோம்
கொலைகாரர்களின் சப்பாத்துக்களை
முத்தமிடுவதற்காய்
மூச்சுத் திணறத் திணற
நாம் போட்டி போட்டுக் கொண்டு ஓடினோம்

3
ஐம்பது ஆண்டுகளாய் அவர்கள்
எம் பிள்ளைகளைப்
பட்டினி போட்டார்கள்
நீண்ட நோன்பிருப்பின் இறுதியில்
ஒரு வெங்காயத்தை அவர்கள்
எமக்கு எறிந்தனர்

4
ஐம்பதாவது தடவையாக
அராபியர் கைகளிலிருந்து
கிரனாடாவும் வீழ்ந்தது
வரலாறும் வீழ்ந்தது
எம் ஆத்மாக்களின் தூண்களும்
எமது சுயத்தினது தூண்களும்
மொத்தமாய்
ஐம்பதாவது முறையாகவும்
வீழ்ந்தன
வீரப் பாடல்கள் இனி இல்லை

இஷபெய்ல்யா  அண்டாக்யா
ஹட்டின் - அம்மோரியா
எல்லாம் எதுவுமற்று வீழ்ந்தன
'மேரி'யும் அவர்களது சிறைக் கைதியானாள்
வானத்து அத்தாட்சிகளைக் காக்க
எந்த வீரனும் இல்லை

5
எம் இறுதிக் கன்னிகையும்
ரோமர்களிடம் வீழ்ந்து போனாள்
இனிச் சண்டையிட என்னதான் இருக்கிறது?
எம் மாளிகையில் தேநீர் ஊற்றுகிற
பெண் கூட இல்லை
இனி யாரைத்தான் காக்க?

6
ஓர் அந்தலூசியா கூட
எம் கரங்களில் இல்லை
அவர்கள் கதவுகளைத் திருடினார்கள்
சுவர்களைத் திருடினார்கள்
மனைவிகளைத் திருடினார்கள்
பிள்ளைகளைத் திருடினார்கள்
ஒலிவ் மரங்கள், எண்ணெய் வளங்கள்
வீதிகளில் உள்ள கற்கள்
எலுமிச்சைச் செடியின் ஞாபகங்கள்
எல்லாவற்றையும் திருடினார்கள்
இலந்தைப் பழங்களை
நாணயங்களை
பள்ளிவாசல் விளக்குகளின்
எண்ணெயைகைகூட
அவர்கள் திருடினார்கள்

7
காஸா எனப்படுகிற
ஒரு மீன் சாடியை
அவர்கள் எம் கையில்
விட்டு விட்டுப் போனார்கள்
'ஜெரிக்கோ' என்றழைக்கிற
ஒரு காய்ந்த எலும்பும் கிடைத்தது
கூரைகள் அற்ற
ஒழுங்காகக் கட்டப்படாத
பலஸ்தீன் என்ற ஹோட்டலையும்
எம்மிடம் வட்டுச் சென்றார்கள்
இன்னும்
எலும்புகளற்ற ஒரு செத்த உடம்பையும்
விரல்கள் அற்ற ஒரு கையையும்
அவர்கள்
எமக்குத் தந்து விட்டுச் சென்றார்கள்

8
நினைத்து அழுவதற்கு
ஒரு துண்டுச் சின்னமும்
எமக்காக இல்லாமல்
அவர்கள் கண்களையே
எடுத்துச் சென்றுவிட்ட போது
ஒரு சமூகத்தால் அழ முடிவதெப்படி?

9
ஒஸ்லோவில்
இந்த இரகசிய மன்றத்தின் பின்
மொத்தமாய் நாம் கருகிப்போனோம்
ஒரு கோதுமை மணியை விடச்
சின்னதாய்
ஓர் இருப்பிடத்தை
எமக்கவர்கள் தந்தனர்
ஓர் அஸ்பிரின் குளிசையைப்போல்
தண்ணீரின்றி
விழுங்கி விடுமளவு
அவர்கள்
எமக்கோர் இருப்பிடத்தைத் தந்தனர்

10
ஐம்பது வருடங்களின் பின்னரும்
இடமற்ற ஆயிரம் ஆயிரம்
நாய்களைப் போல்
வறண்ட நிலமே
எம் வசிப்பித் தீர்ப்பாயிற்று

Thursday, October 17, 2013

உனக்காகவே வாழ்கிறேன்!


எல்லோருக்குமாக வாழ்வதில்
இருக்கும் இன்பம்
தனக்காக மட்டும் வாழ்வதில் இருப்பதில்லை

தனக்காக வாழ்வது சுயநலம்
பிறர்க்காக வாழ்வதாகச் சொல்வது
பொய்
தனக்கும் சேர்த்து
எல்லோருக்குமாக வாழ்வதே சுகம்

ஆதி மனிதர்கள்
ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக வாழ்ந்தார்கள்.
அங்கு
கபடத்தனமும் இருக்கவில்லை
கலகமும் இருக்கவில்லை

நதியோரங்களுக்கு வந்த பின்னர்
நாகரிகங்களுக்கு நழுவினார்கள்
நாகரிகம் வந்த பிறகுதான்
நாறிப் போனது மனித இனம்

அரசர்கள் ஆகினர்: அடிமைகள் ஆகினர்
இனங்கள் ஆகினர்: மதங்கள் ஆகினர்

ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக
என்பது
எல்லோரும் ஒருவருக்காக என்றானது
மன்னர் ஆண்டார்: மற்றவர் மாண்டார்

மன்னர்கள் ஆசை மட்டுப்படாதது
மற்றவனின்
மண்ணைப் பிடித்தார்கள்
சிலர் அவர் பெண்ணையும் பிடித்தார்கள்

கலகங்கள் வந்தன
தலைகள் உருண்டன

இனங்கள் என்றொரு இழையைக் கீறினர்
எங்களுக்காக நாங்கள் என்றனர்
அவரவர் நினைத்ததை அவரவர் செய்தனர்
சில மனிதர் வாழ்ந்தார்
பல மனிதர் வீழ்ந்தார்

மகத்துவமான மனிதர் தோன்றினர்
மதங்கள் தோன்றின
சிலர் மதங்கள் வழியே மாண்புற்றெய்தினர்
பலர் மதங்களை வைத்தே மல்லுக் கட்டினர்

இன்று வரைக்கும் இதுவே நம்கதை

ஒருவருக்காக எல்லோரும் என்பதைப்
பின்னர்
மக்களுக்காக மக்கள் என்றோம்
மக்களை மக்கள் ஆள்வது என்றோம்

மன்னர்கள் வீழ்ந்தனர்
மக்கள் தலைவர் மன்னர்களாயினர்
மக்களாட்சியில் மயங்கி நின்றோம்
வாக்கு என்பது வல்லமையென்றோம்
மானிடர் யாவரும் சமனெனக் கொண்டோம்
இனத்துவ இழைகளை இறுக்கிப் பிடித்து
மதமெனும் மதத்தை முன்னிலைப்படுத்தி
மக்களுக்காக மக்கள் என்று
மது அருந்தாமலே மயங்கிக் கிடந்தோம்

மன்னர் ஒருவன் கீழே வீழ்ந்தான்
மக்களின் தலைவர்கள் அரியணை ஏறினர்
கொள்ளையன் ஒருவன் வீழ்த்தப்பட்டான்
கொள்ளையர் நூறுபேர் அரியணை யேறினர்
மக்களாட்சியின் மகோன்னதத்தாலே
மக்கள் தேர்ந்த மாபெரும் தலைவர்கள்
மாறுவேட மன்னர்களாயினர்!

முடியாட்சியில் ஒருவனே கொள்ளையன்
குடியாட்சியில் ஒரு நூறு கொள்ளையர்கள்!

மக்களின் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ
மக்கள் என்றும் ஏமாந்து நிற்கிறார்

இன்று வரைக்கும் இதுவே நம்கதை

ஜனநாயகம் என்பது
ஒரு கேலிக் கூத்து
ஜனநாயகம் என்பது
கூத்தாடிகளின் கும்ப மேளா
ஜனநாயகம் என்பது
சட்டப்படி கொள்ளை கொள்வது
ஜனநாயகம் என்பது
நவீன உலகின் முகமூடி
ஜனநாயகம் என்பது
எல்லோருக்குமாகவே நாங்கள் என்கிற
ஏமாற்று வித்தையின் இயங்கு தளம்

எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
மக்கள்
குனிந்து நடக்கவே கோரப்படுகிறார்கள்
நீதி
ஆளுக்கு ஒன்றாய் அர்த்தம் தருகிறது
வாக்குகள்
கொள்ளையிடப்படுகின்றன
மனித உரிமை
மன்னர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
மக்களரசுகள்
வல்லரசாவத்ற்கே வாஞ்சையுறுகின்றன

எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
ஆனால் அவை
ஆயுதம் வாங்குவதற்கே ஆசைப்படுகின்றன
ஒரு தேசம்
நீ எனக்காகவே என்று மற்றொரு தேசத்திடம்
சொல்லிக் கொண்டிருக்கிறது
உனது வளம்
எனது தேசத்துக்காகவே என்று அச்சுறுத்துகிறது
நான் சொல்வதைக் கேட்கவில்லையெனில்
நீ கற்காலத்துக்குப் போய்விட வேண்டும் என்று
பயமுறுத்துகிறது

எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
அத்தேசங்களிலெல்லாம்
இரத்த ஆறே ஓடிக் கொண்டிருக்கிறது...

பத்திரிகைகளில் அடிக்கடி வரும்
படங்களில் இருப்போரைக் காண
எனக்குப் பயமாக இருக்கிறது

அவர்கள்
தொலைக்காட்சிகளில் வரும்போது கூடத்
தூர அமர்ந்து கொள்கிறேன்

அவர்கள்
உயிர் பெற்று வந்து
என் குரல்வளையைக் கடித்து விடுவார்களோ
என்று அச்சப்படுகிறேன்

இந்த அச்சம் பரவி
யாருடையவாவது குரல்வளையை
நான் கடித்து விடுவேனோ என்று
எனக்கு அச்சமாக இருக்கிறது

சிந்தித்துப் பார்த்தேன்
இப்போது
ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக
வாழ்வதாக இல்லை

காதலனோ காதலியோ
ஒருவரிடம் ஒருவர்
திருமணத்துக்கு முன்பாகவும்

அரசியல்வாதிகள்
தேர்தலுக்கு முன்பாகவும்

சொல்லிக் கொள்கிறார்கள் -

உனக்காகவே வாழ்கிறேன் என்று!

(கவியரங்கு ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை)





Wednesday, August 21, 2013

பிறைக் குழறுபடி: ஜம்இய்யதுல் உலமா சீரமைக்கப்பட வேண்டிய தருணம்!


- லத்தீஃப் பாரூக் -

முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாக் கிராமம் நாட்டின் வட கிழக்குக் கரையோரமாக அமைந்திருக்கிறது. சுமார் 98 சதவீதமானவர்கள் இங்கு முஸ்லிம்கள். மார்க்க அறிஞர்கள், புலமைத்துவ மட்டத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிற தொழில்களைப் புரிபவர்கள் என சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.

புனித ரமழான் மாதம் வந்தாலேஇ கிராமத்தின் சூழ் நிலை முழுமையாக மாற்றம் அடைகிறது. நோன்பு நோற்பதிலும் இரவுத் தொழுகைகளிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிப்பதற்கான தலைப் பிறை வழமையாகத் தென்படும் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இத்தலைப் பிறையை அடிப்படையாக வைத்தேஇ ரமழான் மாத நோன்பை முஸ்லிம்கள் நோற்க ஆரம்பிக்கவும், நோன்பை நிறைவு செய்து நோன்புப் பெருநாளைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.
   
இவ்வாண்டும் அதற்கு விதி விலக்கல்ல. ஆகஸ்ட் 06இ 2013 அன்று கிண்ணியாவாசிகள் தலைப் பிறையைக் காணும் ஆர்வத்தில் இருந்தார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஇ கிண்ணியாக் கிளையின் பிறைக் கமிட்டி அதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தது.
      
கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா என்பது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை உள்ளடக்கிய பாரியதொரு நிறுவனமாகும். பலவேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவ்வமைப்பின்இ பிறைக் குழுத் தலைவராக இருப்பவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள். இவ்வமைப்பே கிண்ணியாப் பிரதேசத்தில் பிறை பார்ப்பதற்குப் பொறுப்பாக இருக்கிறது.
  

கொழும்பில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகமும் மேமன் சமூகத்தைச் சேர்ந்த இருவரைஇ கிண்ணியாப் பிறைக் குழுவுடன் இணைந்து பிறை பார்க்கும் கருமத்தில் ஈடுபடும் படி கிண்ணியாவிற்கு அனுப்பி வைத்திருந்தது. ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை (பெருநாள் தலைப் பிறை) பார்க்குமாறு ஜம் இய்யதுல் உலமாவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
  
பெரியாத்துமுனைஇ பெரிய கிண்ணியாஇ ஜாமிஉல் மஸ்ஜித் பகுதி, காக்காமுனை போன்ற பிரதேசங்களில், புதன் கிழமை மாலை 6.32 இற்கும்,6.35 இற்கும் இடையில் ஒருவர் பின் ஒருவராக இருபத்தைந்து பேர் வரை ஷவ்வால் தலைப் பிறையைக் கண்டிருக்கிறார்கள்.  

பிறை கண்ட ஆறு பேர், போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜாவாப் பள்ளிவாயல் தலைவராக இருக்கும் அஷ்ஷெய்க் ஜாபிர் (நளீமி) அவர்களை சந்தித்திருக்கிருக்கிறார்கள். சகல தகவல்களையும் உறுதி செய்து கொண்ட அவர், ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளைக்கு இதனைத் தெரியப்படுத்தி உள்ளார். கிண்ணியாக் கிளை இத்தகவல்களை மேலும் ஆராய்ந்தது.        
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் கமிட்டியை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா அவசரமாகத் தொடர்பு கொண்டது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முடியவில்லை.  
       
எவ்வாறாயினும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஜம்இய்யதுல் உலமாவில் இருந்து கிடைத்த பதில் அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. கிண்ணியா பிறைக் கமிட்டி உலமாக்கள்இ அறிஞர்கள்இ சமூக மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருந்த போதிலும்இ தாம் பொய் சொல்வதாக உணர்கின்ற வகையில்இ கொழும்பில் இருந்து அநாவசியமான பல கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டன.

பிறகு தமது கருத்துக்கள் மறுக்கப்பட்டு, மேமன் குழுவினதும், வானிலை அவதான நிலையத்தினதும் கருத்து ஏற்கப்பட்டு, வியாழக் கிழமை எட்டாம் நாள் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருள்நாள் கொண்டாடப்படும் எனவும் கூறப்பட்ட போது, கிண்ணியாவாசிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கியஸ்த்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிறை கண்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அவசரக் கூட்டம் ஒன்று அன்றிரவு ஒன்பது மணிக்கு கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் மீண்டும் ஆராயப்பட்டு, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, தலைமையகத்திற்கு எத்தி வைக்கப்பட்டது போது, கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறைக் குழு தமது மாநாட்டை நிறைவு செய்து, கலைந்து சென்று விட்டார்கள் என்ற பதிலே அவர்களுக்குக் கிடைத்தது. வியாழன் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருநாள் கொண்டாடப்படும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்திருப்பதாகவும் வேறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இம்முடிவால் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவும், கிண்ணியாப் பிறைக் குழுவும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
      
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இச்செயற்பாடு காரணமாக வெறுப்புக்குள்ளான கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா, அங்குள்ள மக்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பிற்கு முரணாக, வியாழனன்று பெருநாள் கொண்டாடும் படி அறிவிப்புச் செய்தது.
அடுத்த நாள் ஆகஸ்ட், 08 வியாழக் கிழமை அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் மூதூர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Sunday, August 18, 2013

நாவூரும்மா!


ஆளுர் ஜலால்

(முஸ்லிம் சமூகப் பின்னணியில் நல்ல சிறுகதைகளைப் படைத்தவர்களில் மர்ஹூம் ஆளுர் ஜலால் முக்கியமானவர். “முஸ்லிம் முரசு“ ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் இளவயதிலேயே இறையடி சேர்ந்து விட்டார். அவருடைய சிறந்த கதைகளில் ஒன்றான இந்தச் சிறுகதையை வாசகர்களுக்குச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.)

காலை நீட்டிக் கொண்டு, மடியில் தூளும் இலைகளும் நிரம்பிள தட்டை வைத்துக் கொண்டு, ஆஸ் வைத்து இலையை வெட்டி, தூளை நிறைத்து, சுக்கானால் மடித்துச் சுருட்டி, சிவப்புத் தாரில் நூலைக் கரந்து கட்டி, பீடிகளை அறுவடை செய்து கொண்டிருந்தாள் நாவூரும்மா!

நைந்து கசிந்த தாவணியின் முக்காட்டு முகட்டில் கருத்த மயிரிழைகள் பாவிரித்திருந்தன. கைகளின் சுருட்டல், மடக்கலில் விழுந்து கொண்டிருந்த பீடிகளைப் போலவே நெஞ்சிலும் சில எண்ணச் சுருட்டல்கள்!

'பிளெ நாவூரு! இந்தக் கஞ்சியெக் குடிச்சிட்டுப் போவன்ப்ளெ!'

'இப்ப பசிக்கலே, கொஞ்சம் கழிச்சுக் குடிக்கிறேன்!'

ம்மாவுக்குப் பதில் சொல்வதற்காக கைகள் வேலையை நிறுத்தவில்லை. உதடுகள் மட்டும் மூடி மூடிப் பிரிந்தன, வார்த்தைகளுக்காக.

'இன்னும் ரெண்டு பலவை போட்டா, ஒரு சாம்பு அறுத்து விடலாம்!' ம்மா பாவிரித்து காக்குழியில் இறங்கி ஓடத்தைச் சுண்டினாள்.

'சல்லக்.... புல்லக்....'

மிதியடிக் கட்டைகளின் இடமாற்றலில் தறியின் சங்கீத நாதம், இனி ம்மா சத்தம் போட்டாலும் தறிச் சத்தத்தில் அது கேட்காது!

நாவூரும்மா காலை லேசாக மடக்கி நீட்டிய போது, ஒரு சொடக்குச் சத்தம். கொஞ:சம் ஆசுவாசமாகத்தான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் மனத்தில் மட்டும் அந்த எண்ணப் பாரம். நினைவில் கரைக்க எத்தனிக்கிற போதெல்லாம் 'அவ'னுடைய பார்வைதான் தெரிகிறது.

அவன் நேற்று இந்தத் தெருவழியாகத்தான் போனான். பெயர் எதுவென்று தெரியாது. தலையை நெளிவைத்துச் சீவிக்கொண்டு, மடிப்புக் கலையாத ஒரு வெளிநாட்டுச் சட்டையைப் போட்டுக் கொண்டு பெனிடிங் பூப்பொட்ட வெள்ளை லுங்கியைக் கரண்டைக்குக் கீழே கட்டிக் கொண்டு வந்தானே அவன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். அவன் நடந்த இடமெல்லாம் குப்பை ஒதுங்கி விட்டது. தலையில் தொப்பியோ முகத்தில் தாடியோ வைத்திருந்தால் அவனை அடையாளம் கண்டிருக்கலாம். தாடியும் மீசையும் இல்லாத முகத்தில் அவன் பொட்டு வைக்காமலிருந்தானே அது போதும்! அவன் ன் முற்றத்தில் நின்று சிரித்தான்? நாவூரும்மாவின் கைகள் பத்து பீடிகளைச் சுற்றுகிற நேரத்தில் ஒரு பீடியைக் கூட இன்னும் சுற்றி முடிக்கவில்லை.

கட்டம் போட்ட கட்டிச் சாயமுள்ள தறிச் சாம்பை உடுத்துக் கொண்டு - தோளில் வெறும் துவர்த்தைப் Nபுhட்டுக் கொண்டு - திட்டுத்திட்டான அழுக்கில் சட்டையைத் தூக்கிப் Nபுhட்டுக் கொண்டு - பல ரகமான ஆம்பிள்ளைகள். தெருவில் போவதும் வருவதுமாயிருக்கிற அத்தனை பேரிலும் நேற்று வந்தானே.. அவன் மட்டும்தான் பளிச்சென்று தெரிகிறான்.. சீச்சீ....! என்ன நினைப்பு இதெல்லாம்?

நாவூரும்மாவின் விரல் அசைவில் பீடிகள் பயிராகிற போது, பார்வை மீண்டும் தெருவில் மேய்கிறது!

நேற்று ராத்திரி நடந்து முடிந்த ஜொஹரா வீட்டுக் கல்யாணப் பந்தல் ரோஜாப்ப_வும் பிச்சிப்பூவும் கலந்த கட்டிய பெரிய பூமாலையைக் கழுத்தில் சுமந்து கொண்டு, கசவுக்கரை போட்ட எட்டு முழ வேட்டியும் சட்டையுமாய் தெருவில் தெருவில் நடந்து வந்த மாப்பிள்ளை ஜொஹராவை என்ன செய்திருப்பான்?

விட்ட குறை, தொட்ட குறை இல்லாமல் எல்லாக் குடும்பக்காரர்களையும் சேர்த்து வைத்து ஸஹனில் சோறு போட்டு கறியாணம் ஊற்றி, ஐந்தைந்து பேராய்ச் சாப்பிட்டுப் போவதற்குத்தான் கல்யாணமா? படி அரிசி ஏழு ரூபாய். இதற்கெல்லாம் ஜொஹராவின் வாப்பாவிடம் ஏது பணம்? எப்படியோ அவர் வீட்டில் ஒரு குமர் கரையேறிவிட்டது.

கரையேறா மன நினைவுகள் நாவூரும்மாவின் மனக் குளத்தில் நீச்சலடிக்கின்றன.


மர்ஹூம் ஆளுர் ஜலால்
(படம் - நன்றி டாக்டர் ஹிமானா செய்யித்)

'நாவூரும்மா...! நாவூரும்மா...!'

அவள் திரும்பிப் பார்க்காமலே அந்தக் குரலுக்குரியவன் அடுத்த வீட்டு மைதீன் காஜாதான் என்று அடையாளம் கண்டு கொண்டாள். 'அவனுக்கு வேற வேலையில்லை. பொழுது விடிஞ்சு பொழுது போனா... நாவூரும்மா... நாவூரும்மாதான் அவனுக்குப் பழக்கம். பேசுறதுக்கு வேற ஆள்... ' அலுத்துக் கொண்டாள்.

Thursday, August 15, 2013

பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்


சுமார் 2 முழு நாட்களை செலவு செய்து ஏ4  தாளில் 20 பக்கங்கள் எழுதி சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்த விடயங்களை மட்டும் பொறுக்கித் தயார் செய்ததே இந்த ஆக்கம். இதற்கு முன் எழுதிய 'வியாழன் நோன்பா..? பெருநாளா..?' என்ற ஆக்கம் சமூகத்தில் பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டாலும் அது நான் எழுதிய நோக்கத்தை நிறைவேற்றப் போதியதாக இல்லை என்பதே மீண்டும் இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது.

எனது முதல் ஆக்கத்தில் மிகவும் அடக்கமாக இரண்டு தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்டினேன். சமூகம் சிந்திக்க வேண்டும், படிப்பினை பெறவேண்டும். எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய காலத்தில் எமது உள்வீட்டு விஷயங்களையே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

இந்நிலை தொடரக்கூடாது என்பதை சமூகம் சாடையால் விளங்கிக் கொள்ளட்டும் என்ற நோக்கிலேயே முதல் கட்டுரையை எழுதினேன். எனினும் தற்போது களத்தில் காணுகின்ற கேட்கின்ற செய்திகள் 'எழுதுவதைத் தெளிவாக எழுது! நாசூக்காக சொல்வதை விளங்கும் நிலையில் இன்றையவர்கள் இல்லை' என்ற உண்மையை உணர்த்துவதாக இருந்தன. எனவே வெளிப்படையாக சில விடயங்களை சொல்லும் நோக்கில் இதனை எழுதுகின்றேன்.

ஒரு பிரச்சினைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கங்களையும் எடுத்து ஆராய்கின்ற போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனினும் ஒரு சிலரால் பிரச்சினையின் ஒரு பக்கம் வலுக்கட்டாயமாக மூடிமறைக்கப்படுகின்றது. அதன்மூலம் நடைபெற்ற தவறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது சமூகத்தை பிழையான திசை நோக்கி அழைத்துச்செல்லும் ஒரு முயற்சியாகும்.

உமர் (ரழி) அவர்களிடம் கண்பிதுங்கி இரத்தம் வடிந்த நிலையில் ஒரு மனிதன் வந்தான். தனக்கு இந்த அநியாயத்தைச் செய்தவன் பற்றி முறையிட்டான். அப்போது உமர் (ரழி) அவர்கள், 'உனது காயத்துக்கு மருந்திட்டுக்கொள், நடந்ததை விசாரிப்போம்' என்றார்கள். இதனைக்கேட்ட அந்த மனிதன் கொதிப்படைந்தான். 'விசாரணை செய்ய என்ன இருக்கிறது? என்னைப் பார்த்தால் நடந்தது விளங்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உமர் (ரழி) அவர்கள், 'நீ அவனது இரு கண்களையும் பழுதுபடுத்தி விட்டு வந்திருக்கலாமல்லவா. விசாரணையின்றி எப்படி அதனைத் தெரிந்து கொள்வது?' என்றார்கள்.

பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு தலைவர் ஒரு பக்கத்தை மூடிமறைக்காமல் எப்போதும் இரண்டு பக்கங்களையும் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால் பிறை விடயத்தில் இரண்டு பக்கங்கள் பார்க்கப்படவில்லை. ஒரு பக்கம் தான் பார்க்கப்பட்டது. பார்க்கப்பட்ட ஒரு பக்கம்: 18 வானியல் நிபுணர்களின் கணிப்பு.. இந்தக் கணிப்பின் படி பிறை வெற்றுக் கண்ணுக்கு தென்படாது.

மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது அலட்சியம் செய்யப்பட்ட பக்கம்: 25இற்கும் அதிகமானவர்கள் பிறையைப் பார்த்தார்கள் என்பதாகும். இவ்வாறு பிறையைப்பார்த்தவர்களுள் ஆலிம்களும் உள்ளடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு முரண்பட்ட விடயங்கள் தானே மொத்த சமூகத்தையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. சாதாரண குழப்பமா? ஓன்றில் நோன்பு நோற்பது ஹராம் அல்லது பெருநாள் எடுப்பது ஹராம். இந்த இரண்டு ஹராம்களுக்கு மத்தியில் சமூகத்தை சிக்கித் தவிக்க வைத்த பிரச்சினையொன்றையே நாம் எதிர்கொண்டோம்.

ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் ஏன் தேவைப்படுகின்றது?இ நெருக்கடி மிக்க அல்லது குழப்பம் நிறைந்த இவ்வாறானதொரு சூழலில் ஷரீஆ நோக்கிலும் அறிவு ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்த்து சமூகத்தை அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்குத்தானே!

29 நோன்புகள் பூர்த்தியாகிவிட்டன. இனி முப்பதாகலாம் அல்லது பெருநாள் வரலாம். பிறை தென்பட்டிருக்கிறது. உலமாக்கள் உட்பட 25 பேரளவில் பிறை கண்டிருக்கிறார்கள். வானவியல் நிபுணர்கள் பிறை காண முடியாது என்று சொல்கிறார்கள். வானவியல் கூறுவது ஓரு கருதுகோள். முஸ்லிம்கள் பிறை கண்டது ஒரு சாட்சி.

சாட்சியை முற்படுத்துவதா கருதுகோளை முற்படுத்துவதா?

சாட்சி கிடைத்துவிட்டால் கருதுகோள் பலவீனமாகிவிடும். சமூகம் கருதுகோளை சரிகாண மாட்டாது. சாட்சியைத்தான் வலுவானதாகக் கருதும். வானவியல் நிபுணர்கள் பிறை கண்ணுக்குத் தெரிய மாட்டாது என்கிறார்கள். முஸ்லிம்கள் பிறை கண்ணுக்குத் தெரிந்தது என்கிறார்கள்.

விஞ்ஞானத்துக்கு மாற்றமாக உலகில் ஒன்றுமே நடப்பதில்லையா? அல்லாஹ்வின் வல்லமை (குத்ரத்) என்று எடுத்ததற்கெல்லாம் பேசுபவர்கள் இந்த நிகழ்வில் அல்லாஹ்வின் குத்ரத் செயற்பட்டிருக்கலாம் என்பதை உணர மறந்துவிட்டார்களா? அல்லது வானவியல் நிபுணர்கள் பிறை வெற்றுக்கண்ணுக்குத் தென்படாது என்று கூறிய ஜப்பான், மலேஷியா, கேரளா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பலவற்றில் பெருநாள் கொண்டாடப்பட்டது ஹராமா? அங்கு சிலவேளை பிறை காணாமலேயே பெருநாள் கொண்டாடியிருக்கலாம். இங்கு கண்ட பிறையை நிராகரித்திருப்பது ஒரு பாவமில்லையா? பெருநாள் கொண்டாட வேண்டிய தினத்தில் எண்ணற்றவர்களை நோன்பு நோற்க வைத்து ஹராமைச் செய்வதற்கு முடிவெடுத்தவர்கள் ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்.

சப்தமிட்டுக் கேட்க வேண்டிய கேள்வி இது. பிரச்சினையின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தெரியாததால் வந்த விளைவு, சமூகத்தைத் தீராத குழப்பத்தில் ஆழ்த்திய தீர்மானம் இல்லை சமூகத்தைக் குழப்புவதற்கென்றே எடுத்த சாணக்கியமில்லாத தீர்மானம். சமூகம் ஒன்றாக இருப்பதை விரும்பாத தீய சக்திகளின் சதி இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் வகையிலான ஒரு முடிவு இது.

இது பிறை தீர்மானிப்பதில் நடந்த முதல் தவறு. இரண்டாவது தவறு பிறை பார்த்தவர்களையும் பெருநாளை எதிர்பார்த்திருந்தவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது மட்டுமல்ல, குறிப்பாக பிறை பார்த்தவர்களின் சாட்சியை நிராகரித்ததன் மூலம் சாட்சி அந்தஸ்து மறுக்கப்பட்ட 'ஃபாஸிக்' கள் போன்று அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஒரு முஸ்லிமின் சாட்சி எத்துனை கண்ணியமானது, அந்தஸ்து நிறைந்தது என்பதை இந்தத் தலைவர்கள் அறியவில்லை. ஆலிம்கள் உட்பட சுமார் 25 முஸ்லிம்களது சாட்சி முஸ்லிம்களின் விவகாரமொன்றில் மறுக்கப்படுவதானது என்னைப் பொறுத்தவரை ஒரு பயங்கரமான தீர்மானமாகும்.

இஸ்லாமிய நீதிமன்றம் இருந்தால் இந்தத் தீர்மானத்திற்கெதிராக வழக்குத் தொடரலாம். நட்டஈடும் கோரலாம். தீர்மானம் எடுத்தவர்கள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளிலிருந்து முற்றாக நீக்கப்படவும் கூடும்.

சாட்சி அந்தஸ்த்தை மறுக்குமாறு அல்லாஹ் ஒருசில 'பாஸிக்'கள் விடயத்தில் சட்டம் வகுத்துள்ளான். அவர்கள் தான் கற்புள்ளவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள், விபசாரம் செய்தார்கள் என்று அவதூறு கூறும் பாவிகள். பிறை கண்டவர்கள் அப்படிப்பட்டவர்களா? பிறை கண்டவர்கள் ஓரிருவராக இருந்தால் சாட்சி இரண்டு பெயருக்கிடையில் முரண்பாடாக இருந்தது என்றொரு காரணத்தைக் கூறலாம். சுமார் 25 பேர் கண்ட பிறையை எந்தக்காரணம் கூறி நிராகரிக்க முடியும். 25 பேரையும் இவர்கள் விசாரித் துத்தான் முடிவுக்கு வந்தார்களா? அல்லது அத்தனை பேரும் சாட்சி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பாவிகளா?

கிண்ணியாவின் பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள் தெளிவான முறையில் பெரிய பள்ளவாசலுக்கு அறிவித்தல் கொடுத்த பின்னரும் அறிவிப்பு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு பிறைச்செய்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பிறை விவகாரம் முன் அனுபவமே இல்லாத ஒரு புதிய விவகாரம் போன்று சாணக்கியம் இல்லாமல் அணுகப்பட்டிருப்பதனையே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிறை நிராகரிக்கப்பட்ட பின் பல முஸ்லிம் ஊர்கள் குறிப்பாகக் கிண்ணியா பெருநாள் கொண்டாடும் தீர்மானத்துக்கு வந்தது. இந்தத்தீர்மானத்தை எடுக்க வைத்த காரணம் எது? கட்டுப்பாடின்மையா அல்லது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்இ புறக்கணிக்கப்படுகிறோம், முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம் கருதப்படவில்லை என்ற ஆதங்கமா?

அஸாத் சாலி அவர்களது விவகாரத்திலும் பொது பல சேனா விவகாரத்திலும் பக்குவமாக, பவ்வியமாக, கட்டுப்பாடாக நடந்து கொண்ட சமூகம் தான் பிறை விவகாரத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. யார் இதற்கு வகைகூறவேண்டும். இந்தப் பிளவுக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும். சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபடுகின்றோம் என்று பேசிவிட்டால் மாத்திரம் போதாது. ஒரு தாய்க்கோழி கறுப்பாயினும் வெள்ளையாயினும் தனது இறக்கையினுள் தனது குஞ்சுகள் அனைத்தையும் அரவணைப்பது போல தலைவர்கள் இந்த சமூகத்தை அன்போடு அரவணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனது முன் அனுபவங்கள் படி சொல்கிறேன். அவ்வாறு கறுப்பு, வெள்ளை பார்க்காது அரவணைக்கும் பரந்த மனம், சகோதரத்துவம், அன்பு தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு அரவணைக்கத் தெரியாதவர்கள் சமூகத்தை ஒற்றுமைக் கயிற்றினால் பிணைத்து வழிநடாத்துவது சாத்தியமில்லை.

பிறை விவகாரத்தின் பின்னர் எனது காதில் பட்ட ஒரு செய்தி தான் கிழக்கு மாகாணத்துக்கென ஒரு தனியான பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி. அவ்வாறு அமைக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

Wednesday, August 14, 2013

ஷவ்வால் பிறையில் சறுக்கிய கதை!

இவ்வருட ஷவ்வால் பிறை தொடர்பாக எனதும் ஏனைய சிலரது குறிப்புகளும் சில முக்கிய பின்னூட்டங்களு்ம்



கிண்ணியா காக்காமுனைப் பள்ளிவாசல் மற்றும் ஜாவாப் பள்ளிவாசல் பகுதிகளில் மாலை 6.37க்கு ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதாக அங்கிருந்து ஒரு சகோதரர் எனக்குத் தெரிவித்தார். ஜம்இய்யதுல் உலமா சபை சார்ந்தோர் பிறை கண்டவர்களைத் துருவித் துருவி விசாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.






நாளை நோன்பு நோற்பது என்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் பிறை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை என்றும் இன்று பிறையைக் காணும் சாத்தியம் இல்லை என்று வானியல் துறை முஸ்லிம் அறிஞர்கள் சொல்வதாகவும் பிறை கண்டதாகச் சொன்ன முறை சாட்சியத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது!





அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு இனிமேல் யாரையும் பிறை பார்க்குமாறு ஊடகங்களில் அறிவித்தல் கொடுக்காமல் தாங்களாகவே பார்த்து முடிவை அறிவித்தால் இப்படியான குழப்பங்கள் ஏற்படாது. இதற்கெனச் சிலரை விசேடமாக நியமித்து உரிய இடங்களையும் தீர்மானித்து முடிவுககு வருவது நல்லது. பிறை பாரு... பிறை பாரு என்று ஊடகங்களில் அறிவித்தல் கொடுத்து விட்டு இன்றைக்கு பிறை தென்பட சான்சே இல்லை என்பதும் தென்னை மர உயரத்தில் பார்த்தாயா, அதற்குக் கீழ் பார்த்தாயா, மேகத்துக்குள் பார்த்தாயா, எந்த சைசில் பிறை இருந்தது என்றெல்லாம் கேட்டு பிறை கண்ட முஸ்லிமைப் பிறாண்டி எடுப்பதும் அதை மறுதலிப்பதும் புத்திக்கு ஒவ்வுகிற செயலாக எனக்குத் தெரியவில்லை! எனவே பிறைக்குழு ஒரு தனி ஆய்வுக் குழுவை இதற்கென நியமித்து எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளைத் தவிர்க்க முடிவு செய்ய வேண்டும்!





தமது சங்க அங்கத்தவர்களான உலமாக்களையே நம்பாத மத்திய குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப நடக்கும் அவசியம் இல்லை என்பதை கிண்ணியா ஜம்இய்யாவின் முடிவு உணர்த்தியுள்ளது. இன்னும் சில வருடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல காங்கிரஸ்களாகப் பிரிந்தது போல் ஜம்இய்யத்துல் உலமா பிரியும் ஆபத்து உண்டு. அந்த அந்தப் பிரதேச ஜம்இய்யாவின் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தை மத்திய குழு ஏற்படுத்திச் செல்கிறது!



நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்லன். கிண்ணியாவில் கண்ட பிறை விடயத்தைச் சில புத்தி ஜீவிகள் கூட தௌஹீத் அமைப்புடன் இணைத்து வெறுப்பை உமிழ்ந்திருந்தார்கள். ஹஸன் மௌலவி போன்றவர்கள் அ.இ.ஜ.உலமாவினரோடு நீண்ட நேரம் விவாதித்ததாக அறியக் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் ஆலிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கண்ணியமும் மரியாதையும் இருக்கிறதுதானே! கொழும்பில் குந்தியிருக்கும் ஆலிம்களுக்கு மட்டும் எப்படி அந்த உலமாக்களை அவமதிக்கும் தைரியம் வந்தது என்று சிந்தித்தால் பல கதைகள் வெளிவரக் கூடும். கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியலும் அவர்களின் தலைவிதியும் கொழும்புத் தலைமைகளால்தான் தீர்மானிக்கப்பட்டு வந்தது. அதைத் தீர்மானித்தவர்கள் சுகபோகங்களில் செழித்துச் செல்வந்தர்களாகவும் பிரமுகர்களாகவும் படாடோபமாகப் பவனி வந்தார்கள். அதே வேளை ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்ந்தார்கள். அரசியல் ரீதியாக எம்.எச்.எம். அஷ்ரஃப் இந்த நிலைமையை மாற்றியமைத்தார். 'உலமாக்கள்இ பேசாதே!' என்று பயங்காட்டும் இந்த அடுத்த முஸ்லிமை அவமானப்படுத்தும் கோஷ்டிகளிலிருந்து முஸ்லிம்களுக்கு எப்போது விமோசனம் ஏற்படும் என்று தெரியவில்லை!