Thursday, September 15, 2016

எழுத்தாளனின் வெற்றியை வாசகர்களே தீர்மானிக்கிறார்கள்!


01. வெற்றி பெறக் கூடிய மொழிபெயர்ப்பு என்பது குறித்து உங்களின் அபிப்பிராயம்?

இது வாசகர்களுக்கு ரசனையை ஏற்படுத்தக்கூடியது, புதிய உத்திகள் கையாளப்பட்டது, நமது வாசகர்கள் அறியாத, அறியப்பட வேண்டியது என்று ஓர் நல்ல வாசகனான எழுத்தாளன் தீர்மானித்து மொழிபெயர்க்கும் இலக்கியம் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும். இது தவிர எழுதப்பட்ட மொழியில் பிரபல்யம் பெற்ற படைப்புக்களும் பிரபல்யமான படைப்பாளிகளின் எழுத்துக்களும் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம்.

02. மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒருவராக நீங்கள் இருக்கின்றீர்கள் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் பக்கம் கவனம் திரும்பிய திருப்பம் பற்றி?

நான் திட்டமிட்டு மொழிபெயர்ப்புச் செயற்பாட்டில் இறங்கவில்லை. 'ஒரு குடம் கண்ணீர்' நூலுக்கான விடயதானங்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது மஹ்மூது சயீத், கஸ்ஸான் கனபானி இருவரும் இடையில் வந்தார்கள். அவர்களது கதைகள் என்னை ஆட்கொண்டது மட்டுமன்றி என்னை அதிசயப்படுத்தவும் செய்தன. 'ஒரு குடம் கண்ணீர்' தொகுக்கப்பட்ட பின்னர் இவர்கள் இருவரையும் கொண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த அறபுக் கதைகளைத் தேடத் தொடங்கினேன்.

முதன் முதலாக நான் மொழிபெயர்த்த கதை 'புகையிரதம்' என்ற ஈராக்கிய எழுத்தாளரான மஹ்மூது சயீத் அவர்களது கதை. அது தமிழகத்தில் 'சமநிலைச் சமுதாயம்' இதழில் வெளியாகிப் பெரும் பாராட்டைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவரின் நான்கு கதைகளை மொழிபெயர்த்தேன். அவரது இரண்டு கதைகள் 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றது. இது பற்றி மஹ்மூத் சயீதுக்கு அறிவித்தேன். அவர் மற்றொரு கதையை எனக்கு அனுப்பியிருந்தார். அதுதான் 'பட்டாம்பூச்சிக் கனவுகள்' நூலில் இடம்பெற்றுள்ள 'பச்சோந்திக் குடியிருப்பு.' என்னைப் பொறுத்த வரை அவர் ஓர் அற்புதமான சிறுகதையாளர்.

03. தமிழ்ச் சூழலில் குறிப்பாக நம் நாட்டில் மொழிபெயர்ப்பு இலக்கியம் எத்தகைய இடத்தில் இருக்கின்றது?

அது பற்றிய கணிப்பீடு என்னிடம் இல்லை. ஆயினும் ஓரளவு ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது. தமிழகத்துடன் ஒப்பிடும் போது அல்லது நம் படைப்பாளிகள் தொகையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. திக்குவல்லை கமால் அவர்கள் தொடர்ந்து மொழிபெயர்ப்புக்களில் ஈடுபட்டு வருகிறார். இம்முறை தேசிய சாஹித்திய விருதுக்கு இறுதிச் சுற்றுக்கு வந்த மற்றொரு நூல் சிங்களச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு. பட்டி என்ற தலைப்பில் மாவனல்ல மன்சூர் மொழிபெயர்த்திருந்தார்.

எவ்வாறிருந்த போதும் மொழிபெயர்ப்புக்கள் குறித்து நமது இலக்கிச் சூழலில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. அதற்குக் காரணம் அதில் குறிப்பிட்ட அளவுக்காவது நமது படைப்பாளிகள் ஈடுபடாதிருப்பதுதான்!

இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். நூல் வெளியிடப்பட்ட பின்னர் ஒரு பிரதியை நண்பர் உமா வரதராஜனுக்கு அனுப்பியிருந்தேன். எனது முகநூலில் பிரதியைப் பாராட்டி ஒரு குறிப்பிட்டிருந்ததுடன் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்த நூல் இலங்கைக்கு வெளியில வந்திருந்தால் நம்மவர்கள் அதைக் கொண்டாடியிருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்ததும் உங்கள் கேள்விக்கான விடைக்குப் பொருத்தமானது.

04. பொதுவாக மொழி பெயர்ப்புப் பிரதிகள் வாசிப்பு ரசனையை ஏற்படுத்துவது குறைவு. உங்கள் பிரதிகள் அத்தகைய நிலையிலிருந்து வாசகனுக்கு விடுதலையளிக்கின்றது. உங்கள் மொழி பெயர்ப்பின் சூட்சுமம் எங்கே இருக்கின்றது?

என்னிடம் எந்தச் சூட்சுமமும் கிடையாது. நான் நீண்ட காலம் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்தியறிவிப்பாளனாகப் பணி செய்தவன். வானொலியில் பாலேந்திரா என்ற ஒரு செய்தியாசிரியர் இருந்தார். அவர் ஏனையவர்களைப் போல் சொல்லுக்குச் சொல் வசனத்துக்கு வசனம் மொழிபெயர்த்துச் செய்தியைத் தயார் செய்ய மாட்டார். முதலில் செய்தியை அவர் உள்வாங்கிக் கொண்டு தனது தமிழில் அதை வெளிப்படுத்துவார்.

இதே உத்தியைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன். முதலில் கதையைப் படித்து அதன் ஆத்மாவைப் புரிந்து கொள்கிறேன். பின்னர் முடிந்த அளவு எனது மொழியில் அது வெளிப்படுத்தும் உணர்வைக் கொண்டு வருகிறேன். அதே வேளை குறித்த படைப்பாளியை விட அதிகப் பிரசங்கித் தனம் செய்யவோ அல்லது அவற்றில் குறைபாடு செய்யவோ நான் முனைவதில்லை. கதையில் எந்த இடத்தில் என்ன உணர்வு இருக்கிறதோ அதை எனது மொழியில் எனது வாசகனை ஈர்க்கும் வகையில் சொல்லி விடுகிறேன்.

05. கவிதை மொழி பெயர்ப்பு, சிறுகதை மொழிபெயர்ப்பு மற்றும் இன்னபிற... ஒன்றைப் போல ஒன்றைச் செய்ய முடியாது ஆனால் நீங்கள் எல்லாத்துறைகளிலும் வெற்றிகரமான பயணம் செய்கின்றீர்கள் அதுகுறித்து?

நான் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறேனா இல்லையா என்று என்னை நான் ஆய்வுக்குட்படுத்தியது கிடையாது. என்னளவில் எனது பணியை நேர்மையாகவும் கவனமெடுத்தும் அவதானமாகவும் செய்து வருகிறேன். எனது பயணம் என்னளவில் திருப்தியளிக்கிறது. எனது எழுத்து எனக்குத் திருப்தியளித்தால்தான் மற்றவர்களை ஓரளவாவது கவர முடியும். எனது வெற்றியை நிர்ணயம் செய்பவர்கள் வாசகர்கள்தாம். அதிலும் எனக்குத் திருப்தி உண்டு. அதற்காக நான் வெற்றிகரமான எழுத்தாளன் என்று எனக்கே நான் மாலை போட்டுக் கொள்ள முடியாது அல்லவா?

மற்றது கதையைக் கதையாகவும், கவிதையைக் கவிதையாகவும் கட்டுரையைக் கட்டுரையாகவும் பிரித்தறியத் தெரிந்திருக்கத் தெரியவில்லையென்றால் மொழிபெயர்ப்பில் மட்டுமல்ல, எழுதுவதே அநாவசியம்தானே!

06. ஒரு குடம் கண்ணீர் பரவலாக கவனயீர்ப்பைப் பெற்ற பிரதி. விருது என்று வருகின்றபோது அது ஓரவஞ்னையோடு பார்க்கப்பட்டதாகவே எமது அபிப்பிராயம். இது குறித்து நீங்கள் என்ன உணர்கின்றீர்கள்?

'ஒரு குடம் கண்ணீர்' நிச்சயம் தேசிய விருதுக்குரிய நூல்தான். ஆனால் அதற்கு விருது விழாவில் மத்தியஸ்தர்கள் விருது அறிவிக்கப்பட்டு விழாவில் வழங்கப்பட்டது. அதாவது ஒரு சிறப்பு விருது அது. அந்த விழாவுக்கு நான் சென்றிருக்கவில்லை. ஒரு நூலுக்கு விருது வழங்கவும் வேண்டும் - வழங்கவும் முடியாது - அல்லது தவிர்க்கமுடியாத நூல் என்றால் மத்தியஸ்தர்கள் இந்த நூலை விதந்துரைப்பார்கள். அதற்கு 'சிறப்பு விருது' என்று சான்றிதழில் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் துயரம் பாருங்கள். அக்காலப் பிரிவில் அங்கு தமிழ்ப் பிரிவில் கடமை செய்த பெண்மணி அது இறுதித் தேர்வுக்கு வந்ததாகக் குறிப்பிட்டு அச்சான்றிதழில் எழுதியிருந்தார்.

இச்சான்றிதழை மிகத் தாமதித்துப் பெறச் சென்ற சமயம் இதை அறிய வந்தேன். ஆனால் இச்சான்றிதழை மாற்றி எழுதித் தர முடியாதா என்று கேட்ட போது இச்சான்றிதழ் வழங்கப்பட்ட போது இருந்த பணிப்பாளர் வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறிச் சென்றிருந்தார்.  பின்னாளில் நடுவராகச் செல்லும் ஒருவரிடம் ஏன் இதற்கு விருது வழங்காமல் விட்டார்கள் என்று கேட்டேன். 'அது அரச பயங்கரவாதத்தையும் பேசுகிறது என்பதற்காகத் தவிர்த்திருக்கலாம்' என்று சொன்னார்.

விழாவில் விருதைப் பெறாத போதும் அது இரண்டாம் பதிப்புக் கண்டு வெற்றி நடைபோடும் நூலாகி விட்டது.

07. அறபுச் சிறுகதைகளை தமிழுக்குக் கொணடுவந்த பெருமை அதிகமாக உங்களையே சாரும். அந்த அனுபவங்களைப் பற்றி?

இக்கேள்விக்கு ஏற்கனவே சற்றுப் பதில் சொல்லியிருக்கிறேன். அறபுக் கதைகளை உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர், ஏபிஎம். இத்ரீஸ் ஆகியோர் உதிரிகளாகச் செய்திருப்பதாக அறிந்துள்ளேன். மேலும் பலரும் செய்திருக்கலாம். ஆனால் ஒரு நூலாக வெளிவந்தது 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்'தான். இந்நூலுக்கும் எனக்கு தேசிய சாஹித்திய விருது கிடைத்தது.

அக்கதைகளை மொழி பெயர்த்தது ஒரு சுகானுபவம் என்றுதான் சொல்வேன்.

08. உங்களின் இந்த முயற்சிக்குப் பின்னால் எம்மால் கண்டுகொள்ள முடியாத ஒரு மாபெரும் உழைப்பும் தேடலும் இருக்குமே...?

ஒலிபரப்பில் நான் இணைந்ததும் பத்து வருடங்கள் எனது இலக்கியப் பயணம் தொடர்பறுந்திருந்தது. மீண்டும் எனது கவிதை நூல் வெளியீட்டுடன் இயங்க ஆரம்பித்தேன். அவ்வப்போது ஆர்வமும் சோர்வுமாகக் கடந்தாலும் இலக்கியத் துறையில் தொடராக இயங்கிக் கொண்டுதானிருக்கிறேன்.

இன்னும் வெளியிடுவதற்கு ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி ஆகியன தயாராக இருக்கின்றன. ஆனால் புத்தகம் ஒன்றை வெளிக் கொணர்வது ஒரு பிரவசம் போல ஆகிற்று. ஒரு லக்சறி விடயமாக மாறி விட்டது. வாய்ப்பு வரும் போது அவற்றையும் வெளிக் கொண்டு வருவேன்.

09. உங்களைப் பற்றிய வீணான பரப்புரைகளை அலட்டிக்கொள்ளாமல் எழுத்துக்களால் பதில் சொல்லிக் கடந்து போகும் நீங்கள் எதை அலட்டிக் கொ?வீர்கள்...?

எதையும் கண்டு கொள்ளத் தேவையில்லை. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை. ஊரில் ஒரு வழக்கு மொழி உண்டு. 'ஆத்தாட்டி நக்கரைக்கலாமே!' என்று. அதாவது உன்னால் இயலாது என்றால் ஊர்ந்து போ என்று அர்த்தம். எதுவும் செய்ய இயலாதவன் நக்கரைக்கும் வேலையைத்தான் செய்வான். அதைப்பற்றி நமக்கென்ன?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நாய்கள் குரைக்கும். ஆனால் கரவான் போய்க்கொண்டேயிருக்கும். அது சொறி நாயா, வெறி நாயா என்று பார்த்துக் கொண்டு நின்றால் நமது நோக்கத்தை அடைய முடியாது போய்விடும்.

10. தேசிய சாகித்திய பரிசு தொடர்பில் பல்வேறு அபிப்பிராயமின்மை காலாகாலத்திற்கும் இருந்தே வருகிறது. சிலபல காரணிகள் ஏதோவொரு விதத்தில் செல்வாக்குச் செலுத்தியே வருகி?றன. மாற்று யோசனைகள் ஏதும் பரிந்துரைக்கு உண்டா?

ஒவ்வொரு முறையும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருதுண்டு. இம்முறையும் நான் எதிர்பார்த்திருந்த சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் அந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை. முடிவு எப்படி வந்தாலும் விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.

தமிழில் வருகின்ற புத்தங்களை வைத்துச் சில வேளை விருதுகளைத் தீர்மானிக்கிறார்கள் என்பது எனது அனுமானம். ஒரு முறை அதிகமாக மொழிபெயர்ப்பு நூல்களுக்கு வழங்கப்பட்டன. காரணம் வேறு பிரிவுகளுக்குத் தகுதியான நூல்கள் வந்திருக்கவில்லை.

இதுபற்றி எனது சிபார்சு என்னவெனில் பல்கலைக் கழகம்சார் பேராசிரியர்களை ஐம்பது வீதமும் எழுத்தாளர்களை ஐம்பது வீதமாகவும் கொண்ட நடுவர் குழாம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான்.

(14.09.2016  அன்று தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியான நேர்காணல்
நேர்கண்டவர் : முஸ்தீன்)


Friday, August 26, 2016

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2016 - கொழும்பு


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இவ்வருடம் டிஸம்பர் மாதம் 10,11,12 ஆகிய தினங்களில் நடைபெறும் என மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


இந்தத் தகவல்களை பொது வெளிக்குத் தெரிவிக்கும் நோக்கில் அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றும் போது,

இலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற விடயம் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒரு பொன் விழா நிகழ்வாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் தெரிவித்தனர்.

இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால் இந்நிகழ்வை உள்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஓர் எல்லைக்குட்பட்ட வகையில் சர்வதேச மாநாடாக நடத்தும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு என்னாலான பங்களிப்பை வழங்குவது என்றும் அவர்களுக்குச் சொன்னேன்.

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இந்த மாநாட்டுக்கு என்னைத் தலைமை தாங்கும்படி வேண்டு கோள் விடுத்தது. இலங்கை முஸ்லிம்களது மட்டுமல்ல உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒரு முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டேன்.

இந்த வகையில் இந்த மாநாட்டுக்கு நான் தலைவராகவும் கௌரவ. பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் பிரதித் தலைவராகவும் இருப்போம்.

மாநாட்டை வழி நடத்திச் செல்லும் குழுவுக்கு
.இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும்  பொதுச் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீனும் அவர்களது குழுவினரும் மாநாட்டை நடத்தும் பணியை முன்னெடுப்பார்கள்.

இந்த நிகழ்வில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் விசேட அழைப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.குறிப்பாக இளைய தலைமுறை எழுத்தாளர்களை இம்மாநாட்டில் பாராட்டவும் ஏற்கனவே கௌரவம் பெறாத மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் எண்ணியுள்ளோம்.

 இந்த மாநாட்டை இவ்வருடம் டிஸம்பர் 10,11,12 ஆகிய தினங்களில் றபீஉல் அவ்வல் - றசூலுல்லாஹ் பிறந்த திகதி உள்ளடங்கலாக - வருகிறது. இந்தத் திகதிகளில் கொழும்பில் நடத்தவுள்ளோம்.

அத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளேன் என்று தெரிவித்தார்.


கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் உரையாற்றுகையில்,

Thursday, August 4, 2016

காத்தான்குடி காயங்கள் - ஒரு தமிழகக் கவிஞனின் குறிப்பு!

கவிஞர் தக்கலை ஹலீமா

நேற்று (03-08-2016) காத்தான்குடி (ஷஹீதுகளின்) அமரத்தியாகிகளின் 26 வது நினைவு தினத்தையொட்டி கவிஞர் அஷ்ரஃப் ஷிகாப்தீனின் கவிதையொன்றை அவரது முகநூலில் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். வார்த்தை மாமிசங்களிலிருந்து இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது.
 காத்தான்குடி ஷஹீதுகளின் ரத்தம்.

”நதிக்கரைகள் ஓரமெல்லாம் மனிதகுலம்
நாகரீகத் தொட்டில்கட்டி ஆடுமுன்பே
உதித்தெழுந்த மொழிக் குடும்பத் தலைவியான
ஓங்குபுகழ் தமிழினத்தின் திருநாள் வருக”
கடைவீதி சென்றிங்கே கரும்பை வாங்கி
காணுகின்ற தமிழரெல்லாம் பொங்கலோ பொங்கலென்றார்- ஈழ
படைவீதி கண்டு நிற்கும் புலிகள் கைகள்
பற்றியது கரும்பல்ல தோக்குகளாகும்
செந்நெல்லோ ரவை துளைத்த ரத்தத்துளிகள்”

என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு நான் தமிழ் ஈழ விடுதலைப் போரின் மறம்பாடிக் கொண்டிருந்த 1980கள். 1990களில் விடுதலைப் புலிகள் இலங்கை இஸ்லாமிய தமிழினத்தை மதத்தின் அடையாளம் கொண்டு காணமுற்பட்டதின் விளைவாக தமிழ் இஸ்லாமிய குடும்பங்களும் கிராமங்களுமே கூட புலிகளின் தாக்குதலுக்குரிய இலக்குகளாகின.

அதில் ஒன்றுதான் காத்தான்குடி. பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த வாலிபர்கள், முதியவர்கள், பாலகர்கள், என மொத்தம் 103 முஸ்லீம்களை புலிகள் சுட்டு வீழ்த்தியது மட்டுமல்ல புலிகள் நடத்திய மின்கம்ப கொலைகள். - இந்த சம்பவங்களுக்கு பிறகுதான் என் போன்ற மானுடம் நேசிக்கும் பாடிகளெல்லாம் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தின் திசைமாறியப் பயணத்தை உணர்ந்து கொண்டோம்.
 
2002 ல் இலங்கை கப்பற்துறை அபிவிருத்திஅமைச்சும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் இணைந்து நடத்திய முதலாவது உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டின் கவியரங்கில் பங்கேற்கும் பந்நாட்டு கவிஞர்களில் ஒரு கவிஞராக அங்கு சென்றிருந்தேன்.


அந்தக் கவியரங்கமும் காத்தான்குடி துயர நினைவுகளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அன்றுதான் நார்வே அமைதிக்குழுவும் இலங்கைக்கு வந்திருக்கிறது. கவியரங்கம் தொடங்குகிறது. அரங்கில் கவிஞர்கள் பத்து பேர் இருக்கின்றோம். கீழே பார்வையாளர் வரிசையில் B.H. அப்துல் ஹமீது மாண்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம், காப்பியக்கோ ஜின்னா ஷரீபுதீன், கவிக்கோ அப்துல் றகுமான் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அமர்ந்திருக்கிறார்கள்.

என்னுடைய முறை வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிவப்புக் கம்பளத்துக்கு சாயம்பூசிட பக்தாத் குழந்தைகளின் பச்சை ரத்தம் பர்மாறப்பட்ட துயரங்கள், பாலஸ்தீன பிள்ளைகள் கழித்தல் குறிகளாக கபறுஸ்தானத்தில் கிடத்தப்பட்ட துயரங்கள். ஜார்ஜ் புஸ்ஸை பிர்அவ்னாக நினைத்துக் கொண்ட ஆவேசம் என் நரம்புகளில். மூஸாவின் கைக்கோலாக என் பேனா திமிர்கிறது. எனக்கு கவிதை தலைப்பு “மூஸாவின் கைக்கோல்” இலங்கையில் காத்தான்குடி துயரத்தின் நினைவு என் கண்ணீரை திராவகம் ஆக்கியபோது அந்தக் கவிதையில்....

“காத்தான்குடி ஜனாஸா அடுக்குகளிலிருந்து எழுந்து வந்திருக்கும் – என் காலத்தின் கிழக்குகளே” என்று மேடையில் நான் அழைக்கின்றேன். ஆயிரம் பேர் இருந்த அந்த அரங்கமே அதிர்கிறது. பார்வையாளர் வரிசையிலிருந்த கவிக்கோ மெதுவாக இருக்கையிலிருந்து எழுகிறார். அன்றுகாலைதான் அவருக்கு லேசாக நெஞ்சுவலி வந்து டாக்டர் ஹிமானா சையத் மருத்துவம் பார்த்தார். கவிக்கோ மேடையை நோக்கி மெதுவாக நடந்து வருகிறார். மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் ஷிகாப்தீன் ஓரமாக நின்றவர் நின்றபடி நிற்கிறார். நானும் படிப்பதை நிறுத்திவிட்டு கவிக்கோவையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.

என்னை மேடையில் இறுகத் தழுவிய கவிக்கோ அன்று மாலை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அவருக்கு அணிவித்த பொன்னாடையை எனக்கு போர்த்திவிட்டு உண்ர்ச்சிகள் கொப்பளிக்க அமைதியாக அப்படியே இறங்கிச் செல்கிறார். அவர் இருக்கைக்கு திரும்பி சென்று இருந்தபின் கவிதையை மீண்டும் தொடர்ந்தேன்.

அந்த பொன்னாடையை மட்டும் என் காலத்திற்குப் பிறகும் பாதுகாத்திட என் மனைவி பிள்ளையிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஏனென்றால் அது காத்தான்குடி ஷஹீதுகளின் கபனிலிருந்து நெய்த பொன்னாடை

அஷ்ரப் ஷிகாப்தீனின் நேற்றைய முகநூல் நினைவாஞ்சலி ஏனோ எனை நேற்று தூங்கவிடவில்லை.

(நண்பரும் பிரபல மேடைக் கவிஞருமான தக்கலை ஹலீமா அவர்களின் இந்தக் குறிப்பு அவரது முகநூல் பக்கத்திலிருந்து நட்புரிமையுடன் இங்கு மீள்பதிவாகிறது. ஒரு சில இடங்களில் சிறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். உதாரணமான - அமைச்சின் பெயர், இலக்கிய ஆய்வகத்தின் பெயர். நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.)

Wednesday, August 3, 2016

இலக்கியவாதிகள் புண்ணாக்கு மடையர்களா?



பிரதம ஆசிரியர்
நவமணி
தெஹிவளை

அன்புடையீர்

ஆகஸ்ட் 3ம் திகதிய தங்களது 'நவமணி' பத்திரிகையின் கலைவாதி கலீல் தொகுத்து வழங்கும் 'ஜலதரங்கம்' என்ற 6ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள சர்தார் என்பவர் எழுதிய 'இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் - இனியாவது திருந்துவார்களா?' என்ற கட்டுரையின் பால் உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன்.

காயல்பட்டினத்தில் நடந்த ஒரு இலக்கிய மாநாட்டின் இலங்கை இணைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தவன் என்ற வகையிலும் அதில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் சென்னையில் நடைபெற்ற இரண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் அதில் ஒன்றில் இலங்கை இணைப்பாளனாக இருந்தவன் என்ற வகையிலும் - 2002ல் இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளர் என்ற வகையிலும் தற்போது நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய இஸ்லாமிய இலக்கிய விழாவை நடத்தும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் என்ற வகையிலும் மேற்குறித்த கட்டுரைக்குச் சில விளக்கங்களை வழங்க வேண்டியவனாக இருக்கிறேன்.

சர்தார் என்பவர் எழுதிய கட்டுரையானது நான் மேற்குறித்த மாநாடுகள், இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழா குறித்த ஐயங்கள் குறித்துப் பேசுவதால் அக்கட்டுரையில் நான் விடையிறுக்கத் தகுந்த அம்சங்கள் பற்றி மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

சர்தார் என்பவர் எழுதிய இக்கட்டுரையின் கடைசிப் பந்திக்கு முன் பந்தியில் 'பேராசிரியர் அல்லாமா உவைஸ் இலங்கையில் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிலும் கடுமையாக உழைத்தவன் என்ற வகையிலும் குழுவிலிருந்த வடபுலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும்' என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு சர்தார் என்ற நபர் இப்பக்குத் தொகுப்பாளரான கலைவாதி கலீல்தான் என்று விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்த போதும் - ஒரு வசதிக்காக அதை சர்தார்தான் எழுதினார் என்று கொண்டு சில விடயங்களுக்குப் பதில்தர நாடுகிறேன்.

கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களில் என்னை மிகவும் உறுத்தியது பிரதேச ரீதியாக இலக்கியவாதிகளைப் பிரித்துப் பேசியமையாகும். இதைக் குறித்த நபர் பேசுவதற்கான காரணம் என்ன என்பதைச் சொல்வதற்கு முன்னர் அவரது குற்றச் சாட்டுக் குறித்துப் பேச விரும்புகிறேன்.

காயல்பட்டின மாநாட்டில் நான்கு கிழக்குக் கவிஞர்கள் கவிதை படித்தது சர்தாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு அந்த எரிச்சல் வந்ததற்குக் காரணம் அவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்ததுதான். உண்மையில் காயல்பட்டின மாநாட்டில் கவிதை படிப்பதற்கு இலங்கை இணைப்பாளர்கள் கவிஞர்களைச் சிபார்சு செய்யவில்லை. கவிதை படிக்க விரும்புவோர்  கவிதைகளை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு நேரடியாகவே அனுப்பியிருந்தார்கள். கவிஞர் தெரிவை மாநாட்டுக் குழு தீர்மானித்தது. சர்தாரும் ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தால் சில வேளை அவருக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கலாம், அது கவிதையாக இருந்தால்!

இன்னொரு இடத்தில் 'இதுதான் எனது ஆதங்கம்... இத்தகைய இலக்கிய விழாக்கள், சர்வதேச மாநாடுகள் நடைபெறும் வேளைகளில் அறிஞர்களாக, ஆய்வாளர்களாக அழைத்துச் செல்லப்படுபவர்களெல்லாம் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தவர்களே!' என்று சொல்கிறார். இது எத்தகையதொரு அடிமுட்டாள்தனமான கருத்து. மாநாடு ஒன்று நடைபெறுதாக இருந்தால் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியோரை ஆய்வரங்கில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்புவார்கள். ஆய்வரங்கில் கலந்து கொள்ளாத இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கூட அங்கு பேராளராகச் செல்லலாம். அதில் இதுவரை எந்தத் தடையும் இருந்ததில்லை. நான் இலங்கைக்கு வெளியில் கலந்து கொண்ட எந்த மாநாட்டிலும் கட்டுரை படித்ததில்லை. ஆனால் சென்று இலக்கியச் சுவையுண்டு வந்திருக்கிறேன். என்னைப் போல பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்பவர்களது நலன் கருதியே ஒரு குழுவாக அவர்கள் இணைப்பாளர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அக்குழுவோடு செல்ல விரும்பாதவர்கள் தனித்தும் சென்றிருக்கிறார்கள். வேறு குழுவாகவும் சென்றிருக்கிறார்கள். ஆனால் எப்படிச் சென்றாலும் மாநாடு நடத்தும் நிர்வாகத்தோடு முதலில் தொடர்பு கொள்ள வேண்டும்.

சர்தார் விரும்பியிருந்தால் அங்கு சென்றிருக்கலாம். அப்படி சர்தார் முயன்று அவர் மறுக்கப்பட்ட பொழுதுகள் உண்டா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கலந்து கொள்ள விரும்பியவர்கள் செல்கிறார்கள்.. அவர்கள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தால் யாருக்கு என்ன பிரச்சனை? சர்தாருக்கு ஏன் எரிச்சல் வரவேண்டும்?

'ஏற்பாட்டுக் குழுவினர் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்கிறார்கள்' என்றும் ஒரு குற்றச் சாட்டை முன் வைக்கிறார் சர்தார். மாநாட்டை நடத்துபவர்கள் யார், யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்புதல் பெற்ற பின் உத்தியோகக் கடிதம் மூலம் அறிவிக்கிறார்கள். அவர்கள் யார் பொருத்தம் என்று கருதுகிறார்களோ அவர்களை நியமிக்கிறார்கள். அவர்களுடன் ஒத்துழைக்கக் கூடியவர்களை நியமிக்கிறார்கள். அது எப்படித் தன்னைத் தானே நியமிப்பது ஆகும்.

அவரது அடுத்த குற்றச் சாட்டானது என்னவெனில் 'தற்போது நடைபெறவுள்ள இலக்கிய விழாவிலும் முழுக்க முழுக்கக் கிழக்கு மாகாணத்தவர்தான் இடம்பெற்றுள்ளார்கள்' என்பதாகும்.

2002 ம் ஆண்டு இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய மாநாட்டை நடத்திய அமைப்பு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமாகும். இந்த அமைப்பு 1999ல் சென்னை மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு குழுவினரால் அங்கேயே தோற்றுவிக்கப்பட்டது. இதில் அல்ஹாஜ் நூர்தீனைத் தவிர ஏனைய அனைவரும் கிழக்கின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதில் யாருக்கு என்ன பிரச்சனை? ஒரு குழுவினர் சேர்ந்து ஒரு மாநாட்டை நடத்துவதால் ஏன் இன்னொருவருக்கு அரிப்பு வரவேண்டும்?

2002ல் நடந்த கொழும்பு மாநாட்டுக் குழுவில் அங்கத்துவம் வகித்த 15 பேரில் 7 பேர் கிழக்கைச் சேர்ந்தவர்கள். 7 பேர் கிழக்குக்கு வெளியில் உள்ளவர்கள். ஒருவர் பொது. அரச அதிகாரி. நான் சொல்வது பொய்யில்லை என்பதற்கு மாநாட்டு மலரின் முற்பக்கத்தைப் புகைப்படமாகத் தந்துள்ளேன்.


நான் சொல்வது உண்மை என்பதனை 'ஜலதரங்கம்' பக்கத்தைத் தொகுக்கும் கலைவாதி கலீலிடம் கேட்கலாம். ஏனெனில் அவரும் அந்தக் குழுவில் ஓர் அங்கத்தவராவார். அது மட்டுமன்றி அம்மாநாட்டில் பொன் முடிப்பு வழங்கப்பட்ட எழுவரில் கலைவாதி கலீலும் ஒருவராவார். (படம் இணைக்கப்பட்டுள்ளது) பண முடிப்பு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட எழுவரில் ஒருவர் தவிர ஏனைய அனைவரும் கிழக்குக்கு அப்பால் வாழ்பவர்களாவர்.



இக்கட்டுரையில் பின்னணியில் நான் புரிந்து கொண்ட விடயங்கள் சில உள்ளன.

வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்குச் செல்வோருக்கு இலவசமாக விமானச் சீட்டுக் கிடைக்கிறது அல்லது குறைந்தது ஏற்பாட்டாளர்களுக்கு இலவச விமானச் சீட்டுக் கிடைக்கிறது என்று சர்தார் அப்பாவித் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி எதுவும் கிடையாது. நாம்தான் தமிழகத்தவரை விமானச் சீட்டுக் கொடுத்து அழைக்கிறோமே தவிர அவர்கள் ஒரு போதும் தந்ததாக எனக்குத் தெரியாது.

கிழக்கு வாழ் படைப்பாளிகளைப் பிரதேச ரீதியாகப் பார்த்துப் பிரிக்கும் சர்தார் வடபுலத்தைச் சேர்ந்தவர் என்று உணர்கிறேன். அங்கு விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே படைப்பாளிகள். அதற்குள் மூத்த படைப்பாளி வகைக்குள் தான் வரவேண்டும், எல்லா இடத்திலும் புலம் பிரித்;துப் பேசினால்தான் தனக்கு எல்லா இடத்திலும் ஒரு இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார் போல் தெரிகிறது.

இப்போது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழாவுக்கு இதுவரை மாநாட்டுக் குழு நியமிக்கப்படவில்லை. நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விழா நடைபெறுவதற்கு முன்னால்  'கிழக்குப் பிரதேசவாதத்தைத் தூண்டினால் ஓர் இடம் கிடைத்து விடும் என்று சர்தார் எதிர்பார்க்கிறார். அதை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சி வெகுளித் தனமானது!

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற இயக்கம் முன்னின்று செய்யும் இந்த விழாவில் அது விரும்பினால் யாரையும் சேர்க்கலாம். யாரையும் தவிர்க்கலாம். அதற்கு அவ்வியக்கத்துக்குப் பூரண சுதந்திரம் உண்டு. யாரும் அதைக் கேள்விக்குட்படுத்த முடியாது. விரும்பியவர் இணையலாம், விரும்பாதவர் விலகி நிற்கலாம். பதவி, பட்டம், முன்னிலை ஆகியவற்றை எதிர்பார்த்துப் பிரதேசவாதம் பேசும் யாருக்கும் இங்கு இடங்கிடையாது!



அஷ்ரஃப் சிஹாப்தீன்
பொதுச் செயலாளர்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்
03.08.2016

குறிப்ப - வடக்கு இலக்கியவாதிகள் புண்ணாக்கு மடையர்களா? என்று சர்தார் தனது கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்வியைத் தலைப்பாக்கியுள்ளேன்.

Saturday, June 18, 2016

பட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை!


பட்டாம் பூச்சிக் கனவுகள் 
************************** 
றிஜான் முஹம்மது


பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி. வாசிப்புக் காலம் : 05-04-2016 – 07-04-2016 (அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்துக் காலங்கள்) ^_^

வாசித்த ஏனைய நூல்களைவிட “பட்டாம் பூச்சிக் கனவுகள்” தொகுதி தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. நூல் வெளியீட்டில் அடியேன் பங்கேற்ற நிகழ்வையும் எண்ணி இன்புறக் கூடிய சுவையை வாழ்வில் புகைப்படங்கள் மூலமாக ஊட்டிக் கொண்டே இருக்கிறதை நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.

பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் எனும் ஆளுமை, எனக்கு காலம் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னிலையில் வகிப்பவர், என் பேரன்புக்கும், தனி மதிப்புக்கும் பொருத்தமானவர். நூலானது கையில் தவண்ட பொழுதினில் உச்சி நுகராமல் விட்டேனே என சிறு வருத்தம் இருந்ததை தற்போது மறைக்க மனம் இடம் விடுவதாயில்லை. வாசகனுக்கு அதிருப்தியற்ற மனநிலை, அமைதியற்ற சூழல் இவ்விரண்டுமே திறந்துவிட்டிருக்க வேண்டும் என கருதும் நிலைப்பாட்டிலே இருந்தேன்.

 அலுவலகத்தில் இன்டெர்னல் ஒடிட்டினால் ஹெட் லொக்ட் ஆகியிருந்த சமயம் எனக்கு டிராபிக் சிவப்புச் சமிக்ஞையைப் போல் என் உளஅலைவுகளை குறுகிய விட்டத்துக்குள் நிறுத்தி நூலின் எட்டுச் சிறுகதைகளின் சொல்லலங்காரங்கள், சீன் செட்டிங்க்ஸ் எனும் தகைமைகளால் தளர்ந்த மனத் தெவிட்டலின் சீரமைப்புக் காரணிகளாக திகழ்ந்தது மட்டுமில்லாமல் என் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்ய நேர்ந்தது.

பெரும்பாலும் உள்ளடங்கிய எட்டுச் சிறுகதைகளும் குத்துச்சண்டை பிடித்துப் பிறகே நூலினுள் ஏறி சாவகாசமாக நிமிர்ந்திருக்க வேண்டும். காரணம் ஏராளமான போற்றத்தக்க சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல இலக்கியப் பிரசவம் நாளுக்குநாள் எம்மை நெருங்கிக்கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை, தாய்த் தமிழிலும் சரி ஏனைய நம் புழக்கத்தில் உள்ள மொழிகளிலும் சரி. ஏதோ லாபாயில் கிடைத்தது போலில்லாமல், போலி இல்லாமல், (இப்படியானவைகள்தான் குறுகிய காலத்துக்குள் செம்மை இழந்துவிடுவது) மனக்கோட்பாடுகளுடன் ஊன்றி தெரிவுக்குழு நியமித்தே எட்டுத் தரமான சிறுகதைகள் மூலமாக எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதியை நிலை நிறுத்தியிருக்கிறார்.

 றிஜான் முஹம்மது

மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பற்றி ஓய்வுபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழக உப பதிவாளர்-மன்சூர் ஏ. காதர் அவர்களின் முன்னுரையில் கூறி இருப்பார்: “இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேகமான மண்வளத்தையும் காலநிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண்வளத்தையும் வேறொரு காலநிலையையும் கொண்ட இன்னொரு சுற்றாடலுக்கு கொண்டு போய் மீள்நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும்.”

இதனைக்கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக சிந்திக்கும் போது வெற்றிகரமான ஓர் இலக்கிய ஆக்கம் பொழிபெயர்க்கப்படுமாயின் பரவலான சிந்தனைத் திறன் அனுபவத்தோடு குழாமிட்டிருக்க வேண்டும், சர்வதேச நடப்புகளில் ஒத்துப்போகும் வண்ணம் வார்த்தையை முன்நிறுத்த வேண்டும். கதைத் தெரிவைப் போலவே நேருக்கு நேரான காட்சிப் பிணைப்புகளும் மிகைப்படுத்தலில்லாத பாத்திரக் கையாளல்களும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவைகளை என் கணிப்பில் கனகச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது “பட்டாம் பூச்சிக் கனவுகள்”.

“மரணம் பிறக்கும், மற்றதில் இறக்கும் மீண்டும் மிரட்டும்” போன்றதொரு அலைவரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போதும் ஒன்றோடு ஒன்று கைலாகு ஆகும் சம்பவமும் இதில் இல்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். சொற்றொடரின் உச்சரிப்பில் பிரதிபலிக்கும் காட்சி பிம்பங்கள் குறித்த நேர வரையரையைத் தாண்டி மற்றதையும் வாசித்து விட்டு ஆடிட்டிக்கு திட்டமிடுவோம் எனும் மனப்பாங்கை இத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் தந்திருந்தது. அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்து நேரங்களில் என்னைச்சுற்றி இருப்பவர்கள் ஏதோவொரு (உறுதியான உண்மை முகநூல்) சொடுக்குகளை இயக்கிக்கொண்டிருக்கும் சமவெளியிலேயே “பட்டாம் பூச்சிக் கனவுகள்” நூலைப் படிக்கக் கிடைத்தது.

- எ கோண்ஸா புக் ஹே ரெஜான் பாய்..?

- பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர், பச்சோந்திக் குடியிருப்பு எனும் சிறைச்சாலை, நிலப்பகுதி முழுவதும் முதுகுகளில் பல் வர்ணம் காட்டும் பச்சைப்புள்ளிகளுடனான பச்சோந்திக் கூட்டங்கள். இதனை ஸெய்னப் கடப்பதைப் பற்றி யூகிக்கும் வேளையிலேயே எங்கள் டிரைவரின் வினவுதல் காதில் விழுந்தது.

ஒரு சிறு புன்னகைத்ததும்பலுடன், அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் பொறுக்கிய ஹிந்தியில் ஓரிரு சொல்லில் பதில். மீண்டும் முந்தி முறைத்தோடும் வேக வரையறையை மீறிய வாகனங்களின் போக்குவரத்து சப்தத்தில் நிசப்தம் என நகர்கிறது.

Friday, June 10, 2016

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா - 2016


ஆய்வுக் கட்டுரைகள்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள்'தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா' வை நடத்துவதென்று தீர்மானித்துள்ளது. இது பற்றிய தகவல் கடந்த மாதம் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விழாவை முன்னிட்டு ஆறு  ஆய்வரங்குகள் நடத்தப்படவிருக்கின்றன. அரங்கு 5 ஐத் தவிர ஏனைய அரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரைகளை எழுதலாம். 5ம் அரங்கைப் பொறுத்தவரை அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தலைப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆய்வு அமைதல் வேண்டும்.

கட்டுரைகளை முஸ்லிம் அல்லாதோரும் எழுதலாம்.

பின்வரும் கட்டுரைத் தலைப்புக்களுக்கான கட்டுரைகளை எதிர்வரும் ஜூலை 15ம் திகதிக்குள் கிடைக்கக் கூடியவாறு Dr, Jinnah Sherifudeen, 16A, School Avenue, Off Station Road, Dehiwala என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கவும். கட்டுரைகளை அனுப்புவோர் தமது முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட மறக்க வேண்டாம். கட்டுரைகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.

01. தற்கால இலக்கியம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. முஸ்லிம் படைப்பாளிகளின் வலைத்தளப் பதிவுகள்
02. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைச் செல்நெறி
03. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைச் செல்நெறி
04. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் நாவல்களும் பேசுபொருளும்
05. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசுபொருளும்

02. இஸ்லாமும் கலைகளும்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. இலங்கை முஸ்லிம்களின் இசையும் கலைப் பாரம்பரியமும்
02. இலங்கையில் அருகி வரும் முஸ்லிம் பாரம்பரியக் கலை வடிவங்கள்
03. இறைதூதர் காலத்தில் இசையும் கலையும்
04. அடிப்படைவாதச் சிந்தனையும் இஸ்லாமிய இசையும்
05. கஸீதா, புர்தா, தலைப் பாத்திஹா ஆகியவற்றில் இலக்கிய நயம்
06. இஸ்லாமியர் மத்தியில் இசை பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்

03. சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்
 கட்டுரைத் தலைப்புக்கள்.
01.) சினிமா ரசனை பற்றிய எண்ணக் கரு
02) இஸ்லாமியக் கருத்தியலை முன்கொண்டு செல்ல சினிமா ஊடகத்தின் பங்களிப்பு
03) சினிமா தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர் கொள்ளும் கருத்தியல்சார் பிரச்சினைகள்
04) சினிமா மூலம் இஸ்லாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்
05) சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை
06.) மாற்றுச் சினிமாவுக்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்

04. எதிரெழுத்து
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) முஸ்லிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்
02) முஸ்லிம்களின் எதிர்க்குரல் சர்வதேசத்துக்கு எட்டாமைக்கான காரணிகள்
03) மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் - சமூக அரசியல் பரிமாணம்
04) சியோனிஸ சக்திகளுக்கெதிரான இஸ்லாமிய எதிர்ப்பிலக்கியம்
05. இஸ்லாமிய தீவிரவாதம் - ஓர் ஆய்வு

05. வாழும் ஆளுமைகள்
கவனத்தைக் கவர்ந்த தற்கால முஸ்லிம் படைப்பாளிகள்
(ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)
01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்
02) அவர்களது சமூகவியற் பார்வை
03) அவர்களது எழுத்துக்களில் இலக்கிய நயம்
04) அவர்களது எழுத்துக்களில் சமூக, இன நல்லுறவு
05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் விதம்

06. சமூக நல்லிணக்கம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) சமய இலக்கியங்களில் சமூக நல்லிணக்கம்
02) இன உறவைக் கட்டியெழுப்புவதில் இலக்கியத்தின் பங்களிப்பு
03) தமிழ் பேசும் மக்கள் - ஓர் இலக்கியப் பார்வை
04) மலையக இலக்கியப் பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்
05) இஸ்லாமும் இலக்கியமும் - இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் புரிதலும்.

தொடர்புகள்-
Dr. Jinnah Sherifudeen - 077 272 1244
Ashroff Shihabdeen     - 0777 303 818
Dr. Thassim Ahamed   - 077 966 4063


Monday, March 28, 2016

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்

------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர். தாஸிம் அகமது

வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் மகுடத்தின் கீழ் இலங்கை கலை இலக்கிய கர்த்தாக்களை கௌரவித்து வரலாறு கண்ட பெருந்தகை கௌரவ ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆவார். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக அவர் இருந்த போது, 1994களில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு மணிவிழா ஒன்று அவ் அமைச்சினால்; கொழும்பில் வெகு விமரிசையாக எடுக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேராசிரியர் உவைஸ் அவர்களை கௌரவிக்கும் முகமாக மணிவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அம்மலரின் ஆசிரியர் கல்விமான் அல்ஹாஜ். எஸ்.எச்.எம். ஜெமீல் ஆவார்.

பாராட்டு, மணிவிழா மலர் வெளியீடு ஆகியவை மண்டபம் நிறைந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இலக்கிய ஜாம்பவான்கள் மத்தியில் நிகழ்ந்தது. அந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெரு வெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ் அவர்கள் அவ்விழாவின் போது மிகவும் அடக்கத்துடன் அமர்ந்திருந்தார். அறிஞர்களின் வாழ்த்துரைகளும், பேருரைகளும் அன்னாரை எவ்வித சலனத்துக்கும் உட்படுத்தவில்லை. அப்பெருந்தகையின் பெரும் சேவை அவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றே.

பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்கள் 1922ம் ஆண்டு கொழும்பு, காலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் பிறந்தார். தகப்பன் பெயர் மகுமூது லெப்பை தாயார் பெயர் சைனம்பு நாச்சியார் இவ்விருவருக்கும் இவர் ஒரே மகனாவார். ஆரம்ப கல்வியை ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்க முல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயத்தில் கற்றார். அதே விததியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். புhளியைக் கற்றதன் விளைவு பிற்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டுக்கு வழி வகுத்திருக்கலாம். 1938ம் ஆண்டு தமிழ் மொழி மூலம் கல்வி பெற்ற பேராசிரியர் உவைஸ் 1946ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆசிரியர் எவரும் இல்லாமலே தமிழ் கற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

1945ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு ஒன்று உவைஸ் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்றது. அதே ஆண்டில் பல்கலைகழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை தோற்றுவிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஒரு உறுப்பினராக இருந்தார். நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைஸிடம் சுவாமி விபுலானந்தர் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைஸுக்கும்  பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள் அவர்கள் கூறியது உவைஸுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சவாலாக மாறியது.

Tuesday, March 8, 2016

அஷ்ரஃப் சிஹாப்தீனின் அழகியல் மீள்நடுகை!


மன்ஸூர் ஏ. காதர்

ஈழத்துக்கான போராட்டத்தின் கடந்தகாலப் போக்கில் 1985இல் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் விளைந்த உள்ளகச் சச்சரவு நமது காலத்தின் ஒரு கறை படிந்த பயங்கரமாகும். அந்த அதிர்ச்சி உப தேசியவாதத்தின் தோற்றுவாயாக ஈழத்து முஸ்லிம் மக்களிடம் பிரதி பலித்தது. பிரதிபலித்த அந்த உப தேசிய வாதத்தின் அச்சொட்டான குறியீடே 'ஸெய்த்தூன்' என்ற கவிதையாகும். அன்றைய நிலைவரத்தில் அது ஒரு முதன்மையான படைப்பாகவும் அமைந்திருந்தது. இந்தக் கவிதையின் சொந்தக்காரன் யார் என்ற விசாரணையும் ஆச்சரியமும் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்ற ,இலக்கிய ஆளுமையைப் பற்றிய தேடலை தமிழ் இலக்கிய உலகிலே உண்டாக்கிற்று. அவரின் கவிதா ஆளுமையின் வீச்சு பிற்காலத்தில் ஒரு குடம் கண்ணீரையே கொண்டு வந்து தந்துள்ளது. இந்த ஆரம்பமானது ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளனின் ஆடம்பரங்களை விடவும் ஒரு படைப்பாளிக்கான கனதியையும் தன்னடக்கத்தையும் அவருக்கு வழங்கிற்று.

அஷ்ரப் சிஹாபுத்தீன் சமகாலங்களில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் செலுத்த முனைந்துள்ளார். பலஸ்தீனக் கவிதைகளை மொழி பெயர்க்க பேராசிரியர் நுஃமான் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் முதலியோர் செலுத்திய அதே உத்வேகத்தை அஷ்ரப் சிஹாபுத்தீன் அரபு மொழி மூலம் ஆங்கிலத்துக்கு வந்த சிறுகதைகளில் செலுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் சிறியதும் பெரியதுமான எட்டுச் சிறுகதைகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தன்னுடைய தகைசான்ற ஆங்கிலப் புலமை மட்டுமன்றி இக்கதைகளின்  மூலமொழியான அரபியில் இவருக்கிருந்த பரிச்சயமும் நாட்டமுமே இம்முயற்சிக்கான முழுத் தைரியத்தையும் இவருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.


மன்ஸூர் ஏ. காதர்

இலக்கியங்களை மொழி பெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேக மான மண் வளத்தையும் கால நிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண் வளத்தையும் வேறொரு கால நிலையையும் கொண்ட இன்னொரு வித்தியாசமான சுற்றாடலுக்குக் கொண்டுபோய் மீள் நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும். இந்த ' மீள் நடுகை'யின் பின்னர் அத்தாவரத்தின் தப்பிப் பிழைத்தலை ஒத்ததுதான் மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் நிலையுமாகும். அதுவும் கிழக்கத்தைய கலாசாரங்களுடன் பிசையப்படாத ஒரு மொழியின் இலக்கியங்களை கிழக்கத்தைய கலாசார மொழிகளுடன் ஊடுபாவச் செய்வது மிகுந்த சிரம சாத்தியமாகும்.

முதலில் இந்தச் சிரமத்தை பொறுப்புணாச்சியுடன் சிந்தைக்கு எடுத்தவர்களால் மாத்திரமே மொழிபெயாப்பு இலக்கியங்களின் ஆன்மா வைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல் சார் பலங்கள் அல்லது பலவீனங்கள் யாவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் இந்தத் தொகுதி பற்றிய எமது சிந்தனைப் போக்கிற்கு நாம் கடிவாளம் இட்டுக் கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல்சார் பலமும் அதேவேளை அதன் பலவீனமும் பின்வரும் எல்லைக்குள் மட்டுப்படுத்தத் தக்கதாகும்.

இலக்கியங்களை மொழிபெயர்த்தல் தொடர்பான புலமைசார் அறிஞராகக் கருதப்படும் யங்ஃபாங் ஹூ இது பற்றிக் குறிப்பிடும்போது நடைமுறைப்படுத்தப்படும் நோக்கங்களுக்காக ' மூலமொழியைச் சார்ந்து செல்லும்' (source language oriented) மொழிபெயர்ப்புக்கள் என்றும், மொழிபெயர்க்கப்படும் ' இலக்கு மொழியைச் சார்ந்து செல்லும்' (target language oriented)  என்றும் மொழிபெயர்ப்புக்களின் அவசியமான அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கூறுகின்றார்;.

மொழிபெயர்ப்பாளன் இந்த இரண்டு நிலைகளையும்; முழு அவதானத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய தவிர்க்க முடியாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தவறும் பட்சத்தில் விளையும் ஆபத்து, வித்தைக் காரனுக்கு ஏற்படும் ஆபத்தைப் போன்றதே. இந்த சமநிலைத் தன்மையில் காட்டப்பட வேண்டிய அதீத கவனம் மூலமொழி ஆசிரியனின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு வாசகனைக் கொண்டுவந்து சேர்க்கும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்கான மேற்படி வரையறை களைக் கொண்ட இந்த பரிசோதனைக் குழாய்க்குள் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்பவரும் போடப்பட்டே ஆகவேண்டி உள்ளது.

அத்துடன் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் மூலமொழிக்கும் மொழி பெயர்க்கப்படும் மொழிக்கும் இடையிலான முழுமையான மனவெழுச்சிசார் நெருக்கடிகள,; ஒருமைப்பாடுகள,; பழக்கங்கள், வழக்கங் கள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், பெறுமானங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய வற்றுக்கான ' வெளிப்பாட்டுத் திறனுடன்கூடிய வெளிப் படைத்தன்மை' பிரதான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த முயற்சி பற்றிக் கவனக் குறைவாக கருதுபவர்களுக்குத் தழிழ் வகுப்பொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி தந்த ஒரு பயிற்சியை வாசகர்களிடம் கொடுக்க விரும்பு கின்றேன். அதாவது ' அவள் பூவோடும் பொட்டோடும் வாழ்கின்றாள்' என்பதனை வெறுமனே மொழியியல் ரீதியான தொடர்ச்சியுடன் ஆங்கிலமாக்குவதும் அதனைத் தமிழர் வாழ்வியல்சார் அல்லது இந்திய கலாசாரம்சார் தெளிவான அறிவுடன் ஆங்கிலமாக்குவதும் ஒரே வகை யான மொழிக் கையாளுகையுடன் நடைபெறமாட்டாது. இரண்டும் இரண்டு வகையான ஆங்கில மொழித் தொடர்களைக் கையாள மொழி பெயர்ப்பாளனைத் தூண்டும்.

இந்த அடிப்படை நியமங்களை வைத்துக்கொண்டு அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த எட்டு சிறுகதைகளையும் எனது தராசில் போட்டு நிறுத்துப் பார்க்க நான் ஆசைப்படுகின்றேன்.

Tuesday, January 12, 2016

ஒளி விழாத இடங்கள்!


- முஜீப் இப்றாஹீம் -

நேற்றிரவு இஷாவுக்கு பிறகு பயான் முடித்துவிட்டு பள்ளிக்கு வெளியே உள்ள சீமெந்து பென்ஞ்சில் வந்தமர்கிறார் ஹஸ்ரத்.

பயான் தொடர்பான ஒரு சந்தேகம் தீரவேண்டி இருந்ததால் நானும் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன்.

சந்தேகம் தீர்ந்தது.
அதன் பின்னர் பொதுவான உரையாடல் தொடர்ந்தது.....

ஆனாலும் அவருக்குள் ஒரு தேக்க நிலையினை உணர்ந்தேன். வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு பஸாருக்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அதில்தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை உணரமுடிந்தது.
இந்த பள்ளிக்கு வந்த காலத்திலிருந்து தனது கஷ்டத்தை சொல்லி இதுவரை இங்கே வருகிற யாரிடமும் ஒரு சதம் கூட கை நீட்டி வாங்கியிராத கௌரவமான மனிதர்!

பள்ளி செயலாளர் அவரை நோக்கி நெருங்கும் போது விடைபெற்று வந்துவிட்டேன்.

அனேகமாக அவரைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

நமது நாட்டில் திருவோடு ஏந்த வேண்டிய பௌத்த துறவிகள் இன்டர் கூளரில் பவனி வருகிறார்கள், கிறிஸ்தவ பாதிரிமார் செல்வச்செழிப்போடு வாழ்கிறார்கள், பள்ளிவாயல்களில் பணிசெய்யும் மௌலவிமாரின் நிலையோ பரிதாபம்.

எங்கள் பள்ளி ஹஸ்ரத்துக்கு மாதச்சம்பளம் இருபத்தையாயிரம் ரூபாய். எந்த வருமானமுமின்றி இயங்குகிற பள்ளியாதலால் ஒரு நிறுவனந்தான் அந்த சம்பளத்தையும் வழங்குகிறது!

இந்த வருவாயோடுதான் ஆறுமாதக்குழந்தையோடு பள்ளி ஹஸ்ரத் இங்கே தலை நகரில் காலந்தள்ளவேண்டியிருக்கிறது!

கத்தம், பாத்திஹா, மௌலிது, மையத்து வருமானம், ட்ரஸ்டிமாருக்கு தலைசொறிவதால் வருகிற டிப்ஸ், பசையுள்ள பணக்கார்ர்களுடன் பல் இழிப்பதால் அவ்வப்போது கிடைக்கும் கையூட்டு இவை எதுவும் அவருக்கில்லை!

இஷாவுக்கும், சுப{ஹக்கும் பிறகு நாள்தோறும் அவரது பயான் நிகழ்த்தப்படுகிறது.

அவ்வப்போது விடுமுறை நாட்களிலும் தூய இஸ்லாத்தை விளக்கும் நிகழ்வுகளும் அவரால் நடாத்தப்படுகிறது.

இப்படியொரு பள்ளி ஹஸ்ரத்தை எனது வாழ்நாளில் இப்போதுதான் பார்த்திருக்கிறேன்.

பள்ளி வாயல்களில் வழங்கப்படுகிற இந்த குறைந்த சம்பளத்தின் காரணமாக விடயதானமுள்ள மௌலவிமார் பள்ளி இமாம்களாக கடமையாற்றுவது மிக குறைவு.

நளீமிய்யாவில் இருந்து வெளியாகிற உலமாக்கள் பள்ளிவாயல்களில் இமாம்களாக இருப்பதை காணமுடியவில்லை, அவர்களுக்கு அரச தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் தொழில் கிடைத்து விடுகிறது.

சவூதி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வருகிற உலமாக்களுக்கு மாதாந்தம் சவுதி அரசால் கணிசமான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அத்தோடு அவர்கள் வேறு அரச ஃ தனியார் துறை சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு நல்ல வருமானமும் பெறுகின்றனர்.

அவர்களுக்கு பள்ளி இமாம்களாக பணி செய்வதற்குரிய தேவைப்பாடும் கிடையாது.

மறுபுறம் இங்கே வருமானம் ஈட்ட முடியாத உலமாக்கள் தமது பொருளாதார தேவை கருதி மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் தேடி செல்கின்றனர். அவர்களில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.

ஜித்தா விமான நிலையத்தின் கழிவறைப்பகுதியில் சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த குர்ஆனை மனனஞ்செய்த ஹாபிழ் ஒருவரை கண்டு மனமுடைந்து போனதாக ஓரு முஸ்லிம் அரசியல்வாதி அடிக்கடி கூறிக்கொள்வார்.

இன்னும் மத்திய கிழக்கு நாடொன்றில் காரைக்கழுவிக்கொண்டே குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த இன்னொரு ஹாபிழை கண்ணுற்ற அறபி ஒருவர் மிக்க மனம் வருந்தி அந்த ஹாபிழை வேறொரு கௌரவமான தொழிலுக்கு நியமித்து, சம்பளத்தையும் அதிகரித்து கொடுத்த நிகழ்வொன்றை அதற்கு சாட்சியான நண்பர் ஒருவர் சொன்னதுண்டு.

இது போல் ஏராளமான சம்பவங்கள் நிகழ்கின்றன!

இப்போது நமது நாட்டில் பல அரேபிய நிறுவனங்களும், தனி நபர்களும் தர்ம காரியங்களில் அறப்பணி புரிகிறார்கள். அதில் பெரும்பாலானவை பள்ளிவாயல்களை கட்டுவதாகவே காணப்படுகிறது.

தெருவுக்கு நான்கு பள்ளிகளை கட்டுவதைவிட இருக்கிற ஒரு பள்ளிவாயலை ஒழுங்காக பராமரிக்கவும் அங்கே கடமையாற்றும் இமாம் மற்றும் முஅத்தினுக்கு நல்ல சம்பளத்தை வழங்கவும் வழி செய்தால் அது பாரிய நன்மையாக அமையும்.

ஒரு பள்ளி ஹஸ்ரத்துக்கு மாதாந்தம் அறுபதினாயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியுமாக இருந்தால் நமது பள்ளிகளில் நல்ல வினைத்திறண் மிக்க உலமாக்களை இமாம்களாக பெற முடியும் அவர்கள் தொழில் தேடி வேறெங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது சாதாரணமாக அறபிகள் ஒரு பள்ளிவாயல் நிர்மாணத்திற்கு இலங்கையில் இரண்டரைக்கோடி ரூபாய்கள் வரை சராசரியாக அன்பளிப்பு செய்கின்றனர். இவ்வாறு நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள் கட்டப்படுகின்றன!

இதற்காக செலவிடப்படும் பெருந்தொகைப்பணத்தினை சரியாக முகாமை செய்து இருக்கின்ற பள்ளிவாயல்களின் வளர்ச்சிக்கும் அதன் பணியாளர்களின் கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்த முடியும்.
அறபிகளோடு பணி செய்யும் நிறுவனங்களும், தனி நபர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதன் ஊடாக பாரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த முடியும்.

அதே போல், மாதாந்தம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக பெறும் பள்ளிவாயல்கள் மாதாந்தம் இமாமுக்கு இருபதாயிரம், முஅத்தினுக்கு பத்தாயிரம் என்று வழங்கிவிட்டு, பெருந்தொகை பணத்தினை செலவிட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிக்கு மாபிள்களையும் , வர்ணங்களையும் மாற்றிக்கொண்டிராமல், இமாமையும், முஅத்தினையும் உரிய முறையில் கவனிக்கும் மன நிலைக்கு தங்கள் நிர்வாகத்தில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும்.

நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் இருந்தாலே போதாதென்ற நிலையில் இலங்கையில் வாழ்க்கைச்செலவு எகிறிப்போய் இருக்கும் நிலையில், பள்ளி இமாமுக்கு கிடைக்கும் இருபத்தையாயிரம் ரூபாய் வெறும் பன்னிரெண்டு நாட்களில் தீர்ந்து போனால் எஞ்சி இருக்கும் நாட்களுக்கு அவர் என்ன செய்வார்? எங்கு போவார்?

ஒரு பௌத்த தேரோவுக்கு, கிறிஸ்தவ பாதிரிக்கு இலங்கையில் கிடைக்கும் வருவாயும், வாழ்க்கைத்தரமும் நமது பள்ளி இமாம்களுக்கு கிடைப்பதில்லை என்பதில் நமக்கு வெட்கமில்லையா?

சமூக ஆர்வலர்களே, பள்ளி நிர்வாகிகளே, இஸ்லாமிய சமூக இயக்கங்களே, அறபிகளோடு பணி செய்வோரே, செல்வந்தர்களே இந்த கேள்விகள் உங்களுக்கே!

(முகநூல் பதிவு 12.01.2016)

Wednesday, January 6, 2016

'ஸச்ச வொண்டர்புல் கேர்ள்!'

- 32 -


01
'நீ ரொம்ப அழகா இருக்கே..!'

'என்னைச் சந்தோஷப்படுத்த பொய் சொல்லாதீங்க.. இங்கப் பாருங்க... முகத்துல எத்தன பரு இருக்குதெண்டு...?'

'ஐயோ.. அதுதான் உன்ட அழகைக் கூட்டிக் காட்டுது... முகத்துல முத்துக்கள் பதிச்ச மாதிரி எவ்வளவு அழகா இருக்கு...!'

மேற்படி உரையாடலை தனது உரை ஒன்றில் சொல்லிக் காட்டியவர் மறைந்த பேராசிரியர் பெரியார்தாசன் அப்துல்லாஹ் அவர்கள். 

திருமணம் செய்து கொண்ட புதிதில் கணவன் மனைவிக்கிடையிலான உரையாடல் இப்படித்தான் இருக்கும் என்று சொன்ன அவர் சில காலம் சென்ற பிறகு மனைவியைத் தேடும் போது  'எங்க பெய்த்து இந்த மூதேவி?' என்று கணவன் கேட்பானாம் என்றார்!

02
வலீமா விருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

மணமகனின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாகத் தொழில் புரிந்து வரும் சாதாரணர் என்ற போதும் பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்களுக்கும் அறிமுகமானவர். ஒரு பெயர் பெற்ற திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வாத்தியங்களை நொறுக்கித் தள்ளிக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடல்களைப் பாடும்  கோஷ்டி விருந்து ஆரம்பமானதும் தமது குரல்களைத் தளைத்துக் கொண்டது. 

ஏறக்குறைய விருந்தின் இறுதிக் கட்ட வேளை பாடகர் கோஷ்டியின் ஒலிவாங்கியை உருவி எடுத்தார் மணமகன். அவர் ஆங்கிலத்தில் பேசினார். 'லேடீஸ் அன்ட் ஜென்ட்ல்மன்..' என்று விளித்தார். 'நீங்கள் எல்லாரும் வந்து எமது விருந்தில் கலந்து கொண்டதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி' என்றார். 'இந்தத் திருமணத்துக்காக எனது தாய், தந்தையருக்கும் (பெயர்களைச் சொல்லி) நன்றி' என்றார். 'எனது மாமா, மாமி மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்கும் நன்றி' என்றார்.

அதற்குப் பிறகுதான் அந்த முக்கியமான விடயத்தைச் சொன்னார்.

'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி... இப்படி ஒரு மனைவி - 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' - (இதுதான் ஆங்கிலத்தில் மனைவியைப் பாராட்டச் சொன்ன வார்த்தை) எனக்குக் கிடைத்ததையிட்டு நான் உண்மையில் பெருமைப் படுகிறேன்' என்றார். ''ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' என்னை முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளார்' என்றார்.

பிறகு மனைவியைச் சுற்றியே அவரது பேச்சுத் தொடர்ந்தது. 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' என்ற வார்த்தையை பதினைந்து முறைக்குமேல் அவர் பிரயோகித்துக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க முடியாமல் நான் வாயிலை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

திருமணம் முடிந்து மூன்று தினங்கள் கூட முழுமையாக முடிந்திருக்கவில்லை.

நான் வெளியே வரும் போது கோர்ட் ஷூட் அணிந்த ஒரு இளைஞன் மற்றவனிடம் சொல்வது எனது காதில் துல்லியமாக விழுந்தது...

'என்னடா இவன்.. நட்டுக் கழன்டவன் மாதிரி ஒளத்திக் கொண்டீக்கான்?'

இரண்டே இரண்டு இரவுகளில் மணமகளைக் கற்றுக் கொண்ட மணமகனை நினைத்துப் பார்த்தேன். இந்த இரண்டு நாட்களில் நிகழ்ந்தவைகள் அந்த இளைஞனைப் பொறுத்தவரை புதியவை, சில வேளை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காட வைத்தவை என்றும் கூடச் சொல்லலாம். இல்லையென்றால் மனைவியை முன்னிறுத்தி இப்படி அவர் பொங்கி வழிந்திருக்க முடியாது!

03
அது சரி... இனி அதுக்கென்ன என்று ஒரு கேள்வி உங்களுக்குள் இப்போது கொக்கி போட்டிருக்க வேண்டும்.

பெரிதாக ஒன்றுமில்லை.

இன்றைய தலைமுறையின் ஒரு பகுதியினர் - அரசியல், மார்க்கம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கும் பிரதிபலிப்பதற்கும் மணமகனின் 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' - என்ற பொங்குதலுக்குமிடையில் வித்தியாசங்கள் எதுவுமில்லை என்று சொல்ல வந்தேன்!

06.01.2016