Sunday, September 20, 2015

உன்புகழ் கூறாத சொல்லறியேன்!


 - 27 -

ஹஜ் காலங்களில் சுபஹூத் தொழுகைக்குப் பின்னர் மதீனா முனவ்வராவைச் சுற்றியுள்ள ஒலிநாடா மற்றும் இறுவெட்டுக் கடைகளிலிருந்து குளிர் காற்றில் எழுந்து வரும் 'தலஅல் பத்ரு அலைனா' மற்றும் அதையொத்த பரவசப்படுத்தும் பாடல் குரல்கள் மற்றெல்லாப் புலன்களையும் தாண்டிக் காதில் விழுவது ஒரு சுகானுபவமாக இருக்கும்.

அழகுணர்வும் கலா ரசனையும் மனிதனது உள்ளத்துடன் சம்பந்தப்பட்டது. மனித மனதைக் கவர்வதில் பாடல்களுக்குப் பெரும் பங்கு உண்டு. மொழிகள் தோன்றிய பிறகு மனித குலம் இயல்பாகவே உருவாக்கிக் கொண்ட கலை அம்சம் பாடலாகத்தான் இருக்க வேண்டும்.

ஏடும் எழுத்தும் அறியாத மக்களினால் வாய்மொழியாகப் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் எனப்படும் பாமரப்பாக்கள் மனித குலம் பயன்படுத்திய, பயன்படுத்துகிற எல்லா மொழிகளிலும் உள்ளன. தாலாட்டு முதற்கொண்டு ஒப்பாரிப் பாடல்கள் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு கால கட்டங்களிலும் செயற்பாடுகளிலும் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் அறிந்தேயிருக்கிறோம். பொதுவான பாடல்களைப் போலவே மத ரீதியான பாடல்களும் நிலவி வந்திருக்கின்றன.

தமிழிலும் அறபுத் தமிழிலும் பல பாடல் இலக்கியங்கள் வெளிவந்திருக்கின்றன. பெண்புத்திமாலை, றசூல்மாலை போன்றவை குழுக்களாகப் பாடப்பட்டும் வந்திருக்கின்றன. நோன்பு காலங்களில் பெண்களுக்கான தொழுகை நடைபெறும் இடங்களில் ஸலவாத்து மாலையை ஒருவர் படிக்க மற்றவர்கள் கோரஸாக ஸலவாத்துச் சொல்லுவார்கள். தொழுகைக்கு வருவோர் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழுகை ஆரம்பமாகும் வரை இந்நிகழ்வு நடந்து கொண்டிருக்கும். வேறு அநாவசியப் பேச்சுக்களையும் ஊர்வம்பையும் தவிர்ப்பது மட்டுமன்றி சன்மார்க்க விழுமியங்களைப் பாடல்களூடாக மீட்டுவதும் இந்நிகழ்வின் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.

பின்னால் இஸ்லாமிய கீதங்கள் உருவாகின. மிகப் பெரும் ஆலிம்களும் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பாடல்கள் எழுத மிகச் சிறந்த பாடகர்கள் அவற்றைப் பாடினர். அவை மக்களை வெகுவிரைவில் சென்றடைந்தன. முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய கீதங்கனைப் பாடிய பாடகர்களின் நீண்ட பட்டியல் உண்டு. காரைக்கால் தாவூத், நாகூர் ஈ.எம். ஹனிபா, காயல் ஷேக் முகம்மத் ஆகியோரை மேலோட்டமான உதாரணத்துக்குத் தொட்டுக் காட்ட முடியும். இலங்கையிலும் பலர் தோன்றினர். ஏறக்குறைய 50கள் தொடங்கி 90 களின் நடுப்பகுதி வரை இவர்களது பாடல்களின் ஆதிக்கம் முஸ்லிம் சமூகத்தில் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

ஆயினும் 80களின் நடுப்பகுதியில் குறித்த சில பாடல்கள் இறைவனுக்குச் சமமாக சில மார்க்கப் பெரியார்களைக் கொண்டாடுகின்றன என்ற அவதானிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவைதான் இந்த இஸ்லாமிய கீதங்களையும் பாடகர்களையும் மக்கள் சமூகத்திடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தது. எனவே மார்க்கத்துக்கு முரண் எனக் கருதப்பட்ட பாடல்களை முஸ்லிம் சேவை ஒலிபரப்புவதைத் தவிர்த்துக் கொண்டது.

இஸ்லாமிய கீதங்கள் இசையுடனேயே பாடப்பட்ட போதும் கூட அவற்றின் இசையை விட வார்த்தைகளின் கவிநயமே மக்கள் மனதில் தங்கி நின்றன. இன்றும் கூட யாரும் அப்பாடல்களை எழுந்தமானமாகப் பாடக்கூடிய நிலையில் இருப்பதைக் கொண்டு இதனைப் புரிந்துகொள்ளலாம். 'இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வது இல்லை!', 'வாழ்நாளெல்லாம் போதாதே.. வள்ளல் நபிகளின் புகழ்பாட...', 'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?', 'உனையன்றி வேறெதுவும் நினைத்தறியேன்.. உன் புகழ் சொல்லாத சொல்லறியேன்.. இணைவைத்து உனைப்பாட நாடவில்லை, தமிழ் இசைக்காக உன்புகழ் பாடவில்லை!' போன்ற பாடல்கள் மொழியழகும் கவிநயமும் கொண்டவை.

இயல்பாகவே மனிதனின் கலையுணர்வை மோசமான, ஆபாச பாடல்கள் மற்றும் இசையிலிருந்து தவிர்ப்பதில் இப்பாடல்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் சன்மார்க்கத்தை மக்களிடம் சேர்ப்பதிலும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. பிரச்சாரகர்கள் நுழையாத கிராமங்களில் கூட இவை காற்றில் கலந்து ஒலித்திருக்கின்றன.

இன்று இந்த சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக உணர முடிகிறது. பழம் பெரும் பாடகர்கள், பாடலாசிரியர்களின் மறைவு, இசைக்கு எதிரான மார்க்கப் போர், அதைத் தாண்டி பாடல்கள் மூலம் மக்களிடம் நல்லவற்றைக் கொண்டு செல்வதில் திறமையின்மை, கலைகளை மறுப்பதன் மூலம் மனித இயல்பான கலைகளுடனான உணர்வை மிதித்தல் ஆகியவற்றால் இத்துறை பாழ்பட்டு நிற்கிறது. நமது தஃவாப் பணி பேச்சு, பேச்சு, எழுத்து, எழுத்து என்ற எல்லைக்குள் சுருங்கிப் போய்க் கிடக்க, மனித மனத்தின் இயல்பான கலையார்வம் வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

பாடல்கள் சக்தி மிக்கவை. உற்சாகமான பொழுதுகளில் இயல்பாகவே ஒரு பாடல் வரியை நாம் முணுமுணுக்கவே செய்கிறோம். அப்போது வாத்தியக் கோஷ்டியை வரவழைத்து வைத்துப் பாடுவதில்லை.  அல்லது வீட்டில் இருப்போரைத் தாளமிடவோ ஆட்டம் போடவோ அழைப்பதில்லை.

ஒவ்வொரு பாடசாலையிலும் ஆகக்குறைந்தது ஒரு மாணவி, ஒரு மாணவன் மிக இனிமையாகப் பாடக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மோசமான இசை, பாடல் என்று குறை சொல்பவர்கள் நல்ல பாடல்களை எழுதிக் கொடுக்கவோ தட்டிக் கொடுக்கவோ முன்வருவதுமில்லை.

மனிதக் கலையுணர்வை மார்க்கத்தின் பெயரால் மறுத்து அதற்கு மாற்றீடு வழங்காமல் மிம்பர்களிலும் பொது உபந்நியாச மேடைகளிலும் மூலம் வெளிவரச் சத்தம் போடுவதால் மனிதக் கலையுணர்வு அற்றுப் போவதில்லை. அது வேறு வடிவங்களையும் வழிகளையும் தேர்ந்து கொள்ளும்!

அந்த வழியும் வடிவமும் மோசமானதாகவும் மார்க்க முரணானதாகவும் இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

Tuesday, September 1, 2015

ஹஜ் - காசாகி நிற்கும் கடமை!


 - 26 -

எனது ஹஜ் பயணம் அவ்வளவு சந்தோஷமானதாக இருக்கவில்லை!

கடமைகள் யாவற்றையும் திருப்திகரமாகச் செய்து கொள்ள முடிந்த போதும் அழைத்துச் சென்ற அணியினர் சரியாக நடந்து கொள்ளவில்லை.

'ஷீதேவிகளே... விமான நிலையம் ஏசி (குளிரூடட்டப்படது.) அதிலிருந்து விமானம் வரை ஏற்றிச் செல்லும் பஸ் ஏசி. விமானம் ஏசி. சவூதியில் விமான நிலையம் ஏசி. அங்கிருந்து அழைத்துச் செல்லும் பஸ் ஏசி. ஹரம் ஷரீப், மதீனா முனவ்வரா ஏசி. நமக்கு எந்தவிதச் சிரமங்களும் இல்லை. நாளை உயிருடன் இருப்போமோ இல்லையோ தெரியவில்லை. பயணத்துக்கு நிய்யத் வையுங்கள், முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்!' - இது நீண்ட காலத்துக்கு முன்னர் ஹஜ் முகவரான ஒரு ஆலிம் நிகழ்த்திய குத்பாப் பிரசங்கத்தின் சிறு பகுதி. கேட்டுக் கொண்டிருக்க மகிழ்ச்சியும் ஆர்வமும் வரத்தான் செய்யும். பெயரையும் கொடுத்து அட்வான்ஸையும் கொடுத்த பிறகுதான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பதட்டத்திலும் சந்தேகத்திலும் நாட்கள் நகர ஆரம்பிக்கின்றன.

சரியாக பணத்துக்குப் பத்துத் தினங்கள் இருக்கையில் திடீரென விமானக் கட்டணம் அதிகரித்து விட்டதாக மேலும் ஒரு தொகையை என்னிடம் கோரினார் நிறுவனத்தவர். அதுவும் பிரச்சனை இல்லை.

அழைத்துச் செல்லப்படுபவர்களில் பொருளாராத மற்றும் கல்வி ரீதியாக வித்தியாசமானவர்கள். கிராமத்து மனிதர்களை அழைத்துச் செல்வதில் நிறுவனங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. கொஞ்சம் விளக்கம் உள்ளவர்களைச் சமாளிப்பதில்தான் பிரச்சனை அவர்களுக்கு.

இலங்கையில் ஆள்சேர்க்கும் ஆலிம்ஷா முதற்கொண்டு சவூதியில் குர்பான் கொடுப்பதற்கு பிராணிகளைக் கொள்வளவு செய்வது வரை புறோக்கர்கள் இருக்கிறார்கள். ஹஜ் காலம் என்பது அவர்களுக்கு கொமிஷன் குவியும்; காலம். அறபாவில் தரிப்பதும் மினாவில் தரிப்பதும் சற்றுச் சிரமமானதுதான். ஆனால் அதற்குள்ளும் நடக்கும் விளையாட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்குள் தவிர்க்க முடியாத சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். அவற்றைப் பொறுத்தேயாக வேண்டும்.

25 முதல் 27 பேர் வரை தங்கவேண்டிய கொட்டிலுக்குள் 50 பேருக்கு மேல் செருகியதைக் கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை. அனைவரும் பெண்கள். அப்படி நெருக்கடிப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நிறுவனத்துக்குரிய கொட்டில்கள் சவூதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு விற்கப்படுகின்றன. அதன் பலனை நிறுவனம் அனுபவிக்க ஹாஜிகள் துன்பத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு நான்கு கொட்டில்கள் (டென்ட்) விற்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்து நடை வழியில் தர்ணா செய்தேன்.  இறுதியில் பெண்களுக்காக கொட்டிலின் மறுபகுதியை பலாத்காரமாகத் திறந்து விட்டோம்.

வழிகாட்டிகளாக வரும் ஒரு சில ஆலிம்கள் நடந்து கொள்ளும் முறை வருந்தத் தக்கது. நிறுவன உரிமையாளருக்குச் சார்பாக நடந்து கொள்வதற்காக ஹஜ்ஜாஜிகளை 'அச்சமூட்டி எச்சரிக்கும்' பணியை இவர்கள் மிக அழகாக முன்னெடுக்கின்றனர். இடைக்கிடை நடக்கும் உபந்நியாசங்களில் இந்த அம்சமே மிக முக்கியமானதாக இருக்கும். குழுவில் வரும் 'பசை' கொண்ட நபர்களை மையப்படுத்தியே சில முன்னேற்பாடுகள் நடப்பதும் உண்டு. ஹஜ் கடமை முடிந்து நாடு திரும்புவதற்காக இருந்த ஒரு பகல் பொழுதில் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த இரண்டு ஆலிம்கள் எனக்குப் புரியாது என்று எண்ணிக்கொண்ட அறபியில் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததை நான் வெகுவாக ரசித்தேன். இவர்களில் ஒருவர் மினாவின் கூடாரத்துக்குள் தனக்கு இடமில்லை என்று ஒரு ஹாஜி சொன்ன போது எல்லோரையும் கத்திப் பாட்டில் (ஒருக்களித்து) படுக்கும்படி உபதேசம் செய்தவர்.

30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சமாளிக்கும் விதமாக சவூதி அரசு ஏற்பாடுகளைச் செய்திருப்பதைக் காணும் போது, அரபிகள் எவ்வளவு நேர்த்தியாக இவற்றை மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு பிரம்மிப்பு வரும். எவ்வளவு கல்வியறிவு படைத்தவராக இருந்த போதும் வழி தவறினால் உரிய இடத்தை அடைவது சிரமம். ஆனாலும் உரியவரை உரிய இடத்தில் சேர்ப்பிக்கும் ஏற்பாடுகள் பாராட்டத் தக்கவை.

ஹஜ் என்பது மனித குலத்துக்கான ஒற்றுமை மாநாடு. ஓர் அற்புதத் திருவிழா. மனிதர்களுக்கிடையில் எந்த வேற்றுமையும் கிடையாது என்பதை வருடா வருடம் நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்தக் கடமை போல ஒரு கடமை வேறு எந்த மதத்திலும் கிடையாது. நாமெல்லாம் ஒரே உறவு என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு இறைவனின் வீட்டையும் தரிசித்தபடி நபிகளாரும் அவர்களின் தோழர் தோழியரும் நடந்து திரிந்த மண்ணில் குறைந்தது 25 நாட்கள் வாழக் கிடைப்பது பெரும் பாக்கியம்தான்.

ஹஜ்ஜூக்கு அழைத்துச் சென்று வழிகாட்டுவதும் ஹாஜிமாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் உதவுவதும் ஒரு மகத்தான பணி. இந்தப் பணியில் ஹாஜிகளை வருத்தாமல் சிறந்த முறையில் உதவும் நிறுவனங்களும் ஆலிம்களும் இருக்கவே செய்கின்றனர். ஒரு சிலர் மார்க்கத்தின் மீதான பொது மகனின் பற்றையும் பக்தியையும் தேவைக்கு மேல் உழைப்பதற்கான ஒரு வழியாக ஆக்கியிருப்பது பெரும் கவலை தருவதாகும்.

எனக்கு ஹஜ் அனுபவம் கிடைத்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இந்த நிலைமைகளில் தற்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற போதும் ஒரு வியாபாரப் போட்டியாகவே அது இன்னும் இருக்கிறது என்பதற்கு ஒரு சிலர் பொது பலசேனாவை உதவிக்கு அழைத்ததிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹஜ் முடிந்து வந்த பிறகு எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே விமானத்தில் வௌ;வேறு நிறுவனங்களினூடாக நானும் மற்றொரு ஒலிபரப்பாளரும் சொந்தப் பணத்திலேயே துணைவியர் சகிதம் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தோம். அவ்வப்போது பத்திரிகை வெளியிடும் ஒரு சிறு பத்திரிகையாளர் அன்றைய நிலையில் அவர் வெளியிட்ட ஒரு பத்திரிகையில் நானும் நண்பரும் அரச செலவில் ஹஜ் செய்ததாகசும் அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும் கட்டம் கட்டி ஒரு செய்தி போட்டிருந்தார்.