Saturday, March 19, 2022

நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன் - நூலுக்கான அணிந்துரை


ஷெய்க்ஹா ஜெலீலா ஷபீக்
(முன்னாள் அதிபர் - கள்எலிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி,
முன்னாள் அதிபர் ஆயிஷா சித்தீக்கா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி)

அவர்கள் “நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்“ நூலுக்கு வழங்கிய அணிந்துரை.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி...

அகிலங்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட கண்மணி நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களைப் பின்பற்றி வாழ்வோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் நிறைவாய்ப் பொழிய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் மார்க்கம். இதனை நபி (ஸல்;) அவர்கள், 'நான் உங்களை ஒரு பிரகாசமான பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவுகூடப் பகல்போல் வெளிச்சமானது,' எனக் குறிப்பிட்டார்கள். இந்த வாழ்க்கை நெறிக்குச் சொந்தக்காரர்கள் தாம் முஸ்லிம்கள். 

இவ்வுயர் மார்க்கத்தின் போதனைகளையும் வழிகாட்டல் களையும் முஸ்லிம்கள் தம் வாழ்வியலாக அமைத்துக் கொண்டி ருந்தால் அவர்கள் வாழும் பிரதேசங்கள் மாத்திரமன்றி முழு உலகும் அமைதியும் சமாதானமும் அரசோச்சும் இடமாக மாறியிருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களின் நடை, உடை, பாவனைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமாக அமைந்து விட்டமையால் அவர் களுக்கு இழிவும் அழிவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சோதனைகளும் வேதனைகளும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் இந்நிலையிலிருந்து அனைவரையும் பாதுகாப்பானாக.

இன்று அல்குர்ஆனை ஓதப் பழகுவதிலும் அதனைத் தமாம் செய்வதிலும் முஸ்லிம்கள் காட்டும் அக்கறை அது கூறும் செய்திகளை விளங்குவதிலோ அவற்றைத் தம் வாழ்வியலாக மாற்றுவதன் மூலம் மற்றவர்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டு வருவதிலோ காட்டுவதில்லை. நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம், புனித மிஃறாஜ் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு முக்கியத் துவம் கொடுக்கின்ற பலரும் அவர்களின் வாழ்வொழுங்கையும் முன்மாதிரியையும் தம் வாழ்வியலாகக் கொள்ளாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

இந்நிலையைச் சீர் செய்து இஸ்லாமிய சிந்தனையை முன்வைத்துச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நமது உலமாக்களின் வெள்ளி மேடைப் பிரசங்கங்களும் இஸ்லாமிய நூல்களும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் உரைகளும் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் மேற்குலகில் வாழும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களான பெண் ஆளுமைகள் பதின்மரின் கருத்தாழம் கொண்ட ஆங்கில உரைகளின் தமிழாக்கமே 'நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்,' என்ற மகுடம் தாங்கி நமது கைகளில் தவழும் இந்நூல் ஆகும். வித்தியாசமான தலைப்புகளில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் மிக அழகாகவும் தெளிவாகவும் அதே வேளை, கேட்போரின் உள்ளங்களைத் தொட்டுச் செல்லும் கவர்ச்சித் தன்மையுடனும் அவற்றை அவர்கள் முன்வைக்கும் பாங்கு அருமையானது.
சிலபோது நாம் சிறிதும் கவனத்திற் கொள்ளாத நுணுக்கமான வாழ்வியல் அம்சங்களை இவ்வுரைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணமாக, 'முஸ்லிம்களாகிய எமக்கு அல்லாஹ்வைப் பற்றிய புரிதலில் ஏற்பட்ட தவறுதான் நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது, எம்மை விரக்திக்குக் கொண்டு செல்கிறது. அல்லாஹ் கருணையாளன். எல்லாக் கருணைகளுக்கு மான ஊற்றே அவன்தான். 

ஒரு குழந்தையிடம் தாயொருத்தி வைத்திருக்கும் பாசத்தை விடப் பன்மடங்கு நம்மில் பாசத்தைக் கொண்டிருப்பவன்தான் அல்லாஹ் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மையை முதல் எண்ணக் கருவாக எமது சிறாருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்,' என்று குறிப்பிடும் சகோதரி யெஸ்மின் முஜாஹிதின் உரையைக் குறிப்பிடலாம். அவரது உரையின் தலைப்பே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

சகோதரி துன்யா ஷுஐப் அவர்களின், 'ஏன் எனக்கு இப்படி?' என்ற தலைப்பினைத் தாங்கிய உரை வாழ்வில் ஏற்படும் தொடர் நோதனைகள், துன்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்பவற்றால் கடுமையாக மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ள பல நூறு உள்ளங்களுக்குச் சிறந்த ஒத்தடமாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் நாம் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய உரை அது.

'இஸ்லாம் சாந்தி மயமான மார்க்கம். அது வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டி என இஸ்லாத்தின் சிறப்பம்சங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதல்ல முஸ்லிம்களின் பொறுப்பு. அந்தத் தூய இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாக நமது வாழ்வில் செயல்படுத்திச் சொல்லாலும் செயலாலும் சான்று பகர்வோராய் இருக்க வேண்டும்' என்பதைச் சகோதரி லிண்டா சர்ஸூர் 'இஸ்லாமும் பெண்ணுரிமைகளும்' என்ற ததனது உரையில் அழகாக முன்வைத்துள்ளார்.
இவ்வாறு இந்தப் பத்து உரைகளும் ஒன்றை ஒன்று விஞ்சிய தரத்தில் மிகப் பொருத்தமான தலைப்புகளில் நம் கவனயீர்ப்புக்குரிய காத்திரமான கருத்துக்களைக் கொண்டனவாயும் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவனவாயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உரைகளை நிகழ்த்தியவர்கள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களையும் அநியாயங்களையும் எட்ட நின்று பார்த்துக் கருத்துக் கூறியவர்கள் அல்லர். அவற்றைக் கண்டும் எதிர் கொண்டும் மனம் தளராது, முடங்கி விடாது பொறுமையுடனும் உறுதியுடனும் தலை நிமிர்ந்து நிற்கும் மக்களோடு இரண்டறக் கலந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளே அவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு அஞ்சித் துவண்டு போகாது, முடங்கி விடாது அவற்றைத் தட்டிக் கேட்டு, அவற்றுக்கெதிராகக் குரல் கொடுப்பதோடு, அவற்றைக் களையவும் முயற்சி செய்வது நமது கடமை என்ற செய்தியையும் இவ்வுரை களுக்கு ஊடாக அவர்கள் நமக்குத் தந்துள்ளனர்.

இவ்வுரைகளைத் தேடிப் பெற்று, செவிமடுத்து, அவற்றின் கவர்ச்சியும் கருத்தாழமும் குன்றாமல் மொழி மாற்றம் செய்து தந்திருப்பவர், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறந்த படைப்பாளர், பல்துறை ஆளுமை கொண்டவர், இலக்கியத்துக்கான இலங்கை அரசின் உயர் விருதான சாஹித்திய விருதுகளைப் பெற்றவர், நாடறிந்த எழுத்தாளர்; எனப் பல சிறப்புகளுக்குமுரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். நிச்சயமாக அவர் முஸ்லிம் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.

நாட்டிலுள்ள பல பெண்கள் அறபுக் கல்லூரிகளில் மார்க்கம் கற்றுத் தேர்ந்த ஆலிமாக்கள் மட்டுமன்றி பொதுக் கல்வியிலும் உயர் நிலையடைந்த பல நூறு பேர் இருந்தும் அவர்களைச் சமூக வெளிகளில் காணக் கிடைப்பதில்லை என்ற சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே. இஸ்லாமியத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களின் பொறுப்பை உணர்த்திக் களத்தில் இறங்கிப் பணி செய்யத் தூண்டுவதும்கூட இவரது இப்படைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இம்மாபெரும் பணியை முன்னெடுக்க அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்! தமக்கு இறைவன் அளித்த ஆற்றல்கள் திறமைகள் என்பவற்றை அமானிதமாகக் கருதி, அவற்றைப் பயன்படுத்தி உறுதியான இறை விசுவாசத்துடன் இஸ்லாமிய சமூகத்துக்கு வழிகாட்;டுவதற்காக இவ்வுரைகளை நிகழ்த்திய அந்தச் சகோதரிகளையும் அவர்களைப் போல் களத்தில் பணியாற்றுகின்ற அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

இவ்வுரைகளை அவற்றின் தரமும் கருத்தாழமும் மாறாமல் அழகு தமிழில் மொழிமாற்றம் செய்து எமக்களித்திருக்கும் மதிப்புக்குரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இப்பணியை அங்கீகரித்து நற்கூலி வழங்குவானாக!

'தூண்டல் இன்றித் துலங்கள் இல்லை' அல்லவா? இவ்வுரை கள் வாசிப்போரை இஸ்லாமிய அறிவைப் பெற்று, அதனைச் செயற் படுத்தி, பிறரையும் வழிப்படுத்தத் தூண்டும் தூண்டுகோலாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். 

இஸ்லாத்தின் உயர் போதனை களை வாழ்வியலாகக் கொள்ளும் போது உள்ளங்கள் அமைதி பெறும். உலகமும் அமைதிப் பூங்காவாக மாறும். நம்மனைவரதும் அவாவும் பிரார்த்தனையும் அதுவேயல்லவா?

அல்லாஹ் நம்மனைவரதும் முயற்சிகiயும் அங்கீகரித்து நேர் வழியில் வாழ வைத்து, அவனது அருளுக்குச் சொந்தக் காரர்களாக ஆக்குவானாக. ஆமீன்!

'இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக. (01 - 05 - 06)




 

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: