Monday, August 29, 2011

நாளாம் நாளாம் பெருநாளாம்!


நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து அன்ப, அன்பிகளுக்கும் - நண்ப, நண்பிகளுக்கும் அவர்களது தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்!


எங்கும் நிறைந்தவனே... எல்லாம் ஆனவனே...

நோன்புப் பெருநாள் தினத்தில் மட்டுமாவது கிறீஸ் மேன் வராதிருக்க அருள் புரிவாயாக!

அப்படி வந்தாலும் அவனால் ஆபத்து ஏற்படாதிருக்கவும் அந்த இடத்துக்கு வரும் பொலீஸாருக்கும் ஆயுதப்படையினருக்கும் யாரும் கல் வீசாதிருக்கவும் அவர்களது வண்டிகளுக்குத் தீ வைக்காதிருக்கவும் அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தாதிருக்கவும் அருள்வாயாக!

எனது முகப்புத்தகப் பக்கத்தில் செப்பமற்ற ஒரு பெருநாள் கவிதையை யாரும் பதிவிடச் செய்யாதிருப்பாயாக.

எழுத்தினால் வரும் வாழ்த்துக்களைக் கொண்டும் பாராட்டுக்களைக் கொண்டும் என் நினைப்பை உயர்த்தி விடாதிருப்பாயாக.

Sunday, August 28, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 1

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 1


தமிழ்நாடு, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பதினைந்தாவது இலக்கியப் பெருவிழா புகழ் மிக்க காயல்பட்டினத்தில் 2011 ஜூலை 8,9,10ம் திகதிகளில் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.


காயல்பட்டின இலக்கிய மாநாடு என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் இலக்கியப் பெருவிழா என்று குறிப்பிட்டதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இது ஒரு பிரச்சினைக்குரியதோ விவாதத்துக்குரிய தோவான விடயம் அல்ல. ஆனால் நடைபெற்றிருக்கின்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள், பெருவிழாக்கள் பற்றிய எனது அறிவுக்கெட்டிய வரையான சிறியதொரு தெளிவைத் தரவேண்டியது அவசியமாகியி ருக்கிறது.

மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மூன்றாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்று அவ் வேளை சில இணையத்தளங்கள் குறிப்பிட்டிருந்தன. புதிதாக ஊடகத் துறைக்குள் நுழையும் சில சகோதரர்கள் இம்மாநாடுகள், விழாக்கள் பற்றிய எந்த விதமான புரிதல்களோ விளக்கங்களோ இன்றித் தன்பாட்டுக்கு எழுதி விட்டுப் போவதை அவதானித்து வருகிறேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாயான இடமாக மருதமுனை கருதப்படுகிறது. இதன் காரணகர்த்தாவாகத் திகழ்பவர் எஸ்ஏ.ஆர்.எம். செய்யிது ஹஸன் மௌலானா அவர்களாவர். 1966ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பிறை 12ல் மருதமுனை அல் மனார் மகாவித்தியால யத்தில் இந்த விழா நடைபெற்றது. சின்ன ஆலிம் அப்பா மற்றும் உமறுப் புலவர் ஆகியோரின் பெயர்களில் நடைபெற்ற அரங்குகளில் 17 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகள் யாவும் தொகுக்கப் பட்டு ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்’ எனும் தலைப்பில் அரசு பதிப்பக (அரசாங்கம் அல்ல) வெளியீடாக அதே ஆண்டில் வெளி வந்தது. இந்த விழாவில் அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களும் ஓர் அரங்குக்குத் தலைமை வகித்துள்ளார்கள்.

கிண்ணியாவின் முன்னாள் முதல்வர் மர்ஹ_ம் அப்துல் மஜீத அவர்களும் கிண்ணியாவில் ஒரு இலக்கிய விழாவை நடத்தியுள்ளார்கள். இதன் காலப் பிரிவு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக எனக்கு அறியக் கிடைக்கவில்லை. இது பற்றிய முழுமையான தகவல்கள் அறிந்தவர்கள் இவ்விழா பற்றி ஒரு கட்டுரை யை எழுதலாம்.

சென்னையில் உருவான இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏழு மாநாடு களைப் பெரிய அளவில் நடத்தியுள்ளது. பெரும்புலவர் சீனி நைனார், நீதிபதி மு.மு.இஸ்மாயில், செய்யிது முகம்மது ‘ஹஸன்’ போன்ற மேதைகளால் வழிநடத்தப்பட்ட இந்த இலக்கியக் கழகம் 2007ம் ஆண்டு தனது ஏழாவது மாநாட்டுடன் அரசியல் மயப்பட்டு இரண்டாகப் பிளவு பட்டது.

Friday, August 26, 2011

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!



இவர் சிரிய தேசத்தைச் சேர்ந்த பாடகர். பெயர் இப்றாஹிம் காஷ_ஷ்.

சிரியாவின் ஹமா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பொது நிகழ்வுகள், திருமண வைபவங்களில் பாடுகின்ற மரபு ரீதியான பாடகர்.

சிரியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியில் இவரும் ஒரு பிரபல நட்சத்திரம். மிக எளிமையான வசனங்களைக் கொண்டு அவரே எழுதிப்பாடும் அவரது பாடலின் ஒவ்வொரு வசனத்தையும் அவர் பாட அந்த வசனங்களை மீளப் பாடுகின்றனர் லட்சக் கணக்காகத் திரண்டிருக்கும் மக்கள்.

அந்தப் பாடல் சிரியாவின் தலைவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.

அடக்கு முறைக்கும் அசுரத்தாக்குதலுக்கும் அரச படையினரது துப்பாக்கிக் குண்டுகளுக்கும் எதிராக வலிமை மிக்க ஆயுதமாக அவர் பயன்படுத்தியது அவரது குரலை மாத்திரமே!

ஹமா நகர மத்தியில் அவர் கடைசியாகப் பாடியது இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று அரச எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்திய போது அவர் பாடினார்.

“பஷர் நீர் வெளியேற வேண்டிய தருணம் இது...

பஷர், மாஹிரி. ரமி... ஆகியோர் கொள்ளையர்கள்...

அவர்கள் எனது உறவினர்களைக் கொள்ளை கொண்டவர்கள்...

பஷர்... உம் குற்றங்கள் மன்னிப்புக்குரியலையல்ல...

பஷர்... நீர் அமெரிக்காவின் கையாள்... நீர் ஒரு பொய்யன்...

பஷர்... நீ ஒரு தேசத் துரோகி...


அவமானப்படுவதை விட இறப்பது மேல்...

சுதந்திரம் வாசலில் வந்து காத்து நிற்கிறது...

மக்கள் உமது ராஜாங்கத்தை வீழ்த்தத் துடிக்கிறார்கள்...

பஷர்... நீர் வெளியேற வேண்டிய தருணம் இது....!”


இப்றாஹிம் காஷ_ஷ் இன்று உயிருடன் இல்லை.

Thursday, August 25, 2011

கிறீஸ் மேன் - 2



அத்துசலாம் என்றழைக்கப்படுகின்ற அப்துல் சலாம் காரியாலயக் கடமை முடிந்து வீட்டுக்கு வந்த போது வழமை போல மாலை 6.45 ஆகி விட்டது.


மரக்கறியும் சில அடுக்களைப் பொருட்களும் வாங்க வேண்டியிருப்பதால் கொஞ்சம் நேரகாலத்தோடு வீட்டுக்கு வரச் சொல்லி கைத்தொலை பேசியில் தொடர்பு கொண்டு அத்துசலாமின் மனைவி மதிய நேரம் சொல்லியிருந்தாள்.

 ‘வருகிறேன்’ என்று பதில் சொல்லியிருந்த போதும் அது சாத்தியப்படாது என்பது அவனுக்குத் தெரியும்.

தேசிய ரீதியாகக் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு ஊழியனாக அவன் கடமை புரிந்து வந்தான். அவனது கடமை நேரம் மாலை 6.00 மணிக்கு முடிவடையும். அடுத்த பாதுகாப்பு ஊழியன் வந்த பிறகே அவனால் வெளியாக முடியும்.

வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமாக மனைவியைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சந்தைக் கடைப் பகுதிக்கு விரைந்தான். வரும் வழியில் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தீர்ந்து போனது. ரிசர்வ் டேங்கைத் திறந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அவன் சந்தைக் கடையருகில் மனைவியை இறக்கி விட்டான்.

பொருட்களை வாங்குவதற்கு மனைவியிடம் பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்குமாறு சொல்லி விட்டுப் விட்டுப் பெற்றோல் நிரப்பிக் கொண்டு வருவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கிப் பறந்தான்.

Tuesday, August 23, 2011

சப்பாத்துப் பாடல்










சப்பாத்துப் பாடல்


காலில் போடும் சப்பாத்து - தனித்

தோலில் ஆன சப்பாத்து


பயணத்துக் குதவும் சப்பாத்து- நம்

பாதம் காக்கும் சப்பாத்து


வகை வகையான சப்பாத்து - பல

வழிகள் அறியும் சப்பாத்து


தேர்ந்தே எடுக்கும் சப்பாத்து - சிலர்

திருடிப் பிழைக்கும் சப்பாத்து


காலைக் கடிக்கும் சப்பாத்து - சிலர்

கழற்றி அடிக்கும் சப்பாத்து


பழுதாய்ப் போகும் சப்பாத்து - சிலர்

கழுவிக் குடிக்கும் சப்பாத்து!
 
(என்னைத் தீயில் எறிந்தவள் கவிதைத் தொகுதியிலிருந்து)

Sunday, August 21, 2011

அமரர் கா.சிவத்தம்பி இரங்கல் கூட்டம்


சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம் நேற்று 20.08.2011 பி.ப. 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டப்த்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வுகள் காட்சிகளாக....

உரைநிகழ்த்தியோரில் ஒரு பகுதியினர்



உரைநிகழ்த்தியோரில் மறு பகுதியினர்



தலைமை வகித்த திருமதி பத்மா சோமகாந்தன் மற்றும் டொமினிக் ஜீவா

Friday, August 19, 2011

கொகோ ட்ரைஃபி ரைஸ் - அதியற்புத உணவு!



சுட்ட கருவாட்டுடன் தேங்காய்ப் பூச்சோறு சாப்பிட்டிருக்கிறீர்களா?

நண்பர் திடீர் எனக் கேட்டார். பலரையும் போலவே கொஞ்சம் சுவையாகச் சாப்பிடும் விருப்பம் உள்ளவர்கள் நாங்கள்.

அவர் சொல்லும் சாப்பாடு என்னவென்று விளக்கமளிக்கத் தொடங்கிய போது - பழைய கதைகளில் வருவது போலச் சொல்ல வேண்டுமானால் - நாக்கில் ஜலம் ஊறியது.

“நாளைக் காலை தயாராக இருங்கள். காலையுணவு எங்கள் வீட்டில்.”

நண்பர் இதைச் சொல்லிவிட்டுப் பிரிந்த போது இரவு எட்டு மணியளவில் இருக்கும்.

தனது மனைவியை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். நாங்கள் உணவு முறையில் பொதுப் பார்வையில் கொஞ்சம் கிறுக்குத் தனமானவர்கள் என்பதை அவரது மனைவியும் தெரிந்துதான் இருந்தார். ஆனால் மற்றொரு நபருக்கு சாதாரண உணவுகளை வழங்க நமது பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை.

வீட்டுக்கு வேறொருவர் சாப்பிட வருகிறார் என்றால் அது ஒரு விருந்து. எனவே அதற்குரிய வகையில் சிறந்த முறையில் உணவு வழங்கவில்லையென்றால் சம்;மதம் கொள்ள மாட்டார்கள். அப்படியேதான் குறித்த உணவைத் தயார் படுத்தினாலும் கூட இன்னும் சில விசேட உணவு வகைகளையும் தயாரித்து வைத்து விடுவார்கள்.

காலை எட்டரைக்கு வந்து வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நான் நினைத்தது போல்தான் நடந்திருந்தது.

குறிப்பிட்ட உணவுக்கு அப்பால் முட்டைப் பொரியல், மீன் கறியென்று வேறு சில ஐட்டங்களும் இருந்தன.

சுடச் சுட இருந்த சோற்றில் தேங்காய்ப் பூவைப் போட்டுப் பிதறி சுட்ட கருவாட்டுடன் வெட்டியெறிய ஆரம்பித்தோம்.

Thursday, August 18, 2011

கண்ணீராகும் தண்ணீர்!


ஒரு நல்ல கவிதையைப் படிக்கும் அனுபவம் பரவசமிக்கது.

பல நூறு கவிதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுள் கவிதையைப் போன்றவை, பரவாயில்லை ரகம், நல்லாயிருக்கு ரகம், அருமையாயிருக்கிறது ரகம், சிறப்பான கவிதையென்று பல வகைகள் உள்ளன.

படித்து முடித்த பிறகும் நம்முடன் கூடவே நடந்து வருவதும் நம்மை விட்டு அகன்று போகாமல் அடம் பிடிப்பதும், நம் சிந்தையிலே சுழன்று கொண்டிருப்பதும் நல்ல கவிதைக்கான பண்புகள்.

இன்றைய தமிழ்ச் சூழலில் புரணமானதும், ரசனை மிக்கதும், நம்மைப் பாடாய்ப்படுத்துவதுமான கவிதைகளைக் காணக்கிடைக்கவில்லை.

கவிதையொன்றைப் படிக்க வேண்டுமே என்ற ஆவல் மேவ ஒரு கவிதைப் புத்தகத்தைத் திறந்தேன். ஒன்று கிடைத்தது. இந்தக் கவிதை எனக்குப் பிடித்து.

கவிஞர் க.து.மு. இக்பால் அவர்களின் கவிதை இது. 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவியரங்கில் என்னுடன் அவரும் கவிதை படித்தார். கவியரங்கு முடிந்ததும் அன்பொழுக என்னை இறுகக் கட்டித் தழுவினார். அவருடன் நின்று ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளக் கிடைக்கவில்லை என்பது எனககுக் கவலை.

கடையநல்லூர் பெற்றெடுத்த மற்றொரு கவிஞர். இதய மலர்கள், அன்னை, முகவரிகள், வைரக் கற்கள், கனவுகள் வேண்டும் - ஆகியன இவரது கவிதை நூல்கள் என்ற குறிப்புக் கிடைத்துள்ளது. ஆசியான் விருது, தமிழவேள் விருது ஆகியன இவருக்குக் கொடுக்கப்பட்டதன் மூலம் அவ்விருதுகள் பெருமையடைந்துள்ளன.

தண்ணீர் என்ற ஒரே ஒரு விடயத்தை வைத்து கவிஞரின் கற்பனை எவ்வளவு அழகாக விரிகிறது என்பது கவனித்தக்கது. அநாவசிய சொற்களோ வார்த்தைப் பிரயோகமோ கவிதையில் கிடையாது. எந்தளவு சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியுமோ அந்தளவுடன் கவிஞர் நிறுத்திக் கொண்டுள்ளார் என்பதை இப்போது கவிதைகளுடன் மாரடித்துக் கொண்டிருக்கும் இளவல்கள் கவனிக்க வேண்டும்.

ஜெர்மனியின் ஹனோவர் நகரில் 1.6.2000 முதல் 31.10.2000 வரை நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சியில் வைப்பதற்காக ஜெர்மனிய அரசின் கீழ் இயங்கும் குதே இன்ஸ்டிடியுட் இந்தக் கவிதையைத் தெரிவு செய்திருக்கிறது.  “மனித குலம் - இயற்கை - தொழில்நுட்பம்” என்ற தொனிப் பொருளில் நடந்த அக்கண்காட்சியில் 200 நாடுகளிலிருந்து நான்கு கோடிப் பேரளவில் கலந்து கொண்டார்களாம்.

Tuesday, August 16, 2011

பாதி உலகில் மோதும் கருணை


அது ஒரு விளையாட்டரங்கம்.

ஒரு விளையாட்டு விழா அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லா முகங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.


சிறுமிகள் எட்டுப் பேர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளத் தயாராக நின்றிருந்தார்கள்.


 
“ஆரம்பம்!”



“ஆயத்தம்!”



“போ!” என்ற கட்டளைக்குரிய சத்த வெடில் கேட்டது.


 
சிறுமிகள் ஓடத் தொடங்கினார்கள்.

 பத்து அல்லது பன்னிரண்டு எட்டுக்களை அவர்கள் தாண்டிய வேளை அவர்களில் சிறியவளான ஒருத்தி தடுக்கிக் கீழே விழுந்தாள். கால் உராய்வில் ஏற்பட்ட வலியில் சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.

ஓடிக் கொண்டிருந்த சிறுமிகளின் காதுகளில் அழுகைச் சத்தம் கேட்டதும் அவர்கள் ஓட்டத்தை நிறுத்தினார்கள். அப்படியே அதே இடத்தில் ஒரு கணம் தரித்து விட்டு விழுந்து கிடக்கும் சிறுமியை நோக்கி ஓடி வந்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்


ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

(இந்தக் கட்டுரை மே மாதம் சகோதரர் முகம்மது அலி அவர்களால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தனிப்பட்ட ஒரு பயணத்தை அவர் மேற் கொண்டிருந்ததாகச் சொன்ன போதும் அங்குள்ள முஸ்லிம்கள் பற்றிய ஒரு தேடலை அவர் மேற் கொண்டது பாராட்டத் தக்கது.  இந்தக் கட்டுரை நமது வாசகர்களில் யாருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் திருத்தங்கள் ஏதுமிருப்பின் உரியவர்கள் ஆதாரங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.)

ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாசாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க பாசக் கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து மே முதல் வாரம் வரை மேற்கொண்ட பயணத்தில் தெரிய வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன.


30 சதவீத முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியாவில் இஸ்லாத்தினை தழுவியவர்கள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தென் கிழக்கு ஆசியாவிருந்தும் குடி பெயர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் ஆங்கில மொழியினையும், மற்றவர் துருக்கி மற்றும் அரேபிய மொழிகளை பேசுகின்றனர். ஆஸ்திரேலிய மொத்த ஜனத் தொகை 2.2 கோடியில் இஸ்லாமியர் இரண்டு சதவீதத்தில் உள்ளனர். அதாவது கிட்டத் தட்ட 2,50,000 மக்கள் ஆவர். அதில் பெரும்பாலோர் சிட்னியிலுள்ள அபர்ன், கீரீனேக், பேங்க்ஸ்டன், லக்கம்பி, பஞ்சபவுள், மெல்போனிலுள்ள மீடோ ஹெட்ஸ், ரிசர்வான், டல்லாஸ், நோபள் பார்க்,கோபர்க், டாஸ்மானியா, அடிலேடு, கியூன்ஸ்லேண்டு ஆகிய பகுதியில் வசிக்கின்றனர்.

பெரும்பாலோனோர்; பல்வேறு வேலைகளில் உள்ளனர். 27 சதவீதம் மேனேஜர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழிழ் நட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். அதில் ஆங்கிலம் தெரியாத முஸ்லிம்கள் தான் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.

இந்திய நாடு, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் தொழிழ் நட்பவாதிகளாக இருப்பதால் மற்ற தேசிய முஸ்லிம்களை விட வேiலை வாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் சுன்னி மதகினைச் சார்ந்தவர்களாகவும் மிக குறைந்த அளவே ஷியா இனத்தவர் உள்ளனர்.

காலூன்றிய வரலாறு: இந்தோனேசியாவினைச் சார்ந்த மெக்காசான்ஸ் என்ற மீனவர்கள் வட ஆஸ்திரேலியா கடற்பகுதிகளில் கிடைக்கும் டிரப்பாங்க் என்ற வகை மீன்களைப் பிடிக்க 1750 ஆம் வருடங்களில் காலடி வைத்தனர். அவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருடன் சுகுமமான உறவு கொண்டனர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் வருகையால் இந்தோனேஷியா மீனவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் தான் முதன் முதலில் குடி பெயர்ந்து அவர்களைத் தொடர்ந்து லெபனான், துருக்கி, போஸ்னியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தனர்.

Monday, August 15, 2011

கிறீஸ் மேன்


இரவு 11.30 ஐத் தாண்டியதும் மூடிவிட்டு உறங்கப் போகலாம் என்று எண்ணிய போது சட்டென்று,


“இன்னும் தூங்கவில்லையா?” என்ற செய்தி அவளிடமிருந்து வந்தது.

எனது வாசகிகளில் ஒருத்தி. முகப் புத்தகம் ஏற்படுத்தித் தந்த நட்பு. தெளிவாகப் பேசுவாள். தொடர்பில் வந்தால் ஆகக் குறைந்தது அரை மணிநேரம் இலக்கியம், அரசியல், பொது விவகாரங்கள் என்று இருவரும் பேசுவோம்.

“இன்னும் இல்லை.”

“வீட்டில் எல்லோரும் தூங்கிட்டாங்களா?” - கேட்டாள்.

“ஆம்!”

“ஸ்கைப் வரட்டுமா?”

“சரி.”

ஸ்கைப்பில் வந்தாலும் கூட நாங்கள் பேசிக் கொள்வதில்லை. காரணங்கள் பல. முதலாவது காரணம் என்னிடம் ஹெட் போன் கிடையாது. இருந்த இரண்டு ஹெட்போன்களையும் பிள்ளைகள் பல்வேறு இயந்திர சாதனங்களில் பயன்படுத்தி உடைத்து விட்டார்கள்.

இரண்டாவது காரணம் பெண் குட்டிகளோடு அரட்டை அடிப்பதை மனைவியும் ஆண்களோடு அரட்டையடிப்பதை வாசகிகளின் தாய், தந்தை, அண்ணன், தம்பிமாரும் கண்டால் கதை கந்தலாகி விடும்.

ஸ்லோமோஷனில் அசையும் முகங்களை ஆளுக்காள் அவ்வப்போது பார்த்துக் கொண்டு எழுத்துக்களின் மூலம் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.

“உங்கள் ஊரில் கிறீஸ்மேனைப் பிடித்து விட்டார்களாமே...?”

“அப்படித்தான் தகவல் கிடைத்துள்ளது.”

“ஊரில் பெரிய ஆர்ப்பாட்டம் நடக்குது என்று அறிந்தேன்.”

“ம்...”

“என்ன ம்! விபரம் அறிய வேண்டாமா...?”

“அறிந்த வரை ஒரு புது முகம் ஒரு பெண்ணைத் தாக்கியதாகவும் பொது மக்கள் அவரை மடக்கிப் பிடித்ததாகவும் பொலிஸார் அவரை அழைத்துச் செல்ல முயன்ற போது ஏதோ பிர்ச்சினை ஏற்பட்டுக் கலவரம் ஆரம்பித்ததாகவும் தெரிகிறது.”

“கலவரம் ஏற்படக் காரணம் என்ன?”

Sunday, August 14, 2011

போருக்கெதிராய் ஒரு புயல்!


பிறருக்காக வாழக் கிடைக்கும் வாழ்க்கை ஒரு பெரும் கொடுப்பினையாகும்.


அந்தப் பிறர் அயல் வீட்டாராகவோ அடுத்த ஊராராகவோ, தனது சொந்த நாட்டு மக்களாகவோ இல்லாமல் இன்னொரு தேசத்து மக்களுக்காக தனது சொந்த நாட்டை அதன் வலுமிக்க அரசை எதிர்த்து ஒரு மனிதன் போராடுகிறான் என்றால் அந்த மனிதன் எத்தகைய உன்னதமான மனிதனாக இருக்கக் கூடும்?

அவ்வாறான ஒரு மாமனிதர்தான் பிரிட்டன் பிரஜையான ப்ரையன் ஹோவ்.

ஈராக்கின் மக்களின் மீதும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீதும் திணிக்கப்பட்ட யுத்தத்துக்கு இணங்கி ஒத்துழைத்த தனது நாட்டு அரசை எதிர்த்து அவர் கலகம் செய்தார். அவரிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆத்ம பலம் இருந்தது.


 
ஒற்றை மனிதனாய் ஓய்வில்லாப் போராட்டத்தை முன்னெடுத்த அவரிடம் இருந்ததெல்லாம் உயிர்கள் மீதான அளப்பெரிய அன்பும் நேர்மையும்தான். இதனால்தான் சூரியன் அஸ்தமிக்காத ஆதிபத்தியம் வைத்திருந்த தனது தேசத்தின் அரசை நோக்கி அவரால் விரல் நீட்ட முடிந்தது.

Saturday, August 13, 2011

தன்னைப் பிழிந்த தவம்!


பீர்முகம்மது ஒலியுல்லாஹ்வின் ஒன்பது மெஞ்ஞானப் பாடல்கள் இறுவட்டாக (ஒலித்தகடு) வெளியாகியிருக்கிறது.

பீர் முகம்மது ஒலியுல்லாஹ்வி்ன் தமிழ் இலக்கியப் பங்களிப்பு அளப்பரியது. இன்று இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று முன் வைத்துப் பேசப்படும் பல இலக்கிய நூல்களைப் பாடிய மகத்தான ஞானியாக அவர் விளங்குகிறார்.

“திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை, மகரிபத்து மாலை, ஞானமணிமாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப் புட்டு, ஞானக் குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞ்ஙான சரநூல், ஞான நடனம், ஞான முச்சுடர் காப்புப் பதிகம், ஹக்கு முறாது பதிகம், மயில் வலம்புரிப் பதிகம், றப்பில் ஆலமீன் பதிகம், கஃபத்துல்லாப் பதிகம், கண்மணிப் பதிகம், நினைவுப் பதிகம், இலாஹிப் பதிகம், நாட்டப் பதிகம், பதமருள் பதிகம், குருசீடப் பதிகம், ஓர்மைப் பதிகம், மனப் பதிகம், தறஜாத்துப் பதிகம், ரகுமான் பதிகம், மெய்ஞ்ஙான அமிர்த கலை, ஞர்னவுலக உருளை, ஞான தித்தி, ஞானத் திறவுகோல், ஞானவிகடம், ஞானக் கண், மிகுறாசு வளம், - ஆக பாடல் பதினெண்ணாயிரத்தில் திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை இம்மூன்றிலும் - சேகு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் உரையுடன் பாடப்பட்டது. மற்றவையனைத்தும் அருள் உதிப்பு மேல் பாடப்பட்டது என்று ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகிறது.” - (ந.சை. இஸ்மாயில் அரபி சாய்பு)

மேற்படி குறிப்பு 2007ல் மீள்பதிப்பாக வெளியிடப்பட்ட திருநெறி நீதம் நூலின் முன்னுரையாகக் காணப்படுகிறது.

இப்படிப் பெயர் பெற்ற பீர் முகம்மது ஒலியுள்ளாஹ்வின் பாடல்கைளை சீறாக் கலைஞர் குமரி அபுபக்கர் அவர்கள் பாடியுள்ளார். கவிஞர் தக்கலை ஹலீமா, குமரி அபுபக்கர் ஆகியோரின் இசையமைப்பில் உருவான இந்த இறுவட்டின் இசை ஒருங்கிணைப்பாளர் துளசி வயக்கல் அவர்கள். தக்கலை தாஹிர் அவர்கள் இதைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

Thursday, August 11, 2011

ஒற்றை வரியில் ஒரு விருது!




ஓர் இலக்கியவாதிக்குக் கிடைக்கும் பாராட்டானது அவனை ஆத்ம திருப்திக்குள்ளாக்கும் அதே சமயம் மீண்டும் எழுதத்தூண்டிவிடக் கூடியது.


பாராட்டு என்பது இலக்கியவாதியொருவருக்கு அவ்வளவு இலகுவாகக் கிடைத்து விடுவதில்லை. ஒரு இலக்கியவாதியைப் பாராட்டும் எல்லாப் பாராட்டுக்காரர்களையும் அவன் மனதார ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு பாராட்டு வெளிவரும் போது அதன் பின்னணி, அதன் அரசியல் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தனக்கு ஒரு மேடை கிடைப்பதானால் ஒரு இலக்கியவாதி அல்லது சில இலக்கியவாதிகள் தேவை என்று கருதும் பிரகிருதிகளால் நடத்தப்படும் பாராட்டு, வெறும் நட்புக்காக நடத்தப்படும் பாராட்டு, படைப்பாளியிடம் ஏதோ ஒரு தேவை கருதி நடத்தப்படும் பாராட்டு என்று ஏகப்பட்ட பாராட்டு முறைகள் இப்போது நடைமுறையில் இருக்கின்றன.

பாராட்ட வேண்டிய எழுத்தைப் பாராட்டும் மனோ நிலை சிலரிடம் கிடையாது. எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காகத் தானும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பாராட்டும் முறையும் உண்டு.

இன்னொரு படைப்பாளியின் எழுத்து புகழப்படும் போது நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனைக் குறைத்துப் பேசுபவர்களும் உள்ளனர்.

நேர்மையான ஒரு விமர்சகர் என்று தான் கருதும் ஒருவர், அறிமுகமற்ற, முகமறியாத ஒருவர் தனது எழுத்தைப் படித்துப் பாராட்டும் போது ஒரு படைப்பாளியின் மனது நிறைவடைகிறது.

அப்படியொரு பாராட்டு எனக்குக் கிடைத்திருக்கிறது.

Wednesday, August 10, 2011

அவர்கள் வருகிறார்கள்!


ஒவ்வொரு ரமளானிலும் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு படை புறப்படுவதை மிக நீண்ட காலமாக நாம் கண்டு வருகிறோம். ஜூம்ஆ தொழுகை நடைபெறும் வேளைகளில் எல்லாப் பள்ளிவாசல் கடவைகளிலும் முன்றலிலும் நின்று கையேந்தும் இந்தப் படை ரமளானில் இரண்டு பங்காக மூன்று பங்காக, நான்கு பங்காக அதிகரிக்கிறது.

இந்தச் சமூகம் இந்தப் படையை வெல்வதற்கு ஒட்டு மொத்தக் கவனத்தை இன்னும் செலுத்தவில்லை. ஆங்காங்கே அவ்வப்போது சிற்சில அமைப்புகளாலும் இயக்கங்களாலும் மேற் கொள்ளப்படும் முயற்சிகள் ஐம்பது வீதமான வெற்றியைக் கூட அடையவில்லை என்பது பெரும் துரதிர்ஷ்டம்.

அதிசிறந்த படிப்பாளிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ள ஒரு சிறுபான்மைச் சமூகத்தில் வாழும் ஒரு சிறு தொகையான இந்தப் படையினரை வெற்றிகொள்ள முடியவில்லை என்பது எத்தகைய துர்ப்பாக்கியம் என்று எண்ணிப் பாருங்கள்.

எழுதுபவர்கள் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். படிப்பவர்களும் படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் படையை எதிர் கெள்வதற்குத் தேசிய ரீதியில் ஒரு எழுச்சியும் முயற்சியும் ஏற்படுத்தப்பட வேண்டாமா?

ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய இந்தக் கவிதை போல் இன்னும் இந்த விடயமாக எழுதப்பட்ட கவிதைகள் அந்தப் படையை வெற்றி கொள்ள முடியாத காரணத்தால் உயிர்ப்போடு இருக்கின்றன.

Tuesday, August 9, 2011

பட்டுக்கோட்டைக்கு வழியைக் கேட்டால்....


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - 13

பட்டுக்கோட்டைக்கு வழியைக் கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு என்கிறது மலேசியாவிலிருந்து வரும் நம்பிக்கை சஞ்சிகை!

மலேசியாவில் இலக்கிய விழாவொன்றை நடத்திவிட்டு சந்தோசத்தின் உச்சத்தில் குப்பப்பிச்சை முகம்மது இக்பாலின் குழுவிலுள்ள மைதீ சுல்தான் என்பவர் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன், கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன் ஆகியோர் விழாவுக்கு அழைக்கப்படக் கூடாதவர்கள் என்று ஒரு பட்டியலை நீட்டியதாக நம்பிக்கை இதழில் எழுதியிருந்தார்.

அச் சஞ்சிகையில் இடம்பெற்ற கட்டுரையை அப்படியே ஸ்கேன் செய்து எனது வலைத் தளத்தில் இட்டிருந்தேன்.  21 ஜூன் 2011 அன்று “நம்பிக்கையும் வம்புக் கையும்” என்ற தலைப்பில் அந்தப் பதிவு இடம் பெற்றிருந்தது. அந்தக் கட்டுரை உண்மைக்குப் புறம்பான விடயங்களைத் தெரிவிக்கிறது என்பதை ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் குப்பப்பிச்சை முகம்மது இக்பாலுக்கும் கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன் கட்டுரை எழுதிய மைதீ.சுல்தான் என்பவருக்கும் எழுதியிருந்த மறுப்பு மின்னஞ்சல்களையும் சேர்த்தே வலைப் பதிவில் இட்டிருந்தேன்.

பின்னால் வந்த இதழொன்றில் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீனுக்கு மட்டும் நம்பிக்கை சஞ்சிகை பதில் தந்திருப்பதாகத் தெரிவித்து அந்தப் பதிலின் ஸ்கேன் பிரதி நண்பர் ஒருவரால் நமக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Monday, August 8, 2011

இருட்டுக்குள் வெளிச்சம்!


சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா

இது ஒருவகை இலக்கியம், இதுதான் இலக்கியம், இதுவும் இலக்கியந்தான், இதுதான் இன்றைக்குத் தேவையான இலக்கியம் என்று பலவகையான வார்த்தைகள் சிலவற்றைப் படிக்கும்போது தோன்றும்.

ஒருகுடம் கண்ணீர் - இதுதான் இன்றைக்குத் தேவையான இலக்கியம் எனும் வகையறாவைச் சார்ந்தது. நாவல்களாய், சிறுகதைகளாய், நவீன கவிதைகளாய் புத்தம் புதிய இலக்கிய நுட்பங்களோடு சமகால இலக்கிய உலகம் பயணிக்கும்போது அஷ்ரப் ஷிஹாப்தீன் போன்ற அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் இது போன்ற குடங்களை ஏந்திவந்து இலக்கிய தானம் தர முன்வந்தமை இளம் பரீட்சார்த்த இலக்கியப் படைப்பாளிகளுக்குச் சொகுசாகக் கிடைத்த அடித்தளமாகவே எனக்குப்படுகிறது. ஏனெனில் இலக்கியம் படைக்கப்படுவதைவிட அது இலக்கியமாக அங்கீகரிக்கப்படுவதில்தான் சவால்கள் காத்திருக்கின்றன.

ஒரு குடம் கண்ணீர் ஒடுக்குமுறையின் அடையாளங்களை திரவ வடிவில் குறியீடாக்கி அடுத்த சந்ததிக்கு சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியினை செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றது. வுhனம்பாடிக் கவிஞர்களை மானுடம் பாடிகளாக மாறிவிடுங்கள் என்று அறம்பாட அறைகூவும் தொனி அஷ்ரப் ஷிஹாப்தீனின் இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் ஒலிப்பதை உணர முடிகிறது.

தமிழில் உரைநடை இலக்கியம் பிரித்தானியர் காலத்திலேயே தோற்றம் பெற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு. பிரித்தானிய காலனித்துவம் உலக ஒழுங்கியலை மாற்ற வழிகோலிய போது தமிழ் இலக்கியம் தன்னை புனர்நிர்மாணம் செய்துகொள்ள முற்பட்டமை சரியானதாகவே தோன்றுகிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்தினால் இலக்கியமாகப் பார்க்க முடியாமல்போன ராமாயணம் வேதாந்த அரசியலாய் பார்க்கப் படுமளவுக்கு இந்த நூற்றாண்டில் இலக்கியம் பற்றிய புரிதல் தர்மத்திற்கு முரணாக நகரும் என்றால் பாமரனையும் சென்றடையக்கூடிய இயல்பான இலக்கிய வடிவமான உரைநடை இலக்கியங்கள் கருக்கொள்ளவேண்டும் என்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும்.

ஒருகுடம் கண்ணீர் அவ்வாறான சிந்தனையின் வெளிப்பாடாக இலக்கிய உலகின் இதயங்களில் கசிவுகளை எற்படுத்தும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

இக்குடத்தின் கண்ணீர்த் துளிகள் பலஸ்தீனின் பாலைவனங்களுடே பயணித்து வந்திருக்கிறது. பொஸ்னியாவின் ரத்தச் சகதிகளுக்குள் ஊடுருவி எம்மை அடைந்திருக்கிறது. ஆபிரிக்காவின் மீது முதலாளித்துவம் சுரண்டிய மேற்றோல்களின் செதில்களுடன் உரையாடி விட்டு வந்திருக்கிறது, காஷ்மீரின் சிவப்பு ரோஜாக்களுக்கு குருதிச் சிவப்பு நிறம் வழங்கிவிட்டு இமயமலையின் அடிவாரத்தில் தவம் செய்து மோட்சம் பெற்று வந்திருக்கிறது ஈராக்கில் அமெரிக்கக் காமுகனால் கருகிப்போன ஒரு மணிப்புறா அபீர் ஹம்ஸாவின் பிஞ்சுத் துளிகளைக் கோர்த்து வந்திருக்கிறது. சங்கைக்குரிய பிக்குவே, மேலிடத்து உத்தரவின் பேரில்தான் உங்களைக் கொடுமைப்படுத்துகிறோம் எனும் கொடுமையாளனின் ஈரநெஞ்சோடு தோழமை கொண்ட பிக்குவின் கண்ணீர்த் துளிகளும் இதில் அடங்கியிருக்கிறது.

 இஸ்லாம் பற்றி அறிய ஆசைப்பட்ட பாவத்திற்காய் பாகிஸ்தானுக்கு சென்றதற்காய் பயங்கரவாதி எனும் பெயர் பெற்ற ஜெர்மனியப் பிரஜை முராத் குர்னாஸின் உறைந்து போன திண்மத் துளிகளும் இதில் அடக்கம் சி.ஐ.ஏ இன் துன்புறுத்தல் மன்னர்களால் சீரழிக்கப்பட்ட லோரன்ஸோ ஸெலாயா எனும் கம்யூனிஸ அமைப்பின் சகோதரி முரில்லோவின் பேச முடியாதவர்களுக்காகப் பேச முனையும் தழுதழுத்த கண்ணீர்த் துளிகளும் இக்குடத்தில் குடிகொள்கிறது.

Saturday, August 6, 2011

கழுதைகள் - விற்பனைக்கு!




கதையின் கதை

இந்தக் கதையைப் படிப்பதற்கு முன் இந்தக் கதையின் கதையை நான் சொல்ல விரும்புகிறேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

28.05.2010 அன்று இந்தக் கதையை நான் மொழிபெயர்த்து முடித்திருந்தேன். நான் மிகவும் ரசித்து ரசித்து மொழிபெயர்த்த கதை இது. கதை கொஞ்சம் பெரியதாக இருந்தமையால் நான் வழமையாக கதைகளை அனுப்பும் சஞ்சிகைகளுக்கு அவற்றின் ஆசிரியர்களைச் சங்கடத்துக்குள்ளாக்க விரும்பவில்லை.

வீரகேசரியில் இதுவரை எனது கதைகள் எவையும் பிரசுரமாகாத படியால் இதனை அதற்கு ஒப்படைத்தேன். ஆனால் ஏழு மாதங்கள் தாண்டியும் கதை பிரசுரமாகவில்லை. விசாரித்ததில் கதை கொஞ்சம் பெரிசாக இருக்கிறது என்று பதில் வந்தது. சங்கடம்தான். ஆகவே தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டேன்.

பிறகு இந்தியாவிலிருந்து வெளியாகும் காலச் சுவடு சஞ்சிகைக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தேன். பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஒரு சிறு தகவல் தரும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால் காலம் கடந்தது. ஐந்து மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கடந்த நிலையில் கடந்த மாதம் வேறு ஒரு துருக்கிக் கதையின் மொழி பெயர்ப்பு காலச் சுவட்டில் வெளிவந்திருந்தது.

நேற்றுக் கால்சுவடு தளத்துக்குச் சென் போது மற்றொரு அதிர்ச்சி. நான் யாருடைய கதையை மொழிபெயர்த்திருந்தேனோ அதே நபருடைய வேறொரு கதையை சகோரர் ரிஷான் ஷரீப் மொழிபெயர்த்திருந்தார். அது ஆகஸ்ட் கால் சுவட்டில் வந்திருந்தது. இரவே ரிஷானை மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட போது தான் அந்தக் கதையை ஜூன் 8ம் திகதி அனுப்பியதாகத் தகவல் தந்திருந்தார். ஆக ரிஷானின் கதை ஒரு மாத இடைவெளிக்குள் பிரசுரமாகியிருக்கிறது.

காலச்சுவடு சஞ்சிகைககு எனது கதை அனுப்பிய மின்னஞ்சல் போய்ச் சேரவில்லையா அல்லது கதை பெரியது என்று தாமதமா என்று என்று ஒரு சந்தேகம் வந்தது

அத்துடன் மாய்ந்து மாய்ந்து நான் மொழிபெயர்த்த இதே கதையை மற்றொருவர் மொழிபெயர்த்து விடக் கூடும் என்று ஒரு பயம் வந்தது எனக்கு.

வழமையாக எனது எழுத்துக்களைப் பத்திரிகை சஞ்சிகைகளுக்கு அனுப்பினால் அவற்றில் வெளிவந்த பிறகே நான் எனது வலைத் தளத்தில் இடுவது வழக்கம். இந்தக் கதைக்கு நடந்த கதியை நினைத்து - நேரடியாக வலைத் தளத்தில் இட்டு விடுவது என்று தீர்மானித்து இன்று இந்தக் கதையைப் பதிவிடுகிறேன்.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தது. எனது அன்புக்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும். படித்து விட்டுக் கையை விசுக்கிக் கொண்டு போகாமல் உங்கள் கருத்தையும் பதிவு செய்து விடுங்கள். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------

கழுதைகள் - விற்பனைக்கு!





மொகமட் நுஸ்ரத் நெஸின் (அஸீஸ் நெஸின்)

பல்வலியினால் அவதிப்படுபவனைப் போல முகத்தில் கையை வைத்துக் கொண்டு தலையை இரு புறமும் அசைத்த படி அவன் வந்தான்.


அவ்வப்போது தனது கரங்களால் கன்னங்களில் அறைந்துகொண்டு ‘நாசமாகப் போக... நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்.. நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்...” என்று சொல்லிக் கொண்டான்.

நன்கு உறுதியான உடலமைப்புக் கொண்டவன் அவன். வீட்டுக் கதவருகில் வந்து எனக்கு முகமன் கூறும் நிமிடம் வரையும் தன்னைத் தானே அடித்துக் கொண்டு ‘நாசமாகப் போக... நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்..’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.

Thursday, August 4, 2011

ஒரு கோப்பைத் தேநீர்


ஜப்பானிய மெஜ்ஜி (1868 - 1912) காலப்பிரிவில் நான்இன் என்ற பேரறிஞர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவரைச் சந்தித்து ஸென் தத்துவம் பற்றி அறிந்து கொள்வதற்காக மிகத் தூரத்திலிருந்து ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வருகை தந்திருந்தார்.


அவரை வரவேற்று அமர வைத்தார் நான்இன்.

பேராசிரியருக்கு முன்னாலிருந்த மேசையில் தேநீர்க் கோப்பையை வைத்து அதில் பேராசிரியர் பருகுவதற்காகத் தேநீரை ஊற்ற ஆரம்பித்தார்.

கோப்பை நிறைந்த போதும் கூட நான்இன் ஊற்றிக் கொண்டேயிருந்தார். மேலதிக தேநீர் கோப்பையிலிருந்து வழிய ஆரம்பித்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் நான்இன்னிடம் சொன்னார்:-

“கோப்பை நிறைந்து விட்டது. இதற்கு மேல் அதற்குள் ஊற்ற முடியாது...”

நான்இன் கேத்தலைக் கீழே வைத்து விட்டுச் சொன்னார்:-

“இந்தக் கோப்பையைப் போல்தான் நீங்களும். உங்களது சிந்தை உங்களது சொந்தக் கருத்துக்களாலும் ஊகங்களாலும் நிறைந்திருக்கிறது. நீங்கள் உங்கள் கோப்பையை வெற்றாக வைத்துக் கொள்ளவில்லையென்றால் ஸென் தத்துவத்தை எப்படி என்னால் விளக்க முடியும்?

Wednesday, August 3, 2011

நான் அவனில்லை!


மேலேயுள்ள படத்தில் உள்ளவர்களைப் பார்த்து யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டால் ‘இது தெரியாதா... நம்ம ஜோர்ஜ் புஷ் அண்ணாச்சி’ என்று எந்த விதத் தயக்கமும் இன்றிச் சொல்லி விடுவீர்கள். ‘அட சின்ன வயசில அழகாத்தான் இருந்திருக்காரு...’ என்று கூடவே ஒரு கொமன்ட்டும் அடிப்பீர்கள்.


ஆனால் இருவரும் ஒருவரல்ல என்பதுதான் உண்மை!

பையன் பெயர் உஸாமா நபில். எந்த நாடு என்று கேட்கிறீர்களா... ஆச்சரியப்படுவீர்கள்... வேறென்ன ஈராக்தான்!

2005ல் எடுத்த படம் அது. அசலாக ஜோர்ஜ் புஷ் போலவே இருக்கிறான். அமெரிக்கப் படையினர்தான் கற்பழிப்பில் ஈடுபட்டார்கள்... பெரியவருமா... என்று உங்களுக்குச் சந்தேகம் வந்தால் அது தப்பு!

உசாமாவின் தந்தை ஒரு சாதாரண மனிதர். ஒரு சில்லறைக் கடைக்குச் சொந்தக்காரர்.

ஜோர்ஜ் புஷ் போலவே இருப்பது உசாமாவுக்குப் பெரும் தலையிடி. அவன் போகுமிடமெல்லாம் இந்தப் பிரச்சினை ஒரு நிழல் போல அவனைச் சித்திரவதை செய்து கொண்டேயிருக்கிறது.

உசாமா நபில் சொல்கிறான்:-

“இது எனது விருப்பம் அல்ல. அல்லாஹ்வின் ஏற்பாடு! இறைவன் ஒரே மாதிரி 40 பேரைப் படைக்கிறானாம். (இது அரபியில் வழங்கப்பட்டு வரும் மொழி). என்றுடைய தந்தையார் இந்த உருவ ஒற்றுமை பற்றி நீ கவலைப்படாதே என்று அடிக்கடி சொல்வார். உண்மையைச் சொல்லப் போனால் ‘ஜோர்ஜ் புஷ்’ என்கிற பெயரை நான் பல காரணங்களுக்காக வெறுக்கிறேன். இந்தப் பெயர் ஓர் அறபுப் பெயரோ இஸ்லாமியப் பெயரோ அல்ல. ஈராக்கில் ஆயிரக் கணக்கான சிறுவர்களைக் கொன்றவன் அவன். இந்தத் தோற்ற ஒற்றுமையை மறைக்க பாடசாலையில் நான் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆனால் சீக்கிரம் அடையாளம் கண்டு கொண்டு ‘புஷ்’ என்று என்னை அழைக்கிறார்கள். இப்படி அழைக்கும் போது எனக்கு திகைப்புத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து அழைக்கப்பட்டால் அப்படியே அப்பெயர் நிலைத்து விடுமோ என்கிற பயம்தான். இதிலிருந்து எப்படி என்னைக் காத்துக் கொள்வது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

Tuesday, August 2, 2011

பாகுபாட்டின் கோர முகம்


கலாநிதி சாலிஹ் ஹஸனைன்

இன, மத, தேச, பிரதேச மற்றும் இன்னோரன்ன காரணிகளைக் கொண்டு மனிதர்கள் பாகுபாட்டுக்குள்ளாவது அல்லது வேறுபடுத்தி நோக்கப்படுவது இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்வது நம்பச் சிரமமாகத்தான் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

உலகம் முழுவதும் ஆங்காங்கே சில மூடர்கள் இனத்தை, மதத்தை, நிறத்தை முன்னிறுத்திப் பாகுபடுத்துவதன் மூலம் சிலர் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வாறான மூடர்கள் அல்லது வெறியர்கள் நாகரிகமடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளில் வாழ்ந்து வருவதுதான் பெரும் வேடிக்கை.

கடந்த வருடம் ரஷ்யாவிலுள்ள சில விளையாட்டுக் கழகங்கள் கமரூன் தேசத்திலிருந்து அதி திறமை வாய்ந்த சில உதைபந்தாட்ட வீரர்களைத் தமது அணிகளில் விளையாட ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் குறிப்பிட்ட வீரர்களுடன் களமிறங்கிய அணியுடன் விளையாடுவதற்கு எதிர் அணி மறுத்து விட்டது. மாத்திரமல்ல விளையாட்டரங்கில் கமரூன் வீரர்களை அவமானப்படுத்திக் கூக்குரலிட்டிருக்கிறார்கள். கமரூன் வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் விமானம் ஒன்றில் நடந்த கதை வித்தியாசமானது!

ஜொஹனார்ஸ்பேர்கிலிருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தென்னாபிரிக்க வெள்ளையினத்தைச் சேர்ந்த நடுவயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார். அவரது பக்கத்து ஆசனத்தில் தென்னாபிரிக்கக் கறுப்பு இன மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. விமானப் பணிப் பெண்ணை அழைத்து முறைப்பட்டார்.