Saturday, December 15, 2012

யாத்ரா - 22



(“யாத்ரா - 22” வது இதழ்  ஜூலை - டிஸம்பர் இதழாக 120 பக்கங்களுடன் )

இம்முறை ஆசிரிய தலையங்கம் இது.

அரச தேசிய சாஹித்திய விருது
--------------------------

இவ்வருட  அரச தேசிய சாஹித்திய விழாவில் பத்துத் தமிழ் நூல்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. வருடாவருடம் தேசிய சாஹித்திய விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் ஏற்படும் அதிருப்தி அலைகள் இம்முறை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

2011ம் ஆண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் சஞ்சிகைகள், இணையம், மேடைகள் ஆகியவற்றில் அவ்வாண்டு விருதுகள் குறித்துச் சர்ச்சைகளும் அதிருப்திகளும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டடிருந்தன.

இந்த நாட்டில் வெளியிடப்படும் நூல்களில் ஏறக்குறைய 50 வீதமானவை முஸ்லிம் படைப்பாளிகளால் எழுதி வெளியிடப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் தேசிய சாஹித்திய விருது வழங்கல்களின் போது இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்களின் நூல்களே விருதுகளுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் எழுதும் முஸ்லிம் படைப்பாளிகள் இந்த நிலை குறித்து மிகவும் மனக்கிலேசம் அடைந்திருந்தார்கள். வாய்திறந்து வெளியே சொன்னால் எப்போதாவது கிடைக்கும் ஒரு வாய்ப்புத் தமக்கு மறுக்கப்படலாம் என்ற பயத்தில் உள்ளக் குமுறலுடன் பலர் மௌனம் காத்து வந்துள்ளனர். இதனால் இவ்விடயம் குறித்து அரச மட்டத்துக்கு எடுத்துச் சொல்வது பற்றியும் முஸ்லிம் படைப்பாளிகளின் நூல்களுக்குத் தனியே விருது வழங்குவது பற்றியும் ஆலோசனைகள் நடந்ததை நாம் அறிவோம்.

சில தனி நிறுவனங்களும் அமைப்புக்களும் தமது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நூல்களுக்கும் தமக்குப் பிடித்த படைப்பாளிகளுக்கும் வருடாவருடம் ஒரு வகைப்படுத்தலை மேற்கொண்டு விருது வழங்குவதில் அக்கறை காட்டுகின்றன. நூல்கள் அனுப்பப் பத்திரிகைகளில் தரப்பட்ட இறுதித் திகதி முடிவதற்கு முன்னரே சில அமைப்புகள் விருதுகளைத் தீர்மானித்துவிட்டு அறிவித்த வேடிக்கைகளையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததுண்டு.

இவ்வாறான வெட்கக் கேடுகளுக்குள் அரச தேசிய சாஹித்திய விருது வழங்கல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்தத் தேசத்தின் பிரஜையான ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் கிடையாது.

இம்முறை இலங்கைப் படைப்பாளிகளுள் ஐந்து தமிழருக்கும் ஐந்து முஸ்லிம்களுக்குமாக மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் முஸ்லிம் படைப்பாளிகளிகளின் நீண்ட நாட் கவலை தீர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகக் கலாசார அமைச்சையும் கலாசாரத் திணைக்களத்தையும் பாராட்டுகிறோம்.

அதேவேளை, அடுத்த வருடம் வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.

(தமிழர்கள் அறுவர், முஸ்லிம்கள் ஐவர் என்பதே சரியானது)

“யாத்ரா -22” வது இதழில் தாழை மதியவன்,கெகிராவ ஸூலைஹா,எம்.எல்.எம். அன்சார், எம்.ரிஷான் ஷரீப், யோகேஷ், கவிஞர் அபி, அமல்ராஜ் பிரான்ஸிஸ், கடையநல்லூர் பி.எம். கமால், கிண்ணியா ஏ.எம்.எம். அலி, கெகிராவ சஹானா, ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.மஞ்சுள வெடிவர்தனவின் சிங்கள மொழிக் கவிதையை லறீனா அப்துல் ஹக் மொழிபெயர்த்துள்ளார்.

ஓட்டமாவடி அறபாத்தின் “செல்லனின் ஆண்மக்கள்”, யோ. கர்ணனின் “அவதூறுகளின் ராஜாக்களிற்கான ஈழு பாடம்”, ஆஷிக் அகமட் மொழிபெயர்த்த “ஒரு ஸலாம் என் வாழ்வை மாற்றியது” ஆகியன அவர்களின் வலைத் தளங்களிலிருந்து அனுமதியுடன் இதழில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போலவே சிவேதிகா என்ற முகமறியாச் சகோதரியின் “சுற்றுலா” முகநூலில் இருந்து அதை இணைத்திருந்த நண்பரின் அனுமதியுடன் பெறப்பட்டது.

“லண்டன் தமிழ் வானொலியும் அறியப்படும் இலக்கிய ஆளுமைகளும்” - அமல்ராஜ் பிரான்ஸிஸ், “வேர் விடும் விதைகள்” - மர்ஸூம் மௌலானா, “கோல்டன் ஸ்லம்பர்ஸ் - திரைப்படத்தினூடாக கம்போடியத் திரைப்படத் துறை” - இப்னு அஸூமத், “சாதிக்கத் துடிக்கும் இளைஞன்” - ஏ.பி. மதன், “காலக் கணிதம்” - ஜின்னாஹ் ஸரிபுத்தீன், “மலாய் மொழிக் கவிதைகள்” - மேமன் கவி --- ஆகியன கட்டுரைகள். அஷ்ரப் சிஹாப்தீனின் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்”- பஸ்லி ஹமீத், அன்புடீனின் “நெருப்பு வாசல்” - சிறுகதைத் தொகுதி பற்றிய சிறு குறிப்பு என்பனவும் அடங்கியுள்ளன.

அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த “எனது கௌரவக் கொலை”, சுதாராஜ் எழுதிய “யுத்தங்கள் செய்வது”, ப.ஆப்தீன் எழுதிய “ஒரு பிடி சோறு” ஆகியன சிறுகதைகள்.

மற்றும் “பொருள்விளங்கா உருண்டையும் பின் நவீனத்துவக் கவிதையும்”,“ஈழத்து முஸ்லிம் படைப்பிலக்கிய மாநாடு”- ஏ.பீர் முகம்மது மற்றும் “யாத்ரா - 21” பற்றி கே.எஸ். சிவகுமாரன் மற்றும் தெளிவத்தை ஜோஸப் ஆகியோர் எழுதிய பத்திரிகைக்குறிப்புகளுடன் அஜமியின் அஞ்சறைப் பெட்டியும் இணைகிறது.

எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் கொழும்புப் புத்தகக் கடைகளில் (பூபாலசிங்கம் - செட்டியார் தெரு மற்றும் வெள்ளவத்தைக் கிளைகள், தெமட்டகொட வீதி இஸ்லாமிக் புக் சென்டர் ஆகிய கடைகள்)

பின் அட்டை விளம்பர அனுசரணை -
நன்றி - மாத்தளை பீர் முகம்மத்

 சல்மான் ட்ரேடிங், 
(பிரபல கவரிங் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்)
229 - 1 -1 -14 சந்தோஷ் பிளாஸா, மெயின் வீதி, கொழும்பு - 11

Friday, December 7, 2012

THAT ONE THING


Sir I'v everything
Deeds dating back to 
76 years
the 25 year - old house
the field in which
only grass grows
the old sofa on which
my gran father sat
table, fan
colour TV, FM radio
electric heater
wooden almyrah
bed, an old mat
worn - out bicycle tyre
pillows stained
with salaiva drip
a clay pot
a disfigured aluminium pan
cover - torn books
blurred birth certificate
I have everything

I know MP
I know his brother
I know the lanes and footpaths
I know the lineage oh my neighbour
I know the school master
I know the native physician
I know the towns an rivers
the jungles and mountains
of this country

"You're talking
too much!
If you have no IC
stand aside
I have to
interrogate you!!

IC - Identity card

Translated by : Mr. S. Pathmanathan (So Pathmanathan)

(“அந்த ஒன்று” என்ற எனது கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு)



Wednesday, December 5, 2012

இலக்கிய ஆய்வகத்தின் ஒன்றுகூடல் - 2


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் இரண்டாவது ஒன்றுகூடல் கடந்த 01.12.2012 - ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.30க்கு வெள்ளவத்தை, 42வது லேன் இலக்கம் 31ல் அமைந்துள்ள பிரின்ஸ் அகடமியில் ஆய்வகத்தின் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.


கௌரவ. பஷீர் சேகுதாவூத் பா.உ.

“போருக்குப் பின்னரான முஸ்லிம் அரசியலில் மாற்றம் அவசியாமா?” எனும் தலைப்பில் கௌரவ. பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் உரை நிகழ்த்தினார். இலங்கைத் தமிழர் அரசியலின் அடியொற்றியே இலங்கை முஸ்லிம்களின் அரசியல்பாதை ஆரம்பமானது என்று குறிப்பிட்ட அவர் இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மையுடன் ஒட்டி உறவாடியே தனது அரசியலை மேற்கொண்டு வந்தது என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களோடு இணைந்து தமது தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டனர், இலங்கைத் தமிழர்களோ அரசுகளை எதிர்த்துத் தமது அரசியலை வடிவமைத்தனர்” என்று வேலுப்பிள்ளை பிரபாகரன் சொன்னதை ஞாபகப்படுத்தினார்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போக்கை சேர் ராஸிக் பரீத் அவர்கள் நிருபர் ஒருவரது கேள்விக்கு அளித்த பதில்மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், “எப்போதும் ஆட்சியாளர்களுடனேயே இருக்கிறீர்களே ஏன்?” என்று நிருபர் கேட்ட வினாவுக்கு சேர். ராஸிக் பரீத் அவர்கள், “நான் ஒரேயிடத்தில்தான் இருக்கிறேன், அரசுகள்தாம் மாற்றமடைகின்றன” என்று சொன்னதைச் சுட்டிக் காட்டினார்.

இலங்கை முஸ்லிம் அரசியல் குறித்து வெளிப்படையாக மனந்திறந்து தமது கருத்துக்களை அவர் தெரிவித்தார்.



அவரது உரையைத் தொடர்ந்து ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் அவர்கள் முஸ்லிம் படைப்பாளிகளின் போர்க்கால இலக்கியம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இலங்கையில் போர் நடந்த காலப்பிரிவில் வெளிவந்த முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மிக ஆழமான ஓர் உரையை அவர் நிகழ்த்தினார்.

குறிப்பிட்ட நபர்களே கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் பேச்சாளர்கள் தவிர்ந்த 40 பேர் நிகழ்வில் கலந்து கொண்டனர்


உரைகள் முடிவடைந்ததும் உரைகளையொட்டிய வினாக்கள் கலந்து கொண்டாரால் எழுப்பப்பட்டுப் பேச்சாளர்களால் பதில்கள் வழங்கப்பட்டன. கேள்வி பதில் கலந்துரையாடல் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு மேல் நடபார்ந்த முறையில் இடம்பெற்றது.

இரண்டு பேச்சாளர்களதும் உரைகள் பார்வையாளர்களால் விதந்துரைக்கப்பட்டமையானது நிகழ்வின் வெற்றியை எடுத்துக் காட்டியது.


மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 7.45 மணியளவில் சங்கத்தின் உப செயலாளர் நியாஸ் ஏ சமத் அவர்களது நன்றியுரையுடன் இனிதே முடிவடைந்தது.

அடுத்த ஒன்றுகூடலை எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

படங்கள் - முஜிபுர்ரஹ்மான்  மற்றும் கே. பொன்னுத்துரை.

மரியம் ஜமீலாவை நினைவுகூர்தலும் காஸாவுக்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலும்



“சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்தலும் - காஸாவுக்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலும்” என்ற தொனிப்பொருளில் “மீள்பார்வை ஊடக மையம்” 22.11.2012 அன்று கொழும்பு, தெமட்டகொட  வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடத்திய கருத்துப் பகிர்வு அரங்கில் நிகழ்த்தப்பட்ட எனது உரை



.

பகுதி - 1





பகுதி - 2




பகுதி - 3



பகுதி - 4

“மீள்பார்வை” பத்திரிகை ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், அஷஷெய்க் றவூப் ஸெய்ன் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.

எனது உரை எனது இதே தளத்தில் எழுத்து வடிவில் “ஜமீலாக்களும் காஸாக்களும்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

எல்லா உரைகளையும் வீடியோ வடிவில் பின்வரும் இணைப்பில் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

http://www.youtube.com/watch?v=rjZjgEl_eMo&feature=share

Saturday, December 1, 2012

சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்

Samuel Shimon



சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்

- சாமுவெல் ஷிமொன் -

டிஸம்பர் 1999ம் ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். ஜேர்மன் எழுத்தாளர் ஹேமன் ஹஸ்ஸே எழுதிய ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலின் புதிய நேர்த்தியான பதிப்பு அங்கு  விற்பனைக்கிடப்பட்டிருந்தது. பிரதியொன்றின் விலை ஒரு பவுண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிறந்த அந்த நாவலின் மூன்று பிரதிகளை நான் வாங்கிக் கொண்டேன்.

விமானத்தில் அதை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்கன் எயார்லைன் வழங்கிய உணவையும் பானத்தையும் அதிகம் உட்கொண்டதால் நித்திரை மயக்கமாக இருந்ததை உணர்ந்தேன். எனவே நாவலை அருகே வைத்துவிட்டு ‘ஐ கொட் மெய்ல்’ என்ற என்ற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அந்தப் படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. டொம் ஹென்க்ஸ் போன்ற அதிசிறந்த நடிகர் சலிப்பு ஏற்படுத்தும் அந்தப் படத்தில் நடித்திருப்பதையிட்டுக் கவலையாக இருந்தது.

எனக்கு அருகேயிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்மணியின் பார்வை ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் பதிவதை அவதானித்த நான் ‘அதைப் படிக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். ஒரு பெரிய புன்னகையை என்னை நோக்கிச் சிந்திய அப்பெண்மணி சொன்னார்:-

“நிச்சயமாக.... ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ போன்ற நாவலை மீண்டும் படிக்கக் கிடைப்பது மகிழ்ச்சிதானே!”

அந்த நாவலின் பிரதியை அவருக்குக் கொடுத்துச் சொன்னேன்:-

“இதை நீங்கள் எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். எனது பிரயாணப் பைக்குள் நான் இன்னும் இரண்டு பிரதிகள் வைத்திருக்கிறேன்.”

“இதே புத்தகமா?”

- அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆம்... இதே புத்தகம்!”

நிவ்யோர்க் வந்தடைந்ததும் யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பலஸ்தீனக் கல்வியியலாளரான எனது நண்பரைச் சந்திப்பதற்காக மத்திய ரயில் நிலையத்திலிருந்து நியூஹெவன் செல்லும் ரயிலைப்பிடித்தேன். அது ஒரு தூரப் பயணமல்ல. எனவே வாசிப்பதற்குப் பதிலாக நிவ்யோர்க்கின் புறகர்ப் பகுதிகளைக் கண்டு ரசிப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ எனக்கு ஞாபகம் வந்தது. எனது பைக்குள் இருந்த இரண்டு பிரதிகளில் ஒன்றை எடுத்து யேல் பல்கலைக்கழகப் பூங்காவில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு பல்கலைக் கழகத்தின் யூதக் கற்கைகளுக்கான பிரிவுக்குள் நுழைந்து அதன் தலைவரைச் சந்தித்தேன். ஒரு நாளைக்கு முன்னர் எனது பலஸ்தீன் நண்பருடன் அவரைச் சந்தித்த போது என்னை மதிய விருந்துக்கு அவர்அழைத்திருந்தார். 

மாணவர் உணவகத்தில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் மேசை நடுவில் கிடந்த ஹேர்மன் ஹெஸ்ஸேயின் நாவலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது ஒரு மிகச் சிறந்த நாவல் என்றும் அதன் எழுத்து நட்பமும் உத்தியும் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் சொன்ன அந்த மாணவன் அந்நாவல் முதலில் 1924ல் வெளியிடப்பட்டதென்றும் 1926ல் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்றும் சொன்னான். அவனது ஆர்வத்தை மெச்சிய நான் அப்பிரதியை அவனுக்குக் கொடுத்துச் சொன்னேன்:-

“நான் வீட்டில் இன்னொரு பிரதி வைத்திருக்கிறேன்.”

என்னிடமிருக்கும் பிரதியை யாருக்கும் கொடுப்பதில்லை என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.

நியு ஹெவனில் எனது கடைசி நாள் இரவு நோர்வேஜியக் கல்வியியலாளர் வீட்டில் கழிந்தது. நான் சென்பிரான்ஸிஸ்கோ செல்வதை அறிந்த அப்பெண்மணி, நிவ்யோர்க்கிலிருந்து ரயில் மூலம் சென்பிரான்ஸிஸகோ செல்வது ஒரு ஆனந்தமான பயணமாக இருக்கும் என்று சொன்னார். மூன்று அல்லது நான்கு நாள் பயணமானது கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரை போவது என்று என்றார்.

“குன்றுகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், நகரங்கள், கிராமங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். எட்டு மாநிலங்களின் நதிகளைக் கடந்து செல்லும் இன்பமான பயணமாக இருக்கும்.”

மகிழ்ச்சி தரும் தூர ரயில் பயணத்தை நினைத்துக் கொண்டு ‘நிவ்யோர்க்கிலிருந்து சென்பிரான்ஸிஸ்கோ செல்ல நான் வைத்திருக்கும் விமானப் பயணச்சீட்டை நான் என்ன செய்வது?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். சில கணங்கள் தயங்கியபின்னர் பென்சில்வேனியா ரயில் நிலைய பாருக்குள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் பாரிலிருந்து வெளியேறிய நான் விமானப் பயணச் சீட்டைக் கிழித்தெறிந்தேன்.

“நான்கு நாட்களில் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ படிப்பதற்குப் போதிய அளவு நேரம் கிடைக்கும்.”

அப்படித்தான் நான் நினைத்தேன்.



ரயிலில் நான் அமர்ந்ததும் எனக்கேற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை விவரிப்பது கடினமானது. கடந்த காலங்களில் ஹொலிவூட் படங்களில் மிக நீளமான புகையிரதங்களைக் கண்டு ரசித்திருக்கிறேன். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து திரைப்படத்தில் பார்ப்பதுபோலவே கண்முன்னால் தெரியும் பென்ஸில்வேனியா புகையிரத நிலையத்தையும் பிரயாணிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு ஓர் இளம் பெண் நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர் ஆசனத்தில் வந்து அமர்ந்தாள். பிறகு லத்தீன் அமெரிக்க முகபாவம் கொண்ட ஒரு பெண் - இளம்பெண்ணின் தாய்- கண்ணீருடன் ஜன்னலூடாக தனது மகளை முத்தமிட்டாள். மகளிடம் அப்பெண் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தாள். அந்த இளம்பெண் விவாகரத்துச் செய்து பிரிந்திருக்கும் தனது தந்தையிடம்  செல்கிறாள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

“கலிபோர்னியாவில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்... நிவ்யோர்க்கில்தான் நான் வளர்ந்தேன்.”

- ஜெனிஃபர் என்னிடம் சொன்னாள்.

“பார்த்து... பார்த்து... கவனமாக...!”

ரயில் நகர ஆரம்பித்ததும் முகத்தை ஜன்னலோடு சேர்த்து வைத்துக்கொண்டிருந்த தனது தாயாரைப் பார்த்துச் சத்தமிட்டு எச்சரித்தாள் அந்த இளம் பெண். பென்ஸில்வேனியா ரயில் நிலையத்திலிருந்து நகர்ந்த புகையிரதம் அமெரிக்காவின் நீளிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இடவசதி மிக்க ஆசனத்தில் அமர்ந்தபடி என்னிடமிருந்த ‘ஸ்டெப்பன்வூல்ஃப்’ இறுதிப் பிரதியை எடுத்து விரித்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். ஆபிரிக்க அமெரிக்க இளைஞனொருவன் திடீரென எமது ரயில் பெட்டிக்குள் நுழைந்தான். இருபது வயது மதிக்கத்தக்க அவன் மிக நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தான். ரயில் பெட்டிக்குள் இருப்போரின் முகங்களைப் பார்த்தவாறே திரும்பத் திரும்ப ரயில் பெட்டிக்குள் நடந்தபடி பொதுவில் சத்தமிட்டுப் பேசிக்கொண்டிருந்தான். அவன் ஒரு எழுத்தாளன் என்றும் நூல்களை வெளியிடுவது சிரமமான விடயம் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னான்:-

“வெளியீட்டாளர்கள் ஒரே மாதிரியான எழுத்தாளர்களின் மோசமான புத்தகங்களையே அச்சிட்டு வெளியிடுகிறார்கள்.”

நடிகர் Sidney Poitier ரின் இளவயதுத் தோற்றத்தை அவனில் நான் கண்டேன். பயணிகள் விரும்பினால் தனது கதைகளில் சில பகுதிகளைப் படித்துக் காட்டுவதாகவும் அவற்றை நாங்கள் மிகவும் விரும்புவோம் என்றும் சொன்ன அவன் அதற்குப் பகரமாக நாங்கள் விரும்பினால் மட்டும் சிகரட் வாங்குவதற்காக - அதிகமாக இல்லை - சில நாணயங்களைத் தந்தாலே போதும் என்றும் சொன்னான்.

தனது கையில் வைத்திருந்த நூலைத் திறந்து படிக்க ஆரம்பித்தான். முதல் வசனத்திலேயே எமது கவனத்தைக் கவர்வதற்காக நாடகப் பாணியில் அந்த வசனத்தைப் படித்துக் காட்டினான். பயணிகள் கண்களை உறுத்துப் பார்த்தபடி உறுதியான குரலில் அவன் அதைப்படித்துக்காட்டியது உண்மையில் நன்றாகத்தான் இருந்தது. அவன் வாசித்துக் காட்டிய வசனங்கள் இவைதாம்:-

“நான் கையில் பிடித்திருந்த குவளையில் வீட்டுச் சொந்தக்காரி  மீண்டுமொருமுறை நிரப்ப விரும்பினாள். நான் எழுந்துகொண்டேன். இன்னும் அருந்துவதற்கு எனக்கு வைன் தேவையில்லை. நட்சத்திரங்களினதும் மொஸார்ட்டினதும் தங்கத் தடயம் பிரகாசித்துக் கொண்டிருக்க அழிவற்ற ஒரு நிலையை நான் உணர்ந்தேன். வெட்கமோ, பயமோ சித்திரவதை அவஸ்தையோ இல்லாமல் ஒரு மணிநேரம் என்னால் மூச்சு விட்டு நிலைக்க முடிந்தது.

குளிர்ந்த தென்றல்காற்று மழையைத் துரத்திக் கொண்டிருக்க யாருமற்ற தெருவில் நான் இறங்கினேன். தெருவிளக்குகளில் விழுந்த மழைத்துளிகள் கண்ணாடித் துண்டுகளைப் போல் சிதறி விழுந்து கொண்டிருந்தன. இனி, இப்போது... எங்கே போவது...?”

ஒரு கணத்தில் இந்த வசனங்கள் எனக்குப் பரிச்சயமற்றவையல்ல என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இதே போன்ற வரிகளைச் சற்று நேரத்துக்கு முன்னர் எங்கேயோ படித்த்தான உணர்வு. எனது ஆசனத்தில் அமைதியாக நான் உட்கார்ந்திருந்தேன். இளைஞன் தொடர்ந்து வாசிப்பதைச் சற்று நிறுத்திவிட்டுத் தனது பெயர் ஹரி ஹொல்லர் என்று சொன்னான். அந்த இளைஞன் வாசித்த வரிகள் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் உள்ளவை என்பது சந்தேகத்துக்கிடமின்றி எனக்குப் புரிந்தது.

Tuesday, November 27, 2012

கடவுளின் விசிறி




ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சியில் இருந்தபோது நடந்த கதை இது!

புஷ்ஷின் மனைவி லோரா மரணமடைந்து மேலுலகம் போனார்.

அங்கு கடவுளின் உதவியாளர் ஒருவர் நின்றிருந்த இடத்தில் மூன்று பெரிய கடிகாரங்கள் இருந்தன.

“இதெல்லாம் என்ன கடிகாரங்கள் மாதிரித் தெரியுது.. இது எதுக்கு?

- லோரா கேட்டார்.

“இவை வாழ்க்கைக் கடிகாரங்கள்... உலகத்தில் வாழுகின்ற எல்லோருக்கும் இங்கே இப்படி ஒரு தனிக் கடிகாரம் இருக்குது... ஒருத்தர் ஒரு பொய் சொன்னால் அதன் கரங்களும் ஒரு முறை அசையும்!”

“ஓஹ் அப்படியா.. இது யாருடைய கடிகாரம்?”

லோரா ஒன்றை நோக்கிக் கை நீட்டிக் கேட்டார்.

“அதுவா.. அது மதர் தெரஸாவுடையது. அது இதுவரை நகரவேயில்லை. அதன் அர்த்தம் என்னவென்றால் அவர் ஒரு போதும் பொய் சொல்லவேயில்லை!”

“அப்படியென்றால் அது யாருடையது...?”

அடுத்த கடிகாரத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

“அது அபிரஹாம் லிங்கனுடையது... இரண்டேயிரண்டு முறைதான் அசைந்தது. அதாவது வாழ் நாள் முழு்க்க லிங்கன் இரண்டேயிரண்டு பொய்களை மட்டும்தான் சொல்லியிருக்கிறார்.”

“அப்போ ஜோர்ஜின் (தனது கணவரின்) கடிகாரம் எங்கேயிருக்கு?”

லோராவின் முகத்தை அமைதியாகப் பார்த்து விட்டு உதவியாளர் சொன்னார்-

“அதுவா.. அது கடவுளின் அறைக்குள் இருக்கிறது?”

“ஏன் அப்படி? அதில் என்ன விசேஷம்?”

“கடவுள் அதைத்தானே தனது சீலிங் ஃபேனாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்.”


Friday, November 23, 2012

ஜமீலாக்களும் காஸாக்களும்!



சகோதரி மரியம் ஜமீலாவை நினைவு கூர்தலும் காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலுக்குமான இந்த ஒன்று கூடலில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி ஒரு சிற்றுரை வழங்க அழைத்தழைக்காக மீள்பார்வை ஊடக மையத்துக்கு எனது அன்பு கனிந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நட்புப் பட்டியலில் உள்ள ஒரு சகோதரர் முகநூலில் ஒக்டோபர் 31ம் திகதி பின்னிரவில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்களின் வபாத் செய்தியை ‘மர்யம் ஜமீலா காலமானதாக அறியக்கிடைக்கிறது’ என்கிற விதத்தில் ஆங்கிலத்தில் இரண்டு வரிகளில் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி உண்மையில் என்னுடைய உறவின் இழப்புச் செய்தியை எதிர்கொண்டதுபோல் ஓர் உணர்வை என்னில் ஏற்படுத்திற்று. என்னுள் பழைய நினைவுகள் சுழல ஆரம்பித்தன. முகநூலின் எனது பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் இணைத்து அவருடைய வபாத் செய்தியையும் அவரைப் பற்றிய சிறிய குறிப்பொன்றையும் இட்டேன். பிறகு அச்செய்தி பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

என்னுடைய 16 அல்லது 17 வயதில்தான் நான் சகோதரி மர்யம் ஜமீலாவைப் பற்றி அறிய வந்தேன். அந்த அறிமுகம் ‘அல்ஹஸனாத்’ சஞ்சிகை மூலமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன். இன்றைய நவீன வசதிகள் இல்லாத அக்கால கட்டத்தில் ஓர் இளம் யூதப் பெண்மணி இஸ்லாம் நோக்கி அறிவியல் ரீதியாக ஆகர்ஷிக்கப்பட்டு வந்தது போன்ற தகவல்களை என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது ‘அல்ஹஸனாத்’சஞ்சிகைதான். அக்கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய உணர்வையும் அறிவையும் தெளிவையும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய பெரும் பணியை - உன்னதமான பணியை அந்தச் சஞ்சிகை செய்து வந்தது.

தஃலீமுல் குர்ஆன், அல்குர்ஆன், ஹதீஸ், அஹ்காமுஷ்ஷாபிஈ, மௌலூது கிதாபுகள், சாந்திமார்க்கம் என்ற பாட நூல் - ஆகியவற்றுடன் இலங்கை முஸ்லிம் பொதுமகனின் இஸ்லாம் வரையறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தமையானது முஸ்லிம் பொதுஜனத்துக்கு ஓர் ஆனந்தமான செய்தியாக இருந்தது. படித்தவர்கள், இஸ்லாத்தை மேலும் விஸ்தாரமாக அறிந்து கொள்வதற்கு அத்தகவல்  ஆவலைத் தந்தது. சாதாரண இஸ்லாமியன் தனது மார்க்கத்தையிட்டுப் பெருமை கொள்ளவும் மற்றொருவரோடு உரையாடுகையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவுமான விடயமாக அது அமைந்திருந்தது.

தொலைத் தூரத் தொடர்புக்கு மாதக் கணக்கில் காத்திருந்த ஒரு காலப்பகுதியில், இஸ்லாமிய தஃவத்தின் வீச்சு வேகமாகச் சென்றடையாத ஒரு காலப்பகுதியில் இஸ்லாத்தின் மகத்துவத்தை அவர் தேடி அடைந்ததும் அவரது வருகையும் தஃவத்தின் பாதையில் ஒரு பாய்ச்சலாக அமைந்தது என்று குறிப்பிடுவதில் தவறு கிடையாது என்று நம்புகிறேன்.

இன்று உலகம் சுருண்டு கைக்குள் வந்து விட்ட நிலையில் தஃவத்தின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் பலநூறு ஜமீலாக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைத் தேடியடைந்து, சரியான வழி இதுவே என்றுணர்ந்து வருகின்ற ஜமீலாக்களால் இஸ்லாத்தின் சிறப்பு புதிய எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்ற போது பரம்பரை ஜமீலாக்களால் மர்யம் ஜமீலாக்கள் அவமானப் படுத்தப்படுவதை நாம் கவலையுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தன்னைப் பெற்றோர் கற்க விடவில்லை என்பதற்காக, தான் விரும்பியபடி நடக்க சமூகம் அனுமதிக்கவில்லை என்பதற்காக அல்குர்ஆனையும் நபிகளாரையும் கேள்விக்குட்படுத்தும் ஜமீலாக்கள் சிலரை நாம் பார்க்கிறோம். தனது நியாயமான எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புத் தராத தனது குடும்பத்தையும் தனது உறவுகளையும் பழிவாங்குவதானால் இஸ்லாமிய வழிமுறைகளைக் கேவலப்படுத்துவதே சரியானது என்று பெண்களுக்கு இஸ்லாம் வகுத்துள்ள வழிமுறைகளை அலட்சியப்படுத்தும் ஜமீலாக்களையும் நாம் காண்கிறோம்.

இவ்வாறான அனுபவங்களை நாம் எதிர்நோக்கும் போது சகோதரி மர்யம் ஜமீலா முஸ்லிம் உம்மத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் எத்தகையதாக இருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டமையும் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் யாவும் நினைவு வருகிற போதும் அவருக்காக நமது கைகளை உயர்த்தி இறைஞ்சவே மனம் துடிக்கிறது.

சகோதரி மர்யம் ஜமீலா அவர்களது வபாத்தாகி ஒரு வாரத்துக்குப் பிறகு அவரைப் பற்றிய ஒரு சிறிய தகவலை இணையத்தில் ஒரு சகோதரர் பதிவிட்டிருந்தார்.

எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் எந்த நாட்டவராக இருந்தாலும் ஆண்களுக்கென இயல்பான சில குணவியல்புகளும் பெண்களுக்கென சில குணவியல்புகளும் உள்ளன.

பொதுவாக ஓர் ஆணின் மனைவியரிடையே சுமுக உறவு நிலவுவது கிடையாது. இது தமிழில் சக்களத்தி சண்டை என்று பயிலப்பட்டு வருகிறது. பொறாமை, விட்டுக் கொடுக்காமை, நான் முதல் - நீ அடுத்தது என்ற தூரப்படுத்தல், கணவனின் சொத்துக்களையும் வருமானத்தையும் பெறுவதில் ஒவ்வொருவருக்குமிடையில் நிலவும் ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் ஓர் ஆண்மகனின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரிடையே கலகமும் பிரச்சினைகளும் ஏற்படுவதை நாம் கண்டு வந்திருக்கிறோம்.

சகோதரி மர்யம் ஜமீலா முகம்மத் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது தாரமாக வாழ்ந்திருந்தார். ஏற்கனவே திருமணம் செய்திருக்காத, தனக்கேற்ற ஓர் இளைஞனைத் திருமணம் செய்வதை விடவும் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது மனைவியாக வாழ்வது தனக்கும் தனது இஸ்லாமிய வாழ்வியலுக்கும் மிகவும் பொருத்தமானதும் சிறந்ததுமான தெரிவாக இருக்கும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். அப்படியானால் யூஸூப்கான் சாஹிபின் மனைவிக்கும் இவருக்குமிடையிலான உறவு எப்படியிருந்திருக்கும்?

இணையத்தில் சகோதரி மர்யம் ஜமீலாவின் வபாத்துக்குப் பின்னர் வந்த செய்தி அதைத்தான் சொல்கிறது. சுகவீனமுற்றிருந்த போது தனது கடைசி நாட்களில் தான் வபாத் ஆகினால் சகோதரி ஷப்கா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே தன்னை அடக்கம் செய்யுமாறு சகோதரி மர்யம் ஜமீலா சொன்னதாக அந்தச் செய்தி பேசியது. ஷப்கா யாரெனில் யூஸூப்கான் சாஹிபின் முதலாவது மனைவியாவார்.

ஒரே வீட்டின் மாடியில் சகோதரி மர்யம் ஜமீலாவும் பிள்ளைகளும் அவ்வீட்டின் கீழ்த் தளத்தில் சகோதரி ஷப்காவும் பிள்ளைகளுமாக இறுதி வரை மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்ததாகவும் பிள்ளைகளுக்கிடையில் எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஒரே தாயின் பிள்ளைகளைப்போல் வாழ்ந்திருந்ததையும் அந்தத் தகவல் சொன்னது.

தனது கணவரின் முதலாவது மனைவியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே தன்னுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த சகோதரி மர;யம் ஜமீலா எவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

சகோதரி மர்யம் ஜமீலாவின் அழகிய இந்த முன்மாதிரிதான் இன்றைய எனது சிற்றுரையின் முக்கிய புள்ளியாகவும் இருக்கிறது.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியதெல்லாம் சகோதரிகள் மர்யம் ஜமீலாவும் ஷப்காவும் கொண்டிருந்த ஒற்றுமையும் உறவும் பற்றியதே.

சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் அதே வேளை காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டையும் இன்று இந்த நிகழ்வின் மூலம் நாம் வெளிப்படுத்துகின்றோம். இந்த ஒருமைப்பாடானது அமெரிக்காவில் பிறந்து பாக்கிஸ் தானுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஒரு கணவரின் இரண்டு மனைவிகளாக வாழ்ந்த இரு சகோதரிகளுக்குமிடையில் நிலவிய இறுகிய பாசத்துக்கொப்பானதே. அதே பாசத்தைப் போன்ற ஒரு ஒரு சகோதர வாஞ்சையுடனும் உடன்பிறப்பு உணர்வுடனும் நாங்கள் எமது சகோதர பூமியான பலஸ்தீனத்தையும் அங்கு வாழ்வுக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் எங்கள் உறவுகளையும் நினைவு படுத்துகிறோம்.

இந்த நினைவுகூர்தலானது இந்தச் சிறு மண்டபத்துள் நிகழ்ந்த போதும் இது ஆக்கிரமிப்பாளர்களின் அவதானத்துக்குட்படாது என்றோ ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கும் நிகழ்வு என்றோ நாம் கருதிவிடக்கூடாது. இந்த நிகழ்வு இங்கே குழுமியிருக்கும் எங்களது கருத்தை வெளிப்படுத்துகைக்கான ஒற்றுமையைக் குறிக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நலவையும் கஷ்டத்தையும் நாம் ஒன்றிணைந்து உணர்கிறோம் என்பதையும் ஏனையோருக்கும் உணர்த்துகிறோம் என்பதையும் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த நிகழ்வு பற்றிய தகவல் செய்திகளிலும் இணையத்திலும் பகிரப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம் உம்மத் குறித்த ஒருமைப்பாட்டுச் செயல்பாடு ஒன்று நடைபெறுவது முஸ்லிம்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியாக ஏனையோருக்கும் சென்றடைகிறது. இந்த நிகழ்வு முடிந்த பிறகும் செய்திகள் பத்திரிகைகளிலும் இணையத்திலும் வெளிவரும். ஆசிய பசுபிக் பிராந்திய ஸியோனிஸ வலையமைப்பு இந்தத் தகவலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பலஸ்தீனத்திலிருக்கும் காஸா குறித்து நாம் மிகவும் விசனப்படுகிறோம். எழுதுகிறோம், கூடிப் பேசுகிறோம். அவசியப்பட்டால் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகிறோம். காஸாவின் நிலைகுறித்து இன்றைய காலப் பகுதியில் தினமும் ஆகக் குறைந்தது ஒரு முறையாவது அவதானத்தைச் செலுத்தி ஓரளவு தகவல்களைப் பெறுகிறோம். அவலத்தில் வாழும் காஸாவுக்காக நாம் நமது தொழுகைகளில் பிரார்த்திக்கிறோம். தாங்குவதற்குச் சிரமமான செய்திகளை அங்கிருந்து அறியும் போதெல்லாம் நமது மனசு துடிக்கிறது. நம்மையறியாமல் நாம் இறைவனை இறைஞ்சுகிறோம்.

இன்றைய நிலவரத்தின்படி பலஸ்தீன காஸாவில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

ஆனாலும் தமது சொந்த நிலத்தில் வாழும் உரிமைக்கான போராட்டத்தை, இழந்த நிலத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை  அம்மக்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள்.


(மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், சகோ அஷஷெய்க் ரவூப் ஸெய்ன் மற்றும் நான்)

இந்த வேளையில் இன்னும் சில காஸாக்களைப் பற்றி நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

Monday, November 19, 2012

சினிமாப் பயங்கரவாதிகள்



முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் “துப்பாக்கி” என்ற சினிமாப் படம் பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்து விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இணையத் தளங்களிலும் முகநூலிலும் அதன் அதிர்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயிருப்பது அத்திரைப்படம் முஸ்லிம்களை மட்டுமல்லாது நேர் நின்று சிந்திக்கும் முஸ்லிமல்லாத பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள் குட்டுபவனும் முட்டாள் என்பது இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை உண்மையாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை நானும் ஒரு பொதுமகன் என்ற அடிப்படையில் எனது பார்வையில் பட்ட படங்களில் விஜயகாந்த், கமல்ஹாஸன், அர்ஜூன் போன்றவர்களின் திரைப்படங்களில்தான் முஸ்லிம்களை தேசத் துரோகிகளாக, வில்லன்களாகச் சித்தரிப்பது நடந்து வந்திருக்கிறது. (ஹிந்திப் படங்களிலும் இந்நிலை உள்ளதாகச் சொல்லுகிறார்கள். எப்போதாவது நல்ல படங்களை யாராவது சொன்னால் பார்ப்பதுண்டு.)

இவர்களில் விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் தமது கதாநாயக அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கு படத்தில் யாரையாவது அடித்தே ஆக வேண்டியிருக்கிறது.அதைத்தவிர வேறு திறமைகளும் அவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு யாருக்காவது அடிப்பது மாதிரிக் கதை இல்லையென்றால் அவர்களால் ஜொலிக்க முடியாது.எனவே சும்மா ஒருவனை அடிப்பதை விட தேசத்துரோகியை அடிப்பது கவர்ச்சியான இருக்கும். அந்தத் தேசத் துரோகி ஒரு முஸ்லிமாக இருந்தால் இன்னும் சாதகமாக இருக்கும். எனவேதான் தேசத் துரோகிகள் யாவருமே முஸ்லிம்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். காற்றில் கைகால் விசுக்குவதைத் தவிர வேறு எதுவுமே இல்லாத அல்லத எதுவுமே தெரியாத கதாநாயகர்கள் வரிசையில் விஜய் என்ற நபரும் சேர்கிறார்.

பிரிவினைக்குப் பிறகு இந்திய ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட பாக்கிஸ்தான் வெறுப்பு, தன்னோடு சக சகோதரனாக அயல் வீட்டில் வாழும் ஒரு முஸ்லிமையும் எதிரியாகப் பார்க்கப் பழக்கியிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கமும் அரசியலும் பாக்கிஸ்தான் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்திவிட்டு ஒட்டுமொத்த ஏழை இந்தியனின் - முஸ்லிமல்லாதர்களினதும் உட்பட - சோற்றுப்பானையைக் களவாடிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசியலின் இன்னொரு வடிவம்தான் இப்படியான சினிமாக்கள். அரிவாள், துப்பாக்கிகளுடன் தேசத் துரோகியைச் சுட்டும் வெட்டியும் துவம் செய்து விட்டுத் தாங்கள் கல்லாக் கட்டுவது. அதாவது ஆளும் வர்க்கம் எதை வைத்துத் தனது பிழைப்பை நடத்துகிறதோ அதே விசயத்தை மற்றொரு வடிவில் சினிமாக்காரர் செய்து கொண்டிருக்கிறார்கள். சக இனத்தானை அகெரவப்படுத்திக் கேவலப்படுத்தி விட்டு அப்படிக் கிடைக்கும் பணத்தில் ரோல் ரோய்ஸ் மற்றும் பென்ஸ் கார்களில் பவனி வருகிறார்கள். தொலைக் காட்சிகளில் உலகத்திலேயே அற்புதமான படைப்பைத் தந்து விட்டது போல பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கதாநாயகர்களது அடுத்த கட்ட நகர்வு எது? அதே பாதையில் முன்னேறி அரசியலுக்குள் நுழைந்து விடுகிறார்கள். ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் தானைத் தலைவர்களாக பணம், அதிகாரம் ஆகியவற்றுடனும் கைச்சொடுக்கில் எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடிக்கிறார்கள்.

இப்போது யோசித்துப் பாருங்கள். சக அயல் வீட்டு முஸ்லிமை அவமானப்படுத்தி விட்டு இப்படியான ஒரு வாழ்க்கை வாழ்வது கேவலமானது இல்லையா? ஒரு சமூகத்தைக் கூனிக் குறுகச் செய்து, வஞ்சகம் இழைத்துப் பெறும் பணத்தில்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள், இவர்களது குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள், தமது மனைவியருக்கு ஆடைகள், உடுதுணிகள் வாங்கிக் கொடுக்கிறார்கள். தமது சுகபோக வாழ்வை மேற்கொள்கிறார்கள்.

Saturday, November 10, 2012

முடிந்த யுத்தமும் முடியாத கண்ணீரும்!


வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22வது ஆண்டு நிறைவு

“தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி,அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,”



டி.பி.எஸ்.ஜெயராஜ்
ஸ்ரீலங்காவில் தமிழ் - முஸ்லிம் உறவுகளின் சரித்திரத்தில் இடம்பெற்ற கொடிய மனிதாபிமானமற்ற அத்தியாயத்தின் 22வது ஆண்டு நிறைவை வரலாறு கடந்த வாரம் பதிவு செய்தது.ஒக்டோபர் 1990 ல் தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ ), தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி இனசுத்திகரிப்பு செய்த அட்டூழியமான நடவடிக்கை நடந்தேறியது. சில குறிப்பிட்ட நாட்களுக்குள் முஸ்லிம்கள் தாங்கள் பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தங்கள் தாயகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.
1990 ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு மனிதாபிமானமற்ற துயரம்தோய்ந்த பேரழிவாகும். துப்பாக்கி முனையில் ஒரு மக்களை, அவர்களின் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு,அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேரோடு பிடுங்கி எறிந்தசெயல் வெறுக்கத் தக்கதும் மன்னிக்க முடியாததுமாகும். இந்த எழுத்தாளர் தனது முந்தைய எழுத்துக்களில் இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தையும் மற்றும் புலிகளின் சித்தாந்தத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டு அதேவேளை தங்களை மனித உரிமைகளின் காலர்கள் என இப்போது காட்ட முயலும் தமிழ் சமூக அங்கத்தவர்களின் அவமானகரமான செயலைப்பற்றி ஓரளவு  கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒக்ரோபர் 15ல் சாவகச்சேரியில் உள்ளவர்களில் ஆரம்பித்து ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்திலுள்ளவர்களின் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது. வடக்கு பெருநிலப்பரப்பில் முஸ்லிம்களை வெளியேற்றும் நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு ஆரம்பித்து குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களை சுத்தப்படுத்திய சில நாட்களின் பின்னர் நிறைவெய்தியது.
வடக்கு முஸ்லிம்களில் பெருந்தொகையானவர்கள் அப்போது மன்னாரில் வசித்து வந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு புறமே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களும்கூட வெளியேற்றப்பட்டார்கள். வவுனியால் வாழ்ந்த முஸ்லிம்கள் அதிர்ஸ்டசாலிகளாக இருந்தார்கள் ஏனெனில் அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் பெரும்பகுதி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தன. எல்.ரீ.ரீ.ஈ யினரால் வடக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள். குடாநாட்டிலிலுள்ளவர்களையும் சேர்த்து 1990 ல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 75,000 க்கு மேலிருக்கும்.
வடபகுதி முஸ்லிம்கள் அவர்களது சக தமிழர்களுக்குச் சமமான பாதிப்பை அப்போது நடைபெற்ற யுத்தத்தில் அனுபவித்தார்கள். அவர்களும் தமிழ் குடிமக்களைப்போல திவிரமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது காலத்துக்கு காலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியெறவேண்டியிருந்தது. அவர்கள் எப்போதும் சில நாட்கள் கழித்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால் கிழக்கு மாகாண நிலமை வித்தியாசமான ஒரு திருப்பத்தை அடைந்திருந்தது.
தமிழ் - முஸ்லிம் பகை உணர்ச்சி கிழக்கில் அதிகரித்து வந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதை கைவிடவும்,இராணுவத் தளபதி கருணா மற்றும் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் என்பவர்களின் கீழிருந்த வேறு சிலர் எதிரியின் பாசறைக்கு செல்லவும் தொடங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்த மற்றும் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதன் தலைமையினால் கொல்லப்பட்டார்கள். ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு எல்.ரீ.ரீ.ஈக்குள் தலைதூக்கியிருந்தது.
மறுபக்கத்தில் அப்போதிருந்த ஐதேக அரசு மோசமான இந்த உணர்வுகளைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கத் தொடங்கியது. அநேக முஸ்லிம் சமூக விரோத சக்திகளை உள்ளுர் பாதுகாப்பு காவலர்களாக அரசாங்கம் நியமனம் செய்தது. இந்த பிரிவினர் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தமிழ் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டிவிடத் தொடங்கினார்கள். சில சந்தர்ப்பங்களில் சில தமிழர்களின் கொலைக்கு இந்த முஸ்லிம் உள்ளுர் பாதுகாப்பு காவலர்கள் பொறுப்பாக இருந்துள்ளார்கள். இவர்கள் தலைமை தாங்கிய கும்பல்கள் பல தமிழ் குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை அழித்து நாசமாக்கின. பாதுகாப்பு படைகளின் ஒரு பிரிவினரால் அவர்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம் பொதுமக்கள்மீது கொடூரமும் பயங்கரமுமான படுகொலைகளை நடத்தியது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்தி பிராத்தனை செய்து காண்டிருந்த முஸ்லிம்களை கொலை செய்ததும், மற்றும் ஏறாவூரில் உள்ள சதாம் ஹ_சைன் மாதிரிக் கிராமத்தில் பொதுமக்களை படுகொலை செய்ததும் இதற்கான மோசமான உதாரணங்கள்.
தமிழ் - முஸ்லிம் உறவுகள் கிழக்கில் மிகவும் தாழ் நிலையை எட்டியிருந்த போதும்,வடக்கின் நிலைமைகள் அதற்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. அங்கு இரு சமூகத்தினரும் தொடர்ந்தும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதற்கான ஒரு காரணம் ஒரு சிறிய அளவான முஸ்லிம்களால் பெரும்பான்மை தமிழர்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லாததுதான்.
சாவகச்சேரி
கிழக்கில் முறுகல்கள் இடம்பெற்றுவரும் வேளையில் வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதை கிழக்கு புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான தூதுக்குழுவொன்று, முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கு பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக வடக்குக்கு வந்தது. முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று கரிகாலன் வெளிப்படையாகவே வரும்பினார். இந்த வகையான அழுத்தங்கள் புலிகளின் உயர் பீடத்துக்கு வழங்கபட்டுக் கொண்டிருந்தவேளை சாவகச்சேரியில் ஒரு சம்பவம்; நடந்தது.
1990 செப்ரம்பர் 4 ல் எல்.ரீ.ரீ.ஈ யின் உதவியாளர்கள் என்றழைக்கப்படும் ஒரு தமிழ் குழுவினர் சாவகச்சேரி மசூதி அருகில் வைத்து சில முஸ்லிம்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். சிலர் மசூதியை தாக்கவும்கூட முயற்சித்தார்கள். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் அதில் தொடர்புபட்டிருந்த தமிழர்கள் சிலரைப் பிடித்து எல்.ரீ.ரீ.ஈயிடம் ஒப்படைத்தனர். புலிகள் அவர்களை விடுதலை செய்ததுடன் தமிழ் பெரும்பான்மையினரை கோபமூட்ட வேண்டாம் என முஸ்லிம் சிறுபான்மையினரை எச்சரிக்கையும் செய்தனர். செப்ரம்பர் 25 ந்திகதி குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ தனக்கு பாஸ் வழங்காததையிட்டு ஒரு முஸ்லிம் யுவா எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் புலி அங்கத்தவர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் காணாமல் போய்விட்டார்.
சாவகச்சேரியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நகரிலுள்ள டச்சு வீதியிலேயே வசித்து வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினர் முஸ்லிம்களின் உள்ளக வன்முறை சம்பவம் ஒன்றை விசாரிக்க வந்தவேளை அங்கு சில வாள்கள் இருப்பதை கண்டு பிடித்தார்கள். புலிகளின் விளக்கங்களின்படி இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவற்றில் எல்.ரீ.ரீ.ஈ தேடுதல் நடத்தி ஒரு முன்னணி முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமான கடையொன்றுக்குள் 75 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. இது ஒரு இரகசிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையானதாக இருந்தாலும்கூட, வெறும் 75 வாட்கள் எல்.ரீ.ரீ.ஈயினரின் துப்பாக்கிகளுக்கு எதிராக ஏதாவது பயன்தருமா?
இந்த வாட்கள் கண்டெடுத்த கடையானது, வியாபாரத்துக்காக அடிக்கடி லாரிகளை கொழும்புக்கு பயணப்படுத்தும் ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டது. அளவுக்கு அதிகமான சித்தப்பிரமை கொண்ட எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவினர் இதில் ஏதோ பெரிய சதி இருப்பதாக சந்தேகம் கொண்டனர். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உபகரணங்கள்,அடிக்கடி கொழும்புக்கு பயணம் செய்யும் முஸ்லிம் வியாபாரியை நாச வேலைகளில் ஈடுபடவோ அல்லது ஒற்றனாக பணியாற்றவோ தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என உணரப்பட்டது.
எனவே சாவகச்சேரி முஸ்லிம்கள் பிரதானமாக டச்சு வீதியில் வசிப்பவர்கள் 1990 ஒக்ரோபர் 15ல் வெளியேற்றப் பட்டார்கள். ஏறக்குறைய 1000 மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேறும்படி வற்புறுத்தப் பட்டார்கள். வடமாகணத்தின் தென்பகுதி எல்லையிலுள்ள பட்டினமான வவுனியாவுக்கு அப்பால் செல்லும்படி அவர்களிடம் கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 18ல் வவுனியாவுக்கு வந்தார்கள். ஒருக்கால் சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியெறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கிலி தொடர் போன்று அது நீண்டது.
இந்த வெளியேற்றத்தின் சோகம் என்னவென்றால், முஸ்லிம்கள் ஒரு ஆயுதக்குழுவின் கட்டளைக்கு அடிபணிந்து தாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்த பிரதேசங்களை விட்டு தப்பியோடவேண்டி இருந்ததுதான். அங்கு கோள்வி இருக்கவில்லை, எதிர்ப்புகள் இருக்கவில்லை, அதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் அதிகாரம் மற்றும் பயங்கரவாதம் என்பது. தவிரவும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருந்தார்கள்.
ஐந்து வருடங்களின் பின்னர் 1995ல் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. பின்னர் 2007 - 2009 காலப்பகுதியில் வடக்கு பெரு நிலப்பரப்பான வன்னியிலிருந்த தமிழர்கள் போர் தீவிரமடைந்ததின் காரணமாக இடத்துக்கு இடம் அலைந்து திரியவேண்டி ஏற்றபட்டது. இறுதியில் அவர்கள் முல்லைத்தீவு கடற்கரையோரமாக இருந்த ஒரு பட்டை போன்ற சிறிய துண்டுப் பகுதிக்குள் கட்டுப்படுத்தப் பட்டார்கள். ஒருவேளை இது செய்த பாவத்தின் கர்ம விதி அல்லது தர்மத்தின் கொள்கை என்றும் சிலர் சொல்லலாம்.
கரிகாலன்
எல்.ரீ.ரீ.ஈ யினால் பின்னர் தரப்பட்ட விளக்கத்தின்படி, ஒக்ரோபர் மாதம் வடக்கில் பிரசன்னமாகியிருந்த கரிகாலனின் கீழ் இயங்கிய கிழக்குப் பகுதி படைப்பிரிவே இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தை மேற்கொள்ளும் முடிவுக்கு பெருமளவில் பொறுப்பாக இருந்தனர் என்று தெரியவந்தது. முக்கியமாக இது கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு ஒருவகையில் எச்சரிக்கையாக வழங்கப்பட்ட பதிலடி என்றே சித்தரிக்கப்பட்டது. இந்த முடிவு மிகைப் படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கான கருத்தை உருவாக்குவதில் மேலும் செல்வாக்கு செலுத்தியது. முஸ்லிம்கள், தமிழ் சமூகத்துக்கு குழிபறிக்கும் முக்கிய ஐந்தாம் படையாளர்களாக பார்க்கப்பட்டது அப்பட்டமான ஒரு இனவாத மனோநிலையாகும். இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டுதான் வெளியேற்ற நடைமுறை இடம்பெற்றது.

Sunday, November 4, 2012

பூடகப் பேச்சும் புரிதலும்



பூடகம் என்பது நமக்கெல்லோருக்கும் பரிச்சயமான ஒரு சொல்.

ஒரு விடயத்தை இன்னொரு வார்த்தையால் சொல்வதை இச்சொல் குறிக்கிறது.

ஒரு விடயத்தை நேரடியாகச் சொல்வதால் ஏற்படும் தாக்கம் பூடகமாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொல்வதால் ஏற்படுவதில்லை. பூடகமாகச் சொல்வது என்பது ஏறக்குறைய விடயத்தை உணர்த்துவது என்றும் அர்த்தப்படும்.

சுற்றி வளைத்துப் பேசுவது என்று சொல்லப்படுவதும் இந்தப் பூடகப் பேச்சின் ஓரங்கம்தான்.

சிலர் திட்டமிட்டே இவ்வாறு பூடபமாகப் பேசுவதுண்டு. காலதேச வர்த்தமானங்களை அனுசரித்து இவ்வகைப் பேச்சு அமைகிறது.

இயல்பாகவே சில விடயங்களை நாம் வேறு வார்த்தைகள் பயன்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். அமைதியாகவிருந்து நாம் யாரோடு எப்படிப் பேசினோம் என்று சிந்துத்துப் பார்த்தால் இது புரியும்.

இன்னொரு விடயம் இவ்வாறு நாம் பேசுவது சிலவேளை குறித்த நபருக்கு ஏற்படுத்தும் புரிதல் பற்றியது. நாம் பூடகமாகச் சொல்வதைச் சரியாகச் சொல்லவில்லையென்றால் அதனால் வரும் விளைவு தப்பானதாகி விடும். சில வேளைகளில் “இவர் என்னதான் சொல்கிறா?” என்று முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

இன்னொரு வகையில் பூடகப் பேச்சு முடிவை நீங்களே தீர்மானியுங்கள் என்றவாறு அமைந்து விடும். அந்த முடிவு பல்வேறு அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கும்.

இனி விடயத்துக்கு வருவோம்.

ஒரு பிஸ்கற் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்ணை ஒரு நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி நிருபர் பேட்டி காண்கிறார்.

நிருபர் - “எவ்வளவு காலமாக இங்கு வேலை செய்கிறீர்கள்?”

தொழிலாளி - “படிப்பை விட்டதிலிருந்து.. அநேகமாக பதினைந்து வருடமாக என்று நினைக்கிறேன்.”

Saturday, November 3, 2012

பெயரில்லாமல் வாழ்தல்




என்னுடைய நண்பனின் மனைவிக்கு கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வுக்கு அனுமதி கிடைத்தது. அதே வேளை எனக்கு நியூ ஜேர்ஸி பல்கலைக்கழகத்தில் ஒரு ஸ்கொலர்ஷிப் கிடைத்தது.

நண்பர் தனது மனைவி.இரு பிள்ளைகளுடன் கனடாவுக்கும் நான் எனது குடும்பத்துடன் நியூ ஜேர்ஸிக்கும் சென்று ஒரு வருடம் கழிப்பது என்று முடிவானது.

எனக்கும் நண்பருக்கும் சொந்தமான அப்பார்ட்மன்ட் வீடுகளை நாங்கள் இங்கு வசிக்காத ஒரு வருடத்துக்கு வாடகைக்கு விடுவதற்காக இஸரேலின் மிகப் பிரபல்யமான இணையத்தளம் ஒன்றில் விளம்பரம் செய்தோம்.

எனது வீட்டை விசாரித்து தினமும் ஐந்து தொலைபேசி அழைப்புகளுக்குக் குறையாமல் வந்தது. இரு வாரங்களுக்குள் ஒரு வாடகைக் குடியிருப்பாளர் எனக்குக் கிடைத்தார்.

எனது நண்பருக்கோ நான்கு வாரங்களpல் மூன்றே மூன்று அழைப்புகளே வந்தன. ஆயினும் அவரது வீட்டைப் பார்க்கவோ வாடகைக்குப் பெறவோ யாரும் முன்வந்ததாக இல்லை.

சில நாட்களின் பின்னர் எனது நண்பர் அந்த விளம்பரத்தை அகற்றச் செய்து புதிய ஒரு விளம்பரத்தைக் கொடுத்தார்.பழைய விளம்பரத்துக்கும் புதிய விளம்பரத்துக்குமிடையில் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. ஹூஸைன் என்ற தனது பெயருக்குப் பதிலாக ரமி என்ற பெயரைப் பதிவு செய்தார். இஸ்ரேலில் ரமி என்பது ஒரு பொதுவான பெயர். அப்பெயர் கொண்ட நபர் ஒரு யூதராகவோ முஸ்லிமாகவோ இருக்கலாம். ஆனால் ஹூஸைன் என்ற பெயரில் யூதர்கள் இல்லை.

விளம்பரம் கொடுக்கப்ட்டு மூன்று தினங்களில் ரமி, முப்பது தொலைபேசி அழைப்புகளைப் பெற்றார். ஆறுபேர் வீட்டைப் பார்க்க வந்தார்கள். இதோ இரண்டு தினங்களில் வீட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருக்கிறது.

இஸரேலில் வாழும் ஒரு பலஸ்தீனர் ஒரு வீட்டை வாடகைக்கு விட வேண்டுமாக இருந்தால் அவர் பெயரற்றவராக இருக்க வேண்டும்!

நெவ் கோர்டன் - இஸ்ரேல்

Friday, November 2, 2012

நான் உன்னைத் தேடுகிறேன்!



மின்னஞ்சலில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு முஸ்லிம் இளைஞர் படை நீண்ட காலமாக இயங்கி வருகிறது.

அநேகமாகவும் தங்களது கருத்துக்களை, மன உணர்வுகளை இவர்கள் முழு நீளக் கட்டுரைகளாக எழுதுவார்கள். பெரும்பாலும் இந்த ஆக்கங்கள் ஆங்கிலத்திலேயே இடம் பெறுகின்றன.கட்டுரைகள் மட்டுமல்ல, சகோதரா என்று விளித்து அவை கடிதங்களாகவும் எழுதப்பட்டிருக்கும்.

தமிழில் வந்து சேரும் மற்றும் எழுதப்படும் தளங்களில் கட்டுரைகளை முழுமையாகப் படிப்பதற்கே சிரமப்படுபவன் நான். இதற்கிடையில் எனது எழுத்து, சிலரது கோரிக்கைக்கான எழுத்து- என்று எனக்கு வேறு சிக்கல்களும் உண்டு.

எனக்கு மின்னஞ்சலில் வரும் இவ்வாறான முழு நீளக் கட்டுரைகள் பல முறை எனது கோபத்தைக் கிளறியிருக்கின்றன. காரணம் ஓர் அற்ப விடயத்துக்கு அங்கங்கள் வைத்து அவை சோடிக்கப்பட்டிருப்பதுதான்.

அதே வேளை சில கடிதங்கள், கட்டுரைகள் பேசும் விடயங்கள் சகலரையும் சென்றடைய வேண்டிய தகவல்களைக் கொண்டு பெறுமதிவாய்ந்த வையாகவும் அமைந்து விடுகின்றன.

இக்கடிதங்களும் கட்டுரைகளும் சமூகாபிமானம் கொண்ட இளைஞர்களால் சமூக நன்னோக்கோடு எழுதப்படுகின்றன என்பது முக்கியமான விடயம்.

மிக அண்மையில் சலாஹ்தீன் என்ற சகோதரர் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

“பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சில குழுக்கள் பெருமளவில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பெரும் திடடமிடலோடு அவர்கள் இயங்கி வருகிறார்கள். இந்தக் குழுவினரின் வேகமான, மோசமான பிரச்சாரத்தால் நல்ல உள்ளம் கொண்ட சிங்களச் சகோதரர்களை நாம் இழந்து வருகிறோம்.

முஸ்லிம்களுக்கெதிரான பார்வையை, மனோ நிலையைச் சிங்கள மக்களின் மனங்களில் விதைப்பது இவர்களது நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆக்ரமித்து வருகிறார்கள்... அதற்காகன செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. 1. ஜெய்லானி 2. தெவனகல 3.முகுது மகா விகாரை (பொத்துவில்) 4.Maha Mewnawa - ஆகிய இடங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் குறித்து சமூக நிறுவனங்களும் முஸ்லிம் தலைவர்களும் உடனடிக் கவனம் செலுத்துமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையில் சிங்கள மக்கள் நட்பார்ந்தவர்கள். அமைதியை விரும்புபவர்கள்.இன ஐக்கியம் எப்போதும் சாத்தியமானது”

இதுதான் அந்தச் சகோதரரின் கடிதம்.

இனரீதியான இன்னொரு பிரச்சினை இந்த நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது, முஸ்லிம் சிங்கள இனப் பிளவுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தக் கடிதத்தை அவர் எழுதித் தன்னால் அனுப்ப முடிந்தவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அநேகமாகவும் அவரால் முடிந்த பங்களிப்பு அதுதான். அதைச் செய்து முடித்திருக்கிறார். சில வேளை இன்னும் சிலர் அவருடன் இணைந்தால் செயற்பாட்டில் இறங்க அவர் தயாராக இருப்பார். ஆனால்...

Monday, October 22, 2012

மலஜலமானி!


இனிமேல் கிணறு தோண்டினால் வரி  செலுத்த வேண்டும் என்று ஒரு செய்தி
சில தினங்களுக்கு முன்னர்  வெளியாகியிருந்தது.

செய்தியின்படி கிணற்று வரி 7500.00  முதல் 15,000.00 ரூபாய்கள் வரை  நீளும்.

இது அமுலுக்கு வந்து விட்டால் வருடாந்த  வரவு செலவுத்திட்டத்தின் போது ஆயிரம்,  இரண்டாயிரம் என்று கால ஓட்டத்தில்  அதிகரித்துச் செல்லும் சாத்தியம் உண்டு.

செய்தி வெளிவந்து இரண்டு தினங்களின்  பின்னர், அதிகாரிகள் மேற்கொண்ட இந்தத் தீர்மானத்தை அமைச்சு எதிர்க்கிறது என்று  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  அமைச்சர் தினேஷ் குணவர்தன  தெரிவித்துள்ளார்.

அமைச்சரை விட அதிகாரிகள் அதிகாரம்  பெற்றிருக்கிறார்கள், தன்னிச்சையாகத்  தீர்மானம் எடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளுக்கு  ஏசி ஏசிப் பழக்கப்பட்டுப்போன நமது
ஜனங்கள் இதற்கும்  அரசியல்வாதிகளைத்தான் நொந்து  கொள்வார்கள். அதில் ஐம்பது வீதம்தான்  நியாயம் உள்ளது. மீதி ஐம்பது வீதமும்  அதிகாரிகள் மீது உள்ளது. ஆனால் அதிகாரிகள் பற்றி மக்கள் அலட்டிக்  கொள்வதில்லை. காரணம் அவர்கள்  வாக்குக் கேட்டு மக்கள் காலடிக்கு  வருவதில்லை.

நாடு சீரழிந்து போவதற்கும் அரசியல்வாதிகளே முழுக் காரணம் என்பதுதான் ஸ்ரீமான் பொது ஜனத்தின்  தீர்மானம். கண்ணுக்குப் புலப்படாமல் கதிரையில் அமர்ந்திருந்து காய் நகர்த்தும் அரச அதிகாரிகள் பற்றி அவர்கள் கண்டு
கொள்வதில்லை.

அரசியல்வாதி கொஞ்சக் காலம்  அதிகாரத்தில் இருக்கிறார், அப்புறம்  அட்ரஸ் இல்லாமலே போய் விடுகிறார். ஆனால் அதிகாரி, அரசாங்கப் பணத்தில் அதாவது மக்களின் வரிப்பணத்தில் வாழ்த்து கொண்டு அதே மக்களுக்கே ஆப்பு  வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மேற்படி கிணற்று வரி பற்றிய செய்தி  நமக்கு உணர்த்துகிறது.

ஏறக்குறைய 20க்கும் 30க்கும் இடைப்பட்ட  காலம் அரச அதிகாரத்தில் ஓர் அதிகாரி செயல்படுகிறார். எந்த அரசியல்வாதி அமைச்சுக் கதிரைக்கு வந்தாலும் இவர்களே விதிமுறைகளை எடுத்துச் சொல்லி அவர்களை வழி நடாத்திச் செல்பவர்கள். எனவே ஒரு நாடு வில்லங்கத்தில் இருக்கிறது என்றால் அதில் 50 வீத பங்கு அரச அதிகாரிகளே பொறுப்பு. அவர்களில் திட்டமிடல் குறைபாடு, ஆளுமையற்ற தன்மை, பிழையான கருதுகோள்கள்
என்பவற்றால்தான் ஒரு நாடு நாசமாய்ப் போகிறது என்பதுதான் உண்மை.

போய்த் தொலையட்டும்!

எனது முப்பாட்டன் வழியாக, பாட்டன் வழியாக, தந்தை வழியாக வந்த சொந்த
நிலத்தில் எனக்கும் எனது மனைவி, மக்களுக்கும் குடிக்கவும், குளிக்கவும் நீர்
பெறுவதற்குக் கிணறு வெட்டுவதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு எதற்கையா வரி செலுத்த வேண்டும்?

நீர் காணி தந்தீரா? சேவையர் போட்டு  அளந்தீரா? மண் வெட்டி கொண்டு குழி
வெட்டித் தந்தீரா? மண் சுமந்தீரா? சீமெந்தும் கல்லும் கொண்டு கிணற்றுச்
சுவர் எழுப்பினீரா? துலாக்கால் போட்டு நீர் இறைத்துத் தருவீரா? என்று மனோகரா படப் பாணியில் ஆவேசமாகக் கேட்க வேண்டும்  போல் உங்களுக்குத் தோன்றவில்லையா?

Friday, October 19, 2012

ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது...!



நேற்றுப் பிற்பகல்  வத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி நானும் எனது நண்பர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.

வத்தளை - கொழும்பு வீதிதான் விமான நிலைய வீதியும் என்பதாலும் பல கிளை வீதிகள் இணையும் பெருந்தெரு என்பதாலும் எப்போதுமே வாகன நெரிசல் இருக்கும் என்பது அத்தெருவால் பயணித்த எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

மோட்டார் சைக்கிளை நான் ஓட்டிச் சென்றேன். நண்பர் பின்னால் அமர்ந்திருந்தார்.

வத்தளைச் சந்தியைத் தாண்டிய நெரிசலுக்குள் எமக்குப்  பின்னால் சைரன் சத்தம் கேட்டது. அது எந்தப் பக்கத்தால் கேட்கிறது என்பது முதலில் புரியவில்லை.

பின்னால் அமர்ந்திருந்த நண்பரோ, “அம்புலன்ஸ் ஒன்று பின்னால் வருகிறது... நீங்கள் வழி விடுங்கள்...” என்றார்.

அது ஒரு அம்பியுலன்ஸ் வண்டியின் சைரன் ஒலியாக எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்த போதும் ஒதுங்கி வழி விடுவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்து ஓரங்கட்டினேன்.

அச்த வாகன நெரிசலுக்குள் மெதுவாக வாகனங்கள் நகர்ந்த போதும் குறிப்பிட்ட அந்த வாகனம் கிட்டே வந்த போது அது ஒரு முக்கிஸ்தருக்கான பாதுகாப்பு வாகனம் என்பது தெரிந்தது.

கிட்டத்தட்ட பலாத்காரமாக வாகனங்களை ஓரங்கட்டச் சொல்லி அந்த சைரன் வாகனத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வழியெடுத்து நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாகனத்துக்குப் பின்னால் மற்றொரு வாகனம். அதற்குள்தான் முக்கியஸ்தர் அமர்ந்திருக்க வேண்டும். அவரது வாகனத்தக்குப் பின்னால் இன்னொரு பாதுகாப்பு வாகனம். ஆக மூன்று வாகனங்கள்!

ஒருவாறு பிய்த்துப் பிடுங்கி அவை மூன்றும் தாண்டிச் சென்ற விதம் இங்கிதமானதாகவோ ஏற்றுக் கொள்ளும் விதமாகவோ இல்லை.

முக்கியஸ்தர் ஓர் அமைச்சராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் அவசரமாகச் சென்று பாணின் விலையையோ ஒரு லிற்றர் டீசல், பெற்றோலின் விலையையோ ஒரு ரூபாவாலாவது குறைக்கப் போகிறார் என்றால் பரவாயில்லை. எல்லோரும் வாகனத்தை பாதையோரம் நிறுத்தி விட்டு சல்யூட் அடிக்கலாம்.

Thursday, October 18, 2012

கண்ணீர்க் கோடுகள்




லண்டன் செல்ஸீ பிரதேசத்தின் ஐவ்ஸ் தெருவில் அமைந்திருந்தது குவைத்தின் ‘அல் கப்பாஸ்’ பத்திரிகையின் பிராந்தியக் காரியாலயம். 

1987ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி அக்காரியாலயத்திலிருந்து வெளியே வரவிருந்த ஒருவருக்காகத் துப்பாக்கியை மறைத்துப் பிடித்தபடி தெருவில் காத்திருந்தான் ஓர் இளைஞன். 50 வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தெருவைத் தொட்ட சில நொடிகளில் அவரது முகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. கீழே சாய்ந்த அந்த மனிதர் உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் நஜி அல் அலி.

அவரது கூடார்ந்த சித்திரங்களைப் பார்க்கும் ஆவலில் எப்போது பொழுது புலரும் என்று மத்திய கிழக்குக் காத்துக் கிடந்ததுண்டு. 



எழுத்தறிவற்ற அறபிகளின் அரசியல் ஆசிரியனாக, அடக்கு முறைக்குச் சிரம் பணியாத இளைஞர்களின் வழிகாட்டியாக, சமரசஞ் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக, அடக்குமுறையாளர்களின் கண்களில் விழுந்த ஒரு கந்தலாக, துரத்தப்பட்ட மக்களின் ஆன்மாவாகவெல்லாம் அவர் தோற்றங் கொண்டிருந்தார். 


இழந்த மண்ணுக்கான போராட்டத்தை, அதனை அழித்தொழிப்பதற்கான வஞ்சகச் சூழ்ச்சியை, அதன் மீது நடத்தப்பட்ட அரசியலை மிகச் சாதாரண மகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் கூடார்ந்த சித்திரத்தில் உலகத்தின் உணர்வுக்கும் வாழ் நிலத்தை இழந்தோரின் எதிர்பார்ப்புக்கும் முன்னால் பத்திரிகைகளில் பரிமாறினார். நஜி அல் அலி ‘பலஸ்தீனத்தின் மல்கம் எக்ஸ்’ என்று சொல்லும் எழுத்தாளர் ஆமினா இஷ்தாயி, பலஸ்தீனர்களின் எண்ணத் துடிப்பாக விளங்கிய அவரை ‘இன்றும் மத்திய கிழக்கு மக்களின் இதயத்தில் வாழும் பேறு பெற்றவர்’ என்று சொல்கிறார்.

Saturday, October 13, 2012

ஜமீலாவின் கதை


சிங்கிஸ் ஐத்மத்தோவின் “ஜமீலா” என்ற சிறு நாவல் பற்றிப் போற்றி எழுதப்பட்ட பல குறிப்புகளைப் படித்தேன். அந்த நாவலின் ஆங்கிலப் பிரதியை  இணைத்தில் தேடிப் பெற்றுக் கொண்டேன்.மேலோட்டமாகப் படித்த போது சற்றுக் கடின ஆங்கில நடையாக இருந்ததால் பின்னர் பார்ப்போம் என்று அப்படியே வைத்து விட்டேன்.

 தற்செயலாக எனது புத்தகக் கட்டுக்களை வேறு ஒரு தேவைக்காகக் கிண்டிய போது.. ஆச்சரியம்... “ஜமீலா” தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது. 1983ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டிருந்தது. கையடக்க நாவலாக பூ. சோமசுந்தரம் என்பவரால் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

ஐத்மத்தோவ் கிர்கிஸ்தானிய எழுத்தாளர். குல்சாரி, முதல் ஆசிரியன் போன்றவை தமிழில் வந்த நாவல்கள். அவரது ஈர்ப்பு மிக்க எழுத்துக்களால் புகழடைந்தவர். 14க்கும் மேற்பட்ட படைப்புக்களைத் தந்தவர். 1928ம் ஆண்டு பிறந்த ஐத்மத்தோவ் தனது 79வது வயதில் ஜூன் 2008ல் காலமானார்.

“ஜமீலா” பற்றியும் ஐத்மாத்தவ்வின் எழுத்து அழகு பற்றியும் ஆங்கிலத்தில் கிடைக்கும் குறிப்புக்கள் தரும் ஆர்வத்தை ஜமீலா - தமிழ் மொழிபெயர்ப்புப் பொய்ப்பித்து விடுகிறது. இது ஐத்மாத்தவ்வின் தவறு அல்ல. ஒரு வினோதமான தமிழ் நடையில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதுதான் அதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

ஜமீலா இளம் மனைவி. அவளது கணவன் போர்முனைக்குச் சென்று காயப்பட்டு மாதக் கணக்கில் வைத்தியசாலையில் கிடக்கிறான். ஓர் ஓவியனும் குடும்பத்தில் இளையவனுமான அவளது கணவனின் தம்பி அவளை உள்ளார நேசிக்கிறான். இடையில் எங்கிருந்தோ வரும் ஒருவனுடன் அவள் சென்று விடுகிறாள்.

நாவல் மொழி பெயர்ப்பின் கடைசி இரண்டு வரிகள் என்னைக் கவர்ந்தன.

“எனது தூரிகையின் ஒவவோர் இழுப்பிலும் தானியாரின் இன்னிசை ஒலித்திடுக. எனது தூரிகையின் ஒவ்வோர் இழுப்பிலும் ஜமீலாவின் இதயத் துடிப்பு எதிரொலித்திடுக!”

Monday, October 8, 2012

நாடகப் பயிற்சிப் பட்டறை


சமூக வலுவூட்டலுக்காக வானொலியைப் பயன்படுத்துதல் என்ற தொனிப் பொருளின் கீழ் வானொலி நாடகங்கள் மூலமாக சமூக வலுவாக்கம் என்ற அடிப்படையில் வானொலி நாடகங்களை எழுதுவது சம்பந்தமான பயிற்சிப் பட்டறையின் முதலாவது அங்கம் கண்டி மொண்டிஃபானோ நிறுவனத்தில் கடந்த 5,6,7ம் திகதிகளில் நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கான செயலகத்தின் அனுசரணையுடனும் விடிவெள்ளி பத்திரிகையின் ஆதரவுடனும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்த வதிவிடப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த நாடகத்துறையில் ஆர்வம் மிக்க இருபத்தைந்து இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

அடையாளங் காணப்பட்ட சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து ஏறக்குறைய பதினைந்து நாடகங்கள் இந்தப் பட்டறையின் இறுதியில் எழுதி முடிக்கப்படும். அவை வானொலியில் ஒலிபரப்பப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


முஸ்லிம்களுக்கான செயலகத்தின் அதிகாரி ஜனாப். சனூன் அவர்கள் முஸ்லிம்களுக்கான செயலகம் அடையாளம் கண்டுள்ள பிரச்சினைகள் குறித்துப் பயிற்சியாளர்களுக்கு விளக்கமளித்தார்.


பயிற்சி பெறுவோருடனான கலந்துரையாடல்


அடையாளங்காணப்பட்ட பிரச்சினைகளை நாடகப் பிரதிக்குள் கொண்டு வருவது குறித்து அறிவிப்பாளரும் நாடக ஆசிரியருமான எம்.சி. ரஸ்மின் தெளிவுபடுத்தினார்.


நாடகக் களம் மற்றும் பின்னணி குறித்த கலந்துரையாடல்


நாடகக் களம் மற்றும் பின்னணி குறித்த கலந்துரையாடல்


ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நாடகம் ஒன்றைச் செவிமடுத்து ரசிக்கையில்...

Tuesday, October 2, 2012

முஸல்மான் கதை - 1



பகல் 12.45. கொளுத்தும் வெய்யில்!

சமந்தா தியேட்டர் சந்திக்கும் ஒருகொடவத்தைச் சந்திக்கும் இடைப்பட்ட பேஸ்லைன் வீதி!

ஒரு பக்கத்தில் மூன்று வழிப் போக்குவரத்து நடந்த போதும் வாகன நெரிசலில் அசைய முடியாதவாறு தெரு இறுகிப்போய் இருந்தது.

மூன்று வரிசை வாகனங்களுக்கு இடையே முச்சக்கர வண்டிக்காரர் ஏற்படுத்தியிருந்த நான்காவது வரிசையில் நான்காவது முச்சக்கர வண்டிக்குப் பின்னால் நான் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தேன்.

மதிய வெய்யில் மண்டையைப் பிளந்தது. கழுத்துக்குள் வியர்வையும் புழுதியும் ஏற்படுத்திய நமைச்சல் வேறு.

பதினைந்து நிமிடங்கள் ஒரேயிடத்தில் தரித்து நின்ற வாகனங்கள் சற்று நகர ஆரம்பித்தன.

ஏனைய வாகனங்களை முந்திப் போய்விடலாம் என்று நின்ற நான்காவது வரிசை இதோ நகரப் போகிறது அதோ நகரப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் நான்.

ஆனால் அந்த வரிசை மட்டும் நகரவில்லை.

மூன்று நிமிடங்கள் தாமதித்து விட்டுத் தாங்காமல் கலிமாச் சொல்லியபடி அருகே போன ஒரு கண்டைருடன் ஒட்டி உரசி மோட்டார் சைக்கிளை முன்னால் எடுத்து நகர்ந்தேன்.

மூன்று முச்சக்கர வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்பார்ப்புடன் காத்திருக்க அவற்றுக்கு முன்னால் நின்ற நான்காவது முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகாசமாக கொழும்புத் தமிழில் கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். முச்சக்கர வண்டியின் எஞ்சின் இயங்கிக் கொண்டிருந்தது.

அவரைத் திரும்பிப்பார்த்தேன்.

ஒரு மோசமான வாகன நெரிசலில் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமோ பாதையில் அளெகரியமான நடந்து கொண்டிருக்கிறேன் என்ற நினைப் போ இல்லாமல் கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். நான் தாண்டி வந்து விட்டேன்.

சொல்ல மறந்து விட்டேன்.

அவரது வண்டியின் பின் கண்ணாடியில் இஸ்லாத்தின் தாரக மந்திரமான “லாயிலாஹ இல்லல்லாஹ்” அரபு மொழியில் வெள்ளை நிற ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் சவூதி அரேபிய வாள் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது!

Sunday, September 30, 2012

அரச தேசிய சாஹித்திய விருது - 2012


நானும் நந்தினி சேவியரும்

இவ்வருடத்துக்கான அரச தேசிய சாஹித்திய விருது வழங்கல் வைபவம் இன்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த வருடம் நான் வெளியிட்ட அரபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியான “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” நூலுக்கு சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுதிக்கான விருது கிடைக்கப் பெற்றது.

இம்முறை விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசியரர்கள் விபரம் வருமாறு-

01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்

02. சிறந்த நிறுகதைத் தொகுதிகள்

    “வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்
    “நெல்லிமரத்துப் பள்ளிக்கூடம்” - நந்தினி சேவியர்

03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்

04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்

05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்

06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்

07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷரீப்

08. சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்

09. சிறந்த மொழிபெயர்ப்பு (இளையோர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவ்லைக் கமால்

10. சிறந்த மொழிபெயர்ப்பு (நானாவிதம்) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்

Tuesday, September 25, 2012

நானும் ஒரு முஸ்லிம்!



எப்போதும் நினைவிலிருத்திக் கொள்
நீ ஒரு முஸ்லிம்

ஒரு போதும் பொய் சொல்லக் கூடாது -
நீ ஒரு முஸ்லிம்

தொழுகையைத் தவற விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

நோன்பு பிடிக்காமல் இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

ஸக்காத்தைக் கணக்குப் பார;த்துக் கொடுத்து விடு -
நீ ஒரு முஸ்லிம்

ஸதக்காக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வசதி வந்தால் ஹஜ்ஜை நிறைவேற்று -
நீ ஒரு முஸ்லிம்

தப்புகளுக்குத் துணை போகாதே -
நீ ஒரு முஸ்லிம்

மூத்தோரை மதித்து நட -
நீ ஒரு முஸ்லிம்

சிறியவர்களிடம் அன்பு காட்டு -
நீ  ஒரு முஸ்லிம்

வறியவர்க்குக் கட்டாயம் உதவி செய் -
நீ ஒரு முஸ்லிம்

பொதுவிடத்தில் கண்ணியமாக நடந்து கொள் -
நீ ஒரு முஸ்லிம்

ஒரு குழப்பவாதியாக இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

வாகனம் செலுத்துகையில் ஒழுங்கைப் பின்பற்று -
நீ ஒரு முஸ்லிம்

விட்டுக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வீண் தர்க்கத்தையும் விதண்டாவாதத்தையும் தவிர் -
நீ ஒரு முஸ்லிம்

உனது நற்பண்புகளால் மற்றோரைக் கவர் -
நீ ஒரு முஸ்லிம்

யாரையும் அவமதிக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

நீயே பிரதானம் என்று பறைசாற்றாதே -
நீ ஒரு முஸ்லிம்

உன் சொல்லையே கேட்கவேண்டும் எனத் துள்ளாதே -
நீ ஒரு முஸ்லிம்

பொதுத் தளங்களில் மற்றவரைக் கவரக் கேனத்தனமாகப் பேசவோ நடக்கவோ முற்படாதே -
நீ ஒரு முஸ்லிம்

கோழையாக இராதே -
நீ ஒரு முஸ்லிம்

Wednesday, September 19, 2012

கிழக்கு மாகாண சபையும் எனது கழிவறையும்


கடந்த வாரம் ரொம்பவும் “டென்ஷன் வாரம்.” 

ஒன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வந்தும் தொடர்ந்தும் இழுபறி நடந்து கொண்டிருந்தமை. அது இப்போது ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டது. இது பற்றிப் பின்னர் எழுதலாம். எழுதாமலும் விடலாம்.

எனக்கு நேர்ந்த அடுத்த “டென்ஷன்” எங்களது வீட்டுக் கழிவறைப் பிரச்சினை.

வீட்டைக் கட்டி அதில் வேறு யார்யாரையோவெல்லாம் வாடகைக்குக் குடி வைத்துவிட்டு நான் கொழும்பில் பத்தரை வருடங்கள் குடியிருக்க வேண்டி வந்தது. பிள்ளைகளின் பாடசாலை, போக்குவரத்துக் கருதியே இப்படி நான்கைந்து வாடகை வீடுகளில் குடியிருந்தோம். வாடகை வீடுகளில் வசிப்பதில் உள்ள சிரமங்களைப் பலர் எழுதி விட்டார்கள். தவிர, நான் எழுத வந்த விடயமும் அதுவல்ல.

பத்தரை வருடங்களுக்குப் பிறகு அண்மையில்தான் சொந்த வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வீடு திருத்தி, பொருட்களை ஏற்றியிறக்கி, 50 வீதம் வீட்டை வீடாக்கி எடுப்பதற்குள் பாதி உயிர் போய்விட்டது.

வீட்டுக்கு வந்து 5ம் நாள் எங்களது வீட்டுப் பிரதான கழிப்பறையிலிருந்து அதன் கதவு நிலையில் ஒரு கால் பகுதியூடாக நீர் கசியத் தொடங்கியது. 6ம் நாள் வீடு முழுக்க நாற்றம் பரவத் தொடங்கிற்று. வீட்டின் மேல்மாடியில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். கழிவுகள் செல்லும் பெருங் குழாயைக் கீழ் வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். எல்லாம் நன்றாக இருந்தது. நீரை வாளி வாளியாக இறைத்து நீர் கசிகிறதா என்று பார்த்தேன். இல்லை! 

வீட்டில் நாற்றம் குடலைப் பிடுங்கத் தொடங்கியதால் சாம்பிராணி, சந்தனக்குச்சி என்று புகை வேறு. 

நமது அறிவுக்கு இது புலப்படாது என்றும் குழாய் வேலைக்காரர் ஒருவரை அழைத்துக் காட்டினால்தான் புரியும் என்றும் நினைத்தேன். ஒரு நாள் இரவு குழாய் வேலைக்காரர் ஒருவரின் உதவியாளரைத் தேடிக் கண்டு பிடித்தேன். வந்து பார்த்த அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. தனது தொழில் வழங்குனரைக் காலையில் அழைத்து வருவதாகவும் அவர் கண்டு பிடித்து விடுவார் என்றும் சொல்லிச் சென்றார்.