Saturday, December 15, 2012

யாத்ரா - 22



(“யாத்ரா - 22” வது இதழ்  ஜூலை - டிஸம்பர் இதழாக 120 பக்கங்களுடன் )

இம்முறை ஆசிரிய தலையங்கம் இது.

அரச தேசிய சாஹித்திய விருது
--------------------------

இவ்வருட  அரச தேசிய சாஹித்திய விழாவில் பத்துத் தமிழ் நூல்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. வருடாவருடம் தேசிய சாஹித்திய விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் ஏற்படும் அதிருப்தி அலைகள் இம்முறை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

2011ம் ஆண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் சஞ்சிகைகள், இணையம், மேடைகள் ஆகியவற்றில் அவ்வாண்டு விருதுகள் குறித்துச் சர்ச்சைகளும் அதிருப்திகளும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டடிருந்தன.

இந்த நாட்டில் வெளியிடப்படும் நூல்களில் ஏறக்குறைய 50 வீதமானவை முஸ்லிம் படைப்பாளிகளால் எழுதி வெளியிடப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் தேசிய சாஹித்திய விருது வழங்கல்களின் போது இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்களின் நூல்களே விருதுகளுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் எழுதும் முஸ்லிம் படைப்பாளிகள் இந்த நிலை குறித்து மிகவும் மனக்கிலேசம் அடைந்திருந்தார்கள். வாய்திறந்து வெளியே சொன்னால் எப்போதாவது கிடைக்கும் ஒரு வாய்ப்புத் தமக்கு மறுக்கப்படலாம் என்ற பயத்தில் உள்ளக் குமுறலுடன் பலர் மௌனம் காத்து வந்துள்ளனர். இதனால் இவ்விடயம் குறித்து அரச மட்டத்துக்கு எடுத்துச் சொல்வது பற்றியும் முஸ்லிம் படைப்பாளிகளின் நூல்களுக்குத் தனியே விருது வழங்குவது பற்றியும் ஆலோசனைகள் நடந்ததை நாம் அறிவோம்.

சில தனி நிறுவனங்களும் அமைப்புக்களும் தமது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நூல்களுக்கும் தமக்குப் பிடித்த படைப்பாளிகளுக்கும் வருடாவருடம் ஒரு வகைப்படுத்தலை மேற்கொண்டு விருது வழங்குவதில் அக்கறை காட்டுகின்றன. நூல்கள் அனுப்பப் பத்திரிகைகளில் தரப்பட்ட இறுதித் திகதி முடிவதற்கு முன்னரே சில அமைப்புகள் விருதுகளைத் தீர்மானித்துவிட்டு அறிவித்த வேடிக்கைகளையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததுண்டு.

இவ்வாறான வெட்கக் கேடுகளுக்குள் அரச தேசிய சாஹித்திய விருது வழங்கல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்தத் தேசத்தின் பிரஜையான ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் கிடையாது.

இம்முறை இலங்கைப் படைப்பாளிகளுள் ஐந்து தமிழருக்கும் ஐந்து முஸ்லிம்களுக்குமாக மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் முஸ்லிம் படைப்பாளிகளிகளின் நீண்ட நாட் கவலை தீர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகக் கலாசார அமைச்சையும் கலாசாரத் திணைக்களத்தையும் பாராட்டுகிறோம்.

அதேவேளை, அடுத்த வருடம் வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.

(தமிழர்கள் அறுவர், முஸ்லிம்கள் ஐவர் என்பதே சரியானது)

“யாத்ரா -22” வது இதழில் தாழை மதியவன்,கெகிராவ ஸூலைஹா,எம்.எல்.எம். அன்சார், எம்.ரிஷான் ஷரீப், யோகேஷ், கவிஞர் அபி, அமல்ராஜ் பிரான்ஸிஸ், கடையநல்லூர் பி.எம். கமால், கிண்ணியா ஏ.எம்.எம். அலி, கெகிராவ சஹானா, ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.மஞ்சுள வெடிவர்தனவின் சிங்கள மொழிக் கவிதையை லறீனா அப்துல் ஹக் மொழிபெயர்த்துள்ளார்.

ஓட்டமாவடி அறபாத்தின் “செல்லனின் ஆண்மக்கள்”, யோ. கர்ணனின் “அவதூறுகளின் ராஜாக்களிற்கான ஈழு பாடம்”, ஆஷிக் அகமட் மொழிபெயர்த்த “ஒரு ஸலாம் என் வாழ்வை மாற்றியது” ஆகியன அவர்களின் வலைத் தளங்களிலிருந்து அனுமதியுடன் இதழில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போலவே சிவேதிகா என்ற முகமறியாச் சகோதரியின் “சுற்றுலா” முகநூலில் இருந்து அதை இணைத்திருந்த நண்பரின் அனுமதியுடன் பெறப்பட்டது.

“லண்டன் தமிழ் வானொலியும் அறியப்படும் இலக்கிய ஆளுமைகளும்” - அமல்ராஜ் பிரான்ஸிஸ், “வேர் விடும் விதைகள்” - மர்ஸூம் மௌலானா, “கோல்டன் ஸ்லம்பர்ஸ் - திரைப்படத்தினூடாக கம்போடியத் திரைப்படத் துறை” - இப்னு அஸூமத், “சாதிக்கத் துடிக்கும் இளைஞன்” - ஏ.பி. மதன், “காலக் கணிதம்” - ஜின்னாஹ் ஸரிபுத்தீன், “மலாய் மொழிக் கவிதைகள்” - மேமன் கவி --- ஆகியன கட்டுரைகள். அஷ்ரப் சிஹாப்தீனின் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்”- பஸ்லி ஹமீத், அன்புடீனின் “நெருப்பு வாசல்” - சிறுகதைத் தொகுதி பற்றிய சிறு குறிப்பு என்பனவும் அடங்கியுள்ளன.

அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த “எனது கௌரவக் கொலை”, சுதாராஜ் எழுதிய “யுத்தங்கள் செய்வது”, ப.ஆப்தீன் எழுதிய “ஒரு பிடி சோறு” ஆகியன சிறுகதைகள்.

மற்றும் “பொருள்விளங்கா உருண்டையும் பின் நவீனத்துவக் கவிதையும்”,“ஈழத்து முஸ்லிம் படைப்பிலக்கிய மாநாடு”- ஏ.பீர் முகம்மது மற்றும் “யாத்ரா - 21” பற்றி கே.எஸ். சிவகுமாரன் மற்றும் தெளிவத்தை ஜோஸப் ஆகியோர் எழுதிய பத்திரிகைக்குறிப்புகளுடன் அஜமியின் அஞ்சறைப் பெட்டியும் இணைகிறது.

எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் கொழும்புப் புத்தகக் கடைகளில் (பூபாலசிங்கம் - செட்டியார் தெரு மற்றும் வெள்ளவத்தைக் கிளைகள், தெமட்டகொட வீதி இஸ்லாமிக் புக் சென்டர் ஆகிய கடைகள்)

பின் அட்டை விளம்பர அனுசரணை -
நன்றி - மாத்தளை பீர் முகம்மத்

 சல்மான் ட்ரேடிங், 
(பிரபல கவரிங் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்)
229 - 1 -1 -14 சந்தோஷ் பிளாஸா, மெயின் வீதி, கொழும்பு - 11

Friday, December 7, 2012

THAT ONE THING


Sir I'v everything
Deeds dating back to 
76 years
the 25 year - old house
the field in which
only grass grows
the old sofa on which
my gran father sat
table, fan
colour TV, FM radio
electric heater
wooden almyrah
bed, an old mat
worn - out bicycle tyre
pillows stained
with salaiva drip
a clay pot
a disfigured aluminium pan
cover - torn books
blurred birth certificate
I have everything

I know MP
I know his brother
I know the lanes and footpaths
I know the lineage oh my neighbour
I know the school master
I know the native physician
I know the towns an rivers
the jungles and mountains
of this country

"You're talking
too much!
If you have no IC
stand aside
I have to
interrogate you!!

IC - Identity card

Translated by : Mr. S. Pathmanathan (So Pathmanathan)

(“அந்த ஒன்று” என்ற எனது கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு)



Wednesday, December 5, 2012

இலக்கிய ஆய்வகத்தின் ஒன்றுகூடல் - 2


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் இரண்டாவது ஒன்றுகூடல் கடந்த 01.12.2012 - ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.30க்கு வெள்ளவத்தை, 42வது லேன் இலக்கம் 31ல் அமைந்துள்ள பிரின்ஸ் அகடமியில் ஆய்வகத்தின் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.


கௌரவ. பஷீர் சேகுதாவூத் பா.உ.

“போருக்குப் பின்னரான முஸ்லிம் அரசியலில் மாற்றம் அவசியாமா?” எனும் தலைப்பில் கௌரவ. பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் உரை நிகழ்த்தினார். இலங்கைத் தமிழர் அரசியலின் அடியொற்றியே இலங்கை முஸ்லிம்களின் அரசியல்பாதை ஆரம்பமானது என்று குறிப்பிட்ட அவர் இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மையுடன் ஒட்டி உறவாடியே தனது அரசியலை மேற்கொண்டு வந்தது என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களோடு இணைந்து தமது தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டனர், இலங்கைத் தமிழர்களோ அரசுகளை எதிர்த்துத் தமது அரசியலை வடிவமைத்தனர்” என்று வேலுப்பிள்ளை பிரபாகரன் சொன்னதை ஞாபகப்படுத்தினார்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போக்கை சேர் ராஸிக் பரீத் அவர்கள் நிருபர் ஒருவரது கேள்விக்கு அளித்த பதில்மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், “எப்போதும் ஆட்சியாளர்களுடனேயே இருக்கிறீர்களே ஏன்?” என்று நிருபர் கேட்ட வினாவுக்கு சேர். ராஸிக் பரீத் அவர்கள், “நான் ஒரேயிடத்தில்தான் இருக்கிறேன், அரசுகள்தாம் மாற்றமடைகின்றன” என்று சொன்னதைச் சுட்டிக் காட்டினார்.

இலங்கை முஸ்லிம் அரசியல் குறித்து வெளிப்படையாக மனந்திறந்து தமது கருத்துக்களை அவர் தெரிவித்தார்.



அவரது உரையைத் தொடர்ந்து ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் அவர்கள் முஸ்லிம் படைப்பாளிகளின் போர்க்கால இலக்கியம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இலங்கையில் போர் நடந்த காலப்பிரிவில் வெளிவந்த முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மிக ஆழமான ஓர் உரையை அவர் நிகழ்த்தினார்.

குறிப்பிட்ட நபர்களே கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் பேச்சாளர்கள் தவிர்ந்த 40 பேர் நிகழ்வில் கலந்து கொண்டனர்


உரைகள் முடிவடைந்ததும் உரைகளையொட்டிய வினாக்கள் கலந்து கொண்டாரால் எழுப்பப்பட்டுப் பேச்சாளர்களால் பதில்கள் வழங்கப்பட்டன. கேள்வி பதில் கலந்துரையாடல் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு மேல் நடபார்ந்த முறையில் இடம்பெற்றது.

இரண்டு பேச்சாளர்களதும் உரைகள் பார்வையாளர்களால் விதந்துரைக்கப்பட்டமையானது நிகழ்வின் வெற்றியை எடுத்துக் காட்டியது.


மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 7.45 மணியளவில் சங்கத்தின் உப செயலாளர் நியாஸ் ஏ சமத் அவர்களது நன்றியுரையுடன் இனிதே முடிவடைந்தது.

அடுத்த ஒன்றுகூடலை எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

படங்கள் - முஜிபுர்ரஹ்மான்  மற்றும் கே. பொன்னுத்துரை.

மரியம் ஜமீலாவை நினைவுகூர்தலும் காஸாவுக்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலும்



“சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்தலும் - காஸாவுக்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலும்” என்ற தொனிப்பொருளில் “மீள்பார்வை ஊடக மையம்” 22.11.2012 அன்று கொழும்பு, தெமட்டகொட  வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடத்திய கருத்துப் பகிர்வு அரங்கில் நிகழ்த்தப்பட்ட எனது உரை



.

பகுதி - 1





பகுதி - 2




பகுதி - 3



பகுதி - 4

“மீள்பார்வை” பத்திரிகை ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், அஷஷெய்க் றவூப் ஸெய்ன் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.

எனது உரை எனது இதே தளத்தில் எழுத்து வடிவில் “ஜமீலாக்களும் காஸாக்களும்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

எல்லா உரைகளையும் வீடியோ வடிவில் பின்வரும் இணைப்பில் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

http://www.youtube.com/watch?v=rjZjgEl_eMo&feature=share

Saturday, December 1, 2012

சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்

Samuel Shimon



சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்

- சாமுவெல் ஷிமொன் -

டிஸம்பர் 1999ம் ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். ஜேர்மன் எழுத்தாளர் ஹேமன் ஹஸ்ஸே எழுதிய ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலின் புதிய நேர்த்தியான பதிப்பு அங்கு  விற்பனைக்கிடப்பட்டிருந்தது. பிரதியொன்றின் விலை ஒரு பவுண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிறந்த அந்த நாவலின் மூன்று பிரதிகளை நான் வாங்கிக் கொண்டேன்.

விமானத்தில் அதை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்கன் எயார்லைன் வழங்கிய உணவையும் பானத்தையும் அதிகம் உட்கொண்டதால் நித்திரை மயக்கமாக இருந்ததை உணர்ந்தேன். எனவே நாவலை அருகே வைத்துவிட்டு ‘ஐ கொட் மெய்ல்’ என்ற என்ற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அந்தப் படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. டொம் ஹென்க்ஸ் போன்ற அதிசிறந்த நடிகர் சலிப்பு ஏற்படுத்தும் அந்தப் படத்தில் நடித்திருப்பதையிட்டுக் கவலையாக இருந்தது.

எனக்கு அருகேயிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்மணியின் பார்வை ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் பதிவதை அவதானித்த நான் ‘அதைப் படிக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். ஒரு பெரிய புன்னகையை என்னை நோக்கிச் சிந்திய அப்பெண்மணி சொன்னார்:-

“நிச்சயமாக.... ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ போன்ற நாவலை மீண்டும் படிக்கக் கிடைப்பது மகிழ்ச்சிதானே!”

அந்த நாவலின் பிரதியை அவருக்குக் கொடுத்துச் சொன்னேன்:-

“இதை நீங்கள் எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். எனது பிரயாணப் பைக்குள் நான் இன்னும் இரண்டு பிரதிகள் வைத்திருக்கிறேன்.”

“இதே புத்தகமா?”

- அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆம்... இதே புத்தகம்!”

நிவ்யோர்க் வந்தடைந்ததும் யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பலஸ்தீனக் கல்வியியலாளரான எனது நண்பரைச் சந்திப்பதற்காக மத்திய ரயில் நிலையத்திலிருந்து நியூஹெவன் செல்லும் ரயிலைப்பிடித்தேன். அது ஒரு தூரப் பயணமல்ல. எனவே வாசிப்பதற்குப் பதிலாக நிவ்யோர்க்கின் புறகர்ப் பகுதிகளைக் கண்டு ரசிப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ எனக்கு ஞாபகம் வந்தது. எனது பைக்குள் இருந்த இரண்டு பிரதிகளில் ஒன்றை எடுத்து யேல் பல்கலைக்கழகப் பூங்காவில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு பல்கலைக் கழகத்தின் யூதக் கற்கைகளுக்கான பிரிவுக்குள் நுழைந்து அதன் தலைவரைச் சந்தித்தேன். ஒரு நாளைக்கு முன்னர் எனது பலஸ்தீன் நண்பருடன் அவரைச் சந்தித்த போது என்னை மதிய விருந்துக்கு அவர்அழைத்திருந்தார். 

மாணவர் உணவகத்தில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் மேசை நடுவில் கிடந்த ஹேர்மன் ஹெஸ்ஸேயின் நாவலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது ஒரு மிகச் சிறந்த நாவல் என்றும் அதன் எழுத்து நட்பமும் உத்தியும் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் சொன்ன அந்த மாணவன் அந்நாவல் முதலில் 1924ல் வெளியிடப்பட்டதென்றும் 1926ல் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்றும் சொன்னான். அவனது ஆர்வத்தை மெச்சிய நான் அப்பிரதியை அவனுக்குக் கொடுத்துச் சொன்னேன்:-

“நான் வீட்டில் இன்னொரு பிரதி வைத்திருக்கிறேன்.”

என்னிடமிருக்கும் பிரதியை யாருக்கும் கொடுப்பதில்லை என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.

நியு ஹெவனில் எனது கடைசி நாள் இரவு நோர்வேஜியக் கல்வியியலாளர் வீட்டில் கழிந்தது. நான் சென்பிரான்ஸிஸ்கோ செல்வதை அறிந்த அப்பெண்மணி, நிவ்யோர்க்கிலிருந்து ரயில் மூலம் சென்பிரான்ஸிஸகோ செல்வது ஒரு ஆனந்தமான பயணமாக இருக்கும் என்று சொன்னார். மூன்று அல்லது நான்கு நாள் பயணமானது கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரை போவது என்று என்றார்.

“குன்றுகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், நகரங்கள், கிராமங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். எட்டு மாநிலங்களின் நதிகளைக் கடந்து செல்லும் இன்பமான பயணமாக இருக்கும்.”

மகிழ்ச்சி தரும் தூர ரயில் பயணத்தை நினைத்துக் கொண்டு ‘நிவ்யோர்க்கிலிருந்து சென்பிரான்ஸிஸ்கோ செல்ல நான் வைத்திருக்கும் விமானப் பயணச்சீட்டை நான் என்ன செய்வது?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். சில கணங்கள் தயங்கியபின்னர் பென்சில்வேனியா ரயில் நிலைய பாருக்குள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் பாரிலிருந்து வெளியேறிய நான் விமானப் பயணச் சீட்டைக் கிழித்தெறிந்தேன்.

“நான்கு நாட்களில் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ படிப்பதற்குப் போதிய அளவு நேரம் கிடைக்கும்.”

அப்படித்தான் நான் நினைத்தேன்.



ரயிலில் நான் அமர்ந்ததும் எனக்கேற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை விவரிப்பது கடினமானது. கடந்த காலங்களில் ஹொலிவூட் படங்களில் மிக நீளமான புகையிரதங்களைக் கண்டு ரசித்திருக்கிறேன். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து திரைப்படத்தில் பார்ப்பதுபோலவே கண்முன்னால் தெரியும் பென்ஸில்வேனியா புகையிரத நிலையத்தையும் பிரயாணிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு ஓர் இளம் பெண் நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர் ஆசனத்தில் வந்து அமர்ந்தாள். பிறகு லத்தீன் அமெரிக்க முகபாவம் கொண்ட ஒரு பெண் - இளம்பெண்ணின் தாய்- கண்ணீருடன் ஜன்னலூடாக தனது மகளை முத்தமிட்டாள். மகளிடம் அப்பெண் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தாள். அந்த இளம்பெண் விவாகரத்துச் செய்து பிரிந்திருக்கும் தனது தந்தையிடம்  செல்கிறாள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

“கலிபோர்னியாவில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்... நிவ்யோர்க்கில்தான் நான் வளர்ந்தேன்.”

- ஜெனிஃபர் என்னிடம் சொன்னாள்.

“பார்த்து... பார்த்து... கவனமாக...!”

ரயில் நகர ஆரம்பித்ததும் முகத்தை ஜன்னலோடு சேர்த்து வைத்துக்கொண்டிருந்த தனது தாயாரைப் பார்த்துச் சத்தமிட்டு எச்சரித்தாள் அந்த இளம் பெண். பென்ஸில்வேனியா ரயில் நிலையத்திலிருந்து நகர்ந்த புகையிரதம் அமெரிக்காவின் நீளிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இடவசதி மிக்க ஆசனத்தில் அமர்ந்தபடி என்னிடமிருந்த ‘ஸ்டெப்பன்வூல்ஃப்’ இறுதிப் பிரதியை எடுத்து விரித்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். ஆபிரிக்க அமெரிக்க இளைஞனொருவன் திடீரென எமது ரயில் பெட்டிக்குள் நுழைந்தான். இருபது வயது மதிக்கத்தக்க அவன் மிக நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தான். ரயில் பெட்டிக்குள் இருப்போரின் முகங்களைப் பார்த்தவாறே திரும்பத் திரும்ப ரயில் பெட்டிக்குள் நடந்தபடி பொதுவில் சத்தமிட்டுப் பேசிக்கொண்டிருந்தான். அவன் ஒரு எழுத்தாளன் என்றும் நூல்களை வெளியிடுவது சிரமமான விடயம் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னான்:-

“வெளியீட்டாளர்கள் ஒரே மாதிரியான எழுத்தாளர்களின் மோசமான புத்தகங்களையே அச்சிட்டு வெளியிடுகிறார்கள்.”

நடிகர் Sidney Poitier ரின் இளவயதுத் தோற்றத்தை அவனில் நான் கண்டேன். பயணிகள் விரும்பினால் தனது கதைகளில் சில பகுதிகளைப் படித்துக் காட்டுவதாகவும் அவற்றை நாங்கள் மிகவும் விரும்புவோம் என்றும் சொன்ன அவன் அதற்குப் பகரமாக நாங்கள் விரும்பினால் மட்டும் சிகரட் வாங்குவதற்காக - அதிகமாக இல்லை - சில நாணயங்களைத் தந்தாலே போதும் என்றும் சொன்னான்.

தனது கையில் வைத்திருந்த நூலைத் திறந்து படிக்க ஆரம்பித்தான். முதல் வசனத்திலேயே எமது கவனத்தைக் கவர்வதற்காக நாடகப் பாணியில் அந்த வசனத்தைப் படித்துக் காட்டினான். பயணிகள் கண்களை உறுத்துப் பார்த்தபடி உறுதியான குரலில் அவன் அதைப்படித்துக்காட்டியது உண்மையில் நன்றாகத்தான் இருந்தது. அவன் வாசித்துக் காட்டிய வசனங்கள் இவைதாம்:-

“நான் கையில் பிடித்திருந்த குவளையில் வீட்டுச் சொந்தக்காரி  மீண்டுமொருமுறை நிரப்ப விரும்பினாள். நான் எழுந்துகொண்டேன். இன்னும் அருந்துவதற்கு எனக்கு வைன் தேவையில்லை. நட்சத்திரங்களினதும் மொஸார்ட்டினதும் தங்கத் தடயம் பிரகாசித்துக் கொண்டிருக்க அழிவற்ற ஒரு நிலையை நான் உணர்ந்தேன். வெட்கமோ, பயமோ சித்திரவதை அவஸ்தையோ இல்லாமல் ஒரு மணிநேரம் என்னால் மூச்சு விட்டு நிலைக்க முடிந்தது.

குளிர்ந்த தென்றல்காற்று மழையைத் துரத்திக் கொண்டிருக்க யாருமற்ற தெருவில் நான் இறங்கினேன். தெருவிளக்குகளில் விழுந்த மழைத்துளிகள் கண்ணாடித் துண்டுகளைப் போல் சிதறி விழுந்து கொண்டிருந்தன. இனி, இப்போது... எங்கே போவது...?”

ஒரு கணத்தில் இந்த வசனங்கள் எனக்குப் பரிச்சயமற்றவையல்ல என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இதே போன்ற வரிகளைச் சற்று நேரத்துக்கு முன்னர் எங்கேயோ படித்த்தான உணர்வு. எனது ஆசனத்தில் அமைதியாக நான் உட்கார்ந்திருந்தேன். இளைஞன் தொடர்ந்து வாசிப்பதைச் சற்று நிறுத்திவிட்டுத் தனது பெயர் ஹரி ஹொல்லர் என்று சொன்னான். அந்த இளைஞன் வாசித்த வரிகள் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் உள்ளவை என்பது சந்தேகத்துக்கிடமின்றி எனக்குப் புரிந்தது.