Tuesday, July 30, 2013

சண்டையில் ஈடுபடாதவள்!



- ரோரி அலன் -

நோன்புப் பெருநாள் சிறுகதை

அவளது பெயர் மரியம். அவளுக்கு வயது ஆறு. அடர்ந்த கருங் கூந்தல். முகத்தில் நெஞ்சையள்ளும் புன்னகை. நாட்டியமாடும் விழிகள். நீங்கள் ஆழமாக அவளது கண்களைப் பார்த்தால் மரியம் ஒரு வித்தியாசமான, விசேடமான பிள்ளை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதாவது மரியம் உளரீதியாகப் பாதிப்புக்குள்ளான பிள்ளை. பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி குறைவு. அவளது தாயின் வயிற்றிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம்தான் அவளை உலகுக்குக் கொண்டு வந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அறுவைச் சிகிச்சை செய்த வைத்தியர் அனுபவசாலியாக இருக்கவில்லை. இதன் காரணமாக வாழ்நாள் முழுவதும் ஒலியற்ற உலகத்தில் வாழ்வதற்கே அவளுக்கு விதிக்கப்பட்டு விட்டது. அவளால் பேசவோ மற்றவர் பேசுவதைக் கேட்கவோ முடியாது. ஒரு பக்குவமற்ற சைகை மொழிமூலமே அவளால் மற்றவர்களுடன் உறவாட முடிந்தது.

அப்படியிருந்தும் மரியம் மகிழ்ச்சியாக இருந்தாள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். முகம் பூக்கப் புன்னகைத்தாள். வாய் விட்டு அதிகம் சிரித்தாள். களங்கமற்ற ஆத்மாவின் ஆழத்திலிருந்து வெளிவரும் அவளது சிரிப்பைப் பார்ப்பதே ஆனந்தமானது.

மரியம் வாழ்வை மிகவும் விரும்பினாள். தாயாரை, தந்தையாரை, அவளது இளைய சகோதரியை, மூத்த தாயாரை - யாவரையும் அவள் அதிகம் விரும்பினாள். இவர்கள் எல்லோரையும் விடப் புதிதாகப் பிறந்த தம்பிப் பாப்பா இஸ்ஸாவை விரும்பினாள். மிகவும் பாசத்துடனும் ஆர்வத்துடனும் தம்பிப் பாப்பாவை அவள் கொஞ்சினாள். தம்பிப் பாப்பாவுடன் இருக்கும் வேளையில் தன்னைத்தான் அதிகம் புரிந்து கொண்டது போல் உணர்ந்தாள். சுருங்கச் சொன்னால், அவள் புரிந்து கொண்ட உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட இஸ்ஸாவை அவள் நேசித்தாள்.

கிராமத்திலுள்ள ஏனைய சிறார்களுடன் சேர்ந்து மரியம் அடிக்கடி விளையாடுவாள். அந்தச் சிறார்களும் அவளைப் பரிகாசம் செய்வதோ தொந்தரவு செய்வதோ கிடையாது. மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இறைவனின் கரங்களால் தொடப்பட்டவர்கள் என்று ஒரு நம்பிக்கை அக்கிராம மக்களிடம் இருந்தது அதற்கு ஒரு காரணம். அவ்வாறானவர்கள் எதுவும் அறியாதவர்கள் என்பதாலும் பாவம் எதுவும் புரியாதவர்கள் என்பதாலும் அவர்களுக்கு சுவர்க்கத்தில் ஓர் இடம் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கைதான். மனோவியல் ரீதியான பாதிப்புள்ளவர்கள் இறந்தால் கேள்வி, பார்வை எதுவுமின்றி நேரடியாகச் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுவிடுவார்கள் என்று நம்பப்பட்டது.

எல்லோரும் அவள்மீது அளவு கடந்த அன்பு செலுத்தியதன் காரணமான மரியம் மகிழ்ச்சியாக இருந்தாள். அவளுடைய தந்தை யூஸூப், தாய் பாத்திமா மற்றும் குடும்பத்தினரும் அவள் பிறந்த ஒதுக்குப் புறமான கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் அவளை அதிகம் நேசித்தார்கள். அவள் நோயுற்றால் அவளது தாயார் அவள் மீது அதிக கவனம் செலுத்தினார். தூக்கத்தில் கெட்ட கனவுகளைக் கண்டால் தவழ்ந்து சென்று தந்தையாருக்கும் தாயாருக்குமிடையில் உறங்குவதன் மூலம் பாதுகாப்புத் தேடிக் கொள்வாள். தாயாருடையதும் தந்தையாருடையதும் வாசத்துக்கு நடுவில் கிடைக்கும் கதகதப்பும் பாதுகாப்பும் ஒரு பிள்ளைக்கு வேறு எங்குமே கிடைக்காது. பிறகு எக்கவலையுமற்ற உறக்கத்தில் ஆழ்ந்து காலையில் விழித்தெழுவாள். இரவில் ஏற்பட்ட கெட்ட கனவுகளோ அச்சமோ அவளுக்கு ஞாபகம் வருவதில்லை.

மரியமுடைய கழுத்தில் ஒரு சிறிய தங்கச் சங்கிலி இருந்தது. சிறிய எழுத்திலான குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட ஓர் அச்சிலக் கூடு அச்சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தது.

தாய், தந்தையார், சகோதரி மற்றும் குட்டித் தம்பிப் பாப்பா ஆகியோருடன் மலைப் பிரதேசத்துக்கு அல்லது பாலைவனப் பிரதேசத்துக்கு ஒரு சந்தோஷப் பயணம் செல்வது மரியமுக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம். அங்கே தங்கையுடன் விளையாடுவது, கயிறடிப்பது, ஆடுவது, காட்டுப் பூக்கள் கொய்வது போன்ற செயற்பாடுகளில் அவள் ஈடுபடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவாள். பூக்களைப் பறித்து அவற்றில் ஒன்றைத் தாய்க்கும், ஒன்றைத் தந்தைக்கும் மற்றொன்றைத் தங்கைக்கும் கொடுப்பதுடன் ஏனையவற்றை மாலையாக்கிக் குட்டித் தம்பியின் கழுத்தில்  அணிவிப்பாள். மாலை மயங்கியதும் தாயாரின் கரங்களுக்குள் அடைக்கலமாகி உறக்கத்தில் ஆழ்ந்து விடுவாள்.

இந்த உலகத்தில் வாழ்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியமைக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் நோன்பு நோற்கும் புனித ரமளான் காலம் பற்றி மரியம் தெரிந்திருந்தாள்.

கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்களைப் போல நோன்பு முடிந்ததும் வரும் பெருநாள் பற்றி மரியம் தெரிந்திருந்தாள். அது கொண்டாட்டங்களுக்கும் பரிசுகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொள்வதற்குமான மகிழ்ச்சிக்குரிய தினம். எதிர் வரும் ரமளான் பெருநாளைப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அன்றைய தினம் எல்லோம் புத்தாடை அணிவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். நீலமும் பச்சையும் கலந்த சில்க் துணியாலானதும் தங்க நிற நூல் கொண்டு அழகு செய்யப்பட்டதுமான உடையை மரியம் சந்தையில் கண்டாள். இந்த ஆடையுடன் தங்க நிற நூல் கொண்டு வடிவமைக்கப்பட்;ட செருப்பும்தான் மரியத்துக்கான பெருநாள் உடைகள் என்று மரியமிடம் தாயார் சாடை காட்டியிருந்தார்.

மரியம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் தெரியுமா? பெருநாளன்று தாயாருடனும் தந்தையுடனும் கைகோத்துப் புதிய ஆடைகள், அணிகலன்களுடன் பெருமையுடன் தெருவில் நடந்து போவதை நினைத்துப் பார்த்தாள். அவளது கற்பனையில் அவளது அழகிய ஆடைகளை கிராமத்தின் ஏனைய பிள்ளைகள் ஆவலுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆயின் அவளது வாழ்நாளின் குறுகிய இடைவெளி மோசமடைந்தது.

கிராமத்துச் சிறுவர்கள் இப்போது விளையாடுவதற்காகத் தெருக்களுக்கு வருவதில்லை. தொடர்ச்சியான எச்சரிக்கை ஒலி அவளது காதில் கேட்கத் தொடங்கியது. சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் கிரகணம் போல் பெரும் நிழலை அவள் வானத்தில் பார்த்தாள். இவ்வாறான நிலைமை எப்போதாவது இரவில்தான் நிகழ்வதுண்டு. இப்போதெல்லாம் இரவு பகல் வித்தியாசமின்றி இந்நிலை தொடர்வதை அவள் கண்டாள்.

மரியத்தினால் செவியுற முடியாதபோதும்  உடலைக் குலுக்கும் அதிர்வுகளை அவளால் உணர முடிந்தது. தொடர்ச்சியாக மேலும் மேலும் துர்க்கனவுகள் கண்டு பெற்றோரின் படுக்கையில் பாதுகாப்புத் தேடித் தினமும் அடைக்கலம் புகுந்தாள். உங்களுக்குத் தெரியுமா... யுத்த விமானங்களின் இரைச்சலையோ குண்டுகள் வெடிக்கும் சத்தங்களையோ மரியம் கேட்டதில்லை. உண்மையில்  அவளது குறுகிய கால வாழ்வில் எதையும் செவியற்றது கிடையாது.

அவளது உடலைக் குலுக்கும் அதிர்வுகளும் சைரன் சத்தங்களும் வலுவான சக்தியுடன் தினமும் அதிகரித்துக் கொண்டே வந்தன. இப்போதெல்லாம் மரியம் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. வீட்டுக்குள்ளேயும் தாயாரை விட்டுத் தூரமாகி இருப்பதும் இல்லை. இன்னும் சொல்வதானால் தனது தாயாரின் ஆடையை அடிக்கடி பற்றிப் பிடித்த படி கூடவே நடமாடினாள். அந்தப் பிடியை விட்டால் எல்லாம் இருள்மயமாகி விடுமோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவளால் உணரவே முடியவில்லை.

சில வாரங்களுக்கு முன்னால் அவளிடமிருந்த குழந்தைச் சிரிப்பும் புன்னகை படிந்திருந்த முகமும் இப்போது அவளிடம் இல்லாது போய்விட்டது. ஆனாலும் 'பெருநாள் சீக்கிரம் வந்து விடும், எல்லாமே மகிழ்ச்சியாகி விடும். கருப்புப் பேய்கள் அகன்று, பழையபடி சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியும். அதன் பிறகு சிறார்கள் அனைவரும் தெருவில் விளையாடுவதற்கு வந்து விடுவார்கள். எங்காவது மீண்டும் சுற்றுலா செல்லலாம்' என்று அவள் தனக்குள் நினைத்தாள்.

ஆனால் அப்படியாக எதுவும் நடக்கவில்லை. ஒரு நாள் இரவில் முழுக் கிராமமும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தில் திழைத்திருக்கையில் பேய்களில் ஒன்று அவளது கிராமத்தின் மேல் மரணத்தை விளைவிக்கும் பெருந்தொகையைக் கொட்டியது.

அழிவுகளையும் இழப்புகளையும் அடுத்த நாட் காலைச் சூரியனின் கதிர்கள் வெளிப்படுத்தின. மரியம்  உயிரிழந்து உடைந்த ஒரு பொம்மை போலத் துவண்டு கிடந்தாள். அவளுடைய கழுத்தில் கிடந்த அச்சிலக் கூடு இணைக்கப்பட்ட தங்கச் சங்கிலி சூரிய ஒளியில் மி;ன்னியது. அவளுக்கு சில அடிகளுக்கு அப்பால் குழந்தை இஸ்ஸாவைக் கைகளால் அணைத்தபடி அவளது தாயார் கிடந்தார். தாயார் அள்றிரவு அணிந்திருந்த வெள்ளை முந்தானை இப்போது கருஞ் சிவப்பு நிறத்தில் குழந்தை இஸ்ஸாவைச் சுற்றியிருந்தது. குழந்தையையும் தாயாரையும் சுற்றியிருந்த இரத்த வெள்ளம் இஸ்ஸா அப்போதுதான் பிறந்தது போல் தோற்றம் தந்தது. குழந்தையை உலகுக்குத் தந்த கன்னி மரியாள் உயிர் வாங்கப்பட்ட நிலையில் அங்கே கிடந்தார்.

மரியம் இனி ஒரு போதும் காடுகளுக்குள் பூக் கொய்து திரியமாட்டாள். இனி ஒரு போதும் கயிறடித்து விளையாட மாட்டாள். காட்டுத் தென்றல் இனி ஒரு போதும் அவளுடைய கூந்தல் கலைத்துக் கன்னத்தைக் கொஞ்சாது. இனி ஒரு போதும் குழந்தை இஸ்ஸாவை மரியம்  ஆசையுடன் கட்டி அணைக்க மாட்டாள். தனது ஒதுக்குப் புறக் கிராமத்தின் புழுதி மண்டிக் கிடக்கும் தெருக்களில் ; தங்க நிற நூல் சரகை கொண்டு பெருநாள் ஆடையையும் புதிய மினுங்கும் பாதணியையும் அணிந்து இனி ஒரு போதும் பெருமை பொங்கத் துள்ளித் திரிய மாட்டாள்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மரியம் இனிமேல் நம்முடன் இல்லை என்பதைத்தான்.  தனது தாயார், தந்தையார், சகோதரி, குழந்தை இஸ்ஸா மற்றும் கிராமத்தில் அவள் அன்பு செலுத்திய, இன்று நம்முடன் இல்லாத அனைவருடனும் அவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்று நம்புவோம்.

அன்றிரவு 9.00 மணிச் செய்தியில் மரியம் குறிப்பிடப்பட்டாள். ஆனால் அவளது பெயரை அவர்கள் சொல்லவில்லை.

      வேறு ஒரு பெயரில் சொன்னார்கள்.

      அதாவது, சண்டையில் ஈடுபடாதவள் என்று!

(மரியமுக்கான பாடல் என்பது இக்கதையை எழுதிய ரோரி அலன் வைத்த தலைப்பு. ரோரி அலன் பற்றிய உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.)

Friday, July 26, 2013

இஸ்லாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சிப் பயங்கரவாதம் !


சவுதி அரேபியாவில் மன்னராட்சிக்கு எதிராகவும் அரசியல் சீர்திருத்தம் கோரியும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதற்காக போராடும் மனித உரிமையாளர்கள் பலரையும் பயங்கரவாதிகளைப் போல கைது செய்து கொடுமைப்படுத்துகிறது சவுதியின் மன்னராட்சி.

பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதைச் சகித்துக் கொள்ள முடியாத ஷேக்குகளின் சட்ட ஆட்சி மேலாண்மை செலுத்துகிறது. மனித உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக், லிபியா, சிரியா என்று பிற நாடுகளின் மீது வரிசையாகப் பயங்கரவாதத்தை அவிழ்த்து விடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய 'ஜனநாயகங்கள்' சவுதி அரேபியாவின் நம்பகமான கூட்டாளிகளாக உள்ளன. தங்களுக்கு எண்ணெய் வளத்தை வாரி வழங்கும் மன்னர் ஆட்சியைப் பாதுகாத்து நிற்கின்றன.

அப்துல்கரீம் அல்காதர் என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள குவாஸிம் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் மட்டுமல்ல, அரேபியக் குடியுரிமை மற்றும் அரசியலுரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரும் கூட. ஆட்சியாளர்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக மனித உரிமை அமைப்பு தொடங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் பேராசிரியரின் அமைப்பு அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்த பிறகு உள்கட்டுமான அமைச்சகம் இப்போலிக் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தியிருக்கின்றது.

புரைடா நகரில் நடந்த அல்காதர் மீதான விசாரணையைப் பார்க்க நீதிமன்றத்திற்குள் அவரது வீட்டுப் பெண்கள் வர முயன்ற போது, ஆண்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று நீதிபதி சொல்லி விட்டார். 

தனிப்பட்ட முறையில் நீதிபதியுடனான முரண்பாடு காரணமாக வழக்கு பதியப்பட்டிருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார் அல்காதர். அல்காதரின் வழக்கறிஞரான அப்துல்சிஸ் அல்-சுபைலியை விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்தனர்.

பிரதிவாதியும், அவரது வழக்கறிஞரும் இல்லாமலேயே ஏப்ரல் 25 அன்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி இப்ராஹிம் அப்துல்லாஹ் எல்-ஹோசினி. இதன்படி அல்காதருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டால் 5 ஆண்டுகள் தண்டனை குறைப்புக்கும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இதே நீதிபதி கடந்த மார்ச் 9 அன்று அம்மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த முகமது அல்-கஹானி, அப்துல்லா அல் ஹமீது ஆகியோர் ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசியதாகவும், நாட்டு முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகவும் கூறி 10 மற்றும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

முகமது அல்-கஹானி இசுலாமிய பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க கோரி 2011-ல் போராடிய போது வெளிநாட்டுக்காரனை பின்னால் உட்கார வைத்து அல்-கஹானியின் மனைவி கார் ஓட்டப் போகிறார் பாருங்கள் என்று கெக்கலித்தனர் நீதிபதிகள். அல்-கைதாவும்இ இம்மனித உரிமை அமைப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பெண்கள் எல்லாம் இணையதளத்தில் குரானை மேற்கொள் காட்டுவதையும் அதற்கு பொருள் சொல்வதையும் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் நீதிபதி சொல்லியுள்ளார்.

அல்சயீத் என்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட போது அவருக்காக வாதாட வந்த குவைத்தை சேர்ந்த வழக்கறிஞரான அம்மாஸ் அல்ஹார்பிக்கு அவர் சவுதியின் பிரஜை இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது.

மனித உரிமை சங்கம் ஆரம்பித்த முகமது அயீத் அல்-ஒடிபி இணையதளம் துவங்க அனுமதி பெறவில்லை என்றும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவே அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவரான எய்சா அல் நெகாபிக்கு கடந்த ஏப்ரல் 29 அன்று மூன்றாண்டு சிறைத்தண்டனையும், நான்காண்டு வெளிநாடு செல்லத் தடையும் விதித்தது நீதிமன்றம். அவரது வங்கிக் கணக்குகளையும், இணையப் பக்கங்களையும் அரசு நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு மாத்திரம் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற போர்வையில் மனித உரிமை ஆர்வலர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசால் வெளியிடப்படவேயில்லை. பலரையும் அவர்களது குடும்ப உறுப்பினர்இ வழக்கறிஞரை சந்திக்கக் கூட அரசு தரப்பு மறுத்து வருகிறது.

அல் ஸாடி என்ற மனித உரிமை ஆர்வலர் சிறையில் 30 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போது உயிருடன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தியை அரசு இருட்டடிப்பு செய்து விட்டது. மார்ச் 21இ 2011 முதல் சிறையில் இருக்கும் அவரை யாருமே இதுவரை சந்திக்க இயலவில்லை. ரகசியமாகச் சிறையிலிருந்து கடத்தி வரப்பட்ட கடிதங்கள் சில ட்விட்டரில் உலவினாலும் அவரை சந்திக்க அவரது மனைவி, தாய்க்கும் கூட அனுமதி கிடையாது.

Saturday, July 13, 2013

அபாய எல்லைக்குள் நுழையும் சவூதியும் ஐ.அரபு. எமிரேட்சும்


(இந்தக் கட்டுரை மூத்த ஊடகவியலாளர் லத்தீஃப் பாரூக் அவர்களால் எழுதப்படடு அவரது வலைத்தளத்தில் இடப்பட்டிருந்தது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இங்கு தந்திருக்கிறேன்.)
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா  நாடுகள், எகிப்திய ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவப் புரட்சிக்குத் தமது எண்ணெய் வருமானத்தை அள்ளி இறைத்திருக்கின்றன. இதன் மூலம் இஸ்ரேலிற்கு பிரயோசனம் தருகின்ற விதத்தில், மற்றொரு கொலைக்களமாக எகிப்தை மாற்றுவதற்கு இவை வழி செய்துள்ளன.

புகழ் பூத்த அரபு வசந்தம் மூலம், ஆறு தசாப்த இராணுவ சர்வதிகார ஆட்சிக்கு முடிவு கண்ட பிறகு உருவான மூர்ஸி தலைமையிலான ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவம் பதவி கவிழ்த்திருக்கிறது. இராணுவப் புரட்சி நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் சவூதி மன்னர் அப்துல்லாஹ், எகிப்திய பாதுகாப்பமைச்சரும், இராணுவத் தளபதியுமான அப்துல் பதாஹ் அல்- ஸிஸிக்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து நடக்கின்ற நிகழ்வுகள், எகிப்தில் குழப்ப நிலையையும், இரத்தக் களரியையும் உருவாக்குவதற்கான துருப்புச் சீட்டாக எகிப்திய இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளதையே தெளிவுபடுத்துகின்றது.  

இராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால பொம்மை ஜனாதிபதி அத்லி மன்ஸூரிற்கு, இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலராகத் தன்னை வர்ணித்துக் கொள்கின்ற சவூதி மன்னர் அப்துல்லாஹ் அனுப்பியுள்ள வாழ்த்துக் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

எகிப்திய வரலாற்றின் முக்கியமான இக்கட்டத்தில், அதன் தலைமைத்துவத்தைத் தாங்கள் ஏற்றிருக்கிறீர்கள் என்ற வகையில், என் பெயரிலும், சவூதி அரேபிய மக்கள் சார்பிலும், தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வாழ்த்துவதன் மூலம், தங்கள் தோள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவு செய்து, எமது எகிப்திய சொந்தங்களின் எதிர்ப்பார்ப்புக்களை எய்தும் வகையில் செயற்படுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

இதே நேரம், ஜெனரல் அப்துல் பத்தாஹினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இராணுவப் படையினருடனும் நாம் உறுதியாகக் கைகுழுக்கிக் கொள்கின்றோம். இவர்கள் இம்முக்கியமான தருணத்தில், எகிப்தை இருண்ட குகையில் இருந்து பாதுகாத்திருக்கிறார்கள். எகிப்துக்கு ஏற்பட இருந்த அபாயத்தின் பரிமாணத்தையும், அது ஏற்படுத்த இருந்த விளைவுகளையும் இறைவன் மாத்திரமே அறிவான். சகல தரப்பினரது உரிமைகளையும் அரசியல் செயன்முறையின் ஊடாகப் பாதுகாப்பதற்கான ஞானமும், மாற்றமும் இம்மனிதர்கள் மூலமாகவே உருவானது”.   
      
சவூதியில் சர்வதிகார ஆட்சியை நடாத்திக் கொண்டு, சவூதி மக்கள் சார்பாக பேசுவதாக சவூதி மன்னர் கூறிக்கொள்வதே ஏற்றுக்கொள்ள இயலாதது. முஸ்லிம் நாடொன்றில் குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாம் விரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு,    அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக அவர் கூறியிருப்பதும் கேலிக் கூத்தானதுதான்.

இராணுவப் புரட்சி இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள், எகிப்திய இராணுவத் தளபதி, அப்துல் பத்தாஹ் அல்- ஸிஸி, மூர்ஸி தலைமையிலான சட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாநாயக அரசை, இராணுவ சதி மூலம் கவிழ்ப்பதற்குரிய நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கிய சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், ஐக்கிய அரபு இராச்சிய அதிபர் கலீபா பின் ஸைத் நஹ்யானிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதில் மிகவும் வருத்தம் தருகின்ற விடயம் யாதெனில், இஸ்லாம் மற்றும் ஜனநாயகத்திற்கெதிரான சதி, இரண்டு புனிதத் தளங்களின் காவலர் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவரினால், நிதி வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமைதான்.

இது தொடர்பில், DEBKA என்ற வாராந்தப் பத்திரிகை கடந்த 04.07. 2013 வியாழக்கிழமை அன்று பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “சவூதி மற்றும் டுபாய் என்பவற்றின் புலனாய்வு மற்றும் நிதி ரீதியான உதவிகள் இல்லாமல், எகிப்திய இராணுப்புரட்சி சாத்தியமாகி இருக்காது. சவூதியும், ஐக்கிய அரபு இராச்சியமும் பணத்தை எகிப்திய இராணுவ ஜெனரல்களின் கால்களில் குவித்தனர். லிபியா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அரபு வசந்தத்தை இவை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் போன பிறகு, அரபு வசந்தம் குறித்து இவ்வாறுதான் இவை முதன் முதலில் கதைத்திருக்கின்றன”.
                           
கெய்ரோவில் வெற்றிகரமான இராணுவப் புரட்சியை மெற்கொண்டதன் மூலம், 2011 இல் தனது நண்பர் ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டமைக்காக தற்போத் சவூதி மன்னர் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். சவூதி அரேபியாவும், வளைகுடா நாடுகளும், தமது அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களைத் திருப்தி செய்வதற்காக இஸ்லாத்தை ஒடுக்கவும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக செயற்பட்டும் வருகின்றன.

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சகோதரத்துவ அரசாங்கம் இராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டமை, நீண்டகால ரீதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது.

கிட்டிய எதிர்காலத்தில் தெற்கெல்லையில் இருந்து வருகின்ற, இராணுவ ரீதியான அபாயங்களை தற்போதைக்கு இஸ்ரேல் சந்திக்காது என்று சொல்லலாம். சகோதரத்துவ அமைப்பின் அதிகாரத்தின் மூலம் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றிருந்த ஹமாஸ் அமைப்பு, தற்போது சீரியஸான பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

எவ்வாறாயினும், நீண்ட காலத்தில் இதனோடு சம்பந்தப்பட்ட அமெரிக்க, இஸ்ரேல், சவூதி, மற்றும் வளைகுடா நாடுகள் பல்வேறு அபாயகரமான விளைவுகளையே சந்திக்கப் போகின்றன.

சவூதி மற்றும் வளைகுடா நாடுகள் தமது செல்வச் செருக்கில் மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றன. இறையருளின் மூலம் கிடைத்த தமது எண்ணெய் வளங்களை இத்தகைய நாசகரமான நடவடிக்கைகளுக்கே அவை உபயோகிக்கின்றன. வறுமையில் வாடி, வதங்கிய தமது கடந்த காலத்தை அவை மறந்து விட்டன. அறுபது ஆண்டு கால சர்வதிகாரத்திற்குப் பிறகு மிக அண்மையில்தான், எகிப்தியர்கள் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். தற்போது மீண்டும் ஓர் இராணுவ ஆட்சிக்குள் தம்மைத் தள்ளிவிட்ட இச்சக்திகளை எகிப்து மக்கள் மன்னிப்பார்களா என்பது சந்தேகமே!

சவூதியும், வளைகுடா நாடுகளும் இதன் மூலம் தமக்கு அபாயகரமானதொரு அத்தியாத்தை  திறந்து கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அறை நூற்றாண்டுக்கு முன், அரபுலகில் மசகு எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. அரபிகள் கல்வியறிவின்றி, ஏழ்மையிலும், மிகவும் பின் தங்கிய நிலையிலும் உலகின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சுத்தமான குடிநீரோ, பாதைகளோ, பாடசாலைகளோ, வீதிகளோ, ஏனைய அத்தியவசியப் பண்டங்களோ அவர்களுக்கு போதியளவில் கிடைக்கவில்லை.  

இயற்கையாக, இறையருளால் கிடைத்த எண்ணெய் வளத்தின் மூலமே அரபுலகு இன்றிருக்கின்ற வளர்ச்சியை எய்தியது. இதற்காக அவர்கள் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இத்தகைய அருள்களை வழங்கிய இறைவனை இன்று அவர்கள் மறந்து செயற்படுவதாகவே தோன்றுகிறது.

சவூதி அரேபியா இன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அடிவருடி நாடாகத் திகழ்கிறது. அமெரிக்க- ஐரோப்பிய- இஸ்ரேலிய சக்திகளின் முஸ்லிம் உலகின் மீதான ஆக்கிரமிப்புக்களுக்கும், மில்லியன் கணக்கானவர்கள் கொலை செய்யப்படுவதற்கும் சவூதி அரேபியா சோரம் போய் இருக்கிறது.

எகிப்தின் தற்போதைய நிகழ்வுகளால் பிரயோசனம் அடையப் போகின்ற பிரதான சக்தி இஸ்ரேல்தான். டோம் ஹெய்டன் குறிப்பிட்டது போன்று, தற்போதைய நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளை அபாயம் சூழந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள இவை, தமது வரையறைகளைத் தாண்டியமைக்கான விலையை விரைவில் கொடுக்கத்தான் போகின்றன

Thursday, July 11, 2013

ரமளானில் ஒரு பகலுணவு


ஹிஜ்ரி 1417 - கி.பி. 1996ம் ஆண்டு.

000

நான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கடை அமைந்திருந்தது. தெருவில் வாகனத்தில் சற்றுத் தரித்து நன்றாக நோட்டம் விட்ட பின்னரே கடைக்குள் நுழைந்திருந்தேன்.

ஒரு சிறிய ஹோட்டல் அது. ஏழு அல்லது எட்டு டொபி போத்தல்களுக்கு நடுவில் கல்லாவில் அமர்ந்திருந்த உரிமையாளர் நிச்சயமாக பெரும்பான்மை இனத்தவர்தான் என்பது உறுதியானது. அந்தக் கடைக்குள் நான்கே நான்கு மேசைகள் மாத்திரம் இருந்தன. அதற்கு மேல் அங்கு இடம் இல்லை. அதில் ஒரு மேசை மூலையில் இரண்டு சுவர்களை அண்டிப் போடப்பட்டிருந்தது. தெருவுக்கு அல்லது கடை முகப்புக்கு முகம் காட்டாமல் அதில் அமர்ந்து கொண்டேன்.

கடையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினேன். சுவரில் பொருத்தப்பட்டிருந்த நீர்க் குழாயடியில் சுவரிலும் சுற்றிலும் பரவியிருந்த அழுக்கு கடை உரிமையாளரைக் கைது செய்யப் போதுமானது. ஏனைய மூன்று மேசையிலும் கொத்தாக ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் சில ஈக்கள் பறந் தன. அவற்றை நான் விரட்டினேன். சுகாதாரப் பரிசோதகர்கள் அங்கு வருவதில்லையோ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. 'வந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் இரண்டாவது தினம் மீண்டும் பொரித்த ஒரு கோழியை உரிமையாளர் சுற்றிக் கொடுத்து விடுவார். அதை அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டுச் சந்தோசமாக இருந்து விடுவார்கள்' என்று எண்ணினேன்.

வெயிட்டர் பையன் வந்து 'என்ன வேண்டும்?' என்று பெரும்பான்மை மொழியில் கேட்டான்.

'சோறு' என்று நானும் பெரும்பான்மை மொழியிலேயே பதில் சொன்னேன்.

சோறு, கறிகளை வைத்து விட்டு அவன் நகர, நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

கடைக்குள் வேறு யாரும் கிடையாது. சாப்பிட்டு முடிப்பதற்குள் மூன்று நான்கு முறை வேறு என்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு அவன் அருகில் வந்தான். அவன் அப்படி அருகில் வருவது  எனக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கடையின் முகப்புப் பகுதியை இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.

தெருவில் கடையைத் தாண்டிச் செல்லும் யாராவது ஒரு முஸ்லிம் நபர் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்ற ஒரு பயம்தான் அதற்குக் காரணம். ஏனென்றால் அன்று றமளான் நோன்பின் பதின் மூன்றாவது தினம். நான் அன்று நோன்பு நோற்காத நிலையில் ஒரு பெரும்பான்மைக் கடையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு தொலைக்காட்சிச் செய்தியறிவிப்பாளன். வானொலி அறிவிப்பாளன்.  கவிதை எழுதுபவன். பலருக்கும் அறிமுகமானவன். எனக்குத் தெரியாத பலர் என்னையறிவார்கள். தெருவில் நடந்து போனால் ஆகக் குறைந்தது இருவராவது புன்னகைப்பார்கள். தாமதித்து நிற்கும் இடத்தில் யாரோ ஒருவர் 'நீங்கள் இன்னார்தானே' என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வதுமுண்டு. சிலர் அதே இடத்தில் க்ண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஆறாகப் பெருக 'அறுக்க' ஆரம்பித்து விடுவதுமுண்டு.

இவ்வாறான ஒரு நிலைமையில் றமளானில் பகல் சாப்பாடு உண்ணும் என்னைக் கண்டால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.

Saturday, July 6, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்!


உறக்கம் கொள்ளவில்லை!

 உறங்கினேன், எகிப்து கண்முன்னால் விரிந்தது...

அலை கடலென மக்கள் திரளும் எதிரணியின் தாக்குதலும் நடைபெறுவதாகக் குட்டிக் குட்டியாகச் செய்திகள் கசிகின்றன.

மீண்டும் கலாநிதி முர்ஸி அவர்கள் பதவிக்கு வரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஒரு செய்தி பேசுகிறது.

 ஒரு வருடம் கூட நிறைவடையாத இஹ்வான்களின் ஆட்சி, தசாப்தங்களின் கனவு என்பதைச் சில கற்றுக் குட்டிகள் தெரிந்து கொள்ளாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இஹ்வான்களையும் இஸ்லாத்தையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இஹ்வான்களைக் கோரமாகக் கொன்று புதைத்து விட்டு அமெரிக்கக் கனவான்களாக ஆட்சி நடத்தியதே எகிப்தின் வரலாறு.

கப்றுகளுக்குள் புதைக்கப்பட்ட குமுறல்களதும் அடக்கி வாசிக்கப் பணிக்கப்பட்ட இதயங்களதும் பெரு மூச்சுதான் ஒரு குறுகிய கால இஹ்வான்களின் அரசு.

 எகிப்தும் அதன் மக்களும் எனது தேசத்தையும் அதில் வாழும் ஒரு மனிதனையும் எனது அயலானையும் விட முக்கிமானவர்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு இஸ்லாமியனும் சர்வதேசத்தின் பிரஜை என்ற அடிப்படையில் எகிப்து பற்றியும் ஒரு கவனத்தைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உண்டு.

 எல்லாவற்றுக்கும் மேலாக இறை நீதியே ஆள வேண்டும் என்ற அழகிய கனவோடு வாழ்க்கை முழுவதுமாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர் பெருமக்களும் இறை நம்பிக்கையாளர்களும் காலங் காலமாக வஞ்சிக்கபட்டே வந்தார்கள் என்பதையும் கொலையுண்டு வந்தார்கள் என்பதையும் சர்வதேச முஸ்லிம் உம்மத் எங்ஙனம் மறக்கவியலும்?

 அறபுத் தேசங்களில் இடம் பெற்று வரும் மாற்றங்களால் தமது நலன்கள் ஆபத்தை நோக்கி நகர்வதைத் தெளிவாகக் கண்டு கொண்ட மேற்குக்கு இம்முறை வியர்க்கவில்லை. அது நடுங்கத் தொடங்கி விட்டது.

எதிர்காலத்தில் ஆழ வேரூன்றிய அராபியத்தை இன்னும் பகிரங்கமாக அழித்தொழிப்பதில் அது தனது முழுச் சக்தியையும் செலவிடும்.

 குறுகிய கால ஆட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக நேரிட்டமைக்கு பலநூறு காரணங்களை ஒவ்வொருத்தர் சொல்ல முடியும். கலாநிதி முர்ஸி மட்டுமல்ல, அவருக்குப் பக்க பலமாக நின்ற இஹ்வான்களும் நேராகவோ மறைமுகமாகவோ தங்களது ஹிக்மத்துகள் மூலம் அரசைக் கொண்டு நடத்தத் திட்டமிட்டது சரியாக இருக்கலாம். நியாயமாக இருக்கலாம். அதுவே சரியானதும் நேர்மையானதும் இஸ்லாமிய வழிகாட்டல் என்றும் கருதியிருக்கலாம்.

 ஆனால் பகைவன் எத்தகையவன் என்ற கணிப்பீட்டுக்கு அவர்கள் சரியான மொழியில் பதில் தரவில்லை. அதாவது பகைவனின் மொழியில் அவனுக்குப் புரியும் மொழியில் இஹ்வான் அரசு பதிலளித்திருக்க வேண்டும்.

 அரசை ஏற்றுக் கொண்ட பிறகு எல்லா எதிரிகளுக்கும் (அரசியல் எதிரிகள் உட்பட) மன்னிப்பு வழங்கிக் கருணை புரிந்தது மாபெரும் தவறு என்பதையே நான் அழுத்தியுரைக்க விரும்புகிறேன்.

 விரும்பியோ விரும்பாமலோ நாம் வாழ்வதெல்லாம் மேற்கத்தேயங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே என்பதை எந்தப் புத்தி ஜீவியும் மறுக்கப் போவதில்லை. அவ்வாறான ஓர் உலகத்தில் அரசியல் நடத்துவது என்பது - அது இஸ்லாமிய அரசாக இருந்த போதிலும் - அதே பாணியிலான ஆட்டத்தோடு ஆரம்பிக்கப்பட வேண்டியது என்பதே எனது கருத்தாகும்.

 இன்னும் சரியாகச் சொல்வதானால் அரசியல் எதிரிகள் ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதை இன்னும் அழகாகச் சொல்வதானால் எவன் எவனெல்லாம் மேற்கின் அடிவருடியாக இருக்கிறானோ அவன் மீது ஓர் வலையை விரித்து வைத்திருந்திருக்க வேண்டும். ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், இஸ்லாமியப் பேரரசின் நலனை விட, சொந்த நாட்டின் நலனை விடத் தனதும் தனக்குப் பக்க பலமாக மேற்கும் இருக்கும் என்று கருதியவர்களைப் போட்டுத் தள்ளி விட்டு மறுவேலை பார்த்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது பத்துப் பதினைந்து பேரைப் பிடித்து உள்ளே போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.

 ஆபத்தானவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை நெடுங் கயிற்றில் விட்டு வைத்திருந்ததன் பலனாக நூற்றாண்டுக் கனவு நொடிக்குள் முடிவுக்கு வந்துவிட்டது.

 நாளையே கலாநிதி முர்ஸி மீண்டும் பதவிக்கு வந்து விடலாம். அல்லது பலநூறு கொலைகளுக்குப் பிறகு இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் இன்னொரு பகுதி நிறைந்த பிறகு வேறொரு இஹ்வான் சகோதரர் பதவிக்கு வரலாம்.

எதிரிக்கான பாஷையைக் கற்றுக் கொள்ளாமல் அவனுக்குப் பதிலடி கொடுத்த படி அரசு செய்யவில்லை என்றால் காலம் முழுவதும் இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் புகழ்பூத்த நிலம் நிறைவதைத் தடுக்க யாராலும் முடியாது.

 என்னுடைய கருத்தோடு யாரும் முரண்படலாம். என்னைத் திட்டலாம். எனக்கு இஸ்லாம் போதிக்க வரலாம். ஆனால் எனது கருத்தில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.

 ஏனெனில் அழிக்கப்பட்ட அல்லது முடித்து வைக்கப்பட்ட அழகிய கனவின் நனவாதலை ஆழ அவாவி நின்றவர்களின் நானும் ஒருவன்!

Wednesday, July 3, 2013

மொகலாய சாம்ராஜ்யத்தின் முழுமதி



02.07.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நான் எழுதிய நாடகம்.