Friday, June 19, 2009

சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 2


காலை வைத்ததும் அச்சிறிய படகு ஆட்டம் எடுத்தது. இந்த வேளையில் நான் படகு செலுத்தும் இளைஞனைப் பார்த்து “உனக்கு நீந்தத் தெரியுமா?” என்று கேட்டது தலைவருக்குப் பிடிக்கவில்லை. என்னை முறைத்துப் பார்த்தார்.


எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அபசகுனமான வார்த்தைகள் பேசுவதை வலுக் கட்டாயமாகக் கண்டிப்பவர் ஜின்னாஹ். இந்த விடயத்தில் என்னை விட அல் அஸ_மத்துடன் அடிக்கடி தர்க்கப்படுவார். அஸ_மத் எல்லா விடயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் மறு பக்கத்தை நுணுக்கமான அவதானத்துடன் கவனிப்பவர். தலைவரின் முறைப்பை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “எனக்கு நீச்சல் தெரியாது” என்று படகோட்டிக்குச் சொன்னேன். அது படகோட்டிக்குச் சொன்ன பதில் அல்ல. உடம்பில் நீர் கட்டினால் டாக்டரால் மருந்து தரமுடியும். நீருக்குள் விழுந்தால் அதனுள் விழுந்துதான் காப்பாற்ற முடியும். மாத்திரையோ மருந்தோ ஆளைக் காப்பாற்றிய பிறகுதானே சாத்தியப்படும். படகோட்டி தனது சேவை அனுபவத்தை மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டு இயந்திரத்தை முடுக்கினான். படகோட்டியின் விபரத்தின் படி 12 மீற்றர் ஆழமான அந்நீர்ப் பரப்பில் படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.


அந்த இயந்திரப் படகுப் பயணம் ஒரு சுகமான அனுபவம். ஆலப்பி மாவட்டம் 1957 ஆகஸ்ட் 17ம் திகதி உருவாக்கப்பட்டது. 1990ல்தான் அதற்கு ஆலப்புழா என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கேரளத்தின் எர்ணாகுளம், கோட்டயம், பதனம்திட்ட, கொல்லம் ஆகிய மாவட்டங்களால் நிலப்பரப்பாலும் அரபுக்கடலால் மறுபுறத்திலும் எல்லையைக் கொண்டது ஆலப்புழை மாவட்டம். சிறிய, மிக நேர்த்தியான, இயற்கை அழகு மிகுந்த நகரமான ஆலப்புழையின் தெருவெங்கும் பெருமரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஒரு முறை சுற்றி வந்தால் புதிய ஒருவரால் இரண்டாம் முறை எவ்விதச் சிரமங்களுமில்லாமல் தனியாக வலம் வரலாம். “ஆலப்புழா என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாகும்” என்று ஜேர்மனியைச் சேர்ந்த அகராதித் தொகுப்பாளரான கலாநிதி குண்டர்ட், சொல்கிறார். புழா என்பது ஆறு என்று அர்த்தப்படும் என்று குறிப்பிடும் அவர் “ஆலப்புழையானது விசாலம் பொருந்திய அரபுக் கடலில் ஆறுகள் ஊடறுக்கும் நிலத்தின் சிறப்படையாளம்” என்று சொல்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டு காலத்துள் ஆலப்புழைக்கு வந்த ஆங்கிலேயரான கேர்ஸன் பிரபு இப்பிரதேசத்தின் அழகில் மயங்கி “இயற்கையானது அதன் உச்ச வள்ளற்றன்மையை இந்த நிலத்துக்கு வாரி வழங்கியுள்ளது” என்றும் “ஆலப்புழை கிழக்கின் வெனிஸ் ஆகும்” என்றும் வர்ணித்துள்ளார்.


ஆலப்புழையூடாக மூன்று முக்கிய நதிகள் ஓடுகின்றன. மணிமாலா ஆறு, பம்பா ஆறு, அச்சன் கோவில் ஆறு என்பவே அவை. இவை தவிர வெம்பநாத், காயாம்குளம் ஏரி ஆகிய ஏரிகளும் உள்ளன. திரும்பும் இடமெல்லாம் வாய்க்கால்களைக் காணலாம். தோணிகளில் மக்கள் அவற்றில் பயணம் செய்கிறார்கள். நகரத்துக்குச் சென்று வர அவர்களது பிரதான போக்குவரத்து வாகனமாக தோணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆலப்புழை தும்புப் பொருட்களுக்குப் பிரசித்தி பெற்றது. கேரளாவின் அநேகத் தும்புத் தொழிற்சாலைகள் ஆலப்புழையை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. அதற்குக் காரணம் அங்கு பெருமளவில் காணப்படும் தென்னை மரங்கள். வருடமொருமுறை நேரு கிண்ண படகுப் போட்டி இங்கு நடைபெறுகிறது. அதை ரசிக்க ஏராளமான உள்@ர்வாசிகளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் கூடுகிறார்கள். தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செய்கிறார்கள். குளிரூட்டப்பட்ட ஓர் அறை, இரு அறைகள் கொண்ட பிரம்மாண்டப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. நீர்ப்பரப்பில் படகிலேயே இராத்தங்கலும் செய்ய முடியும். மீன்களை அங்கேயே பிடித்துச் சமைத்துத் தருகிறார்கள். ஆனால் அவ்வாறான ஒரு படகு எங்களுக்குக் கிடைக்காதது பெரும் துரதிர்ஷ்டம்தான். ஏனெனில் அவ்வாறான படகுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தன. சில படகுகள் திருத்தங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தன. பன்னிரண்டாயிரம் ரூபாய் வரை தருவதாகக் கேட்டுப் பாரத்தும் பதிவை மாற்ற முடியாது என்று மறுத்து விட்டனர். எனவே ஆட்டா ஓட்டுனர் தாஜூதீன் சிறிய இயந்திரப் படகு ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார்.


கிட்டத்தட்ட நான்கு மணி நேரப் பயணம் அது. பல களப்புப் பிரதேசங்க@டாக படகு தனது பயணத்தைத் தொடர்ந்தது. முன்னும் பின்னுமாக பல அற்புதமான காட்சிகள். பல படகுகள் எம்மை எதிர்கொண்டும் எமது போக்குடன் இணைந்தும் பயணம் செய்தன. பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சொந்தமான குளிரூட்டப்பட்ட படகுகளில் மேலைத் தேசத்தவர் பயணம் மேற்கொள்வதைக் காணக் கூடியதாக இருந்தது. படகு ஒரேயிடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வரவில்லை என்பதை அந்த நான்கு மணி நேரத்திலும் நான் அவதானித்தேன்.


இடைக்கிடையே இலக்கியம் பேசினோம். குறிப்பாக மலையாள இலக்கியவாதிகள் எமது கலந்துரையாடலில் இடம்பெற்றனர். சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை, குமரன் ஆசான், அடூர் கோபால கிருஷ்ணன், சச்சிதானந்தன், மாதவிக்குட்டி, எம்.ரி. வாசுதேவன் நாயர், எஸ்.கே. பொற்றேகாட், வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை என்று இலக்கியவாதிகளும் மம்முட்டி, மோகன்லால், கோபால் மேனன், நெடுமுடி வேணு, ரேவதியாக அறிமுகமான ஆஷா கேளுண்ணி என்று சினிமாத்துறை சார்ந்தவர்களும் கே.ஜே.யேசுதாஸ், சித்ரா என்று பாடகர்களும் எமது பேச்சினிடையே வந்து சென்றனர். எர்ணாகுளம், ஆலப்புழைப் பகுதிகளில் எங்கும் கே.ஜே.யேசுதாஸ் ஒலித்துக் கொண்டிக்கிறார். நமக்கு மிகவும் அறிமுகமானவர்களான பஷீரையும் தகழியையும் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினோம். சிவசங்கரன்பிள்ளை, தகழி என்ற இடத்தைச் சேர்ந்தவர். அந்த இடம் ஆலப்புழையின் குட்டநாடு தாலுகா பிரிவில்தான் இருக்கிறது. 1947ல் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’,1956ல் வெளிவந்த ‘செம்மீன்’, 1978ல் வெளிவந்த ‘கயிறு’ ஆகிய நாவல்கள் அவரை இலக்கியப் பெருவெளியின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றன. ‘செம்மீன்’ நாவல் பத்தொன்பது மொழிகளில் பெயர்க்கப்பட்டது. சினிமாவாக எடுக்கப்பட்டு பதினைந்து மொழிகளில் தழுவப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் நடித்த ஷீலா என்ற நடிகை கடைசிவரை செம்மீன் புகழ் ஷீலா என்றே அழைக்கப்பட்டார். கயிறு நாவல் அவரது அதிசிறந்த படைப்பாகப் பேசப்பட்டது. 1984ல் இந்திய அரசின் உயர் இலக்கிய விருதையும் 1985ல் பத்மபூஷண் பட்டத்தையும் பெற்றவர். 1999ல் ஆலப்புழையிலேயே அவர் காலமானார். தகழி சிவசங்கரன் பிள்ளையைக் கௌரவிக்கு முகமாக இந்திய அரசு 2003ம் ஆண்டு முத்திரையொன்றை வெளியிட்டது. ஆலப்புழையில் நாம் அறியாத கவிஞர் ஒருவரும் வாழ்ந்துள்ளார். ஏறக்குறைய 500 சினிமாப் படங்களுக்கு 2000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் அவர். பெயர் வயலார் ராமவர்மா. மலையாள சினிமாப் பாடல்களின் முன்னோடி எனக் கருதப்படும் இவருக்கு 1974ம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 1961ல் கேரள சாகித்திய அகதமி விருது பெற்ற அவர் 1975ல் காலமானார். பிரபல்யம் பெற்ற குடும்பத்தில் அவர் பிறந்த போதும் கம்யூனிஸ இயக்கத்தில் இறங்கி மத, இன வேறுபாடுகளுக்கெதிராகச் செயற்பட்டவர்.


படகுச் சவாரி செய்யும் ஆசைக்குள் மீன் சாப்பிட வேண்டும் என்று ஒரு உப பிரிவு எனக்குள் இருந்தது. ஏறும் போதே படகோட்டியிடம் சொல்லி வைத்திருந்தேன். இடையில் நிலப்பரப்பொன்றில் நிறுத்தி ஒரு கடைக்கு அழைத்தான் படகோட்டி. இரண்டு பெரிய மீன்களைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தான் கடைக்காரன். ஐஸ் பெட்டியில் வைத்த மீன் சாப்பிடவா இவ்வளவு தூரம் வந்தது? என்று நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தனர். எனவே அதைத் தவிர்த்து விட்டு அருகில் இருந்த மலையாள மூலிகை வைத்திய நிலையத்துக்குச் சென்றோம். அந்த இடம் நீர்ப்பிரதேசத்துக்குள் அமைந்திருந்த ஒரு சிறு தீவுப்பகுதியாகும். அங்கே பலவகையான நாட்டு மருந்துகள் இருந்தன. அங்கிருந்தோர் நன்றாகத் தமிழில் உரையாடினார்கள். வெளிநாட்டவர்கள் அங்கு வந்து மூலிகை எண்ணெய் மஸாஜ் செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு விதமான மஸாஜ்; செய்வதற்கு எடுக்கும் நேரமும் தொகையும் விபர அட்டையில் அச்சிடப்பட்டிருந்தன.


பயணத்தின் இடையில் மற்றொரு கரையில் தேனீர் அருந்த நிறுத்தினோம். ஒரு முஸ்லிம் பெண்மணியின் தேனீர்க்கடை அது. இந்தியாவில் எந்தக் கடையில் தேனீர் அருந்தினாலும் சுவைக்கவில்லை. காரணம் நமது நாட்டுத் தேயிலை அத்தனை சுவையானது. அந்த ருசி இந்தியத் தேயிலையில் இல்லை என்பதே எங்களது அபிப்பிராயமாக இருந்தது. இந்தப் படகுப் பயணம் முடியும் வரை நாங்கள் கிட்டத்தட்ட அந்தரத்தில் மிதப்பது போன்ற சந்தோஷம் நிறைந்திருந்தது.


நீர்ப்பயணம் வாழ்வின் நெருக்குதல்களில் இருந்து நமது சிந்தையைத் திசை திருப்பி ஒரு இலேசானதும் திருப்தியுற்றதுமான வாழ்வின் பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆறுகளும் கடலும் தமக்குள் வைத்திருக்கின்ற அதிசயங்களில் ஒரு சிறு வீதத்தையே அதன் மேற்பரப்புகளில் நமக்குக் காட்டுகின்றன என்று நான் நினைக்கிறேன். தொடுவான் வளைவையும் நீர்ப்பரப்பின் எல்லையில் அஸ்தமிக்கும் சூரியனையும் கண்டு தன்னை மறந்து நிற்காதவர் யார்தான் உள்ளனர்? அடுத்த நாள் மைசூருக்குச் சென்று விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம்.


அன்றிரவு உணவுக்குப் பின்னர்தான் அதற்கான பயண வழிகள் பற்றித் தேட ஆரம்பித்தோம். சொகுசு பஸ்கள் கூட எர்ணாகுளத்திலிருந்துதான் புறப்படுகின்றன என்று அறிந்தோம். வேறு வழியின்றி அடுத்த நாட்காலை எர்ணாகுளத்துக்குச் சென்று அங்கிருந்து தோதுப்பட்ட வழி எதுவோ அதன்படி முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். நாங்கள் வேகமாக நடந்து போகும் போது நம்முடன் வருகின்ற ஒருவர் குறைந்திருப்பது எமக்குப் புரியவரும். அவர் - தாஸிம் அகமதுதான். சிலவேளை ஆளைக் காணாமல் அப்படியே பாதையோரத்தில் காத்திருப்போம். வரும்போது ஏதாவது ஒரு பொருளுடன் அல்லது வித்தியாசமான ஒரு தகவலுடன் திரும்பி வருவார். அன்றிரவு அவர் திரும்பி வந்தது ஒரு சீப்பு நேத்திரம் பழங்களுடன். நான் கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டேன். ஆனால் பழங்களைச் சாப்பிடும் போது சிரித்துக் கொண்டே சாப்பிட்டேன். இலங்கையில் ஒரு நேத்திரம் பழம் 160.00 ரூபாய் முதல் 225.00 ரூபாய் வரை விற்கிறது என்று சொன்ன அவர் ஒரு கிலோவுக்கும் இந்தியப் பணத்தில் 20.00 தான் கொடுத்து வாங்கியதாகச் சொன்னார். அதாவது இலங்கைக் கணக்கில் 50.00 ரூபாய்தான்.


காலை 8.00 மணிக்கு ஆலப்புழை பஸ் நிலையத்துக்கு வந்து 30 நிமிட நேரம் காத்திருந்து கூட்டமில்லாத பஸ் ஒன்றில் ஏறி எர்ணாகுளம் வந்தடைந்தோம். காலைச் சாப்பாட்டுக்காக ஒரு கடையில் நுழைந்தால் அங்கும் அப்பம்தான் தெரிவுக்குரிய எங்களது உணவாக இருந்தது. சாப்பிட்டு விட்டு மைசூர் செல்வதற்கான வழிகளை அந்தக் கடையிலேயே விசாரித்தோம். கோழிக்கோட்டுக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து பஸ் பிடிக்கலாம் என்று சொன்னார்கள். எர்ணாகுளம் ரயில் நிலையத்தை அடைந்த போது 11.00 மணிக்கு கோழிக்கோடு செல்லும் ரயில் இருந்தது. முதலாம் வகுப்புப் பயணச் சீட்டுப் பெற்றுக் கொண்டு ரயில் புறப்படும் வரை வழமை போல ரயில் நிலையப் புத்தகக் கடை, சிற்றுண்டிக் கடையென்று உலாவினோம். ரயிலில் எங்களுக்கு என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை. இந்த ரயிலிலும் எமது அறுவர் பகுதிக்குள் எவரும் பயணச் சீட்டுடன் நுழையவில்லை. நாம் அமர்ந்த பிரிவு கதவுடன் கூடியது. அவசியமானால் மூடிவிட்டு உறங்கிக் கொள்ளக் கூடியது. இரண்டு முறை பயணச் சீட்டுப் பரிசோதகர்கள் வந்து சென்றனர்.


மதிய உணவு வேண்டுமா என்று கேட்டு வந்த இளைஞனிடம் மரக்கறி புரியாணிக்கு ஆர்டர் கொடுத்தோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு ஐந்து நிமிட நேரத்துக்கு முன் மற்றொரு இளைஞன் வந்து “நாலு வெஜிடபிள் புறியாணிங்களா சார் ஆர்டர் பண்ணீங்க?” என்று கேட்டான். ஆம் என்ற போது, புறியாணி முடிந்து விட்டதாகச் சொல்லி இரண்டு புறியாணிகளையும் இரண்டு சோற்றுப் பார்சல்களையும் தந்து பணம் பெற்றுச் சென்றான். உணவைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எம்மிடம் ஆர்டர் எடுத்த இளைஞன் எமக்கான புறியாணிப் பார்சல்களுடன் வந்து நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து அதிர்ந்து நின்றான். நாங்கள் நடந்ததைச் சொன்னோம். அவர்களுக்குள் நடக்கும் வியாபாரப் போட்டி இது. தந்திரமான வியாபாரம்! பிற்பகல் 3.00 மணியளவில் கோழிக்கோட்டை அடைந்தது ரயில்.


இறங்கினால் வாகன மயமாக இருந்தது. ரயில் நிலையத்தி மோட்டார் சைக்கிள்கள் ஆயிரக் கணக்களில் நிறுத்தப்பட்டிருந்தன. தூர இடங்களில் வேலைக்குச் செல்பவர்களது மோட்டார் சைக்கிள்களாக அவை இருக்க வேண்டும். நெருக்கமான பாதையைக் குறுக்கறுக்கவே சிரமமாக இருந்தது. பதினைந்து நிமிடம் தாமதித்து நின்று ஒருவாறு கைகளைக் காட்டிப் பாதையைக் கடந்து ஓர் ஓரத்துக்குச் சென்று நின்று பஸ் நிலையம் செல்ல ஆட்டாவொன்றை நிறுத்தினோம். கோழிக்கோட்டில் நால்வர் ஒரு ஆட்டாவில் பயணம் செய்ய முடியாது. எனவே இரண்டு ஆட்டாக்களை நிறுத்தி ஏறிப் புறப்படுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆட்டாப் பயணங்களில் மிக நிதானமான ஓட்டத்தைக் காணக் கூடியதாக இருந்தது. முண்டியடிப்பது, பொதுமக்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் ஓட்டுவது போன்றவற்றை அங்கு எம்மால் காணமுடியவில்லை.


கோழிக்கோட்டுக்கும் மைசூருக்குமிடையில் ரயில் பாதை கிடையாது. அப்படிப் போவதானால் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுத்தான் போக வேண்டும். இந்த விபரங்களை ரயிலிலேயே பெற்றுக் கொண்ட நாம் பஸ் நிலையத்தை அடைந்தோம். நான்கு மணிக்கு மைசூர் செல்லும் பஸ் புறப்படும் என்ற தகவல் கிடைத்தது. சொகுசு பஸ் சேவை உண்டா என்று முன்பதிவு மேற்கொள்ளும் நபரிடம் கேட்டேன். நடிகர் விஜயைப் போல வாயைத் திறக்காமல் பஸன்ஜர்... என்று ஏதோ சொன்னார். மீண்டும் கேட்ட போது மீண்டும் அந்தச் சொல் மட்டுமே ஆம் என்ற தலையாட்டத்துடன் வெளிவந்தது. பஸ் வந்து நின்ற பிறகுதான் அதில் ‘ஃபாஸ்ட் பெசஞ்ஜர்’ என்று எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. அதாவது நமது கடுகதி அல்லது ‘லிமிட்டட் ஸ்டொப்’ என்று அர்த்தம். ஏறினால் அதில் சொகுசும் இல்லை, சுண்ணாம்பும் இல்லை. ஏனைய பஸ்களை விட ஆசனங்கள் சற்று உயரத்தில் இருந்தன. அவ்வளவுதான்! கோழிக்கோட்டில் மாத்யமம் பத்திரிகைக் காரியாலயத்துக்குச் சென்று பி.கே.பாறக்கடவு என்ற எழுத்தாளரைச் சந்திப்பதும் எமது பயணத்தில் ஓர் அங்கமாக இருந்தது. ஏனெனில் அவரது சிறுகதைத் தொகுதியை அல் அஸ_மத் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.


ஆனால் அவரைச் சந்திக்கச் சென்றால் கோழிக் கோட்டிலேயே அன்றைக்குத் தங்க நேரும் என்பதாலும் ஏற்கனவே அவருடன் தொடர்பு கொள்ள முடியாது போனதாலும் முயற்சியைக் கைகழுவ வேண்டி வந்தது. இந்த பஸ் பயணத்தில் நான் கண்ட இயற்கைக் காட்சிகள் மறக்கக் கூடிதாக இல்லை. பாதைகளும் பகுதிகளும் ஊடறுத்த கிராமங்களும் நகரங்களும் அழகு கொழிப்பவை. கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்களாக அதாவது இருட்டும் வரை நான் பஸ் யன்னலூடாகப் பார்த்து ரசித்துக் கொண்டே வந்தேன். கண்டியிலிருந்து மஹியங்கனை வழியாகச் செல்லும் போது வரும் ஊசி வளைவுகள் இங்கும் இருந்தன. ஆனால் மலையில் முக்கி முக்கி ஏறிய பஸ் இறக்கத்தில் பயணிக்காதது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தப் பாதை தமிழ் நாட்டுக் கூடாகச் சென்றே கர்னாடகா செல்கிறது என்று அஸ_மத் சொன்னார். இம்முறை அவர் கணக்கு விடுவதாக எனக்குத் தோன்றவில்லை. வரை படத்தைப் பார்த்த போது அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. நான்கு பதினைந்தளவில் புறப்பட்ட பஸ் இரவு 11.00 மணிக்கு மைசூரை அடைந்தது.


ஜின்னாஹ் ஏற்கனவே ஒரு முறை மைசூர் வந்த போது தங்கியிருந்த ஹோட்டலுக்கு எம்மை அழைத்துச் சென்றார். அறைக்குச் செல்வதற்கு முன் தெருவோரத்துக்குச் சென்று ஒரு காப்பி அருந்தலாம் என்ற வேண்டு கோளை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். தெருவோரத் தேனீர்க்கடைக்கார வயோதிபருக்குத் தமிழ் புரியுமோ என்ற சந்தேகத்தில் காபி என்று சொல்லி நான்கு விரல்களைக் காட்டினோம். “நாலு பேரா?” என்று அவர் தமிழில் கேட்டார். தமிழில் கதைக்கத் தொடங்கியதும் புதுப் பால் பொதியுடைத்து புதுக் கோப்பி இட்டு அவர் தயார் செய்து தந்த காப்பி அந்நள்ளிரவில் அமுதமாய் இனித்தது.

சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 1

“கேரளாவில் படகுச் சவாரி செய்யும் இடமொன்றுக்குப் போக வேண்டும். எப்படிப் போகலாம்?” என்று தமிழ் நாட்டில் வாழும் கேரள நண்பரைக் கேட்டேன்.
“எர்ணாகுளம் போயி... அங்கேயிருந்து ஆலப்பிக்குப் போகணும்” என்றார்.
இவ்வருடச் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கும் எனது புத்தகங்களின் அறிமுக விழாவுக்கு மிடையில் இருந்த ஐந்தாறு நாட்களில் இந்தியாவின் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன்தான் நாங்கள் இந்தியாவுக்குச் சென்றிருந்தோம். கேரளா படகுச் சவாரி, மைசூர் மகாராஜாவின் மாளிகை, தீரர் திப்பு சுல்தானின் நினைவாலயமும் அவரது ஆட்சிப் பிரதேசமும் மற்றும் கோழிக்கோட்டில் ஒரு பத்திரிகைக் காரியாலயம் ஆகியன எங்களது பட்டியலில் இருந்தன.
எங்களது நால்வர் அணியின் ஆட்சித் தலைவராக ஜின்னாஹ்வும் எதிர்க்கட்சித் தலைவராக நானும் கணக்கு வழக்கு மற்றும் நலன்புரி இயக்குனராக அல் அஸ_மத்தும் பிரதம நீதியரசராக தாஸிம் அகமதுவும் மானசீகமாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாரானோம்.
சென்ரல் ரயில்வே நிலையத்தில் 15.01.2009 அன்று பி.ப. 3.00 மணியளவில் புகையிரதத்தில் ஏறியமர்ந்தோம். ஒரு ரயில் பெட்டியின் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட ஒரு பகுதியில் அறுவர் பயணம் செய்யும் பிரிவில் எங்களது இலக்கங்கள் இருந்தன. அருகே இருவர் பயணம் செய்யும் பகுதியில் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது ஓர் ஒல்லியான பையனும் ஓர் அழகான இளம் பெண்ணும் வந்து அமர்ந்தார்கள். இந்திய ரயில்கள் இரவு பகலாகப் பயணம் செய்வதால் பல ரயில் பெட்டிகள் அமர்வதற்கும் உறங்குவதற்கும் ஏற்றாற் போல் அமைந்துள்ளன. எமக்கு ஒதுக்கப்பட்ட அறுவர் பிரிவில் ஏனைய இருவர் பயணம் செய்யவில்லை என்பதால் எமக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஆனால் எமக்கு அருகில் நடைவழிக்கு அப்பால் இருவர் பிரிவில் அமர்ந்த இளம் பெண் அப்பையனுடன் மலையாளத்தில் மூச்சு விடாமல் கதைக்க ஆரம்பித்தாள். ரயில் நகர ஆரம்பித்தது.
இப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் தனிப்பட்ட வாகனம் ஒன்றில் பயணம் மேற்கொள்வது அல்லது சொகுசு பஸ் வண்டியில் பயணம் செய்வது என்று முடிவு செய்திருந்தோம். எனது கருத்தை நண்பர் ஏவி.எம். ஜாபர்தீன் நேராக மறுத்தார். பஸ்காரன் கன்னாபின்னா என்று ஓட்டுவான், வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 15.01.2009 அன்று பயணஞ் செய்யக் கூடியதாக எர்ணாகுளத்துக்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி. பயணச் சீட்டுக்கள் நான்கை பதிவு செய்ய ரயில்வேயைத் தொடர்பு கொண்டால் ஆசனங்கள் இல்லையென்றார்கள். நண்பர் ஜாபர்தீன் விமானத்தில் பயணத்துக்கு விசாரணைகளை மேற்கொண்டார். விமானத்தில் போகலாம் என்றால் பெங்க@ருக்கு அல்லது திருவனந்தபுரத்துக்கும் கோழிக்கோட்டுக்குமான விமான சேவைகள் நமது தேதி, நேரங்களுக்கு ஒத்து வருவதாக இல்லை. தவிரவும் ரயில் பயணம் போல விமானப் பயணம் அமையவும் மாட்டாது.
வேறு வழி தெரியாததால் எழும்பூருக்குச் சென்று அங்குள்ள பிரபல சொகுசு பஸ் நிறுவனத்தில் விசாரித்தோம். சொகுசு பஸ் நாங்கள் போக நினைக்காத திசைகளில் பயணப் பாதை கொண்டிருந்தது. அதில் பயணம் செய்தால் நடுச்சாமத்தில் நடுத்தெருவில் இறங்கி அடுத்த பஸ் தேடும் நிலை உருவாகும் என்று புரிந்தது. பொடி நடையாகத் தெருவுக்கு வந்த போது ஒரு தனியார் ட்ரவல்ஸ் விளம்பரப் பலகை தெரிந்தது. ஒரு இளைஞன் ஒரு சிறிய கடையின்; முன் பகுதியில் ஒரு மேசை முன் உட்கார்ந்திருந்தான். உள்ளே இரண்டு கணினிகள் தெரிந்தன. எர்ணாகுளம் போக நான்கு ரயில் பயணச் சீட்டு புக் பண்ணித் தருவீர்களா என்று கேட்டோம். சற்று நேரத்தில் “நாளை ஒரு விஷேட ரயில் போகிறது. பண்ணிடலாம் சார்” என்றான். தலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டான். நாளைக் காலை நீங்கள் இருக்குமிடத்துக்கு ரயில் பயணச் சீட்டுக்கள் வந்து சேரும் என்று சொன்னான். சொன்னபடி அடுத்த நாள் பயணச் சீட்டுக்கள் கிடைத்தன. அந்தப் பயணத்தைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு முறை ரயிலில் பிரயாணம் செய்திருக்கிறேன். குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஒரு விமானத்தில் கிடைப்பதை விடச் சிறந்த கவனிப்பு இருக்கும். வேளைக்குத் தேனீர், உணவு எல்லாம் பரிமாறுவார்கள். தலையணை, வெள்ளைப்போர்வை, குளிருக்கான போர்வையென்று வெகு அமர்க்களமாக இருக்கும். இப்போது நாங்கள் பயணம் செய்து கொண்டிருப்பது குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பில். உணவு, தேனீர் தவிர அனைத்து வசதிகளும் இருந்தன. ஒரே அலைவரிசை கொண்டவர்களது நீண்ட தூர இரயில் பிரயாணம் ரசித்து அனுபவிக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது. அவ்வப்போது கதைப்பது, விவாதிப்பது என்று பொழுது கழிந்தது. பேச்சு நின்றால் கையில் தயாராக வைத்திருந்த சஞ்சிகைகளை வாசித்தோம். ரயில் எர்ணாகுளத்தையும் தாண்டி நீண்ட தூரம் பயணம் செய்கிறது என்பதாலும் எர்ணாகுளத்தை அதிகாலை 2.30க்கு அடையும் என்று சொல்லியிருந்ததாலும் உறங்குவதற்குப் பயமாக இருந்தது, ஆனால் டாக்டர்கள் இருவரும் எந்தக் கவலையும் இல்லாமல் நீட்டி நிமிர்ந்து உறங்க ஆரம்பித்தார்கள்.
இரட்டை இருக்கைகளில் அமர்ந்த ஜோடி ரயிலில் ஏறியது முதல் விடாமல் கதைத்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பெண்தான் அதிகம் பேசினாள். எனது வாழ்நாளில் அவ்வாறு மணிக்கணக்கில் தொடர்ச்சியாகப் பேசிய ஒரு பெண்ணை நான் கண்டதில்லை. விடாமல் பேசினாள். அந்தப் பையன் இருக்கையை ஒன்றாக்கிய பிறகு இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கால்களை நீட்டி போர்வையால் மறைத்தபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். இரவு பத்து மணியளவில் நானும் அஸ_மத்தும் இருபக்க மேல் தட்டில் ஏறிச் சாய்ந்திருந்தோம். சஞ்சிகையைக் கையில் பிடித்தபடி நீண்ட நேரம் வாசித்ததால் கை நோவெடுக்க சஞ்சிகையால் முகத்தை மூடி சற்றுச் சாய்ந்தேன்.
அடுத்த சில நிமிடங்களில் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சட்டென்று பிரதான மின் விளக்கு அணைந்தது. எனது படுக்கையருகே அதன் சுவிட்ச் இருந்தது. சஞ்சிகையை எடுத்து விட்டுத் தலைலயைத் தூக்கிப் பார்த்த போது அப்பெண் நாங்கள் இருந்த இடத்துக்குள் நுழைந்து மின் விளக்கை அணைத்துச் செல்வது தெரிந்தது. அவள் இருக்கையில் அமர்வதற்கு முன்னர் நான் சுவிட்சைப் போட்டு விளக்கை எரிய விட்டேன். அவள் வெட்கத்தில் திரும்பிப் பார்க்காமல் சுருண்டு படுத்தாள். அவ்வளவுதான் அதன் பிறகு அந்த ரயில் பெட்டி மிகவும் அமைதியாக இருந்தது.
சொன்னபடி அதிகாலை 2.30க்கு எர்ணாகுளத்தையடைந்தது ரயில். எர்ணாகுளம் இந்தியாவின் தென்மேற்கே அமைந்துள்ள கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களில் ஒன்று. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பதனம்திட்ட, கோட்டயம், இடுக்கி, திருசூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், கசரகாட் ஆகியன ஏனையவை. மாநிலத்தின் தலை நகர் திருவனந்தபுரம்.
கேரளத்துக்குக் ‘கடவுளின் பூமி’ என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமன் கடலிடமிருந்து காப்பாற்றிய நிலப்பரப்பே கேரளம் என்று பழங்காலத்தில் கருதப்பட்டு வந்தது. வரலாற்றைப் படிக்கின்ற போது சீனர், ரோமர், கிரேக்கர், அசீரியர் மற்றும் எகிப்தியர் வியாபாரத்துக்குப் பொருத்தமான ஓர் இடமாக கேரளாவை அடையாளங் கண்டார்கள். கேரளர்களின் கொல்லம் எனும் ஆண்டுக் கணக்கு கி.பி. 9ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொடங்குகிறது. சேரமான் பெருமாள் நிறுவிய சேர ராஜ்யப் பிரதேசமாக இது இருந்தவேளை இங்கு தமிழ் மொழி பேசப்பட்டது என்பது வரலாறு.
இன்று கோழிக் கோடு என்று அழைக்கப்படும் கள்ளிக் கோட்டைக்கு வஸ்கொ டகாமா வந்தது 1498ல். அவ்வேளை மிளகு வியாபாரம் சூடுபிடித்திருந்தது. ஒரு காலப் பிரிவில் மௌரியர்களும் மொகலாயர்களும் தங்களது ராஜ்யங்களை இங்கு நிறுவினார்கள். இக்காலப் பிரிவில்தான் போர்த்துக்கேயர்களை கள்ளிக் கோட்டையிலிருந்து டச்சுக்காரர்கள் துரத்தியடித்தார் கள். 1766ல் மைசூர் மகாராஜாவான ஹைதர் அலி வடகேரளப் பிரதேசத்துக்கும் கள்ளிக் கோட்டைக்கும் படையெடுத்தார். 1792ல் அவரது புத்திரரான திப்பு சுல்தான் பிரிட்டிஷாருடன் மேற்கொண்ட ஒப்பந்தமொன்றின்படி கேரளத்தை விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. திருவாங்கூர், மலபார், கொச்சி என மூன்று பெரும் பிரிவுகளாயிருந்த கேரளா 1949ல் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1956ல் கேரளா என்ற பெயரில் அது இந்திய அரசின் ஒரு பிரிவாக மாறியது. கேரளாவின் வரலாறு பிரிவு பிரிவாக வௌ;வேறு சரித்திரத் தடங்களைக் கொண்டுள்ளது. நான் மேலே சொல்லியிருப்பது கேரளாவின் இதற்கு மேல் சுருக்க முடியாத வரலாறு. விரிவாக ஆய்பவர்களுக்குச் சுவையான ஒரு வரலாற்றைக் கேரளம் கொண்டிருக்கிறது.
எர்ணாகுளத்தில் அதிகாலையில் இறங்கியதும் ஆலப்பி செல்வது எப்படியென விசாரித்த போது எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் மூலம் செல்லமுடியும் என்ற தகவல் கிடைத்தது. வெளியேறி ஆட்டாவில் ஏறிப் பதினைந்து நிமிடத்தில் அந்த ரயில் நிலையத்தை அடைந்தோம். காலை 5.30 க்கு ரயில் புறப்படும் என்று தெரிந்தது. அதுவரை காப்பி அருந்துவதும் அங்குமிங்கும் அலைவதுமாக இருந்தோம். நீளமாக வெட்டப்பட்டுப் பொரிக்கப்பட்ட வாழைப்பழச் சிப்ஸ் அடங்கிய பொதியைத் தாஸிம் அகமது கண்டு பிடித்து வாங்கி வந்தார். அவற்றைக் கொறித்தபடி நேரங்கடத்திக் கொண்டிருந்து விட்டு, நிறுத்தப்படிருந்த ரயிலில் 4.00 மணிக்கு ஏறினோம். எங்களைத் தவிர வேறு யாருமே ரயிலில் இருக்கவில்லை. சாதாரண தூர ரயிலாக இருந்தபடியால் விசேட பெட்டிகள் இதில் இல்லை. 3ம் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்த பிறகு ஏராளமான பயணிகள் வந்து சேர்ந்தனர்.
ரயில் நகரத் துவங்கியதும் இருந்தபடியே தூங்கி வழிந்தோம். அல் அஸ_மத்தான் எங்களை அவசரமாகத் தட்டி எழுப்பினார். அவரும் தூங்கியிருந்தால் அதோ கதியாக முடிந்திருக்கும். ரயில் நிலையத்தில் இறங்கிய போதுதான் தெரிந்தது ஆலப்பி (Alleppey) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது ஆலப்புழைதான் என்பது. அதை உறுதி செய்தது ரயில் நிலையத்தின் ஊர்ப்பலகை. இந்த விடயத்தை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு வெட்கமாக இருந்தது. கேரளக் குடும்பப் பின்னணி கொண்ட அஸ_மத்திடம் இதைச் சொன்ன போது, “நீங்கள் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லையே” என்று சாதாரணமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார். ஆனால் பயணம் முழுவதும் எங்களுடன் ஆலப்பி என்றே அவரும் உச்சரித்துக் கொண்டு வந்ததை அடிப்படையாக வைத்து இவர் எனக்குக் கணக்கு விடுகிறாரோ என்று கூட ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.
ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியதும் தனித்து நின்றிருந்த ஒரு ஆட்டாவை நோக்கிச் சென்றோம். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் நடுநிலையாகப் புன்னகைத்தார். ‘படகு வீட்டில் பயணம் செய்ய வேண்டும், ஒரு நல்ல ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும்’ என்று அவருடன் பேசிக் கொண்டிருக்க ஆட்டா ஸ்டாண்டிலிருந்து ராஜ்கிரனைப் போல சாறினை உயர்த்தி, மடித்துக் கட்டியபடி கழுத்தில் துண்டுடன் சினிமா வில்லன் நடிகர் பொன்னம்பலத்தைப் போல ஒருவன் எம்மை நோக்கி வந்தான். வந்தவன் ஆட்டா ஸ்டாண்டைச் சுட்டிக் காட்டி “ஆட்டா அங்கிருக்கிறது. அங்குதான் எடுக்க வேண்டும்” என்றான். வில்லங்கம் ஆரம்பித்து விட்டது என்று நினைத்;தேன்.
இந்த மாதிரி வேளைகளில் தலைவர் சண்டைக் கோழியாகிவிடுவது வழக்கம். இந்தியாவில் பலமுறை இவ்வாறான வில்லங்கங்களில் அவர் பணிய மறுத்த சம்பவங்களை நான் ஏலவே அறிந்திருந்தேன். எனவே அவர்தான் முதலில் அவனை எதிர்த்துப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். இன்று தலைவருக்கு முகத்தில் முதல் குத்து விழப்போகிறது என்று எதிர்பார்த்து அதைத் தடுத்து விட வேண்டும் என்று அவர் அருகே போக, முதலில் வாய் திறந்தது... நமது நலன்புரி இயக்குனர் தான். அவருக்குத் தெரிந்த மலையாளத்தில் நாங்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வருகிறோம்... எங்களுக்கு உங்கள் பிரச்சினை தேவையில்லை... என்று சற்று எரிச்சலோடு சொன்னார். குத்து அவர் முகத்தில் விழும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் பேசாமல் திரும்பிப் போய் விட்டான்.
இந்த விபத்திலிருந்து நாங்கள் தப்பியதற்கான காரணங்களைப் பின்னர் யோசித்துப் பார்த்தேன். 1. நாங்கள் பயணம் செய்ய இருப்பது ஒரு மூன்று கிலோ மீற்றர்கள் மாத்திரமே. (கூலி பெரிய தொகை இல்லை) 2. ஆசாமிகள் கச்சிதமாக உடையணிந்து இருக்கிறார்கள். நால்வரும் கண்ணாடி அணிந்தவர்கள். (எனவே பாவம் பிழைத்துப் போகட்டும்) 3. காலங்காத்தாலே அப்பாவிகளை ஏன் அடிப்பான்? இம்மூன்று காரணங்களாலும் தலைவர் மற்றும் நலன்புரி இயக்குனர் ஆகியோரின் முகங்கள் தப்பின என்று நினைத்தேன். தலைவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற படியால் வெளியே சொல்லவில்லை.
கட்டுரையின் ஆரம்பத்தில் எமது நால்வர் அணி பற்றி அறிமுகஞ் செய்திருந்தேன். உண்மையில் இந்தப் பயணத்துக்காக அல் அஸ_மத்தை மட்டுமே நலன்புரி இயக்குனராக ஏகமனதாக நியமித்தோம். அதற்குக் காரணம் அவருக்கு மலையாளம் புரியும் என்பதுதான். மற்றப்படி பொதுவாகவே இவ்வாறான ஒரு மனப்பதிவுடன்தான் நாங்கள் நடந்து கொள்வோம். அப்போது அஸ_மத்தும் கூட எதிர்க் கட்சியில்தான் இருப்பார். அவ்வப்போது எங்களுக்குள் தர்க்கங்கள் இடம் பெறும். சில வேளைகளில் இடம், பொருள் பாராமல் விவாதங்கள் நடக்கும் போது எழும் சத்தத்தில் பலர் எங்கள் பக்கம் திரும்பி வினோதமாகப் பார்த்ததுண்டு. விவாதங்கள் விவாதங்களாகவே முடிந்து விடும். அவை என்றுமே எமது நட்பைப் பாதித்ததில்லை.
எங்களைத் தனது ஆட்டாவில் அழைத்துச் சென்ற அந்த மனிதர் பெயர் தாஜூதீன். மிக நேர்மையான மனிதர். எம்மை ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சினிமாக்காரர்கள் வந்திருப்பதால் இடமில்லை என்று கையை விரித்து விட, தனது உறவினர்களை அழைத்துச் செல்வது போல் வேறு ஒரு ஹோட்டலில் பேசித் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அன்று வெள்ளிக் கிழமையென்றபடியால் பள்ளிவாசலையும் செல்லும் வழிகளையும் காட்டித் தந்தார். நம்பமாட்டீர்கள், ரயில் நிலையத்திலிருந்து தங்குமிடம் தேடித் தரும் வரை அவர் ஆட்டாவுக்கு எம்மிடம் கோரிய பணம் வெறும் பன்னிரண்டு ரூபாய்கள் மாத்திரமே. இதுவே தமிழ் நாடாக இருந்தால் குறைந்தது நூறு ரூபாய் பறித்துக் கொள்ளாமல் விட்டிருக்கமாட்டார்கள். பதினைந்து ரூபாயைக் கொடுத்த போது சங்கோஜத்தில் நெளிந்தார் மனிதர்.
காலை உணவுக்காக ஒரு கடைக்குள் நுழைந்ததும் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. கிழக்கு மாகாணத்தில் சுடப்படும் அப்பம் அங்கு சாப்பிடக் கிடைத்ததுதான் அம்மகிழ்ச்சிக்குக் காரணம். கடலைக் கறியுடன் அப்பங்களை ருசித்துச் சாப்பிட்டோம். இரவு இரண்டு ரயில்களில் மாறி மாறிப் பயணம் செய்த களைப்பில் காலையுணவுக்குப் பின் மூவர் உறங்க அல் அஸ_மத் மட்டும் மலையாள இலக்கிய நூல்களைத் தேடிப் புறப்பட்டார். வெள்ளிக் கிழமையாதலால் தொழுகைக்காகப் புறப்பட்டு ஆலப்புழை நகர மஸ்ஜிதுக்குச் சென்றோம். கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்தில் அப்பள்ளிவாயிலின் அடித்தளம் வெளிப்புறமாகச் சரிவாக உயர்த்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணும் ஒரு தனி மரத்தால் ஆனது. அவற்றில் அழகிய கடைச்சல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நமது நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த காலங்களில் இருந்த பள்ளிவாசல்களை ஞாபகப்படுத்தியது இப்பள்ளி வாசல். பள்ளிவாசலோடு இணைந்ததாக ஒரு இறைநேசச் செல்வரின் அடக்கஸ்தலமும் உள்ளது. தொழுகை முடிந்ததும் ஓர் இளைஞரிடம் விபரம் கேட்டோம். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்று சொன்னார். இது ஒரு வரலாற்றுச் சின்னமாக இருப்பதால் விசாலிப்பதாக இருந்தால் இக்கட்டடத்தை நீங்கள் தகர்த்து விடக் கூடாது என்று ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டுத் திரும்பினோம்.
பிற்பகல் 3.00 மணியளவில் துறையடிக்குச் சென்றோம். எங்களுக்கான படகு தயாராக இருந்தது. நான்கு கதிரைகள் இடப்பட்டு அவற்றில் தேரோக்களுக்கு ஆசனங்களில் வெள்ளைத் துண்டு போட்டது போல் பெரிய வெள்ளைப் பூந்துவாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. இரண்டு முகடுகள் கொண்ட படகின் முன்முகட்டில் பூச்சரம் கோக்கப்பட்டிருந்தது. இரண்டு நீர்ப் போத்தல்கள் மற்றும் சில பிஸ்கற் பொட்டலங்களுடன் தயாராக நின்றோம். மனதுக்குள் ஓர் அற்பப் பெருமை எட்டிப் பார்த்தது. பெரும் உல்லாசப் பயணிகளாக நினைத்துக் கொண்டு படகுக்குள் காலடி வைக்கும் போது படகுக்காரப் பையனைக் கேட்டேன், “தம்பி, உனக்கு நீந்தத் தெரியுமா?”

என்னுயிர்க் கண்ணம்மா

“காற்றின் முகத்தில் - ஒரு கடுதாசி எழுதி விடு கண்ணம்மா - காத்திருக்கிறேன்” என்று முடிகிற கவிதையொன்று “போர்க்காலப் பாடல்கள்” என்ற கவிதைத் தொகுதியில் உள்ளது. புத்தகக் குவியல்களுக்குள் இத்தொகுதியைப் பார்த்தால் ஒரு சிட்டுக் குருவி போல் தோன்றும். 1998ம் ஆண்டு வெளியான இந்தக் கவிதைத் தொகுதிக்கு அவ்வாண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுதிக்கான “விபவி” பரிசு கிடைத்தது ஞாபகமிருக்கிறது. 1995ல் எழுதப்பட்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமான அன்பின் கண்ணம்மாவுக்கு என்ற அந்தக் கவிதை பேசும் சமாச்சாரம் சாதாரணமான ஒன்றல்ல. விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் உருவான கவிதைகளிலும் கதைகளிலும் பல்லாயிரம் துயரச் சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன. எந்தவித எழுத்துக்கும் உட்படாத ஆயிரமாயிரம் சம்பவங்கள் இன்னும் வெளிவராமலும் உள்ளன. இன முறுகலின் விளைவாக ஏற்பட்ட மேனி சிலிர்க்கும் துன்பியல் விவகாரங்களின் பின்னணியில் மனிதாபிமானம் பேணப்பட்ட சம்பவங்களும் ஏராளம் உள்ளன. போராட்டம், இனவெறி என்பவற்றுக்கெல்லாம் அப்பால் மனிதாபிமானம் முன்னிடம் வகித்த ஒரு சம்பவத்தையே மேற்சொன்ன கவிதை பேசுகிறது. கல்குடா ரயில் மறிப்புப் போராட்டம் வாழைச்சேனை - ஏறாவூர் ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள தேவநாயக புரத்தில் நடந்தது. விடுதலையின் பெயரால் ஆயுதம் ஏந்திய நபர்கள் ரயிலை வழிமறித்து மற்றொரு சிறுபான்மையினத்தாரைத் துரத்திச் சுட்டனர். “நிசப்தத்தைக் கொன்ற நீசர்கள் - எமது பெண்டிர் நெற்றியில் - குருதியால் பொட்டிட்டனர் கண்ணம்மா.... - ......தொலைந்தனர்மனிதர் - குழந்தைகளாய் - குருதியில் குளித்தனர் மனிதர்” என்று நகர்கிறது கவிதை. “வெம்பி மணலில் கால் புதைய - நெருஞ்சி முள் கிழித்துக் - குருதி கொப்பளிக்க - மூன்று மைல்கள் மூச்சுப் பிடித்து ஓடிவந்து” ஒரு வீட்டின் வாசலில் விழுந்தான் அந்த முஸ்லிம் இளைஞன். அது தமிழ்க் குடும்பம் வாழும் வீடு. அக்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் துரத்தி வந்தவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தனது கால்களுக்கிடையில் தான் அணிந்திருந்த நீள் பாவாடைக்குள் அவனை மறைத்துக் கொண்டு நிற்கிறாள். வந்தவர்கள் சந்தேகப் பார்வையுடன் திரும்பி விடுகிறார்கள். கவிதை தொடர்கிறது... “இந்தப் பிரதேசத்தை - நமது பிரதேசம் என்று - நம்பிக்கையூட்டியவளே - இரத்தம் சொட்டச் சொட்ட - நான் ஓடிவந்த பாதையை வெறித்து - நீயும் என் ரத்தம்தான் என்றாயே” கடைசியில் ராணுவ முகாமில் அப்பெண் அவனை ஒப்படைத் துத் திரும்பும் போது தூரத்தில் இரு புள்ளிகளாய் யாரோ அவளை நெருங்குவதை அந்த இளைஞன் கண்டான். அப்பெண் குறித்து இரக்கத்துடன் கவிதை வரிகள் பேசுகின்றன. “அப்புறம் - என்ன நடந்தது கண்ணம்மா?” என்ன நடந்திருக்கும்? அவனுக்குப் பதிலாக கண்ணம்மா உயிரை இழந்திருக்கலாம். இல்லையேல் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம். அவளைத் தண்டித்தவர்கள்; சிலவேளை இறந்து விட்டிருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு மேலைத்தேச நாட்டில் உட்கார்ந்து கொண்டு மனிதாபிமானம் குறித்துக் கவிதை அல்லது கதை எழுதிக் கொண்டிருக்கவும் கூடும். யார் கண்டார்கள்? இக்கவிதையை எழுதியவர் ஏ.ஜி.எம்.ஸதக்கா. கல்குடாப் பிரதேசத்தில் எண்பதுகளுக்குப் பிறகு தோன்றிய குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவர். “இமைக்குள் ஓர் இதயம்” என்ற ஒரு சிறு தொகுதியை 1988ல் வெளியிட்டவர். (இனப் பிணக்குக் குறித்த கவிதைகளை எழுதிய இப்பிரதேசத்தின் ஏனையவர்களுள் வாழைச் சேனை அமர், எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், பாலை நகர் ஜிப்ரி ஆகியோர் முக்கியமானவர்கள். அமர், “விடுதலையின் நிகழ்வுகள்” என்றொரு சிறு தொகுதியை 1985ல் வெளியிட்டார். இவரது “நீ வரும் காலைப் பொழுது” கவிதைத் தொகுதி 2004ல் வெளிவந்தது. எஸ். நளீமின் கவிதைத் தொகுதிகளாவன “கடைசிச் சொட்டு உசிரில்”-2000, “இலை துளிர்த்துக் குயில் கூவும்” - 2008. அறபாத்தின் கவிதை நூல்கள்:- “எரி நெருப்பிலிருந்து” - 1996, “வேட்டைக்குப் பின்” - 2002. ஜிப்ரி இன்னும் கவிதை நூல் வெளியிடவில்லை.) ஸதக்காவின் கவிதை சொல்லும் கண்ணம்மாவின் மனிதாபி மானம் உன்னதமானது. ஓர் இளம் பெண் தனது அந்தரங்கம் பற்றி ஆதங்கம் கொள்ளாமல் ஓர் அந்நிய இளைஞனின் உயிர் காத்து மறைத்து நின்றாள் என்பது உரக்கச் சொல்லப்பட வேண்டியது. வர்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பால், அதற்கும் அப்பால் உறைந்த மௌனத்தால் கௌரவிக்கப்பட வேண்டியது. சமாதானம், தியாகம், விட்டுக் கொடுப்பு குறித்துப் பேசும் ஆயிரமாயிரம் புத்தகங்களை விஞ்சி நிற்பது. இந்தக் கவிதை ஏன் மேலெழவில்லை என்பதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டால் நான் சிலரின் சொல் லெறிக்கு ஆளாக நேரலாம் என்பதால் தவிர்த்துக் கொள்கிறேன். இலக்கிய உலகத் துயரங்களும் சாபங்களும் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? மனிதாபிமானம் குறித்துப் பேசப்படும் உரைகளாலும் எழுத்துக்களாலும் சட்டங்களாலுமே மனிதாபிமானம் உயிர் வாழ்கிறது என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! அது கண்ணம்மா போன்றவர்களால் மாத்திரமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
24.02.2008