Friday, February 23, 2024

ரஃபாவிலிருந்து



ஹஸன் அபூ சித்தா


இஸ்ரேலியரின் இடை விடாத தாக்குதல் காரணமாக தென் காஸாவின் கான்யூனிஸிலுள்ள எமது வீட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வேண்டியிருந்தது. 

நான் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் சட்டம் கற்பதற்குத் தயாராக இருந்தேன். ஒரு சட்டத்தரணியாகி சர்வதேச நீதிமன்றில் பலஸ்தீனுக்காகப் பேச வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியேறி கான் யூனிஸிலிருந்த பெண்கள் பாடசாலையில் தஞ்சமடைய வேண்டியிருந்ததால் எனது சட்டக் கல்விக் கனவு அப்படியே நி;ன்று விட்டது.

மெத்தைகள் இன்றி குளிர் மிகுந்த வெற்றுத் தரையிலேயே நாங்கள் உறங்க வேண்டியிருந்தது. இதனால் அங்கிருந்த முதியவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். டிசம்பரில் பாடசாலைக்கு அருகிலிருந்த ஹமாத் நகரத்தின் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலின் உக்கிரம் காரணமாக பாடசாலைக் கட்டடங்கள் அதிர்ந்தன. நாங்கள் வகுப்பறை ஒன்றுக்குள் இருந்தோம். தாக்குதலில் உண்டான அடர்த்தியான புழுதியும் புகையும் நாமிருந்த இடத்தை அப்படியே மூடிப் பரவியது. இதன் காரணமாக எல்லாரும் மூச்சுத் திணறலுக்கு உள்ளானோம். குண்டுத் தாக்குதலில் ஜன்னல்கள் சேதமடைந்தமையால் நச்சுப் புகையைச் சுவாசிக்க வேண்டியதாயிற்று. அந்தப் புகையில் வெள்ளைப் பொஸ்பரஸ் கலந்திருந்தது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்.

எனது குடும்பத்தவரில் இந்தப் புகையினால் அதிகம் பாதிக்கப்பட்டது எனது தங்கை மர்யம்தான். அவள் 2 வயதாக இருக்கும் போதே ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டவள். அவளுக்குப் புழுதி, புகை என்பன ஆகாது. இதனால் அவளைத் தாயார் மிக அவதானமாக வளர்த்து வந்தார். இப்போது மர்யத்துக்கு 23 வயது. இன்னும் அந்த நோய்ப் பாதிப்பு அவளுக்கு உண்டு. தடிமன் பீடித்தாலே நாங்கள் எச்சரிக்கை ஆகி விடுவோம். கோவிட் காலத்தில் அவளுக்குத் தொற்றி விடுமோ என்று நாங்கள் மிகவும் பயத்துடன் இருந்தோம். 

பாடசாலை வகுப்பறைககுள் புகுந்த நச்சுப் புகை காரணமாக மர்யம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். நாங்கள் அவளைச் சுற்றியிருந்து நீர் தெளித்து எழுப்புவதற்குப் பிரயத்தனப்பட்டோம். பாடசாலை நர்ஸ் வந்து மர்யத்தை எழுப்ப முயற்சிகள் செய்தாள். எதுவும் ஆக வில்லை. எனவே அவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். இதற்கிடையில் ஏனைய அனைவரும் முகக் கவசத்தை அணிந்தோம். வாய் வழியாகப் புகை புகுந்து விடாதிருக்க வாயைச் சுற்றிப் புடவைகளால் சுற்றிக் கொண்டோம். 

வைத்தியசாலையில் மர்யம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு ஒக்ஸிஜன் பொருத்தப்பட்டது. நிமோனியாவும் பீடித்திருந்ததால் ஆபத்தான நிலை உணரப்பட்டது. அவள் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை காத்திருந்தோம். 

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலைமையை விவரிப்பது மிகவும் துன்பமிக்கது. தியாகிகளின் மரணித்த உடல்களும் உடற்பாகங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இஸரேலிய தாக்குதலில் உயிர் பிழைத்தோர் நிலையும் சொல்லமளவுக்கு இருக்கவில்லை. அங்கிருந்த உடல்களின் ஒன்று எனது வாழ்நாள் நண்பன் பாரா மக்தியினுடையது என்பதையறிந்து அதிர்ந்து போய் விட்டேன். ஒரு நாள் முன்னர்தான் இருவரும் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம். மெதுவாகச் சென்று அவரது நெற்றியில் முத்தமிட்டு அவருக்காகப் பிரார்த்தித்தேன்.

மர்யத்தின் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதை தாதி வந்து சொன்னாள். அடுத்த நாட்காலை ஒக்ஸிஜன் சிலின்டருடன் தங்குமிடம் திரும்பினோம். வந்ததும் அவசரம் அவசரமாக ரஃபா நோக்கிக் கிளம்பினோம். இப்போது நாங்கள் ரஃபாவில் இருக்கிறோம். இங்கேயும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்வதற்கில்லை. தெருவோரம் ஒரு கூடாரத்தில் தங்கியிருக்கிறோம். நாங்கள் உணவு சமைக்கும் புகை எங்கள் சுவாசக் காற்றை நிறைக்கிறது. ஈரலிப்பான, நீர் ஊறும் நிலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்போது கூடாரத்தில்தான் வாழ்கிறோம். அதுதான் இப்போதைக்கு என் தாய்நாடு, வீடு எல்லாமே.

ரஃபாவை இஸ்ரேல் தாக்குவதற்கு முன்னர் உலகம் எமது உதவிக்கு வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இல்லையெனில் நாங்களும் தியாகிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவோம்!


Monday, October 9, 2023

கஸ்ஸான் கனபானியின் வெய்யில் மனிதர்கள்” - எனது பார்வை - பிஸ்தாமி அகமட்


கஸ்ஸான் கனபானியின் ்வெய்யில் மனிதர்கள்” - எனது பார்வை


பிஸ்தாமி அகமட்

رجال في الشمس
எனும் தலைப்பில் பாலஸ்தீனிய இலக்கிய எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கஸ்ஸான் கனபானியின் அரபு நூலை ஹிலரி பெட்ரிக் இன் Men in the Sun ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக அழகிய தமிழுக்குள் கொண்டுவந்துள்ளார் பிரபல கவிஞரும் ஊடகவியலாளருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள். மூல நூலில் உள்ள கவித்துவமும் மொழிச்செழுமையும் நொருங்காமல் கலையாமால் அப்படியே அதே உணர்வுடன் இங்கும் படர விட்டிருப்பதை வாசகர்கள் முதல் பந்தியிலிருந்து இறுதி வரி வரை உணரலாம்.
அஷ்ரப் ஷிஹாப்தீன் இலங்கையின் மூத்த முன்னோடி இலக்கிய படைப்பாளி. பன்னூலாசிரியர். ஊடகவியலாளர். எழுத்தாளர். விமர்சகர். இலக்கிய மொழிபெயர்ப்பாளர்.
வெய்யில் மனிதர்கள் என்ற தலைப்பே அனைத்தையுமே தொலைத்து இழந்து பெருந்தவிப்பும் அங்கலாய்ப்பும் அலைச்சலும் சகிதம் வெறுங்கையுடன் உயிரை மாத்திரம் பணயம் வைத்து வெயிலின் அகோரத்தை, உஷ்ணத்தை, ஜீரணித்து நீண்ட நெடும் பயணத்தில் தம்மை ஈடுபடுத்தி ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டே இருக்கும் மனிதர்களை அடையாளப்படுத்தும் குறியீடு symbol என்பதை புரியலாம்.
கஸ்ஸான் தன் எழுத்துக்கள் வழியாக குறியீடுகளைத் தான் பிரதான அடையாளங்களாக கையாள்கிறார்.
கஸ்ஸான் Ghassan Kanafani (1936–72) வரையான 36 வருடங்கள் உலகில் வாழ்ந்தவர். 20 ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பாலஸ்தீனிய எழுத்தாளர் கண்பானியின் மிகத்தரமானதும் காத்திரமானதுமான படைப்பாக இதனை கருதமுடியும். 1972 களில் கார் குண்டு வெடிப்பின் மூலம் அவரது உயிர் காவுகொள்ளப்பட்டது. பிறகு மொசாட் அதற்கு உரிமை கோரியது.
அவரது சிறுகதைகளும் சிறார் கதைகளும் நாவல்களும் இலக்கிய படைப்புகள் மீதான செறிவான விமர்சனங்களும் அரசியல் பத்திகளும் கனங்காத்திரமானவை. மரணத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் Popular Front for the Liberation of Palestine (PFLP) பிரச்சாரகராக செயற்பட்டதுடன் al-Hadaf (The Goal). பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டார். அவரது எழுத்துக்களில் சிறுகதை நாவல் இலக்கியங்களின் நவீன பாணிகளை நுட்பங்களை போக்குகளை துல்லியமாக அவதானிக்கலாம். கதாபாத்திரங்கள், அவர்களின் உணர்வுகள், உதிரும் வார்த்தைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அபிலாசைகள், அவஸ்தைகள் என அனைத்திலுமே அவை வெளிப்படுகின்றன.(மொழிபெயர்ப்பிலும் கூட அத்தகைய நுட்பங்களை மொழிபெயர்ப்பாளர் கவனமாக கையாண்டு நூலின் உயிர்ப்பை தக்க வைத்துள்ளார்) அதன் வழியாக பாலஸ்தீனிய பூர்வீக மக்களுக்கான இருப்பு, அடையாளம், அடையாள நெருக்கடி என்பவற்றை தனது புலம்பெயர் இலக்கிய வகையறா எதிர்ப்பிலக்கிய வகையறா போர்க்கால இலக்கிய வகையறா விடுதலை இலக்கிய வகையறா போன்றவற்றின் வழியே வெளிக்கொணர்கிறார்.
உரிமைக்கும் உயிருக்கும் இருப்புக்குமான அறைகூவலாக அவரது எழுத்துக்கள் உள்ளமை குறிப்பிடதக்கது. மத்திய கிழக்கின் வாழ்வியலை பாலஸ்தீன அகதிகள் வழியாக சர்வதேச தளம் நோக்கி மிகக்கவனமாக நுணுக்கமாக, உணர்வு பூர்வமாக, உயிரோட்டமாக நகர்த்த தனது மொழியாற்றலை, இலக்கிய புனைவை, வரலாற்றுணர்வை பயன்படுத்தி வரலாற்றில் பதியவைத்துள்ளார். கஸ்ஸான் அவரது எழுத்துக்களின் வெற்றி இதுவே.
1950 க்கு பின்னரான போர்க்கால சூழலில் வாழ்ந்த மக்களின் உணர்வுகள் தான் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.வேறுபட்ட பரம்பரையை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று பாலஸ்தீனியர்கள் தென் ஈராக்கிலிருந்து குவைத் நோக்கி சட்டரீதியற்ற முறையில் புலம்பெயர்வதுடன் கதை ஆரம்பமாகிறது. பஸ்ரா வரை சுதந்திரமாக வந்து அதன் பிறகு கடத்தல்காரர்களது உதவி பெற்று எல்லைப்பகுதிகளை நோக்கி பயணிக்கின்றனர். பூர்வீக நிலத்தின் வாசனையை விட்டு பிரிந்து, வலிகளை சுமந்து பயணிக்கும் அனுபவம் மரண வேதனை தான்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் 1600 களில் கோட்டை முஸ்லிம்கள் காலனித்துவத்தின் ஆயுத முனையில் நேரம் வரையறுக்கப்பட்டு பூர்வீக நிலத்திலிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டது முதல் 90 களில் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டது, 2000 ஆண்டுகளின் முதல் தசாப்தத்தில் கிழக்கின் மூதூரில் இருந்து வெளியேற்றப்பட்டது போன்ற கசப்பான துன்பியல் இருண்ட வரலாற்று நினைவுச்சுமைகளும் இங்கு நினைவு கூறத்தக்கவை. ஆக்கிரமிப்பின் விளைவால் வரும் விரக்தியே இத்தகைய உணர்வை தருகின்றன. விடுதலைக்கான குரல்களாக இவை அமையட்டும். இந்த நிமிடம் கூட பாலஸ்தீனம் குமுறிக்கொண்டு தான் உள்ளது சுதந்திர காற்றை ஒரு முறையாவது சுவாசிக்க
பாலஸ்தீனக்கவி மஹ்மூத் தர்வீஷின் ஒரு கவிதை இங்கு நினைவுக்கு வருகிறது.
அவர்கள் பின்னால் திரும்பிப்பார்க்கவில்லை.
அவர்கள் பின்னால் திரும்பிப்பார்க்கவில்லை
அகதி வாழ்வுக்கு விடையளிக்க
ஏனென்றால் எதிரே இருப்பதும் அகதி வாழ்வுதான்.
வட்டசாலையில் கைகாட்டி இருக்கிறார்கள்.
எனவே முன்னும் இல்லை. பின்னும் இல்லை.
வடக்கும் இல்லை, தெற்கும் இல்லை.
அவர்கள் நாடு பெயர்கிறார்கள்
வேலியிலிருந்து தோட்டத்துக்கு
முற்றத்தின் ஒவ்வொரு மூன்றடிக்கும்
ஓர் உயிலை விட்டுச்செல்கின்றார்கள்
நினைவில் வைத்திருப்பாய்
எங்களுக்குபிறகு
வாழ்வை மட்டும்.
அவர்கள் பயணிக்கிறார்கள்.
பட்டு விடியலிலிருந்து உச்சித்தூசிக்கு
இராமையின்(இல்லாமையின்) பொருட்கள் நிறைந்த
பெட்டிகளைச் சுமந்தபடி
அவர்கள் புறப்படுகிறார்கள்
வீடுகளிலிருந்து தெருக்களுக்கு
காயம் பட்ட வெற்றிச்சின்னத்தை விரித்தபடி
காண்போருக்கெல்லாம் கூறியபடி
நாங்கள் இன்னும் உயிரோடிருக்கின்றோம்
எனவே எங்களை நினைவு கூற வேண்டாம்
அவர்கள் வரலாற்றிலிருந்து வெளியேறினார்கள்
சுவாசிக்கவும் சூரியனில் குளிக்கவும்
அவர்கள் கனவு காண்கிறார்கள்
எவ்வாறு உயரே பறப்பதென்று

ஒரு நல்ல நூல் அதன் முதல் வரியினதும் இறுதி வரியினதும் உயிரோட்டத்திலும் உத்வேகத்திலும் வருடலிலும் தான் உயிர்வாழும்...
அந்த வகையில் கஸ்ஸான் கனபானியின் கலைநுட்பம் கதைசொல்லும் பாணி வாசகர்களை கட்டிப்போட்டுவிடும்
வேறெல்லா புலச்சிதறல்களையும் விட்டு கதைக்குள் குவியப்படுத்திவிடும்
கவலைகளை கரைபுரண்டோட வைக்கும்
காலப்பொருத்தம் மிக்க ஒரு நூலாக இதனை வாசகர்களுக்கு பரிந்துரைக்கலாம்
மத்திய கிழக்கின் சமகால நிலை கொதிப்பும் குமுறலும் கொந்தளிப்பும் நிறைந்ததாக உள்ளது. பாலஸ்தீனத்தை கலைவழியாக புரிய அழகான தருணம் இது. கல்பை அப்படியே உருகி ஓட வைக்கும் தன்மை நூலின் கனதியை வலிதாக்கிவிடுகிறது. வலிகளுக்கும் வலிமை சேர்க்கிறது
ஏனைய நாவல்கள் போலவே இங்கும் மனித இயல்புகள் பட்டுத்தெறிக்கின்றன. மகாத்மா காந்தி சொல்வது போல "பசியோடிருப்பவன் ரொட்டித்துண்டில் கடவுளைக்காண்பான்" என்பது எவ்வளவு தத்ரூபமாக இங்கு காட்சியாக்கப்படுகிறது.
ஆசைகள் திருமணம் இழப்பு நோய் வருத்தம் கடன்சுமை எதிர்காலம் என எல்லாமே சுழல்கிறது. ஆனாலும் அந்த துன்பியல் சக்கர சுழற்சி மட்டும் எல்லா பக்கமும் புடைசூழ்ந்து வருகிறது
அபூகைஸ் கைஸூரான் தவிர உள்ள எல்லோருமே யதார்த்தத்தின் அடையாளங்கள் குறியீடுகள் தான்
பாலஸ்தீன மக்களின் முக்கால பரிணாமம் தான் பிரதான கதாபாத்திரங்கள். அவை காலத்தின் நீட்சிக்கான சான்றுகள். முடிவோ முற்றுப்புள்ளியோ இன்றி தொடரும் அவலங்கள்
எத்தனை தலைமுறையாக இந்த அவலத்தை சுமந்து திரிவது...அந்த மக்கள்
கனரக வாகனம் என்பதே கதிரியக்க அறையின் உஷ்ணத்தை எதிரொலிக்க வைக்கிற நிலையில் எப்படி அந்த மூவரும் தம் வாழ்வை அதற்குள்ளே ரணமாகவும் மரணமாகவும் நிலைமாற்றிவிடுகிறார்கள். அதற்காக எத்தனை பகீரதப் பிரயத்தனங்கள். அதற்கான ஏற்பாடுகள். கடத்தல் பேர்வழிகள் கூட புலம்பெயர்வை எவ்வளவு சமயோசிதமாக லாபகரமான வியாபாரமாக்கியுள்ளனர். சட்டத்தில் எத்தனை ஓட்டைகள். அந்த ஓகஸ்ட் மாத கர்ண கொடூர வெயில் போலத்தான் பாலஸ்தீனத்துக்கெதிரானவர்களது மனங்களும். சுட்டுப்பொசுக்கி சாகடிக்கவே காத்திருக்கும். இதுவே இது நூலில் கதைக்கான கருவாக இருப்பினும் அங்கு காலங்காலமாக கண் முன்னே இப்படியான கவலைக்கிடமான மரணங்களைத்தானே விலை கொடுத்து வாங்கி வாழ்கின்றார்கள்.
சுதந்திரத்தின் பெறுமதியை உணர்த்த மரணத்தை உதாரணமாக காட்டியாக வேண்டியுள்ளது.
நிம்மதியின் பொருளுணர்த்த அவலத்தை அலைச்சலை காட்டியாக வேண்டியுள்ளது.
இருப்பின் பொருளுணர்த்த இல்லாமையே நோக்கி பயணித்தாக வேண்டியதை சொல்ல வேண்டி ஏற்படுகிறது
இன்னுமின்னும் சொல்லிக்கொள்ள முடியாத சோகம் படர்கிறது... நாவலை மெல்ல மெல்ல முடிக்க நகர்கையில்
நாடி நாளமெல்லாம் புல்லரிப்பு ஏற்பட்டு விடும். மொழிபெயர்ப்பின் சொற்களுக்குள் அகப்படாத சோகம் ஊடுருவும். அது உணர்வை நிச்சயம் கசக்கிப்போடும். ஆக்கிரமிப்புக்கும் ஆயுதத்துக்கும் அழிவுண்டாக்க சாபத்தை கொட்ட கக்க தூண்டும்.
வார்த்தைகளுக்குள் அகப்படாத ஒரு வலி
உங்களையும் ஆட்கொள்ளும். பாலஸ்தீன விடுதலை குறித்த தெளிவை புரிதலை தரும்.
மனிதாபிமான உணர்வை சர்வதேச எல்லை வரை பீறிட்டு பிரவாகித்து அநீதிக்கெதிராக குரல்கொடுத்து உண்மையை உரத்துச்சொல்ல தூண்டும். புலம்பெயர்தல் என்பதன் பின்னால் உள்ள சுமக்க முடியாத கனதியான சுமை குறித்து குறிப்பாலுணர்த்தும்.
அத்தனைக்குள்ளும் நாவலுக்கு நயம்தருவதாக
மொழியும் அரசியலும் மானுட உணர்வும் மனிதாபிமானமும்
சர்வதேச நாடுகளுக்கிடையிலான
கொள்கை கோட்பாடுகள்
எல்லைத்தகராறுகள் என ஏராளமான
பூடகங்களை
கட்டுடைத்து
கடந்து விடுகிறது
சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்று
அல்லாஹ் கேட்பது போல
இறைவனது நில எல்லை விசாலமாக
இல்லையா
அதனை நோக்கி நீங்கள் நகரக்கூடாதா
என்பதற்கப்பாலும்
நீங்கள் என் வாய்திறக்காத மௌனிகளாக
உள்ளீர்கள்
ஒரே ஒரு வார்த்தை பேசி இருந்தால்
வாழந்திருக்கலாமல்லவா.... என்று கூறுவதாக உள்ளது
எட்வட் செய்த் சொல்வது போல
Speaking truth to the power
அதிகாரத்தின் முன் உண்மையை உரத்து பேசுவதன்
ஆக குறைந்த தரமாக
அவசியத்தின் போது வாய்களையாவது
கொஞ்சம் திறந்தால்
உயிரையாவது
காத்துக்கொள்ளலாம்
வாயைத்திறந்தால் வங்காளம் வரை போகலாம் என்பார்கள்
அந்த மூவரும்
அந்த எல்லைக்கு அப்பால் கூட போயிருக்கலாம்.... வாயை திறந்திருந்தால்
ஆனால் நாமோ அந்த கவ்கப் மீது பழியை போட்டு அமைதிகாக்கிறோம்
தட்டி ஒலியெழுப்புங்கள்
அவர்களது கல்புகள் இனியாவது திறந்துகொள்வதற்காக

(பிஸ்தாமி அகமட் எழுதிய முகநூல் கட்டுரை. நன்றியுடன் பகிரப்படுகிறது.)


Tuesday, August 8, 2023


 அல் அஸூமத் - எழுதிய இஸ்லாமிய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் - எனது பார்வை  

- அஷ்ரஃப் சிஹாப்தீன் -

          

அல் - அஸூமத் அவர்களை முதன் முதலாக நான் சந்தித்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் என்பது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. முஸ்லிம் சேவைக்கான ஒரு கவியரங்க ஒலிப்பதிவு நிகழ்வு அது. அவரது தலைமையில்தான் அந்தக் கவியரங்கம் நடைபெற்று ஒலிபரப்பானது. கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். ஏனையவர்கள் இப்போது ஞாபகம் இல்லை. எனது கவிதையை நான் வாசித்து முடித்ததும் 'உங்களுக்கு மரபுக் கவிதை நன்றாக வருகிறது,' என்று பாராட்டினார். அவருக்கு அன்று என்னைப் பிடித்துப் போயிருக்க வேண்டும். 

அல் அஸூமத் கொழும்பு - நீர்கொழும்புப் பிரதான பாதையொட்டி அமைந்திருக்கும் மஹபாகே என்ற இடத்தில் குடியிருந்தார். திருமணத்தின் பின் நான் வத்தளை - மாபோளைக்கு வந்து சேர்ந்தேன். எனது வீட்டுக்கும் அவரது வீட்டுக்குமிடையிலான தூரம் மூன்று கிலோ மீற்றர் எனலாம். இதனால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் நான் அவர் வீட்டுக்குச் சென்று அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.

அவரது மூத்த புதல்வரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இப்னு அஸூமத் (பாரூக்) எனது வயதொத்தவர். வகவத்தில் அறிமுகமாகி எனது குறிப்பிடத்தக்க நண்பர்களில் ஒருவரானவர். இதற்கப்பால் அஸூமத் அவர்களின் மூத்த புதல்வியைத் திருமணம் செய்தவர் கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள். அமீர் அலி எனது தாய் வழிப் பாட்டனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வகையில் அல் - அஸூமத் அவர்கள் குடும்ப வழியிலும் ஒன்றித்தவர். இந்தக் காரணங்கள் பற்றியும் எமது உறவு நன்றாக நீடித்திருந்தது. இன்று வரை நீடித்து வருகிறது.

இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடத்துவது, வெளி நாடுகளில் கலந்து கொள்வது என்று அல் - அஸூமத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தாஸிம் அகமது, நான் ஆகியோர் ஒன்றாக இயங்கி வந்துள்ளோம். கடந்த 2016 ஆம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மலர், அரங்கக் கட்டுரைத் தொகுதி இரண்டையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் செம்மைப் படுத்தித் தந்தவர்.  ஒவ்வொரு புத்தகமும் 600 பக்கங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவற்றுக்கெல்லாம் அப்பால் அல் அஸூமத் நல்ல நகைச் சுவை சொல்லக் கூடியவர். எழுதவும் கூடியவர். நாங்கள் குழுவாகச் சேர்ந்திருக்கும் போதுதான் அவரது நகைச்சுவைகள் வெளி வரும்.அவற்றில் பெரும்பாலானவை இலக்கியமும் இலக்கியவாதிகளும் சார்ந்தவையாக இருக்கும்.

யாத்ரா (21 அல்லது 22 இல்) அவர் எழுதிய ஒரு சிறுகதை உண்டு. இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் கிண்டலடித்திருப்பார். இக்கதையை அவர் எனக்குத் தந்த போது அவர் தலைப்பிட்டிருக்கவில்லை. அக்கதைக்கு 'அலையழிச்சாட்டியம்' என்ற தலைப்பை நான் இட்டேன். வாய்ப்புக் கிடைக்குமானால் அதனைத் தேடி வாசித்துப் பாருங்கள். சிரிப்பு நிச்சயம்!

2

'ஜீவநதி' அல் அஸூமத் அவர்கள் பற்றிய மலரொன்றை வெளியிடுவதற்காக அவரது இஸ்லாமிய இலக்கிய, இஸ்லாம் மார்க்கம் சார் எழுத்துகள் பற்றிய ஓர் முழு ஆக்கத்தைக் கோரி என்னிடம் வேண்டுகோள் வைத்தது. எனவே இந்த ஆக்கத்தில் அவை பற்றி மட்டும் பேச வேண்டியதே எனக்குரிய வேலை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நபி மொழிகளை குறட்பாக்களாக எழுதிக் கொண்டிருந்தது எனக்கு  ஞாபகம் உண்டு. ஆனால் பின்னாளில் அதை மொத்தமாக இழந்து விட்டிருந்தார். அத்தோடு அது பற்றிய ஆழந்த கவலை அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் இருந்தது. இதற்கப்பால் நபிக் குறள்கள் எழுதினார். அதன் தட்டச்சுப் பிரதியை நான் பார்த்திருக்கிறேன். அது இன்னும் வெளிவரவில்லை. அதில் 1800 குறட் பாக்கள் அடங்கியிருக்கின்றன என்று அவர் எனக்குச் சொன்னது ஞாபகத்தில் உண்டு. 

அல் அஸூமத் அவர்களின் முதல் மொழிபெயர்ப்பு நூல்களில்  'பிலால்' என்ற நூலைத்தான் முதலில் நான் வாசித்தேன். அது ஒரு பரவசம். அந்தப் பரவசத்துக்குக் காரணங்களில் ஒன்று அந்நூலின் எழுத்து நடை. இரண்டு அந்த நூல் யாரை வைத்து எழுதப்பட்டதோ அந்த நபர். வாசிக்கும் போது பல இடங்களில் என்னை அழவும் மெய் சிலிர்க்கவும் வைத்த நூல் அது. 

பிலால் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அபிசீனிய பரம்பரையில் வந்த ஓர் அடிமை. நபிகளார் வழி காட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சொல்லொணாத் துன்பங்களுக்கும் ஆக்கினைகளுக்கும் ஆளானவர். கருப்புத் தோல் கொண்ட இந்த பிலால்தான் தொழுகைக்காக முதன் முதலில் அதான்' சொல்ல (தொழுகைக்கு அழைப்பு விடுக்க) நபிகளாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டவர். நபிகளார் அவருக்கு வழங்கிய இந்த உயரிய மரியாதை, நபிகளாருடனேயே நிழல் போல் வாழ்ந்தது ஆகிய காரணங்களால் இன்று வரை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவராலும் கண்ணியத்துக்கும் மரியதைக்கும் உரியவராகக் கருதப்படுகிறார்.

இத்தகைய கண்ணியத்துக்குரிய பிலால் அவர்களைப் பற்றி அயர்லாந்து தேசத்தவரான எச்.ஏ.எல். க்ரேய்க் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது இந்நூல். இதன் முதல் பதிப்பு ஆங்கிலத்தில் 1977 இல் வெளிவந்திருக்கிறது. கவிஞர், நாடகத் துறையாளர், சினிமா வசன கர்த்தா என்று பல்வேறு திறமைகளைக் கொண்ட க்ரெய்க், நபித் தோழரான பிலால் இப்னு ரவாஹா பற்றி இந்த நூலை எழுதியிருப்பதே ஓர் ஆச்சர்யம்தான். அதை அதே கவித்துவ நடையில் அல் அஸூமத் அவர்கள் கொண்டு வந்திருப்பதும் மற்றோர் ஆச்சர்யம். இந்த நூல் பிரபல ஆங்கில இஸ்லாமிய நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களது முயற்சியின் பலனாகத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழில் இதன் இரண்டாவது பதிப்பு 1995ல் வெளியிடப்பட்டிருக்கிறது. முதற் பதிப்பு 1988 இல் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். இன்றளவில் இந்த நூல் ஐந்து பதிப்புகளைக் கண்டிருப்பதாக அறிய வருகிறேன்.

இந்த நூலை ஓர் இஸ்லாமிய இலக்கிய நூலாக நான் கருதிய காரணத்தால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவையில் நான் நடத்தி வந்த 'இலக்கிய மஞ்சரி' நிகழ்ச்சியில் போர்கள் பற்றிய ஓரிரு அத்தியாயங்கள் தவிர, ஏனையவற்றை வாசித்து ஒலிபரப்பி வந்தேன். (ஒலிபரப்பான காலத்தில் போர்கள் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட்டிருந்தது,) இந்த அத்தியாயங்களை வாசிக்கக் கேட்ட பலர் இந்த நூலை எங்கே வாங்குவது என்று கேட்டு என்னிடம் விபரங் கோரியிருந்தார்கள். அதில் ஒருவர் தன்னை முச்சக்கர வண்டி ஓட்டுனர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது மனைவி இந்த நூலைப் பெற்றுத் தரக் கோரியதாக என்னிடம் சொல்லி வினவியது கொண்டு இந்த நூலின் அடைவு எழுத்தழகு மேலும் என்னைப் பிரமிக்கச் செய்தது.

இந்த நூலை க்ரெய்க் அவர்களின் மொழிக்கு அப்பால் அதாவது தனித் தமிழ்க் காப்பியமாக உருவாக்கவே முதலில் அல் அஸூமத் அவர்கள் ஆரம்பிதததாகவும் மொழி பெயர்க்கப் பொறுப்பளித்தவர் க்ரெய்க் அவர்களின் மொழிப் போக்கிலேயே அதை விரும்பியதனால் தமிழ்க் கவிதைப்படுத்தும் முயற்சியை ; நிறுத்த வேண்டி வந்ததாகவும் அல் அஸூமத் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஆயினும் பின்னர் 'பிலால்' தமிழ்க் காவிய நூலை எழுதி முடித்த அல் அஸூமத் அதனை 2020 ஆம் ஆண்டு 240 பக்க நூலாக வெளியிட்டார். க்ரெய்க் அவர்களின் நடைப்போக்குக்குக் குறையாமல் இந்தத் தமிழ்க் காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் தனி அழகோடு இந்த நூலை வாசித்து இரசிக்க முடியும்.

க்ரெய்க் அவர்களின் நூலின் மொழிபெயர்ப்பில் பிலால் அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமான முதற் பந்தி இப்படி அமைந்திருக்கும்:-

'நான் ஓர் அடிமை. என் பெயர் பிலால். என் தாய், தந்தையரும் அடிமைகள். பிறப்பிலேயே அடிமையான நான் எனது எஜமான் உமையா என்னைக் கொன்று விட முடிவெடுத்த நாள் வரையும் அடிமையாகவே இருந்தேன்.'

பின்னால் வந்த பிலால் காவியத்தில் இந்த வரிகள் இப்படி இருக்கும்:-

அடிமையர் குழந்தை ஆய பிலால் யான்

அடிமைத் துவத்துள் அவதரித் தென்றன்

உடையான் வணிகள் உமையா எனைக்கொல

முடிவுகொள் நாள்வரை தொடர்ந்ததில் இருந்தேன்

3

மொழிபெயர்ப்புக்கு அப்பால் அல் அஸூமத் எழுதிய இஸ்லாமிய நூல்களில் உச்சமானதாக இருப்பது முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியதுதான். இந்த நூல் தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் அல் அஸூமத்தை நோக்கிக் கண்களை அகல விரிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

தமிழகத்தைச் சேர்ந்தவரும் சிங்கப்பூரில் வசித்து வருபவருமான அன்புச் சகோதரர் எம்.ஏ. முஸ்தபா அவர்கள் ரஹ்மத் அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவிப் பல்வேறு இஸ்லாமிய நூல்களை வெளியிட்டு வருகிறார். அவர் நல்ல வாசிப்பாளர் மட்டுமன்றி இலக்கிய இரசிகரும் கூட. சிங்கப்பூரிலும் 'சிரங்கூன் டைம்ஸ்' என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.

இந்த அறக்கட்டளையானது முகம்மது நபியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இலகுவில் படித்தறியும் வகையில் எழுதப்பட வேண்டும் என ஒரு சர்வதேசப் போட்டியை நடத்தியது. முதலாவதாகத் தெரிவு செய்யப்படும் பிரதிக்கு இந்திய நாணயத்தில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதை ரஹ்மத் அறக்கட்டளையே வெளியிடும் என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொருத்தமாக அந்த நூலை எழுதி வெற்றி பெற்றவர் அல் அஸூமத் அவர்கள்.

'நூலாசிரியர் பிறப்பால் ஓர் இந்து. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். தமிழாசிரியர், தந்தை ஒரு மலையாளி. முஸ்லிம் நண்பர்களுடன் பழகியபோது, இஸ்லாமிய பழக்கவழங்கள் சிலவற்றைத் தெரிந்திருக்கிறார். இஸ்லாத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு மிகத் தாமதமாகவே கிடைத்திருக்கிறது. 

நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே பல இடங்களில் அழுதிருக்கிறார். திறந்த மனதோடு ஒன்றை வாசிக்கும்போது அதிலுள்ள யதார்த்தம் உலுக்கவே செய்யும். பின்னர் குர்ஆனைப் படித்தார். இஸ்லாத்தில் இணைந்தார்' என்று நூலை மேலாய்வு செய்தவர்கள் தமது உரையில் அல் அஸூமத் அவர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சற்றேறக்குறைய 750 பக்கங்களிலான இந்த தூல் 2018ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் கிடைப்பது போல் இலங்கையில் இந்நூலைப் பெற முடியவில்லை. இந்ந நூலுக்கான பரிசளிப்பு ஒரு விழாவாக நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. சில வேளை தமிழக எழுத்தாளர் எழுதிப் பரிசு பெற்றிருந்தால் அப்படி ஒரு விழா நடந்திருக்கலாமோ என்று நான் சில வேளை எண்ணுவதுண்டு.


4

'இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை' என்ற தலைப்பிலான பிரமாண்ட அளவு கொண்டு ஒரு மொழிபெயர்ப்பு நூல் 2015 ஆம் ஆண்டு வெளியானது. பிரபல இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளருமான அப்துல் ஹலீம் அபூ ஷக்கா அவர்கள் அறபியில் எழுதிய ஆறு பாகங்களைக் கொண்ட நூலின் அறபியில் அமைந்த சுருக்க வடிவமான இரண்டு பாகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ஏ4 அளவிலான வடிவத்தில் ஏறக்குறைய 800 பக்கங்களில் அமைந்த இந்நூல் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவர் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மட்டத்தில் அறியப்பட்ட நல்லவாசகரும் மொழிபயர்ப்புக்கான சிறந்த நூல்களை அடையாளம் காணக் கூடியவரும் மொழிபெயர்ப்பாளருமான தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மத் ஸனீர் அவர்கள்.

நான் மேலே  குறிப்பிட்;ட  அறபில் சுருக்கப்பட்ட இரண்டு பாகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் நான்ஸி ரொபர்ட் அவர்கள். தமிழில் ஒரே நூலாக இது அமைந்த போதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நூலின் இரண்டாம் பகுதியை (ஏறக்குறைய நூலின் பாதி) மொழிபெயர்த்தவர் அல் அஸூமத் அவர்கள். முதற்பகுதியை அறபு வல்லுனரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி பி.எம்.எம். இர்பான் அவர்கள் அறபி மூலத்திலிருந்தே மொழிபெயர்த்திருந்தார். 

இந்த நூல் நபிகளார் காலத்து இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பெண்கள் பற்றிய புனை கதைகளைக் கொண்டவை அல்ல. நபிகளார் வந்த பின்னர் பெண்கள் வாழ்ந்த துயர வாழ்விலிருந்து பெற்ற விடுதலையை அவர்களது சமூகப் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைக்கிறது. நபிகளாரின் சொல், செயல், நடைமுறை அனைத்தும் பற்றிய தகவல்கள் பற்றி அறிவித்தவர்கள் யார், அதைக் கேட்டவர், கண்டவர் யார் என்பதற்கெல்லாம் ஒரு தொடர் இருந்தால் மாத்திரமே அது சரியான அறிவிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். அறிவிக்கும் முதல் நபர் முதல், கேட்டவர், கண்டவர் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான தகவல்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

இஸ்லாமோபோபியாவை முன் கொண்டு செல்பவர்கள் முதலில் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்பதையும் அங்குப் பெண்கள் அடக்கியொடுக்கப்படுகிறார்கள் என்பதையுமே முற்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். எழுதப்பட்டவற்றையே திருப்பித் திருப்பி வேறு வார்த்தைகளில் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு கருத்து உண்டு. அதே போல பதிலளிக்கப்பட்ட கேள்விகளையே இஸ்லாமோபோபியா மீண்டும் மீண்டும் தமது செல்வாக்கு, அதிகாரம், வருமானம் ஆகியவற்றை வைத்துத் தமது ஊடகங்கள் மூலம் கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. இந்த நூலைத் திறந்த மனதுடன் படித்தால் அக்கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் கண்டடைய முடியும்.

இந்த நூலுக்கான அல் அஸூமத் அவர்களின் பங்களிப்புப் பற்றி இந்த நூலின் வெளியீட்டாளர் இப்படிச் சொல்கிறார்:-

'மொழிச் செம்மை குறித்து மிகவும் அவதானமாக இருப்பவர் கவிஞர். அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால் 'கண்னில் விளக்கெண்ணெய் இட்டு'க் கண்காணிப்பவர்.அவரது மொழிபெயர்ப்பில் அழகழகான, பொருத்தத்தில் மிகுந்த சொற்பிரயோகங்களைக் கண்டு களிக்கலாம்.'

5

எம்.ஏ.முஸ்தபா அவர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளைக்காக அல் அஸூமத் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க மற்றொரு பணி 'இஸ்லாமிய வரலாறு' என்ற மூன்று பாகங்கள் கொண்ட பெருநூலை மொழிபெயர்ப்புச் செய்ததாகும். மூன்று பாகங்களாக 2017 இல் வெளிவந்த இந்த நூல்கள முறையே; 629, 815, 573  பக்கங்கள் கொண்டவை. 

உண்மையில் இந்த வராற்றுத் தொடரை தமிழ்ப் பேசும் உலகம், தமிழ்ப் பேசும் முஸ்லிம் உலகம் அறிந்து கொள்வதெனில் ஒன்றில் அராபிய நூல்களை அல்லது ஆங்கில நூல்களையே படிக்கும் நிலை மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. இந்த மூன்று பாகங்களின் மூலம் அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கிறது.

எல்லா மனிதர்களாலும் வரலாற்றைப் படிக்க முடியாது போனாலும் கற்றவர்கள், புத்தி ஜீவிகள் கற்பதன் மூலம் சக இன, மதக் குழுமங்களின் பின்னணியைத் தெரிந்து பேச முடியும். தற்காலத்தில் உள்ள படிப்பாளிகளில் பலர் இவற்றையெல்லாம் படிக்காமலேயே அரை குறை அறிவுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். சச்சரவுக்குப் பின்னால் இருக்கிறார்கள். தமது முழங்கை அளவு கொண்டு வரலாறுகளைத் திரித்து விடுகிறார்கள். அவை வெறுப்புணர்வை வளர்க்கின்றன. மனிதர்களைக் கூறு போடுகின்றன.

6

அல் அஸூமத் அவர்களின் மொழிபெயர்ப்பிலான இன்னும் அச்சில் வெளிவராத இரண்டு அற்புதமான நூல்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இரண்டுமே அச்சுக்குத் தயாரான தயாரிப்பில் சகலதும் பூர்த்தியான நிiயில் உள்ளன. அவற்றில் ஒன்று, கலாநிதி ஆய்த் அப்துல்லாஹ் அல் கர்ணி அறபியில் எழுதிய 'லா தஹ்ஸன்' - 'கவலைப்படாதீர்கள்' என்று நூல். இந்த நூல் 625 பக்கங்களைக் கொண்டது.

இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டோன்ற் பீ ஸாட்' - இனை தர்ஹா நகரைச் சேர்ந்து அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களே அல் அஸூமத் அவர்களுக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறார். இதன் ஆத்மீகப் பெறுமதி கருதி அதனை அல் அஸூமத் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். 

மானிடரின் கவலை, ஆற்றாமை, நம்பிக்கையீனம், பலவீனங்கள் அனைத்தையும் இந்த நூல் துடைத்து எறிந்து விடுகிறது. மனதை ஆற்றுப்படுத்துகிறது. அதற்கெனக் கொடுக்கப்படும் விளக்கங்கள் மிகத் தெளிவானவை, இலகுவானவை. சிறிய சிறிய அத்தியாயங்களாக அமைந்திருக்கும் இந்த நூலை வாசிப்பவர்கள் பொறுமை மிக்கவர்களாகவும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாகவும் மாறி விடுவார்கள் என்பதை என்னால் அழுத்திச் சொல்ல முடியும். இதே முறையில் எழுதப்பட்ட டேல் கார்ணகியின் ஒரு நூல் உலகப் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

'கவலைப்படாதீர்கள்' என்ற இந்த நூலின் ஆக்கத் திறன், முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.  திறந்த மனதோடு இந்நூலை வாசிக்கும் முஸ்லிம் அல்லாதோரும் ஆசிரியரின் ஆலோசனைகளையும் சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த ஆலோசனைகள் அருளப்பட்ட ஒழுக்காறுகளின் உறுதி மீதும் உண்மையை ஊடுருவிச் செல்லும் கற்றறியப்பட்ட சிந்தனைகளின் மீதும் கட்டமைக்கப்பட்டவையாகும்' என்கிறார்  இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பாசிரியரான முகம்மத் இப்ன் அப்துல் முஹ்ஸின்  அல் துவைஜ்ரி அவர்கள்.

ஆனால் அந்த ஆனந்தத்தை அடைய இந்த நூல் வெளிவர வேண்டாமா? எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ஒரு சாதாரண அளவிலான நூலை வெளிக்கொணரப் படும்பாடு அறியதவரா நாம்? யாராவது ஒரு செல்வந்தரின் கண்களில் பட்டு, அவரது ஆத்மா இதை வெளிக் கொணரத் துடிக்குமாயின் அதை விட மகிழ்ச்சியான செய்தியொன்று இருக்காது. அந்தப் பாக்கியத்தைப் பெறும் மனிதர் யாராக இருப்பார் என்று இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியும்?

மற்றைய நூல் 'பாலைவனப் போராட்டம்.' டென்மார்க் ஊடகவியலாளரான நுத் ஹோம்போவின் பயண அனுபவ நூல் இது. டென்மார்க்கிலுள்ள ஹோர்ஸன்ஸ் நகரில் 1902 ஆம் ஆண்டு பிறந்த ஹோம்போ 1930 இல் போல்கனை ஊடறுத்துப் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயண நூலே 'பாலைவனப் போராட்டம்.'

ஹோம்போ தனது இருபதுகளில் இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டார். பலவீனமானவர்களதும்  ஒடுக்கப்பட்டவர்களினதும் பக்கமாக அவரை எப்போதும் இழுத்துச் சென்ற நேர்மையுணர்வு அவரிடம் மிகுதியாக இருந்ததால் அவர் கொல்லப்பட்டார்' என்கிறது நூலின் அறிமுகக் குறிப்பு.

''பாலை நிலப் போராட்டம்' என்ற இந்த நூல் தனித்துவமான ஒரு துணிகரச் செயல். இந்த நூலைப் படிக்கும் போது எனது கண்களில் பலமுறை கண்ணீர் வடிந்தது. அரேபியப் புரட்சியைப் பற்றிய அவருடைய சொற்களை நீங்கள் வாசிக்கும் போது இந்த டென்மார்க் ஊடகவியலாளரின் தூய இயற்பண்பை இலகுவாக நுகர முடியும்'' என்கிறார் ஃபேடல் சுலைமான் - இவரே இந்த நூலை வெளியிட்டவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

'அவர்கள் கிழிபட்டவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால் உறங்கும் இப்போது கூட, அவர்களின் எல்லா முகங்களிலும் முன் பின் அறியப்படாத அமைதியான, தீர்க்கமாக அமைதிப் பார்வை இருந்தது. இமைகளின் ஓர் இமைப்புக் கூட இல்லாமல் இறப்பதற்கு இயலுமாயிருப்பது ஏன் என்று எனக்கு விளங்கத் தொடங்கியது.  ஒரு நாள் அவர்களுடன் கழித்த போது நான் கவனித்திருந்ததன்படிஅவர்கள் தமது சமய மனச்சாட்சிக்கு அச்சங்கொண்டு பின்பற்றினார்கள் என்பதைக் கண்டேன். எக் கொடிய விதி அவர்களைத் தாக்கியிருந்தாலும் அந்நடப்புக்காக இறைவனைக் குறை கூற அவர்களுக்குத் தோன்றவே இ;ல்லை.' 

மேலேயிருக்கும் பந்தி ஹோம்போவின் எழுத்து நடையின் அழகை எடுத்துக் காட்டுகிறது.

புத்தக வடிவில் 10 புள்ளி எழுத்துருவில் 360 பக்கங்களைக் கொண்ட நூல் இது. 

7

என்னுடைய கருத்துப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களில் முதல் இ;;டத்தை அல் அஸூமத் அவர்களே வகிக்கிறார் என்பேன். தமிழ் இலக்கணம், கவிதை, நாவல், சிறுகதை, சஞ்சிகை, பெறுமதியான மொழிபெயர்ப்புகள் என திரும்பும் பக்கமெல்லாம் அவரே தெரிகிறார். இவ்வளவையும் செய்து விட்டு அல்லது செய்து கொண்டு மிக அமைதியாக இருக்கும் ஒரு நபரும் இவரே.

நூலாக வெளிவராத அவரது எழுத்துகளை நான் இனிமேல்தான் வாசிக்க வேண்டும். இதுவரை படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது 'பிலால்' தான். அதற்குக் காரணம், க்ரெய்க் அவர்களின் மொழி நடையும் அதை அப்படியே தமிழில் தந்த அல் அஸூமத் அவர்களும் முகம்மது நபியவர்களுடன் நிழல் போல் 22 வருடங்கள் வாழ்ந்தவரும், தொழுகைக்கான முதல் அழைப்பை விடுத்தவரும் உலக முஸ்லிம்களால் நெகிழ்ச்சியுடன் மதிக்கப்படுபவருமான ஸெய்யிதினா பிலால் (ரலி) அவர்களுமாவர்.

எல்லாருக்கும் ஆயிரமாயிரம் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கின்றன. எனக்கும் உள்ள சின்னச் சின்ன ஆசைகளில் முதன்மைக்குரிய ஒன்று இருக்கிறது. கவிஞர் அல் அஸூமத்துடன் டமஸ்கஸ் சென்று; பிலால் (ரலி) அவர்களின் அடக்கஸ்தலத்தில் நின்று,  அவருக்கு ஸலாம் உரைத்து, 'ஸெய்யிதினா பிலால், இதோ உங்களைத் தொடர்ந்த இன்னொரு பிலாலுடன் உங்களைக் காண வந்திருக்கிறேன்' என்று உரக்கச் சொல்ல வேண்டும்!

(ஜீவநதி 202 வது இதழில் வெளிவந்த கட்டுரை)



Thursday, October 13, 2022

எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கள்தான் உறை!

 


                                                                                    அடோனிஸ்


1930ம் ஆண்டு சிரியாவில் ஓர் ஏழ்மை மிகுந்த விவசாயக் கிராமத்தில் நான் பிறந்தேன். எனது கிராமத்தில் பாடசாலைகள் இல்லை. தொலைபேசி வசதிகள் இல்லை. மின்சாரமும் கிடையாது. எதுவுமே கிடையாது. எனது பதின் மூன்று வயது வரை நான் ஒரு காரைக் கண்டதும் இல்லை.

எனது தந்தையார் பாரம்பரிய அறபுக் கலாசாரத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். நானும் அந்தப் பின்னணியோடுதான் வளர்க்கப்பட்டேன். அறபுக் கலாசாரத்தின் சாரமாக அமைந்தது கவிதைதான். எனவே, அனைத்துக் கவிஞர்களதும் கவிதைகளை வாசிக்க எனது தந்தையார் என்னைத் தூண்டினார். இஸ்லாத்துக்கு முந்திய காலப்பிரிவிலிருந்து இஸ்லாம் அறிமுகமான பின்னர் தோன்றிய அனைத்துக் கவிஞர்களும் அதற்குள் அடங்குவார்கள். மிகப்பிரபல்யம் வாய்ந்த அல் முதனப்பி, அபு தம்மாம், அல் மஆரி, ஏன் இம்ரஉல் கைஸ், அபூ நவாஸ் அடங்கலாக எல்லோருடைய கவிதைகளையும் நான் படித்தேன். இப்படியொரு சூழலில்தான் நான் வளர்ந்து வந்தேன்.

இப்படியிருக்கும் போது நானும் தன்னிச்சையாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். இது இயல்பாகவே நடந்தது. 

1943ம் ஆண்டில் ஒரு நாள் சிரியா சுதந்திரம் அடைந்தது. அப்போது எனக்கு வயது பதின்மூன்று. ஷூக்ரி அல் குவாத்லி முதலாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தனது நாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நோக்கில் சிரியாவின் எல்லா மாகாணங்களுக்கும் விஜயம் செய்ய விரும்பினார். இந்தத் தகவல் எங்கள் கிராமத்திலும் பேசப்பட்டது. எனக்கு எப்படி அந்த எண்ணம் தோன்றியது என்று ; தெரியாது, எமக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடு முகமாகவும் அவரை வரவேற்கு முகமாகவும் ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்தக் கவிதையில் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோள் விடுப்பது போலவும் அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பாடசாலை வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று அது அமையக் கூடிய வகையில்  கற்பனை செய்தேன். அந்தக் கவிதையை அவ்வாறே எழுதி என் தந்தையிடம் வாசித்துக் காட்டிய போது மிக நன்றாக அது அமைந்திருக்கிறது என்று சொன்ன அவர், இதை எப்படி அவரை நெருங்கி நீ வாசித்துக் காட்டுவாய் என்று கேட்டார். ஏதோ ஒரு வழியில் முயற்சிக்க வேண்டும் என்று தந்தையாரிடன் சொன்னேன். 'உனக்கு எனது வாழ்த்துக்கள். உனது முயற்சி வெற்றி பெறட்டும்;'என்று அவர் என்னை வாழ்த்தினார்.

எமது கிராமத்துக்கு அருகேயுள்ள நகருக்கு ஜனாதிபதி வருகை தந்தார். (கதை நீண்டுவிடும் என்பதால் சுருங்கச் சொல்கிறேன்.) அன்று கிராமத்துப் பாரம்பரிய ஆடையையும் ஒரு நைந்து கிழிந்த பாதணியையும் நான் அணிந்திருந்திருந்தேன். உண்மையில் நான் வெறுங்காலுடன் நடக்கப் பழக்கப்பட்டவன்தான். ஓர் அதிசயமான சூழலில் அவருக்கு அந்தக் கவிதையை என்னால் வாசித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அவருக்கு அந்தக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. எனது கவிதையிலிருந்து ஒரு வசனத்தை அவர் எடுத்துத் தனது உரையில் பயன்படுத்தினார். அந்த வரிகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. 'எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கதான் உறை'. இவைதாம் அவ்வரிகள்.

அவர் தன்னை வந்து சந்திக்குமாறு என்னிடம் சொன்னதற்கேற்ப, நான் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றேன். என்னை ஆரத் தழுவிக் கொண்டு 'உனக்கு என்ன வேண்டும் மகனே?' என்று கேட்டார். 'நான் பாடசாலைக்குப் போக வேண்டும்' என்று சொன்னேன். 'உனது கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும், நீ பாடசாலைக்குச் செல்வாய்' என்று சொன்னார். இப்படித்தான் அதாவது கவிதையால்தான் பாடசாலைக்குச் சென்று கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதைக்காகவே நான் பிறந்தேன் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. 

அடோனிஸ் என்ற பெயர் எனக்கு எப்படி வந்தது என்று நான் சொல்ல வேண்டும். பாடசாலைக் கல்விக்குப் பின்னர் இரண்டாம் நிலைக் கல்விக்காக டார்ட்டுஸ் நகர பிரஞ்சுப் பாடசாலையில் சேர்ந்தேன். அங்கே ஒன்றரை வருடமளவில் கற்றேன். 1945ல் அப்பாடசாலை மூடப்பட்டு வி;ட்டது. அதற்குப் பின்னர் அரச பாடசாலைக்குச் சென்றேன். 

அப்போதே கவிதைகள் எழுதிப் பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு அனுப்பினேன். கவிதையில் எனது உண்மைப் பெயரான் அலி அஹமத் செய்த் எஸ்;;:பர் என்று குறிப்பிட்டேன். ஆனால் அவை என்னுடைய கவிதைகளைப் பிரசுரிக்கவில்லை. ஆகவே அவற்றின் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. ஓரிரவு கோபத்துடன் இருந்த நான் அடோனிஸ் பற்றிய புராணக் கதையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கதையில் அடோனிஸூம் இஸ்தாரும் காதல் கொள்கிறார்கள். அடோனிஸ் வேட்டைக்குச் செல்லும் பழக்கமுள்ளவன்.  அடோனிஸ் என்ற பெயரில் லெபனானில் ஓர் ஆறு இருந்தது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த ஆற்றின் பெயரைப் பின்னர் இப்றாஹீமின் ஆறு என்று பெயர் மாற்றி விட்டார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியாது. அடோனிஸ் ஒரு நாள் காட்டுப் பன்றி வேட்டைக்குச் சென்றான். வேட்டையின் போது காட்டுப் பன்றிதான் அவனை வேட்டையாடியது. அவன் இறந்து போனான். அவனுடைய இரத்தத்திலிருந்து ஒரு பூ மலர்ந்தது. அதற்கு நட்சத்திரப் பூ என்று பெயர். இந்தப் புராணக் கதை எனக்குப் பிடித்திருந்தது. அன்றிலிருந்து எனது கவிதைகளை எழுதிய தாளில் எனது பெயரை அடோனிஸ் என்று குறிப்பிட்டேன். ஏனெனில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அந்தக் காட்டுப் பன்றியைத்தான் விரும்பியிருந்தன. அதனால்தான்  அவர்கள் என்னைக் கொல்ல முயன்றார்கள்.

என்னுடைய கவிதைகளை முன்னர் நிராகரித்த பத்திரிகையொன்றுக்கு அடோனிஸ் என்ற பெயரில் ஒரு கவிதையை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரித்தார்கள். அத்துடன் அன்புள்ள அடோனிஸ் எமது காரியாலயத்துக்கு ஒரு முறை வாருங்கள் என்ற அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றேன். அப்போது எனக்கு பதினைந்து வயது கூட நிறைந்திருக்கவில்லை. என்னைக் கண்ட அவர்களுக்குத் திகைப்பு ஏற்பட்டது. உண்மையில் நீர்தான் அடோனிஸா என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே பிரதம ஆசிரியருக்கு அடோனிஸ் என்பவர் வந்திருக்கிறார் என்று தகவல் கொடுத்தார்கள். அவரும் கூட என்னைக் கண்டு திகைத்து நின்றார்;. பிறகு 'உண்மையில் நீர் அடோனிஸ் தானா என்று கேட்டார். நான் ஆம் என்றேன். இப்படித்தான் அடோனிஸ் என்ற பெயரை நான் சூட்டிக் கொண்டேன். இப்போதெல்லாம் என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தால் எனது உண்மையான பெயரை அலி அஹமத் என்று எழுதுகிறேன்.

எனது சொந்தக் கலாசார, கவிதை சார் வரலாற்றைப் புதிய நோக்குடன் உருவாக்க முயற்சி செய்திருக்கிறேன். அது சொந்த வரலாறும் சொந்த நோக்கும் சொந்த உலகத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். பிற்காலங்களில் எனது போக்கையும் நோக்கையும் முழு அரபுப் பாரம்பரியத்துக்குள்ளும் கொண்டு செல்லவும் முயற்சியெடுத்தேன்.  அறபு வரலாற்றை நகர்த்துவதற்கு  கல்வித்துறை சார்ந்த சட்டகத்திலிருந்து அதாவது மார்க்கம், பாடசாலைகள், பழக்கவழக்கங்களிலிருந்து பிடுங்கி நவீன உலகின் முன்னால் மீள் வாசிப்புக்காக வைக்கும் முயற்சி அது. அதாவது அறபுக் கலாசாரத்தின் நிலையானதும் மாறுவதும் குறித்த மறுபரிசீலனை.

இந்த முயற்சி அறபுக் கலாசாரம் குறித்த புதிய புரிதல்களுக்கு அடித்தளமிட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

அறபுக் கவிதையின் போக்கிலும் ஒரு மாறுதலை நான் உண்டு பண்ணினேன். அறபுக் கவிதைகளிலிருந்து எவற்றை நான் தேர்ந்தெடுத்தேனோ அவை குறித்து நவீன வாசகருடன் நான் பேசினேன். அவற்றை ஒரு தொகுதியாக்கி அறிமுகத்தையும் எழுதினேன். அறபுக் கவிதை குறித்து ஒரு நூலையும் எழுதினேன். அழைப்பின் பேரில் பிரெஞ்சுக் கல்லூரியில் அது குறித்து விரிவுரைகளும் நடத்தினேன். பின்னர் அறபு மொழியின் உரை நடை குறித்து மீள்வாசிப்புச் செய்ய முடிவு செய்தேன். அது பற்றி ஒரு புத்தகத்தை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டேன். நவீன வாசகருடனான உரையாடலுக்கான படைப்புகளையும் அதில் சேர்த்தேன். நான் வெறுமனே கவிதையோடு மட்டும் நின்று விடவில்லை. அறபுக் கலாசாரம், அறபுக் கவிதை, அறபு உரை நடை, அறபு இலக்கியம் என்று ஒரு புதிய வரலாற்றுப் போக்கைத் தொடக்கினேன்.  

உங்களுக்குத் தெரியும். ஒரு மரம்தான் ஒரு வனத்தை உருவாக்கும். நானும் ஒரு தனி மரம்தான். ஆனால் என்னைச் சுற்றி அறபுக் கவிஞர்களால், எழுத்தாளர்களால், புத்திஜீவிகளால் ஒரு வனத்தை நான் உருவாக்கினேன். என்னுடனான உறவு அறபுக் கவிஞர்களுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நான் இயங்கிவாறு எல்லா அறபுக் கவிஞர்களும் இயங்குவார்கள் என்றும் பழையவற்றையே மீட்டுப் பேசிக் கொண்டிருக்காமல் அவர்களுக்கான புதிய உலகங்களை ஏற்படுத்துவார்கள் என்றும்  எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் என் முயற்சியைத் தொடர்வதை என்னால் காண முடியவில்லை. எனவே அவர்களைப் பற்றிப் பேசுவதை நான் தவிர்த்து வந்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்து முயற்சிகளுக்கு என்னிடம் மிகுந்த மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவற்றை மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை. இதனால்தான் அவை நவீன அறபுக் கவிதைக்குள் வரும்போது - அதாவது கலீல் கிப்ரான் காலத்திலிருந்து இன்று வரை - அவற்றை வகைப்படுத்த நான் முனையவில்லை. 

(அடோனிஸ் வழங்கிய பேட்டியிலிருந்து பெரும் பகுதி)


Saturday, March 19, 2022

நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன் - நூலுக்கான அணிந்துரை


ஷெய்க்ஹா ஜெலீலா ஷபீக்
(முன்னாள் அதிபர் - கள்எலிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி,
முன்னாள் அதிபர் ஆயிஷா சித்தீக்கா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி)

அவர்கள் “நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்“ நூலுக்கு வழங்கிய அணிந்துரை.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி...

அகிலங்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட கண்மணி நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களைப் பின்பற்றி வாழ்வோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் நிறைவாய்ப் பொழிய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் மார்க்கம். இதனை நபி (ஸல்;) அவர்கள், 'நான் உங்களை ஒரு பிரகாசமான பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவுகூடப் பகல்போல் வெளிச்சமானது,' எனக் குறிப்பிட்டார்கள். இந்த வாழ்க்கை நெறிக்குச் சொந்தக்காரர்கள் தாம் முஸ்லிம்கள். 

இவ்வுயர் மார்க்கத்தின் போதனைகளையும் வழிகாட்டல் களையும் முஸ்லிம்கள் தம் வாழ்வியலாக அமைத்துக் கொண்டி ருந்தால் அவர்கள் வாழும் பிரதேசங்கள் மாத்திரமன்றி முழு உலகும் அமைதியும் சமாதானமும் அரசோச்சும் இடமாக மாறியிருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களின் நடை, உடை, பாவனைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமாக அமைந்து விட்டமையால் அவர் களுக்கு இழிவும் அழிவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சோதனைகளும் வேதனைகளும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் இந்நிலையிலிருந்து அனைவரையும் பாதுகாப்பானாக.

இன்று அல்குர்ஆனை ஓதப் பழகுவதிலும் அதனைத் தமாம் செய்வதிலும் முஸ்லிம்கள் காட்டும் அக்கறை அது கூறும் செய்திகளை விளங்குவதிலோ அவற்றைத் தம் வாழ்வியலாக மாற்றுவதன் மூலம் மற்றவர்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டு வருவதிலோ காட்டுவதில்லை. நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம், புனித மிஃறாஜ் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு முக்கியத் துவம் கொடுக்கின்ற பலரும் அவர்களின் வாழ்வொழுங்கையும் முன்மாதிரியையும் தம் வாழ்வியலாகக் கொள்ளாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

இந்நிலையைச் சீர் செய்து இஸ்லாமிய சிந்தனையை முன்வைத்துச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நமது உலமாக்களின் வெள்ளி மேடைப் பிரசங்கங்களும் இஸ்லாமிய நூல்களும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் உரைகளும் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் மேற்குலகில் வாழும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களான பெண் ஆளுமைகள் பதின்மரின் கருத்தாழம் கொண்ட ஆங்கில உரைகளின் தமிழாக்கமே 'நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்,' என்ற மகுடம் தாங்கி நமது கைகளில் தவழும் இந்நூல் ஆகும். வித்தியாசமான தலைப்புகளில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் மிக அழகாகவும் தெளிவாகவும் அதே வேளை, கேட்போரின் உள்ளங்களைத் தொட்டுச் செல்லும் கவர்ச்சித் தன்மையுடனும் அவற்றை அவர்கள் முன்வைக்கும் பாங்கு அருமையானது.
சிலபோது நாம் சிறிதும் கவனத்திற் கொள்ளாத நுணுக்கமான வாழ்வியல் அம்சங்களை இவ்வுரைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணமாக, 'முஸ்லிம்களாகிய எமக்கு அல்லாஹ்வைப் பற்றிய புரிதலில் ஏற்பட்ட தவறுதான் நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது, எம்மை விரக்திக்குக் கொண்டு செல்கிறது. அல்லாஹ் கருணையாளன். எல்லாக் கருணைகளுக்கு மான ஊற்றே அவன்தான். 

ஒரு குழந்தையிடம் தாயொருத்தி வைத்திருக்கும் பாசத்தை விடப் பன்மடங்கு நம்மில் பாசத்தைக் கொண்டிருப்பவன்தான் அல்லாஹ் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மையை முதல் எண்ணக் கருவாக எமது சிறாருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்,' என்று குறிப்பிடும் சகோதரி யெஸ்மின் முஜாஹிதின் உரையைக் குறிப்பிடலாம். அவரது உரையின் தலைப்பே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

சகோதரி துன்யா ஷுஐப் அவர்களின், 'ஏன் எனக்கு இப்படி?' என்ற தலைப்பினைத் தாங்கிய உரை வாழ்வில் ஏற்படும் தொடர் நோதனைகள், துன்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்பவற்றால் கடுமையாக மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ள பல நூறு உள்ளங்களுக்குச் சிறந்த ஒத்தடமாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் நாம் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய உரை அது.

'இஸ்லாம் சாந்தி மயமான மார்க்கம். அது வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டி என இஸ்லாத்தின் சிறப்பம்சங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதல்ல முஸ்லிம்களின் பொறுப்பு. அந்தத் தூய இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாக நமது வாழ்வில் செயல்படுத்திச் சொல்லாலும் செயலாலும் சான்று பகர்வோராய் இருக்க வேண்டும்' என்பதைச் சகோதரி லிண்டா சர்ஸூர் 'இஸ்லாமும் பெண்ணுரிமைகளும்' என்ற ததனது உரையில் அழகாக முன்வைத்துள்ளார்.
இவ்வாறு இந்தப் பத்து உரைகளும் ஒன்றை ஒன்று விஞ்சிய தரத்தில் மிகப் பொருத்தமான தலைப்புகளில் நம் கவனயீர்ப்புக்குரிய காத்திரமான கருத்துக்களைக் கொண்டனவாயும் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவனவாயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உரைகளை நிகழ்த்தியவர்கள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களையும் அநியாயங்களையும் எட்ட நின்று பார்த்துக் கருத்துக் கூறியவர்கள் அல்லர். அவற்றைக் கண்டும் எதிர் கொண்டும் மனம் தளராது, முடங்கி விடாது பொறுமையுடனும் உறுதியுடனும் தலை நிமிர்ந்து நிற்கும் மக்களோடு இரண்டறக் கலந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளே அவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு அஞ்சித் துவண்டு போகாது, முடங்கி விடாது அவற்றைத் தட்டிக் கேட்டு, அவற்றுக்கெதிராகக் குரல் கொடுப்பதோடு, அவற்றைக் களையவும் முயற்சி செய்வது நமது கடமை என்ற செய்தியையும் இவ்வுரை களுக்கு ஊடாக அவர்கள் நமக்குத் தந்துள்ளனர்.

இவ்வுரைகளைத் தேடிப் பெற்று, செவிமடுத்து, அவற்றின் கவர்ச்சியும் கருத்தாழமும் குன்றாமல் மொழி மாற்றம் செய்து தந்திருப்பவர், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறந்த படைப்பாளர், பல்துறை ஆளுமை கொண்டவர், இலக்கியத்துக்கான இலங்கை அரசின் உயர் விருதான சாஹித்திய விருதுகளைப் பெற்றவர், நாடறிந்த எழுத்தாளர்; எனப் பல சிறப்புகளுக்குமுரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். நிச்சயமாக அவர் முஸ்லிம் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.

நாட்டிலுள்ள பல பெண்கள் அறபுக் கல்லூரிகளில் மார்க்கம் கற்றுத் தேர்ந்த ஆலிமாக்கள் மட்டுமன்றி பொதுக் கல்வியிலும் உயர் நிலையடைந்த பல நூறு பேர் இருந்தும் அவர்களைச் சமூக வெளிகளில் காணக் கிடைப்பதில்லை என்ற சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே. இஸ்லாமியத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களின் பொறுப்பை உணர்த்திக் களத்தில் இறங்கிப் பணி செய்யத் தூண்டுவதும்கூட இவரது இப்படைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இம்மாபெரும் பணியை முன்னெடுக்க அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்! தமக்கு இறைவன் அளித்த ஆற்றல்கள் திறமைகள் என்பவற்றை அமானிதமாகக் கருதி, அவற்றைப் பயன்படுத்தி உறுதியான இறை விசுவாசத்துடன் இஸ்லாமிய சமூகத்துக்கு வழிகாட்;டுவதற்காக இவ்வுரைகளை நிகழ்த்திய அந்தச் சகோதரிகளையும் அவர்களைப் போல் களத்தில் பணியாற்றுகின்ற அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

இவ்வுரைகளை அவற்றின் தரமும் கருத்தாழமும் மாறாமல் அழகு தமிழில் மொழிமாற்றம் செய்து எமக்களித்திருக்கும் மதிப்புக்குரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இப்பணியை அங்கீகரித்து நற்கூலி வழங்குவானாக!

'தூண்டல் இன்றித் துலங்கள் இல்லை' அல்லவா? இவ்வுரை கள் வாசிப்போரை இஸ்லாமிய அறிவைப் பெற்று, அதனைச் செயற் படுத்தி, பிறரையும் வழிப்படுத்தத் தூண்டும் தூண்டுகோலாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். 

இஸ்லாத்தின் உயர் போதனை களை வாழ்வியலாகக் கொள்ளும் போது உள்ளங்கள் அமைதி பெறும். உலகமும் அமைதிப் பூங்காவாக மாறும். நம்மனைவரதும் அவாவும் பிரார்த்தனையும் அதுவேயல்லவா?

அல்லாஹ் நம்மனைவரதும் முயற்சிகiயும் அங்கீகரித்து நேர் வழியில் வாழ வைத்து, அவனது அருளுக்குச் சொந்தக் காரர்களாக ஆக்குவானாக. ஆமீன்!

'இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக. (01 - 05 - 06)




 

Sunday, July 18, 2021

மெல்லிசைப் பாடல்கள் - கால் முறிந்த குதிரை!


நம் நாட்டு மெல்லிசைப் பாடல்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் பக்கம் பக்கமாக எழுதலாம். 

வேகமாக ஓடி வந்து கால்கள் முறிக்கப்பட்டுக் கிடக்கும் குதிரையைப் போன்ற நமது மெல்லிசைப் பாடல்களின் கதையில் எனக்குத் தெரிந்தவற்றை நினைவில் உள்ளவற்றை இங்கு சொல்கிறேன் . 

நம்நாட்டு மெல்லிசைப் பாடல்களின் வரலாற்றை இலங்கை வானொலியில் இருந்து தொடங்குவோம். அது ஆரம்பத்தில் 'ஈழத்துப்பாடல்கள்' என்ற பெயரிலேயே ஒலிபரப்பாகியது. காலையில் செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'ஈழத்துப்பாடல்கள்' சொற்ப நேரம் ஒலிபரப்பாகும். பிறகு 'பொங்கும்பூம்புனல்' வந்துவிடும். அப்போது முக்கியமான பாடகர்களாக வி.முத்தழகு, எஸ்.கே. பரராஜசிங்கம் போன்றவர்கள் பங்களிப்புச் செய்தார்கள். பாடகிகளாக கலாவதி சின்னச்சாமி , சுஜாதாஅத்தநாயக, முல்லைச் கோதரிகள் போன்றோர் பாடினர். வி.முத்தழகும், கலாவதி சின்னச்சாமியும் - ரி. எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் போன்று பிரபலமான ஒருசோடி அப்போது.

'பாடுபடு நண்பா பரிசு தரும் பூமி', 'கங்கையாளேகங்கையாளே 'போன்ற பாடல்கள் அப்போது அடிக்கடி ஒலிக்கும். ஈழத்து ரெத்தினம் என்பவர் பெரும்பாலும் பாடல்களை எழுதியிருப்பார். ஆர். முத்துசாமி, றொக்சாமி போன்றவர்கள் இசையமைத்திருப்பார்கள்.

இப்படிப்  போய்க்கொண்டிருந்த ஈழத்துப்பாடல்கள் சிறிது காலத்திற்குப் பிறகு 'மெல்லிசைப்பாடல்கள்' என்ற நாமத்துடன, கொஞ்சம் புதுமெருகுடன் புதுப்புதுக் குரல்களுடன் புதுப்புதுப்பாடல்களாக, புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு ஒலிக்கத் தொடங்கின.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மெல்லிசைப் பாடல்களுக்காக அதிக சிரத்தையெடுத்த காலம்அது.

நாடு பூராவும் கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். பரந்த அளவில் பாடல்கள் பெறப்பட்டன. புதிய இசையமைப்பாளர்களைத் தேடியெடுத்தார்கள். மெல்லிசைப் பாடல்களுக்கென்று தனி வங்கி நிலையத்தில் இயங்கத் தொடங்கியது. நாட்டின் பலபாகங்களிலுமிருந்து கிடைக்கப் பெறும் பாடல்களில் சிறந்ததைத் தெரிவு செய்து அந்த வங்கியில் வைத்தார்கள். கழிக்கப்பட்டவற்றை திருப்பிஅனுப்பினார்கள். தெரிவுசெய்யப்பட்ட பாடல்கள் பாடி இசையமைக்கப்பட்டுப் பாட்டாகினால் ஒருபாடலுக்கு 15ரூபா சன்மானமும் அனுப்புவார்கள். நானும் 60ரூபா அளவில் சம்பாதித்திருக்கிறேன். அந்தப் பணத்தில் வாங்கிப்போட்ட வளவில்தான் நான் இப்போது குடியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது.

தேசிய சேவையில் 'மெல்லிசைப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சி ஒலிக்கும். அதில் புதிய பாடல்கள் அறிமுகமாகும். பிறகு பருவத்திற்குப் பருவம் ஒலிபரப்பான பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஒருகுழு அவற்றிலிருந்து அடிக்கடி ஒலிபரப்பவென சில பாடல்களைத் தெரிவு செய்யும். மெல்லிசைப் பாடல்களில் தங்களுக்குப் பிடித்தவற்றை நேயர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சியொன்றும் அப்போது இருந்ததாக ஞாபகம். 'பொப்' இசையை விரும்பிக்கேட்கும் நிகழ்ச்சியொன்றும் வர்த்தக ஒலிபரப்பில் இருந்தது. 

நமது பாடல்களின் மழைக்காலம் இதுதான்.

நீலாவணன் எழுதி சத்தியமூர்த்தி பாடும் 'ஓவண்டிக்காரா', எஸ்.கே. பரராஜசிங்கம் பாடும் பஸீல் காரியப்பரின் 'அழகான ஒரு சோடிக் கண்கள்' , செ. குணரெத்தினம் எழுதி கலாவதி சின்னச்சாமி பாடும் 'பாப்பா முகத்தில் பால் நிலவு பட்டுத் தெறிக்குது' ,அக்கரைப் பாக்கியன் எழுதி ரகுநாதன் பாடும் 'நதி கொண்ட காதல் கடல்மீது', மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' போன்ற பலபாடல்கள் ஜனரஞ்சகமாகி ஒலித்துக்கொண்டிருக்கும். பிறகு ரீ.கிருஷ்ணன்,  எம்.ஏ.எம். அன்சார், கே.எஸ். பாலச்சந்திரன், பாக்கியராஜா போன்றவர்களின் பாடல்களும் வந்துசேர்ந்தன.

சோலைக்கிளி எழுதி வயலட் மேரி பாடிய “கொச்சிப் பழமே“ சந்ரு பாடிய “மங்கையைத் தேடுது காற்று“ திலகா பாடிய “இருக்கிற தொல்லைக்குள் இன்னொரு தொல்லையா ஆகிய பாடல்களுக்கு இசை அமைத்தவர் சரஸடீன்.

இவர்களுடன் வனஜா ஸ்ரீனிவாசன், கோகிலாசுபத்திரா சகோதரிகள், யோசப்ராஜேந்திரன், புஷ்பாராசசூரியர், ஜெகதேவிவிக்னேஸ்வரன், 'தன்னந்தனிமூங்கில்' என்ற அருமையான பாடலைப்பாடிய சாரதாவாசுதேவன், 'அழகுநிலாவானத்திலே' என்று அமுதகானம் இசைத்த விவேகானந்தன், 'குயிலே' என்று தொடங்கிப் பாடிய மாணிக்கவேல், சந்திரிக்காடீஅல்விஸ், பார்வதிசிவபாதம், பௌசுல்அமீர், ஸ்ரான்லி சிவானந்தன் என்றெல்லாம் பெரியதொரு கானக் குயில்களின் பட்டாளமே உருவாகியிருந்தது. 

நமது மெல்லிசை கொழுத்துப் போயிருந்தது

என்.சண்முகலிங்கன், கோப்பாய் சிவம், சில்லையூர் செல்வராசன், எருவில்மூர்த்தி, செ. குணரெத்தினம், ஆர்.எஸ்.ஏ.கனகரெத்தினம், கமலினிமுத்துலிங்கம், அக்கரையூர் அப்துல் குத்தூஸ், எச்.ஏ.அஸீஸ், சபா. சபேசன் , ஒலுவில் அமுதன்,  மூதூர் ஜெயராஜ்,  கார்மேகம்நந்தா, அசனார் ஸக்காப்,  கோவிலூர் செல்வராசன்,  நிந்ததாசன் என்று இன்னுமின்னும் எத்தனையோ பேர் பாடல்எழுதினார்கள். 

எம்.எஸ். செல்வராஜா, திருமலை பத்மநாதன்,  கண்ணன் நேசம், மோகன்ராஜ் இன்னுமின்னும் பலர் இசை வழங்கினார்கள். 

இப்படி வளர்ந்த மெல்லிசையே நீ எங்கே? 

இப்போதும் வி.முத்தழகு தனது விடா முயற்சியினால் இந்தத் துறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றார். புன்னகைசெய்வாயா, பாடப் பாட புதுராகம், ஆடும் பாடும் மயிலும் குயிலும் ஆனந்தமாய் வாழுது ஆகிய  இவரது சில பாடல்கள் இன்றைக்கும் எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும் 'பிறை' பிராந்திய வானொலியில் சனி தோறும் ஒலிக்கும் 'சந்தனக்காற்று' சஞ்சிகை நிகழ்ச்சியில் அதை நடத்தும் அறிவிப்பாளர் ஜே. வகாப்தீன் அவர்களால் வி.முத்தழகு நேரடியாக குரல் தர அழைக்கப்பட்டு பல விடயங்கள் பேசப்பட்டு, அவரது சிலபாடல்களும் ஒலிபரப்பாகின. நமது மெல்லிசை நட்சத்திரம் இவர் என்றால் அது மிகையாகாது. நமது மெல்லிசைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் வி.முத்தழகு. மற்றவர் எஸ்.கே.பரராஜசிங்கம். இவர்களது அரும் பணியாலும் நமது மெல்லிசை துளிர் விட்டதென்றால் பிழையில்லை. 

தென்னை மரத்தின் பாளைக்குள்ளே ரெண்டு தேரை இருந்துமுழிக்குதுபார், மல்லிகை, அழகானஒருசோடிக்கண்கள், கங்கையாளே என்பன எஸ். கே. பரராஜசிங்கத்திற்கு நல்ல பெயர் கொடுத்த பாடல்கள். இவர் 'கங்கையாளே' என்றபெயரில் இறுவெட்டு ஒன்றையும் வெளியிட்டதாக ஞாபகம். வி. முத்தழகு தலைநகரில் அப்போது 'ஸப்தஸ்வரங்கள்' என்ற தனி நபர் கச்சேரி செய்திருப்பதாகவும் அறிகிறேன்.

அந்தக்காலமே நீ ஏன் திடீரெனக் காலக் கடலில் பாய்ந்து உன் உயிரை மாய்க்க நினைத்தாய்?

இந்த மெல்லிசைகளிலெல்லாம் காதல்பாடல்கள், தத்துவப்பாடல்கள், அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள், தேசாபிமானப் பாடல்கள், பிள்ளைகளுக்கான பாடல்கள் என்று சினிமாப் பாடல்களைப்போல பலவகையான பாடல்களும் இருக்கின்றன. 

செ. குணரெத்தினத்தின் 'உனக்காக நான் பாடும் ஓராயிரம் பாடல் உன்காதில் கேட்கல்லியோ 'காதல் உணர்வை வெளிப்படுத்தும் அருமையான பாடல்.மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' இதுவும் நல்ல காதல் மெல்லிசையே! 'அழகானஒருசோடிக்கண்கள்'என்பதும் அப்படியே . என். கே. ரகுநாதன் பாடும் 'பூச்சூடும் காலம் வந்தாச்சு' அண்ணன் தங்கைப் பாசம். எம்.ஏ.எம். அன்சாரின்'பூரணை நிலவில் 'இன்னுமொரு பெண் உணர்வுப் பாடல் . 'பெத்த மனம் பித்து என்பார்' தத்துவம். திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடும் 'மாமயில் ஆடக் கண்டேன் கதிர்காமத்தில்' அழகான பக்திப்பாடல். சி. மௌனகுரு எழுதி திலகநாயகம்போல் பாடிய 'சின்னச்சின்னக் குருவிகள் எங்கள் சிறுவர் சிறுமிக் குருவிகள்' பாடல் பிள்ளைகளுக்கானது. 'பச்ச வயல் காட்டிலே கொச்சி மஞ்சள் பூசியொரு' என்ற பாடல் வி .முத்தழகு பாடுவது கிராமியம். 

நமது மெல்லிசைப் பாடலே உனக்கு என்ன நடந்தது? 

லதா கண்ணன் போன்றவர்களும் பாடியிருக்கிறார்கள். கமலினி முத்துலிங்கம் எழுதி, இவர் பாடிய 'ஒரு பூங்காற்று' என்பது ஓர் இனிய கானம். 

அனிச்ச மலர் நோகும் அழகிய பாதம்.... ஆஹா... இப்படி எத்தனை!

எங்கள் மெல்லிசையே உனது வளர்ச்சிக்கு யார் தடை போட்டது? 

வானொலியைத் தவிர்த்து வெளியிலும் நமது பாடல்கள் வளர்ந்த ஒருகாலமும் நம்மிடம்இருக்கிறது. திருமலையில் இருந்து பரமேஸ்-கோணேஸ் என்பவர்களின் 'உனக்குத் தெரியுமா நான் உன்னையழைப்பது', 'போகாதே தூரப்போகாதே' , 'நீ வாழுமிடம் எங்கே' என்ற பாடல்களெல்லாம் வந்து கலக்கின. இவற்றையெல்லாம் மிஞ்சி கல்முனை மண்ணில் மிகப்பெரும் சாதனையொன்றும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

 ஓர் இசை நிகழ்ச்சியை சினிமாப் பாடல்களைக் கொண்டு நடத்தித்தான் வெற்றி பெற முடியுமென்ற ஒரு பொய்மையான கற்பிதத்தை உடைத்து, இல்லை, கொடுப்பதை கொடுப்பது மாதிரிக் கொடுத்தால், ரசிப்பவன் ரசிப்பான் என்று காட்டினான் கல்முனை கதிரவன், மட:டுநகர் ஆதவன் இசைக் குழுவைச் சேர்ந்த திரு. ஞானப்பிரகாசம் என்பவன். 'பள்ளி மாணவி புள்ளி மானைப் போல்' , 'தேர்த் திருவிழா பார்க்க வாறியா', 'மினியடிக்கும் மீனா', 'சோலையிலே ஒரு பொன் 'ஆலம் படைத்தவனே ஆதி றகுமானே', 'மாநகராம் மட்டு மாநகராம்' போன்ற எத்தனையோ சுயமான பாடல்களால் வெற்றிகரமாக கச்சேரி செய்து காட்டினான் அவன் .

 ஒன்றிரண்டு சினிமாப் பாடல்களை நடுவே பாடினால் ரசிகர்கள் வேண்டாம் வேண்டாம்எனக் கூக்குரலிடுவார்கள்.. கற்கள் எறிந்து பேசுவார்கள். 'கந்தசாமி ராமசாமி ஹிப்பிப் பாணிடா ரெண்டு பேரும் சேந்துக்கிட்டா சாம்பிராணிடா' என்பது இவர்களின் பொப் பாடல்.

இந்தக் காலத்தில்தான் நமது 'பொப்' பாடல் இசையும் சிறப்பாக வளர்ந்தது. அந்தக் காலம் 1970கள். நாடு முழுக்க 'பொப்' இசை நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணமிருக்கும் .பத்திரிகைகளில் இவை பற்றிய விளம்பரங்களாகவே இருக்கும். எங்கள் பூமியான கல்முனையிலும் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது 'பொப்' இசை பூப்பூத்த காலம். 

ஏ.ஈ.மனோகரன், நித்தி கனகரெத்தினம், எஸ். ராமச்சந்திரன், அமுதன்அண்ணமலை, ஸ்ரான்லி சிவானந்தன். சண், றொபேர்ட் ராகல், சுரேஸ் ராஜசிங்கம் போன்றவர்களெல்லாம் பெயர் பெற்றிருந்தார்கள். ஏ.ஈ.மனோகரனின் 'இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு', 'வாம்மா கண்ணே டிஸ்கோஆடலாம்' 'வடை வடையாய் விற்று வந்தாள்' வாயாடிக் கிழவி' நித்தி கனகரெத்தினத்தின் 'சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே' ,எஸ். ராமச்சந்திரனின் 'நத்தையென ஊர்ந்து', அமுதன் அண்ணாமலையின் 'ஓ...ஷீலா', 'முருகையா முருகையா முருகனைப் பார்க்கப் போறேனையா 'போன்ற பாடல் களெல்லாம் அப்போது மிக மிகப் பிரபலம். அமுதன் அண்ணாமலை பாடிய' ..ஷீலா' பாடலுக்கு இசையமைத்தவர் மிக அண்மையில் நம்மை விட்டுப்பிரிந்த கே. எம். சவாஹிர்அவர்கள். அவரை இவ்விடத்தில் நினைத்துக் கொள்வது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை .ஏ. ஈ. மனோகரன் நித்தி கனகரெத்தினமெல்லாம் 'பொப்' இசை நட்சத்திரங்களானார்கள். இப்படி;  மெல்லிசையும்  பொப்பிசையும் ததும்பி வழிந்த காலம் புரண்டு கவிழந்து எப்படி?

சிலர் 1983ல் இடம் பெற்ற அசம்பாவிதத்தை சொல்கிறார்கள். அப்படியென்றாலும் ஏனையவைகளில் நாம் மீண்டெழுந்ததைப் போன்று நமது மெல்லிசையிலும் மீண்டெழலாம் அல்லவா? ஏன் இந்தச் சோர்வு? தோல் இழுபடும் தொய்வு? கால் முறிந்த குதிரைக்கு இனியாவது மருந்து கட்டி நடக்கவாவது வைக்க முடியாதா?

(27.03.2021)


நன்றி - வியூகம்  6



Monday, April 27, 2020

என்னைத் தீயில் எறிந்தவள் - ஒரு பன்முகப் பார்வை


பேராசிரியர் - முனைவர் சேமுமு. முகமதலி - சென்னை
பொதுச் செயலாளர் - தமிழ்நாடு தொண்டு இயக்கம்
ஆசிரியர் - இனிய திசைகள்

படிப்பறிவு ஒன்றினால் மட்டுமே கவிஞன் உருவாகி விடுவதில்லை. பட்டறிவு நிறைய வேண்டும். வெறும் பட்டறிவே கவிஞனை உருவாக்கி விடுவதில்லை. மனிதர்களை ஊடுருவி, உற்று நோக்கிப் படிக்கும் கண்களும்  சமுதாயப் பிரச்சனைகளை அலசி ஆய்ந்து தெளிந்து உருகும் சுனையாக உள்ளமும்  சமூக அவலங்களில் ஆழ்ந்து அனுபவித்துப் பொங்கும் அருவியாக உணர்வும் இவற்றையெல்லாம் வார்த்தைகளில் வார்த்தெடுக்கும் வல்லமையும் மிகுந்தவனிடமே கவித்துவம் குடி கொண்டிருக்கிறது.

    நீறு பூத்த நெருப்பாக அவனுள் உறங்கும் கவித்துவத்தை ஏதாகிவும் ஒரு நிகழ்வு நெம்பு கோலால் நெம்பி விட்டால் நீறு அகல,  நெருப்பு ஜூவாலை பரவ ஆரம்பித்து விடுகிறது. மள மளவெனக் கவிதை பரவக் கவிஞன் காலத்தை வென்று விடத் தொடங்குகிறான். இத்தகையதொரு கவிஞராகவே அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

1999ம் ஆண்டு அவரது 'காணாமல் போனவர்கள்' முதற் கவிதைத் தொகுதி வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் 2008ம் ஆண்டில் 'என்னைத் தீயில் எறிந்தவள்' இரண்டாம் கவிதைத் தொகுதி வெளிவந்தது. 'வெகு நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்கும் போது கண்ணீரோடும் அமைதியுடனும் சந்திப்பேன்' என்றான் கவிஞன் பைரன். 'என்னைத் தீயில் எறிந்தவ'ளைப் படிக்கும் போது மட்டுமல்ல, படித்து முடித்துவிட்ட பின்பும் அமைதியும் கண்ணீர் முத்துக்களுமே ஆக்கிரமித்துக் கொள்கிற வெற்றியை அஷ்ரஃப் சிஹாப்தீன் பெற்றுக் கொண்டுள்ளார்.


'காணாமல் போனவர்கள்' முதல் கவிதைத் தொகுப்பைத் தன்னை முந்தியிருக்கச் செய்த தந்தைக்கும் தாய்க்கும் சமர்ப்பித்த கவிஞர் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'என்னைத் தீயில் எறிந்தவளை'த் தன்னில் பாதியாக இருக்கும் தனது மனைவிக்கும்  மீதியாக இருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சமர்ப்பித்துள்ளதன் மூலம் பிறந்த, புகுந்த சொந்த பந்த உறவுகளைப் பாராட்டத் தெரிந்தவன்தான் முழுமையான மனிதனாக முடியும் என்கிற மகா வித்தை தானாகவே கைவரப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. முழுமையான மனிதனாக உருப்பெற முயற்சிக்கிறவனேயல்லாமல் மற்றவனெல்லாம் மாபெரும் கவிஞனாக உருவாகி விடுதல் சாத்தியமில்லாதது. இந்த மந்திரத்தை உணர்ந்திருக்கிற அஷ்ரஃப் பாராட்டுக்குரியவராவார்.

இலக்கு உடையதே இலக்கியம். வாழ்க்கைக் கண்ணாடியான இலக்கியத்தில் பாவிகம் இல்லாமல் காவியம் இல்லை. படைப்பின் நோக்கத்தையும் படைத்துள்ளவை வெளிப்படுத்த விரும்புகிற நோக்கத்தையும் கோடிட்டுக் காட்டாத படைப்பு எதற்காக என்று கூறப்பெறாத விருந்தை அல்லது மருந்தைப் போன்றதாகி விடும். சிலரிடம் கனவுகள் இருக்கும். சிலரிடம் சிக்கல்கள் இருக்கும். சிலரிடம் நகைச்சுவை இருக்கும். அஷ்ரபிடம் சில கவிதைகள் இருக்கின்றன. ஆனால் நம் அனைவரிடமும் சில வருத்தங்கள் இருக்கும் - தீரும்வரை கண்ணீர் விடுவதற்கு! அந்த வருத்தங்களைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' அகிலத்துக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த வருத்தங்கள் எதுவரை என்பதையும் நூலுள் காட்டியதன் மூலம் அழுது புலம்ப அல்லது எழுந்து விடியல் காணவும் அவரது கவிதை கலங்கரை விளக்கமென வெளிச்சம் செலுத்துகிறது.

'என் வருத்தங்கள் வருத்தங்கள் இல்லையென்றும் எனது கவலைகள் கவலைகள் இல்லையென்றும்; சாதிக்க வேண்டுமெனச் சிரித்துக் கொண்டே துப்பாக்கி காட்டுகிறார்கள். எனது அடையாளங்களை அழித்தபடி, எனது பாடல்களை எரித்தபடி, இயல்பாய் இருந்து விட்டுப் போ என்கிறார்கள்! ஆகட்டும் நண்பர்களே, உங்கள் செங்கோல் ஓங்கட்டும் - என் அச்சம் தொலைகிற நாள் வரைக்கும்!' என அச்சம் தவிர்க்க நெருப்பூட்டுகிறார்.  கவிதை என்பது உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தாலும் அறிவின் வழிகாட்டுதலாகவும் அமைய வேண்டுமென்பதைக் கவிஞர் உள்வாங்கியிருப்பது உணர்ந்து குறிப்பிடத்தக்கதாகும். 'பழமாயிருந்தால் பறவைகள் கூடமைத்து இளைப்பாறுவோர் மீது எச்சமிடும். பலகைக்காய் வாள் கொண்டறுப்பர். பெரும் வெள்ளமோ, காற்றோ புரட்டி இழுத்துத் தள்ளிவிடும். நாம் புல்லாகவே இருந்து விட்டுப் போவோம் - மிதிபட மிதிபட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்ற அவரது 'நிமிர்தல்' ஒரு நெம்புகோல் கவிதை என்றே கூறலாம்.

படைத்துக் காட்ட வேண்டிய உணர்ச்சியைத் தானே அனுபவிக்கும் திறனுடைய கவிஞனே சிறந்த படைப்பை அளிக்க முடியும். படைத்தவன் அனுபவித்துத் தந்த அந்த உணர்ச்சியைப் படிப்பவனும் பெற்றானாகில் அதுதான் நிலைபெற்ற படைப்பாகவும் கவிஞன் அடைய நினைக்கும் நோக்கத்தை நோக்கிப் படிக்கிறவனையும் உந்திச் செலுத்துகிற தேர்ந்த படைப்பாகவும் அமைய முடியும். 'குண்டு வெடிப்பில் குதறப்பட்டவர், குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர், கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர், கடத்தப்பட்டுக் காணாமல் போனவர், கிராஸ் ஃபயரில் அகப்பட்டு அகாலமானவர், எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க் கிடந்தவர், பாதி கருகியும் பாதி கருகாமலும் பாதையில் கிடந்தவர் - இவரெல்லாம் யாரோ ஒருவர்தான். யாரோ ஒருவர் தெருவில் சிதிலமாகச் சிதறிக் கிடக்கிறார் என யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள் சுதாகரித்துக் கொள்!' இந்த யாரோ ஒருவர் கவிதை சொல்ல வேண்டி ஒன்றை உணர்;த்தி விட்டுப் போவது கவிஞனின் படைப்புணர்ச்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.

சமூகப் பிரக்ஞை இல்லாமல் கவிதை எழுதுவதும் உயிரற்ற சடலத்தைக் கட்டி மகிழ முனைவதும் ஒன்றாகும். அத்தகைய பிரக்ஞை கண்ணாடிச் சாரளத்துக்குள்ளே இருந்து கொண்டு வீதியில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதாக இருப்பதில் மட்டும் சிறப்பில்லை. வீதிக்கு வந்து நிகழ்வுகளின் உணர்வுகளில் வீழ்ந்து உழன்று நெஞ்சுக்குள் நஞ்சை வைத்து உதட்டுக்குத் தேனைத் தடவி உதிர்க்கின்ற நயவஞ்சக வார்த்தைகளின்றி, உள்ளத்தின் பள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற உணர்வுகளைப் பக்குவமாகப் படம் பிடிக்க உணர்த்துகிற நல்ல புகைப்படமாகக் கவிதை அமைவதில்தான் உண்மையான கவிஞன் ஆத்மார்த்த ரீதியாகப் படிப்பவனின் உள்ளத்தைத் தொட முடியும். உறவையும் நட்பையும் இனப் போராட்டத்தில் இழந்து போனவர் அஷ்ரப் சிஹாப்தீன். தன்னளவில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர், அதிலும் தேர்ந்த ஒரு கவிஞர் வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளுக்குச் சக்தி அதிகமேயாகும். அந்தச் சக்தியைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை ஒரு சான்றாக உணர்த்தி நிற்கிறது.

உள்ள நிலைமையை உணராமல் வெறுமனே வீராவேச வார்த்தைகளைக் கொட்டுவதில் அஷ்ரஃபுக்கு உடன்பாடு இல்லை. உள்ள நிலைமையை யதார்த்தம் தவறாமல் எடுத்துரைக்க முனைகையில் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமே அவரது கவிதைகளில் எதிரொலிப்பதையும் நாம் காண முடிகிறது. 'சந்திக்கு வருவாயா சாயங்காலம்.. மீண்டும் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம்!', 'செய்தித்தாள் பக்கமொன்றின் கீழ் மூலையில் அனாதரவாய்க் கிடக்கும் கவிதையொன்றைப் போல சுவாரசியமற்றுப் போய்க் கிடக்கிறது வாழ்க்கை!' 'வேறு வழியில்லாமல் கைகளைக் குலுக்கிக் கொண்டோம். வெறுங் கைகளை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனால் செய்ய முடிந்ததெல்லாம் அது ஒன்றுதான்... அல்லாஹ்வுக்காக என்னை மன்னிக்க வேண்டும் நீ!, 'இந்த மான்கள்தாம் பாவம்! அவை கூடிக் கூடிக் குசுகுசுப்பதெல்லாம் கானலைப் பற்றித்தான்!' - போன்றவை கையறு பாடல்களாகப் படிப்பவரது நெஞ்சைக் கவ்வுகின்றன.

'என்னைத் தீயில் எறிந்தவளில் பெரும்பான்மையான கவிதைகள், ஒரேயுணர்வைப் பீறிட்டுக் காட்டுவதாய்ப் பொதுவாக உணரலாம். ஒரேயுணர்வு திரும்பத் திரும்ப வௌ;வேறு வடிவங்களில் பாடு உணர்வாய் அமைவதற்குக் காரணம், அஷ்ரஃபின் நெஞ்சில் ஆழப் பதிந்த துயரத்தின் நோக்கமாகும். வாழ்வின் ஜீவ மரணப் போராட்டத்தில் சுரண்டல், சாதி வேற்றுமை, லஞ்சம், மோசடி, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, கலப்படம் முதலிய சமூகக் கொடுமைகளையெல்லாம் விஞ்சுகின்ற இனப் படுகொலையைக் கண்டு அனுபவித்த நிலை அவருக்குரியது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான அவரது உள்ள வெளிப்பாடு பல்வேறு வடிவங்களில்  வெளியாவது இயற்கையே ஆகும்.

ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலானவற்றை வளர்த்துப் பண்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பும் கவிஞனைச் சார்ந்ததாகும். சமுதாயத்தால் கவிஞனும் கவிஞனால் சமுதாயமும் பாதிப்புக்குள்ளாகவே வேண்டும். அப்போதுதான் சமுதாய சீர்திருத்தத்துக்குரிய கவிதைகளைத் தனது நன்கொடையாகக் கவிஞனால் தர முடியும். அத்தகு நன்கொடைகளை அஷ்ரஃப் இந்நூலில் வழங்கியிருக்கிறார்.

'பக்தியூட்டுவோர் பிள்ளை ஐராப்பாவில் படிக்க, உனது பிள்ளை கோவணத்துடன் திரிவது புரியாமல்!' என்று 'நீயும் உனது தேச பக்தியும் அறிவுறுத்துகிறது. 'நாளையை நினைத்து நடுங்கும் நண்பா நெஞ்சில் உரங்கொள்வாய்! இது வேளையில் மட்டும் வீசும் காற்று விளங்கி உளங் கொள்வாய்' என 'வேளையில் வீசுங் காற்று' நம்பிக்கை தருகிறது. 'ஏராள இடமுண்டு எல்லைகளைத் தாண்டுதற்கும் எல்லைகளைத் தாண்டி எழுந்து நடப்பதற்கும் - நீங்கள்தாம் வெளியே வருவதில்லை!' எனக் 'கிணற்றுக்குள் இருப்பவர்களை' வெளியே கொண்டுவரத் துடிக்கிறது அஷ்ரஃபின் கவிதை. 'போர் நின்று மானிடப் பெரு வேட்டையாடும் பிண வெறிக்குத் தீயிடுங்கள் - அவன் இனவெறியைக் குழியிடுங்கள்' என்று கவிஞர் முரசு கொட்டுகிறார். சமுதாயத்தின் மறுமலர்ச்சியை நோக்கி மக்களை நகர்த்துகிற கவிஞரின் திறன் நுணுகி நோக்கிப் பாராட்டுவதற்குரியதாகும்.

மனிதனுக்கு மனிதன் நன்றி பாராட்டாதவன், தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி பாராட்டுபவன் ஆக மாட்டான். நன்றி உணர்வு நனி சிறக்க அமையப் பெற்றவர் அஷ்ரஃப். சமுதாயத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து மாபெரும் வெற்றி கண்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மீது அஷ்ரஃப் சிஹாப்தீன் பெரும் பற்றும் பாசமும் கொண்டவர். அதனால்தான் தான் முனைப்புக் கொண்டு தொகுத்த ;மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' எனும் தொகுப்பு நூலை 'முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்துக்கு' எனக்கூறி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அன்னார் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் பின்னணியில் அஷ்ரஃப் சிஹாப்தீன் படைத்த 'நீ நடந்து போன தெரு' என்ற கவிதை 'என்னைத தீயில் எறிந்தவள்' என்ற நூலில் கை தட்டுகிறது. 'நீ நடந்தாய்.. தீ தீய்ந்து போயிற்று... நீ நடந்தாய்.. நதிகள் பிரவகித்து ஓடின.. இருட்டுத் தெருவுக்குள் உன்னை இழுத்துக் கொண்டு போனவர்களின் குருட்டுக் கண்களுக்கெல்லாம் வெளிச்சத்தின் விசாலத்தையல்லவா விதை;து விட்டு வந்தாய்... கேட்கிறதா.. அந்தச் சத்தம்..? நீ திரும்பிய போது எழுந்த கைதட்டல் இன்னும் ஓயவேயில்லை!' என இன்றைக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஆதர்ஷ புருஷராகத் திகழும்  தலைவரை நன்றிகூர்கிறார்.

மர்ஹூம் அஷ்ரப் கண்ட முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் மரம். அன்னாரின் மறைவுக்குப் பின் பிளவுகளும் பிணக்குகளும் வஞ்சகத்துக்கு ஆளாகிச் சூழ்ந்தன. அதனால்தான் வெம்பிய மனத்துடன் கவிஞர், மரமாக இல்லையென்றாலும் புல்லாகவாவது இருந்து விடுவோம். மிதி பட மிதி பட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்று பாடுகிறார். சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற வங்கரிமாதாவை 'இருண்ட கண்டத்தின் இரண்டாவது நைல் நதி' என்று பாட வந்தபோது கூட, 'அம்மணி, பன்னிரண்டு மில்லியன் மரங்களை நட்டு வளர்த்துள்ளீர்களாமே.. ஆச்சரியமாக இருக்கிறது.. எங்கள் அண்ணன் நட்டு வளர்த்த ஒரேயொரு மரத்தைக் கூடக் கட்டிக் காக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம்' என்ற அஷ்ரஃப் குமுறி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்துக்குச் சூடு ஏற்றத் தவறவில்லை. சிறந்த கவிஞன் என்பவன் தேர்ந்த விமரிசகனாகவும் இருக்க வேண்டும் என்ற அடையாளத்துக்குச் சான்றாக அஷ்ரஃபைக் கூறலாம்.

அன்றாட அவலங்களை எடுத்துக் காட்டிப் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி விடுகிற நல்ல சிந்தனையாளனாகவும் கவிஞர் திகழ்கிறார். 'நான் எங்கே போகிறேன்?' என்று 'விடை தெரியா வினா' வாகக் கேட்பதும் நோய்களிலேயே மிகப்பெரிய 'இழி நோய்' 'உள்ளத் தினவெடுத்த உயரத்தில் நின்றபடி அடுத்தவன் மீது அபிப்பிராயம் சொல்லுவது' எனக் கூறுவதும் 'ஒரு சோடிச் செருப்பு' எனும் கவிதையில் 'குளிர் அறைகளில் பெண்ணியம் பேசும் மானிடரே, (தார்ச் சாலையில் வேகவைக்கும் வெயிலில் பச்சை மதலையைச் சுமந்தபடி செல்லும்) இவளுக்கு உங்களில் யார் வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் ஒரு சோடிச் செருப்புகளை?' என்று கேட்பதும் 'அத்தனைக்கும் ஆமாம் போட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது - உன்னிடமும் சில தேவைகள் இருப்பதால்' என்றும் 'வேறு வழியொன்றும் தோன்றுதில்லை எனக்கு.. பொய்களோடு வாழ்வதைத் தவிர' என்று யதார்த்தம் பேசுவதும் மிகுந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் உருகுவதாகவும் அமைந்துள்ளன.

காதலைப் பாடாதவன் கவிஞனாக இருக்க முடியாது. எந்தவொரு கவிஞனின் எழுதுகோலும் தொடக்கத்தில் அதிகமாகவும் வயதும் அனுபவமும் ஏற ஏற அவ்வப்போது அதற்கேற்பவும் காதல் கொள்ளாதிருப்பதில்லை. எல்லோருக்கும் இருக்கும் வருத்தங்களில் காதல் வருத்தமும் இருப்பதில் வியப்பில்லை. அஷ்ரஃப் 'அந்த நினைவு' என்ற கவிதையால், 'ஊசி முனையொன்று உள்நகத்துள் புகுந்ததுபோல் அவ்வப்போது வரும்.. யாருடையவளாகவோ ஆகி விட்ட உன் நினைவு' என்று கூறும் போது, அது நிறைவேறாதுபோன ஒரு காதல் உணர்வு மட்டுமே என்று சிந்தனைக்குத் தடைபோட இயலவில்லை.சமுதாயம் இழந்து விட்ட எத்தனையோ ஆக்கங்களை நினைவுகூர்கிற உருவகமாகவே அந்த வரிகள் துளைக்கின்றன.

இறையருளால் உலகை உய்விக்க வந்த உத்தமத் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி, 'முஹம்மத் என்று எழுதிவிட்டு முகர்ந்து பார்த்தேன் என் கலிமா விரலில் கூட கஸ்தூரி வாசம்! மொழியின் உச்சம் கவிதை. மானுடத்தின் உச்சம் முஹம்மத்' என்று பலவாறாக எடுத்துரைக்கும்போது, அஷ்ரஃபின் சொல்லாட்சித் திறன் கொடிகட்டிப் பறக்கிறது. சொல்லாட்சித் திறன் என்பது ஒரு நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் மட்டுமல்ல, அவற்றைத் தாண்டி அறிவுக்குங்கூட அவசியமாகும் என்பதற்கு 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' எனும் கவிதையே தக்க சான்றாகும். 'வாழ்க்கையை சரியாக வகுத்துத் தந்தவர் முஹம்மத். வகுக்கப்பட்டதை வகுக்கப்போய்த்தான் வருத்தத்தில் விழுந்திருக்கிறோம்' என்று கூறி, 'நாயகமே, நீங்கள் இறைஞ்சுங்கள்.. எங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்ற இறைஞ்சுங்கள்!' என்ற இறைஞ்சுதலோடு கவிதையை முடித்திருக்கும் ஆளுமை, நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் அறிவுக்கும் தீனியாகிறது.

'காணாமல் போனவர்கள்' என்ற தொகுப்பிலிருந்த 'ஸெய்த்தூன்', 'ஹபீப்' ஆகிய கவிதைகளை 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்திருந்தார் அஷ்ரஃப். 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பிலிருந்து 'என்னைத் தீயில் எறிந்தவள்', 'குரும்பட்டி', 'உன் தேச பக்தியும் நீயும்' ஆகிய மூன்று கவிதைகளை 'என்னைத் தீயில் எறிந்தவள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்துள்ளமையும் கவனிக்கத் தக்கதாகும். கவிஞனுடைய மன ஆழத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்ட நிகழ்ச்சிகளின் முத்திரை மூலாதாரப் பொருளாகக் கவிதையில் அதிகம் பிரதிபலிக்கப்படவே செய்யும். கவிஞனால் உணர்ந்து அனுபவிக்கப்பட்டுச் சிந்திக்கப்பட்ட முக்கியமானவை மட்டுமே உண்மையான மூலாதாரப் பொருளாகக் கவிதையில் திரும்பத் திரும்ப எதிரொலிக்கும் என்பதற்கேற்பவே கவிதைகளை மீளவும் அஷ்ரஃப் பதிவு செய்துள்ளார் என்றே கருதலாம்.

தேசிய சாஹித்திய அரச விருது பெற்ற ஐம்பது கவிதைகளைக் கொண்ட 'என்னைத் தீயில் எறிந்தவள்' அஷ்ரஃப் சிஹாப்தீனின் வயது மற்றும் அனுபவத்துக்கேற்ப தெளிவான சிந்தனையின் போக்கில் பிரசவிக்கப்பட்டதேயாகும். கவிஞருடைய தாயாரின் தந்தையான - பாட்டனார் அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் அவர்களது பாடலைப் பாடிப் பரிசிலோடு அவரிடம் பெற்ற முத்தமே அஷ்ரஃப் கவிஞரானதற்கு அடிப்படை. ஆலிம் புலவரின் உந்துதல் அகிலத்திற்கு அருமையான கவிஞரை நன்கொடையாக அளித்திருக்கிறது. அஷ்ரஃபுக்கு வாய்த்த ஒலிபரப்புத் துறை அனுபவம் அவரின் பின்புலமாக இருக்கும் சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்கள் அவரை மிகத் தேர்ந்த கலைஞனாகச் செதுக்கியிருக்கின்றன என்பதையும் இந்நூலில் உணர முடிகிறது.

ஒரு கவிஞனுடைய சிந்தனை வளமும் கருத்து வளமும் மிகச் சிறந்த முறையில் வெளிப்பட வேண்டுமெனில் மிக நேர்த்தியான அமைப்புத் திறன் அவசியம் வேண்டும். அத்தகைய வினைத் திறன் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குக் கைவந்த கலையாக அழகூட்டுகிறது. அதற்குக் காரணம் ஒரு தேர்;ந்த கலைஞனுக்குத் தேவையான சிந்தனைத் திறம், கலை ஆற்றல், விமர்சிக்கும் திறன் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்திருப்பதுதான். அதனாலேயே 'என்னைத் தீயில் எறிந்தவள்' மிகச் சிறந்த அங்கீகாரத்தை அஷ்ரஃபுக்குக் கலை உலகில் வழங்கியிருக்கிறதெனத் துணியலாம்.

எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆழத்துக்கு ஊடுருவிப் பாய்ந்து உண்மையை உணர்ந்து காணுகிற வித்தை, மொழி வளம், சொல் நடை, அமைப்புத் திறன் முதலியன தெளிந்த சிந்தனை, தேர்ந்த கருத்து இவற்றோடு பொங்கி உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறபோது, பிறக்கின்ற கவிதை காலத்தை வென்று நிலைக்கும் ஆற்றல் உடையதாகவே அமையும் என்பதற்குக் கவிமாமணி அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' நூல் சான்று பகர்கிறது.  இலங்கை இலக்கிய உலகில் மட்டுமன்றி, அனைத்துலகத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்நூல் மூலம் கவிமாமணியாக அங்கீகாரம் பெற்றுள்ளார் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை.

(2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

குறிப்பு- கட்டுரையாசிரியர் பெயர் மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்ட மூலம் குறிப்பிடப்படாமல் இக்கட்டுரையை அச்சிலோ, இணையத்திலோ அல்லது கல்விசார் தேவைகளுக்கோ யாராகிலும்; பயன்படுத்தினால் அந்நபர் அல்லது நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.