Friday, December 2, 2011

ஆபிதீன் கதைகள்


ஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் கணினியின் முன் அமர்ந்திருந்த நான் ஆபிதீனின் சிறுகதையொன்றைப் படித்ததும் சத்தம் வராமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தேன்.

திண்ணை இணையத் தளத்;தில் இடம்பெற்றிருந்த அந்தக் கதையைப் படித்த போது எழுந்த அடக்க முடியாத சிரிப்பை நான் வாய் பொத்தாமல் வழமைபோல மனந் திறந்து வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தால் எனது மனைவியும் பிள்ளைகளும் எனக்கு நட்டுக் கழன்று விட்டதாக நினைத்திருப்பார்கள்.

ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல்லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப்புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.


ஆபிதீன்

ஆபிதீன் என்னளவில் ஒரு மகத்தான படைப்பாளி. ‘இடம்’, ‘உயிர்த்தலம்’ ஆகிய அவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றையேனும் நான் படித்ததில்லை. ஒரு கவிஞனை நமக்குப் பிடித்த கவிஞனாகவும் ஒரு சிறுகதையாளரை நமக்குப் பிடித்த சிறுகதையாளராகவும் வரித்துக் கொள்ளஅக்கவிஞரின் எல்லாக் கவிதைகளையுமோ சிறுகதையாளரின் எல்லாக் கதைகளையுமோ படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கவிதை, ஒரு சிறுகதை போதுமானது. ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ என்ற நான் படித்த ஆபிதீனின் ஒரே ஒரு கதையுடன் அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளராகி விட்டார்.

ஆபிதீனின் கதைகளில் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் நையாண்டியும். ஆனால் அதை வெறும் எள்ளலாக மட்டும் அவர் கதைகளில் பயன்படுத்தவில்லை என்பதுதான் அடிக்கோடிட்டுச் சொல்லப்பட வேண்டியது. வலிந்து புகுத்தப்படும் நகைச்சுவையோ நையாண்டியாகவோ அவை இருப்பதில்லை. தடவித் தடவி வந்து வலிக்க நோண்டிவிட்டு மீண்டும் தடவி விடுவது போன்ற ஒரு நுணுக்கம் அவற்றில் பரவியிருக்கும். கண்டிக்க வேண்டியதை, கேவலங்களை, அசிங்கங்களை, கேலிக்குரியவற்றை, சொல்ல வேண்டும் என்று நினைத்ததை அவர் இந்த நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும்தான் வெளிப்படுத்தி வருவார்.

Saturday, November 12, 2011

அறுவடைக் கனவுகள் - நாவல்


அல் அஸ_மத் எழுதிய
அறுவடைக் கனவுகள்
இலக்கியமானதும் ஆவணமானதுமான நாவல்

2010ம் ஆண்டு தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்த நல்ல நூல்களுள் அல் அஸ_மத் அவர்கள் எழுதிய ‘அறுவடைக் கனவுகள்’ நாவலும் ஒன்று. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் அண்மையில் தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று.


ஒரு கவிஞனாக அறிமுகமாகி கவிதைத் துறையில் பெருவிருட்சமாகிப் பரந்து நிற்பது போலவே சிறுகதைத் துறையிலும் நாவல் எழுத்திலும் அவர் ஓர் அசைக்க முடியாத இடத்தைக் கொண்டிருக்கிறார். அறுவடைக் கனவுகள், அமார்க்க வாசகம், சுடுகந்தை ஆகிய மூன்று நால்களை அவர் எழுதியுள்ளார். அவரது முதல் நாவலான ‘அறுவடைக் கனவுகள்’ 1984ல் தினகரன் பத்திரிகையில் தொடர் நாவலாக வெளிவந்திருக்கிறது. 2010ல்தான் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

2001ம் ஆண்டு அல் அஸ_மத் அவர்களின் வெள்ளை மரம் சிறுகதைத் தொகுதி அரச தேசிய சாஹித்ய விருதைப் பெற்றிருக்கிறது.

“பல சிறுகதைப் போட்டிகளில் அவருடைய படைப்புகள் முதற் பரிசு பெற்றுத் திகழ்ந்தன. குறிப்பாக 1993ல் ‘கலை ஒளி’ முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுப் புதுதில்லி ‘கதா’ அமைப்புக்காக ‘சார்க்’ நாடுகளின் அமைப்பு வரை சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புப் பெற்ற ‘விரக்தி’ என்ற கதையையும் வீரகேசரி தனது பவள விழா ஆண்டு நிறைவுக்காக நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற ‘நிலத் தாய்’ கதையையும் குறிப்பிடலாம்” என்று இந்நாவலுக்கான அணிந்துரையில் நமது முன்னோடிகளில் ஒருவரான தெளிவத்தை ஜோஸப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


மிக அண்மையில் நண்பர் மேமன் கவி முகப்புத்தகத்தில் முதுகு சொறியும் தடி பற்றிய ஒரு கவிதையைப் பதிவிட்டிருந்தார். அதுபற்றி இடம் பெற்ற இரண்டு பின்னூட்டங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. அதில் ஒன்று தேவராசா முகுந்தனுடையது.

“அல் அஸ_மத் ‘முதுகைக் கொஞ்சம் சொறிந்து விடுங்கோ’ என்ற சிறுகதையை எழுதி ‘திசை’ சிறுகதைப் போட்டியில் (1989) இரண்டாம் பரிசு பெற்றதாக இலேசான ஞாபகம்” என்று சொல்கிறார்.

“திசையில் 22.09.89 மற்றும் 29.09.89 ஆகிய திகதிகளில் வெளியான அல் அஸ_மத் அவர்களின் சிறுகதையின் சரியான பெயர் ‘முதுகச் சொறியுங்கோ’ என்பதாகும். இருப்பினும் உங்கள் நினைவாற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை” என்று சின்னராசா விமலன் தகவலைத் தெளிவு படுத்தி மற்றொரு குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பின்னூட்டங்களை இட்ட முகுந்தனும் விமலனும் இக் கதை வெளிவந்த காலத்தில் சற்றேறக் குறைய 20 வயதுக்குட்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அவர்களது நினைவாற்றலை நாம் பாராட்டும் அதே சமயம் இளவயதில் அவர்களால் படிக்கப்பட்ட ஒரு கதை இன்னும் இவர்களின் மனதில் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு அல் அஸ_மத் அவர்களின் எழுத்தின் வலிமையும் ஒரு காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

Saturday, November 5, 2011

கே.எஸ். சிவகுமாரன் - ஓயாமல் நடக்கும் நதி


கே. எஸ். சிவகுமாரன் பற்றிப் பேசுவதை ஓர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. அது எப்படியிருந்திருக்கும் என்றால் எம் ஜி ஆரின் படப் பாட்டு ஒன்றில் வருவது போல் அண்ணாந்து பார்க்கிற மாளிகையாக கே.எஸ். சிவகுமாரனும் அதனருகினில் இருக்கும் ஓலைக் குடிசையாக நானும் இருந்திருப்போம்.

கே. எஸ். சிவகுமாரன் அவர்களது பவள விழா மலராக வெளி வந்திருக்கும் ஜீவநதி சஞ்சிகையின் 37 வது இதழைப் பற்றிப் பேசுமாறு நான் கேட்கப்பட்டேன். முழுக்கவும் கே. எஸ்ஸைப் பற்றிய எல்லாத் தகவல் களோடும் வந்திருக்கும் இந்த சஞ்சிகையைப் பற்றிப் பேசுவதானது இன்னொரு வார்த்தையில் கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிப் பேசுவதாகும்.

இலங்கையின் தமிழ் இலக்கியப்பரப்பில் பல்வேறு பட்ட ஆளுமைகளையும் பிரகிருதிகளையும் நாம் அவ்வப்போது கண்டு வந்துள்ளோம். இப்போதும் கண்டு வருகிறோம். இருபது முப்பது புத்தகங்கள், பல்வேறு துறைகள் என்று இயங்கியோர் முதற்கொண்டு நேற்றுத் தொடங்கிய இலவச இணையத்தளத்தில் பத்து வரி எழுதியவர்கள் வரை எழுத்தாளர்களாயிருக்கின்ற சூழலில் - வாழ்வியல் பிரச்சினைகள் காரணமாக ஒரு கட்டுரையை அல்லது கவிதையை அல்லது கதையை எழுதிவிட்டு ஓடிப்போனவர்கள், இரண்டு வருடங்கள் எழுதி விட்டுக் காணாமல் போனவர்கள், ஐந்து வருடங்கள் எழுதி விட்டுப் போதும் என்று ஓய்ந்து போனவர்கள், கரடி பிறைக் காண்பது போல் இருந்து விட்டு எழுதுபவர்கள் இருந்த, இருக்கின்ற சூழலில் - இரண்டு நிமிடங்கள் கே. எஸ். சிவ குமாரன் பற்றிச் சிந்தித்தால் அவரது ஆளுமை எத்தகையது என்பது புரிய வரும் என்று நினைக்கிறேன்.


இந்தச் சஞ்சிகையில் 23 வயதானவர்கள் முதற்கொண்டு அறுபது வயதைத் தாண்டியவர்கள் வரையான பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் கே. எஸ். சிவகுமாரனைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இதுதான் சிவகுமாரனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எழுத்துத் துறை சார்ந்த எல்லா வயதினரும் தமது ஜன்னலூடாக கே. எஸ் சிவகுமாரனைப் பார்த்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்திருக்கிறார்கள் என்றால் அவரிடம் பல திறமைகள் இருந்திருக்க வேண்டும். அதை இன்னும் சிறப்பான வசனங்களில் நான் சொல்வதாக இருந்தால் எழுத்துத் துறை சார்ந்த எல்லா வயதினரையும் சிவ குமாரன் தம்மைப் பார்க்க வைத்திருக்கிறார்.

Friday, November 4, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 5


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 5

சேவைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்ட பதினைந்து பேரில் இருவர் இலங்கையர், ஒருவர் மலேசியர். இந்தியர்களில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் சீர்காழி இறையன்பனார் ஆகியோரும் அடங்குவர். பன்னூலாசிரியர் மானா மக்கீன், என். எம். அமீன் ஆகியோர் இலங்கைசார்பிலும் டத்தோ இக்பால் மலேசியா சார்பிலும் இவ்விருது வழங்கப் பெற்றார்கள்.



விருது பெறும் என்.எம். அமீன்

அதே போல் பதிறைந்து பேருக்குத் தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டன. மலேசியா சார்பில் புலவர் ப.மு. அன்வர், இலங்கை சார்பில் கவிஞர் ஏ. இக்பால், கவிஞர் அல் அஸ_மத், அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் இவ்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். ஏனைய பதினொருவரில் திருமல் மீரான் பிள்ளை, திருவை அப்துல் ரகுமான், பர்வீன் சுல்தானா ஆகியோர் அடங்குவர்.



விருது பெறும் கவிஞர் அல் அஸூமத்

மலேசிய சார்பில் விருது வழங்கப்பட்ட இருவரும் வருகை தந்திருக்கவில்லை. அவற்றை அவர்கள் சார்பில் இக்பாலிடம் பணிபுரியும் பிதாவுல்லாஹ் பெற்றுக் கொண்டார்.



விருது பெறும் அஷ்ரஃப் சிஹாப்தீன்

கவிஞர் ஏ. இக்பால் வருகை தந்திருக்காத காரணத்தால் அவருக்குரிய விருதை அவர் சார்பில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பெற்றுக் கொண்டார்.

Monday, October 31, 2011

விருது விளையாட்டு!


நேற்று மாஹோவில் நடந்த தேசிய சாஹித்திய விழாவில் எனது “ஒரு குடம் கண்ணீர்“ நூலுக்கு ஒரு சான்றிதழைப் பரிசாக வழங்கியுள்ளனர். சான்றிதழை மட்டும் தேசிய விருதாகப் பெற்ற ஒரே நூல் இதுதானாம். ஏனெனில் நான் அங்கு சென்றிருக்கவில்லை. சில பிரிவுகளில் இவ்விரண்டு விருதுகளும் பணப்பரசும் வழங்கப்பட்டுள்ளன. பரிசுக்குரிய நூல்தான், ஆனால் சான்றிதழ் மட்டுமே எங்களால் வழங்க முடியும் என்பதே இதன் மூலம் உணர்த்தப்படும் செய்தி. எதுவாக இருந்தாலும் தேசிய சாஹித்தியப் பரிசுகளில் முதன் முதலாக சான்றிதழை மட்டும் பெற்று விட்டார் “சர்வதேச சகலருக்கும் சால்வை அமைப்பின் தேசியத் தலைவர்.” யாரங்கே.... எங்கேயடா தேசியத் தலைவருக்கான சால்வை? .............

மேற்படி குறிப்பு தேசிய சாஹித்திய விருது வழங்கப்பட்ட அடுதத தினம் முகப்புத்தகத்தின் எனது பக்கத்தில் 29ம் திகதி இடப்பட்டது. இதுகுறித்த கருத்துப் பரிமாறல் இன்று வரை தொடர்கிறது. முகப்புத்தக நட்பில் இல்லாத எனது வாசக அன்ப, அன்பிகளுக்காக அவற்றை இங்கே பதிவிடுகிறேன். மேலும் கருத்துக்கள் பகிரப்பட்டால் அவற்றை அவ்வப்போது இப்பதிவில் சேர்த்துக் கொள்ளுவேன். ஆகவே அவ்வப்போது எனது தளத்துக்கு வந்து விரு்பியவர்கள் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.!


Sameer Ahamed
வாழ்த்துக்கள்
Saturday at 8:51am

Kalanenjan Shajahan
வாழ்த்துக்கள்.தாழ்த்தப்படுபவர்கள் உயர்த்தப்படுவார்கள்
Saturday at 9:29am

Vj Yogesh
Namma thalakke intha nilaiyaa? Anyway congratulations sir! 
Saturday at 9:34am

Sihabdeen Najimudeen -
Congratulations, saalvai Canada vilirunthu pack panni parsalil varukirathu petruk kollungal.
Saturday at 9:49am

Shibly Poems
all the very best
Saturday at 10:15am

Amalraj Francis
வாழ்த்துக்கள்..

ஹி ஹி ஹி... என்ன கொடும சார் இது?? பெருமையா இருக்கு, ஆகக் குறைஞ்சது ஒரு சான்றிதழாவது கொடுக்கணும் எண்டு தோணிச்சே அவங்களுக்கு..
என்னங்கோ.. தலைவருக்கே.. தட்டுப்பாடா.. சால்வை???? கூட்டுங்கையா சங்கத்த உடனே..
Saturday at 10:23am

Thevarasa Mukunthan
சோகமான விடயத்தை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் சிரிக்க முடியாமல் சோகம் மனத்தை அழுத்துகிறது.
Saturday at 11:30am

Ashroff Shihabdeen
 எழுத்தாளர்களின் நூல்களை ஆய்வு செய்ததான் நாங்கள் பட்டம் பெறுகிறோம் என்று பேரா. சோ.சந்திரசேகரன் அடிக்கடி சொல்வார். துரதிர்ஷ்டவசமாகப் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களே நுஸல்களை அநேகமாகவும் பரிசீலிப்பதாலும் அவர்களும் நூல்களை எழுதிப் பரிசுக்கு அனுப்புவதாலும் எழுத்தாளர்கள் இரண்டாவது படியிலேயே நின்று கொண்டிருக்கும் துரதிர்ஷ்டம் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது முகுந்தன்!
Saturday at 11:45am

Amalraj Francis
உண்மைதான்...
Saturday at 11:55am

Farveen Mohamed
எழுத்தாளர்களின் நூல்களை பேராசிரியர்கள் மதீப்பீடு செய்வதானது காலா காலமாக நடந்து வரும் ஒரு விடயம், இருந்தும் இலக்கிய ஆர்வமற்ற, அல்லது எழுத்துத் துறை சாராத பேராசிரிகள் நூலை மதிப்பிடும் போது அந்த நூலின் கனதி பற்றிய ஆழமான அறிவற்றவர்களாகவே அவர்கள் நோக்குவார்கள், இன்னொன்று தமக்கு பரிச்சயமான, அல்லது அடிக்கடி பத்திரிகைகளில் காண்கின்ற ஒரு பெயர் ஆக்கத்தின் தரத்தினைவிடவும் அவர்களை கவர்ந்து விடுவதும் உண்டு, தமது ஆசானின் முன்னுரையைக்கண்டவுடன் சிலர் நன்றிக்கடனுக்காக அந்த நூலுக்கு பரிசு வழங்குவதும் உண்டு, ஒரு நூலின் தரத்தை பரிசுகள் தீர்மானிக்கும் என்ற கருத்துடன் முற்றிலும் முரண்கருத்துடயவன் நான், ஒரு குடம் கண்ணீர் ஈழத்து இலக்கியப் பரப்புக்கு மிகவும் புதிய வரவு, அராபிய, ஆங்கிலேயே, ரஷ்ய இலக்கிய தாளங்களில் எல்லாம் இது வந்து விட்டது அராபிய கவிதை வடிவமான நாபாத்திய கவிதைகள் நானோடிகளாக ஆங்காங்கே வாழ்ந்த அரபியரின் வாழ்க்கையின் சோகங்களை சொல்லி நிற்கின்றது..அப்படித்தான் அவர்களின் கண்ணீரின் ஒரு துளியை இந்த ஒரு துளிக் கண்ணீர் அடையாளப் படுத்தியுள்ளது.
Saturday at 1:32pm

Sunday, October 23, 2011

ஒரு புறாக் கதை


ராஜசேகரனுக்கு ‘புறா’ என்றும் ஒரு செல்லப் பெயர் உண்டு.

செல்லப் பெயர் என்று நான் சொன்ன போதும் அது பட்டப் பெயர் என்று நீங்கள் சொல்லக் கூடும்.

சுமார் 200 மீற்றர் தூரத்தில் நிற்பவனை அழைக்கும் உச்சச் சத்தத்தில் “டேய் புறா...!” என்றோ “மச்சான் புறா...!” என்றோ கூப்பிட்டால் 50 அடிகளுக்கு அப்பால் நிற்கும் ராஜசேகரன் “என்ன மச்சான்” என்று பதிலுக்குக் கேட்பான். எனவே அது செல்லப் பெயராகவே ஆயிற்று அவனுக்கு என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

ஆயிரத்துச் சொச்சம் பேர் படிக்கின்ற, நூற்றுச் சொச்சம் பேர் வேலை செய்கின்ற கலாசாலையில் ஒரே நாளில் அனைவருக்கும் “புறா”வாகப் பிரபல்யம் பெறும் வாய்ப்புப் பெற்றவன் ராஜசேகரன். ஆனால் அது ஒன்றும் சுவையான கதை அல்ல.

விடுதியில் தங்கியிருந்த நூற்றுச் சொச்சம் பேரில் நான்கு பேருடன் ‘புறா’ பிடிப்பதற்காக உயரமான மோட்டு வளை ஏறிய ராஜசேகரன் பலன்ஸ் தவறிக் கீழே விழுந்தான். கால்களில் அஸ்பெஸ்டஸ் சீற் கிழித்த இரண்டு காயங்களும் மண்டையில் அடிபட்;ட இரத்தக் காயத்துடனும் அவனை அள்ளிக் கொண்டு இரவோடு இரவாக டாக்டரிடம் கொண்டு போகவேண்டி வந்தது. ஆனால் அடுத்த நாளே தலையில் பெரிய கட்டுடன் வகுப்புக்கு வந்து விட்டான்.

கூட்டமாய் நின்றிருந்தவர்களுள் ஒருவன் “டேய் .... புறா...!” என்று அவனைக் கூப்பிட அன்றிலிருந்து அவன் “புறா”வாகப் பதவியுயர்வு பெற்றான். இரண்டு வருடங்கள் பயிற்சி முடியும் வரை விரிவுரையாளர்களையும் கலாசாலை ஊழியர்களில் ஒரு சிலரையும் தவிர ஏனைய அனைவருக்கும் அவன் “புறா”வாகவே இருந்தான்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் அவனை விலாவாரியாகப் பேட்டி கண்டேன்.

Wednesday, October 19, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 4



இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம் - 4

பிற்பகல் நடைபெற்ற பட்டிமன்றத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் கிடைத்தது பெருத்த ஏமாற்றமேயாகும். தலைமை வகித்த பேராசிரியர் தி.மு அப்துல் காதர் அவர்களே தனது தலைமையுரையில் பெருமளவு நேரத்தை எடுத்துக் கொண்டார். அவரது பேச்சு கேட்கக் கேட்க இனிமையாகத்தான் இருந்தது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் திகட்டிப் போகும் அல்லவா? பிற்கல் துவங்கிய தனது தலைமைப் பேச்சை மஃரிப் வரை தொடர்ந்தார். அதற்குப் பிறகாவது பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பேச விடுவார் என்று பார்த்தால் அதற்குப் பிறகும் 20 நிமிடங்கள் அளவில் பேசினார்.


“இன்றை சூழலில் இஸ்லாமியரின் நிலை வாழ்த்தும்படியா? வருந்தும்படியா?” என்பது தலைப்பு. சும்மா பொறி பறக்கும் என்று எதிர் பார்த்தேன். ‘வாழ்த்தும்படியே’ என்று பேச வந்த முதல் பேச்சாளரே ஒரு நெடும் பாட்டை ஆரம்பித்தார். வெறுத்துப் போய் உட்கார்ந்து இருந்தபோது ‘வருத்தும் படியே’ என்ற அணியின் முதல் பேச்சாளர் பேராசிரியர் அப்துல் சமது ஓரளவு பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி நம்பிக்கை வரவழைத்தார். தமது எதிர்பார்ப்பை பட்டி மன்றம் நிறைவு செய்யவில்லை என்ற கருத்தை சில இந்திய நண்பர்களும் இலங்கை அன்பர்களும் நம்முடன் கலந்துரையாடும் போது தெரிவித்தார்கள்.


இந்த அரங்கில் பலந்து கொண்டு பேசிய புதுக்கல்லூரிப் பேராசிரியர் லிவிங்ஸ்டன் தனது பேச்சின் இறுதியில் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாகப் பிரகடனப்படுத்தினார். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் பெரிதும் ஆர்வம் கொண்டவரும் கவியரங்கில் பங்கு கொண்டவருமான இணையான்குடி சண்முகம் என்பவரும் 17.07.2011ல் இஸ்லாத்தைத் தழுவியதாக அறிவித்திருக்கிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் தனது பெயரை ஹிதாயத்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்ட அவர் “ஒரு கரையோர நாணல் கலிமாச் சொல்கிறது” என்ற தலைப்பில் இலக்கிய அன்பர்கள் அனைவருக்கும் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

Friday, October 7, 2011

நீதியும் நெட்டாங்குகளும்!




குறுந்தூரப் பயணங்களுக்கு என்னிடம் ஒரு ஸ்கூட்டர் உண்டு.

முன்னைய காலத்தில் மோட்டார் சைக்கிள் வரிசையில் மேலதிகச் சில்லுடன் வரும் வாகனம் ஸ்கூட்டர் மட்டும்தான். வழியில் பஞ்சராகி விட்டால் ஸ்கூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் மேலதிகச் சில்லைப் பொருத்திக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இப்போது பல்வேறு கம்பனிகள் ஸ்கூட்டர் வகைகளைத் தயாரிக்கின்றன. அவற்றுக்கு ‘ஸ்கூட்டி’ என்று சுருக்கமாகச் செல்லப் பெயரைச் சூட்டி விட்டு மேலதிகச் சில்லை எடுத்து விட்டார்கள்.

மேலதிகச் சில்லு இல்லாத காரணத்தால் வழியில் பஞ்சராகி விட்டால் பயணம் செய்பவர் மூச்சுப் பிடித்துக் கொண்டு வாயில் நுரை தள்ள, ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு டயர் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கும். டயர் கடை எல்லாத் தெருக்களிலும் இருப்பதில்லை. இதனால் தள்ளிச் செல்வதிலேயே அவரும் பஞ்சரான டயரின் நிலைக்கு வந்து விடுவார்.

எனக்கும் இந்த அவல நிலை பல முறை ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்கூட்டி கம்பனியில் ஒரு மேலதிகச் சில்லை நான் வாங்கிக் கொண்டேன். வாங்கிக் கொண்டேனே தவிர அதைப் பொருத்திக் கொள்வதற்கு ஸ்கூட்டியில் இடம் கிடையாது. அந்த மேலதிகச் சில்லு எப்போதும் தயாரான நிலையில் வீட்டில் இருக்கும். எந்த இடத்தில் ஸ்கூட்டி பஞ்சரானாலும் அதே இடத்தில் அதை நிறுத்தி விட்டு ஒன்றில் வீட்டிலிருந்து மேலதிகச் சில்லை அழைப்பித்து அல்லது நானே சென்று எடுத்து வந்து பொருத்திக் கொண்டு டயர் கடைக்குச் செல்வேன். ஸ்கூட்டியைத் தள்ளி மாய்வதை விட இது ஒரு வகையில் ஆறுதலான விடயம்.

எனக்குப் பழக்கப்பட்ட டயர் கடை இருவழிப் போக்குவரத்து நடைபெறும் பெருந்தெருவில் அமைந்திருக்கிறது. அதாவது நான் ஒரு பக்கத்தால் சென்று அடுத்த பக்கத்துக்குத் திரும்ப வேண்டும். பெருந்தெரு என்பதால் கண்ட கண்ட இடத்திலெல்லாம் வாகனத்தைத் திருப்ப முடியாது. பாதைக்கு நடுவில் உயரமான கொங்க்றீட் கற்களாலான தடுப்பு. அதன் மேலால் கம்பித் தடுப்பு. இந்தத் தடுப்பு ரயில்வே பாதை குறுக்கறுக்குமிடத்தில் முடிவடைகிறது. சட்டப்படி அந்த இடத்தில் வாகனத்தைத் திருப்ப முடியாது.

Monday, October 3, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 3


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 3

அதே போன்றுதான் இந்திய முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொஹிதீன் அவர்களது உரையைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடைசி நாளன்று ஏறக்குறைய 40 நிமிடங்கள் அவர் உரை நிகழ்த்தினார். இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்ற ஆவல்தான் என்னில் மேவி நின்றது. அவருடைய பேச்சில் ஆய்வுக்கான தலைப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி அதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எவற்றையெல்லாம் அது உள்ளடக்க வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். அவரது பேச்சின் உச்சக் கட்டமாக வருடா வருடம் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அல்லாமா உவைஸ் அவர்களது ஞாபகார்த்த உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று அழுத்திப் பேசினார்.



பேராசிரியர் காதர் மொஹிதீன்

இவர்களது உரைகளுடன் நமது அரசியல்வாதிகளின் உரைகளை அருகில் கூட வைக்க முடியாது. வெறுமனே பொம்மைகளாக இருந்து விட்டுப் போகும் நிலையிலும் பிரமுகராக வந்து ஊடக வெளிச்சத்தில் நனைந்து விட்டுப் போகவும் நினைக்கும் நமது அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டின் ஒளிப்பதிவு நாடாக்களை எடுத்து இந்திய அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கேட்க வேண்டும். அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் எத்துணை ஆழமான அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான அரங்குகளில் பங்கு கொள்ள நினைக்கும் நமது அரசியல்வாதிகள் ஆகக் குறைந்தது எழுத்து மூலமாகவாவது ஒரு உரையைத் தயார்படுத்திக் கொண்டு சென்று படிப்பார்களானால் அவர்களுக்கும் இலங்கையிலிருந்து கலந்து கொள்ளும் இலக்கியவாதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் கௌரவமாக இருக்கும்.

முதல் நாள் நிகழ்வில் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது கவியரங்கம். தலைமைக் கவிஞர், வரவேற்புக் கவிஞர் உட்பட முப்பத்து ஐந்து கவிஞர்கள் கலந்து கொண்ட அதி பிரம்மாண்டக் கவியரங்கம். அன்றைய தினமே அத்தனை பேரும் கவிதை படித்திருந்தால் அது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கும். இவர்களுள் நமது கவிஞர்கள் நால்வர். மருதூர் ஏ.மஜீத், பாலமுனை பாரூக், மௌலவி காத்தான்குடி பௌஸ், கிண்ணியா ஏ.எம்.எம். அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களில் காத்தான்குடி பௌஸ், பாலமுனை பாரூக் ஆகியோரின் கவிதைகள் நன்றாக இருந்ததாக சில நண்பர்கள் எனக்குச் சொன்னார்கள்.

Friday, September 30, 2011

இலக்கியச் சந்திப்பும் “கல்வெட்டு“ சஞ்சிகையும்


இடமிருந்து வலமாக கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன், யுனுஸ் கே. றஹ்மான், அல் அஸூமத், நான், இவள் பாரதி, நடிகர் வெற்றி


கடந்த 15.07.2011 அன்று சென்னை வியாசர்பாடியில் கவிஞர் ஜலாலுத்தீன் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். காயல்பட்டினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு முடிந்ததும் சென்னையில் தங்கியிருந்த தமக்கு அறிமுகமான இலங்கைப் படைப்பாளிகளையும் சென்னை சார்ந்த சில படைப்பாளிகளையும் ஒருங்கிணைப்பதும் கருத்துப் பரிமாறுவதும் இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது.


வியாசர்பாடியில் உள்ள தமது சகோதரிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார் கவிஞர் ஜலாலுத்தீன். கவிஞர் அல் அஸ_மத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாசிம் அகமது, நான், யூனுஸ் கே. ரஹ்மான், பதுருஸ்ஸமான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டோம்.


சென்னை புத்தகக் கடையொன்றில் தமக்கு நேர்ந்த அனுபவத்தை விளக்கினார் தாசிம் அகமது. இலங்கை முஸ்லிம்களால் தமிழ் பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு அப்புத்தகக் கடைப் பெண் கேட்டதாகச் சொல்லிக் கவலைப்பட்டார் தாசிம் அகமது.


கவிஞர் சொர்ணபாரதி, நடிகர் வெற்றி, இவள் பாரதி மற்றும் நமக்கு ஏற்கனவே அறிமுகமாயிராத சில இலக்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் முதலில் அறிமுகம் இடம் பெற்றது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் தமது இலக்கியச் செய்பாடுகள் பற்றியும் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் பொதுவான கலை, இலக்கியக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இது அமைந்தது.

Tuesday, September 27, 2011

கலங்கரை போலொரு கைக்கடிகாரம்


ஜேக் இரண்டு பெரிய சூட்கேஸ் பெட்டிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்தான். அவற்றைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்த போது அவனருகே வந்த நபர் “நேரம் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

அவன் அலாக்காகக் கையை உயர்த்திக் கைக்டிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு “ஆறு மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன” என்றான்.

அவனிடம் நேரம் கேட்ட நபர், “அட... மிக அழகான கைக்கடிகாரமாக இருக்கிறதே!” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் ஜேக்கின் முகம் மலர்ந்தது.

“ம்... இது எனது கண்டு பிடிப்பு.... தெரியுமா.... இதற்காக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்... பார்க்கிறீர்களா....?” என்றவாறு கையை உயர்த்திக் கைக்கடிகாரத்தைக் காட்டியபடி “உலகத்தின் எல்லா நேரங்களையும் இதில் பார்க்கலாம். வெறும் கண்டங்கள் அல்ல... உலகத்தின் 86 பிராந்தியங்களின் சரியான நேரத்தை இதில் பார்க்க முடியும்” என்றான்.

பிறகு ஒரு பட்டனைத் தட்டினான்.... “த டைம் இஸ் எய்ட்டீன் டுவெல்வ்” என்றது கைக்கடிகாரம். மற்றொரு பட்டனைத் தட்டினான். அது ஜப்பான் பாஷையில் அப்போதய நேரத்தைச் சொன்னது. மிகத் தெளிவான டிஜிட்டல் நேரத்தையும் தெளிவான குரலையும் அக் கைக்கடிகாரம் வெளிப்படுத்திற்று. “எண்பத்தாறு மொழிகளில் இந்தக் கடிகாரம் நேரத்தைச் சொல்லும்” என்றான் ஜேக்.

Thursday, September 22, 2011

இரத்தத்தால் பதியப்பட்ட கதைகள்


ஒரு குடம் கண்ணீர்
அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய உண்மைக் கதைகள்

பஸ்லி ஹமீட்

இந்த வினாடியில் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு அகப்பட்டுக் கொண்டிருக்கலாம், ஒரு சிறுவன் அநியாயமாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கொண்டிருக்கலாம், ஒரு அப்பாவி இளைஞன் எந்தக் காரணமுமின்றி கைது செய்யப்பட்டு கொண்டிருக்கலாம், ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அச்சத்துடன் ஏதோ ஒரு படுகுழிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கலாம், துப்பாக்கி ரவைகளும் வெடிகுண்டுகளும் ஒரு தேசத்தையே அழித்துக் கொண்டிருக்கலாம்.

கொலை, கற்பழிப்பு, சித்திரவதை என்பன இந்த யுகத்தில் சர்வ சாதாரணமாகிப் போய்விட்டதனால் இது போன்ற ஒரு செய்தி எமது செவிகளுக்கு எட்டுகின்ற போது உள்ளம் உருகாமல் இறுகி இருப்பது வேதைனைக்குரிய விடயமாகும். கரும்பாறைகளே கசியும் போது உணர்வுகளினால் பிசையப்பட்ட உள்ளம் ஈரத்தை இழந்து உலர்ந்து போயிருப்பதுதான் ஆச்சரியம். இரக்கம் அல்லது கருணையை மனிதன் தனது இதயத்திலிருந்து அப்புறப்படுத்தி வைத்திருப்பதையே அனேகமான சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சன நெரிசல்மிக்க ஒரு பஸ் வண்டியில் வயதான பெண்ணொருத்தி தள்ளாடியபடி பயணிக்கும் போது அதனைக் கண்டு கொள்ளாது இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் திடகாத்திரமான தேகமுள்ளோரை சமகாலத்தில் சர்வ சாதாரணமாகக் காணலாம். இந்த மிகக் குறைந்த மனிதாபிமானத் தன்மையையே சமூகத்தில் காணமுடியாத நிலைமை இன்று தோன்றியுள்ளது. இப்படிப்பட்டி இரும்பு உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் வாழக்கூடிய இன்றைய யுகத்தில் காலத்தின் தேவையை உணர்ந்தாற்போல் வெளிவந்துள்ளது 'ஒரு குடம் கண்ணீர்' உண்மைக் கதைகள் அடங்கிய நூல்.


எமது நாட்டின் மூத்த கலைஞரும், கவிஞருமாகிய அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் உலகின் பல பகுதிகளிலும் அநியாயமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள் வடித்த கண்ணீர் வெள்ளத்திலிருந்து ஒரு குடத்தை அள்ளி எம் கரங்களில் தந்துள்ளார். குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்ல உலர்ந்து போயிருக்கும் எமது உள்ளங்களை சற்று ஈரப்படுத்திக் கொள்வதற்கு.

Tuesday, September 20, 2011

பட்டாக்கத்தி மனிதர்கள்



ஜூவான் கொரோனா தீர்ப்புக்காகக் காத்திருந்தான்.

முதல் விசாரணையின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்திருந்தான் கொரோனா. ஆறு வருடங்கள் கழிந்த பிறகு விசாரணை ஆரம்பமாகி மற்றுமொரு தீர்ப்பு வழங்கப்படுவதற்கிடையில் ஒன்பது வருடங்கள் சென்றிருந்தன.

அடிக்கடி மனோநிலை பாதிக்கப்பட்ட மனிதன் என்ற அடிப்படையிலும் இது வரை சிறையில் கழித்த காலத்தையும் கருத்திற் கொண்டு தான் விடுதலை செய்யப்படலாம் என்று ஒரு நம்பிக்கை அவனிடம் இருந்தது.

அவன் சுதந்திர உலகில் வாழ்வதா இல்லை சிறையிலேயே செத்து மடிவதா என்பதை நீதிபதி தீர்மானிக்கப் போகின்ற கட்டம் அது.
 
000
 
மெக்ஸிகோவில் பிறந்தவன் கொரோனா. 16 வயதிலே அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்குள் சட்ட விரோதமாக வந்து சேர்ந்தான். பண்ணைகளின் மரக்கறி மற்றும் பழ வகைகளை இடத்துக்கு இடம் கொண்டு சென்று ஒப்படைத்துப் பிழைப்பு நடத்தி வந்தான்.

சில காலத்தின் பின்னர் வடக்கு கலிபோர்னியாவின் யூபா பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள பண்ணைகளில் தொழில் புரிந்தான். எதிர்பாராமல் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் சிக்குண்டு தெய்வாதீனமாக உயிர் தப்பினான். அதற்குப் பின் அவனது மனோநிலை பாதிக்கப்பட்டது.

Sunday, September 18, 2011

அப்சல் குருவும் ஊடகங்களின் ஊத்தை ஆட்டமும்


ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள மூவர் நிரபராதிகள் என்று இன்று உரத்த குரல் எழுப்பப்பட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும் வருகின்றன.

இந்த வேளை ஏற்கனவே தூககுத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கும் அப்ஸல் குரு பற்றியும் அவருக்கு எந்த அடிப்படையில் தூக்குத் தீர்க்கப்பட்டது என்பதையும் பற்றி யாரும் பேசுவதாக இல்லை.

அப்ஸல் குரு பற்றிய தகவல் வினவு இணையத் தளத்தில் வெளியாகியிருக்கிறது. மூன்று சிறு பகுதிகளாக அமைந்த அந்தத் தகவலில் முதலாவது பகுதியை மட்டும் இங்கு தருகிறேன்.

ஆனால் முழுத் தகவலையும் படிப்பதன் மூலம் இவரது பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும். மீதிப் பகுதியைப் படிக்கக் கூடியவாறு வினவு இணையத் தளத்தின் தொடுப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
----------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே,


திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்

வினவு
--------------------------------------------------------------------------------------------------
மீதியையும் படிப்பதன் மூலமே முழுத் தகவலையும் புரிந்து கொள்ள முடியும். அதற்கான தொடுப்பு இதோ
http://www.vinavu.com/2011/09/17/afzal-statement/
--------------------------------------------------------------------------------------------------
நன்றி - வினவு இணையத்தளம்


Friday, September 16, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 2


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 2

காயல்பட்டின மாநாட்டுக்கான இலங்கைச் செயற்பாடுகளை டாக்டர் ஜின்னாஹ்வும் மானா மக்கீனும் முன்னெடுத்தார்கள். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நான் ஒத்துழைத்தேன். மானா மக்கீனுக்கு ஹாஜி பாயிக் மக்கீனும் தோள் கொடுத்தார். கவிஞர் யாழ். அஸீமும் உதவி செய்தார்.

மாநாடு நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குக் கப்பல் பயணமும் ஆரம்பமாகி விட்டது. தூத்துக்குடிக்கும் காயல் பட்டணத்துக்கும் இடையே குறுகிய பயணத்தூரமே இருப்பதாலும் ஒரு தொகையினர் கப்பலில் பயணம் செய்ய விரும்பக் கூடும் என்பதால் கப்பலில் செல்ல விரும்பும் குழுவினரை மானா மக்கீன் பொறுப்பெடுப்பதாகவும் விமான மார்க்கமாக சென்னை சென்று அங்கிருந்து பஸ் மூலம் காயல்படடினம் செல்ல விரும்புவோரை டாக்டர் ஜின்னாஹ் பொறுப்பெடுப்பதாகவும் முடிவெடுத்தார்கள்.


இந்தியா வீசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள்தாம் பலரது பயணத்துக்கு இடையூறாக இருந்தன. ஒன் லைனில் வீசா விண்ணப்பம் பெறுவது, அதில் ஒரு எழுத்தேனும் பிசகாமல் இருப்பது, இறங்கும் இடம் ஆகியன பலரைக் குழப்பத்தில் தள்ளின. அடையும் இடம் சென்னை என்று குறிப்பிட்டால் வீசாவிலும் அதைக் குறிப்பிடுவார்கள். அவ்வாறு வீசா பெற்றவர்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாது. ஆனால் வீசாவுக்கான படிவத்தை நிரப்பும் போது விரிவாகச் சொடுக்கிப் பார்த்தால் All ports என்று ஒன்று இருக்கிறது. அவ்வாறு நிரப்பினால் கப்பலிலும் போகலாம், விமானத்திலும் செல்லலாம். இந்த விடயத்தை சென்று வந்த பிறகுதான் நான் அறிய வந்தேன்.


நான் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். குழுவினர் பயணப் படுவதற்கு இரண்டு தினம் முன்னரே நானும் அல் அஸ_மத்தும் சென்னை சென்று விட்டோம். எனது நூல் வெளியீட்டை சென்னையில் நடத்தவிருந்தமையால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் காயல்பட்டினம் செல்வதற்கான பஸ் ஏற்பாடுகளைச் செய்வதும் எங்கள் நோக்கமாக இருந்தது.

காயல் பட்டினம் செல்வதற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உப செயலாளர் பேராசிரியர் அகமது மரைக்காயர் தனது வேலைப் பளுவுக்கு மத்தியில் சொகுசு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். நான் அவரை இரவு 10.30 அளவில் ஒரு கணினி மையத்தில் சந்தித்த போது மாநாட்டு ஆய்வுக் கட்டுரை நூலுக்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

Wednesday, September 14, 2011

கிறீஸ் மேன் - 3


திடுக்கிட்டு எழுந்த போதுதான் தான் கண்டது கனவு என்பது உறைத்தது அவனுக்கு. ஆனால் அவன் சிந்தை பெருங் குழப்பத்தில் இருந்தது.

ஒன்றும் தோன்றாத நிலையில் எழுந்து அமர்ந்திருந்த நிலையில் கைகளைக் கூப்பி மெதுவாகத் தனக்குள் பாடத் தொடங்கினான்...


பொன்னார் மேனியனே... புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொண்டையணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே...

மனசு லேசானது போல் இருக்க மெல்லச் சாய்ந்து உறங்கிப் போனான்.

கடந்த சில வாரங்களாக கிறீஸ் மேன் பற்றிய செய்திகளை அவன் ஆர்வத்துடன் படித்து வந்தான். இதற்குள் இருக்கும் சூட்சுமம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது பேராவலாக இருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும் கிறீஸ்மேன் பற்றிய செய்திகள் இடம் பிடித்திருந்தன.

எதற்காக இந்தச் செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பது பற்றிய வாய்வழிக் கதைகள் பத்திரிகைச் செய்தி களை விட முக்கியமாக இருந்தது அவனுக்கு. அவற்றை மனதுக்குள் பட்டியல் போட்டபடி அவன் உறங்கிய போதுதான் அந்தக் கனவை அவன் கண்டான்.

அவன் கண்ட கனவாவது -

சித்திரவதை... சித்திரவதை...!


ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

சித்திரவதைகள் என்ற வார்த்தை இக்காலத்தில் யாவருக்கும் பொதுவாக தெரிந்திருக்கும் விடயமாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்துக்கு முதலாளி வர்க்கம் கொடுக்கும் சித்திரவதைகள், நலிவுற்ற நாடுகளுக்கு வல்லரசுகள் கொடுக்கும் சித்திரவகைள், அப்பாவி பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் பாலியல் சித்திரவதைகள் என்று பல்வேறு கோணங்களில் அதன் தாக்கத்தை வரையறுத்துக்கொண்டு போகலாம். சொந்த தகப்பனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படும் அப்பாவி பெண்களின் கதைகைளை தினசரிகளுக்கூடாக தினமும் அறிந்து வருகிறோம்.


இவ்வாறான சில யதார்த்த பூர்வமான விடயங்களை உள்ளடக்கி சர்வதேச ரீதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் சார் நிகழ்வுகளை ஆவணப்படுத்து கின்றதொரு பொக்கிஷமாக வெளிவந்திருக்கிறது அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் ஒரு குடம் கண்ணீர் என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.

தனது தாய்மாமன் செய்யது ஷரிபுத்தீன் மற்றும் அவரது புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன் ஆகிய இருவருக்குமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் யாத்ரா வெளியீடாக 250 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

கற்பனை சேர்க்கையும் அலங்காரங்களும் இல்லாது யதார்த்தத்தை அதன் உள்ளமை குன்றாது முன்வைக்கும் நூலாசிரியரின் எழுத்துப்பாணி ஒரு பரிசோதனை முயற்சிக்கு ஒப்பானதாகும். மனதை நெகிழ வைக்கும் வேதனைகளும், அவலங்களும் இங்கு பதிவாகியுள்ளன. துயரத்தையும், உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் அவை. செய்திகளின் சம்பவங்களின் வெறும் பதிவுகள் என்ற வரட்சியை இந்நூல் வெல்ல முயன்றுள்ளது. ஆவண பதிவுகளுக்கு அப்பால் சம்பவங்களின் சோகங்களையும், நிகழ்ந்துள்ள அநீதிகளையும் மீளாக்கம் செய்து உலகின் கவனத்திற்கு இது கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது என்கிறார் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள்.

தனது நூல் பற்றி உண்மையைத் தவிர வேறில்லை என்ற பதிவினூடாக நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மனிதன் இயல்பாகவே மற்றொருவனை அல்லது மற்றொன்றை அடக்கியாளவும், ஆதிக்கம் செய்யவும் விரும்பியவனாக இருக்கிறான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் முதல் ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் வரை இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் கூட ஒருநாளில் நமக்குக் கீழேயுள்ள யாரையாவது அதட்டிப் பார்க்கிறோம் அல்லது அதற்கு முற்படுகின்றோம். அதற்கு வாய்ப்பற்றவர்கள் கால்நடைகளையாவது அதட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்பு அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப மனித ரத்தத்தில் கலந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

உலக மகா யுத்தம் தொடக்கம் இன்று வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்தும், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களை அழித்தும் பொது ஜனங்களுக்கு செய்யப்படுகின்ற சித்திரவதைளை தினமும் நாம் கேள்விப்படுகிறோம். நம் நாட்டிலல்லாது பிற நாடுகளில் நடக்கும் இவ்வாறான பயங்கர சம்பவங்களை எம்மில் பலர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனினும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மனிதத்துவப் பண்புடன் அயல்நாட்டு பிரச்சனைகளை தமது எழுத்தினூடாக எமக்கெல்லாம் அறியத் தந்திருக்கின்றார்.

Monday, September 12, 2011

ஊடகமாவது தமிழாவது....





இவ்வருடம் வெளிவந்துள்ள சட்டக் கல்லூியின் நீதி முரசு மலருக்கு நான் எழுதிய ஊடகமும் தமிழும் என்ற கட்டுரையை “தானாய் அழியும் தமிழ்“ என்ற தலைப்பில் எனது வலைத் தளத்தில் இட்டிருந்தேன்.

ஒலிபரப்புத் துறை சார்ந்தவர்கள் இக்கட்டுரை குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். பொதுவாகவே பின்னூட்டங்கள் பத்து வரிகளுககு மேற்படுவதில்லை. ஆனால் இங்கு சற்று விரிவாகவே பேசியுள்ளார்கள்.

சகோதரர் ரஸ்மின் மேலும் இது குறித்து எழுதுமாறு தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பாக ஒலிபரப்பாளர்களும் நேயர்களும் அவதானத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது என்னை மகிழ்ச்சிப் படுத்தியது.

அவர்களது கருத்துக்களை ஒரு பதிவாக இங்கு இட்டிருக்கிறேன். இது குறித்து மேலும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

இக்கட்டுரைக்குத் தலைப்புத் தந்து என்னை எழுதத் தூண்டிய நீதி முரசு இதழாசிரியர் மேனகா கந்தசாமிக்கு எனது நன்றிகள்.
--------------------------------------------------------------------------------------

மொழிதான் ஊடகங்களின் உயிர். எனவே ஊடகங்கள் மொழியைச் சரியாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சரியாக அல்லாமலும் கவனக் குறைவாகவும் அவைதான் கையாளுகின்றன. இது உங்களுடைய விமர்சனம்.. அதேபோல் நீங்கள் உங்களின் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் ஒரு சில வாக்கியங்களின் இலக்கணம் சரியா என்பதை எனக்கு விளக்கி வைப்பீர்களா? ....தொலைக் காட்சி அலைவரிசையொன்றில் செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது .......மொழிப் பாவனை ஆகியன கடந்த காலங்களில் பலராலும் விமர்சனத்துக்குள்ளாகிருக்கிறது இவ்வாறு சுட்டிக்காட்டுவது என் அறியாமைக்காக... குறை பிடிப்பதற்காக அல்ல...


By Junaid M Haris - SLBC on தானாய் அழியும் தமிழ் on 9/3/11
...................................................................................................................................................

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்கிடையில் “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்” என்று அறிவிப்பாளர்கள் காலாதிபாலமாகச் சொல்லி வருகிறார்கள். இலக்கணப்படி “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பவை” என்று வர வேண்டும். இதை மறைந்த மூத்த செய்தியறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான ஜோர்ஜ் சந்திரசேகரிடம் ஒரு முறை கேட்டேன். “செய்திகள்“ ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையிலேயே இவ்வாறு சொல்லப்படுகிறது என்று விளக்கம் தந்தார். அந்த அடிப்படையிலேயே “செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது“ என்று நான் இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். நன்றி.


By ASHROFF SHIHABDEEN on தானாய் அழியும் தமிழ் on 9/4/11
...............................................................................................................................................
 

Thursday, September 8, 2011

அடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்



          நெருக்கமுள்ள நண்பர்களான ஸைதும் அகமதும் ஒரே காலப் பிரிவில் திருமணம் செய்து கொண்டவர்கள். சில காலங்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்ட போது ஆர்வத்துடன் சுக நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அகமட், திருமண வாழ்க்கை எப்படிப் போகிறது என்று ஸைதிடம் கேட்டான்.

“எனது மனைவி மிகவும் கீழ்ப்படிவுள்ளவள். அவள் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்” என்று ஸைத் பதில் சொன்னான்.

“அப்படியானால் அவளை நீ அடித்ததே இல்லையா... ஒரு முறையாவது?”

“எதற்காக அவளை நான் அடிக்க வேண்டும். எனது எல்லாத் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றுகிறாள். அவளை நான் மிகவும் நான் விரும்புகிறேன்” என்றான்.

பதிலைக் கேட்ட அகமட் சொன்னான்:-

“நான் என்றால் வாரத்துக்கு ஒரு முறை மனைவியை அடித்து விடுவேன்!”

“ஏன் அப்படி அடிக்க வேண்டும்?” - ஸைத் கேட்டான்.

“வீட்டின் ஆண்பிள்ளை யார் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா... அதற்காகத்தான்!” என்றான்.

அத்துடன் அவர்களது சந்திப்பு முடிந்தது.

அந்தச் சந்திப்புக்குப் பின் இரண்டு வருடங்கள் கழிந்து மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள்.

“ஸைத்... இப்போ மனைவியை அடிக்கிற அளவுக்கு நீ முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்...” என்றான் அகமட்.

Tuesday, September 6, 2011

அடையாத தாள்


எவ்வளவு திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்கிய போதும் சிறு பிள்ளைகள் நிறைந்த அந்த மிஷனரிப் பாடசாலையிலும் சில மோட்டார்க் குண்டுகள் விழுந்து வெடித்தன என்கிறார் கேர்ணல் ஜோன் மன்ஸர். அமெரிக்க ராணுவத்தில் வியட்னாமில் கடமை புரிந்த போது நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூருகையில் இவ்வாறுதான் அவர் ஆரம்பிக்கிறார்.


சம்பவத்தில் போதகர்களும் இரண்டொரு சிறார்களும் உயிரிழந்தனர். காயமடைந்த ஏராளமான பிள்ளைகளுள் ஓர் எட்டு வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் இருந்தாள். அதுவோர் மருத்துவ வசதிகளற்ற சின்னஞ் சிறிய கிராமம். அமெரிக்க ராணுவத்தின் ரேடியோத் தொலைத் தொடர்பின் மூலம் அக்கிராம மக்கள் அண்மித்த நகரத்திடம் மருத்துவ உதவிக்காக மன்றாடினார்கள். அமெரிக்கக் கடற் படை வைத்தியர் ஒருவரும் ஒரு தாதியும் ராணுவ ஜீப் ஒன்றில் ஒரு வைத்தியருக்குத் தேவையான அளவு மருத்துவ வசதிகளுடன் அவ் விடத்தை வந்தடைந்தனர்.

மிக மோசமாகக் காயமடைந்திருந்த அச்சிறுமி மீது அவர்களது கவனம் சென்றது. அவசர மருத்துவக் கவனிப்புக் குள்ளாகவில்லை என்றால் அதிக இரத்த இழப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கும் அவள் இறந்து விடுவாள் என்பது புரிந்தது. அச்சிறுமியின் இரத்த வகை கிடைக்க வேண்டும் என்பது வைத்தியர் எதிர் கொண்ட முதற் சவால். அவர்கள் மிகத் துரிதமாகச் செயற் பட்டார்கள். எந்தவொரு அமெரிக்கரிடமும் அவ்வகை இரத்தம் இருக்கவில்லை. ஆனால் அப்பாடசாலையைச் சேர்ந்த காயமடையாத அனாதைச் சிறார்களிடம் அவ்வகை இரத்தம் இருந்தது.

Saturday, September 3, 2011

தானாய் அழியும் தமிழ்


ஊடகமும் தமிழும்

01

பட்டென்று திரை இருண்டு போன எனது மடிக் கணினியை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார் நண்பர். அவர் ஒரு கணினித் தொழிநுட்பவியலாளர். வீட்டில் தமிழ் மொழி பேசுபவர். தமிழ் மொழி மூலமாகவே கற்றவர். அவரது பிள்ளைகளும் தமிழ் மொழியிலேயே கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வேளை தொலைக் காட்சி அலைவரிசையொன்றில் செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. சோமாலியக் கடற் கொள்ளையர்கள் மற்றொரு கப்பலைக் கைப்பற்றிய விடயம் தலைப்புச் செய்திகளில் ஒன்று. செய்தி படித்த அம்மணி கப்பலையும் ஊழியர்களையும் கடற் கொள்ளையர்கள் “பயணக் கைதிகளாக”ப் பிடித்து வைத்துள்ளதாகச் சொன்ன போது நான் சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

என்னையறியாமலே “இங்கே பாருங்கள்.... பணயக் கைதிகளுக்கு பயணக் கைதிகளாம்!” என்ற வார்த்தை என்னிடமிருந்து வெளியாயிற்று. என்னைப் பொறுத்த வரை அது ஒரு பாரதூரமான பிழை. கணினி அங்கங்களைக் குடைந்து கொண்டிருந்த எனது நண்பரோ வெகு சாதாரணமாக, “நமக்கு விசயம் என்னவென்று விளங்குதுதானே! எப்பிடிச் சொன்னால்தான் என்ன?” என்றார். நான் ஆடிப்போனேன். அது எனக்கு ஒரு நிமிடத்துக்குள் நேர்ந்த இரண்டாவது அதிர்ச்சியாக இருந்தது.

02

மொழி என்பதே ஊடகம்தான். தமிழும் ஒரு மொழிதான். அப்படியாயின் கட்டுரைத் தலைப்பு ஊடகமும் ஊடகமும் என்று அல்லவா பொருளாகிறது என்று யாராவது வினாத் தொடுப்பதைத் தவிர்ப்பது மட்டுமன்றி இக்கட்டுரை எதைக் குறித்துப் பேசப் போகிறது என்பதையும் தமிழ் மொழி இன்று பயன்படுத்தப்படும் முறை பற்றியும் எடுத்துக் காட்டுவதற்காகவே நான் மேற் சொன்ன சம்பவத்தை எடுத்தாண்டேன்.

எல்லா மொழிகளுமே ஊடகம்தான் என்பதில் யாரும் கருத்து வேற்றுமைப் படுவதில்லை. ஆனால் ஒரு மொழியைப் பேசும் மக்கள் குழாத்துக்கு அம்மொழியே அடையாளமாகவும் ஆத்மாவாகவும் இருக்கிறது என்பதைப் பலர் இலகுவாக மறந்து போய்விடுகிறார்கள். ஒரு மொழி - அதைப் பேசும் மக்களின் கலாசாரச் சிறப்புகளால், இலக்கியத்தால் செழுமையும் சிறப்பும் பெறுகிறது. அதற்காக ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று சும்மா ‘பீலா’ விடுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. யாரும் உயிரை விடுவதால் எந்த ஒரு ஒரு மொழியும் சிறப்புப் பெற்று விடுவதில்லை.

தனது மொழி தனது அடையாளம் என்கிற நிலையில் ஒவ்வொரு மனிதனும் தனது மொழியில் வளம் சேர்க்கவும் அதனைப் பேணவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்தான். மொழி சிதைவடைந்து வேறொன்றுக்குள் அடக்கமாகி அடையாளம் சிதைந்து அழிந்து போகுமானால் அந்த மொழியைப் பேசிய மக்கள் குழாமும் அழிந்து விட்டது என்று அர்த்தமாகும். பல நூற்றுக் கணக்கான மொழிகள் அழிந்து போனமையைக் கடந்த காலச் சரித்திரங்கள் நமக்குச் சொல்கின்றன.

Monday, August 29, 2011

நாளாம் நாளாம் பெருநாளாம்!


நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து அன்ப, அன்பிகளுக்கும் - நண்ப, நண்பிகளுக்கும் அவர்களது தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்!


எங்கும் நிறைந்தவனே... எல்லாம் ஆனவனே...

நோன்புப் பெருநாள் தினத்தில் மட்டுமாவது கிறீஸ் மேன் வராதிருக்க அருள் புரிவாயாக!

அப்படி வந்தாலும் அவனால் ஆபத்து ஏற்படாதிருக்கவும் அந்த இடத்துக்கு வரும் பொலீஸாருக்கும் ஆயுதப்படையினருக்கும் யாரும் கல் வீசாதிருக்கவும் அவர்களது வண்டிகளுக்குத் தீ வைக்காதிருக்கவும் அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தாதிருக்கவும் அருள்வாயாக!

எனது முகப்புத்தகப் பக்கத்தில் செப்பமற்ற ஒரு பெருநாள் கவிதையை யாரும் பதிவிடச் செய்யாதிருப்பாயாக.

எழுத்தினால் வரும் வாழ்த்துக்களைக் கொண்டும் பாராட்டுக்களைக் கொண்டும் என் நினைப்பை உயர்த்தி விடாதிருப்பாயாக.

Sunday, August 28, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 1

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 1


தமிழ்நாடு, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பதினைந்தாவது இலக்கியப் பெருவிழா புகழ் மிக்க காயல்பட்டினத்தில் 2011 ஜூலை 8,9,10ம் திகதிகளில் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.


காயல்பட்டின இலக்கிய மாநாடு என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் இலக்கியப் பெருவிழா என்று குறிப்பிட்டதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இது ஒரு பிரச்சினைக்குரியதோ விவாதத்துக்குரிய தோவான விடயம் அல்ல. ஆனால் நடைபெற்றிருக்கின்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள், பெருவிழாக்கள் பற்றிய எனது அறிவுக்கெட்டிய வரையான சிறியதொரு தெளிவைத் தரவேண்டியது அவசியமாகியி ருக்கிறது.

மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மூன்றாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்று அவ் வேளை சில இணையத்தளங்கள் குறிப்பிட்டிருந்தன. புதிதாக ஊடகத் துறைக்குள் நுழையும் சில சகோதரர்கள் இம்மாநாடுகள், விழாக்கள் பற்றிய எந்த விதமான புரிதல்களோ விளக்கங்களோ இன்றித் தன்பாட்டுக்கு எழுதி விட்டுப் போவதை அவதானித்து வருகிறேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாயான இடமாக மருதமுனை கருதப்படுகிறது. இதன் காரணகர்த்தாவாகத் திகழ்பவர் எஸ்ஏ.ஆர்.எம். செய்யிது ஹஸன் மௌலானா அவர்களாவர். 1966ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பிறை 12ல் மருதமுனை அல் மனார் மகாவித்தியால யத்தில் இந்த விழா நடைபெற்றது. சின்ன ஆலிம் அப்பா மற்றும் உமறுப் புலவர் ஆகியோரின் பெயர்களில் நடைபெற்ற அரங்குகளில் 17 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகள் யாவும் தொகுக்கப் பட்டு ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்’ எனும் தலைப்பில் அரசு பதிப்பக (அரசாங்கம் அல்ல) வெளியீடாக அதே ஆண்டில் வெளி வந்தது. இந்த விழாவில் அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களும் ஓர் அரங்குக்குத் தலைமை வகித்துள்ளார்கள்.

கிண்ணியாவின் முன்னாள் முதல்வர் மர்ஹ_ம் அப்துல் மஜீத அவர்களும் கிண்ணியாவில் ஒரு இலக்கிய விழாவை நடத்தியுள்ளார்கள். இதன் காலப் பிரிவு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக எனக்கு அறியக் கிடைக்கவில்லை. இது பற்றிய முழுமையான தகவல்கள் அறிந்தவர்கள் இவ்விழா பற்றி ஒரு கட்டுரை யை எழுதலாம்.

சென்னையில் உருவான இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏழு மாநாடு களைப் பெரிய அளவில் நடத்தியுள்ளது. பெரும்புலவர் சீனி நைனார், நீதிபதி மு.மு.இஸ்மாயில், செய்யிது முகம்மது ‘ஹஸன்’ போன்ற மேதைகளால் வழிநடத்தப்பட்ட இந்த இலக்கியக் கழகம் 2007ம் ஆண்டு தனது ஏழாவது மாநாட்டுடன் அரசியல் மயப்பட்டு இரண்டாகப் பிளவு பட்டது.

Friday, August 26, 2011

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!



இவர் சிரிய தேசத்தைச் சேர்ந்த பாடகர். பெயர் இப்றாஹிம் காஷ_ஷ்.

சிரியாவின் ஹமா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பொது நிகழ்வுகள், திருமண வைபவங்களில் பாடுகின்ற மரபு ரீதியான பாடகர்.

சிரியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியில் இவரும் ஒரு பிரபல நட்சத்திரம். மிக எளிமையான வசனங்களைக் கொண்டு அவரே எழுதிப்பாடும் அவரது பாடலின் ஒவ்வொரு வசனத்தையும் அவர் பாட அந்த வசனங்களை மீளப் பாடுகின்றனர் லட்சக் கணக்காகத் திரண்டிருக்கும் மக்கள்.

அந்தப் பாடல் சிரியாவின் தலைவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.

அடக்கு முறைக்கும் அசுரத்தாக்குதலுக்கும் அரச படையினரது துப்பாக்கிக் குண்டுகளுக்கும் எதிராக வலிமை மிக்க ஆயுதமாக அவர் பயன்படுத்தியது அவரது குரலை மாத்திரமே!

ஹமா நகர மத்தியில் அவர் கடைசியாகப் பாடியது இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று அரச எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்திய போது அவர் பாடினார்.

“பஷர் நீர் வெளியேற வேண்டிய தருணம் இது...

பஷர், மாஹிரி. ரமி... ஆகியோர் கொள்ளையர்கள்...

அவர்கள் எனது உறவினர்களைக் கொள்ளை கொண்டவர்கள்...

பஷர்... உம் குற்றங்கள் மன்னிப்புக்குரியலையல்ல...

பஷர்... நீர் அமெரிக்காவின் கையாள்... நீர் ஒரு பொய்யன்...

பஷர்... நீ ஒரு தேசத் துரோகி...


அவமானப்படுவதை விட இறப்பது மேல்...

சுதந்திரம் வாசலில் வந்து காத்து நிற்கிறது...

மக்கள் உமது ராஜாங்கத்தை வீழ்த்தத் துடிக்கிறார்கள்...

பஷர்... நீர் வெளியேற வேண்டிய தருணம் இது....!”


இப்றாஹிம் காஷ_ஷ் இன்று உயிருடன் இல்லை.

Thursday, August 25, 2011

கிறீஸ் மேன் - 2



அத்துசலாம் என்றழைக்கப்படுகின்ற அப்துல் சலாம் காரியாலயக் கடமை முடிந்து வீட்டுக்கு வந்த போது வழமை போல மாலை 6.45 ஆகி விட்டது.


மரக்கறியும் சில அடுக்களைப் பொருட்களும் வாங்க வேண்டியிருப்பதால் கொஞ்சம் நேரகாலத்தோடு வீட்டுக்கு வரச் சொல்லி கைத்தொலை பேசியில் தொடர்பு கொண்டு அத்துசலாமின் மனைவி மதிய நேரம் சொல்லியிருந்தாள்.

 ‘வருகிறேன்’ என்று பதில் சொல்லியிருந்த போதும் அது சாத்தியப்படாது என்பது அவனுக்குத் தெரியும்.

தேசிய ரீதியாகக் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு ஊழியனாக அவன் கடமை புரிந்து வந்தான். அவனது கடமை நேரம் மாலை 6.00 மணிக்கு முடிவடையும். அடுத்த பாதுகாப்பு ஊழியன் வந்த பிறகே அவனால் வெளியாக முடியும்.

வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமாக மனைவியைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சந்தைக் கடைப் பகுதிக்கு விரைந்தான். வரும் வழியில் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தீர்ந்து போனது. ரிசர்வ் டேங்கைத் திறந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அவன் சந்தைக் கடையருகில் மனைவியை இறக்கி விட்டான்.

பொருட்களை வாங்குவதற்கு மனைவியிடம் பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்குமாறு சொல்லி விட்டுப் விட்டுப் பெற்றோல் நிரப்பிக் கொண்டு வருவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கிப் பறந்தான்.

Tuesday, August 23, 2011

சப்பாத்துப் பாடல்










சப்பாத்துப் பாடல்


காலில் போடும் சப்பாத்து - தனித்

தோலில் ஆன சப்பாத்து


பயணத்துக் குதவும் சப்பாத்து- நம்

பாதம் காக்கும் சப்பாத்து


வகை வகையான சப்பாத்து - பல

வழிகள் அறியும் சப்பாத்து


தேர்ந்தே எடுக்கும் சப்பாத்து - சிலர்

திருடிப் பிழைக்கும் சப்பாத்து


காலைக் கடிக்கும் சப்பாத்து - சிலர்

கழற்றி அடிக்கும் சப்பாத்து


பழுதாய்ப் போகும் சப்பாத்து - சிலர்

கழுவிக் குடிக்கும் சப்பாத்து!
 
(என்னைத் தீயில் எறிந்தவள் கவிதைத் தொகுதியிலிருந்து)

Sunday, August 21, 2011

அமரர் கா.சிவத்தம்பி இரங்கல் கூட்டம்


சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம் நேற்று 20.08.2011 பி.ப. 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டப்த்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வுகள் காட்சிகளாக....

உரைநிகழ்த்தியோரில் ஒரு பகுதியினர்



உரைநிகழ்த்தியோரில் மறு பகுதியினர்



தலைமை வகித்த திருமதி பத்மா சோமகாந்தன் மற்றும் டொமினிக் ஜீவா

Friday, August 19, 2011

கொகோ ட்ரைஃபி ரைஸ் - அதியற்புத உணவு!



சுட்ட கருவாட்டுடன் தேங்காய்ப் பூச்சோறு சாப்பிட்டிருக்கிறீர்களா?

நண்பர் திடீர் எனக் கேட்டார். பலரையும் போலவே கொஞ்சம் சுவையாகச் சாப்பிடும் விருப்பம் உள்ளவர்கள் நாங்கள்.

அவர் சொல்லும் சாப்பாடு என்னவென்று விளக்கமளிக்கத் தொடங்கிய போது - பழைய கதைகளில் வருவது போலச் சொல்ல வேண்டுமானால் - நாக்கில் ஜலம் ஊறியது.

“நாளைக் காலை தயாராக இருங்கள். காலையுணவு எங்கள் வீட்டில்.”

நண்பர் இதைச் சொல்லிவிட்டுப் பிரிந்த போது இரவு எட்டு மணியளவில் இருக்கும்.

தனது மனைவியை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். நாங்கள் உணவு முறையில் பொதுப் பார்வையில் கொஞ்சம் கிறுக்குத் தனமானவர்கள் என்பதை அவரது மனைவியும் தெரிந்துதான் இருந்தார். ஆனால் மற்றொரு நபருக்கு சாதாரண உணவுகளை வழங்க நமது பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை.

வீட்டுக்கு வேறொருவர் சாப்பிட வருகிறார் என்றால் அது ஒரு விருந்து. எனவே அதற்குரிய வகையில் சிறந்த முறையில் உணவு வழங்கவில்லையென்றால் சம்;மதம் கொள்ள மாட்டார்கள். அப்படியேதான் குறித்த உணவைத் தயார் படுத்தினாலும் கூட இன்னும் சில விசேட உணவு வகைகளையும் தயாரித்து வைத்து விடுவார்கள்.

காலை எட்டரைக்கு வந்து வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நான் நினைத்தது போல்தான் நடந்திருந்தது.

குறிப்பிட்ட உணவுக்கு அப்பால் முட்டைப் பொரியல், மீன் கறியென்று வேறு சில ஐட்டங்களும் இருந்தன.

சுடச் சுட இருந்த சோற்றில் தேங்காய்ப் பூவைப் போட்டுப் பிதறி சுட்ட கருவாட்டுடன் வெட்டியெறிய ஆரம்பித்தோம்.

Thursday, August 18, 2011

கண்ணீராகும் தண்ணீர்!


ஒரு நல்ல கவிதையைப் படிக்கும் அனுபவம் பரவசமிக்கது.

பல நூறு கவிதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுள் கவிதையைப் போன்றவை, பரவாயில்லை ரகம், நல்லாயிருக்கு ரகம், அருமையாயிருக்கிறது ரகம், சிறப்பான கவிதையென்று பல வகைகள் உள்ளன.

படித்து முடித்த பிறகும் நம்முடன் கூடவே நடந்து வருவதும் நம்மை விட்டு அகன்று போகாமல் அடம் பிடிப்பதும், நம் சிந்தையிலே சுழன்று கொண்டிருப்பதும் நல்ல கவிதைக்கான பண்புகள்.

இன்றைய தமிழ்ச் சூழலில் புரணமானதும், ரசனை மிக்கதும், நம்மைப் பாடாய்ப்படுத்துவதுமான கவிதைகளைக் காணக்கிடைக்கவில்லை.

கவிதையொன்றைப் படிக்க வேண்டுமே என்ற ஆவல் மேவ ஒரு கவிதைப் புத்தகத்தைத் திறந்தேன். ஒன்று கிடைத்தது. இந்தக் கவிதை எனக்குப் பிடித்து.

கவிஞர் க.து.மு. இக்பால் அவர்களின் கவிதை இது. 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவியரங்கில் என்னுடன் அவரும் கவிதை படித்தார். கவியரங்கு முடிந்ததும் அன்பொழுக என்னை இறுகக் கட்டித் தழுவினார். அவருடன் நின்று ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளக் கிடைக்கவில்லை என்பது எனககுக் கவலை.

கடையநல்லூர் பெற்றெடுத்த மற்றொரு கவிஞர். இதய மலர்கள், அன்னை, முகவரிகள், வைரக் கற்கள், கனவுகள் வேண்டும் - ஆகியன இவரது கவிதை நூல்கள் என்ற குறிப்புக் கிடைத்துள்ளது. ஆசியான் விருது, தமிழவேள் விருது ஆகியன இவருக்குக் கொடுக்கப்பட்டதன் மூலம் அவ்விருதுகள் பெருமையடைந்துள்ளன.

தண்ணீர் என்ற ஒரே ஒரு விடயத்தை வைத்து கவிஞரின் கற்பனை எவ்வளவு அழகாக விரிகிறது என்பது கவனித்தக்கது. அநாவசிய சொற்களோ வார்த்தைப் பிரயோகமோ கவிதையில் கிடையாது. எந்தளவு சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியுமோ அந்தளவுடன் கவிஞர் நிறுத்திக் கொண்டுள்ளார் என்பதை இப்போது கவிதைகளுடன் மாரடித்துக் கொண்டிருக்கும் இளவல்கள் கவனிக்க வேண்டும்.

ஜெர்மனியின் ஹனோவர் நகரில் 1.6.2000 முதல் 31.10.2000 வரை நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சியில் வைப்பதற்காக ஜெர்மனிய அரசின் கீழ் இயங்கும் குதே இன்ஸ்டிடியுட் இந்தக் கவிதையைத் தெரிவு செய்திருக்கிறது.  “மனித குலம் - இயற்கை - தொழில்நுட்பம்” என்ற தொனிப் பொருளில் நடந்த அக்கண்காட்சியில் 200 நாடுகளிலிருந்து நான்கு கோடிப் பேரளவில் கலந்து கொண்டார்களாம்.

Tuesday, August 16, 2011

பாதி உலகில் மோதும் கருணை


அது ஒரு விளையாட்டரங்கம்.

ஒரு விளையாட்டு விழா அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லா முகங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.


சிறுமிகள் எட்டுப் பேர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளத் தயாராக நின்றிருந்தார்கள்.


 
“ஆரம்பம்!”



“ஆயத்தம்!”



“போ!” என்ற கட்டளைக்குரிய சத்த வெடில் கேட்டது.


 
சிறுமிகள் ஓடத் தொடங்கினார்கள்.

 பத்து அல்லது பன்னிரண்டு எட்டுக்களை அவர்கள் தாண்டிய வேளை அவர்களில் சிறியவளான ஒருத்தி தடுக்கிக் கீழே விழுந்தாள். கால் உராய்வில் ஏற்பட்ட வலியில் சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.

ஓடிக் கொண்டிருந்த சிறுமிகளின் காதுகளில் அழுகைச் சத்தம் கேட்டதும் அவர்கள் ஓட்டத்தை நிறுத்தினார்கள். அப்படியே அதே இடத்தில் ஒரு கணம் தரித்து விட்டு விழுந்து கிடக்கும் சிறுமியை நோக்கி ஓடி வந்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்


ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

(இந்தக் கட்டுரை மே மாதம் சகோதரர் முகம்மது அலி அவர்களால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தனிப்பட்ட ஒரு பயணத்தை அவர் மேற் கொண்டிருந்ததாகச் சொன்ன போதும் அங்குள்ள முஸ்லிம்கள் பற்றிய ஒரு தேடலை அவர் மேற் கொண்டது பாராட்டத் தக்கது.  இந்தக் கட்டுரை நமது வாசகர்களில் யாருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் திருத்தங்கள் ஏதுமிருப்பின் உரியவர்கள் ஆதாரங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.)

ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாசாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க பாசக் கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து மே முதல் வாரம் வரை மேற்கொண்ட பயணத்தில் தெரிய வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன.


30 சதவீத முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியாவில் இஸ்லாத்தினை தழுவியவர்கள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தென் கிழக்கு ஆசியாவிருந்தும் குடி பெயர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் ஆங்கில மொழியினையும், மற்றவர் துருக்கி மற்றும் அரேபிய மொழிகளை பேசுகின்றனர். ஆஸ்திரேலிய மொத்த ஜனத் தொகை 2.2 கோடியில் இஸ்லாமியர் இரண்டு சதவீதத்தில் உள்ளனர். அதாவது கிட்டத் தட்ட 2,50,000 மக்கள் ஆவர். அதில் பெரும்பாலோர் சிட்னியிலுள்ள அபர்ன், கீரீனேக், பேங்க்ஸ்டன், லக்கம்பி, பஞ்சபவுள், மெல்போனிலுள்ள மீடோ ஹெட்ஸ், ரிசர்வான், டல்லாஸ், நோபள் பார்க்,கோபர்க், டாஸ்மானியா, அடிலேடு, கியூன்ஸ்லேண்டு ஆகிய பகுதியில் வசிக்கின்றனர்.

பெரும்பாலோனோர்; பல்வேறு வேலைகளில் உள்ளனர். 27 சதவீதம் மேனேஜர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழிழ் நட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். அதில் ஆங்கிலம் தெரியாத முஸ்லிம்கள் தான் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.

இந்திய நாடு, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் தொழிழ் நட்பவாதிகளாக இருப்பதால் மற்ற தேசிய முஸ்லிம்களை விட வேiலை வாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் சுன்னி மதகினைச் சார்ந்தவர்களாகவும் மிக குறைந்த அளவே ஷியா இனத்தவர் உள்ளனர்.

காலூன்றிய வரலாறு: இந்தோனேசியாவினைச் சார்ந்த மெக்காசான்ஸ் என்ற மீனவர்கள் வட ஆஸ்திரேலியா கடற்பகுதிகளில் கிடைக்கும் டிரப்பாங்க் என்ற வகை மீன்களைப் பிடிக்க 1750 ஆம் வருடங்களில் காலடி வைத்தனர். அவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருடன் சுகுமமான உறவு கொண்டனர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் வருகையால் இந்தோனேஷியா மீனவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் தான் முதன் முதலில் குடி பெயர்ந்து அவர்களைத் தொடர்ந்து லெபனான், துருக்கி, போஸ்னியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தனர்.

Monday, August 15, 2011

கிறீஸ் மேன்


இரவு 11.30 ஐத் தாண்டியதும் மூடிவிட்டு உறங்கப் போகலாம் என்று எண்ணிய போது சட்டென்று,


“இன்னும் தூங்கவில்லையா?” என்ற செய்தி அவளிடமிருந்து வந்தது.

எனது வாசகிகளில் ஒருத்தி. முகப் புத்தகம் ஏற்படுத்தித் தந்த நட்பு. தெளிவாகப் பேசுவாள். தொடர்பில் வந்தால் ஆகக் குறைந்தது அரை மணிநேரம் இலக்கியம், அரசியல், பொது விவகாரங்கள் என்று இருவரும் பேசுவோம்.

“இன்னும் இல்லை.”

“வீட்டில் எல்லோரும் தூங்கிட்டாங்களா?” - கேட்டாள்.

“ஆம்!”

“ஸ்கைப் வரட்டுமா?”

“சரி.”

ஸ்கைப்பில் வந்தாலும் கூட நாங்கள் பேசிக் கொள்வதில்லை. காரணங்கள் பல. முதலாவது காரணம் என்னிடம் ஹெட் போன் கிடையாது. இருந்த இரண்டு ஹெட்போன்களையும் பிள்ளைகள் பல்வேறு இயந்திர சாதனங்களில் பயன்படுத்தி உடைத்து விட்டார்கள்.

இரண்டாவது காரணம் பெண் குட்டிகளோடு அரட்டை அடிப்பதை மனைவியும் ஆண்களோடு அரட்டையடிப்பதை வாசகிகளின் தாய், தந்தை, அண்ணன், தம்பிமாரும் கண்டால் கதை கந்தலாகி விடும்.

ஸ்லோமோஷனில் அசையும் முகங்களை ஆளுக்காள் அவ்வப்போது பார்த்துக் கொண்டு எழுத்துக்களின் மூலம் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.

“உங்கள் ஊரில் கிறீஸ்மேனைப் பிடித்து விட்டார்களாமே...?”

“அப்படித்தான் தகவல் கிடைத்துள்ளது.”

“ஊரில் பெரிய ஆர்ப்பாட்டம் நடக்குது என்று அறிந்தேன்.”

“ம்...”

“என்ன ம்! விபரம் அறிய வேண்டாமா...?”

“அறிந்த வரை ஒரு புது முகம் ஒரு பெண்ணைத் தாக்கியதாகவும் பொது மக்கள் அவரை மடக்கிப் பிடித்ததாகவும் பொலிஸார் அவரை அழைத்துச் செல்ல முயன்ற போது ஏதோ பிர்ச்சினை ஏற்பட்டுக் கலவரம் ஆரம்பித்ததாகவும் தெரிகிறது.”

“கலவரம் ஏற்படக் காரணம் என்ன?”

Sunday, August 14, 2011

போருக்கெதிராய் ஒரு புயல்!


பிறருக்காக வாழக் கிடைக்கும் வாழ்க்கை ஒரு பெரும் கொடுப்பினையாகும்.


அந்தப் பிறர் அயல் வீட்டாராகவோ அடுத்த ஊராராகவோ, தனது சொந்த நாட்டு மக்களாகவோ இல்லாமல் இன்னொரு தேசத்து மக்களுக்காக தனது சொந்த நாட்டை அதன் வலுமிக்க அரசை எதிர்த்து ஒரு மனிதன் போராடுகிறான் என்றால் அந்த மனிதன் எத்தகைய உன்னதமான மனிதனாக இருக்கக் கூடும்?

அவ்வாறான ஒரு மாமனிதர்தான் பிரிட்டன் பிரஜையான ப்ரையன் ஹோவ்.

ஈராக்கின் மக்களின் மீதும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீதும் திணிக்கப்பட்ட யுத்தத்துக்கு இணங்கி ஒத்துழைத்த தனது நாட்டு அரசை எதிர்த்து அவர் கலகம் செய்தார். அவரிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆத்ம பலம் இருந்தது.


 
ஒற்றை மனிதனாய் ஓய்வில்லாப் போராட்டத்தை முன்னெடுத்த அவரிடம் இருந்ததெல்லாம் உயிர்கள் மீதான அளப்பெரிய அன்பும் நேர்மையும்தான். இதனால்தான் சூரியன் அஸ்தமிக்காத ஆதிபத்தியம் வைத்திருந்த தனது தேசத்தின் அரசை நோக்கி அவரால் விரல் நீட்ட முடிந்தது.