Wednesday, February 27, 2013

கைகட்டி நிற்கும் கதைமொழி


(“விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதை நூலுக்கு பிரபல சிறுகதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் அவர்கள் வழங்கிய மதிப்புரை)


அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை ஒரு கவிஞனாக (காணாமல் போனவர்கள் - 1999, என்னைத் தீயில் எறிந்தவள் - 2009), ஒரு பத்தி எழுத்தாளராக (தீர்க்கவர்ணம் - 2009), ஒரு மொழிபெயர்ப்பாளராக (உன்னை வாசிக்கும் எழுத்து - 2007, ஒரு குடம் கண்ணீர் - 2010, ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் - 2011) ஒரு பயண இலக்கியக்காரராக (ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை - 2009) நான் ஏலவே அறிந்திருக்கிறேன்.

சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், பத்தி எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு, கவிதை என்று அகலக் கால் வைத்தாலும் மிக ஆழமாகவே வைத்திருக்கின்றார் -  வைக்கின்றார் என்பதை அவருடைய ஒவ்வொரு நூலும் ஊர்ஜிதம் செய்தே வந்துள்ளது.

'ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை' என்னும் பயண அனுபவ நூல் - எழுபது பக்கங்களே கொண்ட அந்தச் சின்ன நூல் இவருடைய பயண அனுபவங்களை எவ்வளவு அற்புதமாகப் பதிவு செய்கின்றது!

அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் பயண நூல்கள் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'குறிப்பிட்ட பயண அனுபவங்களையும் பார்த்த, கேட்ட விடயங்களையும் கொண்டு சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுதும் சிறு பிரிவினருக்கான சிறந்த உதாரணம் அஸீஸ்' என்னும் குறிப்பே என் நிலைவிலோடியது, இந்தச் சின்ன நூலை வாசித்த போது.

நம்மை மறந்து வாசிக்கச் செய்யும் சுகானுபவம் எல்லா எழுத்துக்களிலுமா கிடைக்கிறது!

'விரல்களற்றவனின் பிரார்த்தனை' எனும் இந்தத் தொகுதி மூலம் தன்னை ஒரு பேசப்படவேண்டிய - விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டிய சிறுகதையாளனாகவும் நிரூபித்துக் கொள்கின்றார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

'எல்குறொஸ்' செயற்கைக் கோளிலிருந்து பிரியவிருக்கும் ஒரு ஏவுகணை சந்திரனில் செய்யப்போகும் வித்தைகள் பற்றிப் பேசும் 'அவ்வெண்ணிலவில்' கதையில் நாஸா விண்ணாய்வுக் கூடம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் அஷ்ரஃப்:-

'நாஸா விண்ணாய்வுக் கூடத்தில் கால் இடறினால் ஒரு விஞ்ஞானி மேல்தான் விழ வேண்டும். விழுபவனும்கூட ஒரு விஞ்ஞானியாகத்தான் இருப்பான்...'

நமது இலக்கிய உலகும் அப்படித்தான் இருக்கிறது. தங்களுக்குத் தாங்களே பட்டங்கள் சூட்டிப் பறக்க விட்டுக் கொண்டும் பறந்து கொண்டும்  கால் இடறினால் இன்னொரு பட்டத்தில் விழுந்து கொண்டும்...

கதை, கதையாகத்தான் வந்து குவிகின்றது. இலங்கையில் ஒரு மாதத்துக்குச் சுமார் 150 லிருந்து 200 வரை கதைகள் எழுதப்படுகின்றன. ஒரு வருடத்துக்கு எத்தனை என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தச் சின்ன இலங்கையிலேயே இப்படியென்றால் தமிழ் நாட்டில்...? ஆண்டுக்கு 5000 கதைகள் போல் எழுதப்படலாம். ஒரு பக்கக் கதைகள் உட்பட.

வருடத்தின் சிறந்த கதைகள் என்று ஒரு 12 சிறுகதைகளைத் தெரிவு செய்து நூலாக்கும் இலக்கியச் சிந்தனை அமைப்பு நல்ல கதைகள் கிடைக்காத சிரமத்தால் தங்கள் பணியினைக் கைவிட்டு விடும் உத்தேசத்தில் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

அங்கே இலக்கியச் சிந்தனையும் இங்கே தகவமும் திணறித்தான் போகின்றன, நல்ல சிறுகதைத் தேடலில்.

நம்மில் நிறையப்பேருக்குச் சிறுகதை எழுதுவது என்பது ஒரு லேசான விளையாட்டான விசயமாகப் போய்விட்டது.

'இந்தக் கதை வேண்டாம். வேறொன்று தருகின்றீர்களா?' என்று கேட்பார் பத்திரிகையாசிரியர்.

'நாளைக்குக் கொண்டு வர்ரேன் சார்! எப்பிடியும் அடுத்த வாரம் வந்துடணும்!' என்று கூறிச் செல்பவர்களை நான் நிறையவே அறிந்திருக்கிறேன்.

அவசரமாகக் கற்பனை பண்ணி, அவசர அவசரமாக எழுதி, அவசரமாகப் பேப்பரில் போட்டுக் கொள்வதால்தான் இந்தக் கீழ் நிலை.

ஒரு இரண்டு நாள் குப்பைக்காரர் வராவிட்டால் பார்க்க வேண்டுமே எங்கள் ஒழுங்கையை - அத்தனையத்தனை வீடுகளிலும் வீட்டுக்கு இரண்டு மூன்று என்று கலர் கலராய்ச் சிலு சிலுப் பைகள் தோரணமிட்டுத் தொங்கும் அழகை!

உதாரணம் சரியில்லையோ என்னும் நினைவு வருகின்றது. கூடவே அஷ்ரஃபின் துணையும் கிடைக்கிறது.

முதல் கதை 'நாய்ப்பாசம்'.

அந்த நாயின் நடை... அது நடந்து செல்லும் விதம். 'எனது அந்த நாளைய ஆசிரியர் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் ஒப்பிடுவதாக நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது...' என்றெழுதிச் செல்கிறார்.

கிணற்றில் நீர் ஊறுவது போல் அது மனதில் கிடந்து ஊறவேண்டும் என்கிறார் ஒரு பழைய மேநாட்டுக் கதையாசிரியப் பெண். இந்த அமெரிக்க எழுத்துச் சிற்பியின் (குநசடிநச நுனயெ) கூற்றுப்படி, 'ஒரு சிறுகதை பேப்பரில் அல்லாமல் மனதில் வளர வேண்டும். எழுத்தாளன் மாதக்கணக்கில் அதை மனதில் சுமந்து திரிய வேண்டும்.'

ஒரு சிறுகதையின் பிறப்பைப் பிரசவத்தின் பாடுகளுடன் ஒப்பிடுகின்றனர் அனுபவஸ்தர்கள். சுமந்து திரிதல், வெளிவரத் துடிக்கும் அதன் படபடப்பு, பிறக்கும்போது அது தரும் வேதனை, பிறந்தபின் கிடைக்கும் சுகமான மகிழ்வு... என்று அத்தனையும் அந்த வாசகத்துக்குள் இரண்டையும் இணைக்கின்ற விதம் உயிர்ப்பானது.

சிறுகதை எழுதுவது அப்படி ஒன்றும் லேசான விசயமில்லை எனத் தெரிந்து கொண்டேதான் இந்தத் தீக்குள் விரலை வைக்கும் செயற்பாட்டில் இறங்கியிருக்கிறார் அஷ்ரஃப்.

அவருடைய 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்க'ளும் 'ஒரு குடம் கண்ணீ'ரும் அதை அவருக்கு உணர்த்தியிருக்கும். உபதேசித்திருக்கும்.

Sunday, February 24, 2013

திப்பு சுல்தானின் மனிதாபிமானம்


திப்பு சுல்தானின் மனிதாபிமானம் என்ற கவிதை நாடகம் கடந்த 29.01.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. 

கல்வியமைச்சினால் 2009ல் நடத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் இடம் பெற்ற முஸ்லிம் நாடகப் போட்டிக்காக இந்நாடகம் எழுதப்பட்டது.  கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுத் தேசிய ரீதியில் இந்நாடகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

2011ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டுப் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.  டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களே இதனை நடித்தார்கள்.

பின்னர் ஒலிபரப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வானொலி அறிவிப்பாளர்களால் நடிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. 

இந்நாடகத்துக்கான வரலாற்றுத் தகவல் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய “தீரன் திப்பு சுல்தான்” காவியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.




நாடகம் பகுதி - 1


நாடகம் பகுதி - 2



நாடகம் பகுதி - 3



Monday, February 18, 2013

ஹலால் - ஆகுமானது!


பொது பலசேனாவுக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் தமது உற்பத்திப் பொருட்களைப் பிற தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குச் சான்றிதழ் தேவை. ஹலால் முத்திரை இல்லாமல்
உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் அவற்றின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குச் செல்லும். முஸ்லிம்கள் அல்லாத ஏற்றுமதி நிறுவனங்களும்
அங்கு தொழில் புரியும் எல்லா இனத்தவர்களும் பாதிப்படைவார்கள், தொழில்களை இழக்கும் நிலை உருவாகும். நாட்டின் வருமானமும் பாதிக்கப்படும்.

ஹலால் முத்திரை இல்லை என்றால் உள்ளுர் முஸ்லிம்களும் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளையும் கொள்வனவு செய்யப்போவதில்லை. மிகப் பெறுமதியான ஒரு பொருள் - மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்றாலும் கூட - அதில் தமக்குச் சந்தேகம் தோன்றுமாயின் அதை முற்று முழுதாக முஸ்லிம்கள் நிராகரித்து விட்டு நம்பிக்கைக்குரிய மாற்றுப் பொருளைத் தேடிக் கொள்வார்கள்.

இவ்விரு விடயங்களும் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் - குறிப்பாக முஸ்லிம்களுக்கு உரித்தில்லாத நிறுவனங்களுக்கு நன்கு தெரியும். ஹலால் சான்றிதழை மறுப்பதானது பலரின் வாழ்வில் விழும் பேரிடி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உணராத ஒரேயொரு பிரிவினர் பொது பலசேனா அமைப்பினர் மாத்திரமேயாவர். அவர்களைப் பொறுத்த வரை இது பௌத்த நாடு... இந்த நாட்டில் பிக்குகள் தவிர்ந்த வேறு எந்தச் சிறுபான்மை மக்களதும் ஒன்றியம் -
அது மத ரீதியில் நாட்டின் பொது விடயங்களில் எந்த விதமான அதிகாரங்களையும் செல்வாக்கையும்  கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கருத்து நமக்கு உணர்த்தும் விடயமாகும்.

ஹலால் சான்றிதழ் நீக்கத்தால் பலரும் நஷ்டமடைவார்கள் என்பதையும் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழுக்கான அதிகாரத்தை வைத்திருக்கக் கூடாது என்பதைச் சொல்பவர்களது எண்ணத்தையும் கருத்திற்
கொண்டு வேறு ஓர் ஏற்பாட்டைச் செய்ய யோசிக்கலாம்.

இதை அரசு சட்டபூர்வமான ஒரு விடயமாக மாற்றிக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் செயல்பாடாக மாற்றியமைக்கலாம். வர்த்தக அமைச்சின் மேற்பார்வையின் கீழ்
முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் அதிகாரிகளால் இச்சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு மேற்கொள்ளும் போது ஜம்இய்யத்துல் உலமா சபை நிர்வகிக்கும் ஹலால் பிரிவு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும். சான்றிதழ் பிரிவில் கடமை புரியும் அனைத்து ஊழியர்களும் அரச ஊழியர்களாக மாறுவர்.

ஹலால் சான்றிதழ் பெறும் நிறுவனங்களில் மேற்பார்வைக்காக கல்வித் தகைமையு்ள்ள ஆலிம்களையும் நியமிக்க முடியும்.

அவ்வாறு அரசு ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாயின் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறது என்ற பிரசாரம் மறைந்து விடும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் ஹலால் சான்றிதழுக்காக அறவிடும் பணத் தொகையை அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளவும் அரசுக்கு வசதியாக இருக்கும்.

இக்கருத்து பற்றிய உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

Saturday, February 2, 2013

சினிமாவும் முஸ்லிம்களும்...!



முஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா என்ற தலைப்பில் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி உரையாடல்கள் என முடுக்கிவிடப்பட்டிருந்த எதிர்ப்பியக்கம் தீவிரத் தன்மை பெற்றுள்ளது.

'துப்பாக்கி' திரைப்படம் வெளியான உடன் இதுபோன்ற சர்ச்சைகளும், எதிர்க்குரல்களும் ஓங்கி ஒலித்ததன் விளைவாக, அப்படக்குழுவினர் முஸ்லிம் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமரசப்பேச்சுக்கு முன்வந்ததோடு, மன்னிப்பும் கேட்டனர். ‘இனி இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் படம் எடுக்க மாட்டோம்’ என உறுதியும் அளித்தனர். அந்த வெற்றிதந்த உற்சாகமே, தற்போது விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பைத் திருப்பியுள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அண்மையில் நடிகர் கமல்ஹாசனை இருமுறை சந்தித்துள்ளனர். விஸ்வரூபம் வெளியிடப்படும் முன் தங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, படம் வெளியாவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக திரையிட்டுக் காட்டுகிறேன் என உறுதியளித்தார் கமல். அதன்படி கடந்த 21-01-2013 அன்று மாலை படத்தைப்போட்டுக் காட்டினார். படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு அதன் காட்சி அமைப்பு இருந்தது. உடனே களமிறங்கிய கூட்டமைப்பினர் விஸ்வரூபத்தைத் தடைசெய்ய வேண்டும் என முழங்கினர். சட்டம் ஒழுங்கிற்கும், சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் விஸ்வரூபம் இருப்பதால் தமிழகத்தில் அப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஒட்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

திரைப்படங்களில் முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கும் போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து செய்யப்படும் இவ்வாறான எதிர்வினைகள் வரவேற்கத்தக்கதே என்றாலும், பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்வைக் காண்பதற்கு யாருமே முயலவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிப்பது என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நோய் ஆகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகளால் செய்யப்படும் பரப்புரைகள். இன்னொன்று, முஸ்லிம்கள் குறித்த சரியான புரிதலின்மை. ஊடகங்கள் எதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனவோ, அதையே உண்மையென நம்பும் பொதுப்புத்தியும் இத்தகைய நிலைக்கு மற்றுமோர் காரணமாகும்.

ஒருமுறை விஜயகாந்தைச் சந்தித்து விரிவான உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ’உங்கள் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், ‘பேப்பர்ல அப்படித்தானே வருது’ என்று பதில் கூறினார். எங்களுக்கு விஜயகாந்தின் மீது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது.

இதுதான் மணிரத்னம், கமல் போன்றவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான வேறுபாடு.

மணிரத்னம், கமல் போன்றவர்கள் அமெரிக்காவைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைத் திட்டமிட்டு செய்பவர்கள். விஜயகாந்த் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி அதன் அடிப்படையில் செயல்படுபவர். இதில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசுவதன் மூலமும், முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை அவருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் நிலைமையை சரிசெய்து விடமுடியும். ஆனால், மணிரத்னத்தையும், கமலையும் அவ்வாறு செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அஞ்சி நேரடியான காட்சிகளை வைப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கினாலும், ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் வெறுப்பை அவர்கள் ஊடகத்தின் வழியே விதைத்துக் கொண்டேதான் இருப்பர். அவர்கள் போன்ற சிந்தனை உடையவர்கள் பல நூறுபேர் சினிமாவில் உள்ளனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் கொடி தூக்கிக் கொண்டே இருக்கவும் முடியாது.

அப்படியெனில் என்னதான் செய்வது? இதற்கு என்னதான் தீர்வு?