Saturday, October 17, 2015

காய்தலும் நனைதலுமாய்க் கழியும் வாழ்க்கை!

- 29 -

'என்னிடம் ஓரழகான குடையிருந்தது - அதை நீ அபகரித்தாய் - நான் குடைக்கீழிருந்து வெளியேகினேன். வெயிலெனக்கு அவஸ்தையாயிற்று - சூரியன் உச்சந் தலையிற் குறியிட்டான் - அக தீ எனலாய்! ஆகாயம் இடித்து முழங்கி இறங்கிற்று - நானதில் நனையவேண்டியாயிற்று - காயம்பட்டு! நனைதலும் காய்தலும் - இன்று என் இருப்பென்றாயிற்று!'

துயரொழுகும் இக்கவிதை பிறப்பதற்குக் காரணமான நிகழ்வு நடந்து இன்று கால் நூற்றாண்டு கடந்து விட்டது. வடபுலத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான முல்லை முஸ்ரிபா என்ற கவிஞனின் பேனாவின் - ஆத்மாவின் கண்ணீர் இது!

1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினர் மூன்று கட்டங்களாக வடபுலத்திலிருந்து முஸ்லிம்களைத் துரத்தியடித்தனர். யாழ்ப்பாண முஸ்லிம்களை 3 மணி நேரத்தில் முதலிலும் முல்லைத் தீவு மாவட்ட மற்றும் மன்னார் - வவுனியா மாவட்ட முஸ்லிம்களை 3 தினங்களிலும் வெளியேற்றினர். மறுத்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதால் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்கள் அடம்பெயர்ந்து வந்தார்கள். 'எமது பெண்களின் பின் புறங்களில் பிரம்புகளினால் தட்டிப் பரிசோதித்தார்கள்' என்று ஒரு கவிதையில் றஷ்மி எழுதியிருந்ததைப் படித்தது ஞாகபமிருக்கிறது.

'தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது!' - வே. பிரபாகரன்

வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில்  கட்டப்பட்டிருந்த பெனரிலே காணப்பட்ட வாசகம்தான் இது. அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கல்லி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.

90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். அவரும் துரத்தப்பட்ட மக்களின் ஒரு பிரதிநிதிதான்!

ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 25 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.

25 வருடங்கள் கழிந்த நிலையிலும் 30 வீதமான முஸ்லிம்களே மீள்குடியேறியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மீதியாயுள்ளோரது வாழ்க்கை, காய்தலும் நனைவதுமாகவே கழிந்து கொண்டிருக்கிறது.

'தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவர்கள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,' என்கிறார் டி.எஸ்.பி.ஜெயராஜ்.

கவிஞர் யாழ் அஸீம் 'மண்ணில் வேரோடிய மனசோடு' என்று ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ளார். தனது மண்ணின் மீதான பிரிவும் பரிவும் ஏக்கமும் கொண்ட கவிதைகளைக் கொண்டது அத் தொகுதி. அதில் உள்ள ஒரு கவிதையின் பகுதி இது. துரத்தியோரைப் பார்த்து அவர் கேட்கிறார்:-

'வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு
முற்றுப் புள்ளி நீ வைப்பதா?
நீயே அவனிட்ட காற்புள்ளி.
எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?
உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது?'

இக்கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது.

துரத்தப்பட்ட முஸ்லிம்களின் அகதிக் கோலம் அகற்றும் முற்றுப் புள்ளி என்று விழும் என்றுதான் காத்திருக்கிறோம்!

நன்றி - மீள்பார்வை

Friday, October 9, 2015

பயம்!


ஆதம் ஆதில் (ஈராக்)

சிந்தித்துப் பார்க்கிறேன்..
எனது ஆத்மாவைக் கொண்டு 
சிந்தித்துப் பார்க்கிறேன்
வாழ்வைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன்
அலைக்கழிக்கும் ஒரு பாதையில்
எனது ஆத்மா பயணிப்பதைக் கண்டு கொண்டேன்

எண்ணங்களும் சொற்களும்
என்னிடமுள்ளன.
வெளிப்படையாகச் சொல்வதானால்
அவை
ஒரு சிறிய பாதத்தின் கீழ் வைத்து
நசுக்கி விடக் கூடியவை 
ஆனால் அவை அச்சுறுத்துபவை அல்ல

அச்சுறுத்தப்பட்டவனாகவே இருக்க
என்னை அனுமதியுங்கள்
குழந்தைகள் வளர்ந்த பிறகு
மனிதர்களின் நல்லவற்றைப் பார்த்துக் கொள்ளட்டும்.

தொழுகையும் நோன்பும் மாத்திரமே
மார்க்கம் அல்ல என்பதை
அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்
மார்க்கம் என்பது எல்லோர் முகங்களிலும்
உள்ள புன்னகையாகும்
மார்க்கம் என்பது ஒரு விம்மற் பெருமூச்சும்
ஓர் உணர்ச்சிப் பாடலுமாகும்

இல்லை..
நாம் அச்சுறுத்தப்படவில்லை
கருணையுள்ள இறைவனானவன்
எல்லா  இடங்களிலும் இருக்கிறான்
ஆனால் சில வேளைகளில்
பலர்
அதைக் காணமுடியாதோராக இருக்கிறார்கள்

உலகத்தை நோக்கிச் செல்லும் போது
அது விலங்குகளால் ஆனது என்பதைக் காண்கிறேன்
அதன் சுகவியல் நிலைமையோ -
தாண்டிச் செல்லும் 
ஜன்னலுக்குப் பின்னால் தெரியும் 
மரித்த கரம் ஒன்றைப்போலவும்
பின்னாலிருந்து வரும் ஒரு பெண்ணின்
அவலக் குரல்போலவும்
அழுகையின் அமைதி போலவும்
தரை விரிப்பில் விழுந்து கிடக்கிறது

எனது தாயாரின் முகத்தை முதலில் பார்த்த வேளை
வாழ்வின் கருணை நிறம் எதுவென்று கண்டேன்
வாழ்ந்து கொண்டோ அல்லது மரித்த பின்போ
மனிதம் ஓய்வாக இருக்க முடியாது
என்று புரிந்து கொண்டேன்

தொட்டிலில் நான் கிடந்த காலமெல்லாம்
எனது தாய் சொன்ன வார்த்தை
'அமைதி!' என்பதுதான்!
மனிதர்கள் வெளிப்படையாகப் பேச விரும்பாத
வாழ்க்கையையும் உலகத்தையும்
நான் படித்தேன்
பயந்திருப்பதையே மனிதர்கள் விரும்புகிறார்கள்
மனிதர்கள் 
உயரமாக வளர்வதற்கே விரும்புகிறார்கள்
சிந்தனை இல்லாத மரங்களைப் போல!

கனிவு கொள்வதற்கோ ஆவல்கொள்வதற்கோ
அல்லாமல் 
வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமே
அவர்களுக்குக் கண்கள் தேவைப்படுகின்றன
ஒரு பெரிய புன்னகையைக் கூட
முகங்களில் காணக் கிடைக்கவில்லை..
அவர்கள் எனக்குச் சொன்னதெல்லாம்
'வாழ்க்கை சீக்கிரமாகக் கடந்து செல்கிறது
கனவு கண்டு கொண்டிராதே!' என்பதைத்தான்!

பண்டிகைச் சந்தோஷம் என்பது கூட
அர்ப்பணிப்புக்கும் இரத்தச் சகதிக்கும்
மட்டுப்படுத்தப்பட்டது என்றும்
உணர்ச்சி கொண்டு கவிதை வடிப்பது
தடுக்கப்பட்டது என்றும் கற்பித்தார்கள்
மூடிக் கொண்டு வாழ்வு காலத்தைக் 
கழிக்கும்படி சொன்னார்கள்

'காலம் வேகமாகக் கழிந்து கொண்டிருக்கிறது
மனுக்குலம் விரைவில் அழிந்து விடும்'
என்று அவர்கள் எனக்குச் சொன்னார்கள்
'உனது அந்தம் 
கப்ரிலும் நெருப்பிலுமே முடிவடையும்.
எனவே நீ எப்படி இருக்க ஆசைப்படுகிறாயோ
அதற்கெதிராக உறுதியாக நடந்து கொள்'
என்று சொன்னார்கள்
உன்னுடைய ஆத்மாவுடன் இணங்கியிருப்பது
வெட்கக் கேடானது என்றார்கள்

'மகனே..
உனது விதி ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதால்
அதை நம்பாலிருக்கவோ கேள்வி எழுப்பவோ
முற்படாதே' என்றார்கள்
'நல்லதை நோக்கிய பாதையில்
ஒரு வழிகாட்டும் கரம் உனக்குத் தேவை
அதைத் தனியே உன்னால் அடைய முடியாது' என்றார்கள்
'மனித குலம் தனது இயல்பைப் பின்பற்றிச் செல்வது
நல்லதாயிருக்காது ' எனறும்
'பூக்களின் ஒரே நோக்கம் 
மடிவது மட்டுமே' என்றும் சொன்னார்கள்

வணங்குவது எப்படி என்று கற்பித்தவர்கள்
ஒன்றில் நரக நெருப்பிலிருந்து தப்புவதற்கோ
அல்லது பேராசையுடன் சுவர்க்கத்தில் நுழைவதற்கோ
எப்படி இயல்பாக இறைவனை வேண்டுவது என்று
சொல்லித் தரவில்லை.

வாழ்க்கையை 
நியாயத் தீர்ப்பு நாளுடனும் நரகத்துடனும்
ஏன் அவர்கள் வரையறை செய்தார்கள்?

காதடைக்கும் திட்டங்கள் கொண்டு
பெண்கள் ஏன் மீண்டும் எரிக்கப்படுகிறார்கள்

ஏற்றுக் கொள்ளாதவன்
விலக்கி வைக்கப்படுவதும்
எதிர்த்து நிற்பவன் 
நம்பிக்கையற்றவனாக்கப்படுவதும் ஏன்?
சிந்தித்துப் பார்த்தால்
இது வெட்கக் கேடானது அல்லவா
இழிவுண்டாக்கும் செயல் அல்லவா?
கிலியுண்டாக்குவதிலும் அச்சப்படுத்துவதிலும்
ஈடுபடும் தொகையினரைப் பார்த்தால்
மார்க்கம் என்பது
வஞ்சம் தீர்க்கும் ஒரு வழிமுறை என்றே 
எண்ணத் தோன்றுகிறது

மார்க்கம் என்பது
வஞ்சம் தீர்க்கும் ஒரு வழிமுறை என்று
புரிந்து கொள்வது மோசமானது
மார்க்கம் என்பது
சுவர்க்கமாகவும் நரகமாகவும் பார்க்கப்படுவது
மோசமானது
மார்க்கம் என்பது
ஆடையின் நீளத்தால் விளங்கிக் கொள்ளப்படுவது
மோசமானது

இறைவன் ஆத்மாவுடன்தான்
நம்மைப் படைத்திருக்கிறான்
ஆகவே நாம் பறப்போம்!

நமது இதயங்களை 
வர்ணமயப்படுத்துவோம்
ஒவ்வொன்றாக வாழ்வோம்

மனித மனத்தை
ஊசியும் நூலும் கொண்டு வழிநடாத்த முடியாது
மனம் என்பது சிந்தனைக்கானது

மனிதர்கள் கொடியவர்கள் என
மலக்குகள் சொல்லும் போது
'இல்லை.. அவர்கள் களிமண்ணால் ஆனவர்கள்
நல்ல அம்சங்களைக் கொண்டவர்கள்'
என்று அவன் பதிலளித்தான்

-----------------------------------------------------------------

(மொழைிபெயர்ப்பு)

Sunday, October 4, 2015

வெள்ளிக்கிழமை விளக்கம்!


 - 28 -

வெள்ளிக் கிழமைகளின் ஜூம்ஆ பிரசங்கங்களை அந்நாட்களில் லெப்பைகளே நிகழ்த்துவார்கள். “எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ_த்தஆலாவுக்காயிருக்கும். அவன் எப்படிக்கொத்தவன் என்றால்......” இப்படித்தான் உபந்நியாசம் ஆரம்பிக்கும்.

ஓதலுக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ஒரு தாள லயத்தில் லெப்பை தனது 
குத்பாவை நிகழ்த்துவார். அவரது ராகத்தில் அநேகர் தூங்கிப் போவார்கள்.

அநேகமாகவும் குத்பாவுக்கு என்றொரு கிதாபு (நூல்) அவர்களிடம் இருக்கும். அது தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அரபுத் தமிழில் அமைந்த பிரசங்கங்கள் அதில் அடங்கியிருக்கும். அப்போது சிறுவனாயிருந்த எனது நினைவுகளின் எச்சங்களிலிருந்துதான் இதைச் சொல்லுகிறேன்.

70 களின் நடுப்பகுதியில் எனது நண்பர் காத்தான்குடி பௌஸ் ‘தூக்கம் தரும் குத்பா ஊக்கம் தரல் வேண்டும்’ என்ற தலைப்பில் தொடராகப் பத்திரிகை ஒன்றில் கவிதை எழுதியது ஞாபகம் இருக்கிறது. அவர் அப்போது அரபு மத்ரஸா ஒன்றில் ஓதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

கல்விக்கூடங்களை விட அரபு மத்ரஸாக்களே முக்கியம் எனக் கருதிய சமூகம் தத்தமது பிரதேசங்களில் அவற்றை உருவாக்க ஆரம்பித்தது, ஆலிம்கள் வெளிவர ஆரம்பித்தார்கள். ஆயினும் ஒவ்வொரு பிரதேசத்திலும் மரியாதைக்குரியோராகக் கருதப்பட்ட லெப்பைகள் தாமாக ஓய்வு பெற்ற பிறகே ஆலிம்கள் மிம்பர்களில் ஏற ஆரம்பித்தார்கள். ஒரு சில இடங்களில் இதற்கு மாற்றமாகவும் நிகழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் கூட அவர்களில் பெரும்பான்மையோரது மொழிப் பயன்பாடு சிலாகிக்கத்தக்கதாக இருக்கவில்லை. உயர்திணை, அஃறிணை தெரியாதவர்களாகவும் வார்த்தைகளைச் சரிவர முடித்துக் கொள்ள முடியாதோராகவும் அவர்கள் இருந்தனர். அதே நேரம் மிகவும் அற்புதமாக மொழியைப் பயன்படுத்தவும் எடுத்த தலைப்பில் சரியாகவும் அனைவரையும் கொள்ளை கொண்டு கட்டிப் போடக் கூடியோராகவும் ஒரு சிலர் இருக்கவே செய்தனர். இதற்கு உதாரணமாக மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களைக் குறிப்பிட முடியும். அவரது பேச்சின் கவர்ச்சிக்கும் விசால அறிவுக்கும் சிறந்த மொழி நடைக்கும் காரணம் அவரது இடையறாத வாசிப்பு. அவரது வீட்டில் ஒரு நூலகமே இருந்தது.

பழைய நிலை இன்று மாற்றம் பெற்ற போதும் காலப் போக்குக்கேற்ப
ஆலிம்களில் ஒரு தொகுதியினர் தமது பாணிகளை மாற்றிக் கொள்ளாமலே
இருந்து வருகின்றனர். இது குறித்துச் சமூக ஊடகங்களில் மிகக் கடுமையான
விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் கூட தாம் நபிமார்களின்
வாரிசுகள் என்ற மிடுக்குக் கலையாமல் தாம் செய்வது சரி என்ற போக்கில்
அவர்கள் நடந்து கொள்வது கவலைக்குரியது.

உண்மையில் ஆலிம்களுக்கு இன்றும் - இன்னும் சமூகம் மரியாதை செலுத்தியே வருகிறது. அந்த கண்ணியத்தைச் செலுத்திய படியேதான் அவர்களது குத்பாக்கள் பற்றிய கருத்துக்களும் முன்வைக்கப் படுகின்றன. உண்மையில் பொதுமகன் நல்ல உபந்நியாசத்தைச் செவிமடுக்கும் ஆர்வத்தில் பள்ளிவாசல் வருகிறான். தொடர்ந்தும் அவன் ஏமாற்றமடையும் போது அது விமர்சனமாக மாறுவது தவிர்க்க முடியாதது.

இன்று மார்க்க விளக்கங்களைப் பொது மகன் ஒருவன் பெற்றுக் கொள்ளப் பல புதிய வழிகள் உருவாகி விட்டன. அறிவினைப் பெறுகின்ற புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒரு கடமை நிமித்தம், வணக்கம் நிமித்தம் பள்ளிவாசல் வரும் ஒரு பொதுமகன் நல்லதொரு பிரசங்கத்தைச் செவிமடுக்க விரும்பும் போது அவனது எதிர்பார்ப்பு பற்றிய எவ்வித அக்கறையும் அற்றவையாக ஆங்காங்கே குத்பாக்கள் அமைந்து விடுவது பெரும் சோகம்.

;”ஒரு வயோதிபர் இருந்தாராம். அவர் அவருடைய வாலிப வயதிலிருந்தே ஹஜ் செய்து கொண்டு வந்தாராம். அவர் ஒவ்வொருமுறை ஹஜ் செய்த பின்பும் அவருடைய ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் வருமாம். இவ்வாறு 50வது முறை ஹஜ் செய்த பிறகுதான் அவரது ஹஜ்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வானத்திலிருந்து சப்தம் வந்ததாம்.” இப்படி ஓர் ஆலிம் குத்பா பிரசங்கம் செய்ததாக மிக அண்மையில் கிபாரி முகம்மத் என்ற சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைக் குறிப்பிட்டு விட்டு அவர் செய்திருந்த விமர்சனத்தை இங்கே நான் தவிர்த்திருக்கிறேன். இது ஒரு சாதாரணப் பதிவுதான். இதைவிடக் கடும் கோபத்துடன் பலர் பதிவுகளை இட்டிருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் இங்கே எடுத்தாள்வது பொருத்தமானதாக இருக்காது.

கடந்த ஜூலைமாதம் எனது முகநூல் பக்கத்தில் குத்பாக்கள் பற்றி நான் எழுதிய குறிப்பு இது:-

“ஜம்இய்யத்துல் உலமா சபை குத்பாப்பிரசங்கம் நிகழ்த்தும் ஆலிம்களுக்குப் பின்வரும் முக்கிய விடயங்களைத் தெரிவிப்பது நல்லது. 1. ஒரே தலைப்பில் ஒரே விடயத்தை மாத்திரம் பேசுவது. 2. மொழியைச் சரியாகப் பயன்படுத்துவது. 3. 20 முதல் 30 நிமிடங்களில் பிரசங்கத்தை நிறைவு செய்வது. 4. ஒலிபெருக்கி என்பது நமது சாதாரண குரல் ஒலியை பெரிய அளவில் வெளிப்படுத்தக் கூடியது என்பதை அறிவுறுத்துவது. 5. ஜத்பு ஏறாமல் பார்த்துக் கொள்வது.

உண்மையில் குத்பா உரை நிகழ்த்தும் ஆலிம்களுக்கு மொழிசார், உரைசார் தகையாளர்களைக் கொண்டு பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். ‘நாங்கள் சரியாகவே சொல்லுகிறோம். மார்க்கம் சொல்லும் உரிமையும் அதிகாரமும் எங்களுக்கேயுரியது. எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அவர்கள் கருதினால் பொது வெளிகள் விமர்சனங்களால் நிறைவதைத் தவிர்க்க முடியாது போகும். அது அழகும் அல்ல.

எனது முகநூல் பதிவுக்குச் சிலர் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை இட்டிருந்தனர். அதில் ஒரு சகோதரி இட்டிருந்த பின்னூட்டம் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது!

எனது குறிப்பில் அடுத்ததான நான் சொல்லியிருக்க வேண்டியது என்ற வகையில் ‘கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே நரகவாதிகள் என்ற அடிப்படையில் துள்ளாமலிருப்பது!” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.