Saturday, April 27, 2013

“வாக்குமூலம்“ - மஹ்மூத் தர்வேஷ்



புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர் மறைந்த மஹ்மூத் தர்வேஷ் எழுதிய “அடையாள அட்டை” என்ற கவிதை உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது. இந்தக் கவிதையை பலஸ்தீன பெண் கல்வியியலாளர் படிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அரபியிலும் ஆங்கிலத்திலும் அக்கவிதை படிக்கப்படுகிறது. அரபியில் படிக்கும் போது அவர் தன் சொந்த நிலம் குறித்துக் கலங்குவதை அவதானிக்கலாம். இது கவிதைக்கும் கவிஞனுக்கும் கிடைத்த வெற்றி.



இக்கவிதையை “வாக்குமூலம்” என்ற தலைப்பில் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கே தரப்படுகிறது. பலஸ்தீனக் கவிதைகள் என்ற எம்.நுஃமானின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.

வாக்குமூலம்

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
எனது அட்டையின் இலக்கம் 50,000
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன்
கற்களை உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும்
ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ்
முழந்தாழ் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
யுகங்களுக்கப்பால்
காலத்துக்கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன

உழவர் குலத்தின் எளிய மகன் நான்
வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான்
எனது தலைமுடி மிகவும் கறுப்பு
எனது கண்கள் மண் நிறமானவை
எனது அரபுத் தலைஅணி
ஆக்கிரமிப்பாளரின் கைகளைப் பிறாண்டும்

அனைத்துக்கும் மேலே
தயவு செய்து இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்

கவனம்!
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்!
எனது சினத்தை அஞ்சிக்
கவனமாயிருங்கள்!



மஹ்மூத் தர்வேஷ் குரலில் அவரது கவிதை


இக்கவிதை George Qurmuz குரலில் இனிமையான ஒரு பாடலாக...

Thursday, April 25, 2013

ஒற்றுமைக் கயிறு - ஒலி நாடகம்


23.04.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான “ஒற்றுமைக் கயிறு” என்ற - நான் எழுதிய வானொலி நாடகம்.


பகுதி -1




பகுதி - 2




பகுதி - 3



பகுதி - 4




Monday, April 22, 2013

புரட்சிக் கமால் கவிதை!




நோக்கு

புரட்சிக் கமால்


நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

ஒல்லியாய் வடிந்து, கூனி
ஒடிந்த வில் ஆவான், அண்ணன்!
கல்லெனத் திரண்டு, சின்னக்
களிற்றினை ஏய்ப்பான் தம்பி!
முல்லையே தங்கை! நானோ
முருக்கையின் பிரதி! இந்தப்
பல்லுருப் பேதத்தோடு
பயந்தவர் ஒரு தாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

நிறத்தினில் அண்ணன் நெய்யை
நிக்த்தவன்! தம்பி சாயல்
வறுத்தநாட் டரிசி! என்றன்
வண்ணமோ கழுகுப் போர்வை!
உரித்தமாங் கனியாள் தங்கை!
ஒரு படிப் பாலில் இந்த
நிறத் தொகை எதனால்? எம்மை
நிறுத்தவர், ஒரு தாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

ஓவியப் புலவன் அண்ணன்
ஒளி நிழல் கரைவான்! இந்தப்
பாவியோ, அப்பனோடு
கழனியில் மாடு, தம்பி
சேவைகள், மற்போர், ஆட்டம்
திருவிழாப் பருகும்! எங்கள்
பூவையோ, கூண்டுக் கிள்ளை!
பெற்றவர், ஒருதாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

வீட்டுக்குள் - ஒருதாய், தந்தை
விளைச்சலின் ஊழல் கோடி!
நாட்டுக்குள் - மேடு, பள்ளம்
வெயில் - மழை, கூதலென்று
காட்டுக்கூப் பாடு போட்டே
கடவுளில் “நோக்கு” நாட்டி
வேட்டுக்கள் தீர்ப்பான், தம்பி
வெறும்பயல், விடுங்கள் பாவம்!

(நன்றி - புரட்சிக்கமால் கவிதைகள்)

Sunday, April 21, 2013

அழுவதற்கென்று பிறந்தவர்கள்!



எனது வீட்டிலிருந்து கூப்பீடு தூரத்தில் (15 யார்கள்) ஓர் அரச பாடசாலை இருக்கிறது.

நேற்றுக் காலை 8.00 மணிக்கெல்லாம் அப்பாடசாலையிலிருந்து ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மிகப் பழைய சிங்களப் பாடல்கள். அநேகமாகவும் 80களுக்கு முந்திய பாடல்களாக இருக்க வேண்டும். பாடல்களின் பின்னணியில் இசையை மீறிய இரைச்சல். இருந்த போதும் அதில் ஒரு பாடலின் மெலடி என்னை வெகுவாகக் கவர்ந்தது.

நெருக்கம் மிகுந்த - ரெசிடன்டல் ஏரியா - என்பதால் பொது நிகழ்வுகள் அவ்வப்போது இப்பாடசாலையில் நடைபெறுவதுண்டு. படிக்கும் மாணவர் தொகை சொற்பம். பெரிய மைதானம் உண்டு.

புதுவருடக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்று நினைத்தேன். பொதுவாக சிங்கள - தமிழ் புத்தாண்டு வந்தால் மாதம் முடியும் வரைக்கும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

பத்து மணியளவில்ஏரியாப் பாடகர்கள் இசை இல்லாமல் பாடிக் கொண்டிருந்தார்கள்.  பதினைந்து பதினாறு வயதுக்குக் குறைந்தவர்கள் போல் இருந்தது.ஒரு கிராமத்தில் புதுவருடத்தில் பாட முடிந்தவர்கள் பாடுகின்ற ஏற்பாடு போல் தெரிந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் “சமுர்த்தி பெறும் குடும்பத்தினர் மட்டும்” என்று அறிவிப்பாளர் ஒலிவாங்கியில் கமறிக் கொண்டிருந்தார். இங்கு என்னதான் நடக்கிறது என்று என்னால் மட்டிட முடியவில்லை.

10.30 போல் கடைக்குச் செல்வதற்காக வெளியேறிய போது பாடசாலை கேற்றில் இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு பெனர் கட்டப்பட்டிருந்தது. “சமுர்த்திக்
கொண்டாட்டம்” என்று சிங்களத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது.

அந்த பெனரின் அளவு என்ன தெரியுமா? ஒன்றரைக்கு ஒன்றரை அடிகள்தாம். அடடா... குறைந்த  வருமானம் பெறும் மக்களுக்கான விழாவைக் கூட மிக மிகச் சிக்கனமாக “சமுர்த்தி” ஏற்பாடு  செய்திருக்கிறது என்று மகிழ்ந்தேன். வறுமையில் வாழும் மக்களைச் சந்தோஷப்படுத்தும் ஒரு முயற்சியாகத் தெரிந்தது. அட... பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயத்தை “சமுர்த்தி” செய்கிறது என்று உள்ளம் பூரிப்படைந்தது.

“ஜனசவிய” என்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்காக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பிரதமராக இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம். சந்திரிக்கா அமையாரின் காலத்தில் “சமுர்த்தி” என்று பெயர்மாற்றம் பெற்றது. பிறகு அது ஒரு அமைச்சாக மாறி மகிந்தர்
ஆட்சியில் அமைச்சே இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் திட்டம் நடைபெற்று வருகிறது.

அடுத்த கணம் மனது மாற்றிச் சிந்தித்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் கொண்டாட்டத்துக்கெல்லாம் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை என்று நினைத்து விட்டார்களோ என்று நினைப்பு வந்தது. ஒரு கட்டடத்தைத் திறந்து வைக்கும் அரசியல்வாதிக்கு 50 க்கு 20 அடிகளுக்கு கட்அவுட் வைக்கும் அதிகாரிகள் ஏழைகளின் விழாதானே என்று ஒன்றரைக்கு ஒன்றரை பெனர் போட்டிருக்கிறார்களாக்கும் என்றே எண்ணினேன்.

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஸ்பீக்கரில் சிறுவர்களும் சிறுமியரும் கதறிஅழும் சத்தம் கேடடது. காது கொடுத்துக் கேட்டால் அது அழுகைப் போட்டி.

விசித்திரமான போட்டியாக இருக்கிறதே. சிறுவர் சிறுமியர் எந்தக் காரணத்துக்காக அழுகிறார்கள் அல்லது அழ எண்ணுகிறார்கள் என்று “சமுர்த்தி” கணிப்பீடு செய்து ஏதாவது நல்ல முடிவுக்கு வரப் போகிறதாக்கும் என்று மீண்டும் மனதுக்குன் பாராட்டியபடி காதைக் கூர்மைப்படுத்தினேன்.

 அவ்வாறு ஒன்றும் இல்லை...

நன்றாக அழுபவருக்குப் பரிசு அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது...

இப்போது ஜூட் அழுவார்...

“ஐயோ... அப்பா அடிக்க வேண்டாம்... ஐயோ... ஐயோ... ஆ... ஊ....” என்ற
அழுகைச் சத்தம்.

இப்போது முனீரா அழுவார்...

ஓவென்ற அழுகை... அம்மா அடித்ததாக அப்பாவிடம் சொல்லித் தேம்பியழுகிறாள்...

இப்போது புவனா....

சகோதரன் அத்து விட்டானாம்... அதே அழுகை!

ஒவ்வொரு அழுகையும் முடியப் பலத்த கைதட்டல்...

சரிதான்!

அதிகரிக்கும் விலைவாசியால், உழைப்புக்குரிய ஊதியம் கிடைக்காமையால்,
கல்விக்குரிய தொழில் கிடைக்காமையால், கூடிய சீக்கிரம் “சமுர்த்தி ” உதவியும் குறைக்கப்பட்டால்...எதிர்காலத்தில் ஏழைகள் வாய்விட்டு அழவேண்டும் என்பதற்காகப்  போட்டிவைத்து அழப்பழக்குகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்!

Saturday, April 20, 2013

காலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்!



மரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள்.

மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு முன்னர் வெளிப்படுத்திய சொல்லோ வார்த்தையோ அத்தருணத்தின் பெறுமதியாலும் அம்மனிதனின் மனோ நிலையினாலும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. ஒரு துயரக் கவிதை போல அவ்வார்த்தைகள் சக்தி மிக்கவையாகி விடுகின்றன| வாழும் வரத்தைப் பெற்று விடுகின்றன.

வாழ்க்கை என்பது இவ்வுலகில் ஒரே ஒரு முறைதான் வாய்க்கிறது. அதை இழக்கும் கையறு நிலையில் சிலர் சொன்னவற்றை இங்கு தருகிறேன்.

இத்தாலியின் சர்வாதிகாரி பெனிற்றோ முசோலினிக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தப்பட்டவேளை, தனது மேலாடையை விரித்து அவர் சொன்ன கடைசி வார்த்தை 'என் நெஞ்சில் சுடு!' தூக்கிலிடப்பட்ட ஈராக்கின் தலைவர் சத்தாம் ஹூஸைன் மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் தனது நெஞ்சில் சுட்டு அதனை நிறைவேற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளைச் சட்டைசெய்யாமல் தூக்கில் தொங்க விடப்பட்ட போது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது (ஸல்) இறைவனின் தூதராவார்' என்ற வார்த்தைகளை மொழிந்தார்.

1886ல் சிகாகோ குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட ஜோர்ஜ் ஏங்கல் சொன்னார்:- 'அராஜகத்துக்கு வாழ்த்துக்கள். இது எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நேரம்!' அவுஸ்திரேலியாவின் தேசிய வீரர் என மதிக்கப்படும் கவிஞர் ஹரி ஹார்போர்ட் 1902ல் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சொன்னார்:- 'தேவடியாப் பசங்களே, நேராகச் சுடுங்கள். அங்கிங்கு சுட்டு விடாதீர்கள்.' அமெரிக்காவின் தேசிய வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் நாதன் ஹேல் பிரித்தானியாவில் உளவு பார்த்த குற்றத்துக்காகச் சுட்டுக் கொல்லப்படும் வேளை சொன்னார்:- 'எனது நாட்டுக்கெனத் துறப்பதற்கு ஒரே ஓர் உயிர் மாத்திரமே இருப்பதற்காக வருத்தப்படுகிறேன்.'

முற்காலத்தில் மரண தண்டனை விதிப்பதற்காகப் பயன் படுத்தப்பட்ட கழுத்தை வெட்டும் இயந்திரம் 'கில்லட்டின்' என்று அழைக்கப்பட்டது. இவ்வியந்திரம் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் 14ம் லூயி, 'நான் அப்பாவியாகச் சாகிறேன். எனக்கேற்பட்ட இந்நிலைக்குக் காரணமானவர்களை நான் மன்னித்து விடுகிறேன்' என்று குறிப்பிட்டார். 1618ல் சிரச்சேதம் செய்யப்பட்ட சேர் வோல்டர் ரலீ என்பார் இவ்வாறு சொன்னார்:- 'இதயம் சரியாக இருக்கிறது. தலை எந்தப் பக்கம் கிடக்கும் என்பதைப் பற்றிக் கவலை யில்லை.'

 மின்சாரக் கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட இருவரது இறுதி வார்த்தைகள் இரண்டு அர்த்தங்களைத் தருகின்றன. 1928ல் ஜோர்ஜ் அப்பல் 'சரி, கனவான்களே... அவிக்கப்பட்ட அப்பிளைப் பார்ப்பதற்கு நீங்கள் தயாராகிறீர்கள்' என்றார். ஜேம்ஸ் பிரென்ச் என்பவர் கவித்துவமாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் சொன்னார் இப்படி:- 'நாளையப் பத்திரிகையில் இப்படித் தலைப்புச் செய்தி இடம்பெறுமாக இருந்தால் எப்படி யிருக்கும்? 'ஃபிரென்ச் ஃபிரைஸ்!'

 ஊசி மூலம் விஷம் செலுத்தியும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நாம் அறிந்ததே. 1993ல் அவ்வாறு தண்டனை வழங்கப்பட்ட லயனல் ஹெரேராவின் வார்த்தைகள் பரிதாபமானவை. 'நான் அப்பாவி! அப்பாவி!! அப்பாவி!!! எந்தத் தவறும் விட்டவனில்லை. சமுதாயத்துக்கு நான் நன்றிக் கடன் பட்டவன். உண்மையில் நான் ஓர் அப்பாவி. இந்த இரவில் ஒரு மோசமான தவறு இடம் பெறப் போகிறது.' 1997ல் மாரியோ பென்ஜமின் மேர்பி சொன்ன இறுதி வார்த்தைகள்:- 'இன்றைய தினம் இறப்பதற்கு நல்ல தினம். நான் உங்கள் எல்லோரையும் மன்னித்து விடுகிறேன். கடவுளும் அவ்வாறே செய்வார் என்று நம்புகிறேன்.'

கார்லா டக்கர் ப்ரவுன் தனக்குத் தண்டனை வழங்கப்படு முன்னர், 'நான் இப்போது யேசு நாதரை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறேன். நான் உங்கள் அனைவரையும் மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அங்கு வரும் போது சந்திப்பேன். நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்' என்று சொன்னார்.

2000ஆம் ஆண்டு டென்னி டெம்ப்ஸ் என்பவருக்குத் தண்டனை வழங்குவதற்கு 33 நிமிடங்கள் எடுத்தனவாம். ஊசி மருந்து செலுத்துவதற்கான சரியான நரம்பைக் கண்டு பிடிப்பதற்கு மட்டுமன்றி மற்றொரு ஊசி மருந்தைத் தயார் படுத்திக் கொள்வதற்குமே இவ்வளவு நேரம் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. தண்டனை வழங்கப் பட்ட நபர் இழைத்த குற்றம் அல்லது அவரது உடலமைப்புக் குறித்துத் தண்டனை வழங்குவோர் மேற்கொண்ட முன் எச்சரிக்கையாக அது இருந்திருக்கலாம். ஆனால் டென்னிஸ் இவ்வாறு சொன்னார்:- 'எனது அடித் தொடையை, காலையெல்லாம் வெட்டினீர்கள். நான் அதிகம் இரத்தம் சிந்தினேன். இது மரண தண்டனை அல்ல| கொலை!' 1993ம் ஆண்டு ஜேம்ஸ் அலன் ரெட்டுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள்:- 'பேபி, நான் வீட்டுக்குப் போகிறேன்.'

 ரொபர்ட் ட்ரோ என்பார் தனக்கு தண்டனை வழங்கப்பட்ட போது உறுதிபடச் சொன்ன கடைசி வார்த்தைகள்:- 'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மரண தண்டனை என்பது ஒரு படுகொலையாகும்.'

1989ம் ஆண்டு சீன் பிளான்னகன் என்பாருக்கு தண்டனை யளிப்பதற்குரிய ஊசிமருந்தை ஏற்றியவரைப் பார்த்து சீன் சொன்னார்:- 'ஐ லவ் யூடா... செல்லம்!'

 25.05.2008
 (தீர்க்க வர்ணம் என்ற எனது பத்தியெழுத்துத் தொகுப்பு நூலிலிருந்து)


Thursday, April 18, 2013

உன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா?



இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார்த்தோம். அவர்களிடம் இலங்கை முஸ்லிம்களின் இருப்பு, மத சுதந்திர அச்சுறுத்தல் பற்றிய ஜனாதிபதியின் பதிலுக்கு அப்பால்
முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ராஜதந்திர மட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அவதானத்துடன் இருக்கிறோம் என்ற செய்தியை இலங்கைக்கும் முழு உலகுக்கும் உணர்த்தியிருப்பதானது ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.

மேற்படி ஒன்றுபட்ட கலந்துரையாடலுக்குச் சென்ற நாடுகளில் அரபு நாடுகளும் உள்ளன. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தமது சகோதர உணர்வைப் பிரதிபலிக்கும் அதே வேளை அவர்கள் மீது குறிப்பாக அரபு நாடுகள் மீது ஒரு முக்கியமான கடமை உண்டு.

தமது நாடுகளில் தொழில் நிமித்தம் பணிபுரியும் பிற நாட்டவர்களை - குறிப்பாக ஆசிய நாட்டவர்களை - அந்நாடுகளிலுள்ள வேலை கொள்வோர் கசக்கிப் பிழிவதும் துன்புறுத்துவதும் தண்டிப்பதும் நிறுத்தப்படுவதற்கு இந்நாடுகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்.

இத்துன்புறுத்தல்களும் கொடுமைகளும் இனம், மதம் என்ற வித்தியாசத்துக்கப்பால் அங்கு  நடைபெற்று வருகின்றன. தன்னை வீட்டு எஜமான் நிர்வாணப்படுத்திக் கொடுமைப் படுத்தியதாக மிக அண்மையில் சவூதியிலிருந்து வந்த ஒரு சிங்களப் பெண் தெரிவித்திருக்கிறார். இவ்வாறான
கொடுமைகள் பற்றிய கதைகள் இணையத்திலும் ஊடகங்களிலும் ஆயிரமாயிரம் கிடைக்கின்றன. மனிதாபிமானமற்றமுறையில் அரபிகள் நடந்து கொள்வது வெறும் முஸ்லிம் நாட்டின் பண்புகளையும்
கலாசாரப் பழக்கவழக்கங்களை மட்டுமல்ல, இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியையும் கேள்விக்கு  உட்படுத்துவதாகும்.

வேலைக்குச் செல்லும் எல்லோரும் இஸ்லாம் பற்றி 50 வீதமாவது அறிந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அநேகமானோர் படிப்பறிவில் குறைந்தவர்கள். எனவே முஸ்லிம்கள் வாழும் தேசங்களில் இஸ்லாம் வாழ்க்கை வழி என்று சொல்லிக் கொள்ளும் தேசங்களில் மனிதாபிமானமற்ற
கொடுமைகள் நடப்பதை “வாளினால் கழுத்தை வெட்டுவது” என்ற தண்டனைப் பார்வையிலிருந்தே அவர்கள் பார்க்க முனைவார்கள். இது முஸ்லிம்கள் பற்றிய மிக மோசமான மனப்பதிவை இவ்வாறான
கொடுமைகளுக்கு உள்ளாகுவோருக்கும் அவர்கள் குடும்பத்தினர், அயலவர், தெரிந்தவர் என்ற ஒரு பெரிய வட்டத்துக்கு உருவாக்கி விடுவதைத் தவிர்க்க முடியாது.

இவ்வாறான கொடுமைகளைச் செய்வோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்ன என்பதாவது ஊடகங்களில் வெளிவருவதில்லை. இந்தப் பிரச்சினையை அவர்கள் கணக்கில் எடுக்கிறார்களா இல்லையா என்பதே
தெரிவதில்லை. ஒரு முஸ்லிம் தேசத்தில் இந்த விபரங்கள் மிக வெளிப்படையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். இருட்டுக்குள்ளேயே யாவற்றையும் அடக்கி விடுவதானது இஸ்லாம் பற்றிய
தவறான கருத்துக்கள் பரவவே வழி செய்யும்.

இவற்றில் அவதானம் செலுத்தாமல் இஸ்லாமியப் பிரசாரத்துக்கு லட்சம் லட்சமாகப் பணம் செலவழிப்பதிலும் பள்ளிவாசல் கட்டுவதிலும் குர்ஆன் பிரதி அச்சிடுவதிலும் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு திருப்திப் படுவதில் அர்த்தங்கள் இருக்குமா என்று புரியவில்லை.

இராஜதந்திர, அரசியல் பார்வையில் உலகளாவிய முஸ்லிம் சகோதரத்துவக் கட்டமைப்பை விட இன்ன தேசத்தைச் சார்ந்தவர்கள் என்ற விடயமே முற்படுத்தப்படும் அம்சமாக இருக்கும். அவர்கள் எந்த இனமாக இருந்தாலும் சரியே.

ஒரு பிரதேசத்துப் பள்ளிவாசலை பெரும்பான்மையோர் தாக்கிய போது அது குறித்து ஒரு அரசியல் முக்கியஸ்தர் ஜனாதிபதியிடம் சொன்ன போது, “ஒரு தெருவுக்கு எதற்காக இரண்டு பள்ளிவாசல்கள்?” என்று கேட்டதாக அக்காலப்பிரிவில் காற்றுவாக்கில் ஒரு செய்தி வந்தது. (தர்க்கங்களை விடுவோம்.)

மற்றொரு முறை இதே போல் இவர்கள் இலங்கை முஸ்லிம்கள் விடயமாக ஜனாதிபதியைச் சந்திக்கும் போது (தொழில் வழங்கும் நாடுகள் )ஒவ்வொரு நாட்டிலும் இலங்கையருக்கு நடந்த கொடுமைகள்  பற்றிய தகவல்களை ஓர் ஆவணமாக இவர்கள் முன்னால் போட்டு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று கேட்டால் சொல்வதற்குப் பதில் இருக்க வேண்டும்!


Monday, April 15, 2013

உங்களுக்கான கேள்விகள்!



முப்பது ஆண்டு களாய் முக்கு ளித்த ரத்தத்தில்
மூச்சடங்கிப் போகவில்லையா - உங்கள்
மூர்க்கம் இன்னும் தீரவில்லையா?

எப்போது தீரும் என்று ஏக்கங் கொண்ட நெஞ்சங்களை
ஏமாற்றும் வஞ்சம் இல்லையா - இனியும்
இந்நாட்டில் அமைதி இல்லையா?


நடுக்கடலில் மிதந்திடினும் நாலு மதம் கொண்ட மக்கள்
நண்பரென வாழ்ந்ததி்லலையா - இங்கு
நன்மைகள் விளைந்ததில்லையா?

துடுக்குத் தனத்தோடு நின்று துவேசத்தைக் கக்கிநிற்றல்
துரோகமென்று தெரியல்லையா - நாடு
தூளாகிப் போகுமில்லையா?


குட்டக் குட்டக் குனிவதற்கு குரங்குகளே யானாலும்
விட்டுக் கொடுக்காது அல்லவா? - அதனை
விதியெனக் கொள்ளா தல்லவா?

மட்டுப்பட்டு வாழ்ந்த நிலை மலேயேறிப் போயிற்றென்று
மண்டைக்குள் ஏறவில்லையா - உம்
மனச்சாட்சி பேசவில்லையா?


உள்வீட்டுச் சண்டைகளால் உண்டான வேதனைகள்
உள்ளத்தைச் சுட்டதில்லையா - உமக்கு
உண்மைகளே புரிவதில்லையா?

எள்ளாக இருந்திடினும் எல்லோரும் பகிர்ந்து கொண்டால்
இன்பம் ஒரு கோடியல்லவா - எல்லாத்
துன்பங்களும் ஓடுமல்லவா?


தட்டுக்கெட்டு நடந்து தறிகெட்டு அழிவதனை
தர்மம் புறக் கணிக்கவில்லையா - அதைத்
தவிர்ப்பது நலமில்லையா?

விட்டுக் கொடுத் தோம்பி விரல்களைக் கோப்பதில்
விட்டழியும் வெறுப்பு இல்லையா? - விகற்பங்கள்
வேரறுந்து போகுமில்லையா?


அறங்களைப் போதிப்பவர் அறநெறி பிறழ்வது
அவமான மாகுமில்லையா? - அது
அவலத்தைத் தருமில்லையா?

புறத்திலே புண்ணியமும் போர்வைக்குள் புன்மையுமாய்
புகல்வது வெட்கமில்லையா? - நன்மை
அகல்வது துக்கமில்லையா?

Saturday, April 13, 2013

யாரடா முஸ்லிம் இங்கே...?



ஞாபகமறதி சற்று அதிகம் கொண்டவனாக இருந்த போதும் அநேகமாகவும் அக்காலப் பிரிவு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதற்தடவையா ஜனாதிபதியாகப்  பதவியேற்ற காலப் பகுதியில்தான் ஒரு பூதம் கிளம்பியது போல் பிரபல்யமான செய்தி அது.

“வற் வரி” மோசடி குறித்த செய்திதான் அது. கோடிக்கணக்கான ரூபாய்களை மிகப்பெரும் வர்த்தகப் புள்ளிகள் மோசடி செய்திருக்கிறார்கள் என்ற செய்தி அரசியல், வர்த்தக, பொது மக்கள் மட்டத்தில் காட்டுத் தீயாகப் பரவத் தொடங்கியது. செய்தி பரவிக் கொண்டிருக்கும் போது மோசடியாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் நாட்டை விட்டு மொத்தமாகக் கிளம்பிப் போயிருந்தார்கள்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் இம்மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் எனப் பெயர் குறிக்கப்பட்டவர்கள் அநேகர் முஸ்லிம் வர்த்தகர்கள் என்பதுதான். முஸ்லிம்களே இவ்வாறான செயற்பாடுகளில் முன்னணியில் நிற்கிறார்கள் என்பது அரசியல் மேல் மட்டத்தில் பேசப்பட்டதை நான் அறிவேன். ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னிலையில் அரசியல் மேல் மட்டம் இதைச் சொல்லி முஸ்லிம்கள் பற்றி எதையும் பேச முடியாதவர்களாக அவர்களை மாற்றியது.

எல்லா முஸ்லிம் சிறுபான்மை அரசியல் கட்சிகளையும் உள்வாங்கிக் கொண்டு நகர்ந்த மஹிந்த அரசு கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரத்தைத் தமது கட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப் பகீரதப்  பிரயத்தனங்களை மேற்கொண்டது. தனது உச்ச பலத்தைக் கொண்டு முயற்சித்தது. கொழும்பு வாழ் முஸ்லிம்கள் ஐ.தே.க. வைக் கைவிட்டு தமக்கு வாக்களிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தது. ஆனால் அது கனவாகவே முடிந்தது. ஐ.தே.க. கொழும்பு மாநகர ஆட்சியைத் தக்க வைத்தது.

இயல்பாகவே இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் ஐ.தே.க வை விட்டுப் பிரிக்க முடியாதவர்கள் என்று அறியப்பட்டதுண்டு. உண்மையும் அதுதான். எனவே கொழும்பு
முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட கடுப்பு எல்லா முஸ்லிம்களையும் நோக்கியதாக மாறியிருக்கச் சாத்தியம் உண்டு.

அரசியல் மேல் மட்டத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அந்த மட்டத்துடன் தெடர்பு கொண்டவர்களுக்கு மாத்திரமே புரியக் கூடியது. கட்டுரையாளர்கள், பத்திரிகையாளர்கள்,  அரசியலுக்கு வெளியே நின்று ஓர் ஊகத்தில் பேசுபவர்களது கணக்குகள் யாவுமே தப்பானவை. அநேகமாகவும் குருடன் வெள்ளை யாளை பார்த்த கதையே. இப்போது நான் எழுதும் இந்தக் குறிப்பும் கூட அப்படிப்பட்டதே. ஆனால் பகுதி பகுதியாக ஒவ்வொருத்தர் வெளிக் கொணரும் கருத்துக்கள், கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புள்ளியில் ஒரு
தீர்மானத்துக்கு பொதுமக்கள் வந்து சேரும் போது அரசியல் வேறு ஒரு கோணம் எடுத்து நகர ஆரம்பித்திருக்கும்.

2009ல் விடுதலைப் புலிகள் மீதான வேட்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் எங்காவது  ஓரிடத்தில் யாரும் ஏதாவதொரு அரச எதிர்ப்பு, விடுதலை நோக்கிய செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட நினைக்கவே கூடாது என்ற அடிப்படையில் “கிறீஸ் மனிதன்” வடிவமைக்கப்பட்டிருக்கலாம். பொதுமக்கள் குறிப்பாக சிறுபான்மையினர் அச்சத்தில் வாழும் ஒரு நிலையில் இருக்க வேண்டும்என்ற அடிப்படையிலேயே “கிறீஸ் மனிதன்” செயற்பட்டதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த அடிப்படையில் நகர்ந்த முயற்களில் ஒன்றாகவே முஸ்லிம்களின் ஹலால் விடயம் பற்றிய பிரச்சினையையும் நாம் பார்க்க முடிகிறது. ஓர் அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள எந்தப் பேயுடனும் கைகோத்துக் கொள்ளும். ஒவ்வொரு திருப்பத்திலும் எதையாவது அல்லது யாரையாவது பயன்படுத்திக் கொள்வதில் பின்னிற்பதில்லை.

Thursday, April 11, 2013

அரசனும் செம்படவனும்



நீண்ட காலங்களுக்கு முன்னர் ஓர் ஏழை மீனவன் தனது மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அவனிடமிருந்த வலையைக் கொண்டு கடலில் மீன் பிடித்துத் தனதும் தனது குடும்பத்தினதும் ஜீவனோபாயத்தை அவன் நடத்திக் கொண்டிருந் தான்.

ஒரு நாள் அதிகாலை அவன்  மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றான். அன்று பிற்பகல் வரை அவனது வலையில் மீன்கள் எதுவும் சிக்க வில்லை. கவலையுடன் கடைசியாக ஒரு முறை முயன்று பார்த்தான். அந்த வீச்சில் ஏராளமான சிறிய மீன்களும் அவன் அதுவரை கண்டிராத அளவு ஒரு பெரிய மீனும் சிக்கின. அவற்றை அவன் வீட்டுக்குக் கொண்டு வந்த போது மீனவனின் மனைவி ஆச்சரியப் பட்டாள். சிறிய மீன்களைத் தமது உணவுக்கு எடுத்துக் கொண்டு பெரிய மீனை அரசனுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு விரும்புவதாக அவன் மனைவியிடம் சொன்னான். அவனது மனைவியும் அவனது விருப்பத்தை ஏற்றுக் கொண்டாள்.

மீனவன் பெரிய மீனைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அரச மாளிகைக்குச் சென்றான். காவலர்களின் அனுமதி பெற்று அரசன் முன் நின்று, 'மாட்சிமை தங்கிய அரசே, இன்று எனது வாழ்விலே கண்டிராத அளவு பெரிய மீன் ஒன்று என் வலையில் சிக்கியது. அதை எனதும் எனது மனைவி குழந்தைகள் சார்பிலும் தங்களுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கு எடுத்து வந்துள்ளேன்' என்று சொன்னான். அரசன் முதலில் மீனைப் பார்த்தான். பின்னர் மீனவனைப் பார்த்தான். மீனவன் மீது அரசனுக்கு இரக்கம் உண்டாயிற்று. அன்பளிப்பை ஏற்றுக் கொண்டு தனது அன்பளிப்பாக நூறு தீனார்களை மீனவனுக்கு வழங்கினான்.

ஆனால் நூறு தீனார்களை வழங்கிய அரசரின் செயலை அரசி விரும்பவில்லை. பணத்தை மீளப் பெற்றுப் பத்து தீனார்களை மட்டும் கொடுக்குமாறு அரசரைக் குடைந்தாள். அரசரால் வழங்கப்பட்டதை மீளப் பெறுவது கண்ணியத்துக்கு இழுக்கானது என்றும் மக்கள் இதை தவறாகக் கதைப்பார்கள் என்றும் அரசன் அரசிக்குச் சொன்னான். அரசி விடவில்லை.

அவ்வாறாயின் மீனவனை அழைத்து இது ஆண் மீனா அல்லது பெண் மீனா என்று கேட்கும்படி வற்புறுத்தினாள். ஆண் என்று அவன் பதிலளித்தால் தனக்குப் பெண் மீனே தேவை என்றும் பெண் என்று பதிலளித்தால் ஆண் மீனே தேவை என்றும் சொல்லிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னாள்.

மீனவன் அழைக்கப்பட்டு அரசி சொன்னவாறு வினாத் தொடுக்கப்பட்டது. ஏதோ ஒரு சூழ்ச்சி நடப்பதைப் புரிந்து கொண்ட மீனவன் இம்மீன் ஆணா அல்லது பெண்ணா என்று தனக்குத் தெரியாது என்று சொன்னான். அவனது புத்திசாதுரியமான பதிலை மெச்சி அரசன் மேலும் நூறு தீனார்களை மீனவனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். கிடைத்தவரை லாபம் என்று கருதியபடி மீனவன் மாளிகையை விட்டு வேகமாகத் திரும்புகையில் அவனது கையில் இருந்த இருநூறு தீனார் பணத்தில் ஒரு தீனார் நாணயம் கீழே விழுந்தது.

அதை அவன் அவசரமாப் பொறுக்கியதை அரசி அவதானித்து விட்டு அரசரிடம் 'பாருங்கள் கீழே விழுந்த ஒரு தீனாரைக் கூட விட்டு வைக்காமல் எடுத்துக் கொண்டான். அவனை அழைத்து அந்த ஒரு தீனாரை இங்கிருக்கும் வேலைக்காரர்கள் எடுத்துக் கொள்ள விடாதது ஏன் என்று கேளுங்கள்' என்று நச்சரித்தாள்.

அரசர் மீண்டும் மீனவனை அழைத்து ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டார். 'மாட்சிமை பொருந்திய அரசரே... எனது கஞ்சத்தனத்தினாலோ பேராசையினாலோ அதனை நான் எடுத்துக் கொள்ளவில்லை. தாங்கள் பெரு மனது கொண்டு கொடுத்த அன்ப ளிப்பை மாளிகையில் விட்டுச் செல்வது தங்களை அவமானப் படுத்தியதாகி விடும் என்றுதான் எடுத்துக் கொண்டேன்' என்று பதில் சொன்னான். அவனது பதிலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் மேலும் நூறு தீனார்களை அன்பளிப்பாக வழங்கி அவனை வழியனுப்பினான்.

ஜெரூஸலத்தில் 1987ல் அரபுக் கற்கைகள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பலஸ்தீனத்தின் பிரபலமான வாய்வழிக் கதைகளில் ஒன்று இது. இதில் வரும் மீனவன் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறான். அதற்குக் காரணம் தனக்குக் கிடைத்த அன்பளிப்புப் பொருளை இழந்து விடாதிருக்க அவன் அளித்த புத்திசாதுரியமான பதில்கள்தாம்.  இக்கதையில் அவதானிக்க வேண்டிய மற்றொரு அம்சம் சிக்கல் படுத்தும் அரசியை அரசன் கையாளும் விதம். இவை இரண்டுக்கு மாகவே இக்கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

இக்கதை பெண்களை அவமதிக்கிறது என்று கருதுவோர் பின்வரும் பந்தியைப் படித்து இன்புறலாம்.

திருமணம் செய்து கொள்ளாத தனது மாமியிடம் ஒரு சிறுவன் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டான். அதற்கு அப் பெண் நான் ஒரு கிளியையும் ஒரு நாயையும் ஒரு பூனையையும் வளர்க்கிறேன் என்று சொன்னாள். திருமணத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிறுவன் மீண்டும் கேட்டான். இவை மூன்றும் ஆண்களின் வேலைகளைத்தான் செய்கின்றன. கிளி ஆண்க ளைப் போல அவ்வப்போது ஆணையிடுகிறது. நாய் அவ்வப்போது ஓய்வின்றிக் குரைக்கிறது. பூனை கால நேரம் பார்க்காமல் ஊர் சுற்றித் திரிகிறது என்று பதில் சொன்னாள்.

07.09.2008

(தீர்க்கவர்ணம் நூலிலிருந்து)

Wednesday, April 10, 2013

இலக்கியவாதிகள்தாம் ஒரு சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் எழுதிச் செல்கிறார்கள்!



(ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான எனது செவ்வி)

சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் இவ்வருடம் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7ம் திகதி இம்மாநாடு சம்பந்தமான எழுத்தாளர் ஒன்று கூடலும் கலந்துரையாடலும் கொழும்பு - 2 வொக்ஷோல் லேனில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்மகாநாடு பற்றி அவருடன் நடத்திய நேர்காணலை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

- அனா

கேள்வி:- கடந்த 7ம் திகதி நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் கலந்துரையாடலுக்கு சிலர் அழைக்கப்படவில்லை என்று அறியக் கிடைக்கிறது... ஏன் அப்படி நடந்தது?

பதில்:- கடந்த 6ம் திகதியிலிருந்துதான் எனது பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இருந்த போதும் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் தங்களால் முடிந்த வரை முகவரிகளைத் தேடி அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்கள். அழைப்பிதழ் அனுப்பப்பட்ட பட்டியல் எம்மிடம் உள்ளது. ஏறக்குறைய 300 பேருக்கு மேல் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தன. சிலருக்கு உரிய வேளையிலும் சிலருக்குத் தாமதமாகவும் கிடைத்திருக்கலாம். பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட பின்பும் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார்கள். சிலரது முகவரிகளோ தொலைபேசி எண்களோ கிடைக்காதமையால் அழைப்பிதழ் அனுப்பத் தவறியிருக்கலாம். அவர்களுக்குச் செய்தி சென்று சேரும் விதமாக இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

கேள்வி:- 6ம் திகதிதான் இணைந்து கொண்டதாகக் கூறினீர்கள்? ஏன் அப்படி?

பதில்:-  சர்வதேச மாநாடு என்பது புத்தக வெளியீட்டு விழா நடத்துவது மாதிரி அல்ல. அது மிகக் கடுமையான பணி. நாம் முதலில் 2002ல் நடத்திய மாநாட்டுக்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆக பத்து வருடங்கள் வயது கழிந்து விட்டது. இது ஒரு சிரமமான காரியம். எனவே ஒதுங்கியிருந்து ஆதரவு வழங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆய்வரங்கொன்றில் ஒரு கட்டுரை சமர்ப்பிப்பதுடன் என்னுடைய பங்கை மட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்றிருந்தேன். அத்துடன் இந்த மாநாடு ஒற்றைப்பரிமாண அரசியலுக்குள் சிக்கியிருப்பதாகவும் ஒரு எண்ணம் மனதில் இருந்தது.

ஆனால் கௌரவ. அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் என்னை அழைத்து இம்மாடு பற்றி வெகு தெளிவாகச் சில விளக்கங்களை வழங்கினார். சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைப்பதுடன் சகல முஸ்லிம் கலை இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைப்பது என்பன போன்ற சமூக ஒற்றுமைக்கு வழிகோலும் முனைப்பை வெளிப்படுத்தினார். எனவே யாரும் ஒதுங்கிச் செல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அவரது நல்லெண்ணம் எனக்கு உவப்பாக இருந்தது.

எல்லா முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைத்து தொடர்ந்து இலக்கியத்திலும் சமூக நலன்கருதும் தளத்திலும் செயற்படுவோம் என்றும் அவர் தலைமை வகிக்க ஏனைய முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்கள் பிரதித் தலைமை வகிக்க என்னைச் செயலாளராக இருந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். எனவே இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளின் ஒன்றியம்தான் இந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை முன்னெடுத்துச் செல்லும்.

கேள்வி:- ஆனால் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை அல்லவா?

பதில்:- தர்க்கத்துக்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இங்கே ஒன்றுபடுகிறார்கள் என்பது அவதானிக்கத்தக்கது. அப்படியே அரசியல் நலன் இருந்தாலும் கூட ஓர் இலக்கியவாதி என்ற முறையில் இலக்கியத்தை முற்படுத்தும் ஒரு பெருவிழாவுக்கு ஒத்துழைப்பது முக்கியமல்லவா? ஒத்துழைக்காவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கியிருப்பது மேல் அல்லவா?

பாருங்கள்.. 1979ல் இவ்வாறான ஒரு மாநாடு நடந்தது. அப்போது அல்ஹாஜ் பாக்கிர் மாக்கார் துணை நின்றார். அது முடிந்து இருபத்து மூன்று வருடங்கள்.. ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்குப் பிறகு இந்த மண்ணில் ஒரு மாநாடு நடந்தது. அதுவும் உலகத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் ஒரு நாட்டு அரசின் அனுசரணையோடு நடந்த முதல் மாநாடு. அம்மாநாடும் கௌர. ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் நடந்தது. அதன்பிறகு பத்து வருடங்கள் சென்று விட்டன. இப்போதும் அரசியல்வாதிகளின் முன்னெடுப்பில்தான் நடைபெறுகிறது.

இந்த நாட்டு முஸ்லிம் புத்தி ஜீவிகளுக்கும், படிப்பாடிகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும், 'நீங்கள் மாநாட்டை நடத்துங்கள், நாங்கள் பொருளுதவி புரிகிறோம்' என்று எந்தச் செல்வந்தரும் உதவிபுரிந்தது கிடையாது. ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கான பெருந்தொகைப் பணத்தைத் திரட்ட அரசியல்வாதிகளால்தான் முடிகிறது. எனவே, இலக்கியப் படைப்பாளி என்ற வகையில் நமக்கு அவர்கள் பெரும் உந்துதலாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

கேள்வி:- ஏன் அரசியல்வாதிகள் இலக்கியத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்?

பதில்:- இதில் மூடிமறைத்த இரகசியம் எதுவும் இல்லை. இலக்கியவாதிகளே ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துதான் இருக்கிறார்கள். இந்த இலக்கியவாதிகள் எல்லோரும் இணைந்தாலும் கூட ஒரு பிரதேச சபை அங்கத்தவரைக்கூடத் தெரிவு செய்ய முடியாது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலக்கியவாதிகள்தாம் ஒரு சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் எழுதிச் செல்கிறார்கள் என்பதை நமது அரசியல்வாதிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு மெச்சத்தக்க நிலை. இன்னும் நூறு வருடங்கள் கழிந்த பிறகு நமது வாழ்வியல் எப்படியிருந்தது என்பதை இன்று படைக்கப்படும் இலக்கியங்களை அடிப்படையாக வைத்தே வரலாறு குறிப்பெடுக்கும். ஹன்ஸார்டை மாத்திரம் கொண்டு ஒரு சமூகக் குழுமத்தின் வாழ்வியலைத் தீர்மானிக்க முடியாது. வரலாற்றை எழுத முடியாது. இலக்கியம்தான் ஜீவனுடன் அதை எடுத்துச் சொல்லும்.

கேள்வி:- இன்று இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான சவால்களுக்குள் இம்மாநாடு அவசியம் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- அவசியம்தான். சவால்கள் ஏதோ ஒரு வகையில் எப்போதும் இருக்கவே செய்கின்றன. இதே சவால்களுக்கூடேதான் திருமணங்கள் நடைபெறுகின்றன... எல்லா வகையான அமைப்புகளும் கூட்டங்களை நடத்துகின்றன. விழாக்கள் நடைபெறுகின்றன. ஏன்? நாட்டில் போர்க்காலத்திலும் நாம் இதையெல்லாம் செய்தோம்தானே! எனவே, ஓர் இலக்கிய மாநாட்டையும் அது போலவே நடத்திச் செல்வதில் என்ன பிழை இருக்கிறது?

Monday, April 8, 2013

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2013


எஸ்.எச்.எம். ஜமீல், கௌரவ. எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கௌரவ ரவூப் ஹக்கீம்.

இவ்வருடம் இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றை நடத்துவது பற்றிய கலந்துரையாடல் முழுநாள் நிகழ்வாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று 07.04.2013 அன்று கொழும்பு - 2 “தாருஸ்ஸலாம்” கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாடு பற்றிய அங்குரார்ப்பணக் கலந்துரையாடல் காலை அமர்வாக நடத்தப்பட்டது.


வரவேற்புரை நிகழ்த்தும் மணிப்புலவர் 
மருதூர் ஏ. மஜீத்

சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்தும் சகல முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புக்களை ஒன்றிணைத்தும் இம்மாநாட்டை நடத்துவது என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது தலைமையுரையில் குறி்ப்பிட்டார்.

இதற்காக அமைச்சர் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலை இலக்கிய  அமைப்புகளின்  ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக அஷ்ரஃப் சிஹாப்தீன் செயற்படுவார் என்றும்  நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கலை இலக்கிய அமைப்புகளின் தலைவர், செயலாளர்கள் இதன் அங்கத்தவர்களாக இயங்குவார்கள் எனவும் எதிர்கால ஒருமித்த இலக்கியச் செயற்பாடுகளையும் சமூக ரீதியான விடயங்களையும் இந்த அமைப்பு முன்னெடுத்துச் செல்லும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


தலைமையுரை நிகழ்த்தும் கௌரவ. ரவூப் ஹக்கீம்

இந்த அமைப்பின் பிரதித் தலைவர்களாக கௌவர. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் (அமைச்சர்). கௌரவ ரிஷாத் பதியுதீன் (அமைச்சர்), கௌரவ பஷீர் சேகுதாவூத் (அமைச்சர்) கௌரவ அல்ஹாஜ் ஏ.எச்எ.ம். அஸ்வர் (பா.உ) அவர்களும் உப தலைவராக கௌரவ ஹஸன் அலி (பா.உ) அவர்களும் செயற்படுவார்கள்.

மாநாட்டின் செயலணிக் குழுவின் தலைவராக டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் செயற்படுவதோடு குழுவில் மருதூர் ஏ. மஜீத், டாக்டர் தாஸிம் அகமது, கவிஞர் ரவூப் ஹஸீர், கவிஞர் அல் அஸூமத், என்.எம். அமீன், திருமதி புர்க்கான் பீ. இப்திகார், மர்ஸூம் மௌலானா, எம்.ஏ.எம். நிலாம், கவிஞர் யாழ் அஸீம், இம்ரான் நெய்னார் ஆகியோர் உள்ளடங்கியிருப்பார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர், இக்குழுவில் இன்னும் ஒரு சிலர் காலக் கிரமத்தில் ஒப்புதல் பெற்று இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு பொறுப்புக்களுக்கான குழுக்களில் மேலும் சிலர் ஒப்புதல் பெறப்பட்டு உள்வாங்கப்பட்டபின் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் அதன் பிறகு தமது பணிகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்தார். எதிர்வரும் தமிழ், தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் பின் குழுக்கள் அழைக்கப்பட்டுத் திட்டமிடற் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.


கௌரவ. எம்.எஸ்.எஸ். அமீர் அலி

கௌரவ. ரிஷாத் பதியுதீனின் பிரதிநிதியாக வருகை தந்த முன்னாள் அமைச்சரும் இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி உரையாற்றுகையில்,

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து செயற்படுவது அவசரமும் அவசியமுமாகும் என்றும் அதை கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களே முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு, அரசியல்வாதிகள் மாத்திரம்தான் சமூக விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்றிராமல் படைப்பாளிகளும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.


கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்

பேராசிரியர். கலாநிதி எம்.எஸ்எம். அனஸ் அவர்கள் தமதுசிறப்புரையில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட இனரீதியாக எதிர்கொண்ட சவால்களைக் கருப்பொருளாகக் கொண்டு காத்திரமான நாவல்கள் எதுவும் படைக்கப்படவில்லை என்றும் முஸ்லிம் சமூகம் இன்னும் தனது வரலாற்றைப் பதிவு செய்வது குறித்து எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்


கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன்

Monday, April 1, 2013

பிக்குகள் : கவனம்!




அனுராதபுர ஸியாரத்தில் ஆரம்பித்து தம்புள்ளை பள்ளிவாசல், ஹலால் விவகாரம், முஸ்லிம் பெண்களின் ஆடை, பகிரங்க மேடைகளில் இன விரோதத்தை விதைக்கும் பேச்சுக்கள் என்று பெப்பிலியான பெஷன்பக் கடை உடைப்பு வரை நடைபெற்ற மக்கள் விரோதச் செயற்பாடுகளில் பௌத்த பிக்குகள் பகிரங்கமாகச் செயற்படுவதை தௌ்ளத் தெளிவாக இலங்கை மாத்திரமன்றி முழு உலகமுமே பார்த்து வருகிறது.

சமூக விரோதச் செயற்பாடுகளில் நாட்டில் இனக்குரோதத்தைப் பரப்பி ஒரு கலவரத்தை உருவாக்க முயலும் காரியங்களில் ஈடுபடும் இந்தப் பிக்குகளுக்கு எதிராக குற்றங்களுக்காக சான்றுகள் இருந்தும் எந்த வகையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப் பிரிவில் 'தெயட்ட கிருள' வுக்கு எதிராக தெருவில் டயர் எரித்தார்கள் என்று இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

பௌத்த பிக்குகளுக்கு இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களிடம் மாத்திரமன்றி சிறுபான்மை மக்களிடத்தும் ஒரு மரியாதை இருந்து வருகிறது. பிக்குகளில் ஒரு சாரார் நடந்து கொள்ளும் விதம் காரணமாக கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளும் பிக்குகளும் கூட எதிர்காலத்தில் நாகரிக சமூகத்தில் அவமதிக்கப்படவும் அலட்சியப்படுத்தப்படவுமான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் கடைகளில் கொள்வனவு செய்யாதீர்கள் என்ற கோஷத்தை அவ்வப்போது பிக்குகள் முன்னெடுத்து வந்ததை மாணவப் பருவத்திலிருந்து நான் கண்டு வந்திருக்கிறேன். இருந்து விட்டு அவ்வப்போது முஸ்லிம் கடைகளில் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவ்வப்போது மாட்டிறைச்சி மாடு அறுக்க வேண்டாம் என்றும் பிக்குகளே முன்நின்று துண்டுப் பிரசுரம் விநியோகிப்பார்கள். சில நாட்களில் அக்காட்சிகள் மறைந்து விடும்.

சிஹல உறுமய அமைப்பு கட்சியாகி அரசியலில் ஈடுபட்ட போது பொதுமக்களின் விருப்பமின்மை வெளிப்படுத்தப்பட்டது. சுகபோகமும் அரசியல் வாழ்வையும் துறந்த கௌதம சித்தார்த்தரைப் பின்பற்றுவோர் கௌதம சித்தார்த்தர் எதைத் துறந்தாரோ அதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்ற கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பல பிக்குகளைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பலர் சிறைகளில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசியல் முதற்கொண்டு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதெல்லாம் கௌதம சித்தார்த்தர் துறக்கச் சொன்ன பேராசையின் பாற்பட்டதென்பதை யாரால் மறுக்க முடியும்?