Friday, November 13, 2009

பாராட்டு நிகழ்வு








‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக அங்கத்தவர்கள் நடத்திய பாராட்டு நிகழ்வின் போது அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மருதூர் ஏ மஜீத், தாஸிம் அகமது. கலைவாதி கலீல் எம்.ஏ.எம்.நிலாம், அஸீஸ் நிஸாருத்தீன், நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், எம்.சி. ரஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Sunday, November 8, 2009

புதிய இரு நூல்கள்

தீர்க்க வர்ணம் - பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு, ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை - பயண அனுபவங்கள் ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு - 9, தெமட்டகொடவீதியில் உள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸில் இவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Thursday, September 17, 2009

தப்பித்து வாழ்தல்

பயங்கரத்தை எனக்கு உணர்த்திய முதலாவது குண்டு 1983ம் ஆண்டு வெடித்தது. அப்போது யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி மாணவனாக இருந்தேன். தின்னவேலி என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற திருநெல்வேலிச் சந்தியில் அந்தக் குண்டு வெடித்தது. 13 இலங்கை இராணுவத்தினரைப் பலி கொண்ட அக்குண்டு வெடிப்புத்தான் கறுப்பு ஜூலை என அறியப்பட்ட தமிழர்களுக்கெதிரான பெரும்பான்மையின் வெறியாட்டத்துக்குக் காரணமாயமைந்தது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நடந்த தாக்குதல் அது என்று பிற்காலத்தில் சிலர் சொல்லக் கேட்டும் எழுதப் படித்தும் இருக்கிறேன். கலாசாலையில் அக்குண்டு வெடிப்புப் பற்றி வௌ;வேறு விதமான கருத்துக்களையும் கதைகளையும் அங்கு கற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நண்பர்கள் சொன்னார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட இட்டுக் கட்டப்பட்ட பெரும் பொய் என்னவெனில் அந்தச் சம்பவத்தில் படுகொலையான பதின்மூன்று இராணுவச் சிப்பாய்களும் ஒரு தமிழ் யுவதியைக் கற்பழித்தவர்கள் என்பதுதான். ஒவ்வொருவரும் இஷ்டத்துக்குச் சார்பாகவும் எதிராகவும் கருத்துக்களையும் கதைகளையும் பேசினார்கள் என்பதற்கு இந்தக் கற்பழிப்புக் கதை உதாரணம்.
இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் முழு நாடும் ஸ்தம்பித்தது. நானும் எனது ஊர் நண்பரும் இரண்டாவது தினம் மன்னாருக்குச் சென்று அங்கிருந்து அடுத்த தினம் அனுராதபுரம் வந்து பொலன்னறுவை வந்தடைந்தோம். அச்சத்துடன் நாம் மேற்கொண்ட இந்தப் பயணம் வாழ்நாளில் மறக்க முடியாதது. பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள அடுத்த ஊரான மன்னம்பிட்டிக்கு வந்தவுடன் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் பயணம் தடைப்பட்டது. இப்போது நகரமாகி வரும் மன்னம்பிட்டி அந்நாளில் வெறும் காடு. அந்த ஊரில் உள்ள சின்னஞ்சிறிய பள்ளிவாசலுக்குள் இரண்டு இரவுகளை நாம் கழிக்கவேண்டியிருந்தது. பகல் பெழுதுகளைக் காட்டில் மேய்ந்து திரிந்தோம். மூன்றாவது நாளே ஊருக்குச் செல்ல முடிந்தது.
1984ம் ஆண்டு துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட மற்றொரு அனுபவம் கிடைத்தது. அவ்வாண்டின் விளையாட்டு விழாவில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்களை அச்சிடுவதற்கு யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஓர் அச்சகத்தில் கொடுத்திருந்தோம். பிற்பகல் 2.00 மணிக்கு விழா ஆரம்பமாகவிருந்த நிலையில் காலையில் அவற்றை எடுத்து வரும் பொறுப்பு விளையாட்டு நிகழ்வுகளின் செயலாளர் என்ற வகையில் எனக்கிருந்தது. சரியாகப் பத்து முப்பதுக்குச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்த போது துப்பாக்கிச் சன்னங்கள் பறந்தன. இராணுவத்தினரையோ போராட்டக் குழுக்களையோ அந்த இடத்தில் நான் காணாத போதும் எனக்கு முன்னால் ஒரு சுற்றுச் சன்னங்கள் தெறித்தன. அவ்விடத்தில் நின்ற தனியார் பஸ் ஒன்று பின்பக்கமாக வேகமாக நகர, அதிலிருந்த பையன் “அண்ணே ஓடி வாருங்கோ” என்று என்னைப் பார்த்துக் கத்தினான். ரிவர்சிலேயே ஓடிய பஸ்ஸில் தாவி ஏறித் தப்பிக் கொண்டேன்.
அதற்குப் பிறகு நடந்தது காத்தான்குடிப் பள்ளிவாசல்களின் படுகொலை. எனது இரண்டாவது தாய்மாமாவின் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளியிருந்தது ஹ_ஸைனியா பள்ளிவாசல். படிக்கும் வயதில் விடுமுறை காலத்தில் மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது இந்தப் பள்ளிவாசலில் மஃரிபுக்கும் இஷாவுக்கம் நான்தான் பாங்கு சொல்லுவேன். 1990ம் ஆண்டு மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு நாள் மஃரிபுத் தொழுகைக்கு வந்த 98வீதமானவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. அந்தப் பிரதேசத்தைச் சூழ மாமாவின் மனைவி குடும்பத்தினர்தான் வசித்தார்கள். பாங்கு ஒலித்தால் எட்டி நடைபோட்டுப் பள்ளிக்குள் வந்து விடுவார்கள். முஸ்லிம்களைப் போல் தொப்பி அணிந்து வந்த விடுதலைப் புலிகள் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு கைக்குண்டை வீசி வெடிக்கச் செய்து விட்டு தொழுதுகொண்டிருந்தோர் மீது யன்னலுக்குள்ளால் துப்பாக்கி நீட்டிச் சுட்டுத் தள்ளினார்கள். மாமாவுக்கு ஒரு கை வழங்காது. தனது மற்றக் கையினால் தனது ஆறு வயது மகனை அணைத்தபடி கிடந்த மையித்துக்களின் புகைப்படத்தை நான் பார்த்தேன். அந்தக் கால கட்டத்தில் எந்த ஒரு முஸ்லிமாலும் தமிழ்ப் பிரதேசத்தை ஊடறுத்துப் பயணிக்க முடியாது. சம்பவம் நடந்து அடுத்த தினம் கொழும்பில் தரித்திருந்த மாமாவின் மூத்த மகன் நல்மனமுள்ள அரசியல்வாதிகளின் உதவியுடன் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் அங்கு போய்ச் சேர்ந்தான். மையித்துக்களையும் அவற்றைப் பள்ளிவரை கொண்டு அடக்கம் செய்ததையும் ஒளிப்பதிவு செய்திருந்ததை அவன்தான் எனக்குக் கொழும்புக்குக் கொண்டு வந்து காட்டினான். நல்லடக்கத்தின் போது மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த ஜனாஸாக்களின் கபன் புடவைகளைத் தாண்டி இரத்தம் வழிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். மையித்துக்களைத் தூக்கிய அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.
பிறகு 1992ம் ஆண்டு டிஸம்பரில் எமது பிரதேசமே கலங்கிய சம்பவம் நடந்தது. கொழும்பில் வசித்த நான்; குடும்பத்தோடு கதிர்காமம் சென்று அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் (சனக் கூட்டம்) அன்றிரவே திரும்பியிருந்தோம். வீட்டுக்கு வந்து வாகனத்தை நிறுத்தும் போது எனது நண்பர் ஒருவர் நின்றிருந்தார். எனது கடைசித் தாய்மாமன் மற்றொரு தாக்குதலில் அன்று காலை அதே இடத்திலேயே மரணமடைந்த செய்தியை எனக்குச் சொன்னார். எமது பிரதேசத்தின் மீது அச்சத்தையும் உச்சகட்ட அடக்கு முறையையும் ஏற்படுத்துவதற்காக தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப் புறப்பட்டவர்கள் செய்த நிகழ்வு அது.
அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஆறுபேர். மேலதிக அரச அதிபர் (இந்தியாவில் கலெக்டர்) வை.அகமது (இவர் ஓர் பிரபல்யம் பெற்ற எழுத்தாளரும்கூட), அரசாங்க அதிபர் உதுமான், சட்டத்தரணி முஹைதீன் (எனது சகோதரனின் மனைவியின் சாச்சா), பாடசாலை அதிபர் மகுமூது (எனது கடைசித் தாய்மாமன்), சாரதி மகேந்திரன், கொலைகளைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தமைக்காகக் கொல்லப்பட்ட மற்றொருவர் சாஹ_ல் ஹமீத்(விறகு சேகரித்து வாழ்க்கை நடத்துபவர்) ஆகியோர். இவர்களில் கடைசி நபர் தவிர்ந்த ஏனையோர் மாருதி ஜிப்ஸியில் சென்று கொண்டிருந்த போது மீயான்குளச் சந்தியில் கண்ணிவெடி மூலம் ஜீப்பைப் புரட்டி கீழே விழுந்தவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர்.
நான் அடுத்த நாள் மதியம் ஊர் போய்ச் சேருவதற்குள் மையித்துக்களை அடக்கியிருந்தார்கள். மாமாவின் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்ததாகவும் ஒரு கால் உடைக்கப்பட்டிருந்ததாகவும் எனது மச்சான் சொன்னார். மேலதிக அரச அதிபராக, அரச அதிபராகவெல்லாம் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்ற விடுதலை வீரர்களின் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்தக் கொலைகள் நடைபெற்றதாகப் பேசப்பட்டது. இதற்கு முன்னரும் இப்றாஹீம், ஹபீப் முகம்மத் ஆகிய அரச அதிபர்கள் காரணமின்றிக் கொலை செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நான் கொழும்பில் கற்பித்துக் கொண்டிருந்த காலப்பிரிவில் என்னுடன் ஒரே பாடசாலையில் கற்பித்த இரண்டு ஆசிரிய நண்பர்களும் குண்டுகளில் அகப்பட்டிருக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிவிட்டார்கள். கொழும்பு புறக் கோட்டையில் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் வெடித்துப் பெரும் இழப்பை ஏற்படுத்திய குண்டில் அகப்பட்டவர் மாவனல்லையைச் சேர்ந்த காமில். முகத்தில் ஆங்காங்கு ஏற்பட்டிருந்த பள்ளங்களில் பிளாஸ்ரிக் ஸர்ஜரி செய்து சதைத் துண்டங்கள் பொருத்தப்பட்டிருந்ததை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சென்று பார்த்தேன். மற்றையவர் கொழும்பில் என்னுடன் கற்பித்த, என்னுடன் ஒரே போர்டிங் ஹவுஸில் (லாட்ஜ்) தங்கியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஹகீம். அரசியல் கூட்டம் பார்க்க என்னையும்தான் அழைத்தார். எனக்கு சனக் கூட்டமென்றாலே அலர்ஜி. தவிர அவர் போகும் போது கூட எச்சரித்தே அனுப்பினேன். கூட்டம் பார்;க்கப் போனவர் திரும்பி வரவில்லை. தேடினால் முதுகில் காயமேற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதுகுப் பக்கமாகத் துளைத்த வெடிகுண்டின் ஒரு துண்டுத்தகடு இதயத்துக்கு அருகில் உள்ள எலும்பில் தடையாகி நின்றிருந்ததை மருத்துவர்கள் சொன்னார்கள். பிறகு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சத்திர சிக்கிச்சை செய்து அதனை வெளியே எடுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.
இவ்வாறு உள்நாட்டு யுத்த காலத்தில் இழப்புக்களைச் சந்தித்த பலர் இந்நாட்டில் இருக்கிறார்கள். தமிழர் விடுதலைக்குப் புறப்பட்ட ஆயுதமேந்திய இளைஞர்கள் பெரும்பான்மை சிங்கள அரசுடன் ‘அடக்குமுறையிலிருந்து விடுதலை’ என்ற கோஷத்துடன் போராடிய அதே சமயம் ‘சிறுபான்மை முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி வைப்பது’ என்ற ரகசியக் கோஷத்துடனும்தான் இயங்கினார்கள். பெரும்பான்மைச் சிங்களவரால் முஸ்லிம் சமூகத்துக்கு ஒருவீத பாதிப்பு என்றால் மீதி முழுவதையும் நிரப்பிப் புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் தமிழர் விடுதலை இயக்கங்களில் இருந்தவர்களே. சிங்களப் பிரதேசத்துக்குள் நாளின் எந்த வேளையிலும் போய் வர முடிந்த முஸ்லிம் ஒருவரால் ஒரு தமிழ் ஊருக்குள் பகலில் கூட சென்று திரும்ப முடியாத நிலை நீண்ட காலம் இருந்திருக்கிறது என்றால் அது எவ்வாறான அடக்குமுறை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த தமிழரான சக மூத்த ஒலிபரப்பாளர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தை நினைவு கூர்ந்தார். யாழ்ப்பாணத்தில் தனக்கு நீள் காற்சட்டை (பேண்ட்) தைத்துத் தரும் டைலரான முஸ்லிம் நண்பரைத் தற்செயலாகக் கண்ட போது தனக்;குக் கண்ணீர் வந்து விட்டது என்று சொன்னார். காரணம் அவரது டைலர் நண்பர் 24 மணிநேர அவகாசத்தில் புலிகளால் துரத்தப்பட்டவர் என்பதுதான். நான் நண்பரை எதிர்கொள்ள மிகவும் சங்கடப்பட்டேன் என்று சொன்னார். இவ்வாறான நல்ல உள்ளங்களும் தமிழர்களில் இருக்கவே செய்கின்றனர். அதே Nவைளை புரிய முடிந்த அநியாயங்களையெல்லாம் புரிந்து விட்டு ஐரோப்பாவில் அகதியாகப் போயிருந்து கொண்டு சமூக நீதியும் விளிம்பு நிலை மக்கள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்போரும் உள்ளனர். அதற்கு அவர்களது எழுத்துக்களே சாட்சி. குண்டு வெடிப்புப் பற்றிப் பேச ஆரம்பித்த நான் வேறு எங்கோ போய் விட்டேன் போலத் தெரிகிறது. 10.03.09 அன்று தென்னிலங்கையில் கொடப்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் தேசிய மீலாத் விழா நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போது வெடித்த குண்டுதான் கடைசியாக இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடைசிக் குண்டு. இந்தக் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய எனது சகோதரரும் ஏனைய அமைச்சர்களும் தங்களை சுதாகரித்துக் கொண்டு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்றார்கள். அங்கும் ஒரு தற்கொலைதாரி நின்றிருந்தார் என்பது இவர்களுக்குத் தெரியாது. முதலாவது குண்டில் அமைச்சர்கள் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது அவர்களைப் பார்ப்பதற்காக ஜனாதிபதி அங்கு வருகை தருவார். அவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக மற்றொரு தற்கொலைதாரியைப் பயன்படுத்துவது விடுதலைப் புலிகளின் திட்டமாக இருந்தது. அமைச்சர்களில் ஒருவர் தவிர வேறுயாரும் காயமடையவில்லை என்பதாலும் இரண்டாவது குண்டுதாரி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாலும் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதுவே இறுதித் தற்கொலைக் குண்டாகவும் இருந்தது. இரண்டாவது தற்கொலைதாரி கைது செய்யப்பட்ட விடயம் சம்பவம் நிகழ்ந்து சிலவாரங்களுக்குப் பின்னரே ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இங்கே நான் குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளும் தாக்குதல்களும் எனக்கும் எனது உறவினர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் தொடர்பானது. என்னைப் போல அனுபவங்களைப் பெற்றவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். இந்தக் கால் நூற்றாண்டுக்குள் வெடித்த துப்பாக்கிக் குண்டுகளிலும் துப்பாக்கி ரவைகளிலும் தமிழ் விடுதலை இயக்கங்களின் கடத்தல்களிலும் தப்பி இன்னும் உயிர் வாழ்வது கூட ஒரு கொடுப்பினை என்றே கருதுகிறேன்.
18.08.2009

அரச சாஹித்திய தேசிய விருது















2008ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுதிக்கான அரச சாஹித்திய தேசிய விருது ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ நூலுக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த 14.09.2009 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற விழாவின் போது இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

Monday, August 24, 2009

Sunday, August 16, 2009

டல் கோப்பி


கஞ்சாக் கோப்பிக்கு ‘டல் கோப்பி’ என்றும் ஒரு பெயர் உண்டு.
கஞ்சாக் கோப்பித் தூள் இடிப்பது ஒரு தனிக் கலை. அதைப் பானமாக தயாரிப்பது, கஞ்சாச் சுருட்டுச் சுற்றுவது, ஈரலுடன் கஞ்சா சேர்த்து ‘பங்கு’ அவிப்பது (இதற்குத் தென் பகுதியில் வேறு பெயர் உண்டு) ஆகியனவெல்லாம் கூட தனித் தனிக் கலைகளே. இப்படியெல்லாம் நான் எழுதுவது கொண்டு கஞ்சாவுக்கும் எனக்கும் எந்த விதத்திலாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று நீங்கள் கற்பனை பண்ணிக் கொள்ளக் கூடாது. எல்லாம் ஒரு கேள்வி ‘ஞானம்’ தான்.
1983ம் வருஷம் நான் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தேன். வாழும் போது துன்பம் மிக்கதாக இருந்த போதும் பிற்காலத்தில் நினைக்க நினைக்க இனித்துக் கொண்டே இருப்பது விடுதி வாழ்க்கை. அங்கு நடந்த ஒரு சம்பவத்தைத்தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
கலாசாலையின் எங்களது விடுதி அறைக்குள் நான்கு பேர் மாத்திரம்தான் தங்க முடியும். ஆனால் அதற்குள் ஏழுபேர் தங்கியிருந்தோம். பெட்டிகள்தாம் அறைக்குள் இருந்தன. கட்டில்கள் யாவும் விறாந்தையில் கிடந்தன. சீட்டு விளையாடுதல், பீடி, சிகரட் புகைத்தல், கிண்டல் பண்ணுதல், தெருக் குறள் சொல்லுதல், கைவாறடித்தல், இரவில் மோட்டு வளை ஏறிப் புறாப் பிடித்தல், வீடியோ படக் காட்சிகளுக்குச் செல்லுதல் போன்ற இன்னோரன்ன விஷேட பண்புகளுடன் நாங்கள் வாழ்ந்து வந்தோம். மஸ்கெலியா, குருநாகல், மாத்தளை, மன்னார், சம்மாந்துறை ஆகிய ஊர்களைச் சேர்ந்த நண்பர்களுடன் நானும் எனது ஊரைச் சேர்ந்த எனது சினேகிதனும் அந்த விடுதியறைக்குள் குடியிருந்தோம். இந்த எழுவரில் எனது ஊர் நண்பர்; விவசாயத் துறையைச் சேர்ந்தவர். மன்னாரைச் சேர்ந்த நண்பர் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்தவர். நான் உட்பட மீதி அனைவரும் உடற்கல்வித் துறையில் பயிற்சி பெறுபவர்கள். தமிழ் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதங்கள் மும்முரமாகப் பேசத் தொடங்கிய காலம் அது. எங்களது விடுதி அறைக்கு ‘புதிய பலஸ்தீனம்’ என்று பெயர் சூட்டிக் கரித்துண்டால் எழுதியும் வைத்திருந்தேன்.
எங்களது உடற் கல்வி செய்முறைப் பாடத்துக்கான விரிவுரையாளர் திரு. யதுகுலசிங் மிகக் கறாரான பேர் வழி. ஆனால் அதே அளவுக்கு அன்பானவர். யதுகுல சிங்கம் என்ற பெயரில் உள்ள கடைசி இரண்டு எழுத்துக்களையும் அவர் பயன்படுத்துவதில்லை. நாங்கள் அவரது பெயரைச் சுருக்கமாக அவரில்லாத சமயத்தில் ‘யது’ என்று மட்டும் பயன்படுத்துவோம். ஆசிரிய மாணவர்களுடன் தேனீர் அருந்த வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கான பணத்தை அவரே செலுத்துவார். மிகவும் கட்டுப்பாடான மனிதர் அவர். மாணவர்களுக்கு உடற் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்; மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் வேளையில் நீண்ட காற்சட்டையுடன் இருப்பதை விளையாட்டுத் துறைக்கே அவமானம் என்று கருதுபவர். திரு. யது பற்றி நீங்கள் இந்தளவுக்கு மட்டும் தெரிந்திருத்தல் போதுமானது.
நான் மேற்சொன்ன ஒன்று அல்லது இரண்டு சிறப்புப் பண்புகளுடன் நாங்கள் அனைவரும் களித்திருந்த ஒரு இனிய பொழுதில் ‘கஞ்சாக் கோப்பி’ பற்றிய கதை வந்தது. ஒரு நண்பர் ‘நான் எத்தனை கோப்பி வேண்டுமானாலும் குடிப்பேன் எனக்கு எதுவும் ஆகாது’ என்று சவால் விட்டார். ஆனால் சவாலை நிறைவேற்றுவதற்குக் கஞ்சாக் கோப்பிதான் இல்லை. இருந்தாலும் மற்றொரு நண்பர் தான் ஊர் சென்று திரும்பும் போது கொண்டு வருவதாகவும் சவால் விட்டவர் குடித்தே ஆக வேண்டும் என்றும் கூற சபை முழுமனதாக ஏற்றுக் கொண்டது. இந்த விடயம் இத்தோடு கைவிடப்பட்டு விடும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.
திருவாளர் எக்ஸ் அவர்கள் இன்றிரவு ‘டல் கோப்பி’ அருந்துவார்’ என்ற தகவலை நண்பர்கள் திடீரென ஒரு சந்தியா காலப் பொழுதில் வெளியிட்டார்கள். இரவுப் பொழுது கதன குதூகலமாக இருக்கப் போகிறது என்பதால் பெருநாள் புதினம் பார்க்க அழைத்துச் செல்ல வாக்களிக்கப்பட்ட ஒரு சிறுவனின் ஆர்வத்துடன் நான் இருந்தேன். இந்த இடத்தில் திருவாளர் எக்ஸைப் பற்றிச் சிறிது நான் சொல்லியாக வேண்டும்.
எம்மிடம் உள்ள கிண்டல் என்கிற சிறப்புப் பண்பை எங்களுக்குள்ளே ஒருவருக்கு அதிகம் பயன் படுத்தினோம் என்றால் அவர் திருவாளர் எக்ஸாகத்தான் இருக்கும். அவர் உயரத்திலும்; சற்றுக் குறைவானவராக வேறு இருந்தார். ஒரு நாள் உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்த போது பந்தைத் துரத்திச் சென்ற எக்ஸ் ஓடிப் போன வேகத்தில் பந்தை நிறுத்த முடியாமல் பந்துக்கு மேலே ஏறிச் சறுக்கி விழுந்த போது அடக்கிக் கொள்ள முடியாமல் வயிறு வலிக்கச் சிரித்தோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை ஞாபகப்படுத்திக் கிண்டலடித்துச் சிரித்துக் கொண்டேயிருந்தோம். காலையில் அவனவன் பல்பொடிக்கும் பற் பசைக்கும் அலைந்து திரியும் போது முகத்துக்கு ஷேவிங் கிறீம் பயன்படுத்தி முகச் சவரம் செய்யும் அதிசய பிராணியாக அவர் விளங்கினார். அந்த வயிற்றெரிச்சலில் அவர் முகச் சவரம் பண்ணும் போதெல்லாம் மற்றொரு நண்பர் அவரைப் பார்த்து ‘கிறீம் போட்டு சிரைக்க மட்டுந் தெரிஞ்சாப் போதாது மாஸ்டர். கோர்ஸ் முடிஞ்சு போறத்துக்குள்ள பந்தை நிப்பாட்டப் பழகிக்கிங்க...’ என்று தொடர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டேயிருப்பார். ஆனால் அவரை இந்த வார்த்தைகள் எதுவும் சோதிப்பதில்லை. ‘உன்னை நான் கணக்கிலேயே கொள்ளவில்லை’ என்கிற தினுசில் தன் காரியத்தில் கண்ணாயிருப்பார். சில வேளைகளில் ஒற்றை வசனத்தில் பதில் சொல்லி வாளாதிருப்பார்.
இரவு உணவுக்குப் பிறகு ஒரு நண்பர் நீர் கொதிக்க வைத்துக் கொடுக்க, மற்றொருவர் கஞ்சாக் கோப்பிச் சரையைக் கொடுக்க தானே கலந்து கொள்ளப்போவதாகச் சொல்லி சரையைப் பிரித்து நீருக்குள் கொட்டி விட்டு மற்றொரு சரையையும் கேட்டு வாங்கி அதையும் பிரித்துக் கொட்டிக் கலக்கினார். சீனியை அதிகம் போட்டால் போதை அதிகரிக்கும் என்பதாலும்;; கஞ்சாக் கோப்பித் தூள் அதிகம் பயன்படுத்தப்படுவதாலும்; சீனியின் அளவைக் குறைக்குமாறு கஞ்சாக் கோப்பி பற்றி விஞ்ஞான விளக்கம் தெரிந்து வைத்திருந்த ஒரு நண்பர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவர் சொன்னதற்காக மேலதிகமாக ஒரு கரண்டிச் சீனியை இட்டுக் கலக்கினார் திருவாளர் எக்ஸ். ஒரு மிடறு குடித்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுமாறு கோப்பையை என்னிடம் அவர் நீட்டிய போது நான் பயத்தில் பின்வாங்கினேன். இருவர் அருந்தும் தேனீர் அளவு கோப்பியை ரசித்து உறிஞ்சிக் கொண்டிருக்க நாமோ இரவில் எக்ஸ் எவ்வாறெல்லாம் பேசப் போகிறார் என்று கற்பனை செய்து சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தோம். தாக்கம் உடனே ஏற்படுமா அல்லது தாமதித்து ஏற்படுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவின. ‘எனக்கு எதுவுமே ஆகாது’ என்று சொல்லியபடி கோப்பியை அவர் குடித்து முடித்தார். அவர் எந்த நிமிடத்திலும் அர்த்தமில்லாமல் சிரிக்க ஆரம்பிக்கலாம் என்பதால் அதை எதிர்பார்த்து அன்றிரவு நாங்கள் சீட்டாடாமல் காத்திருந்தோம். இரவு 9.00 மணி. எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. 10.00 மணி. எந்த வித சமிக்ஞைகளும் புலப்படவில்லை. 10.30க்கு திருவாளர் எக்ஸ் தனது கட்டில் விரிப்பை நாம் அமர்ந்திருந்த பக்கம் பார்த்து உதறி விட்டு தன் பாட்டில் போர்த்திக் கொண்டு படுத்து விட்டார்.
கோப்பியடித்தவருக்கு எதுவும் ஏற்படாத எரிச்சலும் அதை நம்பி சீட்டாடாமல் காலத்தை வீணடித்த கவலையும் ஒன்று சேர ஏமாற்றத்துடன் 11.00 மணிக்கு நாங்கள் படுக்கையில் விழுந்தோம்.
நள்ளிரவில் நித்திரையைக் கலைத்த அந்தச் சத்தம் கனவில் கேட்டது அல்ல என்பதை படுத்த கட்டிலில் எழுந்து நின்றிருந்த திருவாளர் எக்ஸைப் பார்த்த போதுதான் புரிந்தது. அதுவும் சில கணங்கள்; கழிந்த பிறகு. வசந்த மாளிகை சிவாஜி கணேசனைப் போல் படுக்கை விரிப்பைத் தோளில் போட்டபடி நின்றிருந்தார். “டேய்.. எல்லாரும் எழும்புங்கடா...” அவரிடமிருந்து ஆணை பிறந்தது. “மருமவனுக்கு கஞ்சாக் கோப்பி வேலை செய்யுதுடா...” என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தார் எங்களால் ‘மாமா’ என்று அழைக்கப்படும் நண்பர். “என்னடா இன்னம் படுக்கிறீங்க... ஐஸே... நான்தான் யதுகுல சிங். பிரக்டிகலுக்கு ரெடியாகுங்க...கெதியா..” சத்தம் உயர்ந்தது.
எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள். நான் பேயறைந்தவனைப் போல் நின்றிருந்தேன். கஞ்சாக் கோப்பியை அதிகம் குடித்ததால் திருவாளர் எக்ஸ_க்குப் புத்தி பேதலித்து விட்டது என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தேன்.
“எல்லாரும் உடுப்பு மாத்துங்க...” - எக்ஸ் கட்டளையிட்டார். நண்பர்கள் சிரித்துக் கொண்டேயிருந்தார்கள். எக்ஸ_க்கு போதை அல்லது பைத்தியம் காலைக்குள் தெளியாவிட்டால் நம் கதி என்னவாகும் என்று சிந்தித்தேன். கஞ்சாக் கோப்பி கொண்டு வந்தது யார்? குடிக்கக் கொடுத்தது யார்? என்ற வினாக்களுக்குப் பதிலளிக்க நிர்வாகம் வரை மட்டுமல்ல, சில வேளை பொலீஸ் வரை போக வேண்டியிருக்கும். எக்ஸ் சொல்வதைச் செய்யாவிட்டால் சத்தம் உயரும். ரகளை பண்ணக் கூடும். விடுதியிலிருக்கும் அத்தனை பயிற்சி ஆசிரியர்களும் விழித்தெழுந்து விடுவார்கள். நாளை விடிந்தால் நாறிப் போய் விடுவோம். சத்தம் இன்னும் கொஞ்சம் உயருமாக இருந்தால் லேடீஸ் ஹொஸ்டலிலிருந்து ஒரு பெண்கள் படை புறப்பட்டு வந்து விடும். அப்படி வந்தால் எக்ஸை மட்டுமல்ல நம்மையும் சேர்த்தல்லவா கஞ்சாக் காரனாக நினைப்பார்கள். என் மீது அன்பு வைத்திருக்கும் அதிபருக்கு முன்னால் இவ்வாறான ஒரு நிலையில் நிற்பதைக் கற்பனை பண்ணிப் பார்க்கக் கூட முடியாதவனாக இருந்தேன். ஒரே ஒரு தெரிவுதான் என் முன்னாலிருந்தது. அது - எக்ஸ் என்ன சொன்னாலும் செய்து விடுவது!
சிரித்துக் கொண்டேயிருந்த நண்பர்கள் மீது சீறிப்பாய்ந்தேன். எக்ஸ_க்குப் போதை தெளியவில்லை என்றால் என்னாகும் என்பதை எடுத்துச்; சொன்னேன். எக்ஸ் சொல்வதையெல்லாம் செய்து விட்டால் சற்று நேரத்தில் அடங்கி விடுவான் என்று அவர்களின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினேன். உடன் பட்டார்கள். எக்ஸ் அசல் யதுகுல சிங்காக மாறியிருந்தார். மைதானத்தில் பயிற்சிக்குச் செல்வதற்கான உடையை அணியச் சொல்லிப் பணித்தார். எல்லோரையும் அரைக் காற்சட்டை அணிய வற்புறுத்தினார். அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் அரைக் காற்சட்டையும் ரீ ஷேர்ட்டும் அணிந்து தயாராகி விட்டேன். தான் உடற் கல்விப் பயிற்சிக்குரியவன் அல்லன் என்பதால் அரைக் காற்சட்டை அணிய மாட்டேன் என்று எனது ஊர் நண்பர் பிடிவாதம் செய்ததால் அவர் உடுத்திருந்த சாறினை தார்பாச்சி கட்ட அனுமதித்தார். “இவங் கொள்ளையில போவான் ராத்திரில போட்டு இப்பிடிக் கரச்ச படுத்துறான்... நான் சயினஸ்; கோர்ஸ்.. இவஞ் சொல்ற மாதிரியெல்லாஞ் செய்ய மாட்டேன்...” என்று இடக்குப் பண்ணிய மாமாவைச் சமாளிக்க நான் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எப்போதும் கிண்டல் அரங்குக்குத் தலைமை வகிக்கும் மாமா ஆடை மாற்றியே ஆக வேண்டும் என்று விடாப் பிடியாக நின்றார் புதிய யதுகுல சிங். மறந்தும் கூட நாங்கள் வழமையாகப் பயன்படுத்தும் கலைச் சொற்கள் எதுவும் அவரது வாயிலிருந்து வெளிவரவில்லை. யதுகுல சிங் எப்படிப் பேசுவாரோ அப்படியே அவர் பேச்சு அமைந்திருந்தது.
ஒருவாறு உடைகளை மாற்றிய பின் உயர வரிசையில் (ஒரு வரிசையில் மூவர்) எம்மை நிறுத்தினார். பினனர்; ‘லெப்ட் - ரைட்” போடச் சொன்னார். வேறு வழி தெரியவில்லைபோடத் தொடங்கினோம். இடையிடையே கிளம்பும் வெடிச் சிரிப்பையும் தாண்டி வியர்வை வழிந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல ஏறக்குறைய 30 நிமிடங்கள்! எங்கள் நல்ல காலம் - அவர் அருகிலிருந்த மைதானத்துக்கு எம்மைக் கொண்டு செல்லாமல் அறைக்குள்ளேயே இதனை நடத்தியது.
அடுத்த நாள் காலை கஞ்சாக் கோப்பி அவரை எப்படி மாற்றியது என்பதைச் சொன்ன போது எதுவுமே அறியாதது போல் ‘தன்னை அது ஒன்றும் பண்ணவில்லை’ என்று சாதித்துக் கொண்டிருந்தார். நாங்கள் பழைய படி எங்கள் இன்னோரன்ன பண்புகளோடு வளைய வந்தோம்.
இச்சம்பவம் நடந்து இன்று 25 வருடங்கள் கழிந்து விட்டன. நாங்கள் வௌ;வேறு திசைகளில் பிரிந்து விட்டோம். கஞ்சாவின் போதையால்தான் அன்றிரவு அவஸ்தைப்பட நேர்ந்தது என்று நண்பர்கள் இன்று வரை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஞாபகம் வரும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை யாரிடமாவது சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கவும் கூடும்.
கலாசாலை பயிற்சி முடிந்து ஊருக்கு வரும் போதுதான் பஸ்ஸில் வைத்து ஊர்ச் சினேகிதர் சொன்னார்: ‘கோப்பி கொண்டு வந்ததே நான்தான். எக்ஸ் குடித்தது கஞ்சாக் கோப்பியல்ல. சாதாரண கோப்பிதான்!’

Tuesday, July 21, 2009

மருதமுனையின் வரலாறு

வரலாற்று நூலில் நயம் தேடுவது எப்படி என்ற கேள்வி எழுவதற்கு நியாயங்கள் உள்ளன.
திறனாய்வு அல்லது விமர்சனம் என்ற பெயரால் நூலாசிரியனை மனச்சிதைவுக்கு உட்படுத்துகிற அல்லது எழுத்தையும் எழுத்துலகத்தையும் விட்டு அவனை ஒழித்துக் கட்டச் செய்கிற எழுத்துலகப் பயங்கரவாதம் நீண்ட காலங்களாக நிலவி வந்திருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள். அப்பயங்கரவாதம் வேறு வேறு கோணங்களில் இன்றும் நிலவியபடியிருப்பதால் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் சம்பந்தப்பட்ட எங்களது நூல் வெளியீடுகளிலும் எம்முடன் இயைந்து செயல்படும் அன்பர்களின் நூல் வெளியீடுகளிலும் நூல் நயவுரை என்ற பதத்தை மாத்திரமே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
மருதமுனையின் வரலாறு என்ற நூலை எழுதியவர் ஒரு வரலாற்றாசிரியர் அல்லர். அவர் ஒரு மகாகவி. தமிழைத் துறைபோகக் கற்றவர். மொழிக்கு அவரும் அவருக்கு மொழியும் சேவகம் செய்யும் படி வாழ்ந்து மறைந்த மேதை. ஆகவே நயமில்லாத நூலாக இந்நூல் இருக்கப் போவதில்லை.
“மருதமுனைக் கிராமத்தின் வரலாறு இன்றுள்ள எவருக்கும் நன்கு தெரிந்திருப்பதாகத் தெரியவில்லை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் வாழ்ந்திருந்த பெரியார்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டனவும் எனது ஆய்வின் முடிவும் எனது சீவிய கால அனுபவமுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன” என்று கூறும் நூலாசிரியர் ஆதிக்குடியேற்றம், தொழில் முயற்சிகள், உடை, ஊர்ப்பரிபாலனம், விழாக்கள், இயற்கையின் சீற்றம், கல்வி (மார்க்கக் கல்வி), கலைகள், விளையாட்டுக்கள், வைத்தியம், இலக்கிய முயற்சிகள், வர்த்தகம், போக்குவரவு, தேர்தற் தொகுதி, அலியார்ப்போடி குடியின் வரலாறு ஆகிய பிரதான பதினைந்து தலைப்புகளில் எளிய தமிழ் நடையில் மருதமுனையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
புலவர்மணி அவர்கள் இதில் சொல்லியிருக்கும் அநேக விடயங்களில் 50 சதவீதமானவை இன்று 35வயதில் வாழ்பவர்களுக்கும் 70 சதவீதமானவை 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களுக்கும் 80 சதவீதமானவை 60 வயது தாண்டியவர்களுக்கும் தெரிந்தவையே. ஏனைய இருபது வீதமானவற்றை நாம் புலவர்மணியிடமிருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முப்பத்தைந்து வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் இந்நூலை வாசித்தால் அவர்களில் பலர் வியப்படைவார்கள். இந்நூலில் குறிப்பிடப்படும் சில அம்சங்கள் தமது பால்யத்தின் ஏதோ ஓர் இடத்தில் தேய்ந்தழியும் ஞாபகங்களைக் கிளறுவதுடன் சில காரண காரிங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்.
மருதமுனை மக்களைப் பொறுத்தவரை இந்த நூல் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது என்று அறுதியிட்டு உறுதியாக என்னால் கூற முடியும். மருதமுனையின் பிரதான குடிகள் மற்றும் அவர்களின் வழித் தோன்றல்களில் ஆகக் குறைந்தது ஒருவரது பெயராகிலும் இந்நூலில் எதாவது ஓரிடத்தில் இடம்பெற்றிருக்கும் என்று கருதுகிறேன். மருதமுனைக்கு அப்பால் இந்நூலை வாசிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாவண்ணம் புலவர்மணி ஆங்காங்கே பழமொழிகளையும் விடயங்களோடு சம்பந்தப்பட்ட பாடல்கள் சிலவற்றையும் தந்திருக்கிறார். நூலில் ஆங்காங்கே பழமொழி மற்றும் பாடல்களுடன் தரப்பட்டவற்றை முதலில் எடுத்துக் காட்டலாம் என எண்ணுகிறேன்.
01. மஸ்ஜிதுந்நூர் என்ற அவக்கலியப்பா பள்ளிவாசலையடுத்து பெரிய ஆலமரம் ஒன்றிருந்திருக்கிறது. ‘கடலுக்கிணக்கம் கப்பலும் பாய்மரமும் ஊருக்கிணக்கம் உயர்ந்த பள்ளிஆலமரம் என்று பாடல் பெற்ற ஆலமரம் அது.
02. வாழ்மனைகள் என்ற உப தலைப்பின் கீழ் வீடுகள் அந்தக்காலத்தில் கட்டப்படுவது குறித்து விளக்கம் தருகிறார் புலவர் மணி. நாள்பார்த்து நிலமெடுத்துக் கால் நாட்டுதல், வளையேற்றுதல், நிலை நாட்டுதல் எல்லாச் சடங்குகளும் வீட்டின் சரித்திரத்தில் நிகழும். சுவருக்கு நிலைக் கட்டையடித்து வரிச்சி பிடித்து, களிமண்ணைத் துவைத்துக் கட்டி நிரப்பி ஓட்டு மண் கொடுத்துப் பூசி மினுக்கிப் புற்று மண் கொண்டு மெழுகித் தீற்றி அழகு படுத்துவார்கள். பொன்னிடப் பொன்னிடப் பொண்ணுமிலங்கும் மண்ணிட மண்ணிட மாடமிலங்கும் என்ற கவிதைத் தொடர் இதற்காகத்தான் சொல்லப்பட்டது போலும்.
03. கதவெல்லாம் ஒற்றைக் கதவுதான். சில கதவுகள் குறுக்கே அரிந்து மேற்கதவு கீழ்க்கதவாகச் செய்திருந்தனர். அதற்குப் போர்க்கதவு என்றனர். ‘வாள்பூட்டிக் கதவறுத்து வாஞ்சையுடன் வீடுகட்டிப் போர்க்கதவும் போட்டுத்தாறேன் பொறுத்திடுகா மாமி மகன்’ என்பது சொந்தமாக வீடு கேட்டு மறுகும் மாப்பிள்ளைக்குத் தந்தையைக் கொண்டு செய்வித்துத் தர உறுதி கூறும் புதுப் பெண்ணின் சமாதானக் கவிதை.
04. பெரிய மரத்தை ஆறடித்துண்டுகளாகத் தறித்து அத்துண்டுகளைக் கவிந்த கொட்டுளியால் தோண்டிக் குழாய் ஆக்கிக் கொள்வர். மூன்று நான்கு குழாய்களைச் செய்து அவற்றை ஒன்றன் மேலொன்றாய் இணையச் சமைத்துக் கொள்வர். வீட்டு முற்றத்தில் நிலமெடுத்து நீர் காணும்வரை துரவு தோண்டி அடிக்கொட்டை நீருள் நிறுத்துவர். அது முற்றிலும் நீருள் அமிழும்படி இறக்குவர். அதை நீருள் இறக்கும் விதம் அலாதியானது. நீண்ட தடியொன்றில் மரத்தாலான குவிந்த பட்டையொன்றை ஏற்றி (திருப்பிப் பிடித்தாற் குடை போன்றிருக்கும்) ஆள் இறங்கி மண் எடுக்க ஒண்ணாத ஒன்றரை அடி விட்டமுள்ள அந்தக் குழாயுள் நிறுத்தி இடிக்க இடிக்க மண் பட்டையுள் ஏறும். ‘மரத்தைத் துளைத்து தண்ணீர் எடுப்பவன் மட்டக்களப்பான’; என அந்தக் காலத்தில் மரக் கொட்டுக் கிணறுகளைக் கண்ட யாழ்ப்பாணத்தார் சொல்லுவார்களாம்.
05. சீமெந்தினால் கிணறு கட்டத் தொடங்கியதும் சங்குவடம் நிறுத்தப்பட்டது. பீப்பாக்களில் வந்த வெளிநாட்டுச் சீமெந்தினால்தான் கிணறு கட்டப்பட்டது. ஒரு கிணற்றுக்கு ஒரு பீப்பா சீமெந்து போதும். காலைப் பசி தீர்த்தவரும் கன்னிகாதானம் முடித்தவரும் ஆழக்கிணறு போட்டவரும் அரிய சுவர்க்கம் புகுவரே என்பது பாட்டு.
06. அவரவர் வேலிப் பரண் கட்டி இரவு முழுவதும் விழித்திருந்து வயலைக் காவல் காக்க வேண்டும். இர வெல்லாம் விழித்திருந்த காவல்காரன் பகலில்தான் கண்ணயர்வான். அப்படிக் கண்ணுறங்கியவன் கண்ட ஒரு கனவைக் கேளுங்கள். காவற்பரனிலே கண்ணுறங்கும் வேளையிலே கண்ணான மச்சி வந்து காலூன்றக் கனவு கண்டேன்.
07. தாவளத்தில் ஏற்றிக் கொண்டு வந்த தானிய வகைகளை அடுத்துள்ள கிராமத்தவர்களும் வந்து வாங்கிக் கொண்டு போய் உபயோகித்திருக்கின்றனர். சோளம் வாங்க வந்த துறைநீலாவணைப் பெண்ணொருத்தி விலையைக் கேட்டு விட்டு தனது வயிற்றை நோக்கி சோளம் ஆறுபணம் சோனகத்தி விற்கும் விலை காந்தாதே என்வயிறே கண்ணாணை ஒன்றுமில்லை என்று பாடியிருக்கிறாள்.
08. சாதுரியம் உள்ளவர்கள் கவிமூலமும் செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள். தபால் தந்திப் போக்குவரவு இல்லாத காலமது. ஒரு பெண் தன் கணவருக்கு தனது மகள் பெரியவளான நற்செய்தியை அவர் இருக்குமிடத்துக்குப் போன காக்கா ஆதம் என்பவரிடம் ஆதங்காக்கா ஆதங்காக்கா அவரைக் கண்டால் சொல்லிடுகா மாதுவிளங்கன்னி மடல் விரிஞ்சி போச்சிதென்று... என்று கவிமூலம் சொல்லி அனுப்புகிறாள்.
2
ஆத்திமேடும் அதனைச் சூழவுள்ள நிலப்பரப்புமே மருதமுனையின் ஆதிக் குடியிருப்பு என்பதற்கு பத்து ஆதாரங்களைத் தந்து நிறுவுகிறார் புலவர்மணி. நெசவுத் தொழில் தெரிந்திருந்த முஸ்லிம்களுக்கு தாம் வாழ்ந்த துறை நீலாவணை கட்டாந் தரையாக இருப்பது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. அதே போல வாவியருகில் குடியிருப்பதன் மூலம் தமது மீனவத் தொழிலுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகின்றனர் மருதமுனையிலிருந்த தமிழ் மக்கள். எனவே இருசாராரும் ஒப்பந்தமொன்றைச் செய்து முஸ்லிம்கள் மருதமுனையிலும் தமிழர்கள் துறைநீலாவணையிலும் தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொள்கின்றனர். விலைக்கு நிலம் வாங்குவதோ உறுதிகள் எழுதுவதோ நடைமுறையிலில்லாத காலம் அது. இடமாற்றம் செய்வது இலகுவானதாக இருந்தது. இப்படித்தான் மருதமுனைக்கு முஸ்லிம்கள் வந்தார்கள் என்கிறார் நூலாசிரியர்.
இந்த நூலில் பல முக்கியமான தகவல்களை ஆண்டுக் கணக்கில் குறித்து வைத்திருப்பது புலவர்மணி செய்திருக்கும் அரிய செயலாகும். இவற்றில் சில ஆண்டு விபரங்களை நீங்கள் வேறு எங்குமே பெற்றுக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மருதமுனை பற்றிய ஒரு விபரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு புலவர்மணியின் இத்திகதிக் குறிப்பானது பெரிதும் உதவியளிக்கவிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
01. ஆங்கிலேயர் காலத்தில் 1830ம் ஆண்டுக்குப் பின்னர்தான் உப்புத் தண்ணீர்க்கட்டு எனப்படும் வரம்பு செய்யப்பட்டு வாவி நீரை உட்புகாமல் தடுத்து வயல் நிலமாக்கினர்.02. பழைய உறுதி சாசனங்களில் மதுரமுனை என்றே இவ்வூர் அழைக்கப்பட்டது. 1911ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் மருதமுனையென எழுதத் தொடங்கினர்.03. கல்லோயாப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டத்தில் 1952ம் ஆண்டு 4ம் 5ம் வட்டாரங்களில் மருதமுனை மக்கள் குடியேற்றப்பட்டனர். ஆனால் அநேகர் அதைக் கைவிட்டுத் திரும்பினர்.04. 1922ல் அரசாங்கத்தினால் யூ..சாலிகு லெவ்வையென்பவருக்கு இனாமாகக் கொடுக்கப்பட்ட தறியே மருதமுனை கண்ட முதல் விசைத்தறி ஆகும்.05. 1940ல் அரசு மருதமுனையில் நெசவுப் பாடசாலையொன்றை நடத்தியது.06. 1908ம் ஆண்டு முதல் தையல் இயந்திரம் கல்முனைக்குக் கொண்டுவரப்பட்டது.07. 1936ம் ஆண்டு வரை குத்பா அறிபியிலேயே ஓதப்பட்டது.08. 1937ம் ஆண்டு ஜனவரியில்தான் அரசு விவாகப் பதிவாளரை நியமித்தது. 09. 1952ல் புலவர்மணி பெரிய நீலாவணையில் குடியேறினார்10. 1815 வரை சிங்கள ஆட்சியாளர்களின் கீழேயே இப்பகுதி இருந்து வந்தது.11. 1927ல்தான் விதானைமாருக்கு சகாயப்பணம் வழங்கப்பட்டது.12. 1952ல் சனசமூக நிலையமொன்று புலவர்மணி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.13. 1927ம் ஆண்டுவரை வெள்ளிக் கிழமைகளில் ஜூம்ஆவுக்குப் போகும் வாய்ப்பு ஆசிரியருக்கோ மாணவருக்கோ இருக்கவில்லை.14. 1941ல் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது.15. 1925க்குப் பின்னரே உள்வீதிகள் அமைக்கப்பட்டன.16. 1948ல் மருதமுனை உபதபாற்காரியாலயம் அமைக்கப்பட்டது.
மருதமுனை மக்களைப் பற்றி அவர் சில இடங்களில் மனதைத் தொடக் கூடியவாறு குறிப்பிட்டிருப்பதைக் கட்டாயம் சொல்லியாக வேண்டும். இது மிகைப்படுத்தலல்ல என்பதையும் வேறு ஒரு இடத்தில் அவர் சொல்லியிருப்பதைக் கொண்டு தீர்மானித்துக் கொள்ள முடிகிறது.
01. மருதமுனையில் கிரிமினல் குற்றங்கள் நிகழ்வதில்லை. நயத்தாலும் பயத்தாலும் பிணக்குகளைச் சமரசஞ் செய்து வைப்பதே பொலிஸ் தலைமைக்காரரின் பணியாயிருந்தது. அதனால் வழக்குகள் கோர்ட்டுக்குப் போவதில்லை. மக்கள் அடக்கமுள்ளவராதலால் தத்தம் சுய தொழில்களைச் செய்வதில் உத்தியோகம் தடையாயிருக்கவில்லை.02. சமயப் பற்றும் சமூகப் பழக்கவழக்கங்களும் மருதமுனை மக்களோடு இரண்டறக் கலந்த பண்புகளாகும். அந்நியர் அச்சமின்றி நடமாடக்கூடிய ஒரு கிராமம் மருதமுனையெனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.03. மருதமுனை மக்களின் நடை, உடை, பாவனைகளெல்லாம் இவர்கள் தனியொரு வகுப்பார் என மற்றவர் களிடமிருந்து பிரித்துணரக்கூடியனவாகவேயிருந்தன. ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது சலாம் சொல்லும் வழக்கம் நிறைய இருந்தது. அப்படிச் சொல்லாதிருப்பது அநாகரிகமாகக் கருதப்பட்டது. இரவு வேளைகளில் எல்லா வீடுகளிலும் குர்ஆன் ஓதும் சத்தம் கேட்கும். 04. கடின உழைப்பும் சொற்ப ஊதியமும் பெற்று வாழ்ந்து வந்த மருதமுனை மக்கள் கஷ்ட ஜீவிகளாகவே சந்ததி சந்ததியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.05. நான் உயர்கல்வி கற்க முனைந்த போது தமிழைப் படிக்க வேண்டாம் எனத் தடையுத்தரவு போட்ட நம்மூர்ப் பெரியார்கள் பலர் என்னைத் தொடர்ந்து தமது பிள்ளைகளையும் தமிழில் உயர் கல்வி பெற அனுப்பி வைத்தனர்.
3
சில நூல்களை வேறு வழியின்றியும் சில நூல்களை அவசியம் கருதியும் நாம் படிப்பதுண்டு. படிக்க விரித்தோமானால் கீழே வைக்க முடியாமல் நம்மை ஆட்கொண்டு விடும் நூற்களும் உள்ளன. எழுத்தாளனின் மொழியாளுமை, சுவைபடச் சொல்லல், கிண்டல், அங்கதம், ஆர்வத்தைத் தூண்டுதல் ஆதியாம் காரணிகளால் சில நூல்கள் அவற்றைக் கீழே வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நம்மை அனுமதிப்பதில்லை. மருதமுனை மக்களைப் பொறுத்தவரை இந்நூல் அவ்வாறான ஒரு நூலாக அமைந்திருக்கிறது. மருதமுனைக்கு அப்பால் உள்ளவர்கள் அவசியங்கருதிப் படிக்க வேண்டிய நூலாகவும் இருக்கிறது. புலவர்மணியின் தகுதிக்கு அவர் நேரடிக் கிண்டலில் ஈடுபட முடியாது. அங்கதத்தையும் கூட அவர் அடக்கியே வாசித்தாக வேண்டும். ஆனால் அவரது மொழியாளுமையானது ஐந்தாம் வகுப்பு மாணாக்கர் முதல் அதி சிரேஷ்ட ஆய்வாளர் வரை - தெருவில் உள்ள தேனீர்க்கடை பெஞ்சில் அமர்ந்து மித்திரன் பத்திரிகையில் வரும் பூரம் கேள்வி பதில்கள் வாசித்து ரசிப்பவர் முதற் கொண்டு வீடுகளில் சின்னத்திரைச் சீரியல்களின் கண்ணீர் வெள்ளத்துக்குள் கரைந்து போகும் அம்மணிகள் வரை புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அலுப்பின்றிப் படிக்கும் படியாகவும் அமைந்துள்ளது. அதேவேளை அங்கதத்தையும் கிண்டலையும் அவர் தவிர்த்தார் என்று அர்த்தமல்ல. அவற்றை நாசூக்காக அவர் சொல்லும் அழகைக் காட்ட இண்டு உதாரணங்களை நான் தர விரும்புகிறேன்.
01. மந்திரங்கால் மதி முக்கால் என்பார்கள். மந்திரம் என்றதும் அதை பாமர மக்கள் நம்பிப் பயந்து மாந்திரீகர் சொல்வதற்கெல்லாம் கட்டுப்பட்டார்கள். மதியூகம் படைத்த மந்திரவாதிகள் பொது மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வாழ்ந்திருக்கின்றனர்.... எந்த நோய் வந்தாலும் மந்திரம்தான் முந்தும். அது பலிக்காத போது பேய்விலகிற்று. இனி நோய்க்குப் பாருங்கள் என்பார்கள். ஐயோ பாவம் இந்த வேடதாரிகள்! இனியும் இந்தப் பேயர்களின் பொய்க் கூற்றுப் பலிக்குமா? இந்த விஞ்ஞான உலகத்தில் வைத்தியத் துறை விரிவடைந்திருக்கும் இந்தக்காலத்தில் இவர்களின் பாச்சா பலிக்காது.
02. தலைப்பிள்ளைத்தாச்சிக்கு எட்டாம் மாதத்தில் அவளின் தாய் கொழுக்கட்டை சுட்டு அடுத்தவர்களை அழைத்து குரவை வெடியுடன் கர்ப்பிணியின் முந்தானையுட் கொட்டுவாள். தலைப்பிள்ளை பிறந்ததும் குரவையிடும் வழக்கமும் இருந்தது. குழந்தைக்குப் பல்முளைத்தால் பல்லுக் கொழுக்கட்டை சுட்டுச் சொரிவதும் ஒரு விழா. தென்னம்பிள்ளை, கமுகம்பிள்ளை பாளை யோட்டால் அதற்கும் ஒரு விழா. தம்பி குர்ஆன் ஓதி முடித்து மௌலீது, கத்தம், பாத்திஹாவும் பாடம் பண்ணிவிட்டானென்றால், அவனுக்கு பட்டுக் கல்யாணம் பண்ணுவதும் ஒரு விழா.... தொழிலொன்று பழகி விட்டால் அதற்கும் ஒரு விழா!
கிழக்கில் உள்ள பிரதேசங்களில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் பேச்சு வழக்கு ஒன்றுக் கொன்று வித்தியாசமாயிருப்பதை நாம் அவதானிக்கிறோம். அநேமாக ஊருக்கு ஊர் இந்த வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. மருதமுனை வாழும் நண்பர்கள் பலருடன் எனக்கு மிக நல்ல நீண்ட கால உறவு இருந்து வருகிறது. எனவே மருதமுனைப் பேச்சு குறித்தும் ஓர் அவதானம் இருக்கிறது. அவர்களது சொல் உச்சரிப்புக் குறித்த விளக்கத்தை புலவர்மணியின் இந்த நூலில் படிக்கக் கிடைத்தது. புலவர்மணி பின்வருமாறு சொல்கிறார்.
தாவளமேற்றிய வியாபாரிகள் சிங்களவரோடு உரையாடிச் சிங்களம் பேசக் கற்றுக் கொண்டனர். இவர்கள் இந்தத் தொழிலைச் செய்தமையை அடுத்துள்ள வேறெந்த முஸ்லிம் கிராமத்தவரின் பேச்சு மொழியிலும் காணப்பெறாத ஒரு புதுமையை இவ்வூரின் பேச்சு மொழி நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மொழியைப் பேசக் கற்றுக் கொண்டவர்கள் சிங்களத்தில் வினாவெல்லாம் ‘த’ என்ற ஈற்றினைக் கொண்டு ‘ஹொந்தத’, ‘ஆவாத’ என்பன போன்றிருப்பதனால் தமிழ் வினாச் சொற்களையும் ‘வந்நத’ ‘இருந்தத’ என ஈற்றைக் குறுக்கி உச்சரித்தனர். காலக்கிரமத்தில் வினாச் சொற்களில் ஆகார ஈறுகள் அகர ஈறுகளாகக் குறுகின.
சிறு வயதில் மூத்தம்மாவுக்கும் உம்மாவுக்கும் பருத்தி மணையில் புல் அரைத்துக் கொடுத்திருக்கிறேன். எனது இந்த அனுபவம் இங்கிருக்கும் பலருக்கும் கிடைத்திருக்கும். ஆனால் புலவர்மணியின் இந்த நூலில்தான் பருத்திமணை என்ற பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்த மரத்தாலான இயந்திரம் உண்மையில் பருத்தி அரைப்பதற்கென்றுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பெயர் அதற்குச் சூட்டப்பட்டுள்ளது. நாட்டு வழக்குச் சொற்றொடர்களைப் பயன்படுத்திக் கவிதைகள் பல இன்று எழுதப்படுகின்றன. அவற்றின் ரசனை வெகுவாகப் போற்றப்பட்டு வருகிறது. உண்மையில் அந்தப் பெருமையெல்லாம் நம்மூதாதையருக்குரியது. இந்த நூல் முழுக்க நம்முன்னோரின் பேச்சு வழக்கும், அந்தக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களும் விரவிக் கிடக்கின்றன. எனவே இவற்றை ஒரு பொக்கிஷமாகவே புலவர்மணி நமக்கு வழங்கியிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த நூலுக்குள் கிடக்கும் முன்னோர் வார்த்தைகளைச் சிறகுகளாக வரித்துக் கொண்டு கவிதைக் குஞ்சுகள் சில புதிதாகத் தோற்றம் பெறவும் கூடும்.
ஒரு திறமை வாய்ந்த எழுத்தாளனின் நூல் ஒரு நூலகத்துக்கு ஒப்பானது. அதை இந்த நூலில் நான் காண்கிறேன். மருதமுனையின் வேர்களும் விழுதுகளும் பற்றிப் பேசும் இந்த நூல் மருதமுனையின் வரலாறுஎன்ற தலைப்பில் வெளிவந்த போதும் மருதமுனைக்கு அப்பாலும் பிரயோசனம் தரக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. வரலாறுகள் எழுதப்படாத பிரதேசங்களில் வாழ்வோருக்குத் தமது பிரதேசங்களின் வரலாற்றை எழுதுவதற்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் ஊக்கியாகவும் மாதிரியாகவும் இது அமையக் கூடியது.
புலவர்மணி இந்த நூலில் தனது பாடல்கள் சிலவற்றையும் சேர்த்திருக்கிறார். அந்தப் பாடல்களும் கூட வரலாற்றையே நமக்குச் சொல்கின்றன. அந்த நாட்களில் தான் குர்ஆன் ஓதப் போனதையும் அதன் வரை முறைகளையும் சொல்கிறது ஒரு பாடல். புகையிலைச் செய்கைக்காக இங்கிருந்து சென்று அடிமை வாழ்க்கையில் அகப்பட்டு இன்னல்படும் சிறுவர்களதும் இளையவர்களதும் சோகங்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களையும் சொல்கிறது மற்றொன்று. இந்தக் கிராமத்தில் மாட்டுப் பட்டி வைத்திருந்தவர்கள், மீன்பிடியில் பெயர் பெற்றவர்கள், தையல் வேலை முன்னோடிகள், தச்சுத் தொழில் செய்தவர்கள், முக்கிய பள்ளிவாசல்களின் மரைக்கார்மார் பட்டியல், கதீப்மார் பட்டியல், ஹஜ்ஜூக்குச் சென்றோர் பட்டியல், உலமாக்களின் பட்டியல், உயர்கல்வி பெற்றோர் பட்டியல், அதிபர், ஆசிரியர் பட்டியல், சமாதன நீதவான்களின் பட்டியல், மருத்துவம் படித்தவர்கள், எழுதுவினைஞர்கள், மருத்துவர்கள் என்று தமது அந்திம காலத்துக்கு முற்பட்ட ஊரை அப்படியே வடித்துத் தந்திருக்கிறார் புலவர்மணி. மருதமுனையின் ஆரம்ப காலந்தொட்டு பல்வேறு துறைகளில் திறமையுள்ளவர்களும் பெரும் வணிகர்களும் குடும்பப் பாரம்பரியம் மிக்கவர்களும் வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள். ஆனால் தனது மண்ணின் மக்களையும் அதன் வரலாற்றையும் அடுத்த சந்தததி அறிந்து கொள்வதற்காக எழுதி வைப்பதற்கு ஒரு இலக்கியவாதியான கல்விமானால்தான் முடிந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எழுத்தாளுமை உள்ளவர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கான நியாயமான காரணமும் அதுவே. ஒரு படைப்பாளி தனது சமூகக் குழுமத்தின் வரலாற்றை வரலாறாக மட்டுமல்ல கவிதையாகவும், கதையாகவும் கூட எழுதுகிறான். இதனால்தான் இன்று புலவர்மணியின் நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். இந்த உரைக்காக இரண்டாவது முறையாகவும் மருதமுனையின் வரலாற்றை நான் வாசித்து முடித்த போது பழங்காலக் கிராமம் ஒன்றின் பல தகவல்களைச் சொல்லும் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பார்ப்பது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. இங்குள்ள எனது வயதொத்தவர்களுக்கும் மூத்தவர்களுக்கும் தங்களது இனிய கிராமத்து இளமை நினைவுகளை மீட்டி மகிழ்வதற்கு இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பைத் தரும். தங்களது கிராமம் எத்தகையதொரு சிறப்பு வாய்ந்த அமைதிப் ப+ங்காவாக விளங்கியிருக்கிறது என்பதையறியவும் இப்படியெல்லாம் இருந்ததா என்று ஆச்சரியப்படவும் சில வேளை கற்பனை பண்ணி மகிழவும் கூட இக்கிராமத்தின் இளையவர்களுக்கு இந்நூல் துணைபுரியும். மருதமுனையின் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம், மிகக் கட்டாயம் இருக்கவேண்டிய உங்களைப்பற்றிய உங்களது நூல் இது என்பதை எவ்விதச் சந்தேகங்களுமின்றி உங்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
இன்றைய நிகழ்ச்சிகளில் பல முடிவடைந்து விட்டன. எனது உரை இன்னும் சில வினாடிகளில் முடிந்து விடும். இதைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள கவியரங்கும் ஓரிரு மணித்துளிகளில் முடிந்த விடும். நான் ஒரு வரலாற்று மாணவனோ அரசியல் மாணவனோ அல்லன். ஆனால் அரசியல் மாணவர்களையும், சமூகவியல், அரசியல் மற்றும் வரலாறு தொடர்பான ஆய்வுக்குரிய பலர் இந்த மண்ணில் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் யாவும் முடிந்ததும் கவியரங்கு நன்றாக நடந்ததா அஷ்ரஃப் சிஹாப்தீன் சரியாகப் பேசினானா என்பதல்ல பேச்சாக இருக்க வேண்டியது. சமூகத்தின் மீதும் இக்கிராமத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் அக்கறை கொண்டு எழுதப்பட்ட வரலாற்றின் இந்த முதற் கல்லைத் தொட்டு அடுத்த கட்டத்தை நகர்த்திச் செல்வது யார் என்பதே கேள்வியாகவும் பேச்சாகவும் இருக்கவேண்டும் என்பதே எனது ஆவாவாகும்.
எனது மருதமுனை நண்பர்கள் இனியவர்கள். எனவே மருதமுனை மக்களும் இனிவர்களே. சகோதரன் பஷீர் அப்துல் கையூமுடன் ஆரம்பித்த மருதமுனை உறவு இன்று புலவர்மணியின் புதல்வன் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரை தொடர்ந்து எனது இரண்டாவது தாயகம் மருதமுனை என்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு விட்டது. அதற்காகவே நான் இங்கு மருதமுனையைப் போற்றியும் புகழ்ந்தும் பேசவில்லை. நான் அவ்வாறு புகழ்ந்து பேசாவிட்டாலும் கூட - கொஞ்சம் டூமச் ஆகத் தோன்றினாலும் கூட - மருதமுனைக்கு ஒரு சிறப்புப் பெயர் உண்டு. அதுதான் மக்கம் தப்பினால் மருதமுனை!
(18.07.09 அன்று மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி அஷ்ரஃப் மண்டபத்தில் நடந்த புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களது நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட மருதமுனையின் வரலாறு நூல் நயவுரை)

Friday, June 19, 2009

சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 2


காலை வைத்ததும் அச்சிறிய படகு ஆட்டம் எடுத்தது. இந்த வேளையில் நான் படகு செலுத்தும் இளைஞனைப் பார்த்து “உனக்கு நீந்தத் தெரியுமா?” என்று கேட்டது தலைவருக்குப் பிடிக்கவில்லை. என்னை முறைத்துப் பார்த்தார்.


எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அபசகுனமான வார்த்தைகள் பேசுவதை வலுக் கட்டாயமாகக் கண்டிப்பவர் ஜின்னாஹ். இந்த விடயத்தில் என்னை விட அல் அஸ_மத்துடன் அடிக்கடி தர்க்கப்படுவார். அஸ_மத் எல்லா விடயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் மறு பக்கத்தை நுணுக்கமான அவதானத்துடன் கவனிப்பவர். தலைவரின் முறைப்பை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “எனக்கு நீச்சல் தெரியாது” என்று படகோட்டிக்குச் சொன்னேன். அது படகோட்டிக்குச் சொன்ன பதில் அல்ல. உடம்பில் நீர் கட்டினால் டாக்டரால் மருந்து தரமுடியும். நீருக்குள் விழுந்தால் அதனுள் விழுந்துதான் காப்பாற்ற முடியும். மாத்திரையோ மருந்தோ ஆளைக் காப்பாற்றிய பிறகுதானே சாத்தியப்படும். படகோட்டி தனது சேவை அனுபவத்தை மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டு இயந்திரத்தை முடுக்கினான். படகோட்டியின் விபரத்தின் படி 12 மீற்றர் ஆழமான அந்நீர்ப் பரப்பில் படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.


அந்த இயந்திரப் படகுப் பயணம் ஒரு சுகமான அனுபவம். ஆலப்பி மாவட்டம் 1957 ஆகஸ்ட் 17ம் திகதி உருவாக்கப்பட்டது. 1990ல்தான் அதற்கு ஆலப்புழா என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கேரளத்தின் எர்ணாகுளம், கோட்டயம், பதனம்திட்ட, கொல்லம் ஆகிய மாவட்டங்களால் நிலப்பரப்பாலும் அரபுக்கடலால் மறுபுறத்திலும் எல்லையைக் கொண்டது ஆலப்புழை மாவட்டம். சிறிய, மிக நேர்த்தியான, இயற்கை அழகு மிகுந்த நகரமான ஆலப்புழையின் தெருவெங்கும் பெருமரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஒரு முறை சுற்றி வந்தால் புதிய ஒருவரால் இரண்டாம் முறை எவ்விதச் சிரமங்களுமில்லாமல் தனியாக வலம் வரலாம். “ஆலப்புழா என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாகும்” என்று ஜேர்மனியைச் சேர்ந்த அகராதித் தொகுப்பாளரான கலாநிதி குண்டர்ட், சொல்கிறார். புழா என்பது ஆறு என்று அர்த்தப்படும் என்று குறிப்பிடும் அவர் “ஆலப்புழையானது விசாலம் பொருந்திய அரபுக் கடலில் ஆறுகள் ஊடறுக்கும் நிலத்தின் சிறப்படையாளம்” என்று சொல்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டு காலத்துள் ஆலப்புழைக்கு வந்த ஆங்கிலேயரான கேர்ஸன் பிரபு இப்பிரதேசத்தின் அழகில் மயங்கி “இயற்கையானது அதன் உச்ச வள்ளற்றன்மையை இந்த நிலத்துக்கு வாரி வழங்கியுள்ளது” என்றும் “ஆலப்புழை கிழக்கின் வெனிஸ் ஆகும்” என்றும் வர்ணித்துள்ளார்.


ஆலப்புழையூடாக மூன்று முக்கிய நதிகள் ஓடுகின்றன. மணிமாலா ஆறு, பம்பா ஆறு, அச்சன் கோவில் ஆறு என்பவே அவை. இவை தவிர வெம்பநாத், காயாம்குளம் ஏரி ஆகிய ஏரிகளும் உள்ளன. திரும்பும் இடமெல்லாம் வாய்க்கால்களைக் காணலாம். தோணிகளில் மக்கள் அவற்றில் பயணம் செய்கிறார்கள். நகரத்துக்குச் சென்று வர அவர்களது பிரதான போக்குவரத்து வாகனமாக தோணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆலப்புழை தும்புப் பொருட்களுக்குப் பிரசித்தி பெற்றது. கேரளாவின் அநேகத் தும்புத் தொழிற்சாலைகள் ஆலப்புழையை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. அதற்குக் காரணம் அங்கு பெருமளவில் காணப்படும் தென்னை மரங்கள். வருடமொருமுறை நேரு கிண்ண படகுப் போட்டி இங்கு நடைபெறுகிறது. அதை ரசிக்க ஏராளமான உள்@ர்வாசிகளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் கூடுகிறார்கள். தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செய்கிறார்கள். குளிரூட்டப்பட்ட ஓர் அறை, இரு அறைகள் கொண்ட பிரம்மாண்டப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. நீர்ப்பரப்பில் படகிலேயே இராத்தங்கலும் செய்ய முடியும். மீன்களை அங்கேயே பிடித்துச் சமைத்துத் தருகிறார்கள். ஆனால் அவ்வாறான ஒரு படகு எங்களுக்குக் கிடைக்காதது பெரும் துரதிர்ஷ்டம்தான். ஏனெனில் அவ்வாறான படகுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தன. சில படகுகள் திருத்தங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தன. பன்னிரண்டாயிரம் ரூபாய் வரை தருவதாகக் கேட்டுப் பாரத்தும் பதிவை மாற்ற முடியாது என்று மறுத்து விட்டனர். எனவே ஆட்டா ஓட்டுனர் தாஜூதீன் சிறிய இயந்திரப் படகு ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார்.


கிட்டத்தட்ட நான்கு மணி நேரப் பயணம் அது. பல களப்புப் பிரதேசங்க@டாக படகு தனது பயணத்தைத் தொடர்ந்தது. முன்னும் பின்னுமாக பல அற்புதமான காட்சிகள். பல படகுகள் எம்மை எதிர்கொண்டும் எமது போக்குடன் இணைந்தும் பயணம் செய்தன. பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சொந்தமான குளிரூட்டப்பட்ட படகுகளில் மேலைத் தேசத்தவர் பயணம் மேற்கொள்வதைக் காணக் கூடியதாக இருந்தது. படகு ஒரேயிடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வரவில்லை என்பதை அந்த நான்கு மணி நேரத்திலும் நான் அவதானித்தேன்.


இடைக்கிடையே இலக்கியம் பேசினோம். குறிப்பாக மலையாள இலக்கியவாதிகள் எமது கலந்துரையாடலில் இடம்பெற்றனர். சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை, குமரன் ஆசான், அடூர் கோபால கிருஷ்ணன், சச்சிதானந்தன், மாதவிக்குட்டி, எம்.ரி. வாசுதேவன் நாயர், எஸ்.கே. பொற்றேகாட், வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை என்று இலக்கியவாதிகளும் மம்முட்டி, மோகன்லால், கோபால் மேனன், நெடுமுடி வேணு, ரேவதியாக அறிமுகமான ஆஷா கேளுண்ணி என்று சினிமாத்துறை சார்ந்தவர்களும் கே.ஜே.யேசுதாஸ், சித்ரா என்று பாடகர்களும் எமது பேச்சினிடையே வந்து சென்றனர். எர்ணாகுளம், ஆலப்புழைப் பகுதிகளில் எங்கும் கே.ஜே.யேசுதாஸ் ஒலித்துக் கொண்டிக்கிறார். நமக்கு மிகவும் அறிமுகமானவர்களான பஷீரையும் தகழியையும் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினோம். சிவசங்கரன்பிள்ளை, தகழி என்ற இடத்தைச் சேர்ந்தவர். அந்த இடம் ஆலப்புழையின் குட்டநாடு தாலுகா பிரிவில்தான் இருக்கிறது. 1947ல் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’,1956ல் வெளிவந்த ‘செம்மீன்’, 1978ல் வெளிவந்த ‘கயிறு’ ஆகிய நாவல்கள் அவரை இலக்கியப் பெருவெளியின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றன. ‘செம்மீன்’ நாவல் பத்தொன்பது மொழிகளில் பெயர்க்கப்பட்டது. சினிமாவாக எடுக்கப்பட்டு பதினைந்து மொழிகளில் தழுவப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் நடித்த ஷீலா என்ற நடிகை கடைசிவரை செம்மீன் புகழ் ஷீலா என்றே அழைக்கப்பட்டார். கயிறு நாவல் அவரது அதிசிறந்த படைப்பாகப் பேசப்பட்டது. 1984ல் இந்திய அரசின் உயர் இலக்கிய விருதையும் 1985ல் பத்மபூஷண் பட்டத்தையும் பெற்றவர். 1999ல் ஆலப்புழையிலேயே அவர் காலமானார். தகழி சிவசங்கரன் பிள்ளையைக் கௌரவிக்கு முகமாக இந்திய அரசு 2003ம் ஆண்டு முத்திரையொன்றை வெளியிட்டது. ஆலப்புழையில் நாம் அறியாத கவிஞர் ஒருவரும் வாழ்ந்துள்ளார். ஏறக்குறைய 500 சினிமாப் படங்களுக்கு 2000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் அவர். பெயர் வயலார் ராமவர்மா. மலையாள சினிமாப் பாடல்களின் முன்னோடி எனக் கருதப்படும் இவருக்கு 1974ம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 1961ல் கேரள சாகித்திய அகதமி விருது பெற்ற அவர் 1975ல் காலமானார். பிரபல்யம் பெற்ற குடும்பத்தில் அவர் பிறந்த போதும் கம்யூனிஸ இயக்கத்தில் இறங்கி மத, இன வேறுபாடுகளுக்கெதிராகச் செயற்பட்டவர்.


படகுச் சவாரி செய்யும் ஆசைக்குள் மீன் சாப்பிட வேண்டும் என்று ஒரு உப பிரிவு எனக்குள் இருந்தது. ஏறும் போதே படகோட்டியிடம் சொல்லி வைத்திருந்தேன். இடையில் நிலப்பரப்பொன்றில் நிறுத்தி ஒரு கடைக்கு அழைத்தான் படகோட்டி. இரண்டு பெரிய மீன்களைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தான் கடைக்காரன். ஐஸ் பெட்டியில் வைத்த மீன் சாப்பிடவா இவ்வளவு தூரம் வந்தது? என்று நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தனர். எனவே அதைத் தவிர்த்து விட்டு அருகில் இருந்த மலையாள மூலிகை வைத்திய நிலையத்துக்குச் சென்றோம். அந்த இடம் நீர்ப்பிரதேசத்துக்குள் அமைந்திருந்த ஒரு சிறு தீவுப்பகுதியாகும். அங்கே பலவகையான நாட்டு மருந்துகள் இருந்தன. அங்கிருந்தோர் நன்றாகத் தமிழில் உரையாடினார்கள். வெளிநாட்டவர்கள் அங்கு வந்து மூலிகை எண்ணெய் மஸாஜ் செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு விதமான மஸாஜ்; செய்வதற்கு எடுக்கும் நேரமும் தொகையும் விபர அட்டையில் அச்சிடப்பட்டிருந்தன.


பயணத்தின் இடையில் மற்றொரு கரையில் தேனீர் அருந்த நிறுத்தினோம். ஒரு முஸ்லிம் பெண்மணியின் தேனீர்க்கடை அது. இந்தியாவில் எந்தக் கடையில் தேனீர் அருந்தினாலும் சுவைக்கவில்லை. காரணம் நமது நாட்டுத் தேயிலை அத்தனை சுவையானது. அந்த ருசி இந்தியத் தேயிலையில் இல்லை என்பதே எங்களது அபிப்பிராயமாக இருந்தது. இந்தப் படகுப் பயணம் முடியும் வரை நாங்கள் கிட்டத்தட்ட அந்தரத்தில் மிதப்பது போன்ற சந்தோஷம் நிறைந்திருந்தது.


நீர்ப்பயணம் வாழ்வின் நெருக்குதல்களில் இருந்து நமது சிந்தையைத் திசை திருப்பி ஒரு இலேசானதும் திருப்தியுற்றதுமான வாழ்வின் பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆறுகளும் கடலும் தமக்குள் வைத்திருக்கின்ற அதிசயங்களில் ஒரு சிறு வீதத்தையே அதன் மேற்பரப்புகளில் நமக்குக் காட்டுகின்றன என்று நான் நினைக்கிறேன். தொடுவான் வளைவையும் நீர்ப்பரப்பின் எல்லையில் அஸ்தமிக்கும் சூரியனையும் கண்டு தன்னை மறந்து நிற்காதவர் யார்தான் உள்ளனர்? அடுத்த நாள் மைசூருக்குச் சென்று விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம்.


அன்றிரவு உணவுக்குப் பின்னர்தான் அதற்கான பயண வழிகள் பற்றித் தேட ஆரம்பித்தோம். சொகுசு பஸ்கள் கூட எர்ணாகுளத்திலிருந்துதான் புறப்படுகின்றன என்று அறிந்தோம். வேறு வழியின்றி அடுத்த நாட்காலை எர்ணாகுளத்துக்குச் சென்று அங்கிருந்து தோதுப்பட்ட வழி எதுவோ அதன்படி முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். நாங்கள் வேகமாக நடந்து போகும் போது நம்முடன் வருகின்ற ஒருவர் குறைந்திருப்பது எமக்குப் புரியவரும். அவர் - தாஸிம் அகமதுதான். சிலவேளை ஆளைக் காணாமல் அப்படியே பாதையோரத்தில் காத்திருப்போம். வரும்போது ஏதாவது ஒரு பொருளுடன் அல்லது வித்தியாசமான ஒரு தகவலுடன் திரும்பி வருவார். அன்றிரவு அவர் திரும்பி வந்தது ஒரு சீப்பு நேத்திரம் பழங்களுடன். நான் கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டேன். ஆனால் பழங்களைச் சாப்பிடும் போது சிரித்துக் கொண்டே சாப்பிட்டேன். இலங்கையில் ஒரு நேத்திரம் பழம் 160.00 ரூபாய் முதல் 225.00 ரூபாய் வரை விற்கிறது என்று சொன்ன அவர் ஒரு கிலோவுக்கும் இந்தியப் பணத்தில் 20.00 தான் கொடுத்து வாங்கியதாகச் சொன்னார். அதாவது இலங்கைக் கணக்கில் 50.00 ரூபாய்தான்.


காலை 8.00 மணிக்கு ஆலப்புழை பஸ் நிலையத்துக்கு வந்து 30 நிமிட நேரம் காத்திருந்து கூட்டமில்லாத பஸ் ஒன்றில் ஏறி எர்ணாகுளம் வந்தடைந்தோம். காலைச் சாப்பாட்டுக்காக ஒரு கடையில் நுழைந்தால் அங்கும் அப்பம்தான் தெரிவுக்குரிய எங்களது உணவாக இருந்தது. சாப்பிட்டு விட்டு மைசூர் செல்வதற்கான வழிகளை அந்தக் கடையிலேயே விசாரித்தோம். கோழிக்கோட்டுக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து பஸ் பிடிக்கலாம் என்று சொன்னார்கள். எர்ணாகுளம் ரயில் நிலையத்தை அடைந்த போது 11.00 மணிக்கு கோழிக்கோடு செல்லும் ரயில் இருந்தது. முதலாம் வகுப்புப் பயணச் சீட்டுப் பெற்றுக் கொண்டு ரயில் புறப்படும் வரை வழமை போல ரயில் நிலையப் புத்தகக் கடை, சிற்றுண்டிக் கடையென்று உலாவினோம். ரயிலில் எங்களுக்கு என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை. இந்த ரயிலிலும் எமது அறுவர் பகுதிக்குள் எவரும் பயணச் சீட்டுடன் நுழையவில்லை. நாம் அமர்ந்த பிரிவு கதவுடன் கூடியது. அவசியமானால் மூடிவிட்டு உறங்கிக் கொள்ளக் கூடியது. இரண்டு முறை பயணச் சீட்டுப் பரிசோதகர்கள் வந்து சென்றனர்.


மதிய உணவு வேண்டுமா என்று கேட்டு வந்த இளைஞனிடம் மரக்கறி புரியாணிக்கு ஆர்டர் கொடுத்தோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு ஐந்து நிமிட நேரத்துக்கு முன் மற்றொரு இளைஞன் வந்து “நாலு வெஜிடபிள் புறியாணிங்களா சார் ஆர்டர் பண்ணீங்க?” என்று கேட்டான். ஆம் என்ற போது, புறியாணி முடிந்து விட்டதாகச் சொல்லி இரண்டு புறியாணிகளையும் இரண்டு சோற்றுப் பார்சல்களையும் தந்து பணம் பெற்றுச் சென்றான். உணவைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எம்மிடம் ஆர்டர் எடுத்த இளைஞன் எமக்கான புறியாணிப் பார்சல்களுடன் வந்து நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து அதிர்ந்து நின்றான். நாங்கள் நடந்ததைச் சொன்னோம். அவர்களுக்குள் நடக்கும் வியாபாரப் போட்டி இது. தந்திரமான வியாபாரம்! பிற்பகல் 3.00 மணியளவில் கோழிக்கோட்டை அடைந்தது ரயில்.


இறங்கினால் வாகன மயமாக இருந்தது. ரயில் நிலையத்தி மோட்டார் சைக்கிள்கள் ஆயிரக் கணக்களில் நிறுத்தப்பட்டிருந்தன. தூர இடங்களில் வேலைக்குச் செல்பவர்களது மோட்டார் சைக்கிள்களாக அவை இருக்க வேண்டும். நெருக்கமான பாதையைக் குறுக்கறுக்கவே சிரமமாக இருந்தது. பதினைந்து நிமிடம் தாமதித்து நின்று ஒருவாறு கைகளைக் காட்டிப் பாதையைக் கடந்து ஓர் ஓரத்துக்குச் சென்று நின்று பஸ் நிலையம் செல்ல ஆட்டாவொன்றை நிறுத்தினோம். கோழிக்கோட்டில் நால்வர் ஒரு ஆட்டாவில் பயணம் செய்ய முடியாது. எனவே இரண்டு ஆட்டாக்களை நிறுத்தி ஏறிப் புறப்படுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆட்டாப் பயணங்களில் மிக நிதானமான ஓட்டத்தைக் காணக் கூடியதாக இருந்தது. முண்டியடிப்பது, பொதுமக்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் ஓட்டுவது போன்றவற்றை அங்கு எம்மால் காணமுடியவில்லை.


கோழிக்கோட்டுக்கும் மைசூருக்குமிடையில் ரயில் பாதை கிடையாது. அப்படிப் போவதானால் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுத்தான் போக வேண்டும். இந்த விபரங்களை ரயிலிலேயே பெற்றுக் கொண்ட நாம் பஸ் நிலையத்தை அடைந்தோம். நான்கு மணிக்கு மைசூர் செல்லும் பஸ் புறப்படும் என்ற தகவல் கிடைத்தது. சொகுசு பஸ் சேவை உண்டா என்று முன்பதிவு மேற்கொள்ளும் நபரிடம் கேட்டேன். நடிகர் விஜயைப் போல வாயைத் திறக்காமல் பஸன்ஜர்... என்று ஏதோ சொன்னார். மீண்டும் கேட்ட போது மீண்டும் அந்தச் சொல் மட்டுமே ஆம் என்ற தலையாட்டத்துடன் வெளிவந்தது. பஸ் வந்து நின்ற பிறகுதான் அதில் ‘ஃபாஸ்ட் பெசஞ்ஜர்’ என்று எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. அதாவது நமது கடுகதி அல்லது ‘லிமிட்டட் ஸ்டொப்’ என்று அர்த்தம். ஏறினால் அதில் சொகுசும் இல்லை, சுண்ணாம்பும் இல்லை. ஏனைய பஸ்களை விட ஆசனங்கள் சற்று உயரத்தில் இருந்தன. அவ்வளவுதான்! கோழிக்கோட்டில் மாத்யமம் பத்திரிகைக் காரியாலயத்துக்குச் சென்று பி.கே.பாறக்கடவு என்ற எழுத்தாளரைச் சந்திப்பதும் எமது பயணத்தில் ஓர் அங்கமாக இருந்தது. ஏனெனில் அவரது சிறுகதைத் தொகுதியை அல் அஸ_மத் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.


ஆனால் அவரைச் சந்திக்கச் சென்றால் கோழிக் கோட்டிலேயே அன்றைக்குத் தங்க நேரும் என்பதாலும் ஏற்கனவே அவருடன் தொடர்பு கொள்ள முடியாது போனதாலும் முயற்சியைக் கைகழுவ வேண்டி வந்தது. இந்த பஸ் பயணத்தில் நான் கண்ட இயற்கைக் காட்சிகள் மறக்கக் கூடிதாக இல்லை. பாதைகளும் பகுதிகளும் ஊடறுத்த கிராமங்களும் நகரங்களும் அழகு கொழிப்பவை. கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்களாக அதாவது இருட்டும் வரை நான் பஸ் யன்னலூடாகப் பார்த்து ரசித்துக் கொண்டே வந்தேன். கண்டியிலிருந்து மஹியங்கனை வழியாகச் செல்லும் போது வரும் ஊசி வளைவுகள் இங்கும் இருந்தன. ஆனால் மலையில் முக்கி முக்கி ஏறிய பஸ் இறக்கத்தில் பயணிக்காதது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தப் பாதை தமிழ் நாட்டுக் கூடாகச் சென்றே கர்னாடகா செல்கிறது என்று அஸ_மத் சொன்னார். இம்முறை அவர் கணக்கு விடுவதாக எனக்குத் தோன்றவில்லை. வரை படத்தைப் பார்த்த போது அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. நான்கு பதினைந்தளவில் புறப்பட்ட பஸ் இரவு 11.00 மணிக்கு மைசூரை அடைந்தது.


ஜின்னாஹ் ஏற்கனவே ஒரு முறை மைசூர் வந்த போது தங்கியிருந்த ஹோட்டலுக்கு எம்மை அழைத்துச் சென்றார். அறைக்குச் செல்வதற்கு முன் தெருவோரத்துக்குச் சென்று ஒரு காப்பி அருந்தலாம் என்ற வேண்டு கோளை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். தெருவோரத் தேனீர்க்கடைக்கார வயோதிபருக்குத் தமிழ் புரியுமோ என்ற சந்தேகத்தில் காபி என்று சொல்லி நான்கு விரல்களைக் காட்டினோம். “நாலு பேரா?” என்று அவர் தமிழில் கேட்டார். தமிழில் கதைக்கத் தொடங்கியதும் புதுப் பால் பொதியுடைத்து புதுக் கோப்பி இட்டு அவர் தயார் செய்து தந்த காப்பி அந்நள்ளிரவில் அமுதமாய் இனித்தது.

சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 1

“கேரளாவில் படகுச் சவாரி செய்யும் இடமொன்றுக்குப் போக வேண்டும். எப்படிப் போகலாம்?” என்று தமிழ் நாட்டில் வாழும் கேரள நண்பரைக் கேட்டேன்.
“எர்ணாகுளம் போயி... அங்கேயிருந்து ஆலப்பிக்குப் போகணும்” என்றார்.
இவ்வருடச் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கும் எனது புத்தகங்களின் அறிமுக விழாவுக்கு மிடையில் இருந்த ஐந்தாறு நாட்களில் இந்தியாவின் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன்தான் நாங்கள் இந்தியாவுக்குச் சென்றிருந்தோம். கேரளா படகுச் சவாரி, மைசூர் மகாராஜாவின் மாளிகை, தீரர் திப்பு சுல்தானின் நினைவாலயமும் அவரது ஆட்சிப் பிரதேசமும் மற்றும் கோழிக்கோட்டில் ஒரு பத்திரிகைக் காரியாலயம் ஆகியன எங்களது பட்டியலில் இருந்தன.
எங்களது நால்வர் அணியின் ஆட்சித் தலைவராக ஜின்னாஹ்வும் எதிர்க்கட்சித் தலைவராக நானும் கணக்கு வழக்கு மற்றும் நலன்புரி இயக்குனராக அல் அஸ_மத்தும் பிரதம நீதியரசராக தாஸிம் அகமதுவும் மானசீகமாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாரானோம்.
சென்ரல் ரயில்வே நிலையத்தில் 15.01.2009 அன்று பி.ப. 3.00 மணியளவில் புகையிரதத்தில் ஏறியமர்ந்தோம். ஒரு ரயில் பெட்டியின் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட ஒரு பகுதியில் அறுவர் பயணம் செய்யும் பிரிவில் எங்களது இலக்கங்கள் இருந்தன. அருகே இருவர் பயணம் செய்யும் பகுதியில் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது ஓர் ஒல்லியான பையனும் ஓர் அழகான இளம் பெண்ணும் வந்து அமர்ந்தார்கள். இந்திய ரயில்கள் இரவு பகலாகப் பயணம் செய்வதால் பல ரயில் பெட்டிகள் அமர்வதற்கும் உறங்குவதற்கும் ஏற்றாற் போல் அமைந்துள்ளன. எமக்கு ஒதுக்கப்பட்ட அறுவர் பிரிவில் ஏனைய இருவர் பயணம் செய்யவில்லை என்பதால் எமக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஆனால் எமக்கு அருகில் நடைவழிக்கு அப்பால் இருவர் பிரிவில் அமர்ந்த இளம் பெண் அப்பையனுடன் மலையாளத்தில் மூச்சு விடாமல் கதைக்க ஆரம்பித்தாள். ரயில் நகர ஆரம்பித்தது.
இப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் தனிப்பட்ட வாகனம் ஒன்றில் பயணம் மேற்கொள்வது அல்லது சொகுசு பஸ் வண்டியில் பயணம் செய்வது என்று முடிவு செய்திருந்தோம். எனது கருத்தை நண்பர் ஏவி.எம். ஜாபர்தீன் நேராக மறுத்தார். பஸ்காரன் கன்னாபின்னா என்று ஓட்டுவான், வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 15.01.2009 அன்று பயணஞ் செய்யக் கூடியதாக எர்ணாகுளத்துக்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி. பயணச் சீட்டுக்கள் நான்கை பதிவு செய்ய ரயில்வேயைத் தொடர்பு கொண்டால் ஆசனங்கள் இல்லையென்றார்கள். நண்பர் ஜாபர்தீன் விமானத்தில் பயணத்துக்கு விசாரணைகளை மேற்கொண்டார். விமானத்தில் போகலாம் என்றால் பெங்க@ருக்கு அல்லது திருவனந்தபுரத்துக்கும் கோழிக்கோட்டுக்குமான விமான சேவைகள் நமது தேதி, நேரங்களுக்கு ஒத்து வருவதாக இல்லை. தவிரவும் ரயில் பயணம் போல விமானப் பயணம் அமையவும் மாட்டாது.
வேறு வழி தெரியாததால் எழும்பூருக்குச் சென்று அங்குள்ள பிரபல சொகுசு பஸ் நிறுவனத்தில் விசாரித்தோம். சொகுசு பஸ் நாங்கள் போக நினைக்காத திசைகளில் பயணப் பாதை கொண்டிருந்தது. அதில் பயணம் செய்தால் நடுச்சாமத்தில் நடுத்தெருவில் இறங்கி அடுத்த பஸ் தேடும் நிலை உருவாகும் என்று புரிந்தது. பொடி நடையாகத் தெருவுக்கு வந்த போது ஒரு தனியார் ட்ரவல்ஸ் விளம்பரப் பலகை தெரிந்தது. ஒரு இளைஞன் ஒரு சிறிய கடையின்; முன் பகுதியில் ஒரு மேசை முன் உட்கார்ந்திருந்தான். உள்ளே இரண்டு கணினிகள் தெரிந்தன. எர்ணாகுளம் போக நான்கு ரயில் பயணச் சீட்டு புக் பண்ணித் தருவீர்களா என்று கேட்டோம். சற்று நேரத்தில் “நாளை ஒரு விஷேட ரயில் போகிறது. பண்ணிடலாம் சார்” என்றான். தலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டான். நாளைக் காலை நீங்கள் இருக்குமிடத்துக்கு ரயில் பயணச் சீட்டுக்கள் வந்து சேரும் என்று சொன்னான். சொன்னபடி அடுத்த நாள் பயணச் சீட்டுக்கள் கிடைத்தன. அந்தப் பயணத்தைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு முறை ரயிலில் பிரயாணம் செய்திருக்கிறேன். குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஒரு விமானத்தில் கிடைப்பதை விடச் சிறந்த கவனிப்பு இருக்கும். வேளைக்குத் தேனீர், உணவு எல்லாம் பரிமாறுவார்கள். தலையணை, வெள்ளைப்போர்வை, குளிருக்கான போர்வையென்று வெகு அமர்க்களமாக இருக்கும். இப்போது நாங்கள் பயணம் செய்து கொண்டிருப்பது குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பில். உணவு, தேனீர் தவிர அனைத்து வசதிகளும் இருந்தன. ஒரே அலைவரிசை கொண்டவர்களது நீண்ட தூர இரயில் பிரயாணம் ரசித்து அனுபவிக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது. அவ்வப்போது கதைப்பது, விவாதிப்பது என்று பொழுது கழிந்தது. பேச்சு நின்றால் கையில் தயாராக வைத்திருந்த சஞ்சிகைகளை வாசித்தோம். ரயில் எர்ணாகுளத்தையும் தாண்டி நீண்ட தூரம் பயணம் செய்கிறது என்பதாலும் எர்ணாகுளத்தை அதிகாலை 2.30க்கு அடையும் என்று சொல்லியிருந்ததாலும் உறங்குவதற்குப் பயமாக இருந்தது, ஆனால் டாக்டர்கள் இருவரும் எந்தக் கவலையும் இல்லாமல் நீட்டி நிமிர்ந்து உறங்க ஆரம்பித்தார்கள்.
இரட்டை இருக்கைகளில் அமர்ந்த ஜோடி ரயிலில் ஏறியது முதல் விடாமல் கதைத்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பெண்தான் அதிகம் பேசினாள். எனது வாழ்நாளில் அவ்வாறு மணிக்கணக்கில் தொடர்ச்சியாகப் பேசிய ஒரு பெண்ணை நான் கண்டதில்லை. விடாமல் பேசினாள். அந்தப் பையன் இருக்கையை ஒன்றாக்கிய பிறகு இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கால்களை நீட்டி போர்வையால் மறைத்தபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். இரவு பத்து மணியளவில் நானும் அஸ_மத்தும் இருபக்க மேல் தட்டில் ஏறிச் சாய்ந்திருந்தோம். சஞ்சிகையைக் கையில் பிடித்தபடி நீண்ட நேரம் வாசித்ததால் கை நோவெடுக்க சஞ்சிகையால் முகத்தை மூடி சற்றுச் சாய்ந்தேன்.
அடுத்த சில நிமிடங்களில் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சட்டென்று பிரதான மின் விளக்கு அணைந்தது. எனது படுக்கையருகே அதன் சுவிட்ச் இருந்தது. சஞ்சிகையை எடுத்து விட்டுத் தலைலயைத் தூக்கிப் பார்த்த போது அப்பெண் நாங்கள் இருந்த இடத்துக்குள் நுழைந்து மின் விளக்கை அணைத்துச் செல்வது தெரிந்தது. அவள் இருக்கையில் அமர்வதற்கு முன்னர் நான் சுவிட்சைப் போட்டு விளக்கை எரிய விட்டேன். அவள் வெட்கத்தில் திரும்பிப் பார்க்காமல் சுருண்டு படுத்தாள். அவ்வளவுதான் அதன் பிறகு அந்த ரயில் பெட்டி மிகவும் அமைதியாக இருந்தது.
சொன்னபடி அதிகாலை 2.30க்கு எர்ணாகுளத்தையடைந்தது ரயில். எர்ணாகுளம் இந்தியாவின் தென்மேற்கே அமைந்துள்ள கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களில் ஒன்று. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பதனம்திட்ட, கோட்டயம், இடுக்கி, திருசூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், கசரகாட் ஆகியன ஏனையவை. மாநிலத்தின் தலை நகர் திருவனந்தபுரம்.
கேரளத்துக்குக் ‘கடவுளின் பூமி’ என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமன் கடலிடமிருந்து காப்பாற்றிய நிலப்பரப்பே கேரளம் என்று பழங்காலத்தில் கருதப்பட்டு வந்தது. வரலாற்றைப் படிக்கின்ற போது சீனர், ரோமர், கிரேக்கர், அசீரியர் மற்றும் எகிப்தியர் வியாபாரத்துக்குப் பொருத்தமான ஓர் இடமாக கேரளாவை அடையாளங் கண்டார்கள். கேரளர்களின் கொல்லம் எனும் ஆண்டுக் கணக்கு கி.பி. 9ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொடங்குகிறது. சேரமான் பெருமாள் நிறுவிய சேர ராஜ்யப் பிரதேசமாக இது இருந்தவேளை இங்கு தமிழ் மொழி பேசப்பட்டது என்பது வரலாறு.
இன்று கோழிக் கோடு என்று அழைக்கப்படும் கள்ளிக் கோட்டைக்கு வஸ்கொ டகாமா வந்தது 1498ல். அவ்வேளை மிளகு வியாபாரம் சூடுபிடித்திருந்தது. ஒரு காலப் பிரிவில் மௌரியர்களும் மொகலாயர்களும் தங்களது ராஜ்யங்களை இங்கு நிறுவினார்கள். இக்காலப் பிரிவில்தான் போர்த்துக்கேயர்களை கள்ளிக் கோட்டையிலிருந்து டச்சுக்காரர்கள் துரத்தியடித்தார் கள். 1766ல் மைசூர் மகாராஜாவான ஹைதர் அலி வடகேரளப் பிரதேசத்துக்கும் கள்ளிக் கோட்டைக்கும் படையெடுத்தார். 1792ல் அவரது புத்திரரான திப்பு சுல்தான் பிரிட்டிஷாருடன் மேற்கொண்ட ஒப்பந்தமொன்றின்படி கேரளத்தை விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. திருவாங்கூர், மலபார், கொச்சி என மூன்று பெரும் பிரிவுகளாயிருந்த கேரளா 1949ல் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1956ல் கேரளா என்ற பெயரில் அது இந்திய அரசின் ஒரு பிரிவாக மாறியது. கேரளாவின் வரலாறு பிரிவு பிரிவாக வௌ;வேறு சரித்திரத் தடங்களைக் கொண்டுள்ளது. நான் மேலே சொல்லியிருப்பது கேரளாவின் இதற்கு மேல் சுருக்க முடியாத வரலாறு. விரிவாக ஆய்பவர்களுக்குச் சுவையான ஒரு வரலாற்றைக் கேரளம் கொண்டிருக்கிறது.
எர்ணாகுளத்தில் அதிகாலையில் இறங்கியதும் ஆலப்பி செல்வது எப்படியென விசாரித்த போது எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் மூலம் செல்லமுடியும் என்ற தகவல் கிடைத்தது. வெளியேறி ஆட்டாவில் ஏறிப் பதினைந்து நிமிடத்தில் அந்த ரயில் நிலையத்தை அடைந்தோம். காலை 5.30 க்கு ரயில் புறப்படும் என்று தெரிந்தது. அதுவரை காப்பி அருந்துவதும் அங்குமிங்கும் அலைவதுமாக இருந்தோம். நீளமாக வெட்டப்பட்டுப் பொரிக்கப்பட்ட வாழைப்பழச் சிப்ஸ் அடங்கிய பொதியைத் தாஸிம் அகமது கண்டு பிடித்து வாங்கி வந்தார். அவற்றைக் கொறித்தபடி நேரங்கடத்திக் கொண்டிருந்து விட்டு, நிறுத்தப்படிருந்த ரயிலில் 4.00 மணிக்கு ஏறினோம். எங்களைத் தவிர வேறு யாருமே ரயிலில் இருக்கவில்லை. சாதாரண தூர ரயிலாக இருந்தபடியால் விசேட பெட்டிகள் இதில் இல்லை. 3ம் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்த பிறகு ஏராளமான பயணிகள் வந்து சேர்ந்தனர்.
ரயில் நகரத் துவங்கியதும் இருந்தபடியே தூங்கி வழிந்தோம். அல் அஸ_மத்தான் எங்களை அவசரமாகத் தட்டி எழுப்பினார். அவரும் தூங்கியிருந்தால் அதோ கதியாக முடிந்திருக்கும். ரயில் நிலையத்தில் இறங்கிய போதுதான் தெரிந்தது ஆலப்பி (Alleppey) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது ஆலப்புழைதான் என்பது. அதை உறுதி செய்தது ரயில் நிலையத்தின் ஊர்ப்பலகை. இந்த விடயத்தை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு வெட்கமாக இருந்தது. கேரளக் குடும்பப் பின்னணி கொண்ட அஸ_மத்திடம் இதைச் சொன்ன போது, “நீங்கள் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லையே” என்று சாதாரணமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார். ஆனால் பயணம் முழுவதும் எங்களுடன் ஆலப்பி என்றே அவரும் உச்சரித்துக் கொண்டு வந்ததை அடிப்படையாக வைத்து இவர் எனக்குக் கணக்கு விடுகிறாரோ என்று கூட ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.
ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியதும் தனித்து நின்றிருந்த ஒரு ஆட்டாவை நோக்கிச் சென்றோம். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் நடுநிலையாகப் புன்னகைத்தார். ‘படகு வீட்டில் பயணம் செய்ய வேண்டும், ஒரு நல்ல ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும்’ என்று அவருடன் பேசிக் கொண்டிருக்க ஆட்டா ஸ்டாண்டிலிருந்து ராஜ்கிரனைப் போல சாறினை உயர்த்தி, மடித்துக் கட்டியபடி கழுத்தில் துண்டுடன் சினிமா வில்லன் நடிகர் பொன்னம்பலத்தைப் போல ஒருவன் எம்மை நோக்கி வந்தான். வந்தவன் ஆட்டா ஸ்டாண்டைச் சுட்டிக் காட்டி “ஆட்டா அங்கிருக்கிறது. அங்குதான் எடுக்க வேண்டும்” என்றான். வில்லங்கம் ஆரம்பித்து விட்டது என்று நினைத்;தேன்.
இந்த மாதிரி வேளைகளில் தலைவர் சண்டைக் கோழியாகிவிடுவது வழக்கம். இந்தியாவில் பலமுறை இவ்வாறான வில்லங்கங்களில் அவர் பணிய மறுத்த சம்பவங்களை நான் ஏலவே அறிந்திருந்தேன். எனவே அவர்தான் முதலில் அவனை எதிர்த்துப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். இன்று தலைவருக்கு முகத்தில் முதல் குத்து விழப்போகிறது என்று எதிர்பார்த்து அதைத் தடுத்து விட வேண்டும் என்று அவர் அருகே போக, முதலில் வாய் திறந்தது... நமது நலன்புரி இயக்குனர் தான். அவருக்குத் தெரிந்த மலையாளத்தில் நாங்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வருகிறோம்... எங்களுக்கு உங்கள் பிரச்சினை தேவையில்லை... என்று சற்று எரிச்சலோடு சொன்னார். குத்து அவர் முகத்தில் விழும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் பேசாமல் திரும்பிப் போய் விட்டான்.
இந்த விபத்திலிருந்து நாங்கள் தப்பியதற்கான காரணங்களைப் பின்னர் யோசித்துப் பார்த்தேன். 1. நாங்கள் பயணம் செய்ய இருப்பது ஒரு மூன்று கிலோ மீற்றர்கள் மாத்திரமே. (கூலி பெரிய தொகை இல்லை) 2. ஆசாமிகள் கச்சிதமாக உடையணிந்து இருக்கிறார்கள். நால்வரும் கண்ணாடி அணிந்தவர்கள். (எனவே பாவம் பிழைத்துப் போகட்டும்) 3. காலங்காத்தாலே அப்பாவிகளை ஏன் அடிப்பான்? இம்மூன்று காரணங்களாலும் தலைவர் மற்றும் நலன்புரி இயக்குனர் ஆகியோரின் முகங்கள் தப்பின என்று நினைத்தேன். தலைவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற படியால் வெளியே சொல்லவில்லை.
கட்டுரையின் ஆரம்பத்தில் எமது நால்வர் அணி பற்றி அறிமுகஞ் செய்திருந்தேன். உண்மையில் இந்தப் பயணத்துக்காக அல் அஸ_மத்தை மட்டுமே நலன்புரி இயக்குனராக ஏகமனதாக நியமித்தோம். அதற்குக் காரணம் அவருக்கு மலையாளம் புரியும் என்பதுதான். மற்றப்படி பொதுவாகவே இவ்வாறான ஒரு மனப்பதிவுடன்தான் நாங்கள் நடந்து கொள்வோம். அப்போது அஸ_மத்தும் கூட எதிர்க் கட்சியில்தான் இருப்பார். அவ்வப்போது எங்களுக்குள் தர்க்கங்கள் இடம் பெறும். சில வேளைகளில் இடம், பொருள் பாராமல் விவாதங்கள் நடக்கும் போது எழும் சத்தத்தில் பலர் எங்கள் பக்கம் திரும்பி வினோதமாகப் பார்த்ததுண்டு. விவாதங்கள் விவாதங்களாகவே முடிந்து விடும். அவை என்றுமே எமது நட்பைப் பாதித்ததில்லை.
எங்களைத் தனது ஆட்டாவில் அழைத்துச் சென்ற அந்த மனிதர் பெயர் தாஜூதீன். மிக நேர்மையான மனிதர். எம்மை ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சினிமாக்காரர்கள் வந்திருப்பதால் இடமில்லை என்று கையை விரித்து விட, தனது உறவினர்களை அழைத்துச் செல்வது போல் வேறு ஒரு ஹோட்டலில் பேசித் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அன்று வெள்ளிக் கிழமையென்றபடியால் பள்ளிவாசலையும் செல்லும் வழிகளையும் காட்டித் தந்தார். நம்பமாட்டீர்கள், ரயில் நிலையத்திலிருந்து தங்குமிடம் தேடித் தரும் வரை அவர் ஆட்டாவுக்கு எம்மிடம் கோரிய பணம் வெறும் பன்னிரண்டு ரூபாய்கள் மாத்திரமே. இதுவே தமிழ் நாடாக இருந்தால் குறைந்தது நூறு ரூபாய் பறித்துக் கொள்ளாமல் விட்டிருக்கமாட்டார்கள். பதினைந்து ரூபாயைக் கொடுத்த போது சங்கோஜத்தில் நெளிந்தார் மனிதர்.
காலை உணவுக்காக ஒரு கடைக்குள் நுழைந்ததும் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. கிழக்கு மாகாணத்தில் சுடப்படும் அப்பம் அங்கு சாப்பிடக் கிடைத்ததுதான் அம்மகிழ்ச்சிக்குக் காரணம். கடலைக் கறியுடன் அப்பங்களை ருசித்துச் சாப்பிட்டோம். இரவு இரண்டு ரயில்களில் மாறி மாறிப் பயணம் செய்த களைப்பில் காலையுணவுக்குப் பின் மூவர் உறங்க அல் அஸ_மத் மட்டும் மலையாள இலக்கிய நூல்களைத் தேடிப் புறப்பட்டார். வெள்ளிக் கிழமையாதலால் தொழுகைக்காகப் புறப்பட்டு ஆலப்புழை நகர மஸ்ஜிதுக்குச் சென்றோம். கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்தில் அப்பள்ளிவாயிலின் அடித்தளம் வெளிப்புறமாகச் சரிவாக உயர்த்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணும் ஒரு தனி மரத்தால் ஆனது. அவற்றில் அழகிய கடைச்சல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நமது நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த காலங்களில் இருந்த பள்ளிவாசல்களை ஞாபகப்படுத்தியது இப்பள்ளி வாசல். பள்ளிவாசலோடு இணைந்ததாக ஒரு இறைநேசச் செல்வரின் அடக்கஸ்தலமும் உள்ளது. தொழுகை முடிந்ததும் ஓர் இளைஞரிடம் விபரம் கேட்டோம். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்று சொன்னார். இது ஒரு வரலாற்றுச் சின்னமாக இருப்பதால் விசாலிப்பதாக இருந்தால் இக்கட்டடத்தை நீங்கள் தகர்த்து விடக் கூடாது என்று ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டுத் திரும்பினோம்.
பிற்பகல் 3.00 மணியளவில் துறையடிக்குச் சென்றோம். எங்களுக்கான படகு தயாராக இருந்தது. நான்கு கதிரைகள் இடப்பட்டு அவற்றில் தேரோக்களுக்கு ஆசனங்களில் வெள்ளைத் துண்டு போட்டது போல் பெரிய வெள்ளைப் பூந்துவாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. இரண்டு முகடுகள் கொண்ட படகின் முன்முகட்டில் பூச்சரம் கோக்கப்பட்டிருந்தது. இரண்டு நீர்ப் போத்தல்கள் மற்றும் சில பிஸ்கற் பொட்டலங்களுடன் தயாராக நின்றோம். மனதுக்குள் ஓர் அற்பப் பெருமை எட்டிப் பார்த்தது. பெரும் உல்லாசப் பயணிகளாக நினைத்துக் கொண்டு படகுக்குள் காலடி வைக்கும் போது படகுக்காரப் பையனைக் கேட்டேன், “தம்பி, உனக்கு நீந்தத் தெரியுமா?”

என்னுயிர்க் கண்ணம்மா

“காற்றின் முகத்தில் - ஒரு கடுதாசி எழுதி விடு கண்ணம்மா - காத்திருக்கிறேன்” என்று முடிகிற கவிதையொன்று “போர்க்காலப் பாடல்கள்” என்ற கவிதைத் தொகுதியில் உள்ளது. புத்தகக் குவியல்களுக்குள் இத்தொகுதியைப் பார்த்தால் ஒரு சிட்டுக் குருவி போல் தோன்றும். 1998ம் ஆண்டு வெளியான இந்தக் கவிதைத் தொகுதிக்கு அவ்வாண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுதிக்கான “விபவி” பரிசு கிடைத்தது ஞாபகமிருக்கிறது. 1995ல் எழுதப்பட்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமான அன்பின் கண்ணம்மாவுக்கு என்ற அந்தக் கவிதை பேசும் சமாச்சாரம் சாதாரணமான ஒன்றல்ல. விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் உருவான கவிதைகளிலும் கதைகளிலும் பல்லாயிரம் துயரச் சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன. எந்தவித எழுத்துக்கும் உட்படாத ஆயிரமாயிரம் சம்பவங்கள் இன்னும் வெளிவராமலும் உள்ளன. இன முறுகலின் விளைவாக ஏற்பட்ட மேனி சிலிர்க்கும் துன்பியல் விவகாரங்களின் பின்னணியில் மனிதாபிமானம் பேணப்பட்ட சம்பவங்களும் ஏராளம் உள்ளன. போராட்டம், இனவெறி என்பவற்றுக்கெல்லாம் அப்பால் மனிதாபிமானம் முன்னிடம் வகித்த ஒரு சம்பவத்தையே மேற்சொன்ன கவிதை பேசுகிறது. கல்குடா ரயில் மறிப்புப் போராட்டம் வாழைச்சேனை - ஏறாவூர் ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள தேவநாயக புரத்தில் நடந்தது. விடுதலையின் பெயரால் ஆயுதம் ஏந்திய நபர்கள் ரயிலை வழிமறித்து மற்றொரு சிறுபான்மையினத்தாரைத் துரத்திச் சுட்டனர். “நிசப்தத்தைக் கொன்ற நீசர்கள் - எமது பெண்டிர் நெற்றியில் - குருதியால் பொட்டிட்டனர் கண்ணம்மா.... - ......தொலைந்தனர்மனிதர் - குழந்தைகளாய் - குருதியில் குளித்தனர் மனிதர்” என்று நகர்கிறது கவிதை. “வெம்பி மணலில் கால் புதைய - நெருஞ்சி முள் கிழித்துக் - குருதி கொப்பளிக்க - மூன்று மைல்கள் மூச்சுப் பிடித்து ஓடிவந்து” ஒரு வீட்டின் வாசலில் விழுந்தான் அந்த முஸ்லிம் இளைஞன். அது தமிழ்க் குடும்பம் வாழும் வீடு. அக்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் துரத்தி வந்தவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தனது கால்களுக்கிடையில் தான் அணிந்திருந்த நீள் பாவாடைக்குள் அவனை மறைத்துக் கொண்டு நிற்கிறாள். வந்தவர்கள் சந்தேகப் பார்வையுடன் திரும்பி விடுகிறார்கள். கவிதை தொடர்கிறது... “இந்தப் பிரதேசத்தை - நமது பிரதேசம் என்று - நம்பிக்கையூட்டியவளே - இரத்தம் சொட்டச் சொட்ட - நான் ஓடிவந்த பாதையை வெறித்து - நீயும் என் ரத்தம்தான் என்றாயே” கடைசியில் ராணுவ முகாமில் அப்பெண் அவனை ஒப்படைத் துத் திரும்பும் போது தூரத்தில் இரு புள்ளிகளாய் யாரோ அவளை நெருங்குவதை அந்த இளைஞன் கண்டான். அப்பெண் குறித்து இரக்கத்துடன் கவிதை வரிகள் பேசுகின்றன. “அப்புறம் - என்ன நடந்தது கண்ணம்மா?” என்ன நடந்திருக்கும்? அவனுக்குப் பதிலாக கண்ணம்மா உயிரை இழந்திருக்கலாம். இல்லையேல் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம். அவளைத் தண்டித்தவர்கள்; சிலவேளை இறந்து விட்டிருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு மேலைத்தேச நாட்டில் உட்கார்ந்து கொண்டு மனிதாபிமானம் குறித்துக் கவிதை அல்லது கதை எழுதிக் கொண்டிருக்கவும் கூடும். யார் கண்டார்கள்? இக்கவிதையை எழுதியவர் ஏ.ஜி.எம்.ஸதக்கா. கல்குடாப் பிரதேசத்தில் எண்பதுகளுக்குப் பிறகு தோன்றிய குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவர். “இமைக்குள் ஓர் இதயம்” என்ற ஒரு சிறு தொகுதியை 1988ல் வெளியிட்டவர். (இனப் பிணக்குக் குறித்த கவிதைகளை எழுதிய இப்பிரதேசத்தின் ஏனையவர்களுள் வாழைச் சேனை அமர், எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், பாலை நகர் ஜிப்ரி ஆகியோர் முக்கியமானவர்கள். அமர், “விடுதலையின் நிகழ்வுகள்” என்றொரு சிறு தொகுதியை 1985ல் வெளியிட்டார். இவரது “நீ வரும் காலைப் பொழுது” கவிதைத் தொகுதி 2004ல் வெளிவந்தது. எஸ். நளீமின் கவிதைத் தொகுதிகளாவன “கடைசிச் சொட்டு உசிரில்”-2000, “இலை துளிர்த்துக் குயில் கூவும்” - 2008. அறபாத்தின் கவிதை நூல்கள்:- “எரி நெருப்பிலிருந்து” - 1996, “வேட்டைக்குப் பின்” - 2002. ஜிப்ரி இன்னும் கவிதை நூல் வெளியிடவில்லை.) ஸதக்காவின் கவிதை சொல்லும் கண்ணம்மாவின் மனிதாபி மானம் உன்னதமானது. ஓர் இளம் பெண் தனது அந்தரங்கம் பற்றி ஆதங்கம் கொள்ளாமல் ஓர் அந்நிய இளைஞனின் உயிர் காத்து மறைத்து நின்றாள் என்பது உரக்கச் சொல்லப்பட வேண்டியது. வர்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பால், அதற்கும் அப்பால் உறைந்த மௌனத்தால் கௌரவிக்கப்பட வேண்டியது. சமாதானம், தியாகம், விட்டுக் கொடுப்பு குறித்துப் பேசும் ஆயிரமாயிரம் புத்தகங்களை விஞ்சி நிற்பது. இந்தக் கவிதை ஏன் மேலெழவில்லை என்பதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டால் நான் சிலரின் சொல் லெறிக்கு ஆளாக நேரலாம் என்பதால் தவிர்த்துக் கொள்கிறேன். இலக்கிய உலகத் துயரங்களும் சாபங்களும் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? மனிதாபிமானம் குறித்துப் பேசப்படும் உரைகளாலும் எழுத்துக்களாலும் சட்டங்களாலுமே மனிதாபிமானம் உயிர் வாழ்கிறது என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! அது கண்ணம்மா போன்றவர்களால் மாத்திரமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
24.02.2008

Sunday, May 17, 2009

999ம் வருடம் ஆகஸ்ட்டில் எனது முதலாவது கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. அந்த வேளையில் அது ஓர் அழகான அமைப்பில் வெளிவந்துள்ளதாகப் பலரும் சொன்ன போது சந்தோஷமாகத்தான் இருந்தது. அட்டைப் படத்தைத் தேர்ந்து தந்த ஷகீபையும் அதை அச்சிட்டுத் தந்த ஜௌஸகியையும் அவ்வேளைகளில் நன்றியோடு என் மனம்; நினைத்துக் கொள்ளும். கல்யாணத் தடபுடலில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அழைப்பு விடுக்க மறந்து விடுவது போல எனக்கும் நடந்துவிட்டது. ‘கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டு விடு’ என்று, காணுந்தோறெல்லாம் அன்புடன் நச்சாpத்துக்கொண்டிருந்த நண்பன் மேமன் கவியினதும் மணிக்கவிதை எழுதத் தொடங்கிய போது போஸ்ட் கார்டில் நட்பு வளா;த்த நண்பன் ஸ்ரீதர் பிச்சையப்பாவினதும் சந்திக்கும் போதெல்லாம் பிளேன்hpயோடு கவிதைகள் பற்றிக் கதைத்த எம்.எச்.ஷம்ஸினதும் பெயர்களை நூலில் குறிப்பிடத் தவறிவிட்டேன். உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அடுத்த கவிதை நூலை வெளியிடும் போது பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். கவிதை நூலை வெளியிடுவதென்பது ஒரு பெண்ணின் தலைப் பிரசவம் போல. கவிதைப் புத்தகம் என்றில்லை’ புத்தகம் வெளியிட்ட எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். கவிதைப் புத்தகம் என்றால் அவஸ்தை சற்று அதிகமாகத்தான் இருக்கும். தனது நூலை வெளியிடும் தினத்தன்று கவிஞர்களுக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். பிறகுதான் பாரம் அழுத்தத் தொடங்கும். 1987, 88 காலகட்டத்திலேயே ஒரு தொகுதிக்கான கவிதைகள் என்னிடமிருந்தன. நூலை வெளியிடுவது சம்பந்தமான எனது முதலாவது ஏமாற்றத்தை நான் புத்தகத்தில் எழுதவில்லை. யாரையாவது சஞ்சலப்படுத்தும் என்றால் தவிர்த்துக்கொள்வது எல்லா வகையிலும் உகந்தது. புத்தகம் என்பது ஆகக் குறைந்தது அரை நூற்றாண்டுக்காவது நின்று நிலைக்கக்கூடியது. குப்பை என்று ஒரு நூல் பலராலும் புறக்கணிக்கப்பட்டாலும்கூட ஏதாவது ஒரு மூலையில் கிடந்து யாருடையதாவது வாசிப்புக்கு உட்படவே செய்யும். நூல் வெளியிடப் போகிறேன் என்று யாராவது என்னிடம் சொன்னால் அவசரமோ பதட்டமோ இன்றி மிகுந்த நிதானத்துடன் வேலைகளில் இறங்குமாறு நான் கேட்டுக்கொள்வதுண்டு. இப்படிப் பக்கம் பக்கமாக நான் பாh;த்துப் பாh;த்து இழைத்ததுதான் எனது புத்தகம். எனக்கு சகோதாpகள் இருவர். இருவருக்கும் நான்கு ஆண் குழந்தைகள். இளைய சகோதாpக்கு மூவரும் ஆண்கள். மூத்த சகோதாpக்கு ஒருவன். இளைய சகோதரியின் மூத்த பையனான அப்ஸல் அலியும் மூத்த சகோதாpயின் பையனான அப்னாஸ் அலியும் கிட்டத்தட்ட ஒரே வயதொத்தவர்ள். விளையாடுவது, பாடசாலை செல்வது, டியூஷன் வகுப்புப் போவதெல்லாம் ஒன்றாகத்தான். இரண்டாம் ஆண்டில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். எனது கவிதைப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு இருவரும் ஒருமுறை இழுபறிபட்டதாக அறிந்தேன். ‘இது மாமாவின் புத்தகம் தா...’ என்று ஒருவன் சொல்ல, ‘அவர் எனக்கும் மாமாதான்’ என்று மற்றவன் சொல்ல, கொஞ்ச நேரம் தாக்;கமும் சண்டையும் இடம்பெற்றுக் கடைசியில் அப்னாஸ் அலி வெற்றியடைந்து, அதை எடுத்துக் கொண்டு சென்று தங்கள் வீட்டுச் சமையலறைக்குள் வைத்துக் கொண்டான். அப்னாஸ் அலி - காற்று! பூமியில் அவன் நடந்து போவதைக் காண்பது அhpது. ஓட்டத்திலேயே எல்லாக் காhpயங்களையும் பாh;ப்பான். என்னை எதிர்கொள்ள மிகுந்த சங்கோஜப்படுவான். இவ்வளவு காலத்துக்கும் நேரெதிரே என்னுடன் கதைத்திருப்பது ஓரிரு வார்த்தைகள் தாம். அவற்றில் நான் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவன் தந்த விடைகளே அதிகம். ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று பெருநாளைக்கு என்று சுடப்பட்ட நான்கைந்து முறுக்குகளை அப்னாஸ் அலி கைகளில் வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரெனச் சமையலறைக்குள் நுழைந்தான். எதையோ அவசர அவசரமாகத் தேடினான். அவனது கண்ணில் பட்டது எனது கவிதை நூல். விhpத்து ஒரு தாளைச் ச்சர்... எனக் கிழித்துக் கைகளிலிருந்த முறுக்குகளை அதில் வைத்துச் சுற்றினான்’ காற்றாய்ப் பறந்து போனான்! இதனை அவதானித்துக்கொண்டிருந்த என் மனைவி, ஊhpலிருந்து கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த பயணத்தில் இதனை எனக்குச் சொன்ன போது முதலில் சிரிப்பு வந்தது. அப்னாஸ் அலியின் செயல் குறித்துப் பிறகு சிந்தித்துப் பாh;த்தேன். அவனுடைய வயதுக்குhpய சிந்தனையில் அவனுடைய அப்போதைய பிரச்சினை முறுக்குகளைச் சுற்றுவதற்கு ஒரு தாள் வேண்டும் என்பதே. எந்தப் புத்தகம் அவ்விடத்தில் இருந்தாலும் அவன் அதைக் கிழித்துத்தான் இருப்பான் என்ற முடிவுக்கு நான் வந்தேன். சிறுவா;கள்தானே, அப்படித்தான் நடந்து கொள்வாh;கள்’ இதையெல்லாம் எழுதுவது அவசியமா? என்று ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். கவிதைகள் பற்றிய விமா;சனங்களைச் செய்வோர் அவ்வப்போது அப்னாஸ் அலி போன்றும் நடந்து கொள்கிறார;கள் என்பது அக்கேள்விக்கான எனது பதிலாகும். தீர்க்க வர்;ணம்
19.08.2007