Friday, August 26, 2016

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2016 - கொழும்பு


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இவ்வருடம் டிஸம்பர் மாதம் 10,11,12 ஆகிய தினங்களில் நடைபெறும் என மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


இந்தத் தகவல்களை பொது வெளிக்குத் தெரிவிக்கும் நோக்கில் அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றும் போது,

இலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற விடயம் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒரு பொன் விழா நிகழ்வாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் தெரிவித்தனர்.

இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால் இந்நிகழ்வை உள்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஓர் எல்லைக்குட்பட்ட வகையில் சர்வதேச மாநாடாக நடத்தும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு என்னாலான பங்களிப்பை வழங்குவது என்றும் அவர்களுக்குச் சொன்னேன்.

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இந்த மாநாட்டுக்கு என்னைத் தலைமை தாங்கும்படி வேண்டு கோள் விடுத்தது. இலங்கை முஸ்லிம்களது மட்டுமல்ல உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒரு முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டேன்.

இந்த வகையில் இந்த மாநாட்டுக்கு நான் தலைவராகவும் கௌரவ. பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் பிரதித் தலைவராகவும் இருப்போம்.

மாநாட்டை வழி நடத்திச் செல்லும் குழுவுக்கு
.இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும்  பொதுச் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீனும் அவர்களது குழுவினரும் மாநாட்டை நடத்தும் பணியை முன்னெடுப்பார்கள்.

இந்த நிகழ்வில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் விசேட அழைப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.குறிப்பாக இளைய தலைமுறை எழுத்தாளர்களை இம்மாநாட்டில் பாராட்டவும் ஏற்கனவே கௌரவம் பெறாத மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் எண்ணியுள்ளோம்.

 இந்த மாநாட்டை இவ்வருடம் டிஸம்பர் 10,11,12 ஆகிய தினங்களில் றபீஉல் அவ்வல் - றசூலுல்லாஹ் பிறந்த திகதி உள்ளடங்கலாக - வருகிறது. இந்தத் திகதிகளில் கொழும்பில் நடத்தவுள்ளோம்.

அத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளேன் என்று தெரிவித்தார்.


கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் உரையாற்றுகையில்,

Thursday, August 4, 2016

காத்தான்குடி காயங்கள் - ஒரு தமிழகக் கவிஞனின் குறிப்பு!

கவிஞர் தக்கலை ஹலீமா

நேற்று (03-08-2016) காத்தான்குடி (ஷஹீதுகளின்) அமரத்தியாகிகளின் 26 வது நினைவு தினத்தையொட்டி கவிஞர் அஷ்ரஃப் ஷிகாப்தீனின் கவிதையொன்றை அவரது முகநூலில் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். வார்த்தை மாமிசங்களிலிருந்து இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது.
 காத்தான்குடி ஷஹீதுகளின் ரத்தம்.

”நதிக்கரைகள் ஓரமெல்லாம் மனிதகுலம்
நாகரீகத் தொட்டில்கட்டி ஆடுமுன்பே
உதித்தெழுந்த மொழிக் குடும்பத் தலைவியான
ஓங்குபுகழ் தமிழினத்தின் திருநாள் வருக”
கடைவீதி சென்றிங்கே கரும்பை வாங்கி
காணுகின்ற தமிழரெல்லாம் பொங்கலோ பொங்கலென்றார்- ஈழ
படைவீதி கண்டு நிற்கும் புலிகள் கைகள்
பற்றியது கரும்பல்ல தோக்குகளாகும்
செந்நெல்லோ ரவை துளைத்த ரத்தத்துளிகள்”

என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு நான் தமிழ் ஈழ விடுதலைப் போரின் மறம்பாடிக் கொண்டிருந்த 1980கள். 1990களில் விடுதலைப் புலிகள் இலங்கை இஸ்லாமிய தமிழினத்தை மதத்தின் அடையாளம் கொண்டு காணமுற்பட்டதின் விளைவாக தமிழ் இஸ்லாமிய குடும்பங்களும் கிராமங்களுமே கூட புலிகளின் தாக்குதலுக்குரிய இலக்குகளாகின.

அதில் ஒன்றுதான் காத்தான்குடி. பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த வாலிபர்கள், முதியவர்கள், பாலகர்கள், என மொத்தம் 103 முஸ்லீம்களை புலிகள் சுட்டு வீழ்த்தியது மட்டுமல்ல புலிகள் நடத்திய மின்கம்ப கொலைகள். - இந்த சம்பவங்களுக்கு பிறகுதான் என் போன்ற மானுடம் நேசிக்கும் பாடிகளெல்லாம் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தின் திசைமாறியப் பயணத்தை உணர்ந்து கொண்டோம்.
 
2002 ல் இலங்கை கப்பற்துறை அபிவிருத்திஅமைச்சும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் இணைந்து நடத்திய முதலாவது உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டின் கவியரங்கில் பங்கேற்கும் பந்நாட்டு கவிஞர்களில் ஒரு கவிஞராக அங்கு சென்றிருந்தேன்.


அந்தக் கவியரங்கமும் காத்தான்குடி துயர நினைவுகளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அன்றுதான் நார்வே அமைதிக்குழுவும் இலங்கைக்கு வந்திருக்கிறது. கவியரங்கம் தொடங்குகிறது. அரங்கில் கவிஞர்கள் பத்து பேர் இருக்கின்றோம். கீழே பார்வையாளர் வரிசையில் B.H. அப்துல் ஹமீது மாண்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம், காப்பியக்கோ ஜின்னா ஷரீபுதீன், கவிக்கோ அப்துல் றகுமான் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அமர்ந்திருக்கிறார்கள்.

என்னுடைய முறை வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிவப்புக் கம்பளத்துக்கு சாயம்பூசிட பக்தாத் குழந்தைகளின் பச்சை ரத்தம் பர்மாறப்பட்ட துயரங்கள், பாலஸ்தீன பிள்ளைகள் கழித்தல் குறிகளாக கபறுஸ்தானத்தில் கிடத்தப்பட்ட துயரங்கள். ஜார்ஜ் புஸ்ஸை பிர்அவ்னாக நினைத்துக் கொண்ட ஆவேசம் என் நரம்புகளில். மூஸாவின் கைக்கோலாக என் பேனா திமிர்கிறது. எனக்கு கவிதை தலைப்பு “மூஸாவின் கைக்கோல்” இலங்கையில் காத்தான்குடி துயரத்தின் நினைவு என் கண்ணீரை திராவகம் ஆக்கியபோது அந்தக் கவிதையில்....

“காத்தான்குடி ஜனாஸா அடுக்குகளிலிருந்து எழுந்து வந்திருக்கும் – என் காலத்தின் கிழக்குகளே” என்று மேடையில் நான் அழைக்கின்றேன். ஆயிரம் பேர் இருந்த அந்த அரங்கமே அதிர்கிறது. பார்வையாளர் வரிசையிலிருந்த கவிக்கோ மெதுவாக இருக்கையிலிருந்து எழுகிறார். அன்றுகாலைதான் அவருக்கு லேசாக நெஞ்சுவலி வந்து டாக்டர் ஹிமானா சையத் மருத்துவம் பார்த்தார். கவிக்கோ மேடையை நோக்கி மெதுவாக நடந்து வருகிறார். மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் ஷிகாப்தீன் ஓரமாக நின்றவர் நின்றபடி நிற்கிறார். நானும் படிப்பதை நிறுத்திவிட்டு கவிக்கோவையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.

என்னை மேடையில் இறுகத் தழுவிய கவிக்கோ அன்று மாலை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அவருக்கு அணிவித்த பொன்னாடையை எனக்கு போர்த்திவிட்டு உண்ர்ச்சிகள் கொப்பளிக்க அமைதியாக அப்படியே இறங்கிச் செல்கிறார். அவர் இருக்கைக்கு திரும்பி சென்று இருந்தபின் கவிதையை மீண்டும் தொடர்ந்தேன்.

அந்த பொன்னாடையை மட்டும் என் காலத்திற்குப் பிறகும் பாதுகாத்திட என் மனைவி பிள்ளையிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஏனென்றால் அது காத்தான்குடி ஷஹீதுகளின் கபனிலிருந்து நெய்த பொன்னாடை

அஷ்ரப் ஷிகாப்தீனின் நேற்றைய முகநூல் நினைவாஞ்சலி ஏனோ எனை நேற்று தூங்கவிடவில்லை.

(நண்பரும் பிரபல மேடைக் கவிஞருமான தக்கலை ஹலீமா அவர்களின் இந்தக் குறிப்பு அவரது முகநூல் பக்கத்திலிருந்து நட்புரிமையுடன் இங்கு மீள்பதிவாகிறது. ஒரு சில இடங்களில் சிறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். உதாரணமான - அமைச்சின் பெயர், இலக்கிய ஆய்வகத்தின் பெயர். நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.)

Wednesday, August 3, 2016

இலக்கியவாதிகள் புண்ணாக்கு மடையர்களா?



பிரதம ஆசிரியர்
நவமணி
தெஹிவளை

அன்புடையீர்

ஆகஸ்ட் 3ம் திகதிய தங்களது 'நவமணி' பத்திரிகையின் கலைவாதி கலீல் தொகுத்து வழங்கும் 'ஜலதரங்கம்' என்ற 6ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள சர்தார் என்பவர் எழுதிய 'இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் - இனியாவது திருந்துவார்களா?' என்ற கட்டுரையின் பால் உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன்.

காயல்பட்டினத்தில் நடந்த ஒரு இலக்கிய மாநாட்டின் இலங்கை இணைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தவன் என்ற வகையிலும் அதில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் சென்னையில் நடைபெற்ற இரண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் அதில் ஒன்றில் இலங்கை இணைப்பாளனாக இருந்தவன் என்ற வகையிலும் - 2002ல் இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளர் என்ற வகையிலும் தற்போது நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய இஸ்லாமிய இலக்கிய விழாவை நடத்தும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் என்ற வகையிலும் மேற்குறித்த கட்டுரைக்குச் சில விளக்கங்களை வழங்க வேண்டியவனாக இருக்கிறேன்.

சர்தார் என்பவர் எழுதிய கட்டுரையானது நான் மேற்குறித்த மாநாடுகள், இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழா குறித்த ஐயங்கள் குறித்துப் பேசுவதால் அக்கட்டுரையில் நான் விடையிறுக்கத் தகுந்த அம்சங்கள் பற்றி மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

சர்தார் என்பவர் எழுதிய இக்கட்டுரையின் கடைசிப் பந்திக்கு முன் பந்தியில் 'பேராசிரியர் அல்லாமா உவைஸ் இலங்கையில் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிலும் கடுமையாக உழைத்தவன் என்ற வகையிலும் குழுவிலிருந்த வடபுலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும்' என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு சர்தார் என்ற நபர் இப்பக்குத் தொகுப்பாளரான கலைவாதி கலீல்தான் என்று விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்த போதும் - ஒரு வசதிக்காக அதை சர்தார்தான் எழுதினார் என்று கொண்டு சில விடயங்களுக்குப் பதில்தர நாடுகிறேன்.

கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களில் என்னை மிகவும் உறுத்தியது பிரதேச ரீதியாக இலக்கியவாதிகளைப் பிரித்துப் பேசியமையாகும். இதைக் குறித்த நபர் பேசுவதற்கான காரணம் என்ன என்பதைச் சொல்வதற்கு முன்னர் அவரது குற்றச் சாட்டுக் குறித்துப் பேச விரும்புகிறேன்.

காயல்பட்டின மாநாட்டில் நான்கு கிழக்குக் கவிஞர்கள் கவிதை படித்தது சர்தாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு அந்த எரிச்சல் வந்ததற்குக் காரணம் அவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்ததுதான். உண்மையில் காயல்பட்டின மாநாட்டில் கவிதை படிப்பதற்கு இலங்கை இணைப்பாளர்கள் கவிஞர்களைச் சிபார்சு செய்யவில்லை. கவிதை படிக்க விரும்புவோர்  கவிதைகளை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு நேரடியாகவே அனுப்பியிருந்தார்கள். கவிஞர் தெரிவை மாநாட்டுக் குழு தீர்மானித்தது. சர்தாரும் ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தால் சில வேளை அவருக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கலாம், அது கவிதையாக இருந்தால்!

இன்னொரு இடத்தில் 'இதுதான் எனது ஆதங்கம்... இத்தகைய இலக்கிய விழாக்கள், சர்வதேச மாநாடுகள் நடைபெறும் வேளைகளில் அறிஞர்களாக, ஆய்வாளர்களாக அழைத்துச் செல்லப்படுபவர்களெல்லாம் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தவர்களே!' என்று சொல்கிறார். இது எத்தகையதொரு அடிமுட்டாள்தனமான கருத்து. மாநாடு ஒன்று நடைபெறுதாக இருந்தால் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியோரை ஆய்வரங்கில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்புவார்கள். ஆய்வரங்கில் கலந்து கொள்ளாத இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கூட அங்கு பேராளராகச் செல்லலாம். அதில் இதுவரை எந்தத் தடையும் இருந்ததில்லை. நான் இலங்கைக்கு வெளியில் கலந்து கொண்ட எந்த மாநாட்டிலும் கட்டுரை படித்ததில்லை. ஆனால் சென்று இலக்கியச் சுவையுண்டு வந்திருக்கிறேன். என்னைப் போல பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்பவர்களது நலன் கருதியே ஒரு குழுவாக அவர்கள் இணைப்பாளர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அக்குழுவோடு செல்ல விரும்பாதவர்கள் தனித்தும் சென்றிருக்கிறார்கள். வேறு குழுவாகவும் சென்றிருக்கிறார்கள். ஆனால் எப்படிச் சென்றாலும் மாநாடு நடத்தும் நிர்வாகத்தோடு முதலில் தொடர்பு கொள்ள வேண்டும்.

சர்தார் விரும்பியிருந்தால் அங்கு சென்றிருக்கலாம். அப்படி சர்தார் முயன்று அவர் மறுக்கப்பட்ட பொழுதுகள் உண்டா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கலந்து கொள்ள விரும்பியவர்கள் செல்கிறார்கள்.. அவர்கள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தால் யாருக்கு என்ன பிரச்சனை? சர்தாருக்கு ஏன் எரிச்சல் வரவேண்டும்?

'ஏற்பாட்டுக் குழுவினர் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்கிறார்கள்' என்றும் ஒரு குற்றச் சாட்டை முன் வைக்கிறார் சர்தார். மாநாட்டை நடத்துபவர்கள் யார், யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்புதல் பெற்ற பின் உத்தியோகக் கடிதம் மூலம் அறிவிக்கிறார்கள். அவர்கள் யார் பொருத்தம் என்று கருதுகிறார்களோ அவர்களை நியமிக்கிறார்கள். அவர்களுடன் ஒத்துழைக்கக் கூடியவர்களை நியமிக்கிறார்கள். அது எப்படித் தன்னைத் தானே நியமிப்பது ஆகும்.

அவரது அடுத்த குற்றச் சாட்டானது என்னவெனில் 'தற்போது நடைபெறவுள்ள இலக்கிய விழாவிலும் முழுக்க முழுக்கக் கிழக்கு மாகாணத்தவர்தான் இடம்பெற்றுள்ளார்கள்' என்பதாகும்.

2002 ம் ஆண்டு இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய மாநாட்டை நடத்திய அமைப்பு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமாகும். இந்த அமைப்பு 1999ல் சென்னை மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு குழுவினரால் அங்கேயே தோற்றுவிக்கப்பட்டது. இதில் அல்ஹாஜ் நூர்தீனைத் தவிர ஏனைய அனைவரும் கிழக்கின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதில் யாருக்கு என்ன பிரச்சனை? ஒரு குழுவினர் சேர்ந்து ஒரு மாநாட்டை நடத்துவதால் ஏன் இன்னொருவருக்கு அரிப்பு வரவேண்டும்?

2002ல் நடந்த கொழும்பு மாநாட்டுக் குழுவில் அங்கத்துவம் வகித்த 15 பேரில் 7 பேர் கிழக்கைச் சேர்ந்தவர்கள். 7 பேர் கிழக்குக்கு வெளியில் உள்ளவர்கள். ஒருவர் பொது. அரச அதிகாரி. நான் சொல்வது பொய்யில்லை என்பதற்கு மாநாட்டு மலரின் முற்பக்கத்தைப் புகைப்படமாகத் தந்துள்ளேன்.


நான் சொல்வது உண்மை என்பதனை 'ஜலதரங்கம்' பக்கத்தைத் தொகுக்கும் கலைவாதி கலீலிடம் கேட்கலாம். ஏனெனில் அவரும் அந்தக் குழுவில் ஓர் அங்கத்தவராவார். அது மட்டுமன்றி அம்மாநாட்டில் பொன் முடிப்பு வழங்கப்பட்ட எழுவரில் கலைவாதி கலீலும் ஒருவராவார். (படம் இணைக்கப்பட்டுள்ளது) பண முடிப்பு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட எழுவரில் ஒருவர் தவிர ஏனைய அனைவரும் கிழக்குக்கு அப்பால் வாழ்பவர்களாவர்.



இக்கட்டுரையில் பின்னணியில் நான் புரிந்து கொண்ட விடயங்கள் சில உள்ளன.

வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்குச் செல்வோருக்கு இலவசமாக விமானச் சீட்டுக் கிடைக்கிறது அல்லது குறைந்தது ஏற்பாட்டாளர்களுக்கு இலவச விமானச் சீட்டுக் கிடைக்கிறது என்று சர்தார் அப்பாவித் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி எதுவும் கிடையாது. நாம்தான் தமிழகத்தவரை விமானச் சீட்டுக் கொடுத்து அழைக்கிறோமே தவிர அவர்கள் ஒரு போதும் தந்ததாக எனக்குத் தெரியாது.

கிழக்கு வாழ் படைப்பாளிகளைப் பிரதேச ரீதியாகப் பார்த்துப் பிரிக்கும் சர்தார் வடபுலத்தைச் சேர்ந்தவர் என்று உணர்கிறேன். அங்கு விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே படைப்பாளிகள். அதற்குள் மூத்த படைப்பாளி வகைக்குள் தான் வரவேண்டும், எல்லா இடத்திலும் புலம் பிரித்;துப் பேசினால்தான் தனக்கு எல்லா இடத்திலும் ஒரு இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார் போல் தெரிகிறது.

இப்போது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விழாவுக்கு இதுவரை மாநாட்டுக் குழு நியமிக்கப்படவில்லை. நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விழா நடைபெறுவதற்கு முன்னால்  'கிழக்குப் பிரதேசவாதத்தைத் தூண்டினால் ஓர் இடம் கிடைத்து விடும் என்று சர்தார் எதிர்பார்க்கிறார். அதை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சி வெகுளித் தனமானது!

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற இயக்கம் முன்னின்று செய்யும் இந்த விழாவில் அது விரும்பினால் யாரையும் சேர்க்கலாம். யாரையும் தவிர்க்கலாம். அதற்கு அவ்வியக்கத்துக்குப் பூரண சுதந்திரம் உண்டு. யாரும் அதைக் கேள்விக்குட்படுத்த முடியாது. விரும்பியவர் இணையலாம், விரும்பாதவர் விலகி நிற்கலாம். பதவி, பட்டம், முன்னிலை ஆகியவற்றை எதிர்பார்த்துப் பிரதேசவாதம் பேசும் யாருக்கும் இங்கு இடங்கிடையாது!



அஷ்ரஃப் சிஹாப்தீன்
பொதுச் செயலாளர்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்
03.08.2016

குறிப்ப - வடக்கு இலக்கியவாதிகள் புண்ணாக்கு மடையர்களா? என்று சர்தார் தனது கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்வியைத் தலைப்பாக்கியுள்ளேன்.