Friday, January 31, 2014

ரியூனிஸியாவின் இலக்கிய ரோஜா!


இனாஸ் அப்பாஸி - Ines Abassi


சமகால அரபு இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க டியூனிஸியக் குரலாக விளங்கும் இனாஸ் அப்பாஸி கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகங் கொண்டவர்.

2004ம் ஆண்டு வெளியான 'காற்றின் இரகசியம்' என்ற அவரது முதலாவது கவிதைத் தொகுதி அவ்வாண்டின் சிறந்த கவிதைத் தொகுதியாகத் தெரிவு செய்யப்பட்டது. ‘Archive of Blind’ என்ற மற்றொரு கவிதைத் தொகுதி 2007ல் எகிப்தில் வெளியிடப்பட்டது. இக்கவிதை நூலுக்கு ரியூனிஸியாவின் பெண்கள் ஆய்வு மற்றும் பதிவுத் தொகுப்பு அமைச்சின் விருது வழங்கப்பட்டது. இது தவிர கொரியாவிக் மீதான தனது பார்வையை "Tales of Korean Shahrazad" என்றொரு நூலை 2009ல் எழுதியிருக்கிறார்.


“ஹஷாஷா” சிறுகதைத் தொகுதி

'ஹஷாஷா' - வலுவற்றது - என்ற சிறுகதைத் தொகுதி கடந்த வருடம் லெபனானில் வெளிவந்திருக்கிறது.

முழுநேரமும் எழுத்தோடு தொடர்பு பட்டு வாழும் இவர் ஐக்கிய அமீரகத்தின் 'இத்திஹாத்', லண்டனில் வெளியாகும் 'அல் அரப்', ரியூனிசியாவின் 'அல் ஷபா' மற்றும் 'அத்தற்கஃபியா' ஜோர்தானின் 'அல்வத்தன்' லெபனானின் 'கிதாபத் முஆஸரா' ஆகிய பத்திரிகை சஞ்சிகைகளிலும் இணையத் தளங்களிலும் பங்களிப்புச் செய்து வருகிறார்.

ஓமான், ஜோர்தான், கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் டென்மார்க் போன்ற தேசங்களில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாக்களில் கலந்த சிறப்பித்த இனாஸ் அப்பாஸியின் 'போர்' என்ற சிறுகதை டெனிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அற்றவர்கள் அனாதைகள் எனப்படுகின்றனர். சட்டபூர்வமற்ற பிறப்பு என அறியப்படுபவர்களும் அநேகமாக இந்த வகைக்குள் அடங்கி விடுகின்றனர். யாரோ செய்த பாவம் பிள்ளையைச் சேர முடியாது.

அநாதைகள் குறித்து கவனமாக நடந்து கொள்ளும் படி இஸ்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது. பெருநாள் தினத்தன்று தனியே அழுது கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பெருமானார் (ஸல்) எவ்வாறு அன்பொழுக நடத்தினார்கள் என்பது நமது முன்னால் பதிவாக இருக்கிறது.

லட்சக் கணக்கான தலைப்புகளில் கவிதைகள் எழுதப்படுகின்றன. ஆனால் ஓர் அநாதைக் குழுந்தையின் பார்வையில் வெளிவந்த ஒரு கவிதையைப் படித்திருக்க மாட்டோம். அந்தக் குறையை இனாஸ் அப்பாஸியின் கவிதை தீர்த்து வைக்கிறது. கைவிடப்பட்ட ஒரு குழந்தை தன்னை மற்றவர்கள் அழைக்கும் பொதுவான சொல் குறித்துச் சிந்திப்பதை இக்கவிதை பேசுகிறது. இதோ அவரது குரவில் ஒலித்த 'தகாவழிப் பிறப்பு' என்ற கவிதையின் தமிழ் வடிவம்:-

அந்தக் குழந்தை
இரவில் தனியே தெருவைக் குறுக்கறுக்கிறது

பகலில் அது
மரங்களின் கிளைகளுக்கிடையே
சுழன்று திரிந்து
பின்னர்
தனது தாயின் 
அதாவது 
சூரியனின் தாக்குதலுக்குள்
நித்திரை கொள்கிறது

தன்னைப் போன்ற
ஒருவனிடம் திருடிய கடற்சங்கு ஒன்றில்
சமூத்திரத்தின் ஓசையைச் செவியுறுகிறது

அக்குழந்தை
குறைபாடுகளுடையதும்
பல சொற்கள் பயன்படுத்தப்படாததுமான
மொழி பேசப்படுகின்ற -
தனது பெரிய வீட்டின்
மற்றவர்களுக்கும் உரியதான -
அந்த வீட்டின்
நீண்ட முன் விறாந்தையில்
சூனியக்காரிகளுடன் விளையாடுகிறது

அக்குழந்தை
உறங்குவதற்கு முன்னர்
மற்றொரு குழந்தையைக்
கனவு காண்கிறது...

ஒவ்வொரு இரவும்
அது
சொல்லின் அர்த்தத்தைத்
தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறது

Tuesday, January 21, 2014

காஸாவிலிருந்து ஒரு கடிதம்!


அன்புள்ள முஸ்தஃபா,

இப்போதுதான் உனது கடிதம் கிடைத்தது. ஸெக்ரமென் டோவில் உன்னுடன் நான் தங்கியிருப்பதற்கு அவசியமான எல்லா ஏற்பாடுகளையும் நீ செய்திருப்பதை உனது கடிதம் சொன்னது. கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் கற்பதற்கு எனக்கு அனுமதி கிடைத்திருக்கும் செய்தியும் எனக்குக் கிடைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும், அன்புள்ள நண்பனே.

ஆனால் நான் உனக்குச் சொல்லப் போகும் செய்தி உனக்கு விசித்திரமாகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். எப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் இருக்கும் சரியான, தெளிவான நிலை குறித்துச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. இல்லை, நண்பனே... நான் எனது மனதை மாற்றிக் கொண்டேன்.

நீ குறிப்பிட்டிருப்பதைப் போல 'பசுமையும் நீரும் அழகிய முகங்களும்' உள்ள இடத்துக்கு உன்னைத் தொடர்ந்து நான் வரப்போவதில்லை. இல்லை, நான் இங்கேயே இருக்கப் போகிறேன்| ஒரு போதும் இங்கிருந்து வெளியேறப் போவதில்லை!

ஒரே துறையில் நாம் வாழ்வைத் தொடரவில்லை என்பது எனக்கு உண்மையில் மிகவும் மனக் குறையாகவுள்ளது, முஸ்தஃபா. ஒன்றாகவே பயணிப்பது பற்றிய நமது உறுதி மொழியை நீ அடிக்கடி சொல்வது எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த வகையில் 'நாம் செல்வந் தர்களாவோம்' என்று அடிக்கடி நாம் சத்தமிட்டிருக்கிறோம். ஆனால் என்னால் செய்ய முடிந்தது எதுவுமில்லை, நண்பனே. ஆம்| உன்னு டைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கெய்ரோ விமான நிலை யத்தில் நின்றிருந்த அந்த நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அன்று என் முன்னால் நின்றிருந்த உனது வட்டமான முகம் அமைதி யாகவிருந்தது. இலேசான சுருக்கங்களைத் தவிர, காஸாவின் ஸாஜியா வில் வளர்ந்தபோது இருந்தது போலவே உன் முகம் மாறாமல் இருக் கிறது. நாம் ஒன்றாகவே வளர்ந்தோம்| ஒருவரையொருவர்; நன்றாகப் புரிந்து கொண்டிருந்தோம். கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டுடன் இருந்தோம். ஆனால்...

'விமானம் கிளம்புவதற்குக் கால் மணி நேரம் இருக்கிறது. இப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிராதே. கேட்டுக் கொள்! அடுத்த வருடம் நீ குவைத்துக்குப் போவாய். கிடைக்கும் உனது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமித்து எடுத்துக் கொண்டு காஸாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியாவுக்குச் சென்று உன்னை நிலை நிறுத்திக் கொள். நாம் ஓன்றாகவே தொடங்கினோம். ஒன்றாகவே தொடருவோம்!'

அந்தக் கணத்தில் வேகமாக அசையும் உனது உதடுகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். காற் புள்ளியோ முற்றுப் புள் ளியோ இல்லாமல் பேசுவது உனது பாணி. ஆனால் அந்த விமானப் பயணத்தில் நீ முழுமையாகத் திருப்தியடையவில்லை என்று என்னால் உணர முடிந்தது. அதற்கான நியாயமான காரணங்க ளெதையும் நீ தெரிவிக்கவில்லை. அந்த வலி எனக்கும் இருந்தது. ஆனாலும் 'ஏன் காஸாவைக் கைவிட்டு நாம் பறந்து விடக் கூடாது? ஏன் நாம் போகக் கூடாது?' என்ற தெளிவான சிந்தனையிருந்தது.

உனது நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குவைத்தின் கல்வியமைச்சு எனக்குத் தராத போதும் உனக்கு ஒரு தொழிலைத் தந்தது. அந்த அமைச்சினூடாக ஒரு சிறு தொகையை எனக்கு அனுப்பினாய். அவர்களிடம் நான் கடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினாய். ஏனெனில் நான் அசௌகரியப் பட்டு விடக் கூடும் என்று பயந்தாய். எனது குடும்பச் சூழல் பற்றி உள்ளும் புறமும் நீ அறிந்து வைத்திருந்தாய். எனக்குக் கிடைக்கும் சம்பளம் எனது தாயாரையும் எனது சகோதரரின் விதவையான மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் கவனிக்கப் போதுமான தாக இல்லை என்பதை நீ அறிந்திருந்தாய்.

'கவனமாகக் கேட்டுக் கொள். ஒவ்வொரு நாளும் எழுது... ஒவ்வொரு மணித்தியாலம், ஒவ்வொரு நிமிடம் பற்றியும் எனக்கு எழுது. விமானம் புறப்படப் போகிறது... நான் கிளம்புகிறேன்... இல்லை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை...'

உனது உதடுகள் எனது கன்னத்தில் பதிந்தன. விமானத்தின் பக்கம் நீ முகத்தைத் திருப்பிக் கொண்டாய். மீண்டும் நீ திரும்பி என்னைப் பார்க்கையில் உனது கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன்.

சில காலத்துக்குப் பின் குவைத் கல்வியமைச்சு எனக்கும் ஒரு தொழில் வாய்ப்பை வழங்கியது. அங்கு எனது வாழ்க்கை எப்படிக் கழிந்தது என்கிற விபரத்தை உனக்கு நான் திரும்பச் சொல்லத் தேவை யில்லை. எப்போதும் எல்லாவற்றைப் பற்றியும் நான் உனக்கு எழுதியிருக்கிறேன்.நான் ஒரு சாதாரணனாக இருந்த போதும் பசை போட்டு ஒட்டி வைத்தாற் போன்று மாட்டிக் கொண்டதான ஒரு வெறுமையை உணர்ந்தேன். கொடுந் தனிமையை அனுபவித்தேன். அலுப்பூட்டும் ஒரே விதமான வேலைச் சூழலில் அழுகும் நிலையிலி ருந்தேன். எல்லாமே சூடானதாகவும் ஒட்டிக் கொண்டது போன்றது மான ஒரு விசித்திரமான உணர்வு. எனது முழு வாழ்விலும் அது ஒரு சறுக்கல். சகலதுமே மாசக் கடைசியில் தங்கியிருந்தன.

வருட மத்தியில் ச:பாவில் யூதர்கள் குண்டு வீசினார்கள். காஸாவைத் தாக்கினார்கள். நமது காஸா கொழுந்து விட்டெரிந்தது. எனது வேலைச் சூழலில் அந்தச் சம்பவம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். ஆனால் நான் வெளியேற வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இத்தனை காலம் சிரமப்பட்டதற்காக எனக்குப் பின்னால் இருக்கின்ற காஸாவை விட்டுப் பசுமை மிகுந்த கலிஃபோர்னியாவுக்குச் சென்று எனக்காக நான் வாழ வேண்டும்| எனக்காக மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணினேன். காஸாவையும் அங்கு வாழ்வோரையும் வெறுத்தேன். நாலா புறமும் முற்றுகையிடப்பட்டுத் துண்டிக்கப்பட்ட நகரத்தின் சகல அம்சங்களுமே நோயுற்ற மனிதனொருவனால் சாம்பல் நிறத்தில் வரையப்பட்ட கோணல் மாணலான சித்திரங்களைப் போல் எனக்குக் காட்சியளித்தன.

ஆம்! எனது தாயாருக்கும் எனது சகோதரரின் விதவை மனைவிக்கும் நான்கு பிள்ளைகளுக்கும் அவர்கள் வாழ்வதற்காக ஒரு சிறு தொகைப் பணத்தை அனுப்பவேண்டியிருந்தது. இந்தக் கடைசி முடிச்சிலிருந்தும் கூட என்னை விடுவித்துக் கொள்ள எண்ணினேன். ஏழு வருடங்களாக எனது மூக்கை நிறைத்திருந்த தோல்வியின் துர் நாற்றத்திலிருந்து மிகத் தூரத்திலிருக்கின்ற அழகும் பசுமையும் நிறைந்த கலிஃபோர்னியாவை அடைய நினைத்தேன்.


கஸ்ஸான் கனஃபானி

என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் எனது சகோதரரின் குழந்தைகள், அவர்களது விதவைத் தாய் ஆகியோர் மீதான அனுதாப மானது செங்குத்தாக என்னைத் தள்ளும் எனது சோகங்களை விடப் பெரியவை அல்ல. கடந்த காலங்களைப் போல் என்னை மீண்டும் கீழே தள்ளிச் செல்ல நான் அனுமதிக்க முடியாது. நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்!

இந்த உணர்வுகளை நீ அறிவாய் முஸ்தஃபா. இவற்றில் உனக்கு உண்மையான அனுபவம் உண்டு. நாட்டை விட்டு ஓடிச் செல்லும் ஆர்வத்தை மழுங்கடித்த, காஸாவுடன் நாம் கொண்டிருந்த தெளிவாய் வரையறுக்கப்படாத  அந்த உறவுதான் என்ன? இதில் ஒரு தெளிவை அடைந்து கொள்வது பற்றி நாம் ஏன் ஆராய்ந்து பார்க்க வில்லை? இந்தக் காயங்களுடன் கூடிய தோல்வியைக் கைவிட்டு விட்டு ஆழ்ந்த ஆறுதலையும் பிரகாசமான எதிர்காலத்தையும் நோக்கி நாம் ஏன் நகரவில்லை. ஏன்? சரியாக அதை நாம் அறிந்திருக்க வில்லை.

Wednesday, January 15, 2014

கவிதை படிக்க வாரீகளா!


அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்திரா

இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக இன்று 15.01.2014ல் நடந்த வலம்புரிக் கவிதா வட்டம் (வகவம்) கவியரங்கில் கலந்து கொண்டேன்.

1985ம் ஆண்டு முதல் முறையாக கொழும்பு கொட்டாஞ்சேனை முஸ்லிம் மகாவித்தியாலய வகுப்பறைக்குள் மாதாந்தம் பௌர்ணமி தினத்தில் பங்கு பற்றியிருந்தேன். தொடர்ந்து நடந்த சில கவியரங்குகளில் கலந்து கொண்ட ஞாபகங்கள் இன்று மீண்டும் மங்கலாக வெளி வந்தது.

புகழ்பெற்ற 'ஸெய்த்தூன்' என்ற எனது கவிதை 'எழுச்சிக்குரல்' பத்திரிகையில் வெளிவருவதற்கு முன்னர் 'வகவம்' கவியரங்கில்தான் அரங்கேற்றப்பட்டது.

இப்னு அஸூமத், இளநெஞ்சன் முர்ஷிதீன், கலையழகி வரதராணி, பாலகிருஷ்ணன், எம்.நஜ்முல் ஹூஸைன், அல் அஸூமத், கலைக்கமல், கவின்கமல் ஆகியோர் இங்குதான் எனக்கு அறிமுகமானார்கள். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த மேமன் கவி, எஸ்.ஐ.நாகூர்கனி, ஸ்ரீதர் பிச்சையப்பா போன்றோருடனான நெருங்கிய நட்பு வலுப்பட்டதும் இங்குதான்.


கவியரங்கத் தலைமை கவிஞர் கலா.விஸ்வநாதன்

கால நீரோட்டத்தில் கைவிடயப்பட்ட 'வகவம்' மீண்டும் கடந்த மாதம் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. ஸ்தாபகத் தலைவர் கவிஞர் தாஸிம் அகமது, ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் ஆகியோர் கடந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டு, கவிஞர் என். நஜ்முல் ஹூஸைன், இளநெஞ்சன் முர்ஷிதீன், கலையழகி வரதராணி ஆகியோரை முறையே தலைவர், செயலாளர், பொருளாளராகக் கொண்டு கடந்த டிஸம்பரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக இலக்கிய ஆர்வலரும் விமர்சகரும் சட்டத்தரணியுமான ராஜகுலேந்திரா கலந்து கொள்ள கவிஞர் கலா விஸ்வநாதனின் தலைமையில் கவிதைகள் படிக்கப்பட்டடன.  பல்வேறு உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கவிதைகளை ஒவ்வொருவரும் அரங்கேற்றினார்கள்.

கவிஞர் கலைவாதி கலீல்

கவிஞர் கலைவாதி எழுத்து நுணுக்க உச்சரிப்புடன் தனது கவிதையை வெகு சுவையாக அரங்கேற்றினார். மேமன் கவி ஒரு படிமேலே போய் முதுகு சொறியும் தடியைச் சபைக்குக் காட்டியபடி 'முதுகு சொறிதல்' பற்றிச் சிரிப்புக்கூடாகவே சாட்டை வீசினார். கவிஞர் றவூப் ஹஸீர் இன்றைய பெரும்பான்மை அரசியல் பற்றிக் கவிதை சொன்னார். நான் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகனைப் படித்தேன். முஸ்தீனின் அமைதியான கவிதை வாசிப்பு அக்கவிதையின் ஆழத்தை நெஞ்சில் பதித்ததுடன் கவிதைத் துறையில் அவர் அடையாளப்படுத்தப்படுவதற்கான கட்டியமாக அமைந்திருந்தது.

திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹூஸைன், ஷாமிலா ஷரீப்

சமூகஜோதி ரபீக் தனது அடுக்கு வசனம் கொண்டு அலையெழுப்ப கிண்ணியா அமீர் அலி தனது மரபுக் கவிதையால் மனதைத் தொட்டார். தமிழ்த் தென்றல் அலி அக்பர், கவிதையைச் செப்பனிடுதல் பற்றிக் கவிதையில் வகுப்பெடுக்க, நாகூர் கனி  நபிகளாரின் ஹதீஸ்களில் உள்ள கவித்துவத்தைத் தொட்டுச் சென்றார். இறுதியாகக் கவிதை படித்த நண்பர் தனது சின்னச் சின்ன ஹைக்கூக்களால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

அறியப்படாத பலர் கவிதைகளோடு வந்து பங்கேற்றது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்ததுடன் ஒரு பெரும் கவிதை இயக்கமாக 'வகவம்' மாறிவிடும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.


கலையழகி வரதராணி, கவிஞர் நஜ்முல் ஹூஸைன், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன், கலா.விஸ்வநாதன், வேலணை வேணியன், ராஜகுலேந்திரா

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுதீன் மற்றும் கலா விஸ்வநாதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

காதிபுல் ஹக் எஸ்.ஐ. நாகூர்கனியின் மேற்பார்வையிலும் ஏற்பாட்டிலும் வழங்கப்பட்ட தேநீருக்கு ஒரு தனி நன்றி செலுத்தியாக வேண்டும். மிகவும் சுவையான ஒரு தேநீர் அது.


கலந்து கொண்ட கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள்

காலை 10.15க்கு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு பி.ப. 1.30க்கு திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைவுக்கு வந்தது.

(முதலாவது படத்தைத் தவிர ஏனைய படங்கள் நண்பர் மேமன் கவியின் முகநூல் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை. இப்படங்களை எடுத்தவர் - முஸ்தீன்)

Friday, January 10, 2014

தன்னை ரசிக்காத நடிகன்!


பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை அவ்வப்போது ஆங்கிலப் படங்கள் பார்க்கும் பொழுதுபோக்கு எனக்கிருந்தது. அதற்கும் சற்று முந்திய காலத்தில் ஆங்கிலப் படம் பார்ப்பதை ஒழுக்க மீறலான ஒரு செயலாகச் சமூகம் கருதியது என்பதை என் வயதொத்த, என்னை விட மூத்த நண்பர்கள் அறிவீர்கள். நான் அப்படியொன்றும் மோசமான படங்களை நோக்கிச் சென்றதில்லை. சிறு வயதிலேயே எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்தபடியால் அடிதடிப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். தமிழிலும் அடிதடிப் படங்கள் வருகிறதுதானே என்று நீங்கள் கேட்கலாம். அடிதடியைக் கூட ஆங்கிலப் படங்களில் மிகைப்படுத்தாமல் யதார்த்தமாகத்தான் சித்தரிப்பார்கள். சில நாட்களுக்கு முன்னர் பார்த்த தமிழ்ப் படத்தில் துப்பாக்கியிலிருந்து வரும் குண்டுகளைத் தலையைச் சாய்த்து, குனிந்தெல்லாம் கதாநாயகன் தவிர்ப்பதைக் காண திரையைக் கிழிப்பதா தலையை முட்டிக் கொள்வதா என்று தீர்மானத்துக்கு வர இயலாதவனாக அல்லல் பட்டேன்.

'ஜேம்ஸ் பொன்ட்' படங்களை விடவும் என்னைக் கவர்ந்த படங்கள் சார்ள்ஸ் புரொன்ஸனுடையவை. அந்தக் காலத்துக் கதா நாயகர்களுக்கு (ஆங்கிலத்திலும் கூட) அவசியமாகக் கருதப்பட்ட வசீகரங்கள் எதுவுமற்றவர் புரொன்ஸன். தன்னிடம் இருப்பதையே தனது பலமாக மாற்றிய வல்லமை கொண்ட கம்பீரமான மனிதனாக அவர் இருந்தார். அவரது நடிப்பு ஹொலிவூட்டைத் தாண்டி உலகம் முழுதும் லட்சோப லட்ச மக்களால் போற்றுதலுக்குள்ளானது. பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் அவரைச் செல்லமாகப் 'புனித அரக்கன்' என்று அழைத்தனர்.

சார்ள்ஸ் புரொன்சனுக்கும் தனது தோற்றத்தைப் பற்றிய மதிப்பீடொன்று இருக்கவே செய்தது. 'நான் யாரோ டைனமைட் வைத்து உடைத்த கற்குவியலைப் போன்றவன்' என்று தன்னைப் பற்றி அவரே சொல்லியிருக்கிறார். நடிப்பில் அவரது பார்வை, நடை, கம்பீரம் யாவும் சேர்ந்து அவரது குறைபாடுகளை மறைத்து விட்டன. அவர் ஒரு பெருங் கதாநாயகனாக வலம் வந்தார். 'என்னைப் பொறுத்த வரை நடிப்பு என்பது மிக இலகுவான விடயம். அதனால்தான் அதனையே நான் தேர்ந்து கொண்டேன்' என்று ஒரு சமயம் அவர் சொன்னார். 1970 ம் ஆண்டு 'ரைடர் ஒன் த ரெய்ன்' என்ற படத்தில் நடித்து அதி சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோபல் விருதைப் பெற்றுக் கொண்டவர் புரொன்சன்.

லித்துவேனியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த தாய் தந்தையின் 15 பிள்ளைகளில் புரொன்ஸன் பதினோராவது பிள்ளையாக பென்ஸில்வேனியாவில் பிறந்தவர். அவரது இயற் பெயர் சார்ள்ஸ் பச்சின்ஸ்கி. ஹொலிவூட்டின் பரமௌன்ட் ஸ்ரூடியோவின் வட எல்லை வாயிலின் பெயர் புரன்ஸன் வாயில். அந்தச் சொல்லையே தன் பெயருடன் சேர்த்துக் கொண்டார். இந்தப் பெயரில் அவர் நடித்த முதலாவது படம் 1954ல் வெளி வந்த 'ட்ரம் பீட்.'

16வது வயதில்; தந்தையைப் போலவே தனது சகோதரர் களுடன் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். அவரது தந்தை இறந்த போது புரொன்ஸனுக்கு வயது 10. பின்னர் பிலடல்பியா தியேட்டர் கம்பனியில் அரங்க  வடிவமைப்பாளராக இருந்தார். 1950ல் நடிக்கப் புகுந்தார். 1960ல் வெளிவந்த த மெக்னி பிஸன் செவன், த கிரேட் எஸ்கேப் (1963), த டேர்டி டஸன் (1967), டெத் விஷ் (1974) (இப்பெயரில் பின்னர் 3 படங்கள்), டென் டு மிட்நைட் (1983), மெஸன்ஜர் ஒப் டெத் (1988), த வைற் பபளோ (1977), த ஸ்டோன் கில்லர் (1973), மேர்பிஸ் லோ (1986) ஆகியன அவரது முக்கியமான படங்களில் சில. அவர் நடித்த பல படங்கள இன்றும் அலுப்புக் குன்றாமல் பார்;க்கக் கூடியவை.

அவரது படங்களில் 90 வீதமான பகுதியை சம்பூர்ணமாக அவர் ஆக்கிரமித்திருப்பார். ஆனால் ரசிகனுக்கு அது ஒரு உறுத்தலாக இருப்பதில்லை. அவரது ஒவ்வொரு அசைவோடும் நம்மை இணைத் துக் கொள்ளும் ஆகர்ஷம் அவரிடம் இருந்தது. ஆங்கிலத்துக்கு அப்பால் ரஷ்ய, லித்துவேனிய, கிரேக்க மொழிகளில் சரளமாகப் பேசவல்ல புரொன்ஸன் தனது நடிப்பைப் பற்றிச் சொல்லும் போது 'நான் எனது ரசிகன் அல்லன்' என்று சொன்னார். தன்னளவில் திருப்தி கொள்ளாத மனோ நிலையிலான அவரது முயற்சியே உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்களைத் தந்திருக்க வேண்டும். அழகற்ற கதாநாயகனின் கவர்ச்சி எத்தகையதென்றால் அவரை நேரிலே கண்டறியாத அவரது தீவிர ரசிகையான ஒரு பெண்மணி 1990ம் ஆண்டு தனது மில்லியன் டொலர் பெறுமதியான வீட்டையும் தோட்டத்தையும் புரொன்ஸ னின் பெயருக்கு எழுதி வைத்து விட்டாள் என்பதுதான்.

அவர் பின்னாளில் நடித்த படங்கள் எதுவும் உள்ளனவா என்று இணையத்தில் தேடினேன். 1998ம் ஆண்டு அவருக்கு இடுப்பில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக்குப் பிறகு நடிப்பதைக் கைவிட்டி ருந்தார். அதை விட எனக்குக் கவலை தந்த விடயம் நியூமோனியாவால் பீடிக்கப்பட்டு எனக்குத் தெரியாமலே 2003 ஆகஸ்ட் 30ம் திகதி தனது 81வது வயதில் காலமாகியிருந்தார்.

சார்ள்ஸ் புரொன்ஸன் விமர்சகர்களைப் பற்றிக் கூறியதை படைப்பாளிகளும் கலைஞர்களும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சொன்னார்:-

 'நாங்கள் விமர்சகர்களுக்காக படங்களைத் தயாரிப்பதில்லை. தவிரவும் அவற்றைக் கட்டாயம் பாருங்கள் என்று அவர்களுக்குப் பணம் கொடுப்பதுமில்லை!'


11.05.2008

Thursday, January 2, 2014

இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து... சில கேள்விகள்!


லரீனா அப்துல் ஹக்

இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் குறித்த ஒரு கலந்துரையாடலில், இயக்கங்களை விமர்சிப்பது பற்றி ஒரு சகோதரர், "இவர்களுக்கு நிகராக அல்லது இவர்களை விட சிறப்பாக இஸ்லாமியப் பணியை முன்னெடுக்கும் மாற்றீடுகள் இலங்கையில் இல்லையே. அப்படியிருக்கும் போது நாங்கள் விமர்சனத்தோடு மாத்திரம் நிற்பதால் என்ன பயன். எங்களால் செய்யமுடியுமானது அவர்களின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கலாம், கட்டுரைக்கு விமர்சனம் எழுதலாம். அதை விட்டுவிட்டு வெட்டி விமர்சனம் பலன் தருமா?/" என்று கேள்வி எழுப்பினார். அவருக்கும் அவர் போன்றே யோசிக்கும் சகோதரர்களுக்கும் சில கேள்விகளை முன்வைக்க ஆசைப்படுகிறேன்:

1. இலங்கையில் இஸ்லாமியப் பணி என்பது உண்மையில் என்ன? மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஹல்காவும் உஸ்ராவும் வைப்பதும், ஒரு பத்திரிகையில் உலகின் இஸ்லாமிய நாடுகளின் அரசியல் பற்றிப் பேசுவதுமா? 

2. ஒரு பன்மைத்துவ நாட்டில் இஸ்லாத்தின் செய்தியை முன்வைக்கவும், முஸ்லிம்கள் இலங்கைச் சமூகத்தின் அருள் என்று ஏனையோரும் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது வேலைத்திட்டங்கள் இவர்களிடம் உள்ளனவா? இவ்வளவுகால தஃவாவில் இவர்கள் கண்டுள்ள அடைவு மட்டம் இதுதான் என்ற வெளிப்படையான ஃபீட் பேக் (feed back) ஒன்றை மக்கள் முன்வைக்க இவர்கள் ரெடியா?

3. இந்த இஸ்லாமிய இயக்கங்கள் எவையும் தமது உறுப்பினர்களின் சொந்த நிதியில் இயங்கவில்லை. மாறாக, மக்களின் நன்கொடையில் இயங்குவன. ஆகவே, மக்களுக்குப் பொறுப்புச் சொல்லவும் அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். தாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம், இலக்கை நோக்கிய தமது வேலைத்திட்டங்கள் என்னென்ன என்று அதன் உறுப்பினர்கள், ஊழியர்களுக்கேனும் முறையான தெளிவை வழங்க வேண்டும். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள திறந்த மனதோடு முன்வர வேண்டும். ஆனால், இயக்கங்கள் இந்த விடயத்தில் எந்தளவு ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்கின்றன?

4. விமர்சனம் பலனில்லை என்றால், இந்த இயக்கங்கள் எது செய்தாலும் பரவாயில்லை என்று சும்மா இருப்பது மட்டும் பலன் தந்துவிடுமா? அல்லது பல்வேறு தளங்களிலும் முன்வைக்கப்படும் இதுபோன்ற கேள்விகளும் விமர்சனங்களும் அவர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, தம்மை மீள்பரிசீலனை செய்யவும், சரியான வேலைத்திட்டமொன்றை இனியேனும் காத்திரமாக அமைத்துக்கொள்ள வேண்டியதன் தேவையை உணர்த்தவும், இருப்பவர்கள் போதிய கொம்பிடன்ஸி இல்லாதவர்கள் என இனங்காணுமிடத்து, முஸ்லிம் அல்லாதோரில் உள்ள நிபுணர்களைக் கொண்டேனும் வெற்றிடங்களை நிரப்பவும் அவர்களுக்கு உந்துசக்தியை வழங்கக்கூடும் அல்லவா? ஆக, எதையாவது செய்யட்டும் என்று வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதா, ஆக்கபூர்வமான விமர்சனம் மூலம் அவர்களின் பணியைப் பெறுமதிமிக்கதாய், காத்திரமும் வினைத்திறனும் கொண்டதாய் மாற்ற அழுத்தம் கொடுப்பதா நாளை மறுமையில் சமூகத்தின் அங்கத்தவர்களான, அதன் பொறுப்புதாரிகளான எம்மை ஈடேற்றும்?

பதில் சொல்லுங்கள்.

(சகோதரி லரீனா அப்துல் ஹக் தனது முகநூல் சுவரில் இட்டிருந்த குறிப்பு. அவருக்கு நன்றி)