Thursday, May 23, 2013

பாக்கிஸ்தான் போன பயங்கரவாதி!



எனது பெயர் முராத் குர்னாஸ். நான் ஜேர்மனியின் பிரமன் நகரைச் சேர்ந்தவன். எனது பெற்றோர் துருக்கிய வம்சாவழியினர். எனது தந்தையார் மேர்சிடஸ் தொழிற்சாலையில் கடமை புரிகிறார். நான் பிறந்து வளர்ந்து வாழ்வதெல்லாம் ஜேர்மனியில்தான்.

 2001ம் ஆண்டு நான் ஒரு துருக்கியப் பெண்ணைத் திருமணம் செய்தேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்த போதும் இஸ்லாம் பற்றிய போதிய அறிவு எனக்கு இருக்கவில்லை. எப்படித் தொழுவது என்று கூட எனக்குத் தெரியாது. இஸ்லாம் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற் பட்டது. ஏனெனில் தெரிந்து கொண்டால்தான் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழ முடியும். பிரமனில் உள்ள இஸ்லாமிய இயக் கத்தில் விசாரித்த போது அவர்கள் பாக்கிஸ்தானுக்குச் செல்லுமாறு எனக்குச் சிபார்சு செய்தார்கள். நான் பாக்கிஸ்தானுக்குச் செல்வதெனத் தீர்மானித்தேன். ஆனால் அதை எனது குடும்பத்தாரிடம் நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் நிச்சயமாகச் சொல்கி றேன்|எனது தாய் என்னை அனுமதித்திருக்கவே மாட்டார்.

இந்தப் பயணத்தை நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தப் பயங்கரம் நடந்தது. அமெரிக்க உலக வர்த்தக மையத் தாக்குதலைத்தான் சொல்கிறேன். உண்மையில் என்னை மிகவும் திகைப்படையச் செய்த சம்பவம் அது. உலக வர்த்தக மையத் தாக்குதலுக்கும் எனது பயணத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதால் நான் திட்டமிட்டபடி பாக்கிஸ்தான் நோக்கிப் புறப்பட் டேன். ஆனால் அப்போது அப்பயணத்தை நான் மேற்கொண்டிருக்கக் கூடாது என்பது இப்போதுதான் புரிகிறது.

அங்கு சில வாரங்கள் தங்கி எனது விடயங்களை முடித்துக் கொண்டு ஜேர்மனி திரும்புவதற்காக பஸ்ஸில் வந்து கொண்டிருந் தேன். பாதையில் ஒரு வழமையான பரிசோதனைத் தடை இருந்தது. அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. நான் அமர்ந்திருந்த ஆசனத் தருகே இருந்த யன்னல் கண்ணாடியைத் தட்டி 'இவன்தான்' என்று ஒரு பாக்கிஸ்தானியப் பொலிஸ்காரன் சொல்வது கேட்டது. பொலிஸார் என்னை பஸ்ஸிலிருந்து வெளியே இறக்கியெடுத்தனர். எப்படி இது நிகழ்ந்தது என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. சில வேளை பாக்கிஸ்தானியருடைய உடல் தோலை விட எனது தோல் சற்று வெளிச்சமானதாக இருப்பதால் அவர்கள் என்னை வேறுபடுத்தி அடையாளப்படுத்தினார்கள் போலும்.

எனது பயணத்தைத் தடை செய்து என்னை அமெரிக்கப் படையினரிடம் பாக்கிஸ்தானியப் பொலீஸார் கையளித்தனர். இதற்குச் சன்மானமாக பாக்கிஸ்தானியப் பொலீஸாருக்கு அமெரிக்கத் துப்பாய்வுத் துறை 3000 டாலர்களைக் கொடுத்ததாக நான் அறிய வந்தேன். அமெரிக்கப் படையினர் என்னை விமானத்தில் ஆப்கானிஸ் தானின் கந்தஹார் நகரிலுள்ள அவர்களது தளத்துக்குக் கொண்டு வந்தார்கள். அங்கு ஏற்கனவே களச் சண்டையில் பிடிபட்டோருடன் என்னை அடைத்து வைத்தார்கள். எனக்கு அவர்கள் வழங்கிய இலக்கம் 53. நான் அடைக்கப்பட்டிருந்த சிறை குளிரினால் உடல் சில்லிடக் கூடிய இடமாக இருந்தது.

ஒரு நாள் இரவு ஓர் அலறல் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது. போர்வையொன்றால் முகம் மறைக்கப்பட்ட ஓர் இளைஞ னின் தலையில் ஒரு தடித்த கட்டையினால் அடித்துக் கொண்டிருந் தார்கள். அந்தக் கூக்குரலில்தான் நான் எழும்பியிருக்க வேண்டும். அவனது வயிற்றில் உதை விழுந்தது. சரியாக எண்ணிப் பார்த்தேன்| அவனைச் சுற்றி ஏழு அமெரிக்கப் படை வீரர்கள் சூழ்ந்து நின்று தாக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலை அந்த இளைஞன் இறந்து விட்டான்.

அவர்கள் தினமும் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். எனது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சிச் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் பின்வரும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்கள். 'ஒஸாமா பின் லேடன் எங்கேயிருக்கிறார்? நீ அல்கயீதா இயக்கத்தைச் சேர்ந்தவனா அல்லது தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவனா?' அப்போதெல்லாம் 'நான் ஒஸாமா பின் லேடனைக் கண்டது கிடை யாது| அல்கயீதாவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என்று பதில் கூறி வந்தேன். 'நான் புறப்பட்டு வந்ததிலிருந்து பாக்கிஸ்தானி லேயே இருந்தேன்' என்பதைத் தெளிவாக விளக்கிச் சொன்னேன்.


'நீங்கள் கேட்கும் எதைப் பற்றியும் நான் அறியாதவன். உங்க ளுக்கு அவசியமாயின் ஜேர்மனியில் எனது முகவரியைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்' என்று அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களோ பைத்தியம் பிடித்தவர்களைப் போலத் திரும்பத் திரும்ப அதே வினாக்களைத் தொடர்ந்து கேட்டுத் தாக்கினார்கள்.

எனது இரு கைகளையும் பின்னால் கட்டி விட்டு அதிலேயே இன்னொரு கட்டுப் போட்டு உயரத்தில் தொங்க விட்டார்கள். அதாவது பின்னால் கட்டப்பட்ட எனது கரங்களினாலேயே எனது உடற் பாரத்தைச் சில வேளை நாட் கணக்காக நான் தாங்க வேண்டி யிருந்தது எனக்கு நிகழ்ந்த பெருங் கொடூரமாகும். உடலுக்குக் குறுக் காகக் கட்டித் தொங்க விடப்பட் டிருந்த ஓர் இளைஞனை ஒரு நாள் கண்டேன். இன்னொரு முறை ஊதிப் பெருத்த நீல நிறமான ஓர் உருவத்தையும் நான் கண்டேன். உடலில் ஆங்காங்கு வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இருந்தன. அநேகமாக அது ஐஸ் கட்டிக ளில் வளர்த்தப் பட்டுக் கொல் லப்பட்ட ஓர் உடலாக இருக்கும் என்று நினைத்தேன்.

Wednesday, May 8, 2013

நெருடும் நினைவுகள்!

எத்தனை தூரம்
அன்பாய் இருந்தோம்!

முன்பு இந்தச்
சின்னஞ்சிறிய வீட்டில் நாங்கள்
எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்!

ஒரு பாய்த்துண்டில்
ஒன்றாய் உறங்கினோம்
ஒரே கலயத்தில் ஒன்றாய் உண்டோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீட்டைச்
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்தோம்!
இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்தோம்...!

பனிமழை தூவும் பகல் நிலவிரவில்
பண்பொடு ஒன்றாய்ப் படுத்துக் கிடந்து
சின்னஞ சிறிய எங்கள் வீட்டின்
சிறப்பை உயர்வைச் சிந்தனை செய்தோம்...!

இருந்தாற் போலொரு இரவுப் பொழுதில்
விண் மீன் கூட விழிக்கவும் இல்லை -
எங்களில் ஒருவன் படுத்த இடத்தில்
தீ நாக்கொன்று திடீரென் றெழுந்தது!

நெருப்புச் சுட்ட நண்பன் தனது
குரல்வளை நரம்பு தெறிக்கக் கத்தினான்...
அருகே படுத்தவன் நெருப்பின் புகையில்
கண்களைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டான்..!
ஒன்றாய் இருசரும் ஒரே மூச்சுடனே
வீட்டிலிருந்து வெளியே பாய்ந்தனர்!

நெருப்புச் சுட்டவன் உடம்பிற் சிற்சில
இரத்தக் காயம் விழித்துப் பார்த்தது..
அருகே படுத்தவன் கைகளிலி கூட
இரத்தம் கசிந்தது... துடைத்துக் கொண்டான்...!

கூக்குரல் வீட்டை விட்டும் வெளியே
வந்தது... பலரை வியக்கச் செய்தது..
ஆச்சரியத்தால் அதிர்ந்து நின்றோம்!

எப்படி நடந்தது...?
இஃது நடந்தது எப்படி என்று
ஆய்வுகள் செய்தோம்!

விளைவாய் நாங்கள்
எங்களுக்குள்ளே எதிரிகளாயினோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீடு
போர்க்களமானது... அடிக்கடி புகைந்தது...

எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்...

சின்னஞ்சிறிய எங்கள் வீட்டை
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்..

இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்...

ஆத்மா கிடந்து அடித்துக் கொள்ள
அழுகை கண்ணைக் கீறித் துளும்பும்!

சாத்தியமில்லா நினைவுகள் அவைகள்!

இனிமேல்.. இனிமேல்...
கனவுகள் அவைகள்!

(21.07.1985ல் எழுதப்பட்ட இக்கவிதை “காணாமல் போனவர்கள்” என்ற எனது முதலாவது கவிதைத் தொகுதியில் முதற்கவிதையாக இடம்பெற்றுள்ளது)

Monday, May 6, 2013

அஸாத் சாலியுடன் உடன்பட முடியாது!



சகோதரர் அஸாத் சாலியின் உடல் நிலை மோசமாக இருப்பதாக வெளிவரும் செய்திகள் நம்மைப் பெருங் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

“செய், அல்லது செத்து மடி” என்ற போக்குக் கொண்ட,நியாயத்தையும் உண்மையையும் வெளிப்படையாகப் பேசும் தைரியமும் துணிச்சலும் உள்ள ஓர் அரசியல்வாதியாக மட்டுமன்றி சிறுபான்மை என்ற காரணத்துக்காக முஸ்லிம்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுவதைக்
கண்டிக்கும் ஒருவராகவும் அவர் விஸவரூபம் எடுத்திருக்கிறார்.

முஸ்லிம்களாக இருந்தாலென்ன, நாங்கள் இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நேற்றுவரை விகற்பங்கள் ஏதுமின்றி, ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றோம் -  இன்றும் வாழ்ந்து வருகிறோம் என்பதைக் குரலுயர்த்திப் பேசும் அவரது தைரியமும் மனோ உறுதியும் பாராட்டத் தக்கது.

ஒற்றுமை தவிர வேறு எந்த எண்ணங்களுமின்றி வாழ்ந்து வரும் எம்மீது இன ரீதியாக, சமய ரீதியாகக் குழப்பங்களை நியாயமற்ற விதத்தில் ஏற்படுத்து வோருக்கெதிரான கோபத்தைக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்து இளைஞர்களில் ஒரு சாராரின் சீற்றத்தின் வடிகாலாக அவர் இயங்கினார் என்பது அவருக்கு ஒரு தனி மரியாதையைத் தற்போது தோற்றுவித்துக்
கொடுத்துள்ளது.

ஜெனரல் பொன்சேகா, இலங்கைச் சிறுபான்மையினர் வந்தேறு குடிகள் என்ற அடிப்படையி்ல் கனடியச் சஞ்சிகைக்குத் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு ஆதரவளிக்க முடியாது என்று, தான் நீண்ட காலமாக இருந்து வந்த கட்சியை உதறியவர் அஸாத் சாலி. தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொடங்கி முஸ்லிம்களுக்கெதிரான செயல்பாட்டில் பெரும்பான்மையின் ஒரு பிரிவினர்
ஈடுபட ஆரம்பித்ததும் தனது நியாயத்தை நாட்டுத் தலைவருக்குத் தெரிவித்தார். அது கணக்கில் கொள்ளப்படாத போது அந்த உறவையும் அறுத்துக் கொண்டார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போது கட்சி முஸ்லிம்களுக்கெதிரான பெரும்பான்மை - குறிப்பாக பிக்குகளின் நடவடிக்கை பற்றி மக்களின் கோபத்தை தேர்தல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. அரசு இவ்விடயத்தில் பாராமுகமாக இருக்கிறது என்பதைத் தேர்தல் மேடைகளில் மிகக் காரசாரமாகச் சுட்டிக்
காட்டியவர்களில் ஒருவர் அஸாத் சாலி. தேர்தல் முடிந்ததும் எந்த அரசைக் கட்சி சாடியதோ அதே கட்சியுடன் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் கட்சித் தலைமை தள்ளப்பட்ட போது கட்சியையும் தலைமையையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

அரசியரோடு சேர்த்துப் பார்த்தாலும் அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும் அஸாத் சாலியின் சமூக உணர்வு மெச்சத்தக்கது. ஆனால் அது அவரது அரசியல் கணக்குக்கே சென்று சேரும் என்பதால் அரசியல் கணக்காகவே யாவும் பார்க்கப்படும்.

எந்த அரசாக இருந்த போதும் அது தன் நலனுக்காக எந்தப் பேயுடனும் பிசாசுடனும் கைகோத்துக் கொள்ளும் என்பது அரசியலில் அரிசுவடிப் பாடம். இதைத் தெரிந்து கொள்ளாதவராக அஸாத் சாலி இருந்திருக்க மாட்டார்.

ஆகக்குறைந்தது 30 வீதமாவது ஜனநாயகத்தையும் தர்மத்தையும் பேணும் இடத்திலல்லாமல் வேறு இடங்களில் அவற்றை உரத்த குரலில் பேசுவதானது, நிர்வாணிகள் திரியும் ஊரில் ஆடையுடுத்திச் செல்வதற்கு ஒப்பாகும். இந்த விடயம்தான் நம்மவர் பலருக்குப் புரியாத, புரிந்தாலும் தம்மை எதிர்ப்போர் மீது ஒரு கோபத்தை வெளிக்காட்ட உணர்ச்சிகளுக்கு
இடமளிக்கின்ற நிலையாகும்.

கடந்த காலங்களில் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் அரசியல் கொலைகள், ஜனநாயகக் குரல்களை நசுக்குதல் போன்றவற்றிலிருந்து மட்டுமன்றி கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றிலிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. ஆனால் வரலாற்றிலிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்வதில் தவறுகளை விட்டு விடுவதுதான் துர்ப்பாக்கியமாக இருந்து வருகிறது.

இரண்டாவது சிறுபான்மையினராக வாழும் நாம் நமது எல்லாவிதச் செயற்பாடுகளிலும் “ஹிக்மத்”தைக் கைக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறும் உணர்ச்சிகளுக்கு எப்போதெல்லாம் அடிமைப் படுகிறோமோ அப்போதெல்லாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்று அர்த்தம். இவ்வாறு நான் சொல்வது பலருக்கு எரிச்சலையும் சினத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் என்றைக்கும் அதுதான் உண்மை!

ஹிக்மத்தைப் பயன்படுத்தாத எமது எந்தக் குரலும் எந்தப் போராட்டமும் எந்த எதிர்ப்பும் “ஒரு ரோஹின்யாவை” கண் முன்னே சந்திக்கச் செய்யும் செயற்பாடாகவே இருக்கும். அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்காமல் குப்புறப் படுப்பது என்பது இந்த வார்த்தையின்  அர்த்தமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அஸாத் சாலியின் பலத்த எதிர்ப்புக் குரல் சமூகத்தில் பலருக்குத் திருப்தியை, சந்தோஷத்தை, நிம்மதியைக் கொடுத்துத்தானிருக்கிறது. ஆனால் அதற்காக அஷாத் சாலி செலுத்தும் விலை மிகப் பெரியது. அதற்காக வருந்தப் போவது அவரது குடும்பத்தினர்தாம்!

தான் கைது செய்யப்பட்டது நியாயமற்றது என்பதற்காக உண்ணாமல் குடிக்காமல் அவர் பிடிவாதம் பிடிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொது வாழ்வு என்று இறங்கி விட்டால் இவற்றையெல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். அதற்காக அவர் தன்னை வருத்திக் கொள்வது அவரது பிள்ளைகள், மனைவி, உறவினர் மட்டுமன்றி அவர் மீது
நம்பிக்கையும் அன்பும் கொண்டிருக்கும் சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கும் செயலாகும். எனவே அவர் மேற்கொள்ளும் உண்ணாமைப் போராட்டத்துடன்
நம்மால் உடன்பட முடியாமல் இருக்கிறது.

சமூகத்துக்காகக் குரல் கொடுக்கிறார் என்பதற்காக இன்று அவரின் பின்னால் நின்று உற்சாகமளிப்பவர்களும் மகிழ்பவர்களும் அவருக்கு ஏதாவது நிகழுமெனில் (அல்லாஹ்  காப்பாற்றுவானாக)ஒரு பாத்திஹாவோடு மறந்து போய்விடுவார்கள்.

இதைத்தான் சகோதரர் அஸாத் சாலி உணர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும். அவருடன் இணைந்து செயற்படும் சகோதரர்கள், அவரது நெருக்கமான நட்புக்குப் பாத்திரமானவர்கள் அவருடன் பேசி முதலில் அவரை ஆகாரம் உட்கொள்ள வைக்கும் முயற்சியைச் செய்ய வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் ஓர் அரசியல்வாதி என்ற வகையில் சமூகத்துக்காக என்று எதைச் செய்தாலும் அது அரசியலாகவே பார்க்கப்படும். அவரது போராட்டம் சத்தியமானதுதான். நேர்மையானதுதான். குற்றங்களைச் செய்தார் என்று சொல்லப்படுகிறதே தவிர, என்ன குற்றங்கள் என்று இதுவரை
சொல்லப்படவில்லை.

தடுத்து வைக்கட்டும். காவல் செய்யட்டும். விசாரணை செய்யட்டும். நீதி மன்று ஒரு தீர்ப்புச் சொல்லட்டும். மக்கள் மன்றிலும் இறைவனின் மன்றிலும் அவருக்குச் சரியான தீர்ப்பு ஒன்று காத்திருக்கிறது அல்லவா?

எந்தச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்தாரோ எந்தச் சமூகத்தின் நன்மைக்காகப் போராடினாரோ அந்தச் சமூகத்துக்காக அவர் வாழவேண்டாமா?

இதை யாராவது அவருக்கு எத்தி வையுங்கள். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்!

Sunday, May 5, 2013

செம்மறி ஆடுகள்!



இலங்கையில் இளம்பிள்ளைவாதம் என்கின்ற போலியோ வைத் தடுப்பதில் வெற்றி எய்தப்பட்டுள்ளதை அவ்வப்போது கிடைக்கும் தகவல்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே தினத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் சிறாருக்கும் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். சர்வதேச விமான நிலையங்களில்கூட இம் மருந்து வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து டாக்டர் (கவிஞர்) தாஸிம் அகமதுவைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது இம்மருந்து கொடுக்கப்பட்ட நாடுகளில் காலாவதியான மருந்துகள் பாவிக்கப் பட்ட இடங்கள் தவிர மற்றப்படி 99.5 சதவீத வெற்றிதான் என்று தெரிவித்தார். செய்தி சந்தோஷமளிக்கக் கூடியதுதான்.

இன்று இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காண்பது அரிதாகியிருக்கிறதே தவிர ஓரு காலையோ இரண்டு கால்களையுமோ இழந்தவர்களைக் காண்பதற்கு முடியுமாயிருக்கிறது. இதில் சிறுவர் முதற் கொண்டு முதியோர் வரை அடங்குகின்றனர். இவர்களது கால்களைக் கவர்ந்து சென்றவை நம் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிகள்.

போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட காலப் பிரிவில் மிதி வெடிகளை அகற்றுவதற்காக வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த குழுவில் ஒருவரைத் தற்செயலாக நான் சந்திக்க நேர்ந்தது. அனுவங்களைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்:- 'ஒவ்வொரு மிதி வெடியையும் அடையாளங் கண்டு அகற்றும் போதும் ஓர் உயிரைக் காப்பாற்றி விட்டதான அல்லது ஒருவரின் ஊனத்தை - அதனால் சம்பந்தப்பட்டவரது குடும்பத்தில் விளையும் துயரங்களை நான் தடுத்து விட்டேன் என்கிற ஆறுதலும் திருப்தியும் ஏற்படுகின்றன.' மகத்தான அதேவேளை ஆபத்தான அவர்களது சேவைக்காகப் பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

அன்றைய தினம் முழுவதும் மிதி வெடிகளும் அது பற்றிய அபாய அறிவிப்புப் பலகைகளும் 'மிதி வெடிகள் உள்ளன' என்று மஞ்சள் நிறப் பட்டிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் இடங்களும் கால்களை இழந்த மனிதர்களும் நினைவில் சுழன்று கொண்டிருக்க அன்றிரவு எனது கவிஞன் விழித்துக் கொண்டான்.

போலியோச் சொட்டருந்தி
விளையாடச் சென்றவனைத்
தூக்கி வந்திருந்தார்கள்
கால் ஒன்றை இழந்திருந்தான்-
மிதி வெடியில்!

இலங்கையில் ஒரு காலத்தில் இந்திய அமைதிப்படை இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்ததே. விடுதலைப் புலிகளுட னான மோதலில் மிதி வெடி ஆபத்தை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தங்களுக்குப் பரிச்சயம் அற்ற சூழலில் அவர்களில் பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்பட்ட போது அதைத் தவிர்ப்ப தற்காக ஒரு காரியம் செய்தார்கள். அதில் புத்திசாலித் தனமான இரட்டை நோக்கம் இருந்தது.

இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக செம்மறி ஆடுகள் வந்திறங்கின. ஒவ்வொரு இராணுவக் குழுவும் ஒரு செம்மறிக் கூட்டத்தை முன்னால் நடக்க விட்டுப் பின்னால் நடந்தது. முன்னால் செல்லும் ஆடுகள் கண்ணிவெடிகளில் அகப்பட்டால் அவை அக்குழுவினரின் அன்றைய உணவாக மாறியது. ஆடுகள் பொதுவா கவே துரத்தினால் கலைந்து வெவ்வேறு பக்கங்களில் தறி கெட்டு ஓடுவன. ஒன்றைச் சொல்ல வேறு ஒன்றைச் செய்பவனை 'எட செம்மறி' என்று அழைப்பதும் சொன்னதை உடனடியாகப் புரிந்து கொள்ளாதவனை 'இவன் ஒரு செம்மறியடா' என்று திட்டுவதும் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

திருமதி பார்பரா வோல்டர்ஸ் சர்வதேச தொலைக் காட்சிச் சேவையொன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஆப்கானிஸ்தானில் அரசியல் சிக்கல்கள் மும்முரமடைவதற்கு முன்னர் நிகழ்ச்சிகளுக்காகச் சென்று வந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் ஆண்களின் பின்னால் கிட்டததட்ட ஐந்து அடி இடைவெளியில் நடந்து வருவதை அவதானித்திருந்தார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்து பின்னர் அவர்களது ஆட்சியும் அதிகாரமும் தூக்கி வீசப்பட்டு இன்று அமெரிக்க ஆசீர்வாதத்துடனான அரசு ஆட்சியில் இருக்கிறது.

மிக அண்மையில் அங்கு சென்ற பார்பரா பெண்கள் ஆண்களுடன் சமமாக நடந்து வராமல் இன்னும் வழமை போல் பெண்கள் பின்னால் நடந்து வருவதை அவதானித்தார். சொல்லப் போனால் முன்னரை விட மேலும் சில அடிகள் பின்னால் ஆனால்  மகிழ்ச்சியுடன் நடந்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

ஒரு பெண்ணை அணுகி, 'ஒரு கட்டத்தில் ஆண்களுடன் சரிசமமாக நடந்து செல்லக் கோரிக் கொந்தளிப்பெல்லாம் நிகழ்ந்ததல்லவா..? இப்போது அதற்கு எந்தத் தடையும் இல்லாத போது ஏன் பழைய வழக்கத்தை மாற்றாமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அந்தப் பெண் பார்பராவை சில கணங்கள் நேராகப் பார்த்தவாறு புன்முறுவலுடன் சொன்னார்: 'கண்ணிவெடிகள்!;'

நீதி: ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு புத்திசாலித்தனமான பெண் இருக்கிறாள்!


03.08.2008
(தீர்க்க வர்ணம் - பத்தித் தொகுப்பிலிருந்து)