Sunday, July 29, 2012

ஒன்றரை லட்சம் தப்பியது!


“இது பதினெட்டுக் காரட் நகைதானே!”

அவன் லேசான அலட்சியத்துடன் சொன்னதும் ‘காலங்காலமாக நகை வியாபாரம் செய்து வரும் நம்பிக்கை மிகுந்த ஸ்தாபனம்’ என்ற பிரம்மையையும் தாண்டி அவருக்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டது.

ஒரு போதும் இது 18 கரட் நகையாக இருக்க முடியாது என்பது அவரது அசையாத நம்பிக்கை. எனவே மற்றொரு நகைக் கடையில் இதன் பெறுமதியைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கிளம்பினார்.

இப்படிக் கிளம்பியவர் எனது நண்பர்.

தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஆச்சரியத்துடன் கூறிவிட்டு இதைப் பற்றி நீங்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப அவரது அனுபவத்தை தமிழ்கூறும் நல்லுலகின் நன்மை கருதி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நண்பர் ஒரு வியாபாரி. அவருக்கு ஒரு கட்டத்தில் மிக அவசரமாக இரண்டு லட்சம் ரூபாய்கள் தேவைப்பட்டன. மனைவியின் நகைகளில் ஒன்றை வங்கியில் அடகு வைத்து விட்டுப் பின்னர் மீட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வங்கி ஒன்றுக்குள் நுழைந்தார்.

வங்கி அடகு அதிகாரி நகையை நிறுத்து விட்டு ஒன்பதே முக்கால் பவுண்கள் என்றார;. அதன் பிறகு அவருக்கு அருகிலிருந்த ஒரு திரவத்துக்குள் நகையை இட்டு கம்பவுண்டர் மருந்து கலக்குவதைப் போல் ஒரு கிண்டியால் நகையைப் பிடித்து நீண்ட நேரம் கலக்கினார். பிறகு அவர் வைத்திருந்த நிறுவைக் கருவியின் வேறு ஒரு பிரிவுக்குள் இட்டுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். பின்னர் நண்பரைப் பார்த்துச் சொன்னார்:-

“மன்னிக்க வேண்டும். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தங்கம்தான். ஆனால் இந்தத் தங்க  மாலையில் உருண்டை உருண்டையாக இருக்கிறது பாருங்கள். இதற்குள் பரிசோதனைக்குரிய நீர் செல்வதாக இல்லை. அப்படிச் சென்றால் மாத்திரமே இது முழுவதும் தங்கம் என்று வங்கி கணக்கில் கொள்ளும்.”

“எனக்கு அதன் பாதிப் பெறுமதிதான் தேவை. அவசரத் தேவை. பாதியைத் தரலாம்தானே!” என்று வங்கி அடகு அதிகாரியிடம் நண்பர் கேட்டார்.

“மன்னிக்க வேண்டும். நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது. இப்படி நீர் நுழைந்து ‘சரி” என்ற அனுமதியை இயந்திரம் சொல்லவில்லையென்றால் என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நகைகளில் உள்ள சின்னச் சின்ன உருண்டைகளைப் பெறுமதி குறைந்த உலோகங்களால் செய்து விட்டு தங்கத்தால் முலாமிட்டு தங்கச் சங்கியில் சேர்த்து விற்கிறார்கள். பாரத்தைப் பார்த்துப் பணம் கொடுத்து மீட்கப்படாத நிலையில் பரிசோதனைக்குட்படுத்திய போது இவ்வாறான விடயங்கள் தெரியவந்தன. இப்படி பெறுமதியற்ற நகைகளை வங்கிக்கான அடகு சேவையில் பெற்ற பல ஊழியர்கள் கடந்த காலங்களிலபெரும் சிக்கலில் விழுந்திருக்கிறார்கள்” என்றார்.

Friday, July 20, 2012

ஜூம்ஆவுக்குப் பிறகு.....



“அஸ்ஸலாமலைக்கும் சேர்!”

“வஅலைக்குமுஸ்ஸலாம்”

“லெப்பை இன்டைக்கு நல்லா லேட்டாக்கிட்டாரு குத்பாவை!”

“ம்ஹ்ம்... தலைநகரத்துல மட்டுமில்லை... புறநகர்ப் பகுதியிலேயும் இருக்கிற பள்ளிகளுக்குக் காரியாலயங்கள்ல வேல செய்றவங்க ஜூம்ஆ தொழ வர்ராங்க... அவங்க குறிப்பிட்ட நேரத்துக்குள்ள காரியாலயத்துக்குப் போயிடனும்கிற எண்ணமே சில ஆலிம்களுக்கு வரமாட்டேங்குது!”

“இந்த விசயமா பல தடவை பேப்பர்கள்ல எழுதியிருக்காக்க சேர்!”

“ஆனா ஆலிம்களில் பலர் பேப்பர் படிக்கிறதில்லைங்கிறது ஒங்களுக்குத் தெரியாதா?”

“ஏன் சேர் குத்துபாவை இப்பிடி நீட்டி இழுக்கிறாங்க... இன்டைக்கி நீங்க அவதானிச்சிங்களா... ஒரே விசயத்தை மூணு தரம் திருப்பித் திருப்பிச் சொன்னாரு... அதுவும் ஒரே நேரத்துல இல்ல... ஒரு விசயத்தைச் சொல்லிட்டுப் போய் அப்புறம் வேற விசயத்துக்குத் தாவித் திரும்ப அதே விசயத்தை அதே வசனத்துல....ச்சே... கேட்டுக்கிட்டிருக்கவே கஷ்டமாயிருக்கு!”

“மெதுவாப் பேசுங்க... யாராவது ஒரு அவுலியாக் குஞ்சுட காதில விழுந்திச்சின்னா, ‘பாட்டுக் கேக்கிறதுன்னா நீங்க திருப்பித் திருப்பிக் கேப்பீங்க... குத்பான்னாக் கசக்குதான்னு’ கேட்டுருவான்!”

“சரியாச் சொன்னீங்க சேர்..!”

“அதுசரி குத்பா லேட்டாகிட்டுன்னு சொல்லுற நீங்க... என்னோட கதச்சிக்கிட்டு இன்னும் தாமதமாகிறீங்களே...?”

“இன்டைக்குப் பெரியவன் வரல்ல சேர். அவன் பெரும்பான்மைக்காரன். நம்ம விசயத்துலதான் அடிக்கடி நோண்டிக்கிட்டிருப்பான். சில பெரும்பான்மை இனத்துப் பெரிய அதிகாரிகளுக்குக் காரியாலயக் கடமையில் பிழையென்டாலும் பொறுத்துக்குவான். நாம மார்க்கக் கடமைகளைச் செய்யிறது அவங்களுக்கு மிச்சம் உறுத்துது சேர்!”

“இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு ஹிக்மத்தாத்தான் நடந்துக்கணும்!”

“சில ஆலிம்களுக்கு ‘மைக்’கைப் பிடிச்சா ஒன்டுமே விளங்குதுல்லயே சேர்... ஏன் அப்பிடி?”

Wednesday, July 18, 2012

லஹில்ல... லாஹில்லா....!



“முகத்தை எப்போதும் மூடி வைக்காதே - எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே” என்று ஒரு பாடல் காற்றலைகளில் வந்து நம் கவனத்தைக் கவர்கிறது. இந்தி மொழி வசனங்களுடன் ஆரம்பமாகும் இப்பாடல் பற்றி விசாரித்ததில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில்  ஹரிசரண் குரலில் ‘தொட்டால் பூ மலரும்’ என்ற படத்தில் இது இடம் பெற்றுள்ளது என்றறிய வந்தேன்.

       பாடல் இனிமையாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலில் “அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ - உருதுக் கவிஞன் ஒமர் கையாமின் கவிதையா நீ” என்று இடம் பெற்றுள்ள வரிகள்தாம் என்னை இதைப்பற்றி எழுதத் தூண்டிற்று.

கியாஸூத்தீன் அபுல் ஃபத் ஒமர் இப்னு இப்ராஹிம் அல் கையாமி என்கிற ஒமர் கையாம் பாரசீகத்தின் நைஷாப்பூரில் 11ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் பிறந்து 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மறைந்தவர். அவர் ஒரு சூஃபிக் கவிஞராகத்தான் நம்மிடையே உலா வருகிறார். ஆனால் அவரோ சிறந்த வானவியலறிஞராகவும் கணித மேதையாகவும் தத்துவ ஞானியாகவும் மிளிர்ந்தவர்.

ஒமர் கையாமின் “ருபையாத்” உலகப் புகழ் பெற்றது. பாரசீக கவிதை வடிவங்களில் “ருபாய்” என்பது நான்கடிப் பாவாகும். “ருபையாத்” என்பது பன்மை. அதாவது நாலடிப் பாக்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட “ருபையாத்” வெளிவந்த பின்னர்தான் உலகம் ஒமர் கையாமை அறிந்தது.

1. மகாலத் பில் ஜபர் வல் முகாபிலா 2. முஸதறாத் கிதாப் யுக்லிதாஸ் 3. லவாஸிம் அம்சினா 4. இப்னு சீனாவின் மார்க்கச் சொற் பொழிவுகள் - பாரசீக மொழி பெயர்ப்பு 5. ஸிச் மாலிக் ஷாஹி 6. றிஸாலா கௌன் வல் தக்லீப் 7. அல்வுஜீத் 8. குல்யாத் அல் வுஜீத் 9. மீஸான் அல் ஹிகம் 10. நௌரோஸ் நாமா ஆகியன ஒமர் கையாமின் அறியக் கிடைத்த நூல்களின் பெயர்கள்.

ருபையாத்தை தமிழில் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை (1945), பாலபாரதி ச.து.சு.யோகி, சாமி சிதம்பரனார், தங்கவயல் லோகிதாசன் (1980), இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1965), புவியரசு (1997), ஆ.மா. சகதீசன் (2002), நாகூர் ரூமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிட் ஜெரால்ட் மேற்கத்தேயப் பண்பாட்டுச் சூழலுக்கும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தமிழகச் சூழலுக்கும் ஏற்ப மொழி பெயர்த்துள்ளதாகவும் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களே பாரசீக நாட்டுச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு பாடியுள்ள தாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது. குறித்துக் கொள்ள வேண்டிய அம்சம் என்னவெனில் ஒமர் கையாம் பற்றிய தகவல்களுடன் ருபையாத்தை, வியாசக் கோவை மற்றும் முஸ்லிம்களின் தற்கால நிலைமை ஆகிய நூல்களை எழுதியவருமான வ.மி. சம்சுத்தீன் சாஹிப் என்பவரும் வீ.சி. அருளானந்தம் என்பாரும் இணைந்து தமிழில் மொழி பெயர்த்து 1936ம் ஆண்டு கொழும்பில் வெளியிட்டுள்ளார்கள் என்பதாகும். இத் தகவல்கள் நான் மேலே சொன்ன நூலில் காணப்படுகின்றன.

Thursday, July 12, 2012

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகக் கருத்தரங்கு -1

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் மாதாந்த ஒன்று கூடல் வரிசையில் முதலாவது ஒன்றுகூடல் இன்று மாலை 5.00 மணிக்கு வௌ்ளவத்தை, 42வது லேன், இல. 31 - 1/1, (இரண்டாம் மாடி) பிரின்ஸ் அகடமியின் கூடத்தில் நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தில் தலைவர் “காப்பியக்கோ” டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்கினார்.


ஆலிம் கவிஞர் மௌலவி காத்தான்குடி பௌஸ் அவர்களின் கிறாஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.


 “தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளின் பங்கு” என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்த போதும் தனது வேலைப்பளுவுக்குள் விசாலமான தலைப்பில் உரை நிகழ்த்தும் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துத் தனது வாசிப்புக்குட்பட்ட உலகில்  தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான முஸ்லிம் ஆளுமைகள் என்ற பின்னணியில் உரை நிகழ்த்தினார் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க. இரகுபரன் அவர்கள்.


நிகழ்வில் விருந்தினராகக் கலந்து சிறப்பித்த புரவலர் ஹாஜி அப்துல் கையூம் அவர்களுக்கு தலைவர் பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தார்.


 “மத்திய கிழக்கு அரசியல் பற்றிய இலங்கை முஸ்லிம்களின் புரிதல்” என்ற தலைப்பில் “மீள்பார்வை” பிரதம ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் உரை நிகழ்த்தினார்.


சர்வதேசம், ஊடகங்கள், அரசுகள் என்று மிகத் தெளிவாகத் தனது கருத்துக்களை உரையின் போது அவர் முன் வைத்தார்.


நிகழ்வில் சஞ்சிகைகளின் ஆசிரியர்கள், இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.


ஒரு குறிப்பிட்ட தொகையினரே அழைக்கப்பட்ட போதும் அவர்களில் பெரும்பாலானோர் நிகழ்வில் கலந்து கொண்டது நம்பிக்கையைத் தந்திருக்கிறது.


எதிர்வரும் றமளானுக்குப் பின்னர் இஸ்லாமிய ஆய்வகத்தின் இரண்டாவது ஒன்றுகூடற் கருத்தரங்கு நடைபெறும். இரண்டாவது கருத்தரங்கு இன்னும் பல புதிய அழைப்பாளிகளுடன் புதிய வியூகங்களுடனும் ஏற்பாடு செய்யப்படும்.

Monday, July 9, 2012

பேரீச்சம்பழக் காட்சிகள் - 3

30.06.2012 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற அறபுலகக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியான “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” நூல் வெளியீட்டு விழாக் காட்சிகளின் மூன்றாம் பகுதி.


தூரப் பார்வையில் அரங்கு


நவமணி பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீனிடமிருந்து பிரதிபெறும் சகோதரர் அகமட் கபீர் அவர்கள்


பிரதம அதிதியிடமிருந்து பிரதி பெறும் சுங்க அதிகாரி நண்பர் மு. தயாபரன் அவர்கள்.


சகோதரர் எம்.மர்ஸூக் அவர்கள்


பிரபல எழுத்தாளர் மு. சிவலிங்கம் அவர்கள்.


கவிஞர் மதியன்பன் மஜீத் அவர்கள்


பிரபல எழுத்தாளர் தம்பு சிவா அவர்கள்.


தமிழ்த்தென்றல் அலி அக்பர் அவர்கள்.

Sunday, July 8, 2012

காஸாவிலிருந்து ஒரு கடிதம்



காஸாவிலிருந்து ஒரு கடிதம்

கஸ்ஸான் கனஃபானி


அன்புள்ள முஸ்தஃபா,

இப்போதுதான் உனது கடிதம் கிடைத்தது. ஸெக்ரமென்டோவில் உன்னுடன் நான் தங்கியிருப்பதற்கு அவசியமான எல்லா ஏற்பாடுகளையும் நீ செய்திருப்பதை உனது கடிதம் சொன்னது. கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் கற்பதற்கு எனக்கு அனுமதி கிடைத்திருக் கும் செய்தியும் எனக்குக் கிடைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும், அன்புள்ள நண்பனே.

ஆனால் நான் உனக்குச் சொல்லப் போகும் செய்தி உனக்கு விசித்திரமாகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். எப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் இருக்கும் சரியான, தெளிவான நிலை குறித்துச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. இல்லை, நண்பனே... நான் எனது மனதை மாற்றிக் கொண்டேன்.

நீ குறிப்பிட்டிருப்பதைப் போல ‘பசுமையும் நீரும் அழகிய முகங்களும்’ உள்ள இடத்துக்கு உன்னைத் தொடர்ந்து நான் வரப்போவதில்லை. இல்லை, நான் இங்கேயே இருக்கப் போகிறேன்’ ஒரு போதும் இங்கிருந்து வெளியேறப் போவதில்லை!

ஒரே துறையில் நாம் வாழ்வைத் தொடரவில்லை என்பது எனக்கு உண்மையில் மிகவும் மனக் குறையாகவுள்ளது, முஸ்தஃபா. ஒன்றாகவே பயணிப்பது பற்றிய நமது உறுதி மொழியை நீ அடிக்கடி சொல்வது எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த வகையில் ‘நாம் செல்வந்தர்களாவோம்’ என்று அடிக்கடி நாம் சத்தமிட்டிருக்கிறோம். ஆனால் என்னால் செய்ய முடிந்தது எதுவுமில்லை, நண்பனே. ஆம்’ உன்னுடைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கெய்ரோ விமான நிலையத்தில் நின்றிருந்த அந்த நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அன்று என் முன்னால் நின்றிருந்த உனது வட்டமான முகம் அமைதியாகவிருந்தது. இலேசான சுருக்கங்களைத் தவிர, காஸாவின் ஸாஜியாவில் வளர்ந்தபோது இருந்தது போலவே உன் முகம் மாறாமல் இருக்கிறது. நாம் ஒன்றாகவே வளர்ந்தோம்’ ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தோம். கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டுடன் இருந்தோம். ஆனால்...

“விமானம் கிளம்புவதற்குக் கால் மணி நேரம் இருக்கிறது. இப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிராதே. கேட்டுக் கொள்! அடுத்த வருடம் நீ குவைத்துக்குப் போவாய். கிடைக்கும் உனது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமித்து எடுத்துக் கொண்டு காஸாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியாவுக்குச் சென்று உன்னை நிலை நிறுத்திக் கொள். நாம் ஒன்றாகவே தொடங்கினோம். ஒன்றாகவே தொடருவோம்!”

அந்தக் கணத்தில் வேகமாக அசையும் உனது உதடுகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். காற் புள்ளியோ முற்றுப் புள்ளியோ இல்லாமல் பேசுவது உனது பாணி. ஆனால் அந்த விமானப் பயணத்தில் நீ முழுமையாகத் திருப்தி யடையவில்லை என்று என்னால் உணர முடிந்தது. அதற்கான நியாயமான காரணங்களெதையும் நீ தெரிவிக்கவில்லை. அந்த வலி எனக்கும் இருந்தது. ஆனாலும் “ஏன் காஸாவைக் கைவிட்டு நாம் பறந்து விடக் கூடாது? ஏன் நாம் போகக் கூடாது?” என்ற தெளிவான சிந்தனையிருந்தது.

உனது நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குவைத்தின் கல்வியமைச்சு எனக்குத் தராத போதும் உனக்கு ஒரு தொழிலைத் தந்தது. அந்த அமைச்சினூடாக ஒரு சிறு தொகையை எனக்கு அனுப்பினாய். அவர்களிடம் நான் கடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினாய். ஏனெனில் நான் அசௌகரியப்பட்டு விடக் கூடும் என்று பயந்தாய். எனது குடும்பச் சூழல் பற்றி உள்ளும் புறமும் நீ அறிந்து வைத்திருந்தாய். எனக்குக் கிடைக்கும் சம்பளம் எனது தாயாரையும் எனது சகோதரரின் விதவையான மனைவி யையும் நான்கு பிள்ளைகளையும் கவனிக்கப் போதுமானதாக இல்லை என்பதை நீ அறிந்திருந்தாய்.

“கவனமாகக் கேட்டுக் கொள். ஒவ்வொரு நாளும் எழுது... ஒவ்வொரு மணித்தியாலம், ஒவ்வொரு நிமிடம் பற்றியும் எனக்கு எழுது. விமானம் புறப்படப் போகிறது... நான் கிளம்புகிறேன்... இல்லை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை...”

உனது உதடுகள் எனது கன்னத்தில் பதிந்தன. விமானத்தின் பக்கம் நீ முகத்தைத் திருப்பிக் கொண்டாய். மீண்டும் நீ திரும்பி என்னைப் பார்க்கையில் உனது கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன்.

சில காலத்துக்குப் பின் குவைத் கல்வியமைச்சு எனக்கும் ஒரு தொழில் வாய்ப்பை வழங்கியது. அங்கு எனது வாழ்க்கை எப்படிக் கழிந்தது என்கிற விபரத்தை உனக்கு நான் திரும்பச் சொல்லத் தேவையில்லை. எப்போதும் எல்லாவற்றைப் பற்றியும் நான் உனக்கு எழுதியிருக்கிறேன்.நான் ஒரு சாதாரணனாக இருந்த போதும் பசை போட்டு ஒட்டி வைத்தாற் போன்று மாட்டிக் கொண்டதான ஒரு வெறுமையை உணர்ந்தேன். கொடுந் தனிமையை அனுபவித்தேன். அலுப்பூட்டும் ஒரே விதமான வேலைச் சூழலில் அழுகும் நிலையிலிருந்தேன். எல்லாமே சூடானதாகவும் ஒட்டிக் கொண்டது போன்றது மான ஒரு விசித்திரமான உணர்வு. எனது முழு வாழ்விலும் அது ஒரு சறுக்கல். சகலதுமே மாசக் கடைசியில் தங்கியிருந்தன.

வருட மத்தியில் ச:பாவில் யூதர்கள் குண்டு வீசினார்கள். காஸாவைத் தாக்கினார்கள். நமது காஸா கொழுந்து விட்டெரிந்தது. எனது வேலைச் சூழலில் அந்தச் சம்பவம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நான் வெளியேற வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இத்தனை காலம் சிரமப்பட்டதற்காக எனக்குப் பின்னால் இருக்கின்ற காஸாவை விட்டுப் பசுமை மிகுந்த கலிஃபோர்னியாவுக்குச் சென்று எனக்காக நான் வாழ வேண்டும்’ எனக்காக மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணினேன். காஸாவையும் அங்கு வாழ்வோரையும் வெறுத்தேன். நாலா புறமும் முற்றுகையிடப்பட்டுத் துண்டிக்கப்பட்ட நகரத்தின் சகல அம்சங்களுமே நோயுற்ற மனிதனொருவனால் சாம்பல் நிறத்தில் வரையப்பட்ட கோணல் மாணலான சித்திரங்களைப் போல் எனக்குக் காட்சியளித்தன.

ஆம்! எனது தாயாருக்கும் எனது சகோதரரின் விதவை மனைவிக்கும் நான்கு பிள்ளைகளுக்கும் அவர்கள் வாழ்வதற்காக ஒரு சிறு தொகைப் பணத்தை அனுப்பவேண்டியிருந்தது. இந்தக் கடைசி முடிச்சிலிருந்தும் கூட என்னை விடுவித்துக் கொள்ள எண்ணினேன். ஏழு வருடங்களாக எனது மூக்கை நிறைத்திருந்த தோல்வியின் துர் நாற்றத்திலிருந்து மிகத் தூரத்திலிருக்கின்ற அழகும் பசுமையும் நிறைந்த கலிஃபோர்னியாவை அடைய நினைத்தேன்.

என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் எனது சகோதரரின் குழந்தைகள், அவர்களது விதவைத் தாய் ஆகியோர் மீதான அனுதாபமானது செங்குத்தாக என்னைத் தள்ளும் எனது சோகங்களை விடப் பெரியவை அல்ல. கடந்த காலங்களைப் போல் என்னை மீண்டும் கீழே தள்ளிச் செல்ல நான் அனுமதிக்க முடியாது. நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்!

Saturday, July 7, 2012

பேரீச்சம்பழக் காட்சிகள் - 2

ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள் - அறபுச் சிறுகதைகளின் தொகுதி வெளியீட்டு விழாவின் காட்சிகள் - இரண்டாம் பகுதி


பிரதம அதிதியிடமிருந்து பிரதி பெறும் ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள்


பிரபல எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள்


பிரபல ஒலிபரப்பாளர் மஹ்திஹஸன் இப்றாஹீம் அவர்கள்


பிரபல ஒளிபரப்பாளர் யூ.எல். யாக்கூப் அவர்கள்


பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மத் பெரோஸ் அவர்கள்


சவூதித் து’தரக அதிகாரி ஷெய்க் அப்துர் ராஸிக் அவர்கள்



சவூதித் தூதரக அதிகாரி ஷெய்க் ஸூபைர் அவர்கள்


உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்கள்

Monday, July 2, 2012

பேரீச்சம்பழக் காட்சிகள் - 1


30.06.2012 அன்று கொழும்புத் தமிச்சங்கத்தில் நடைபெற்ற “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அறபுலகச் சிறுகதைத் தொகுப்பு நூலின் முதற்பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாஷி்ம் உமர் அவர்கள் மொறீஷியஸ் நாட்டின் இலங்கைக்கான கௌரவத் தூதுவர் தெ.ஈஸ்லரன் ஐயா அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.


வரவேற்புரை நிகழ்த்தும் செல்வன் அயாஸ் அலி அஷ்ரஃப்


தலைமையுரை நிகழ்த்தும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத் தலைவர் “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள்.


நூல் அறிமுகவுரை நிகழ்த்தும் சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா அவர்கள்.


நூல் விமர்சன உரை நிகழ்த்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க. இரகுபரன் அவர்கள்.