Wednesday, May 30, 2012

இலங்கைத் தமிழ் மாநாடுகளுக்கு தமிழக எழுத்தாளர்கள் போர்க்கொடி




"இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெற வேண்டாமா? இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !" சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.

ஊடக அறிக்கை:
இலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால் முதலில் தமிழ்நாட்டிலிருந்தே எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.

2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது. எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில சிற்றிதழ் ஆசிரியர்களுமாக சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து சிறப்பித்தனர். குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

இதேவிதமாகவே தற்போதும் நாளை ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆரம்பமாகவுள்ள பாரதி விழா, மற்றும் இலக்கிய மாநாட்டிற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. பல மாதகாலமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆலோசித்து நடைபெறுவதே நாளை ஆரம்பமாகும் நிகழ்ச்சி.

தமிழ்ச்சங்கத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதன் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டே பாரதிவிழாவும் இலக்கிய மாநாடும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது என்று இதுவரையில் வெளியான அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வை.கோபாலசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புலவர் புலமைப்பித்தன் உட்பட சுமார் 50 படைப்பாளிகள், கலைஞர்கள். வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தமிழ்ச்சங்க மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாகச்சொல்கின்றன.

இதில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தெரிவித்த எதிர்ப்பு அலைதான் மீண்டும் எழுந்திருக்கிறது.

கொழும்பு தமிழ்ச்சங்கம் கடந்த 70 வருட காலத்துள் எத்தனையோ தமிழ் விழாக்களை, மாநாடுகளை, இலக்கிய சந்திப்புகளை, நூல் வெளியீடுகளை நடத்தியிருக்கிறது. அவற்றில் தமிழக அறிஞர்கள், படைப்பாளிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சங்கத்தில் நீண்டகாலமாக இயங்கும் பெறுமதி மிக்க நூல் நிலையத்திற்கு திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழக அரசும் பெருமளவு நூல்களை ஏற்கனவே வழங்கியிருக்கிறது. தற்போது படைப்பாளிகள் சார்பில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் தமிழ்ச்சங்க நிகழ்வில் 2010 ஆம் ஆண்டு கலந்துகொண்டவர்தான்.

Thursday, May 10, 2012

கழுதை மனிதன்


கழுதை மனிதன்

சிறுகதை
முகம்மட் நஸ்ருல்லாஹ் கான் - (பாக்கிஸ்தான்)
 
இரண்டு வாரங்களாக இரவில் நான் சரியாக உறங்கவில்லை. ஒரு கழுதையின் கண்கள் என்னைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கின்றன.

இருளில், நான் வீட்டுக்கு வரும் ஓய்ந்து போன தெருவில், முன்னங்கால்களில் ஒன்று உடைந்த நிலையில் கழுதையொன்றை நான் பார்த்தேன். என்னை நோக்கிய அதன் பார்வையைத் தவிர்க்க நான் முயன்றேன். தலையை உயர்த்தி தன் மீது அவதானம் செலுத்துமாறு அது கெஞ்சுவது போல் இருந்தது. இவையெல்லாமே குறிப்பாக எனக்கு ஹூஸைனி பவ்லியை ஞாபகப்படுத்திற்று.

ஹூஸைனி பவ்லியின் கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

கணிதம்தான் விலங்குகளிலிருந்து மானுடத்தின் உண்மையான அவதாரத்தைப் பிரித்தறிய வாழ்க்கை முழுக்க எனக்கு அடிப்படையாக அமைந்தது. எனது வாப்பா முதல் தடவையாக ஒரு வினா மூலம் என்னைச் சோதித்துப் பார்த்தார்.

“நமது வீட்டுத் தொழுவத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன?”

“ஒன்பது!”

- நான் உறுதியாகத்தான் பதிலளித்தேன்.

“இல்லை! அங்கே ஒன்பது இல்லையே மகனே!”

“அதே உறுதியுடன் வாப்பாவும் எனக்குப் பதிலளித்தார்.

எனது படிப்பறிவுக்கு ஏற்ப அங்கே இருப்பவை ஒன்பதுதான். அதை உறுதிப்படுத்துவதற்காக எனது விரல்களைப் பயன்படுத்தி எண்ண ஆரம்பித்தேன்.

“இரண்டு பசுக்கள், மூன்று ஆடுகள், ஒரு பெண்குதிரை, ஒரு கழுதை, ஒரு நாய் மற்றும் ஹூஸைனி பவ்லி. ஆக மொத்தம் ஒன்பது!”

வாப்பா சிரித்து விட்டுச் சொன்னார்:-

“ஆனால் ஹூஸைனி பவ்லி ஒரு பிராணி அல்ல. அவன் எங்கள் வீட்டு வேலைக்காரன். அவன் எம்மைப் போன்ற ஒரு மனிதன்!”

எனக்கு வாப்பாவுடன் ஒத்துப் போக முடியவில்லை. எமது பிராணிகளுடன் ஒன்றாய் வாழும் ஹூஸைனி பவ்லி எப்படி ஒரு மனிதனாக இருக்க முடியும்? நாம் - வாப்பாவும் மகனும் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடியாமல் மூத்த வாப்பாவின் தீர்ப்புக்குச் சமர்ப்பித்தோம். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகக் கூடியிருக்க, நான் எனது விடயத்தை மூத்தவாப்பாவுக்குச் சொன்னேன்.

“ஹூஸைனி பவ்லி ஒரு மனிதன் என்றால் ஏன் அவன் எங்களைப் போல் இல்லை. அவன் ஏன் எப்போதும் பிராணிகளுடனேயே இருக்க வேண்டும்? பிராணிகளுடன் சேர்ந்து தரையில்தான் தூங்குகிறான். எனது கனவுகளில் அவன் பிராணிகளைப் போல் சத்தம் எழுப்புகிறான்
புல்லைத் தின்கிறான். அவன் ஒரு கழுதையைப் போல்தான் நடக்கிறான்...!”

Monday, May 7, 2012

முடிவுக்கு வாரீர்! - புரட்சிக்கமால் கவிதை


இலங்கையின் புகழ்பூத்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர் ‘புரட்சிக் கமால்’ எம்.எம்.சாலிஹ் அவர்கள். இறுக்கமும் அழகும் கொண்ட அவரது கவிதைகள் சமூக ஒருமைப்பாட்டைப் பேசுவதுடன் சமூகக் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுவன. எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கவிதைகளை அலுப்பில்லாமல் அவ்வப்போது திரும்பத் திரும்பப் படிப்பதுண்டு.

அவரது கவிதைகளில் முஸ்லிம் சமுதாயத்தின் பேச்சு வழக்கில் இழையோடும் அறபுச் சொற்கள் இயல்பாகவே இணைந்திருப்பதைக் காணலாம்.

 (முஸ்லிம் அல்லாத வாசக உள்ளங்களுக்காக கவிதையில் உள்ள அறபுச் சொற்களும் பொருளும்: துஆ - பிரார்த்தனை, ஈமான் - இறை நம்பிக்கை, ஹாமான் - இஸ்லாமிய வரலாற்றில் வரும் ஒரு பெரும் செல்வந்தர், ஜூம்ஆ - வெள்ளியன்று மதியம் நடைபெறும் கூட்டுத் தொழுகை, பக்கீர் - ஏழை, பிர்தௌஸ் - சுவர்க்கம், கபூல் - இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுதல், இபாதத் - வணக்க வழிபாடு)

கவிதையென்றால் பெண்ணில் காதலாகிக் கசசிந்துருகிக் கண்ணீர் விடுவது என்று மட்டுமே நினைத்தெழுதும் இளைய கவிராயர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

தொழில் வளம் துறைதோறும் கண்டு,
தோதுகள் பெருகிட வேண்டும்!
பழி தரும் யாசகம், வறுமை,
பசி, பிணி, பலாத்காரக் கொடுமை,
ஒளிபடும் முயற்சியில் செல்வர்
உறுபொருள் வெள்ளமாய் ஓடி
குழிபடும் பள்ளங்கள் பாய்ந்தே
குதூகலஞ் சூழ்ந்திட வேண்டும்!


சமுதாய தாகமே, சுவனம்
சமைத்திடும் துஆவென்று தேர்ந்து
இமையா துழைத்திடல் ஒன்றே
ஈமானின் செயற்பாடு என்பேன்!
சுமையான தன்னலச் சேற்றின்
சுரிதின்னும் சுகபோகம் விட்டு:
அமைவான நற்பணி பூண்டு
ஆன்மீக சுகம்பெற வேண்டும்!

Saturday, May 5, 2012

புதிய பாலங்கள் - கிண்ணியா ஒன்றுகூடல்


ஏப்ரல் விடுமுறையில் திருமலை மாட்டத்தில் இரண்டு தினங்கள் கழி(ளி)ப்பது என்று எனது குடும்பம் ஏகமனதாக முடிவெடுத்தது. இந்தப் பயணத்தில் முக்கியமான அம்சம் கிண்ணியாவுக்குச் செல்வது.

கிண்ணியா எனக்கும் பாரம்பரிய பூமி. எனது தாய்வழிப் பாட்டனாரான அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் கிண்ணியா நாச்சிக்குடாவில் பிறந்தவர். எனது இரத்த உறவுகள் வாழும் நிலம் அது.

நாளை அதிகாலை பயணம் என்றிருந்த நிலையில் பிற்பல் இந்தோனேசிய நில அதிர்வும் சுனாமி எச்சரிக்கையும் என்ற உயிரை அச்சுறுத்தும் செய்தி ஒலி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நில அதிர்வு இலங்கையையும் ஒரு முறை அசைத்துவிட்டுப் போயிருந்தது. ‘சுனாமி’ நிச்சயம் என்ற முடிவில் கரையோரத்தவர் தங்களிடங்களிலிருந்து அகன்றும் அகற்றப்பட்டும் கொண்டிருந்தனர்.

ஆசியப் பிராந்தியமே கலங்கிப் போயிருக்க நான் வெளிநாட்டுச் செய்தி அலைவரிசைகளில் மூழ்கியிருந்தேன். ‘சுனாமி’ தாக்கவில்லையென்றால் திட்டமிட்ட பயணத்தைத் தொடர்வது என்று நான் உறுதியாக இருந்தேன். பி.ப. 5.00 மணிக்கு இந்தியா ‘சுனாமி’ எச்சரிகையை மீளப் பெற்றுக் கொண்டது. எனக்குத் திருப்தி! ஆனால் இலங்கைத் தொலைக் காட்சிகளின் அறிவிப்பாளர்கள் முன்னிரவு வரையும் ‘கோர்ட் சூட்’ சகிதம் நாற்காலி போட்டு அமர்ந்து மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு இலங்கை ஊடகங்களுக்கு “பிறேக்கிங் நியூஸ்” கிடையாது. இப்படியொரு வாய்ப்புக் கிடைத்திருக்கும் போது அதை விடலாமா... என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

‘யாத்ரா’ கவிதை இதழின் முதலாவது அறிமுக ஒன்று கூடலைக் கிண்ணியாவில் நடத்துவதற்கு நானும் ‘யாத்ரா’ நிர்வாக ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீனும் திட்டமிட்டிருந்தோம். ஆயினும் அத்திட்டம் நிறைவேறியிருக்கவில்லை. எனது குடும்பப் பயணம் பற்றித் தெரிந்து கொண்ட பர்வீன் ‘யாத்ரா’ ஒன்றுகூடலையும் இத்துடன் நடத்தி விடுவோம், நானும் கிண்ணியா வருகிறேன் என்று எனக்கு உற்சாகம் தந்தார்.

12. 04. 2012 அன்று பி.ப. 1.00 மணிக்குக் கிண்ணியாவை அடைந்தோம். சகோதரர் பத்தீஸ் அவர்களின் சகோதரி பிர்தௌஸியா வீட்டில் பகல் விருந்து. சகோதரர் பத்தீஸ் கிண்ணியாவிலிருந்து நாம் திரும்பும் வரை உறுதுணையாக எம் கூடவே இருந்ததை மறக்க முடியவில்லை. நாம் அங்கு வந்தது அறிந்ததும் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்களும் கவிஞர் நஸ்புல்லாஹ்வும் நேரே வந்து சந்தித்ததுடன் மாலை கிண்ணியா கடற்கரையில் ‘யாத்ரா’ ஒன்று கூடலை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்கள்.


அஸர் தொழுகைக்குப் பின்னர் எமது ஒன்றுகூடல் ஆரம்பமாயிற்று. கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். குறுகிய அழைப்பின் பேரில் நேயம் நியாஸ், எம்.எம். அலி அக்பர், எம்.ஈ.எச். தௌபீக், ஏ.நஸ் புள்ளா, நாஸிக் மஜீத், ஜே.பிரோஸ்கான், ஐ.இர்ஷாத், எச்.எம். ஹலால்தீன், பி.ரி. அஸீஸ், ஏ.கே. முஜாரத், எம்.ரி. சஜாத், ஹஸன்ஜி, சத்தார், நிஸார் முகமட், எப். பதீஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கடற்கரையில் சதுர வடிவில் பாய்களை விரித்து அமர்ந்துகொண்டோம்.

Wednesday, May 2, 2012

மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்


இலங்கையின் கடந்த கால உள்நாட்டுப் போரின் காரணமாகவும் பெரும்பான்மைச் சமூகங்களின் மேலாதிக்கம் காரணமாகவும் உண்டான நெருக்குவாரங்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்து எதிர்க்குலாகவும் துயரக் குரலாகவும் வெளிப்பட்ட கவிதைகளும் அநீதிக்கு எதிரான குரல் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் மீதான பரிவில் ஏனைய இனக் கவிஞர்களினால் எழுதப்பட்ட கவிதைகளும் ‘மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு 2002ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாநாட்டுப் பேராளர்களுக்கும் வளவாளர்களுக்கும் வழங்கப்பட்ட இத்தொகுதி பரவலான எல்லைகளைச் சென்றடையவில்லை என்ற காரணத்தாலும் இத்தொகுதியை ஏதாவது ஒரு தேவை கருதிப் பெற விரும்புமொருவர் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதாலும் இக்கவிதைத் தொகுதியை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஒரு சமூகாபிமானியின் நிதியுதவி கொண்டு மீள்பிரசுரம் செய்யத் தீர்மானித்துள்ளது.

இத்தொகுதியில் சேர்த்துக் கொள்வதற்கு உரிய வேளை கிடைக்கப் பெறாத பொருத்தமான கவிதைகளையும் 2009 வரை படைக்கப்பட்ட இத்தொகுதிக்குப் பொருத்தமான கவிதைகளையும் பிற்சேர்க்கையாக இணைத்து இக்கவிதைத் தொகுதி வெளியிடப்படள்ளது.

தம்மாலோ மற்றவொரு நபராலோ எழுதப்பட்ட இத்தொகுதிக்குப் பொருத்தமான கவிதைகள் கைவசமிருப்பவர்கள் அக்கவிதை வெளிவந்த பத்திரிகை அல்லது சஞ்சிகையை உறுதிப்படுத்தும் விதத்தில் புகைப்படப் பிரதியெடுத்துப் பிரதான தொகுப்பாளரின் பின்வரும் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ASHROFF SHIHABDEEN
37, Sri Sidhartha Mawatha,
(Dhankanatta Road)
MABOLA,
WATTALA,
SRI LANKA.