Saturday, December 27, 2014

முகத்திரண்டு புண்ணுடையார்!


 - 09 -

நீங்கள் உங்களது சகோதரியை அல்லது மனைவியை ஏற்றிக்கொண்டு தெருவில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பாராமல் அருகில் செல்லும் வாகனத்திலிருந்து ஒருவர் அல்லது மற்றொரு மோட்டார் சைக்கிளில், முச்சக்கர வண்டியில் உங்களைத் துரத்திக் கொண்டு வரும் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்த்து உங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் சகோதரி அல்லது மனைவியின் முந்தானை, அணிந்திருக்கும் சாரியின் தலைப்பு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொங்கிக் கொண்டிருப்பதையிட்டு உங்களை எச்சரிக்கிறார். அல்லது எடுத்துவிடப்படாமல் நீட்டிக் கொண்டிருக்கும் 'சைட் ஸ்டான்ட்' குறித்துச் சுட்டிக் காட்டுகிறார். நீங்கள் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு பாதுகாப்பு நிலைக்கு வருகிறீர்கள்.

நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்கலாம் அல்லது இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ இருக்கலாம். நீங்கள் ஆபத்திலிருந்து காப்பாற்ற எச்சரிப்பவர் முஸ்லிமாகவோ இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ இருக்கலாம்.

பலமுறை நான் பலரைத் துரத்திச் சென்று எச்சரித்திருக்கிறேன். பலர் என்னைத் துரத்தி வந்து  எச்சரித்திருக்கிறார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது இந்த மனோ உணர்வு எப்படி நம் எல்லோருக்கும் வந்தது என்பது பற்றித்தான். அடுத்த மனிதருக்கு ஆபத்து என்று உணரும் போது அதிலிருந்து அந்த சக மனிதரைக் காப்பாற்ற நினைக்கும் உணர்வானது இனம், மொழி, பிரதேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.

இலங்கை போன்ற பல்லின தேசத்தில் வாழும் மக்கள் யாவரும் அவர்கள் வௌ;வேறு கலாசார, பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்த போதும் எங்கோ ஒரு புள்ளியில் அல்லது தின வாழ்வின் பல புள்ளிகளில் சந்தித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது வியாபாரமாக, கல்வியாக, பிரதேச அபிவிருத்தியாக, பொதுமக்கள் நலனோம்பு செயற்பாடாக - எதுவாகவும் இருக்கலாம்.

இதற்கு அப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் கொஞ்சம் நீளமாக ஆராய்ந்து கொண்டு சென்றால் தமிழ் சமூகத்திலிருந்து, கிறிஸ்தவ சமூகத்திலிருந்து, பௌத்த சமூகத்திலிருந்து ஆணோ பெண்ணோ யாரோ ஒரு நபர் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்திருக்கக் காண்போம். இதன் மூலம் ஏற்பட்டிருக்கும் சக உறவானது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் சொந்தமானதாக இருக்காது.

பல்லின தேசத்தில் இந்த உறவையும் சக மனிதன் என்ற உணர்வையும் தவிர்க்க முடியாது. அது காலங்காலமாக வேரூன்றிப் போயுள்ள ஓர் அடிப்படை அம்சமாகும். இப்படி வாழும் இனங்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேற்றுமைகளும் பூசல்களும் ஒரு கட்டத்தில் ஐந்தறிவு மனிதனை விட மோசமான நிலைக்கு மனிதர்களைத் தள்ளிவிடுவது ஏன் என்ற கேள்வி இப்போது நமக்குள் எழும்.

உலகத்தின் எல்லாத் தேசங்களிலும் சம பலத்தோடு வாழும் இனங்களுக்குள்ளும் பெரும்பான்மை சிறுபான்மை இனங்களுக்குள்ளுமான மோதல்கள் அவ்வப்போது ஏற்படுவதை வரலாற்று ரீதியாக நாம் கண்டு வருகிறோம். அதாவது மனிதாபிமானமும் சக மனித பாசமும் நீடித்து வரும் இனங்களுக்குள் குழப்பங்களும் சண்டைகளும் ஒவ்வொரு கட்டத்தில் நடப்பதும் முடிவதுமாகவும் இருந்து வருகிறது.

இவ்வாறான கலவரப் பின்னணிகளை ஆராய்ந்து பார்த்தால் பின்னணியில் ஏதோ ஒரு வகையான அரசியல் உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். பெரும்பாலான இனக் கலவரங்களின் பின்னணி அரசியலாகவே இருப்பதை நம்மால் அவதானிக்க முடியும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை அண்மைக் காலக் கலவரங்களை ஆராய்ந்தால் இரண்டு வகையான பிரிவினர் இவ்வாறான கலவரத்தில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடியும். 01. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர். அநேகமாகவும் கல்வியறிவில் குறைந்தவர்கள். 02. அரசியல்வாதிகளின் கையாட்கள் மற்றும் அவர்களால் கூலிக்கு அமர்த்தப்படுபவர்கள். அதிகாரம் உள்ள அரசியல் அணியாயின் இந்தக் குழுவுக்குள் பாதுகாப்புத் தரப்பும் இணைந்து கொள்ளும்.

வறுமையில் உழலும் கல்வியறிவில் குறைந்தவர்கள்தாம் எப்போதும் உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளவர்கள். யாருக்காக இவ்வாறான கலவரத்தில் ஈடுபடுகிறோம், இதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது, நாட்டில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற அம்சங்களை இவர்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை. இருப்பவனிடமிருந்து தம்மிடம் இல்லாத ஒன்றைக் கலவரத்தின் மூலம் அடைந்து கொள்ளும் அவர்களது ஆசை அவர்களது கண்ணை மறைத்து விடுகிறது. நீயே தேசமாக இருக்கிறாய்.. இந்த நாடு உன்னை நம்பியே இருக்கிறது, இதை நீயே பாதுகாக்க வேண்டும் என்று கொடுக்கப்படும் தூண்டுதலில் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு அவர்கள் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

இந்தப் பிரிவினர் தொகை என்று நாட்டில் குறைகிறதோ அன்று இவ்வாறான கலவரங்கள் பெரிய அளவில் இடம்பெற முடியாமல் போய் விடும். இக்குழுவினரின் தொகை குறையுமிடத்து தூண்டுகின்ற அரசியல் கையாட்கள் இவர்களுக்குள் மறைந்து நிற்பதற்கு எந்த வாய்ப்பும்  உருவாகாது.

கல்வியறிவும் வறுமையும் பெருமளவில் நீக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் அடிப்படை வாழ்வியல் தேவைகள் நிறைவாகுமாயிருந்தால் இனங்களுக்கிடையிலான கலவரங்களை மதகுருக்களே முன் நின்று நடத்தினாலும் அதற்குரிய தாக்கம் 20 வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். குறைந்தது மனித உயிர்களாவது பாதுகாக்கப்படும்!

அறிவு கிடைக்கும் போது தெளிவு கிடைக்கும். தெளிவு பெற்றவன் ஒரு செயற்பாட்டுக்கு முன் பார்வையை எல்லாப்புறத்திலும் செலுத்துவதற்கு முனைவான்.

 பார்வையைக் கீழ் நோக்கிச் செலுத்துபவன் தனது மூக்கைக் கண்டு கொள்வான்!



Wednesday, December 10, 2014

கண்ணுக்குத் தெரியாத கபட வலை!


 - 08 -

பத்தாம் ஆண்டில் கற்கும் மலர்ந்த முகச் சிறுவன் அவன். அவர்களது வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நடந்த உபசாரத்தில் கவனத்தோடும் பொறுப்போடும் அவன் செயற்பட்ட விதத்தில் எனது மனசில் ஒட்டிக் கொண்டான். அவனைச் சிலாகித்துக் கதைக்கும் போது அவனைப் பற்றிய இன்னும் சில நல்ல தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். நடை தூரத்தில் இருக்கும் பள்ளிவாசலுக்கு 'தஹஜ்ஜத்' தொழுகைக்காக அதிகாலையில் எழுந்து சென்று விடுகிறான். மாலை வேளைகளில் வெள்ளை நிற ஜூப்பாவும் தொப்பியும் அணிந்திருப்பவனாகப் பல முறை கண்டிருக்கிறேன். எப்போது என்னைக் கண்டாலும் முன்னால் வந்து ஸலாம் சொல்லிப் போவான்.  அவன் கற்பது பல்லின சர்வதேசப் பாடசாலை ஒன்றில். அவனுடைய பெயரைக் காமில் என்று வைத்துக் கொள்ளலாம்!

சில காலங்களுக்குப் பின்னர் காமில் பற்றி ஓர் அதிர்ச்சிகரமான செய்தி எனக்குக் கிடைத்தது. தனது வயதொத்த மற்றும் சற்று வயது கூடிய நண்பர்களுடன் இணைந்து அவன் போதைப் பொருள் பாவிக்கிறான் என்பதே அந்தச் செய்தி!

காமிலின் போதைக் குழுவில் உள்ளவர்களில் ஒருவனான சலீமின் இளைய சகோதரன் மூலம் வந்த செய்தி இது. சலீமின் பழக்கம் உணர்ந்த அவனது வீட்டார் அவனை அவனது மாமாவின் மேற்பார்வையில் பாட்டனாரிடம் இடம் மாற்றிப் பொறுப்பளித்திருந்தார்கள். நான் கண்ணால் காணாது போனாலும் கூட இந்த நடவடிக்கைகளை அறிந்திருந்தேன். அவன் மாற்றப்பட்டிருந்த இடத்தில் இருப்பதைக் கண்ணால் கண்டேன். செய்தியினது பின்னணியை நம்பியே ஆகவேண்டியிருந்தது.

சம்பந்தப்பட்ட பயல்களில் ஒருவனுக்குத் தந்தை இல்லை. தாய், தாயின் பெற்றோர் பார்வையில் வளர்பவன். மற்றொருவன் தாயும் தந்தையும் தொழில் நிமித்தம் பகல் பொழுதுகள் முழுவதும் அநேகமாக சனி, ஞாயிறுகளிலும் கூட - வீட்டில் இராமல் வெளியேறி விடுபவர்கள். கட்டுப்பாடும் அவதானமும் இல்லாத காரணத்தாலும் எந்நேரமும் வெளியேறி எங்கு வேண்டுமானாலும் அலையக் கிடைத்த வாய்ப்பினாலும் சகதிக்குள் இறங்கியிருக்கிறார்கள்.

மேற்குறித்த சம்பவம் நடந்தது தலைநகரில். ஒரு குறிப்பிட்ட காலம் வரை போதைப் பொருள் பாவனை தலை நகரிலும் அதுசார் அயல் பிரதேசங்களிலும் மட்டுமே நிலவி வந்தது. பின்னர் பிரதான நகரங்களுக்குப் பரந்து இன்று கிராமங்கள் வரை விஷம் போலப் பரவியிருக்கிறது. ஒரே வலைப் பின்னலில் தொடர்புட்ட மிகக் கவனமாகவும் அந்தரங்கமாகவும் நடத்தப்படும் இந்த வியாபாரம் இலகுவில் பொதுமகனின் கண்களுக்குத் தோற்றுவதில்லை. அண்மைக் காலமாக, குறிப்பாக உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் இந்த வியாபாரத்தின் பின்னணியில் இருப்பது வெறும் பணம் பார்க்கும் நோக்கம் மட்டுமல்ல என்பதுதான் நமது அவதானத்துக்குட்படாத ஆனால் அபாயகரமான விடயமாகும்.

யுத்தம் என்ற ஒன்று - அது மற்றொரு நாட்டுடனான போராக இருந்தாலென்ன, உள்நாட்டுப் போராக இருந்தாலென்ன - மோசமான பின் விளைவுகளையே விதைத்துச் செல்லும். இதற்கு நம்முன்னால் உள்ள நல்ல உதாரணம் ஆப்கானிஸ்தான். ஆப்கானோடு இலங்கையை ஒப்பிட முடியாதுதான். ஆனால் யுத்தத்தின் பின் விளைவுகள் வேறு பட்ட போதும் ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் என்பது ஒரே நூலில் ஓடும் அம்சமேயாகும்.

இலங்கையின் சிறுபான்மைகள் மீண்டும் ஒரு முறை தம்மைக் கட்டமைத்துக் கொண்டு எழுந்து விடக் கூடாது என்பதில் பெரும்பான்மை மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகிறது. அப்படி ஒரு எண்ணம் கூடச் சிறுபான்மையினர் மத்தியில் தோற்றம் பெறாமலும் பெரும்பான்மையின் கட்டுப்பாட்டுக்கு மீறிச் செல்லாமலும் - கண்காணிக்க ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உணர முடிகிறது.

அதாவது இனங்களுக்கிடையில் பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தம் தொடர்கிறது என்று சொல்ல முடியும். அதனடிப்படையில்தான் இந்தப் போதைப் பொருள் பாவனைக்கு இளைய சமூகத்தைப் பழக்கி விடுதல், கலாசாரச் சீரழிவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் திரை மறைவில் நடக்கிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

சிறுபான்மையினர் பெருமளவில் வசிக்கும் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை, மதுப் பாவனை என்பன என்றுமில்லாதவாறு அதிகரித்துச் செல்வதை அண்மையில் பல்வேறு வலைத் தளங்களிலும் செய்திகளிலும் நான் படித்திருக்கிறேன். இறுக்கமான பாதுகாப்புப் பார்வைக்குள் இது இயல்பாகப் பரவுகிறது என்பதை இலகுவில் ஏற்றுக் கொள்ளத் தயங்கி ஆகவேண்டியிருக்கிறது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை கலாசாரச் சீரழிவு என்ற ஒன்று இல்லாது போனாலும் கூட குறிப்பிட்ட ஒரு சில இஸ்லாமிய இயக்கங்களின் பிரிவினைகளும் அவற்றின் சண்டை, சச்சரவுகளும் சமூகத்துக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சீரழிவானது போதைப் பொருட்களால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கத்துக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இரண்டு ஆபத்துக்களுக்குப் பின்னாலும் இருப்பவை ஒரே விதமான நோக்கங்கள்தாம் என்பதைப் புரிந்து கொள்ள, யாரும் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'க்களாக இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை!

நன்றி - (மீள்பார்வை)

Tuesday, December 9, 2014

ஒரு சாதி ஆய்ட்டேன்!


நாவலாசிரியர், சிறுகதையாளர், கவிஞர், நாடக எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்ட எனது மனதுக்கினிய நண்பர் ஆர்.எம். நௌஷாத் அவர்களிடமிருந்து நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அந்த மின்னஞ்சலைப் பொதுவில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மின்னஞ்சல்
-----------------
ஒரு வண்ணத்துப் பூச்சி பல வண்ணத்துப் புள்ளிகளுடன்  இறகு விரித்து  உங்கள் முகம்  நோக்கி வருகிற பாங்கில்  விரிந்துள்ள உங்கள் முகப் புத்தகம் கண்டு மகிழ்ந்தேன்

முகப்பும் ஒரு படைப்புத்தான்

முகப் பூவும் ஒரு படைப் பூதான்

படைப்பை நேர்த்தியாக்கும் திறன் சிலருக்குத்தான் வரும்.
யாத்ரா வின்  அதே அழகான வடிவமைப்பு  பேஸ்புக் கிலும்  படிந்துள்ளது


ஓய்வானத்தின் பின் ஒரு சிலரின் முகப் புக்குகளை சும்மா திறந்து பார்த்தேன் ...
அதுதான் நான் செய்த மிகப் பெரும் ..தவறு இவ் வருடத்தில்..

ஒருவரின் முகப் புக்கை திறக்கவே மனசு பக் பக் என்கிறது
இன்னொருவரின் புக்கினுள் பீ நாத்தம் சகிக்கல்ல.
மற்றுமொருவர்  முக நூல் என்ற பெயரில் மூக்குப் பீ தோண்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் எழுத்தாளர் இன்னொரு பெண்ணியல் கவிஞரோடு பின்னிக் கிடக்கிறார்.

இவையாவது  பரவாய் இல்லை.. ஐயா

ஆனால் ... நேற்று ஒரு சிரேஷ்ட எழுத்தாளரின் முக நூல் திறந்தேன் .. பாருங்கள். ... அதாவது 2014 ஜூன் மாதம் எழுத ஆரம்பித்து  ஜூலை மாதமே  கவிதை தொகுதி போட்டுவிட்ட   அந்த சிரேஸ்ட  மூத்த எழுத்தாளர்   தனது முக நூலில் எழுதி வருகிற சுய சரிதையில் வளரும் இளைய எழுத்தாளருக்கு சொல்லும்  அறிவுரைகளை வாசித்து நமது குண்டியிலிருந்து  குண்டிக்காய்  வரை குலுங்கிச் சிரிக்கையில் .... போதாதென்று  கீழே அவரது முதல் படைப்பாம் .....ன்னிப்  ப (பு) டைப்பையும் காட்சிப் படுத்தி இருந்தார் பாருங்கள்... அடடா

என் பிறசரும் சீனியும் ஹாட்டும் எகிறிப்  போய் ஆளே  ஒரு சாதி ஆய்ட்டேன் ....

இனி பேஸ்புக் பக்கமே  மௌஸ் வைக்கக் கூடாது என முடிவு கட்டினேன் ...

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கருத்துச் செறிவும் கனதியும் கண்ணுக்கு அழகாகவும்  கண்ட உங்கள்  நட்ட விழி  முகநூல் ஒரு  நிவாரண மாத்திரையாக இருந்தது.. அருந்திக் குணம் அடைந்தேன்.... அன்பான வாழ்த்துக்கள் ...   இனி   தொடர்வேன் ...

தீரன் ஆர் எம்  நௌஷாத்
09.12.2014