Friday, August 1, 2014

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்!


- Gary Corseri -

மூஸா (அலை) வினது அல்லது ரோமர்களது
வருகைக்கு முன்பு
ஈஸா (அலை) வினது அல்லது முஹம்;மது (ஸல்) 
அவர்களது வருகைக்கு முன்பு
துருக்கியருக்கும் ஆங்கிலேயருக்கும் முன்பு
நாங்கள் இந்த நிலத்தில் வாழ்ந்திருந்தோம்!

புழுதியிலிருந்து நாங்கள்
நகரங்களை எழுப்பினோம்
கண்ணீர் கொண்டு நீரிறைத்தோம்
மகிழ்ச்சியில் திழைத்திருந்தோம்
கைவிடப்பட்டிருந்த கடல்களில்
மீன் பிடித்தோம்
குளிர்மிகு ஒலிவ் தோட்டங்களில்
எங்களது பிள்ளைகளின்
திருமணங்களை வாழ்த்தினோம்!

என்றென்றும் சாசுவதமான
'மக்கள்' என்ற சொல்லை
எங்களுக்கு நாங்களே சூட்டிக் கொள்வதில்
ஒருபோதும் கவலை கொண்டதில்லை

ஆக்கிரமிப்பாளர்கள் வருகை தந்தனர்
எங்களது நிலத்தில் அணிவகுத்துச் சென்றனர்
இரும்பு ஆயுதங்களையும்
ஆகாயக் கடவுளரையும் கொண்டு வந்தனர்
எமது குழந்தைகளைப் படுகொலை செய்தனர்

முதிய ஆண்கள் இறைவனை வணங்கினர்
வணங்கிய இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்
பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
ஒப்பாரி வைத்த இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்

உலக சபைக்கு மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம் முறையீடு செய்தோம்
சிலபோது அவர்கள் அமைதியாகச் செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென
அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோது எங்கள் காயங்களைப் பார்த்து
அவர்கள் கொட்டாவி விட்டனர்

பாலைச் சூரியன் சுட்ட
எமது தோல் நிறம் கருப்பானது
இளஞ்சிவப்பு நிறத்தோல் கொண்ட
அமெரிக்கர் வந்தனர்
இளஞ்சிவப்பு நிறங்கொண்ட பிள்ளைகளுடன்
வெள்ளை நிறப் பெண்கள்
இங்கிலாந்திருந்து வந்தனர்
இது எமது நிலமென்றனர்
அவர்களே அவர்களை
செமித்தியர் என்றனர்
அவர்களது நிறமோ
செமித்தியர்களின் நிறமாயிருக்கவில்லை
பொன்நிறத் தலை மயிரும்
நீலக் கண்களும் 
செமித்தியருக்குரியவை அல்ல!

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
உங்களது சிறாருக்குத் தேவைப்படுவதைவிட
குறைந்த அளவே
எமது சிறார்களுக்கு
எதிர்பார்க்கிறோம் என்று நினைக்கிறீர்களா?
உங்கள் சிறார்களை விடவும்
குறைந்தளவு பெறவேண்டியவர்கள்
என்றா நினைக்கிறீர்கள்?
எமது அப்பாவிச் சிறுவர்கள்
பெறுமதி குறைந்தவர்களா?
அவர்களது சிரிப்பும் அழுகையும்
மதிப்புக் குறைந்தவையா?
அவர்களும் இந்தப் பூமியின்
குழந்தைகள் இல்லையா?
அவர்களும் இறைவனின்
குழந்தைகள் இல்லையா?
எமது ஆண்கள் குறைந்த வீரமும்
எமது பெண்கள் குறைந்த துணிச்சலும்
கொண்டவர்களா?

நாங்கள் மக்கள் -
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம்
பெரிய மீனைக் கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப் புழு எத்தகையது?
நீங்கள் கௌரவத்தை இழந்து விட்டீர்களா?

நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப் பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்
அந்தத் தெய்வத்துக்கு
உங்கள் குழந்தைகளைப் பலி கொடுக்குறீர்கள்
மற்றவர் குழந்தைகளையும் பலி கொடுக்கிறீர்கள்
உங்களது குழந்தைப் பலி கேட்கும் தெய்வம்
மற்றவர் குழந்தைகளைப் பலி கொண்டு
பெருத்து வளர்ந்து கொண்டிருக்கிறது

பலமும் செல்வமும் 
உங்களை நுகர்கின்றன
மலைகளைத் தகர்க்கிறீர்கள்
பெண்களை அச்சமூட்டிப் பணிவிக்கிறீர்கள்
உங்களது புத்தகங்களில்
உங்களது பெயர்களைக் காண்பிக்கிறீர்கள்
ஆனால்
மரங்களின் வேர்களில் எழுதப்பட்டும்
பழம் பாறைகளில் பொழியப்பட்டும் இருக்கும்
எமது பெயர்களை
உங்களால் கண்டடைய முடியவில்லை

முழங்கும் ஆயிரமாயிரம் யுத்தத் தாங்கிகளால்
எங்களைப் பணிய வைக்க முடியவில்லை
உண்மை கருப்பு நிறம் கொண்டது
நாமும் கருப்பு நிறமான
எமது கண்களால்தான் பார்க்கிறோம்
துருக்கியர் வந்தார்கள்
அவர்க்குப் பிறகு மற்றவர்களும் வந்தார்கள்
ஆங்கிலேயர் வந்தார்கள்
அவர்களுக்குப் பின்
மற்றவர்கள் வந்தார்கள்
கடவுளின் பெயரால்
அவர்கள் கொலை புரிந்தார்கள்
கடவுளின் பெயரால்
கடவுளையே கொலை செய்தார்கள்

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்
எங்கள் வாழ்வாதாரங்களை
எடுத்துக் கொள்ளத வரை...
எம்மை தாழ்மைப்படுத்தாத வரை..
நாங்கள் வாழ்பவர்கள்
வாழவும் விடுபவர்கள்

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
எங்கள் வணிகத்துக்கான உபகரணங்களைக்
காலம் கூர்மைப்படுத்துகிறது
துயரம் எங்களை
மெருகு படுத்துகிறது
நாங்கள் எங்களது கருவிழி கொண்டே
பார்க்கிறோம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: