Saturday, December 27, 2014

முகத்திரண்டு புண்ணுடையார்!


 - 09 -

நீங்கள் உங்களது சகோதரியை அல்லது மனைவியை ஏற்றிக்கொண்டு தெருவில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பாராமல் அருகில் செல்லும் வாகனத்திலிருந்து ஒருவர் அல்லது மற்றொரு மோட்டார் சைக்கிளில், முச்சக்கர வண்டியில் உங்களைத் துரத்திக் கொண்டு வரும் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்த்து உங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் சகோதரி அல்லது மனைவியின் முந்தானை, அணிந்திருக்கும் சாரியின் தலைப்பு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொங்கிக் கொண்டிருப்பதையிட்டு உங்களை எச்சரிக்கிறார். அல்லது எடுத்துவிடப்படாமல் நீட்டிக் கொண்டிருக்கும் 'சைட் ஸ்டான்ட்' குறித்துச் சுட்டிக் காட்டுகிறார். நீங்கள் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு பாதுகாப்பு நிலைக்கு வருகிறீர்கள்.

நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்கலாம் அல்லது இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ இருக்கலாம். நீங்கள் ஆபத்திலிருந்து காப்பாற்ற எச்சரிப்பவர் முஸ்லிமாகவோ இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ இருக்கலாம்.

பலமுறை நான் பலரைத் துரத்திச் சென்று எச்சரித்திருக்கிறேன். பலர் என்னைத் துரத்தி வந்து  எச்சரித்திருக்கிறார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது இந்த மனோ உணர்வு எப்படி நம் எல்லோருக்கும் வந்தது என்பது பற்றித்தான். அடுத்த மனிதருக்கு ஆபத்து என்று உணரும் போது அதிலிருந்து அந்த சக மனிதரைக் காப்பாற்ற நினைக்கும் உணர்வானது இனம், மொழி, பிரதேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.

இலங்கை போன்ற பல்லின தேசத்தில் வாழும் மக்கள் யாவரும் அவர்கள் வௌ;வேறு கலாசார, பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்த போதும் எங்கோ ஒரு புள்ளியில் அல்லது தின வாழ்வின் பல புள்ளிகளில் சந்தித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது வியாபாரமாக, கல்வியாக, பிரதேச அபிவிருத்தியாக, பொதுமக்கள் நலனோம்பு செயற்பாடாக - எதுவாகவும் இருக்கலாம்.

இதற்கு அப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் கொஞ்சம் நீளமாக ஆராய்ந்து கொண்டு சென்றால் தமிழ் சமூகத்திலிருந்து, கிறிஸ்தவ சமூகத்திலிருந்து, பௌத்த சமூகத்திலிருந்து ஆணோ பெண்ணோ யாரோ ஒரு நபர் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்திருக்கக் காண்போம். இதன் மூலம் ஏற்பட்டிருக்கும் சக உறவானது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் சொந்தமானதாக இருக்காது.

பல்லின தேசத்தில் இந்த உறவையும் சக மனிதன் என்ற உணர்வையும் தவிர்க்க முடியாது. அது காலங்காலமாக வேரூன்றிப் போயுள்ள ஓர் அடிப்படை அம்சமாகும். இப்படி வாழும் இனங்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேற்றுமைகளும் பூசல்களும் ஒரு கட்டத்தில் ஐந்தறிவு மனிதனை விட மோசமான நிலைக்கு மனிதர்களைத் தள்ளிவிடுவது ஏன் என்ற கேள்வி இப்போது நமக்குள் எழும்.

உலகத்தின் எல்லாத் தேசங்களிலும் சம பலத்தோடு வாழும் இனங்களுக்குள்ளும் பெரும்பான்மை சிறுபான்மை இனங்களுக்குள்ளுமான மோதல்கள் அவ்வப்போது ஏற்படுவதை வரலாற்று ரீதியாக நாம் கண்டு வருகிறோம். அதாவது மனிதாபிமானமும் சக மனித பாசமும் நீடித்து வரும் இனங்களுக்குள் குழப்பங்களும் சண்டைகளும் ஒவ்வொரு கட்டத்தில் நடப்பதும் முடிவதுமாகவும் இருந்து வருகிறது.

இவ்வாறான கலவரப் பின்னணிகளை ஆராய்ந்து பார்த்தால் பின்னணியில் ஏதோ ஒரு வகையான அரசியல் உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். பெரும்பாலான இனக் கலவரங்களின் பின்னணி அரசியலாகவே இருப்பதை நம்மால் அவதானிக்க முடியும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை அண்மைக் காலக் கலவரங்களை ஆராய்ந்தால் இரண்டு வகையான பிரிவினர் இவ்வாறான கலவரத்தில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடியும். 01. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர். அநேகமாகவும் கல்வியறிவில் குறைந்தவர்கள். 02. அரசியல்வாதிகளின் கையாட்கள் மற்றும் அவர்களால் கூலிக்கு அமர்த்தப்படுபவர்கள். அதிகாரம் உள்ள அரசியல் அணியாயின் இந்தக் குழுவுக்குள் பாதுகாப்புத் தரப்பும் இணைந்து கொள்ளும்.

வறுமையில் உழலும் கல்வியறிவில் குறைந்தவர்கள்தாம் எப்போதும் உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளவர்கள். யாருக்காக இவ்வாறான கலவரத்தில் ஈடுபடுகிறோம், இதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது, நாட்டில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற அம்சங்களை இவர்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை. இருப்பவனிடமிருந்து தம்மிடம் இல்லாத ஒன்றைக் கலவரத்தின் மூலம் அடைந்து கொள்ளும் அவர்களது ஆசை அவர்களது கண்ணை மறைத்து விடுகிறது. நீயே தேசமாக இருக்கிறாய்.. இந்த நாடு உன்னை நம்பியே இருக்கிறது, இதை நீயே பாதுகாக்க வேண்டும் என்று கொடுக்கப்படும் தூண்டுதலில் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு அவர்கள் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

இந்தப் பிரிவினர் தொகை என்று நாட்டில் குறைகிறதோ அன்று இவ்வாறான கலவரங்கள் பெரிய அளவில் இடம்பெற முடியாமல் போய் விடும். இக்குழுவினரின் தொகை குறையுமிடத்து தூண்டுகின்ற அரசியல் கையாட்கள் இவர்களுக்குள் மறைந்து நிற்பதற்கு எந்த வாய்ப்பும்  உருவாகாது.

கல்வியறிவும் வறுமையும் பெருமளவில் நீக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் அடிப்படை வாழ்வியல் தேவைகள் நிறைவாகுமாயிருந்தால் இனங்களுக்கிடையிலான கலவரங்களை மதகுருக்களே முன் நின்று நடத்தினாலும் அதற்குரிய தாக்கம் 20 வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். குறைந்தது மனித உயிர்களாவது பாதுகாக்கப்படும்!

அறிவு கிடைக்கும் போது தெளிவு கிடைக்கும். தெளிவு பெற்றவன் ஒரு செயற்பாட்டுக்கு முன் பார்வையை எல்லாப்புறத்திலும் செலுத்துவதற்கு முனைவான்.

 பார்வையைக் கீழ் நோக்கிச் செலுத்துபவன் தனது மூக்கைக் கண்டு கொள்வான்!



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: