Sunday, November 28, 2010

அறபு தேச அரசருக்கு ஓர் அஞ்சல்

மாட்சிமை பொருந்திய சவூதி அரசரின் சமூகத்துக்கு,

எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.

இந்துமா சமுத்திரத்தில் கண்ணீர் வடிவான அழகிய தேசத்திலிருந்து ஓர் ஏழை முஸ்லிம் தங்கள் சமூகத்துக்கு எழுதும் திருமுகமாவது,

நீங்கள் எப்போதும் அமெரிக்காவுடனும் ஏனைய மேலைத்தேய நாடுகளுடனும் மட்டுமே நட்புப் பாராட்டுவதால் இந்தத் தீவு எங்கேயிருக்கிறது என்பது கூட உங்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்களைப் பகைத்துக் கொள்வதன் மூலம் தங்களது பதவிக்கே ஆபத்து என்பதால் அவர்கள் காலால் இட்டதைத் தலையால் செய்து கொண்டு தலை தப்புவதே தம்பிரான் புண்ணியம் என்று வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை நானும் என்னைப் போன்று உலகளாவிய ரீதியில் லட்சக் கணக்கானோரும் அறிவார்கள்.

Friday, November 26, 2010

மன்னாரில் ஒரு செம்மொழி விழா






இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக மன்னார் செல்ல வேண்டி வந்தது மன்னார் தமிழ் செம்மொழி விழாவுக்காக. கொழும்பிலிருந்து ஏறக்குறைய 300 கிலோ மீற்றர்கள். தனி வாகனத்தில் ஒரு குதூகலப் பயணம் அது.
மூத்த படைப்பாளிகளான ஜின்னாஹ் ஷரிபுத்தீன், அந்தனி ஜீவா, அல் அஸ_மத், கலைவாதி கலீல், தாஸிம் அகமது மற்றும் சட்டத்தரணியும் இலக்கிய ஆர்வலருமான மர்ஸ_ம் மௌலானா ஆகியோருடன் நானும் இணைந்து கொண்டேன். அக்டோபர் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற்ற இவ்விழாவில் மூன்று முழுத் தினங்கள் நாங்கள் கலந்து கொண்டோம். விழாவின் ஆரம்ப தினமான வெள்ளியன்று பிற்பகலில் புறப்பட்ட பயணம் நள்ளிரவு 12.00 மணிக்கு மன்னாரில் முடிந்தது. இதனால் தொடக்க விழாவையும் இசை விழாவையும் நாங்கள் இழந்தோம்.

செம்மொழி விழாவாக இதை மன்னார்த் தமிழ்ச் சங்கம் நடத்திய போதும் இவ்விழா ஒரு மாநாட்டின் எல்லையைத் தொட்டு நின்ற அழகைச் சொல்லியாக வேண்டும்.

கலை, கலாசார, பொது நிகழ்வுகள் அனைத்தும் மன்னார் நகர மண்டபத்திலும் ஆய்வரங்கங்கள் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியிலும் நடைபெற்றன. இரண்டாம் நாளிலிருந்து நகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்ற அதே வேளை சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் ஆய்வரங்குகளும் நடந்ததால் இங்கு கொஞ்ச நேரம் அங்கு கொஞ்ச நேரம் எனப் பங்கு கொண்டோம். மாலை நிகழ்வுகளில் முழுமையாகக் கலந்து கொள்ளக் கிடைத்தது.

Thursday, November 25, 2010

ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை





பயனுள்ளவை என்று கருதுபவற்றை ஏனையவர்களும் பயனடையும் வகையில் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தின் விளைவாகவே இலக்கியங்களும் பிற நூல்களும் தோன்றுகின்றன. புதிதாக அறிந்ததை, அனுபவித்ததை, சிந்தையைக் கவர்ந்ததை எழுத்தாற்றல் படைத்தவர்கள் ஏனையவர்களுடன் சுவைபடப் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் நாடறிந்த கவிஞரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன், தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதிய ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை’ என்ற தொடர் பயணக் கட்டுரையை தொகுத்து நூலுருவில் எமது கரங்களுக்குச் சமர்ப்பித்துள்ளார். சிறுகதை, கவிதை, பத்தி எழுத்து என பல துறைகளிலும் முத்திரை பதித்த அஷ்ரஃப் சிஹாப்தீன் பயண இலக்கியத்திலும் ஆளுமையுள்ள எழுத்தாளர் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

அண்மையில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘தீர்க்க வர்ணம்’, ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவின் போது கவிதாயினி லுணுகல ஸ்ரீ பாடிய கவி வாழ்த்து அஷ்ரஃப் சிஹாப்தீனின் எழுத்தாற்றலைக் கூறும் அழகிய கவி வரிகளாகும்.

இரை மீட்டும் பசுவாய்
இருந்து அசை போட
ஆறு மாதம் வேண்டும்
ஆகக் குறைந்தது...
ஊமையான சொற்கள் கூட
தேனீயாய்ப் பறக்குமே அந்த
சூட்சுமத்தைக் கொஞ்சம்
சொல்லித் தருவாயா?

Monday, November 15, 2010

ஜீனி

இனிப்பான சீனியைத் தமிழகத்தில் ஜீனி என்றும் அழைக்கிறார்கள்.

இனிப்பான சீனி என்று நான் சொல்வதற்குக் காரணம் சீனி என்று சிலருக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பதுதான். இப்பெயர் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் அநேகர் உள்ளனர். அதேபோலத்தான் இலங்கையிலும் இருந்தார்கள் இருக்கிறார்கள். சீனி என்று பெயரிடப்பட்டவர்களை ஜீனி என்று அழைக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் ஸக்கரியாவை ஜக்கரியா எனக் கூப்பிடுகிறார்கள். ஜக்கம்மாவை அங்கும் இங்கும் அப்படியேதான் அழைக்கிறார்கள். சக்கம்மா என்று அழைப்பதில்லை.

தண்ணீரை ஜலம் என்கிறார்கள். சலம் என்றால் அது நீரையும் கூடவே சீழையும் சிறுநீரையும் குறிக்கிறது. அங்கு சர்க்கரையைச் சர்க்கரை என்றும் சீனியையும் அதாவது ஜீனியையும் சர்க்கரை என்றும் சொல்கிறார்கள்.