Thursday, July 17, 2014

ஆப்கானிஸ்தானில் ஒரு தாயாகிய நான்!


Mina T.

நான் ஒரு தாய்
ஆப்கானிஸ்தானில் வாழுகிறேன்
இங்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது
மனிதாபிமானத்துக்கான எந்தவொரு உணர்வும் இல்லை
பொருத்தமான வாழ்வுணர்வும் இல்லை

பெண்கள் பற்றிய எந்தப் புரிந்துணர்வும் இல்லை
மார்ச் 8ம் திகதியால் என்னைப் போன்ற தாய்மாருக்கு
என்ன புண்ணியம்?

பருவ வயதில் ஒரு பசுமை மிக்க வாழ்வு
முன்னோக்கி வருவதாக எண்ணினேன்
ஒரு தாயான பிறகு
எனது வாழ்க்கைத் துணையை
யுத்தத்துக்குக் காவு கொடுத்தேன்!

அன்றைய தினம்
என் உடல் முழுக்க
வெண்பனி போர்த்திக் கிடந்தது
இருபத்தைந்தாவது வயதில்
அடர்ந்த கருத்த எனது கூந்தல் 
மணப்பெண்ணின் நீளாடை போலும் 
வெண்பனிபோலும் வெண்மையாயிற்று!

வருத்தங்களுடனே வாழ்க்கை கடந்தது
குளிராக... இன்று வரை கடும் குளிராக..
என் அன்புக் கணவர் மறைந்து போனபோதும்
அவரது குரல் ஒலித்துக் கொண்டிருகிறது..
அவர் சொன்னார்...
'நான் போய் விட்டேன்...
உனது சிறகுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன..
ஆனால் நீ உயிருடன் இருக்க வேண்டும்...'

எனது உடற்  சூடாக அவரை உணர்ந்தேன்
எனது உடம்புக்குள் பிறக்காத எனது மகன்
அவனைப் பாதுகாக்கும்படி 
அவரது குரல் எனக்குச் சொன்னது.

இப்போது எனது மகன்
ஓர் இராணுவ வீரன்
எமது மண்ணைப் பாதுகாக்க
அவன் முயற்சிக்கிறான்
எங்களைப் பாதுகாக்கும் இராணுவமொன்று
இருப்பதை எதிரிகள் விரும்பவில்லை
நாங்கள அடையாளமற்றவர்களாக
இருக்கவேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்!

எமது இராணுவத்தினர் இறப்பதை 
ஒவ்வொரு தினமும்
ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும்
நாங்கள் காண்கிறோம்
குனார் காஸியாபாத்தில்
இருபது தாய்மார் 
தங்கள் புதல்வர்களை இழந்தனர்
இராணுவ உடை
வெண்பனிபோல் நிறம்மாறி வந்தது
வெண்பனி அத்தாய்மாரைச் சூழ்ந்தது!

வெண்பனி இறங்குகிறது
எமது இதயங்களையும் குடும்பங்களையும்
அது ஊடுருவுகிறது
எமது உடைந்த மதில்களையும் யன்னல்களையும்
எமது இதயங்களையும் வெளிச்சப்படுத்துகிறது
என்னையும் மற்றவர்களையும்
அது சூழ்ந்து கொள்கிறது!

நான் ஓர் ஆப்கானிய ஏழைத்தாய்!

எனது உடல் கூனி விட்டது
எனது இதயம் குளிராகியும் கோபத்தில் இருக்கிறது!
எனது தலை முடி வெண்மையாகி விட்டது!

என்னைப் போன்ற தாய்மாரை மறந்தவர்களை
நான் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்
எங்களது உரிமைகளை வைத்துப் 
பிழைப்பு நடத்துவோரை மன்னிக்க மாட்டேன்
எமது வாழ்வுரிமையிலும் பாதுகாப்பு நலனிலும்
அக்கறை கொள்ளாத எவரையும் மன்னிக்க மாட்டேன்
எங்களைப் புறந்தள்ளிவிட்டுக் 
கடந்து செல்லும் யாரையும் மன்னிக்க மாட்டேன்
எமது பிள்ளைகளின் உயிரையும்
எமது வாழ்க்கையையும் வணிகச் சரக்காக்கிய
யாரையும் மன்னிக்க மாட்டேன்
கொலையாளிகளின் சகோதரர்கள் என்று
எமது பிள்ளைகளை அழைத்த
எவரையும் மன்னிக்க மாட்டேன்

நெல்சன் மண்டேலாவின் பெரிய இதயத்தைப் போல
ஓர் இதயம் என்னிடம் இல்லை!
நான் ஒரு சாதாரண ஆப்கானியப் பெண்!

வெண்பனிபோன்ற பொறுமையுடன்
நானும் என்னைப் போன்ற தாய்மாரும்
ஒரு பசுமையான வாழ்க்கையை
எதிர்பார்த்திருக்கிறோம்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: