Friday, May 25, 2018

தாயத்து கட்டு... தாகம் தீரும்!

எண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒரு காட்சி.

கொழும்பில் தோட்டம் - தோடம் என அழைக்கப்படும் நெருக்கடிப் பட்டு வாழும் பகுதிக்குல் பல வீடுகளை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கும் 'சொர்ணக்கா'வான தோட்டத்து ராணியின் மகன் அதே தோட்டத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டில் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுவான். தாயாரான தோட்டத்து ராணி 'மை வெளிச்சம்' பார்க்கும் ஒரு நபரிடம் போய் மகனும் அந்த இளம் பெண்ணும் எங்கிருக்கிறார்கள் என்று அறியச் செல்கிறாள்.

மை வெளிச்சம் பார்ப்பவர் அவராகப் பார்த்துச் சொல்வதில்லை. பருவமடையாத சிறுவனை அல்லது சிறுமியொருத்தியைத்தான் பயன்படுத்துவார்கள். வாயகன்ற ஒரு போத்தலில் நீர் நிரப்பி அதற்குள் கண் இமைக்காமல் உறுத்திப் பார்க்கச் சொல்லியபடி தாம் வாயால் ஒரு காட்சியை உருவாக்கி பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்கோ சிறுமிக்கோ சொல்லிக் கொண்டேயிருந்து விட்டு இப்போ எங்க இருக்கிறான், என்ன செய்கிறான் என்று கேட்பார்கள். பார்வைப் புலனை நீருக்குள்ளும் கேள்விப் புலனை மைவெளிச்சம் பார்க்கும் நபரின் குரலிலும் ஒன்றித்துக் கொண்டுள்ள அவர்களுக்கு அதுவே உலகமாய் மாற அவர்கள் கண்ணுக்குப் புலப்படும் மாயக் காட்சியைச் சொல்லத் தொடங்குவார்கள். இதை பெருமளவில் நம்பிப் பலர் அடிபிடிப்பட்டிருக்கிறார்கள். குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. நட்புக்கள் அறுந்து போயிருக்கின்றன.

ஆனால் நாடகத்தில் நீருக்குள் பார்த்துக் கொண்டிருந்த பையன், என்ன தெரிகிறது என்று கேட்ட போது 'வீவா' தெரிகிறது என்பான். சபை கொல்லெனச் சிரிக்கும். அந்த நாட்களில் பிரபல்யமாயிருந்த வீவா மாவு வந்த போத்தல் அது. அதன் அடிப்பகுதியில் 'Viva 'என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். அதைத்தான் அந்தப் பையன் சொன்னான். மை வெளிச்சம் பார்ப்பதே ஒரு டுபாக்கூர் வேலை என்பது வெளியானதைப் புரிந்து கொண்டுதான் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

20ம் நூற்றாண்டில்தான் இவ்வாறு ஏமாற்றுவதற்குக் கில்லாடிகளும்  ஏமாறுவதற்கு மக்களும் இருந்தார்கள் என்றால் 21ம் நூற்றாண்டிலும் போலி வைத்தியர்கள், போலிச் சாமியார்கள், போலி மந்திர வித்தைக்காரர்கள், ஜின் வைத்தியர்கள் நிறைந்து போயிருப்பதுவும் அதை ஒரு மக்கள் கூட்டம் நம்பியிருப்பதுவும்தான் வேடிக்கை.

மேலே நான் சொன்ன சம்பவம் போன்று என் வயதொத்த என் வயதுக்கு மூத்த நபர்களுடன் உரையாடினீர்கள் என்றால் பல நூறு கதைகளையும் டூப்பு விளையாட்டுக்களையும் சொல்லிச் சிரிப்பார்கள். பலர் மூளை என்ற ஒன்றைப் பயன்படுத்தாமலேயே மாட்டிச் சித்திரவதைப்பட்ட ஆயிரமாயிரம் கதைகள் சமூகத்துக்குள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

இதன் அடிப்படையைப் பற்றி மேலோட்டமாகச் சிந்தித்தாலே மனிதனின் பேராசை, வேகமான  வழியில் முன்னேறுதல், எதிராளிக்கு அடையாளம் தெரியாமல் துன்பம் இழைத்தல், வேண்டப்படாத ஒருத்தனைப் பழி வாங்குதல் போன்ற மனித மனத்தின் குரூரங்களை வெளிப்படுத்த பேராசை கொண்டலையும் மனதைத் திருப்திப்படுத்த என்றுதான் இந்த முயற்சிகள் யாவும் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது வடிகட்டிய சுயநலத்துக்காகவே இவ்வாறான நியாயத்துக்கு முரணான, இயற்கைக்கு முரணான, மனச்சாட்சிக்கு முரணான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை தௌ;ளத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இருபது வருடங்களுக்கு முன்னர் எனக்கும் ஒரு போது ஓர் அற்புதமான அனுபவம் கிடைத்திருக்கிறது!

பொருளாதார முடை பற்றி நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்தான் என்னை பலவந்தமாக அந்த ஹஸரத்திடம் நேரம் குறித்து அனுப்பி வைத்தார். அங்கு சென்ற போது ஆண்களும் பெண்களும் ஏகப்பட்ட பொருட்களுடன் (தெம்பிலிக் குரும்பை, வெற்றிலை, தேசிக்காய்கள், மெழுகுச் சீலை, நாடாக்கள்.....) என்னைக் கண்டதும் உடனடியாக ஹஸரத்துக்குத் தகவல் சென்றது. பத்து நிமிடத்துள் அழைக்கப்பட்டேன். பொருளாதார முடையைச் சொன்னேன். 20 தேசிக்காய், 3 தெம்பிலி, ஒரு பகழி வெற்றிலை ஆதியவற்றுடன் மீண்டும் வரும்படி அடுத்த வாரத்தில் ஒரு திகதியைத் தந்து விட்டுத் தனது பதிவேட்டில் குறித்துக் கொண்டார். ஆயிரம் ருபாய்த் தாளை நீட்டினேன். முன்னால் வைக்கச் சொன்னார். வைத்து விட்டுத் திரும்பினேன்.

குறித்த திகதியில் சென்ற போது பொருட்களை அவரது உதவியாளர் பெற்றுக் கொண்டார். உள்ளே சென்றதும் ஹஸரத் வரவேற்றார். பதிய எழுதப்பட்ட ஒரு சிறிய செம்புத் தகட்டைத் தந்து, 'இது மட்டும் போதும். இதை பணப்பை (பேர்ஸ்)யில் ஒரு வெள்ளைக் கவரில் போட்டு வைத்திருங்கள் என்று தந்தார். மீண்டும் ஓர் ஆயிரம் ருபாவை வைத்து விட்டு வந்தேன். இனி எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடும் அல்லவா?

இது நிகழ்ந்து மூன்றாவது வாரம் மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொண்ட விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது எனது பேர்ஸ் தொலைந்து போயிருந்தது, இரண்டாயிரத்துச் சொச்சம் ருபாய்ப் பணத்துடன் அந்த செம்புத் தகடும் அதற்குள்தான் இருந்தது!

25.05.2018 
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Husni Jabir said...

ஹாஹாஹா.

இது ஹஸரத்துக்கு தெரியுமா?