“அஸ்ஸலாமலைக்கும் சேர்!”
“வஅலைக்குமுஸ்ஸலாம்”
“லெப்பை இன்டைக்கு நல்லா லேட்டாக்கிட்டாரு குத்பாவை!”
“ம்ஹ்ம்... தலைநகரத்துல மட்டுமில்லை... புறநகர்ப் பகுதியிலேயும் இருக்கிற பள்ளிகளுக்குக் காரியாலயங்கள்ல வேல செய்றவங்க ஜூம்ஆ தொழ வர்ராங்க... அவங்க குறிப்பிட்ட நேரத்துக்குள்ள காரியாலயத்துக்குப் போயிடனும்கிற எண்ணமே சில ஆலிம்களுக்கு வரமாட்டேங்குது!”
“இந்த விசயமா பல தடவை பேப்பர்கள்ல எழுதியிருக்காக்க சேர்!”
“ஆனா ஆலிம்களில் பலர் பேப்பர் படிக்கிறதில்லைங்கிறது ஒங்களுக்குத் தெரியாதா?”
“ஏன் சேர் குத்துபாவை இப்பிடி நீட்டி இழுக்கிறாங்க... இன்டைக்கி நீங்க அவதானிச்சிங்களா... ஒரே விசயத்தை மூணு தரம் திருப்பித் திருப்பிச் சொன்னாரு... அதுவும் ஒரே நேரத்துல இல்ல... ஒரு விசயத்தைச் சொல்லிட்டுப் போய் அப்புறம் வேற விசயத்துக்குத் தாவித் திரும்ப அதே விசயத்தை அதே வசனத்துல....ச்சே... கேட்டுக்கிட்டிருக்கவே கஷ்டமாயிருக்கு!”
“மெதுவாப் பேசுங்க... யாராவது ஒரு அவுலியாக் குஞ்சுட காதில விழுந்திச்சின்னா, ‘பாட்டுக் கேக்கிறதுன்னா நீங்க திருப்பித் திருப்பிக் கேப்பீங்க... குத்பான்னாக் கசக்குதான்னு’ கேட்டுருவான்!”
“சரியாச் சொன்னீங்க சேர்..!”
“அதுசரி குத்பா லேட்டாகிட்டுன்னு சொல்லுற நீங்க... என்னோட கதச்சிக்கிட்டு இன்னும் தாமதமாகிறீங்களே...?”
“இன்டைக்குப் பெரியவன் வரல்ல சேர். அவன் பெரும்பான்மைக்காரன். நம்ம விசயத்துலதான் அடிக்கடி நோண்டிக்கிட்டிருப்பான். சில பெரும்பான்மை இனத்துப் பெரிய அதிகாரிகளுக்குக் காரியாலயக் கடமையில் பிழையென்டாலும் பொறுத்துக்குவான். நாம மார்க்கக் கடமைகளைச் செய்யிறது அவங்களுக்கு மிச்சம் உறுத்துது சேர்!”
“இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு ஹிக்மத்தாத்தான் நடந்துக்கணும்!”
“சில ஆலிம்களுக்கு ‘மைக்’கைப் பிடிச்சா ஒன்டுமே விளங்குதுல்லயே சேர்... ஏன் அப்பிடி?”

