“இது பதினெட்டுக் காரட் நகைதானே!”
அவன் லேசான அலட்சியத்துடன் சொன்னதும் ‘காலங்காலமாக நகை வியாபாரம் செய்து வரும் நம்பிக்கை மிகுந்த ஸ்தாபனம்’ என்ற பிரம்மையையும் தாண்டி அவருக்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டது.
ஒரு போதும் இது 18 கரட் நகையாக இருக்க முடியாது என்பது அவரது அசையாத நம்பிக்கை. எனவே மற்றொரு நகைக் கடையில் இதன் பெறுமதியைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கிளம்பினார்.
இப்படிக் கிளம்பியவர் எனது நண்பர்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஆச்சரியத்துடன் கூறிவிட்டு இதைப் பற்றி நீங்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப அவரது அனுபவத்தை தமிழ்கூறும் நல்லுலகின் நன்மை கருதி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நண்பர் ஒரு வியாபாரி. அவருக்கு ஒரு கட்டத்தில் மிக அவசரமாக இரண்டு லட்சம் ரூபாய்கள் தேவைப்பட்டன. மனைவியின் நகைகளில் ஒன்றை வங்கியில் அடகு வைத்து விட்டுப் பின்னர் மீட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வங்கி ஒன்றுக்குள் நுழைந்தார்.
வங்கி அடகு அதிகாரி நகையை நிறுத்து விட்டு ஒன்பதே முக்கால் பவுண்கள் என்றார;. அதன் பிறகு அவருக்கு அருகிலிருந்த ஒரு திரவத்துக்குள் நகையை இட்டு கம்பவுண்டர் மருந்து கலக்குவதைப் போல் ஒரு கிண்டியால் நகையைப் பிடித்து நீண்ட நேரம் கலக்கினார். பிறகு அவர் வைத்திருந்த நிறுவைக் கருவியின் வேறு ஒரு பிரிவுக்குள் இட்டுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். பின்னர் நண்பரைப் பார்த்துச் சொன்னார்:-
“மன்னிக்க வேண்டும். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தங்கம்தான். ஆனால் இந்தத் தங்க மாலையில் உருண்டை உருண்டையாக இருக்கிறது பாருங்கள். இதற்குள் பரிசோதனைக்குரிய நீர் செல்வதாக இல்லை. அப்படிச் சென்றால் மாத்திரமே இது முழுவதும் தங்கம் என்று வங்கி கணக்கில் கொள்ளும்.”
“எனக்கு அதன் பாதிப் பெறுமதிதான் தேவை. அவசரத் தேவை. பாதியைத் தரலாம்தானே!” என்று வங்கி அடகு அதிகாரியிடம் நண்பர் கேட்டார்.
“மன்னிக்க வேண்டும். நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது. இப்படி நீர் நுழைந்து ‘சரி” என்ற அனுமதியை இயந்திரம் சொல்லவில்லையென்றால் என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நகைகளில் உள்ள சின்னச் சின்ன உருண்டைகளைப் பெறுமதி குறைந்த உலோகங்களால் செய்து விட்டு தங்கத்தால் முலாமிட்டு தங்கச் சங்கியில் சேர்த்து விற்கிறார்கள். பாரத்தைப் பார்த்துப் பணம் கொடுத்து மீட்கப்படாத நிலையில் பரிசோதனைக்குட்படுத்திய போது இவ்வாறான விடயங்கள் தெரியவந்தன. இப்படி பெறுமதியற்ற நகைகளை வங்கிக்கான அடகு சேவையில் பெற்ற பல ஊழியர்கள் கடந்த காலங்களிலபெரும் சிக்கலில் விழுந்திருக்கிறார்கள்” என்றார்.

