Friday, October 25, 2013

மார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்

மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் அவர்கள். ஆளுமையும் பேணுதலும் மார்க்க மற்றும் உலக அனுபவ ஞானம் மிக்கவர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார்.

மஸ்ஊத் ஆலிம் சாஹிப் ஓரிடத்தில் நிற்கிறார் என்றால் அல்லது வருகை தருகிறார் என்றால் அந்த இடம் மரியாதைக்குரிய இடமாக மாறிவிடும். தயங்கித் தயங்கி மரியாதையுடன் அவரிடம் உரையாடிய பல விற்பன்னர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் அவர்களை எதிர்கொள்ளவே தயங்கினோம். அதற்குக் காரணம் அவர் மீதிருந்த கண்ணியமேயாகும்.

மிகச் சாதாரண ஒரு மனிதராகத் தோற்றமளிக்கும் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் பேச ஆரம்பித்தால் கணீர் என்ற அவரது குரலில் கேட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் கட்டுண்டு கிடப்பார்கள்.  சன்மார்க்க விடயங்களில் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. பிழையைப் பிழை என்றும் சரியைச் சரி என்றும் நேரடியான மொழியில் எடுத்துச் சொல்வதில்தான் அவர் கவனமாக இருப்பார். பிற்காலத்தில் மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பின்பற்றி அவரைப் போலவே சில ஆலிம்கள் பேச முயன்றிருக்கிறார்கள் என்றால் அவரது ஆளுமை எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இன்றுவரை விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஆலிம்களின் பேச்சு மொழியை அந்தக் காலத்திலேயே அவர் மிக அழகாகக் கையாண்டார். அவர் எடுத்தாளும் விடயங்கள் மிகத் தெளிவாகவும் கேட்போர் மனதில் இயல்பாகப் பதிவும் வண்ணமும் அவரது மொழி அமைந்திருக்கும். அதற்குக் காரணம் அவரது ஓயாத வாசிப்பு. முதன்முதலாக அவர்களது வீட்டுக்குச் சென்ற போது அவர்களது நூலகத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். 'ஷஜருத்துர்' என்றொரு முஸ்லிம் வரலாற்று நாவல். சலாஹூத்தீன் ஐயூபியின் மருமகளைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட பெரிய நாவல் அது. அந்த நாவலை ஜாமிஆ நளீமியாவில் கற்கும் காலத்தில் ஜாமிஆ நூலகத்தில் படித்திருக்கிறேன். மஸ்ஊத் ஆலிம் அவர்களின் வீட்டு நூலகத்தில் தவிர வேறெங்கும் அந்நாவலின் மற்றொரு பிரதியை நான் கண்டதில்லை. இதில் குறித்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அந்நாட்களில் நாவல் படிப்பது அதுவும் ஆலிம்கள் படிப்பது வீண் வேலை அல்லது விரும்பத்தகாத செயலாக இருந்தது என்பதுதான்.

பல நூறு ஆலிம்கள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பேசியிருக்கிறார்கள், பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் மஸ்ஊத் ஆலிமின் உரை என்றால் அதற்கு ஒரு தனி மரியாதையும் கண்ணியமும் இன்றுவரை இருக்கிறது. அவர்கள் வழங்கிய ஸஹர் சிந்தனைகள், ஹஜ் பற்றிய வழிகாட்டல் உரைகள் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அறிவிப்பாளர்கள் பொதுவாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாகவிட்டு அடுத்த நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவது அல்லது வேறு வேலைகளைக் கவனிப்பது வழக்கம். ஆனால் மஸ்ஊத் ஆலிம் அவர்களது உரை ஒலிபரப்பாகும் வேளை நான் அதையே கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குக் காரணம் அவரது பேச்சு ஆரம்பிக்கும் போதே அவரது குரல் நம்மை அவர் அருகே இழுத்துச் சென்று விடும் வல்லமையுள்ளதாக இருந்தது. ஏனைய அறிவிப்பாள நண்பர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா ஆலிம்களும் மௌலவிகளும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வந்தே தமது உரைகளை ஒலிப்பதிவு செய்வது வழக்கம். ஆனால் மஸ்ஊத் ஆலிம் அவர்களது உரையை ஒலிப்பதிவு செய்வதற்குத் தயாரிப்பாளர் அவர் இருக்குமிடத்துக்குச் செல்வார். அங்கேதான் ஒலிப்பதிவும் நடைபெறும். பின்னாளில் முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகப் பணிபுரிந்த மௌலவி இஸட்.எல்.எம். முஹம்மத் அவர்கள்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தபோது மஸ்ஊத் ஆலிம் அவர்களின் அநேக உரைகளை அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று ஒலிப்பதிவு செய்தவர். இந்த அனுபவங்களை மௌலவி இஸட். எல்.எம். முகம்மத் அவர்கள் என்னிடம் பகிர்ந்துள்ளார்.

மஸ்ஊத் ஆலிம் அவர்களது மூத்த புதல்வனோடு ஒரே வகுப்பில் படித்த காரணத்தினால் குறுகிய காலம் அவர்களது குடும்பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக இருந்திருக்கிறேன். அப்போதும் கூட மஸ்ஊத் ஆலிம் அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் நான் மிகுந்த சங்கோஜமுடையவனாக இருந்திருக்கிறேன். அகஸ்மாத்தாக சந்தித்துக் கொண்டல் 'வாப்பா எப்படியிருக்காரு?' என்பதே அவரது முதலாவது கேள்வியாக இருக்கும். காலி, பஹ்ஜத்துல் இப்றாஹீமிய்யாவில் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் ஜூனியர்களில் ஒருவராக என் தந்தை இருந்தது அந்த விசாரிப்புக்குக் காரணம். 'எனது ஸலாத்தை வாப்பாவுக்கு எத்தி வையுங்கள்!' என்பது அவரது அடுத்த வார்த்தையாக இருக்கும். படிப்பு விடயங்களை விசாரிப்பாரோ என்ற பயத்தில் அவரது மூன்றாவது வார்த்தைக்கு முன்னர் நாங்கள் இடம் மாறிவிடுவோம். ஜாமிஆ நளீமியாவின் ஆலோசகர் குழுவில் மஸ்ஊத் ஆலிம் அவர்களுக்கு முக்கிய இடம் இருந்தது.

ஒரு முன்மாதிரி ஆலிமாக விளங்கிய மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பற்றி பின்னால் வந்த பரம்பரையினரில் அநேகருக்குத் தெரியாது. குறைந்தது ஆயிரக் கணக்கில் பெருகியிருக்கும் ஆலிம்கள் கூட அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. குறிப்பாக ஆலிம்கள் மஸ்ஊத் ஆலிம் சாஹிபைப் பற்றித் தெரிந்திருக்க வெண்டும் என்று நான் குறிப்பிடுவது பெயர்பெற்ற ஒரு மார்க்க அறிஞராக அவர் விளங்கினார் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் தன்னை எத்தகைய ஆளுமையுள்ளவராக மாற்றியிருந்தார் என்பதைப் புரிந்து அவர்களும் தம்மை அவ்வாறு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவாவினாலேயாகும்.

சமூக சேவையில் ஈடுபட்ட பலரை அவ்வப்போது சமூகம் ஞாபகப்படுத்திய போதும் மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் உரையை வானொலியில் கேட்பதோடு அவரைச் சமூகம் மறந்து விட்டதா என்றொரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மஸ்ஊத் ஆலிம் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் இன்னும் பலர் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்று அவர்களைப் பற்றிய ஒரு நூல் வெளிக் கொணரப்பட வேண்டும் என்று முன்மொழிகிறேன்.

(மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களது புகைப்படம் அவரது பேத்தியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி!)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

கொள்ளுமேடு பை.மு.ரிபாயி said...

மார்க்க மேதையைப் பற்றி நல்லதொரு அறிமுகம்.இது போன்ற எண்ணற்ற முன்னோடிகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அத்தகையோரை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது உங்களை போன்ற சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளின் முன் இருக்கும் முக்கிய பணியாகும்.

Unknown said...

நளீமியாவின் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய மர்ஹூம் ஷெய்ஹ் தாசீன் நத்வி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொக்கும் பொது மசூத் ஆலிம் மற்றும் சம காலத்து அவரது அறிஜர்கள் தொடர்பான தகவல்கள் சிலதியும்திரட்டக்கிடைத்தமை ஒரு பெரிய பாக்கியமாகவும் சிறந்த அனுபவமாகவும் கருதுகிறேன்.

Unknown said...

நளீமியாவின் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய மர்ஹூம் ஷெய்ஹ் தாசீன் நத்வி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொக்கும் பொது மசூத் ஆலிம் மற்றும் சம காலத்து அவரது அறிஜர்கள் தொடர்பான தகவல்கள் சிலதியும்திரட்டக்கிடைத்தமை ஒரு பெரிய பாக்கியமாகவும் சிறந்த அனுபவமாகவும் கருதுகிறேன்.