Wednesday, October 29, 2014

கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்!


 - 05 -

மிகக் குறைந்த நபர்களே வாசிக்கும் நூல்களில் இருந்த 'இஸ்லாமிய அரசியல்' என்ற பதத்தை நடைமுறை அரசியலில் முதன் முதலில் பேச விழைந்தவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.

அக்காலப் பகுதியில் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த அந்தப் பதம் ஒரு குறிப்பிட்ட வீதம்; பயன்பாடுடையதாக இருந்தது. இஸ்லாமிய அரசியல் என்பது என்ன என்பது பற்றிய பொதுவான தெளிவு இன்னும் சரியாக ஏற்படாத நிலையிலும் இன்னும் சிலர் அதே வார்த்தையை முன் வைத்து தமது அரசியலை முன் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

நேர்மையானதும் மக்களை மையப்படுத்தியதும் தன்முனைப்பற்றதுமான ஓர் அரசியலை முன்னெடுப்பது என்பதை எப்படி வியாக்கியானப்படுத்தினாலும் கூட, மர்ஹூம் அஷ்ரப் போய் நின்ற 'முஸ்லிம் அரசியல்' என்ற எல்லைக்குள்தான் நின்றாக வேண்டியேற்படும். இஸ்லாமிய அரசியல் என்று சொல்லி ஓர் அரசியலை முன் கொண்டு செல்பவர்கள் - அவர்கள் நேர்மையானவர்களாக, இறையச்சம் கொண்டவர்களாக, மக்களை மையப்படுத்தியவர்களாக இருந்த போதும் கூட, சாக்கடையாகிக் கிடக்கும் பொது அரசியல் நீரோட்டத்தோடு இணைந்தே செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

பன்மைத்துவ சமூக அமைப்பில் இஸ்லாமிய அரசியலை முன்கொண்டு செல்வது குறித்து மார்க்கத்தையும்; சர்வதேச அறிஞர்களையும் படித்த ஒரு சில இளைஞர்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளார்கள் என்பதை  உணர முடிகிறது. அவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு சமூகத்துக்கு முன்னால் புரிகின்ற பாஷையில் வைக்கப்படுவதற்கு இன்னும் காலம் செல்லக் கூடும்.

ஒரு காலப்பிரிவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தமக்குரிய அரசியல் பிரதிநிதி இல்லாமலே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரை கால்கள் இல்லாத ஒரு பிச்சைக்காரனின் நிலையில் இந்த சமூகத்தின் நிலை இருந்து வந்துள்ளது. அநேகமாகவும் பெரும்பான்மைச் சிங்கள, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்கள். அப்போதும் கூடச் சமூகம் பிரதான இரண்டு கட்சிகளாகப் பிளவு பட்டுக் கிடந்தது.

முஸ்லிம்களுக்கான அரசியல் என்று அஷ்ரப் அவர்கள் களத்தில் இறங்கிய போது ஒரே நாளில் அவரை மக்கள் தோள்களில் சுமந்து விடவில்லை. ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளில் பிளவு பட்டுக் கிடந்தோரும் அவர்களின் எஜமானர்களும் அவரைத் தூஷித்தனர். துரத்தித் துரத்திச் சண்டித்தனங்கள் புரிந்தனர். ஆனால் தமிழ்ச் சமூகத்தின் துப்பாக்கி ஏந்திய விடுதலை வீரர்களது அழுத்தத்தின் காரணமாக நொந்து நூலாகிக் கிடந்த முஸ்லிம்களுக்குத் தமது எதிர்ப்பை அவர்களுக்குக் காண்பிக்க அஷ்ரப் ஒரு வடிகாலாக இருந்தார். ஆக அந்த உணர்வு, முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய அரசியல் என்ற பதம் யாவும் சேர்ந்து ஓர்அரசியல் எழுச்சியாக  ஏற்பட்டதைப் பார்க்கிறோம்.

பெருந்தொகை முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சியில் இணைந்த போதும் ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளோடு இருந்த முக்கியஸ்தர்கள் அதே இடத்தில் இருந்து அசைந்து கொடுக்கவில்லை. அவர்கள் சொற்பத் தொகையினராகக் குறுகிய போதும் 'கிழிந்த பட்டுத்துணி' என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால் சமூகம் அரசியலைப் பொறுத்தவரை மூன்று பிரிவாகப் பிளவு பட்டிருந்தது.

அஷ்ரப் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் கட்சி அவ்வப்போது பிளவுண்டு பல பிரிவுகளாக மாறியது. அவ்வப்போது அமீபாக்களைப் போலக் குட்டிவிடும்  ஜமாஅத்துக்களைக் கொண்டு சமூகம் பிளவு பட்டது போல முஸ்லிம் அரசியலும் சமூகத்தைக் கூறு போட்டு வைத்திருக்கிறது.

அரசியல் புள்ளிகளில் சமூகமும் உரிமையும் பேசிக் கொண்டு சுகவாழ்வு வாழும் நபர்களுக்கு அப்பால் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு சில அரசியல்வாதிகள் பௌதீக வழங்களைப் பெற்றுக் கொடுத்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். ஒரு சில தஃவா இயக்கங்களும் அவற்றையே செய்து வருகின்றன. சமூகத்தின் அரசியலும் தஃவா இயக்கங்கள் ஒரு சிலவும் ஒரே புள்ளியில் இணையும் முதற் கட்டம் இது.

இரண்டாவது கட்டம்தான் மிகவும் இழிவானது. அது சகோதரத்துவ சன்மார்க்க சமூகத்தை முஸ்லிம் அரசியலாலும் இஸ்லாமிய தஃவாவின பெயராலும் பிரித்து வைத்திருப்பதுடன் நின்று விடாமல் தீராத சண்டையையும் ஓயாத சச்சரவையும் சமூகத்துக்குள் விதைத்து விட்டிருக்கின்றன. ஒரு தேர்தல் முடிந்த பிறகாவது எதிரணியைச் சேர்ந்த ஒரு சகோதருக்கு ஸலாம் சொல்லிக் கொள்ளும் நிலை இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் இல்லை. ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வழி என்று முழக்கமிடும் அமைப்புசார் சகோதரர்கள் வௌ;வேறு வீடுகளுக்குள் இருந்த போதும் பொது இடத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறார்கள்.

அரசியல் பிளவுகளாலும் இயக்கப் பிளவுகளாலும் சகோதரத்துவத்தைத் தொலைத்து விட்டுச் சண்டை பிடித்துக் கொண்டு பொலிஸ் நிலையங்களில் நியாயம் கோரி நிற்கிறார்கள்.

 நாம் முஸ்லிம்கள் என்று பெருமைப்படுகிறோம்... எங்களுடள் இணைந்து கொள்ளுங்கள், மனிதனுக்குரிய கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறோம் என்று பேசுகிறோம், எழுதுகிறோம்... நபிகளதும் ஸஹாபாக்களினதும் முன்மாதிரிகளை முன் வைத்துப் பேசுகிறோம். தோளோடு தோள் நின்று சகோதரத்துவம் வளர்க்கும் சமூகத்தின் பிரதிநிதிகளான நாம் பள்ளிவாசலுக்குள் கூட எதிரணி முஸ்லிமைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒதுங்கிப் போய் நின்று தொழுகிறோம்...

புத்திசுவாதீனமுள்ள, ஓர் உண்மையான முஸ்லிமுக்கு இதை நினைத்துப் பார்க்கையில் வெட்கம் வரவேண்டும்!

(மீள்பார்வை - இதழ் - 304)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: