Tuesday, November 11, 2014

வற்றாத கடலில் ஓயாத அலைகள்!


 - 06 -

ரிஹாம் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி வழங்குனர். பழுப்புத் தலைமுடி கொண்ட  இளம் எகிப்தியப் பெண். மணிக்கட்டு வரை மறைக்கும் ஒரு கருப்பு நிற டீஷேர்ட் மாதிரியான மேலுடை அணிந்து ஒரே பார்வையில் அழகிய நாகரிகப் பெண்ணாகத் தோற்றமளிக்கிறார்.

அன்றையத் தொலைக் காட்சி  நிகழ்ச்சிக்கு நேர்காணலுக்காக வந்திருப்பவர் மிகவும் வில்லங்கமான ஒரு பெண்மணி. நோஹா முகம்மத் சலீம் என்ற 53 வயதான அந்தப் பெண்  பழுப்பு நிறமான துணியினால் முகத்தையும் தலையையும் மறைத்திருக்கிறார்.

பேட்டி ஆரம்பமாகிறது.

ரிஹாம் வினாவை விடுகிறார். ' நீங்கள் வழமையாக ஹிஜாப் அணிவதில்லை என்று நினைக்கிறேன்.' பதில் 'ஆம், அணிவதில்லை!' என்று வருகிறது. 'அப்படியயானால் இப்போது ஏன் அணிந்திருக்கிறீர்கள்?' என்ற மறுவினாவுக்கு 'நான்என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ என்னைக் கொல்வதற்கான வாயப்பளிக்கவோ நான் விரும்பவில்லை. மார்க்கப்பற்று மிக்க எனது குடும்பத்தினரைச் சங்கடப்படுத்தவோ காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை' என்று பதில் வருகிறது.

'முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மேதை! ஒரு சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கட்டளையாளர் மற்றும் சிறந்த மனிதராக இருந்தவர். குர்ஆனை அவரே எழுதினார். தூது இறங்கியதும் கிடையாது. ஜிப்ரஈல் என்று யாருமில்லை' என்கிறார் நோஹா. மிகவும் தெளிவாகவும் சாமார்த்தியத்தோடும் வினாத் தொடுக்கும் ரிஹாமுக்குள் கோபம் பரவுகிறது. 'முகம்மத் (ஸல்) அவர்கள் இறைதூதர் இல்லையென்றும்  பரிசுத்தத் தூது இறங்காத போது அவர் எப்படித் தூதராக முடியும்?என்றும் ஜிப்ரஈல் ஒரு கற்பனைப் பாத்திரம்' நோஹா சொல்லும் போது ரிஹாம் கோபத்தின் உச்ச நிலைக்குச் செல்கிறார்.

நோஹாவின் கதை விசித்திரமானது. 24 வயதில் திருமணம் செய்த அவருக்கு 30 வயது வரை எல்லாம் சுபமாகவே இருந்தது. 30 வயதில் இஸ்லாம் பற்றிய விநோதமான சிந்தனைகள் அவரில் தோன்றவே கணவருடன்  சென்று வைத்தியரைப் பார்த்தார். அவ்வாறான சிந்தனை குறைந்தது. ஆனால் மருந்து மூளையைச் சிதைத்து விடுமோ என்ற பயத்தில் மருந்தை நிறுத்தினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறியது. உனக்கும் எனக்கும் சரிவராது என்று கணவன் பிரிந்து போய் விட்டார். நோஹாவின் இரண்டு மகன்களும் கூட அவரது கருத்துக்களை ஏற்கவில்லை. தனது மனோ நிலை சரியாகவே இருக்கிறது என்பதை நிரூபிக்க நோஹா ஒரு வைத்திய சான்றிதழைப் பெற்று வைத்திருக்கிறார். ஆனால் குடும்பத்தவரோ 'டாக்டர் பிழையாக உனக்கு அதை எழுதித் தந்திருக்கிறார்' என்கிறார்கள்.

இந்த நோஹாவுடன்தான் ரிஹாம் சூடுபறக்க விவாதித்துக் கொண்டிருந்தார். 'கை வெட்டுவது மனிதாபிமானமற்றது' என்கிறார் நோஹா. 'ஷரீஆ சட்டம் அமுல் செய்யப்பட்டு மதுச்சாலைகளையும் காபரே கிளப்புகளையும் உடைத்தெறிய வேண்டும் அப்போதுதான் யாவும் உருப்படும்' என்று கோபத்தோடு பதில் சொல்கிறார் ரிஹாம். தலை மூடாத ரிஹாம்!

'ஏன் நீ தொழுவதில்லை?' என்ற ரிஹாமின் கேள்விக்கு 'நான் கடந்த காலத்தில் தொழுதேன், ஆனால் எனக்கு இறைவன் பதிலளிக்கவில்லை' என்று பதில் வர 'இப்படிப் பேசும் உனக்கு எப்படிப் பதில் வரும்?' என்று மறுவினாவைத் தொடுக்கிறார் ரிஹாம். வார்த்தைகள் சூடேறக் கடும் கோபம் கொண்ட ரிஹாம் 'நீ இங்கிருந்து போய் விடு!' என்று சொல்லிக் கலையகத்திலிருந்து நோஹாவைத் துரத்தி விடுகிறார்.

மற்றொரு காட்சி. தலை மூடாத அதே ரிஹாம். இம்முறை மார்க்க அறிஞர் யூஸூப் பத்ரி.

நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன் ஷெய்க் யூஸூப் பத்ரி, தலையை மூடிக்கொள்ளுமாறு ரிஹாமிடம் கோருகிறார். 'கலையகத்துக்கு வெளியே உங்களுடைய அன்றாட வாழ்வில் தினமும் தலையை மூடாத ஆயிரக் கணக்கான பெண்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள். தொலைக் காட்சியில் உங்களை நேர்முகம் செய்வதற்காக மட்டும் நான் தலையை மூட வேண்டுமா?' என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார் ரிஹாம்.

ஆனாலும் ரிஹாம் தலையை மூடியபடி பேட்டியை ஆரம்பிக்கிறார். மந்திரித்தல், பேயோட்டுதல் என்ற பெயரில் சில ஆண்கள் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதைப் பற்றிக் கேட்ட போது, 'தலைப்பை மாற்று' என்கிறார் ஷெய்க் பத்ரி. 'பொதுமக்கள் விடயத்தைத்தான் நான் பேசுகிறேன், பதில் சொல்லுங்கள்' என்று கேட்க, பத்ரி கோபம் கொண்டு பேசுகிறார். 'நீங்கள் கோபம் கொண்டு எனக்கு ஏசுவதற்காகவா  எங்களிடம் 1000 பவுண்கள் வாங்கிக் கொண்டு நேர்முகத்துக்கு வந்தீர்கள்?' என்று ரிஹாம் கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லாமல் கோபத்தில் 'தொலைக் காட்சி நிலையத்தையே மூடிவிடும் வேலையைச் செய்வேன்' என்று பயங்காட்டுகிறார் ஷெய்க் பத்ரி. 'எங்கள் பணத்தையும் வாங்கிக் கொண்டு எங்கள் அலைவரிசையை மூடிவிடுவேன் என்கிறீர்களே.. இதென்ன நியாயம்?' என்று கேட்டபடி தலைத் துணியை நீக்குகிறார் ரிஹாம்.

ஷெய்க் பத்ரி, 'முதலில் தலையை மூடு. இல்லாவிட்டால் நான் போய் விடுவேன்' என்கிறார். 'நான் மூடமாட்டேன், நீங்கள் இருங்கள். நானே போகிறேன்' என்று கலையகத்திலிருந்து வெளியேறுகிறார் ரிஹாம்.

இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த போது எனக்குள் பல பல்புகள் ஒளிர்ந்தன. பிரதான பல்பு வெளிச்சத்தில் எனக்கு விளங்கியது என்னவென்றால் -

 இரண்டு கோடி முஜத்திதுகள் தோன்றினாலும்  ஈஸா (அலை) இறங்கும் வரை இவ்வாறான பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பிருக்காது என்பதுதான்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

ஹாஹாஹா! எப்படித்தான் இப்படி வித்தியாசமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் சுவைகுன்றாமல் அளிக்கிறீர்களோ என்று வழமையாக உள்ளார்ந்து எழும் வினா, இப்பதிவைப் படித்தபின்பும் தோன்றி மறைந்தது. :)