Tuesday, April 28, 2015

வினாக்களை விதைக்கும் நூல்


 - 18 -

ஆறுவயது அல்லது ஒன்பது வயதுச் சிறுமியை ரஸூலுல்லாஹ் திருமணம் செய்தார்கள் என்ற விடயத்தை மறுக்கும் ஒரு நூல் தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கிறது.

'அறபுகளின் நாயகி' என்ற தலைப்பில் அமைந்த இந்த 76 பக்க நூலை ஐரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது திருமணம் பற்றிய புனைவுகளும் உண்மைகளும் - என்ற உப தலைப்போடு அழகிய வடிவில் வெளிவந்திருக்கும் இந்நூலை எழுதியிருப்பவர் பயாஸ் அப்துர் ரஸ்ஸாக்.

மிகவும் தெளிந்த தமிழில் யாரால் வேண்டுமானாலும் படித்து உடனே புரிந்து கொள்ளும் விதத்தில் அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்கள் இரண்டினைப் படித்திருக்கிறேன். ஒன்று நூருத்தீன் எழுதிய ஸஹாபாப் பெண்மணிகள் பற்றிய 'தோழியர்' என்ற நூல். மற்றையது 'அறபுகளின் நாயகி.

'அபூதாலிப் அவர்களைப் பற்றிய ஒரு நூல 2009; ல் பயாஸ் அப்துல் ரஸ்ஸாக் எழுதினார். அதன் பிறகு ஆமினா - அப்துல்லாஹ் என்ற தலைப்பில் 2012ல் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். தெளிவான மொழி நடை கைவரப் பெற்ற இவரது நூல்கள் ஆரம்பித்தது முதல் அலுப்பு வராமல் படிக்கத் தூண்டுபவை. 'அறபுகளின் நாயகி' என்ற இந்த நூலும் இலக்கியச் சாமார்த்தியம் கொண்;ட ஒரு கலந்துரையாடல் கதை போலக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வது படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

ஆயிஷா நாயகி - றஸூலுல்லாஹ்வின் திருமணம் அன்னையின் ஆறு வயதில் நடந்தது என்பதைக் குறிக்கும் ஒற்றை ஆதாரத்தை நூலாசிரியர் கேள்விக்குட்படுத்துகிறார். அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் மற்றும் அன்னை அஸ்மா (ரலி) ஆகியோரின்  வயதுக் கணக்குகள் மற்றும் நபித்துவம் அருளப்பட்ட காலப் பிரிவையும் அன்னை ஆயிஷா அவர்களது பிறப்புப் பற்றிய தகவல்களையும்  மேலும் பல அம்சங்களையும் முன் வைத்து இத்திருமணம் அன்னையின் 12 முதல் 21 வயது வரையான காலப் பகுதியில் நடந்திருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இந்த நூலை வாசித்து முடித்த போது எனது மனதில் ஏகப்பட்ட வினாக்கள் எழுந்து நின்றன. அறபுத் தேசங்களின் பல்கலைக் கழகங்கள் ஒவ்வொரு துறையிலும் ஆய்வுகளை நடத்திக் கொண்டேயிருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படியெனின் முகம்மது (ஸல்) - அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் திருமணம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? ஓர் அஜமியான அப்துல் ரஸ்ஸாக் முன் வைக்கும் கேள்விகள் அறபிகளுக்கும் அறபு ஆய்வாளர்களுக்கும் இஸ்லாமிய சிந்தனையாளர்களுக்கும் எழாதது ஏன்? அவர் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்களை அவர்கள் எழுப்பி அது குறித்து ஆய்வு செய்துள்ளனரா? இல்லையாயின் ஏன்?

ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு மார்க்கத்தை மாற்றிக் கொள்ளத் தலையசைக்க மறுத்த பல இமாம்கள் சிறைகளில் இருந்திருக்கிறார்கள், சித்திரவதை அனுபவித்திருக்கிறார்கள், நாடுகளை விட்டே தப்பி ஓடியும் இருக்கிறார்கள். இந்த விடயம் ஆய்வுக்குட்படாததின் பின்னணி அங்கிருந்து தொடர்கிறதா? இளவயதுப் பெண்களைத் திருமணம் செய்யவும் அடிமைச் சேவகம் செய்யவும் அரசு கட்டில் முதல் அறிஞர் பெருமக்கள் வரை இதை வசதியாகக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா?  இவ்வாறு பல கேள்விகள் ஒரு சாதாரணனான எனக்கு இதைப் படிக்கும் போது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆலிம்கள் அல்லாத சிந்தனையாளர்களால் புத்திஜீவிகளால் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் மார்க்கம் மற்றும் வரலாறு பற்றிய விடயங்களைச் சிந்தனைக்கு எடுத்து அது பற்றிய சரியான தெளிவை வழங்குவதற்கு நமது மார்க்க அறிஞர் பெருமக்கள் முன்வர வேண்டும். இது குறித்த ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதை சமூகத்தின் முன் வைக்கப்பட வேண்டும்.

இந்த நூல் இலங்கையில் இஸ்லாமிய சிந்தனை குறித்து ஆழப் Nபுசும் பலருடைய கரங்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்று அறியக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இது குறித்து பொது வெளியில் முன்வைத்த எந்தக் கருத்தும் இதுவரை எனது கண்களில் படவில்லை.

யாரும் வினாக்களை முன்வைக்கும் போதெல்லாம் பத்வாக்களைக் கொடுப்பதிலும் பயங்காட்டுவதிலும் உனக்கு அறபு தெரியாது, மார்க்கம் தெரியாது என்று எள்ளி நகையாடுவதிலும் ஆர்வம் காட்டுவோர் இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டும் தொடர்வது நல்லது என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
---------------------------------------------------------------------------

குறிப்பு - இந்தப் பத்தி எழுதி அனுப்பப்பட்ட பின்னர் ஒரு சிலர் இந்நூல் குறித்துத் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்ததை முகநூல் மூலம் அறியக் கிடைத்தது.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: