Tuesday, June 23, 2015

நாட்டார் கதைக்குள் நடக்கும் அரசியல்!

 - 22 -


பத்திரிகை ஆசிரியர்:- 'உங்கள் கதையில் பல இடங்களில் சாலை வளைவுகள் வருகின்றனவே?'
எழுத்தாளர்:- 'நீங்கதானே சார் கதையில் நிறையத் திருப்பம் இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்?'

இது ஒரு பழைய நகைச்சுவை. ஆனால் கதை என்ற அம்சத்துக்குத் திருப்பங்கள் வாசகனுக்கு சுவாரஸ்யத்தை வழங்குவன. கதை என்ற அம்சத்தை உள்ளீடாகக் கொண்டிருக்கும் நாடகம், சினிமா இரண்டுக்குமே அதி முக்கியமான அம்சம் இது.

அண்மையில் இணையத்தில்  வாய்வழிப் பழங்கதையொன்றைப் படித்த போது அதன் இறுதித் திருப்பம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இன்று பல்வேறு பெயர்களில் இந்தத் திருப்பங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டார் கதைகளில் நிலவி வந்திருக்கின்றன என்பதும் இன்று சிறுகதையும் கதை சார் கலை, இலக்கியமும் எந்த உயரத்துக்குப் போயிருந்தாலும் அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவை இவ்வாறான நாட்டார் கதைகள்தாம் என்பதை மறுக்க முடியாது.

அரேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த ஓர் அரசன் தன் அழகிய மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான். அருகேயுள்ள சிற்றரசுகளிலிருந்து மூன்று இளவரசர்கள் அவளைத் திருமணம் செய்யும் நோக்குடன் வந்திருந்தனர். முதலாமவன் அதிகார தோரணை கொண்டவனாகவும் இரண்டாமவன் பழக்கவழங்கங்களில் சுத்தமற்றவனாகவும் மூன்றாமவன் கிறுக்கு மாதிரியும் இளவரசியின் பார்வைக்குத் தோற்றினார்கள். 'இவர்களில் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை' என்று தந்தையிடம் முறையிட்டாள் அவள். அரசர் சாமார்த்தியமாக மூவரையும் அடுத்த தினம் வரும்படி கூறியனுப்பினார்.

அடுத்த தினம் மூவரும் வந்து சேர்ந்ததும் அரசன் சொன்னான்:- 'நீங்கள் மூவரும் எனது மகளுக்குப் பொருத்தமானவர்கள்தாம். ஆனால் ஒருவரைத்தான் திருமணம் செய்து வைக்க முடியும். எனவே நீங்கள் மூவரும் உலகத்தில் எந்த மூலைக்காவது செல்லுங்கள். ஓர் அதிசயமான பொருளுடன் யார் திரும்பி வருகிறீர்களோ அவருக்கு மகளைத் திருமணம் செய்து தருவேன். ஒரு வருடமும் ஒரு நாளும் உங்களுக்கு அவகாசம் உள்ளது!'

மூவரும் கிளம்பி ஒரு பாழ் கிணற்றருகே வந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவகாச நாள் முடிவதற்கு ஒரு வாரம் இருப்பதற்குள் இதே மூவரும் சந்தித்துத் தாம் தேடியடைந்த பொருளை ஒருவருக்கொருவர் பார்த்து விட்டு அரசனைச் சந்திப்பது அந்த ஒப்பந்தம். அதே இடத்தில் மூன்று பாதைகளில் மூவரும் பிரிந்து சென்றார்கள்.

குறித்த தினத்தில் மூவரும் வந்து சேர்ந்தார்கள். முதலாமவன் கையில் ஒரு பளிங்கு உருண்டை இருந்தது. 'உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இதில் பார்க்க முடியும்' என்றான் அவன். இரண்டாமவனிடம் ஒரு பறக்கும் விரிப்பு இருந்தது. 'இதில் அமர்ந்தால் உலகத்தின் எந்த மூலைக்கும் போய்ச் சேரலாம்' என்றான் அவன். மூன்றாமவனிடம் ஒரு டப்பாவில் களிம்பு வகையொன்றிருந்தது. அவன் சொன்னான்:- 'நோயுள்ளவர்களுக்கு இதைத் தேய்த்தால் உடனே குணமாகும். விரும்பியவர்களுக்கு உண்மையான அன்புடன் இதைத் தேய்த்தால் அவர்கள் இளமைக்குத் திரும்புவார்கள்!'

மூவரும் இரண்டாமவனின் விரிப்பில் ஏறியமர்ந்து அரசலைக்குள் சென்றிறங்கித் தமது பொருட்பளை அரசனிடம் காட்டி விபரம் சொன்னார்கள். அரசனுக்குப் பெருங்குழப்பம். அவர்களை அடுத்த தினம் வருமாறு கேட்டுக் கொண்டான். அன்றிரவு இப்பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்று பிரதம மந்திரியுடன் ஆலோவனை செய்தான். 'நமது நாட்டில் ரஷ்யா என்று சொல்லப்படுகின்ற தேசத்தில் இருந்து வந்து நீண்ட காலமா வாழும் ஞானி ஒருவர் இருக்கிறார். அவரை அழைத்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்' என்று அவர் ஆலோசனை சொன்னார்.

அடுத்த நாள் மன்று கூடிற்று. இளவரசர்கள், ரஷ்ய மூதறிஞர், மந்திரிப் பிரதானிகள், தோழியர் புடை சூழ இளவரசி, நாட்டு முக்கியஸ்ர்கள் குழுமியிருக்க பிரச்சனை மூதறிஞரிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு அவர் சொன்னார்:- 'மூவரும் சரிசமமான பாத்தியதையுடையவர்கள். இந்த விடயத்தில் இளவரசிதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே சரியானது, நியாயமானது.

அமைதி குலைத்து இளவரசி தன் அரசணையிலிருந்து கீழே இறங்கினாள். நேரே மூதறிஞர் அருகே சென்று 'நான் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்றாள். அவை மௌனத்தில் உறைந்திருக்க தோழியர்கள் மயங்கி விழும் சப்தம் மட்மே மண்டபத்தில் எதிரொலித்தது.

'இளவரசி... நீ என்ன சொல்கிறாய்?' - அதிர்ந்தார் அரசர்.

இளவரசி எதையும் சட்டை செய்யாது மூன்றாவது இளவரசன் கையில் இருந்த களிம்பு டப்பாவை எடுத்து கிழவனான அறிஞனின் கையில் தேய்த்தாள். ஒரு நிமிடத்தில் கிழவன் அழகான இளைஞனாக மாறினான். இளவரசியை நோக்கி ஒரு காதல் புன்னகை சிந்தினான்.

இது ஒரு நாட்டார் கதைதான். ஆயினும் ஒரு சிறுகதை போன்று வர்ணனை, உரையாடல் என்று எழுதப்பட்டிருந்த கதையின் சுருக்கதையே இங்கு தந்திருக்கிறேன்.

இக்கதை அக்காலத்தின் அறபுத் தீபகற்ப அரசியலைப் பேசுகிறது என்று நான் நம்புகிறேன்.

நன்றி - மீள்பார்வை
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: