Showing posts with label ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன். Show all posts
Showing posts with label ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன். Show all posts

Saturday, January 31, 2015

விருந்தோம்பி வேளாண்மை செய்தல்!

தமிழகத்துக்குச் சென்றால் விருந்து வழங்கப்படாமல் திரும்பியதாகச் சரித்திரம் இல்லை.

சகோதர உறவுகளும் இலக்கிய நண்பர்களும் கடந்த காலங்களில் வழங்கிய விருந்துகளின் சுவை இன்னும் நாவில் மட்டுமல்ல, நெஞ்சிலும் இனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்துக்குள் நுழைந்த நிமிடம் முதல் நமது நலனில் அக்கறை கொண்டு நிழல் போலவே இணைந்திருக்கும் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்கள் இம்முறை நம்மீது அக்கறை செலுத்த உயிருடன் இல்லை. அவருடைய ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்கள் வெளியிட்ட நினைவு மலர் வெளியீட்டுக்கு நாம் அழைக்கப்பட்டிருந்தோம்.

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்துடன் இணைந்து நடநத்தப்பட்ட இவ்விழாவில் நானும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீனும் கவிஞர் அல் அஸூமத் அவர்களும் இலங்கையிலிருந்து சென்று கலந்து கொண்டோம்.

இது வரை காலமும் நமது பயணத்தில் அதியுச்ச விருந்தளித்து நம்மைக் கவனித்துக் கொண்டவர் மர்ஹூம் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்கள். அந்தப் பண்பு அவரது புதல்வர்களிடமும் இருந்தது. மலர் வெளியீட்டுக்கு முதல் தினம் இரவு - அதாவது நாங்கள் சென்றிறங்கிய அன்றே வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோட்டல் சவேராவில் விருந்து வழங்கினார்கள்.

அடுத்த தினம் 250 பேர் அழைக்கப்பட்ட விழாவில் ஜாபர்தீன் ஹாஜியாரின் நினைவு மலர் வெளியீடு என்பதால் வருகை தந்திருந்த 300க்கும் மேற் பட்டவர்களுக்கும் கூட நிகழ்வு முடிந்து ஹோட்டல் தி அக்கார்ட் மெட்ரோபோலிட்டன் ஹோட்டலில் மதிய விருந்து வழங்கப்பட்டது.

அதற்கடுத்த தினம் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் “நாயனொடு வசனித்த நன்நபி” காப்பிய நூல் வெளியீடு மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு வருகை தந்திருந்த நண்பர் கிளியனூர் இஸ்மத் அன்றிரவே தன்னுடன் விருந்துண்ண வேண்டும் என அன்புக் கட்டளையிட்டார். நிறைவான விருந்து.

இந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மேலும் இரண்டு விருந்துகளுக்கான அழைப்பு வரத் திக்குமுக்காடிப்போனோம். 26.01.2015 அன்று மதிய விருந்தை முனைவர் பேராசிரியர் எம்.ஏ. தாவூத் பாஷா அவர்கள் தனது கோடம்பாக்கம் வீட்டில் வழங்கினார். மட்டுமன்றி, சென்னை வந்தால் இனிமேல் நீங்கள் வேறு எங்கும் தங்காமல் எனது வீட்டிலேயே வந்து தங்கி விட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அன்பு சொரிந்தார்.

விருந்துக்காக அவரது வீட்டுக்குள் நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எம்முடன் விருந்துண்ண வந்திருந்தார் தம்பி ஆளுர் ஷாநவாஸ். தனக்கு அறிவிக்காமல் வந்தது குறித்துக் குறைபட்டுக் கொண்ட அவர் நாளை தனது வீட்டுக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அன்றிரவு வேறு ஒரு விருந்து இருந்தது. அடுத்த நாள் மாலை நாடு திரும்ப வேண்டியிருந்தது. எப்படிச் சொல்லியும் அவர் இணங்கவேயில்லை. எனது வீட்டில் விருந்துண்ணாமல் நீங்கள் பொக முடியாது என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.

அன்றிரவு சகோதரர் ருமைஸ்தீன் ஹோட்டல் விருந்தளித்தார். பெரு வணிகராக இருந்தும் பக்தியும் இலக்கியமும் ஒன்று சேர்நத ஒரு மனிதர் அவர். மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் பழகிய அவரை நமக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அவர் உமறுப் புலவரின் பரம்பரை வாரிசு என்று அறிய வந்ததும் பெரு மகிழ்ச்சி! நல்ல பேச்சாளர் என்றும் அறிய முடிந்தது. அவரைச் சுற்றி கவிஞர் பட்டாளம் ஒன்றே நின்றிருந்தது.

விடிந்தால் பயணத்துக்குரிய தினம். தம்பி ஷாநவாஸ் வீட்டில் மதிய விருந்து. எமது வேண்டுகோளுக்கேற்ப அவரது மனைவி உணவு தயாரித்திருந்தார். இலங்கையில் வீட்டில் விருந்த உண்பது போன்ற உணர்வு... அன்பு கலந்திருந்தால் எல்லாமே அமிர்தம்தான்!

தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் ஒரு நல்ல எழுத்தாளர். ஆவணப்படத் தயாரிப்பாளர். சமூக உணர்வுள்ள இளவல். அவருடைய 15 வயதிலிருந்து அவரை நான் அறிவேன். அவரது உறவினர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்.

பயணத்தில் புதிய பல நண்பர்களின் அறிமுகமும் பழைய நட்புகளுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. வயிற்றை மட்டுமன்றி மனத்தையும் நிறைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.

அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். கடலால் பிரிக்கப்பட்டிருந்த போதும் நமது கல்புகள் ஒட்டியே இருக்கின்றன.

அது அப்படித்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்!




Thursday, January 29, 2015

மனத்தால் செழித்த மாண்பாளர்!


பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக நிறுவனரும் “சமநிலைச் சமுதாயம்” சஞ்சிகையின் நிறுவனரும் எழுத்தாளரும் கொடை வள்ளலும் வணிகருமான ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்களது நினைவாக அவரது வாரிசுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட “மனத்தால் செழித்த மாண்பாளர்” என்ற நினைவு மலர் வெளியீட்டு விழா பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினால் நடத்தப்பட்டது. 24.01.2015 அன்று காலை 10.00 மணிக்கு தி.நகர், ஜி.என். செட்டித் தெருவில் அமைந்துள்ள தி அக்கார்ட் மெட்ரோபோலிட்டன் ஙோட்டல் மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு முனைவர் சே.மு.மு. முகமதலி (பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செயலாரும்) தலைமை வகித்தார்.

அழைப்பிதழ் பக்கம் - 01

அழைப்பிதழ் பக்கம் - 02

அழைப்பிதழ் பக்கம் - 03

அழைப்பிதழ் பக்கம் - 04


மிக அழகிய முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த நினைவு மலர் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜியாரின் முழுமையான வாழ்வின் சிறப்பை எடுத்துக் கூறக் கூடியதாக அமைந்துள்ளது. அதியுச்ச சிறப்புப் பதிப்பாகவும் கையில் எடுத்ததும் படிக்கத் தூண்டும் விதத்திலும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மலரை முனைவர் சேமுமு. முகமதலி, முனைவர் ஹ.மு. நத்தர்ஷா, முனைவர் அகமது மரைக்காயர், கவிஞர் சடையன் அமானுல்லாஹ், சட்டத்தரணி ஷேக்தாவூத் ஆகியோர் தொகுத்துள்ளனர்.


மலரை வெளியிட்டு வைத்துச் சிறப்புரை நிகழ்த்தினார் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

ராஸிக் பரீத் ஜாபர்தீன், காஸிம் பரீத் ஜாபர்தீன், டாக்டர்  ஷபீக்கா பானு ஆகியோர் தமது தந்தையாரின் நினைவுகளை இம்மலரில் பகிர்ந்து கொண்டுள்ளனர் அன்னாரின் சகோதரர்களான ஏவி.எம். ஹாஜா மைதீன், அகமது கபீர் ஆகியோர் சகோதரர் பற்றிய நினைவுகளை மீட்டுள்ளனர்.

கவிஞர் தமிழன்பன்

திரு. வீரபாண்டியன்
எழுத்தாளர் ஜே.எம். சாலி, டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மத் இக்பால் ஆகியோர்  முறையே முன்னோடி ஏவி.எம்.ஜாபர்தீன், வர்த்தக ஆளுமைக்கு ஒரு முன்னோடி எனும் தலைப்பில் நினைவுகளை மீட்டியுள்ளனர்.

அப்துல் அஸீஸ் பாக்கவி

Thursday, June 12, 2014

ஜாபர்தீன் என்றொரு மாமனிதன்!


ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீனுடன் நான்

அன்பின் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜி,

முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

அல்லாஹ் உங்களை அழைத்துக் கொண்டான் என்ற தகவல் கிடைத்ததும் இங்கிருந்து புறப்பட்டு வந்து உங்கள் முகம் பார்த்து ஸலாம் சொல்ல முடியாமல் போனமைக்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

தாயும் சேயுமாக அண்மித்த தேசங்களாக இருந்த போதும் எட்டிக் கடக்கும் எல்லைகளில் இருந்த போதும் நினைத்தவுடன் புறப்பட்டு வரும் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழ்க்கை அமைந்ததானது நமக்கு வாழ்வில் நேர்ந்திருக்கும் துரதிர்ஷ்டங்கள்தாம்!

தங்களது வபாத் செய்தி பேராசிரியர் சேமுமு - ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழியாகக் காதை எட்டிய போது காலை ஒன்பதரை மணியிருக்கும். உங்களது அறிமுகம் கிடைத்ததற்கும் உங்களது வபாத்துக்குமிடையிலான பதினைந்து வருடகால உறவின் ஒவ்வொரு கணமும் எனக்குள் சுழல ஆரம்பித்தது. நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

தங்களது மறைவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் ஓரு பிராந்திய இலக்கிய மாநாடு சம்பந்தமாக அனுராதபுரம் சென்று திரும்பியிருந்தோம். அந்தப் பயணத்துக்கு நான் புறப்பட்ட போது அணிவதற்கென எடுத்துச் செல்லத் தெரிவு செய்த ஷேர்ட்களில் ஒன்று நீங்கள் எனக்கு அன்பளித்தது. விமானப் பயணங்களுக்கும் சிறப்பு விழாக்களுக்கும் மாத்திரம் அணியும் அந்த ஷேர்ட்டை பயணத்துக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே வைத்து விட்டேன். இதோ மடிப்புக் கலையாமல் அப்படியே அது என் கண் முன்னால் இருக்கிறது, உங்களது நினைவுகளைப் போலவே!


நான், ஜே.எம்.சாலி, ஹாஜி ஏவி.எம், அல் அஸூமத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது (சமநிலைச் சமுதாயம் காரியாலயத்தில்)

1999ம் ஆண்டு சென்னைப் பிரசிடன்ட் ஹோட்டலில் உங்களை முதன் முதலாகப் பார்த்தேன். ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை வாழ்நாளில் இரண்டாவது முறையாகவும் இலங்கைக்கு வெளியே முதலாவது முறையாகவும் நான் கண்ட சந்தர்ப்பம் அது. மூன்றாவது தினம் இறுதி நிகழ்வுகளுக்கு முன்னர் மேடை ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் உங்கள் மீது எனது கவனம் வெகுவாக ஈர்க்கப்படுகிறது. கீழே இறங்கி வந்த உங்களை நானும் ஜின்னாஹ்வும் எதிர் கொண்ட போது எங்களைப் பார்த்துத் தரித்து மலர்ந்து புன்னகைக்கிறீர்கள். ஆர்வமேலீட்டால் உங்களை அறிமுகப்படுத்துமாறு டாக்டர் ஜின்னாஹ்விடம் கேட்கிறேன். நீங்கள் புன்னகை மாறாமல் அப்படியே தரித்து நிற்க ஜின்னாஹ் என்னைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டார்:- 'ஹாஜி ஜாபர்தீன்...! இவரைத் தெரிந்து கொள்ளாமலா மூன்று தினங்களாக இங்கிருக்கிறீர்கள்..? இந்த மாநாட்டை நடத்தும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளர்!'

அந்த மாநாட்டில் நீங்கள் எல்லாமாக இருந்தீர்கள் என்பதைப் பின்னாளில் நான் அறிந்து கொண்டேன். அம்மாநாட்டைப் பொறுத்தவரை நீங்களும் சேமுமுவும் செய்த நிர்வாகம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. ஆனால் உங்களது செயற்பாடுகள்; பின்னாளில் நடந்த மாநாடுகள் சிலவற்றில் போல துருத்திக் கொண்டோ இடறிக் கொண்டோ உங்களையே பிரேமுக்குள் வைத்துக் கொண்டோ அமைந்திருக்கவில்லை என்பதுதான் என்னை இன்னும் இன்னும் உங்களருகே இழுத்து வந்து சேர்த்தது என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் நடத்திக் காட்டிய அந்த மாநாடுதான் அடுத்த மூன்றாவது வருடத்தில் இலங்கையில் கோலாகலமாக ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தும் எண்ணத்தையும் ஆர்வத்தையும் எனக்குள் விதைத்தது. உங்களுடன் இலக்கிய மாநாடுகள் பற்றிப் பேசும் போதெல்லாம் இதைச் சொல்லியிருக்கிறேன். அதற்கும் உங்களிடமிருந்து வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததில்லை, அந்த... அதே புன்னகைதான்!

இலங்கைக்கு வருகை தந்து விட்டால் எம்மீது அளவு கடந்த பாசமும் நேசமும்காட்டும் சில படைப்பாளிகளும் படிப்பாளிகளும் இரண்டுங்கலந்த சிலரும் நாம் தமிழகத்துக்கு வருந்தோறெல்லாம் கண்டு கொள்ளாமல் போய்க்கொண்டேயிருப்பார்கள். ஆனால் வருந்தோறெல்லாம் வரவேற்று உபசரித்துக் கண்ணியமும் மரியாதையும் வழங்கும் ஒரு சிலரில் நீங்கள் முதன்மையானவராக இருந்தீர்கள். இந்த அரிய பண்புதான் உங்களை எனது மனதில் அழிக்க முடியாத ஓர் இடத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது.

2002ம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய மாநாடு பற்றிய அறிவிப்பு விடுவதற்காகவும் கலந்துரையாடுவதற்காகவும் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தோம். வந்த அடுத்த தினமே முக்கியஸ்தர்கள் அனைவரையும் உங்களது இல்லத்துக்கு அழைத்து எங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தந்துவிட்டீர்கள். செய்யிது முகம்மது ஹஸன், கவிக்கோ, பேரா. சேமுமு, பேரா. அகமது மரைக்காயர், பேரா. நஸீமா அகமது என்று அழைத்து எங்களையும் இணைத்து ஒரு மாலைப் பொழுதிலேயே எங்கள் பணியை இலகுவாக்கித் தந்துவிட்டீர்கள். அடுத்த தினமே பிரசிடன்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து தந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினீர்கள். மாநாடு முடியும் வரை பெரும் பக்கபலமாக இருந்து எங்களுக்கு வழிகாட்டினீர்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்ல முடியாமல் நாங்கள் திக்குமுக்காடினோம்.

2002 கொழும்பு மாநாட்டின் இரண்டாம் ஓர் இடைவெளியில் சந்தித்துக் கொண்டோம். 'சமநிலைச் சமுதாயம்' என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிடப்போவது பற்றி அந்த வேளை பேசினீர்கள். 'நம்ம சஞ்சிககைகள் ஒன்று பூமிக்குக் கீழே உள்ளவற்றைப் பேசுகின்றன அல்லது வானத்துக்கு மேலே உள்ளவற்றைப் பேசுகின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட உலகில் நமது கதியென்ன, நிலையென்ன என்று யார் பேசுவது? எப்போது பேசுவது? அதைத்தான் இந்தச் சஞ்சிகை செய்யும்!' என்று நீங்கள் சொன்ன போது நமது சமூகம் பற்றிய தெளிவான உங்கள் சிந்தனையை எனக்குள் ஓர் ஒளியைப் பாய்ச்சியது.