Showing posts with label ஷாநவாஸ். Show all posts
Showing posts with label ஷாநவாஸ். Show all posts

Saturday, January 31, 2015

விருந்தோம்பி வேளாண்மை செய்தல்!

தமிழகத்துக்குச் சென்றால் விருந்து வழங்கப்படாமல் திரும்பியதாகச் சரித்திரம் இல்லை.

சகோதர உறவுகளும் இலக்கிய நண்பர்களும் கடந்த காலங்களில் வழங்கிய விருந்துகளின் சுவை இன்னும் நாவில் மட்டுமல்ல, நெஞ்சிலும் இனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்துக்குள் நுழைந்த நிமிடம் முதல் நமது நலனில் அக்கறை கொண்டு நிழல் போலவே இணைந்திருக்கும் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்கள் இம்முறை நம்மீது அக்கறை செலுத்த உயிருடன் இல்லை. அவருடைய ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்கள் வெளியிட்ட நினைவு மலர் வெளியீட்டுக்கு நாம் அழைக்கப்பட்டிருந்தோம்.

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்துடன் இணைந்து நடநத்தப்பட்ட இவ்விழாவில் நானும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீனும் கவிஞர் அல் அஸூமத் அவர்களும் இலங்கையிலிருந்து சென்று கலந்து கொண்டோம்.

இது வரை காலமும் நமது பயணத்தில் அதியுச்ச விருந்தளித்து நம்மைக் கவனித்துக் கொண்டவர் மர்ஹூம் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்கள். அந்தப் பண்பு அவரது புதல்வர்களிடமும் இருந்தது. மலர் வெளியீட்டுக்கு முதல் தினம் இரவு - அதாவது நாங்கள் சென்றிறங்கிய அன்றே வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோட்டல் சவேராவில் விருந்து வழங்கினார்கள்.

அடுத்த தினம் 250 பேர் அழைக்கப்பட்ட விழாவில் ஜாபர்தீன் ஹாஜியாரின் நினைவு மலர் வெளியீடு என்பதால் வருகை தந்திருந்த 300க்கும் மேற் பட்டவர்களுக்கும் கூட நிகழ்வு முடிந்து ஹோட்டல் தி அக்கார்ட் மெட்ரோபோலிட்டன் ஹோட்டலில் மதிய விருந்து வழங்கப்பட்டது.

அதற்கடுத்த தினம் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் “நாயனொடு வசனித்த நன்நபி” காப்பிய நூல் வெளியீடு மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு வருகை தந்திருந்த நண்பர் கிளியனூர் இஸ்மத் அன்றிரவே தன்னுடன் விருந்துண்ண வேண்டும் என அன்புக் கட்டளையிட்டார். நிறைவான விருந்து.

இந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மேலும் இரண்டு விருந்துகளுக்கான அழைப்பு வரத் திக்குமுக்காடிப்போனோம். 26.01.2015 அன்று மதிய விருந்தை முனைவர் பேராசிரியர் எம்.ஏ. தாவூத் பாஷா அவர்கள் தனது கோடம்பாக்கம் வீட்டில் வழங்கினார். மட்டுமன்றி, சென்னை வந்தால் இனிமேல் நீங்கள் வேறு எங்கும் தங்காமல் எனது வீட்டிலேயே வந்து தங்கி விட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அன்பு சொரிந்தார்.

விருந்துக்காக அவரது வீட்டுக்குள் நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எம்முடன் விருந்துண்ண வந்திருந்தார் தம்பி ஆளுர் ஷாநவாஸ். தனக்கு அறிவிக்காமல் வந்தது குறித்துக் குறைபட்டுக் கொண்ட அவர் நாளை தனது வீட்டுக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அன்றிரவு வேறு ஒரு விருந்து இருந்தது. அடுத்த நாள் மாலை நாடு திரும்ப வேண்டியிருந்தது. எப்படிச் சொல்லியும் அவர் இணங்கவேயில்லை. எனது வீட்டில் விருந்துண்ணாமல் நீங்கள் பொக முடியாது என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.

அன்றிரவு சகோதரர் ருமைஸ்தீன் ஹோட்டல் விருந்தளித்தார். பெரு வணிகராக இருந்தும் பக்தியும் இலக்கியமும் ஒன்று சேர்நத ஒரு மனிதர் அவர். மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் பழகிய அவரை நமக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அவர் உமறுப் புலவரின் பரம்பரை வாரிசு என்று அறிய வந்ததும் பெரு மகிழ்ச்சி! நல்ல பேச்சாளர் என்றும் அறிய முடிந்தது. அவரைச் சுற்றி கவிஞர் பட்டாளம் ஒன்றே நின்றிருந்தது.

விடிந்தால் பயணத்துக்குரிய தினம். தம்பி ஷாநவாஸ் வீட்டில் மதிய விருந்து. எமது வேண்டுகோளுக்கேற்ப அவரது மனைவி உணவு தயாரித்திருந்தார். இலங்கையில் வீட்டில் விருந்த உண்பது போன்ற உணர்வு... அன்பு கலந்திருந்தால் எல்லாமே அமிர்தம்தான்!

தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் ஒரு நல்ல எழுத்தாளர். ஆவணப்படத் தயாரிப்பாளர். சமூக உணர்வுள்ள இளவல். அவருடைய 15 வயதிலிருந்து அவரை நான் அறிவேன். அவரது உறவினர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்.

பயணத்தில் புதிய பல நண்பர்களின் அறிமுகமும் பழைய நட்புகளுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. வயிற்றை மட்டுமன்றி மனத்தையும் நிறைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.

அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். கடலால் பிரிக்கப்பட்டிருந்த போதும் நமது கல்புகள் ஒட்டியே இருக்கின்றன.

அது அப்படித்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்!