Friday, February 6, 2015

குகை வாசிகள்!

 - 12 -

சூரா பகரா 201 வது வசனம் சொல்கிறது...

'றப்பனா ஆத்தினா பித்துன்யா ஹஸனத்தன் வபில் ஆகிறத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.'

'எங்கள் இறைவனே இவ்வுலகில் நல்லதையும் மறு உலகில் நல்லதையும் தந்தருள்வாயாக. இன்னும் நரக செருப்பின் வேதனையிலிருந்தும் எம்மைக் காத்தருள்வாயாக!'

நாம் அன்றாடம் கேட்கும் முக்கியமான பிரார்த்னைகளில் ஒன்று இது. இந்தப் பிரார்த்தனை மறு உலகைப் போலவே இந்த உலகத்திலும் நல்லவற்றைத் தந்தருளக் கோருகிறது. இவ்வுலக வாழ்வு சரியாக இருக்குமானால் மறுமை வாழ்க்கையும் சரியாக இருக்கும். இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்ட இம்மை வாழ்க்கை பிறழுமாக இருந்தால் மறுஉலக வாழ்வும் அபாயத்துக்குள்ளாகும்.

இவ்வுலக வாழ்க்கையை வாழ்வதற்காக நமக்கு வழங்கப்பட்டிருப்பது ஒரு சம்பூரணமான வாழ்க்கைத் திட்டம். இது பற்றி இஸ்லாமியப் பிரசாரகர்கள் முழங்குகிறார்கள். நூலாசிரியர்கள் விரிவுரைகளை எழுதுகிறார்கள். குழுமங்குழுமங்களாகப் பிரிந்து நின்றாலும் இந்த அடிப்படையைக் கொண்டே தூதை எத்தி வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் குத்பா மேடைகளில் குறிப்பிட்ட அம்சங்களை மட்டுமே பேசும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஸஹாபாக்களின் வாழ்நாள் சம்பவங்களையும் எடுத்துரைக்கிறார்கள். இறையச்சம், அண்ணலார் அகிலத்துக்கோர் அருட்கொடை, ஸஹாபாக்களின் தியாகம், உம்மஹாத்துல் முமினீன், தொழுகை, நோன்பு, ஹஜ், ஈமான், ஸதகா. சுவர்க்கம், நரகம்  என்பன போன்ற அம்சங்களையே தொடர்ந்தும் பேசி வருகிறார்கள்.

சுருங்கிப் போன இன்றைய உலகில் பல்வேறு துறைகளிலும் விசாலமாகிவிட்ட இன்றைய நிலையில் முழுமையாக எல்லா வாழ்வியல் அம்சங்களையும் ஏன் மிம்பர் மேடைகள் பேசுவதில்லை என்பது ஒரு கேள்வியாகவே நின்று கொண்டிருக்கிறது. இஸ்லாம் என்பது ஆலிம்களுக்கு மட்டுமே பொறுப்பானது என்கிற சமூகத்தின் முடிவு எங்கு எப்படி ஏற்பட்டது என்பது எனக்குப் புரியவில்லை.

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசத்திலும் பலநூறு பிரச்சனைகள் உள்ளன. இப்பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆராய்வதும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் இஸ்லாம் ஆகாதா? இந்தப் பிரச்சனைகளை மிம்பரில் பேசுவதால் இஸ்லாத்துக்குத் துரோகம் இழைத்ததாக ஆகிவிடுமா?

ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலையிலும் ஒரு கொப்பி வாங்க முடியாத, சப்பாத்துக்கு வழியற்ற பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள். ஓவ்வொரு ஊரிலும் பொதுவான பிரச்சனைகள் உள்ளன. பல இளைஞர்கள் சரியான பொழுது போக்கின்பால் வழி காட்டப்படாமல் தெருக்களில் நின்று இளம்பெண்களை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். திருமணம் செய்ய முடியாமல் பல இளம் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். படித்து விட்டுத் தொழிலின்றிப் பலர் தெரு மேய்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் இவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இஸ்லாம் ஆகாதா? இவற்றை மக்கள் முன் வைக்க மிம்பர் மேடைகளைப் பயன்படுத்த முடியாதா?

ஊரின் பொதுப் பிரச்சனைகளை வகைப்படுத்தி, அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டியவை எவை, ஊராரே முன்னின்று செய்ய வேண்டியவை எவை என்று அடையாளம் காண முடியாத நிலையில் ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல் நிர்வாக சபையும் இருக்குமானால் இந்த நூற்றாண்டில் இதைவிடப் பெரிய வெட்கக் கேடு எதுவுமே கிடையாது. லெப்பைக்கும் முஅத்தினாருக்கும் சம்பளம் கொடுப்பதற்கு ஒரு நிர்வாக சபை அவசியமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

சில இடங்களில் ஒரு ஆலிம் ஜூம் ஆ பிரசங்கம் நிகழ்த்த மற்றொருவர் தொழுகை நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். துறைசார்ந்த நபர்களைக் கொண்டு இவ்வாறான நல்ல விடயங்களை ஜூம்ஆ பிரசங்கமாக நிகழ்த்தி விட்டு ஆலிம்களைக் கொண்டு அரபி குத்துபாவையும் தொழுகையையும் நடத்தினால் தீட்டாகி விடுமா?

சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் எல்லாவற்றையும் இஸ்லாமிய நெறிமுறைகளூடாக அணுகவும் இலகுவானதும் தெளிவானதுமான ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் அது பற்றிச் சிந்திக்காமல் மற்றவரில் என்ன குறை காணலாம் என்பதைப் பற்றியே சதாவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

மஸ்ஜிதுகள் சமூகத்தின் மத்திய ஸ்தலமாக மாறும் வரை மூஸ்லிம் சமூகத்தில் ஒரு சாராருக்கு இஸ்லாம் தொழிலாகவும் இன்னொரு சாராருக்கு வியாபாரமாகவுமே இருக்கும்!

நன்றி - மீள்பார்வை
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

welcome to farzath said...

jazakallahu khairan, just perfect.