Tuesday, April 21, 2015

எல்லைக்குள்ளும் ஏராளம் இடமுண்டு!


 - 17 -

வார்த்தைகளால்தான் ஆனது கவிதை என்ற போதும் அதனை ரசிக்கின்ற ஆன்மா அனுபவிக்கும் இன்பத்தை வார்த்தைகள் கொண்டு சரியாக விபரிக்க முடியாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு!

இஸ்லாம் என்பது விரிவாகப் பேசவும் எழுதவும் தெளியவும் என்று ஆன நிலை ஏற்பட்ட பிறகு கவிதையின் எல்லை பற்றிய புரிந்துணர்வு ஓரளவுக்குத் திருப்தி தரக் கூடியதாக மாறியிருக்கிறது. ஆயினும் நீண்ட காலமாக கவிதை என்பது ஒழிக்கப்பட வேண்டிய அம்சமாகவும் அப்படியே பயில வேண்டும் என்ற அவசியம் இருக்குமாயின் அல்லாஹ், நபிகளார், ஸஹாபாக்களைப் போற்றிப் பாடுப்படுவதாகவும் இஸ்லாத்தின் கடமைகளை விவரிப்பதாகவுமே இருக்க வேண்டும் என்ற ஒரு நிலையிலிருந்து வேறு ஒரு தளத்துக்குச் ; செல்வதில் இன்னும் மனத் தடை மற்றும் புரிதல் தடைகள் இருககத்தான் செய்கின்றன.

யார் யார் இஸ்லாத்தை எப்படி விளங்கி வைத்திருக்கிறோமோ அந்த அளவிலேயே நமது கவிதையும், கலைகளும் தரித்து நிற்கின்றன. சற்று அதிகமாகப் போவது என்றால் பலஸ்தீனப் போராளிகளுக்கான ஆதரவு, முஸ்லிம் சமூகத்தின் அவலங்கள் வரை அது நீள்கிறது.

விலக்கப்பட்ட அம்சங்களைப் புகழ்ந்தோ வேண்டியோ சிலாகித்தோ பாடுவதைத் தவிர்த்தால் ஏனையவை அனைத்தும் இஸ்லாம் என்ற வரையறைக்குள் வந்து விடும். ஆனால் 'எல்லை' மற்றும் 'வரையறை' ஆகியவற்றை ஒரு பூதம் போல நினைத்து மறுகிக் கொண்டிருப்பதால் நமது சிந்தனைகள் மேற்கொண்டு நகர்வதாயில்லை. கடந்த காலத்தில் இஸ்லாமியக் கவிதை என்று நினைத்துக் கொண்டு வெறும் அறபுச் சொற்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் எந்த ரசனையும் இல்லாமலே எழுதி வருவது போலவே இன்றும் எழுதி வருகிறோம். சோடிக்கப்பட்ட, வலிந்த சம்பவங்களும் வார்த்தைகளும் எல்லைக்குட்பட்ட கவிதை இலக்கியத்தைச் சிதைத்தே வந்திருக்கின்றன, வருகின்றன.

இங்கே பிரபல பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூது தர்வேஷ் அவர்களது கவிதை ஒன்றைத் தருகிறேன். யூஸூப் (அலை) அவர்களைப் பலஸதீனர்களாகவும் யூதர்களை, யூஸூப் நபியைக் கிணற்றில் தள்ளிய சகோதரர்களாகவும் அவர் இந்தக் கவிதையில் சித்தரிக்கும் அழகைப் பாருங்கள். இறுதியில் அல்ஆன் வசனம் ஒன்றுடன் கவிதையைப் பொருத்தமாக நிறைவு செய்கிறார். இந்தக் கவிதை பலஸ்தீனத்துக்கு மட்டுமன்றி எந்த ஒரு நாட்டிலும் ஓர் இனம் இன்னொரு இனத்தைக் கருவறுப்பதை எடுத்துச் சொல்லப் பொருத்தமான கவிதையாக இது அமைந்திருக்கிறது.

எனது தந்தையே..
நான் தான் யூஸூப்!

எனது தந்தையே..
எனது சகோதரர்கள் 
என்னை விரும்புகிறார்களில்லை!

அவர்களுக்கிடையில்
நானும் ஒருவனாயிருப்பதை
அவர்கள் விரும்புகிறார்களில்லை!

அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்,
கற்களையும் சொற்களையும்
என்னை நோக்கி வீசுகிறார்கள்!

நான் மரணிக்க வேண்டும்
என்பது அவர்களது விருப்பம்,
அப்படி நடந்தால்
அவர்கள் என்னைப் புகழுவார்கள்!

உங்களது வீட்டுக் கதவை
இறுகப் பூட்டுகிறார்கள்,
என்னை வெளியில் விட்டு விட்டு!

வெளிகளிலிருந்து
என்னைத் துரத்தியடிக்கிறார்கள்!

எனது திராட்சைப் பழங்களில்
அவர்கள் நஞ்சு கலக்கிறார்கள்!

என் தந்தையே
எனது விளையாட்டுப் பொருட்களையெல்லாம்
அவர்கள் உடைத்து விட்டார்கள்
எனது தந்தையே...

எனது தலை மயிர்களில்
தென்றல் விளையாடுவதைக் கண்டு
அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்!

உங்கள் மீதும் என் மீதும்
அவர்கள்
வெறித்தனமாகத் தீ மூட்டுகிறார்கள்!

அவர்களிடமிருந்து
நான் எவற்றைக் களவாடினேன் தந்தையே?

எனது தோளில் 
பட்டாம்பூச்சிகள் வந்தமர்ந்தன
கோதுமை என்பக்கம் தலை சாய்ந்தது
எனது உள்ளங் கைகளில்
பறவைகள் உறங்கின..

நான் என்னதான் செய்து விட்டேன்
என் தந்தையே?
ஏன் எனக்கு இது?

நீங்கள்தான் யூஸூப் என்று
எனக்குப் பெயரிட்டீர்கள்!

அவர்கள் என்னைக்
கிணற்றில் வீசிவிட்டு
ஓநாயைக் குற்றம் சாட்டினார்கள்

ஓநாய்கள்
என் சகோதரர்களை விடவும்
கருணை மிக்கவை!

தந்தையே
பதினொரு நட்சத்திரங்களும்
சூரியனும் சந்திரனும்
என்னைச் சிரம்பணியக் கனவு கண்டேன்
என்று நான் சொன்னதில்
ஏதாவது தவறு செய்து விட்டேனா?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

மிகவும் அற்புதமான பதிவு. கவிதையை வாசித்து முடித்ததும் கண்கள் பனித்துவிட்டன.

கலையும் இலக்கியமும் எவ்வளவு சக்திவாய்ந்த சாதனங்கள் என்பதை சகிப்புத்தன்மையும் ஆழ்ந்த வாசிப்பும் அற்ற, வெற்றுக் கூச்சல்களால் மட்டும் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் கூட்டம் என்றேனும் உணரும் ஒரு நாள் உதயமாகக் கூடுமா? :(