Sunday, August 9, 2015

அஸ்ஸலாமு அலைக்கும்

- 24 -

அரபு நாடுகளுக்குத் தொழிலுக்குச் சென்றவர்கள் சுவாரஸ்யமாகச் சொல்லும் பிரதான கதைகளில் ஒன்று வாகன விபத்துக்கள்!

இரண்டு அறபிகள் தங்களது வாகனங்களை உரசிக் கொண்டால் நடக்கும் காட்சி. இருவரும் வாகனங்களிலிருந்து வெளியேறி முதலில் ஸலாம் சொல்லிக் கொள்வார்களாம். அதன் பிறகு ஆளை ஆள் கடும் வார்த்தைகளில் திட்டுவார்களாம். இது வெளிநாட்டார் கண்களுக்கு விருந்து. வேறு எங்கு இப்படி விபத்து நடந்தாலும் இறங்கியதும் தடித்த வார்த்தைப் பிரயோகமும் சில வேளை கைகலப்பும் நடக்கும். இங்கு வித்தியாசமான காட்சி!

மற்றொரு அரசியல் திருவிழா ஆரம்பித்து விட்டது. சமூகத்தில் சகலராலும் கவனிக்கத்தக்க அம்சங்களை அரசியல்வாதிகள் மேல் விட்டு விட்டு விமர்சிக்கும் கோலாகலம் ஆரம்பமாகி விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தான் இருக்கும் நிலையிலிருந்து மேலே செல்ல விரும்புவானே தவிர, தனது நிலையைக் கீழிறக்கிக் கொள்வதற்கு விரும்புவதில்லை. அரசியல்வாதியை மட்டும் இந்த நியதிக்கு அப்பால் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. புகழும் செல்வாக்கும் ஒரு போதை. அவற்றிற்குள் அகப்பட்டோர் அவை இல்லாமல் வாழ்வதைப் பெரும் துன்பமாகவே காண்பார்கள்.

எனவே தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் முயற்சியெடுக்கிறான். அவனுக்குத் தேவைப்படுபவை வாக்குகளும் அதற்குரிய மனிதர்களும். அரசியல்வாதியின் வாழ்க்கை வாக்குகளிலேயே தங்கியிருப்பதால் அவன் எல்லா வகையான மனிதர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அரசியல்வாதியோடு இணைந்து இருப்பதிலும் அதைப் பயன்படுத்திச் செல்வாக்குத் தேடவும் பணம் உழைக்கவும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. இவர்களே பெரும்பாலும் ஓர் அரசியல்வாதியின் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

ஏற்கனவே தன்னோடு இருப்பவர்களையும் புதிதாகத் தன்னுடன் இணைவோரையும் சமாளிப்பதில் அரசியல்வாதியின் காலத்தில் பெரும் பகுதி வீணடிக்கப்படுகிறது. எதிராளியான இருந்த போதும் புதிதாக வந்து இணையும் ஒருவரை அரசியல்வாதி ஏற்றுக் கொள்ளத் தயாராகும் போதே ஏற்கனவே அவருடன் இருக்கும் பழைய ஆதரவாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். அல்லது மக்கள் செல்வாக்குள்ள ஒரு நபர் அரசியல்வாதியோடு இணைவதாக இருந்தால் அரசியல்வாதியின் பழைய ஆதரவாளர் அல்லது ஆதரவாளர்கள் சிலர் கழிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை வைப்பதும் உண்டு. இவ்வாறான சிக்கல்கள் பொது வெளியில் வாய்த் தர்க்கத்தில் தொடங்கி கைகலப்பில் முடிகின்றன.

இது போக, இன்றைய முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரை ஓரளவு மக்களுக்கு அறிமுகமானவர், ஓர் அரச ஊழியர், ஒரு வர்த்தகர், ஒரு ஹாஜியார் - எல்லோருமே தம்மை ஒரு முக்கியமான சமூகப் பிரஜையாகக் கருதி அரசியல்வாதி தமது காலடிக்கு வரவேண்டும், தன்னுடன் தனியே உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அநேகமானோர் தத்தமது சொந்த லாபங்கள் கருதிய கோரிக்கைகளை முன் வைத்துப் பேரம் பேசுகின்றனர். அரசியல்வாதி 'ஆம்' என்று ஏற்றுக் கொண்டால் அடுத்த தினம் சமூகத்தின் நன்மைக்காகக் குறித்த அரசியல்வாதியுடன் இணைந்து விட்டேன் என்று கதை விடுகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு ஒரு குறித்த அரசியல்வாதியுடன் இணைபவர் தனது கோரிக்கை நிறைவேறாதவிடத்து அதே கோரிக்கையுடன் வேறு ஓர் அரசியல்வாதியுடன் சேர்ந்து கொள்கிறார். தான் ஏற்கனவே இணைந்திருந்த அரசியல்வாதி சமூகத்துக்குச் சேவையாற்றாமல் சொந்த லாபங்கருதியே செயற்படுகிறார் என்றும் குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்.

கற்ற சமூகம் என்று ஒரு பிரிவினர் இந்த சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் பக்கம் தலை வைத்துப் படுப்பது கூடக் கிடையாது. அரசியல்வாதியைக் கண்டால் பிடிக்காது. சிலவேளை தனது கல்வித் தராதரமோ, அதற்குக் கீழோ அல்லது அதற்கு மேலோ கொண்டிருக்கும் ஓர் அரசியல்வாதியை அவருக்குப் பிடிக்காமல் இருப்பதற்குக் காரணம் பொறாமை. இவர்கள் அரசியல்வாதியின் மேல் குற்றப் பத்திரிகை வாசிப்பதையே வாழ் நான் பூராகவும் செய்து கொண்டிருப்பார். சமூக அக்கறையுடன் ஒரு விடயத்தை நேரடியாகச் சுட்டிக் காட்டவோ தமமைப்போன்ற ஓர் அணியுடன் சென்று சமூகக் குறைகளை அரசியல்வாதியிடம் எடுத்துச் சொல்லவோ இவர்கள் ஒரு போதும் முனைந்தது கிடையாது.

தேர்தல் வந்து விட்டால் புதிய இணைப்புகள் நிகழும் அதேயளவு புதிய பிணக்குகளும் ஏற்படுகின்றன. ஒரே குடும்பம் இரண்டாக சில வேளை மூன்றாகப் பிரிந்து நின்று சண்டை பிடிக்கிறது. சகோதரர்கள் கூடப் பிரிந்து நிற்கிறார்கள், சண்டையிடுகிறார்கள். அந்தச் சண்டை பொலிஸ் நிலையம், நீதி மன்றம் என்று நீண்டு செல்கிறது. வாழும் காலத்தில் பாதியை பிணக்குகளிலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு சிலர்; வருடக் கணக்காக மற்றவரின் முகத்தைக் கூடப் பார்ப்பதுமில்லை. ஸலாம் சொல்லிக் கொள்வது கூட இல்லை.

எந்த அரசியல்வாதிகளுக்காக இவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்களோ அவர்கள் தேர்தல் முடிந்ததும் ஒரே வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள், நட்புப் பாராட்டுகிறார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் ஒரே அணியில் ஒன்று பட்டு விடுவதும் உண்டு.

எந்த ஒரு வாகன விபத்து நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் சண்டையிட்டாலும் முடிவு அடுத்த கட்டம் என்ன செய்வது என்று யோசிப்பதுதான். நடந்து முடிந்து விட்ட பிறகு சண்டையை நீட்டுவதால் பிரயோசனம் எதுவுமில்லை.

வாகனங்களைப் பழுது பார்த்தெடுத்து மீண்டும் வழமைக்குத் திரும்பி விடுவதுபோல தேர்தல் முடிந்த கையோடு பழைய நிலைக்குத் திரும்பும் பக்குவம் நமக்குள் வரவேண்டும்.

ஸலாத்தைப் பகிர்ந்து கொள்வதால் எப்போதும் நஷ்டம் வருவதில்லை!

(மீள்பார்வைக்கு எழுதியது)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: