Monday, March 12, 2012

ஒற்றையடிப் பாதை - முகநூலில் முகிழ்ந்த மலர்

ஓர் அழகிய ஏழைச் சிறுமியைப் போல தமிழ் இலக்கியப் பரப்புக்குள் நுழைந்திருக்கிறது, பஸ்லி ஹமீதின் ‘ஒற்றையடிப் பாதை.’

இந்த நூலுக்கு அணிந்துரையை வழங்கியிருப்பதும் நான்தான். அத்தோடு பஸ்லி ஹமீத் என்னை விட்டு விடுவார் என்றுதான் நம்பியிருந்தேன். சில வாரங்களுக்கு முன்னர் தர்ஹா நகர் வந்திருந்த போது நூல் வெளியீட்டு விழாவிலும் நீங்கள் வந்து பேச வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். பஸ்லி ஹமீத் எனது கவனத்தைப் பெற்றவர் என்ற போதும் என்னில் மிகுந்த அபிமானம் கொண்டவர் என்ற போதும் அவ்வேண்டுகோளை நிராகரிப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஒரு நூலைப் பற்றி ஒன்றில் எழுத வேண்டும் அல்லது பேச வேண்டும். தொடர்ந்தேர்ச்சையான இரண்டாவது செயற்பாடு அலுப்புத்தரும் விடயமாக ஆகிவிடும் என்பது அதற்கான காரணம்.

ஆனால், எனது மரியாதைக்குரிய கவிஞர் ஏ.இக்பால் அவர்கள், “எங்களது காலம் முடிந்து விட்டது. இனிமேல் வளரும் தலைமுறையை நீங்கள்தான் வழி நடத்த வேண்டும். நீங்கள் கட்டாயம் விழாவில் கலந்து கொண்டு பேச வேண்டும்” என்று இட்ட கட்டளையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

பஸ்லி ஹமீத் இணையத்தில் முகப்புத்தகத்தில் என் நண்பர் வட்டத்துள் இருக்கும் ஒரு முக்கிய நபர். அவரை அவரது சின்னச் சின்னக் கவிதைகளே எனக்கு அடையாளம் காட்டின. தொடர்ச்சியாக அவர் இடும் கவித்துளிகளை நான் படிக்கிறேன். அவற்றில் என்னைக் கவர்ந்தவற்றை இரசிக்கிறேன்.

முகப்புத்தகம் இன்று உலகளாவிய அதிவேகத் தொடர்பு சாதனமாகியிருக்கிறது.  முகப்புத்தகத் தொடர்பில் இருக்கும் அனைவரும் - அவரவருக்கு ஏற்ப ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு வட்டத்துக்குள் தம்மையும் அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். அவரவர் ஏற்படுத்திக் கொள்ளும் வட்டம் ஐம்பது, நூறு முதற்கொண்டு ஐயாயிரம் பேர்வரை நீண்டு செல்கிறது. முகப்புத்தகத்தில் டீலந என்ற ஆங்கிலச் சொல்லைக் கூடச் சரியாகப் பதியத்தெரியாதவர்கள் முதற் கொண்டு மிகப் பெரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள் வரை தமக்கென ஒரு கணக்கைத் திறந்து ஒரு பக்கத்தை வைத்திருக்கிறார்கள். அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப அதில் தம்மை இனங்காட்டிக் கொள்கிறார்கள். சிலர் நல்ல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சிலர் சமயங்கள், கோட்பாடுகள், அரசியல் பற்றிச் சமர் செய்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களில் ஒரு சாரார் சமயப் பிரசாரத்தை முன்னெடுக்கும் அதேவேளை இயக்கச் சண்டைகளையும் பிடித்துக் கொள்கிறார்கள். இவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாதவர்களும் அவற்றில் விருப்பமற்றவர்களும் தனது பிள்ளையின் படங்களை அல்லது தனது வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ அண்மையில் ஈனப்பட்ட ஒரு நாய்க் குட்டியின் அல்லது பூனைக்குட்டியின் படத்தைக் கூட இட்டு மகிழ்கிறார்கள்.

படைப்பாளிகள், இலக்கியவாதிகள் தமது இலக்கியத் தகவல்களையும் தமது படைப்புக் களையும் பதிவிடுகிறார்கள். தாம் எழுதிய, படித்த, தம்மைக் கவர்ந்த கவிதைகள், கதைகள், அவை பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றையும் தருகிறார்கள். இவ்வாறு பல நூறு பேர் கவிதைகளையும் எழுதுகிறார்கள், அவர்களுள் அதிகம் பேர் கவிதை என்று நினைத்துக் கொண்டு சில வார்த்தைகளையும் எழுதுகிறார்கள்.

இங்குதான் பஸ்லி ஹமீத் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொள்கிறார். ஒரு படத்தை முதலில் தெரிவு செய்கிறார். பிறகு அந்தப் படத்தின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கும் கவித்துவமிக்க வசனங்களை இரண்டடி அல்லது நான்கடிகளில் பதிவு செய்கிறார். அப்படமும் அக்கவித்துவமிக்க வரிகளும் அவருக்கு ஒரு பெரும் இரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து தனது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவிட்டு வந்த படங்களோடிணைந்த கவித் துளிகளிலிருந்து இருநூறு படங்களும் கவித்துளிகளும் இன்று வெளியாகும் 112 பக்க ‘ஒற்றையடிப்பாதை’ என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

அவற்றிலிருந்து படங்களினூடான அவரது சிந்தனை, வார்த்தைகளால் எவ்வாறு செதுக்கப்பட்டிருக்கிறது என்பதற்குப் பதச் சோறுகளாக இரண்டு பருக்கைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு படத்தில் மூன்று எறும்புகள் நகருகின்றன. எறும்பை யாராவது ஆராய்ந்து கொண்டா இருப்பார்கள். ஆனால் கவிஞன் அதை அவதானிப்பான். அதில் ஓர் அர்த்தத்தைக் காண்பான். பஸ்லி சொல்கிறார்:-

“தனியாய் நின்றால் எறும்பு - ஓர்
அணியாய் நின்றால் இரும்பு!”

‘இங்கே பாதரட்சைகளைக் கழற்றவும்’ என்ற அறிவிப்புக்குக் கீழே இரண்டு சோடிச் சப்பாத்துக்கள் கழற்றப்பட்டிருக்கின்றன. பஸ்லி அந்தச் சப்பாத்துக்களுக்குச் சொல்கிறார்:-

“நீ வாசலோடு நின்று கொள்
பளிங்குத் தரையைப்
பாதங்கள் மிதிக்கட்டும்!”

இவ்வார்த்தைகள் வெறுமனே படங்களுக்கு அர்த்தம் தருவனவாக மட்டும் அமையவில்லை. அவ்வார்த்தைகளின் பின்னணியில் பல அர்த்தங்கள் தொனித்து நிற்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது பஸ்லியின் சிந்தனையில் ஊறும் கற்பனையினதும் அவருக்கு வாலாய்ப்பட்டு நிற்கும் அவரது மொழியினதும் அழகு. எதை வைத்து எதைச் சொல்லலாம் என்பதையும் அதை எப்படிச் சொல்லலாம் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் அவை நமது கவனத்தையும் சிந்தனையையும் கவர்ந்து செல்கின்றன. ஒன்றை எப்படி கவனத்தை ஈர்க்குமாறு வெளிப்படுத்துவது என்பதையும் ஒன்றை வைத்து இன்னொன்றை எப்படிப் புரிய வைப்பது என்பதையும் கையாளும் ரசவித்தை கைவரப் பெறுவது ஒரு பெரிய வரமாகும். ஓர் ஆரம்ப இலக்கிய மாணவனாக பஸ்லி வெற்றி பெற்றிருக்கிறார். இதையே ஒரு முழுக் கவிதையூடாகவோ ஒரு சிறுகதையூடாகவோ ஒரு நாவலூடாகவோ வெளிப்படுத்தும் திறன் பெற்றவன் ஒரு முழுமையான இலக்கியவாதியாக, வெற்றி பெற்ற படைப்பாளியாக மாறிவிடுவான்.

முகப்புத்தகத்தில் ஓர் இலக்கிய உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஓர் இளைய இலக்கியத் தலைமுறை அங்கு முளை விட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா மனங்களுக்குள்ளும் இருக்கும் இரசனை என்பது படங்கள் சார்ந்ததாக, வார்த்தைகள் சார்ந்ததாக அங்கு வெளிப்படுத்தப்படுகிறது. வாசிப்புப் பழக்கமே இல்லாத ஒருவர் முகப்புத்தகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு உலகியல் நிகழ்வுகளையும் நண்பர்களது வாழ்க்கை வட்டத்தையும் அறிந்து கொள்வதுடன் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள், அழகிய வசனங்கள், கவிதைகள், கதைகள், மிக நுட்பமாகச் செதுக்கப்பட்ட நகைச்சுவைகள் ஆகியவற்றையும் படிக்க ஆரம்பிக்கிறார். இது அவருக்குள் இருக்கும் இரசனை உணர்வைத் தட்டி எழுப்பி விடுகிறது. தான் படித்தவற்றையும் தனக்குத் தோன்றியவற்றையும் சிறியதாகவோ பெரியதாகவோ எழுதிப் பதிவிட ஆரம்பிக்கிறார்.

நமது பத்திரிகைகளில் வெகு அபூர்வமாகவே வாசகர் கடிதங்கள் வெளிவருகின்றன. சஞ்சிகையில் வாசகர் கடிதம் எழுதும் ஒருவர் நமது படைப்பைப் பற்றியும் ஒரு வார்த்தை சொன்னால்தான் உண்டு. அதற்காக நாம் மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அந்தப் பிரச்சினை முகப்புத்தகத்தில் கிடையாது. பதிவை இட்டு முடிய, நமது நண்பர்கள் ‘ஒன் லைனில்’ இருந்து, அது அவர்களைக் கவர்ந்தால் உடனே அதன் பிரதிபலிப்பு நமக்குத் தெரிந்து விடுகிறது. இது ஒரு போதை போல நம்மைக் கவர்ந்திழுக்கிறது. நமது பதிவை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரவேற்பதும் பாராட்டுவதும் உண்மையாகவே நம்மை அதிகம் குளிர்விக்கிறது.

இங்கேதான் ஒரு முக்கியமான பிரச்சினை தோன்றுகிறது. புதிதாக இலக்கியத் துறைக்குள் நுழையும் இளசுகள் தாம் இடும் பதிவுகளை - அவை அநேகமாகவும் கவிதை என நினைத்துக் கொண்டு எழுதப்பட்ட வசனங்களாகவே இருக்கும் - யாரும் கண்டு கொள்ளாத பட்சத்தில் அல்லது போதிய வரவேற்புக் கிடைக்காத போது வேறு ஒரு காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களது நட்புப் பட்டியலில் இருக்கும் ஓரளவு மூத்த படைப்பாளிகளின் இலக்கியவாதிகளின் பக்கங்களில் தமது பதிவுகளைப் பலாத்காரமாக இணைத்து விடுகின்றனர்.

இங்கு பலாத்காரமாக என்ற சொல் பொருந்தாத போதும் மூத்த படைப்பாளியின் அனுமதியின்றி அப்பதிவுகள் இடப்படுகின்றன என்பதால் அச்சொல்லை நான் பயன்படுத்த விரும்புகிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. மூத்த இலக்கியவாதியின் பக்கத்துக்கு அதிக இலக்கிய ஆர்வலர்கள் வந்து செல்கிறார்கள். அப்போது தனது பதிவு அவர்களது கவனத்துக்குள்ளாகும் என்பது முதலாவது காரணம். ‘இதோ பாருங்கள்... நானும் கவிதை எழுதியிருக்கிறேனாக்கும்... நீங்கள் பார்த்து உங்களது கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்ற மறைமுக வேண்டுகோளை மூத்த படைப்பாளிக்கு முன் வைத்து அவரது அங்கீகாரத்தைப் பெற முயல்வது இரண்டாவது காரணம்.

ஒரு படைப்பை, ஒரு பதிவை நான் இட்டிருக்கும் போது அதற்கு மேலால் எனது பக்கத்தில் இன்னொருவர் தனது அரை அவியல் பதிவை எனது அனுமதியின்றி இணைப்பதானது வேறொருவர் எனது முகத்தில் பசையைப் பூசித் தனது போஸ்டரை ஒட்டிவிட்டுப் போவதற்கு ஒப்பானது.

இவ்வாறு தமது அரைகுறைப் பிரசவங்களையும் எந்தப் பெறுமானமும் அற்ற - வெறுமனே மற்றவரின் கவனத்தைக் கவருவதற்காக இடும் பதிவுகளையும் எனது பக்கத்திலிருந்து நான் நீக்கியமைக்காகப் பலர் என்னுடன் கோபித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘நான் பல கவிதைகளை இணைத்திருந்தேன். நீங்கள் கண்டு கொள்வதும் இல்லை, கருத்துச் சொல்வதும் இல்லை’ என்று சிலர் முறைப்பட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அவற்றுக்கு நான் சொல்ல நினைத்துச் சொல்லாமல் போன கருத்துக்களை விட, அவற்றை அகற்றி விடுவதன் மூலமும் கண்டு கொள்ளாததன் மூலமும் உணர்த்தப்படும் செய்திதான் முக்கியமானது. ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை.

அவர்களுடைய எதிர்பார்ப்பெல்லாம் ஒன்றுதான். தங்களது எழுத்துக்களை அவை எப்படியிருந்தாலும் ‘அருமை’ என்றோ ‘சிறப்பாக இருக்கிறது’ என்றோ ‘நல்லவொரு படைப்பு’ என்றோ அல்லது நான்கைந்து வசனங்களில் பாராட்டுவதை மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் அதை நம்மால் செய்ய முடிவதில்லை. செய்யவும் முடியாது. எனவே, ‘இளைய தலைமுறையை மூத்தவர்கள் கண்டு கொள்வதும் இல்லை, தட்டிக் கொடுப்பதும் இல்லை’ என்று கோபப்படுகிறார்கள். குமுறி எழுகிறார்கள். குறிப்புப் போடுகிறார்கள்.

இதற்குள் இன்னொரு கிளைப்பாதையும் செல்கிறது. அதுதான் இஸ்லாமிய உணர்வு இலக்கியம். அது முஸ்லிம் சமூகம், இஸ்லாம், சர்வதேச முஸ்லிம் உம்மத், ஏகாதிபத்திய மற்றும் ஸியோனிச எதிர்ப்புக் கவிதைகள் என்று பரவலான ஓர் எல்லையை அது கொண்டுள்ளது. (குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவிடுவது பற்றி நான் பேசவில்லை.) இவ்வாறு எழுதப்படும் பதிவுகள் பெரும்பாலும் உண்மையான இஸ்லாமிய உணர்வை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து எழுதுபவர் இஸ்லாமிய உம்மத் மீதும் இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் பெரும் பற்றுதல் வைத்துள்ளதையும் அதற்கு எதிரான அனைத்துச் சக்திகளுக்கெதிராகவும் கடும் ஆவேசத்துடனிருப்பதையும் பறைசாற்றுபவையாகவே இருக்கின்றன. ஆக இஸ்லாம் என்ற மார்க்கத்தையும் சர்வதேச இஸ்லாமிய உம்மத்தையும் வைத்துத் தம்மை மேம்பட்ட ஒரு பிரகிருதியாக, தனித்துவம் மிக்க ஒரு புள்ளியாகக் கட்டமைக்கும் முயற்சியாகவே இப்பதிவுகளைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறான பதிவுகளை இடுவோரும் கூட, தமது பதிவைப் பாராட்டவேண்டும் என்றும் மூத்த படைப்பாளிகள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இவர்களது எதிர்பார்ப்புப் பலிக்காதவிடத்து இவர்களும் அதே இடத்தில் அதாவது - ‘மூத்த படைப்பாளிகள் தம்மைக் கண்டு கொள்வதில்லை’ என்கிற புள்ளியில் இணைந்து விடுகிறார்கள். அதை அவர்கள் எப்படி முன்வைக்கிறார்கள் என்றால் - ‘மூத்த படைப்பாளிகள் நாம் வளர்வதற்கு வழிகாட்டுகிறார்கள் இல்லை’ என்று ஒரே போடாய்ப் போட்டு விடுகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை மறுதலையாகவும் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மூத்த படைப்பாளிகளை நோக்கிக் குற்ற விரல் நீட்டும் இளம் தலைமுறை தமது மூத்த படைப்பாளிகளின் எழுத்துக்களை நூறு வீதம் இல்லையென்றாலும் ஐம்பது வீதமாவது படித்துள்ளதா என்பது ஒரு முக்கியமான கேள்வி. நீண்ட காலமாக எழுத்துப் பயிற்சி செய்து ஓர் இலக்கியப் படைப்பாளியாகப் பெயர் பெற்ற ஒருவரின் ஆகக் குறைந்தது ஒரு நூலையாவது படிக்காமல் தமது ஆரம்ப அரைகுறைப் பிரசவங்களை அவர்கள் முன் வைத்து அதை அங்கீகரிக்கச் சொல்வதும் பாராட்டை எதிர்பார்ப்பதும் எங்ஙனம் நியாயமாகும்?

முகப்புத்தகக் கணக்கில் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட தகவல்களுக்கென்று ஒரு பக்கம் உண்டு. அங்கே விருப்பமானால் நமக்குப் பிடித்த நூல்களை அல்லது எழுத்தாளர்களைப் பற்றியும் கவர்ந்த பிரபலமான நபர்களைப் பற்றியும் குறிப்பிட முடியும். மூத்த எழுத்தாளர்கள் மீது குற்றம் சுமத்தும் நபர்களின் தனிப்பட்ட தகவல் பக்கங்களில் ஏ.ஆர். ரகுமான் இருக்கிறார். இளையராஜா இருக்கிறார். பாடகிகள் மெடோனா, ஷாகிறா, பிரிட்னி, ஷரேயா கோஷல் என்று பலர் இருக்கிறார்கள். உப்புக்குக் கூட பிடித்த ஓர் எழுத்தாளர் பெயர் கிடையாது. பிடித்த ஓர் நூலின் பெயர் கிடையாது. அதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் எழுத்தாளர்கள் இளந்தலைமுறையினரால் கொண்டாடத் தகுந்தவர்களாக இல்லை என்பதுதான். நூல்கள் எவையும் கொண்டாடத் தகுந்தவை இல்லை என்பதைத்தான். முகப்புத்தகத்தில் எனது தனிப்பட்ட விபரப் பக்கத்துக்கு நீங்கள் சென்றால் எனக்குப் பிடித்த எழுத்தாளர் பட்டியலில் சிலர் இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.

இலக்கிய இளந் தலைமுறையினர் எப்படிச் செயல்படுகின்றனர், அவர்கள் எண்ணமும் நோக்கமும் என்னவாக இருக்கிறது என்பதை நமது மரியாதைக்குரிய மூத்த எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்கள் ஞானம் 142வது இதழில் எழுதியுள்ள ஒரு சிறு குறிப்பின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். அவர் சொல்கிறார்...

“.....இன்னும் இரண்டு சம்பவங்கள் பற்றி சொல்வது, இளந்தலைமுறை எழுத்தாளர்களின், வெற்றுத்தனமான, தம்மை முதன்மைப்படுத்த எதையும் செய்வர் என்பதற்கு நல்ல உதாரணங்களாக அமையும் என நினைக்கிறேன். 2007 காலப் பகுதியில் ஒரு பெண் கவிஞர் என்னை அடிக்கடி வந்து சந்தித்தார். தனது கவிதைகளைத் தந்து எனதுஅபிப்பிராயத்தை அறிய முற்பட்டார். நான் அவருக்கு இரண்டொரு கவிதை நூல்களைக் கொடுத்ததோடு மேலும் அவரை பல நல்ல கவிதை நூல்களைப் படித்து தன்னை வளப்படுத்திக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்பினேன். ஒரு தொகுப்பு வெளியிடப்போவதாகவும் அதற்கொரு முன்னுரை தருமாறும் வற்புறுத்தினார். இப்போது தொகுப்பை வெளியிடாது முதிர்ச்சியான கவிதைகளை எழுதும் நிலைக்கு உயர்ந்ததற்குப் பின்னர் தொகுதியை வெளியிடும்படி சொன்னேன். ஆனால் அவர் கேட்பதாய் இல்லை. தம் போன்ற இளந் தலைமுறையினர்க்கு மூத்த எழுத்தாளர்கள் உதவ வேண்டும் என்ற பாணியில் அவர் கதை இருந்தது.

எனவே அவருக்கொரு சிறிய, ஆனால் அர்த்தமுள்ள முன்னுரையை எழுதிக் கொடுத்தேன். இதன் பின்னர் ஒரு நாள் மேற்படி கவிதைத் தொகுப்பு எனது ஆக்கங்களை வெளியிடும் வுநுஊர்Nழு PசுஐNவு அலுவலகத்தில் அநாதரவாகக் கிடக்கக் கண்டேன். அதைத்தட்டிப் பார்த்தபோது என்னுடைய முன்னுரைக்கு பதிலாக ஓட்டமாவடி அரபாத்தின் முன்னுரை இருந்தது. இதற்குச் சிறிது காலத்திற்கு பின்னர் இதே கவிதைத் தொகுப்பு நீர்வைப் பொன்னையன் அவர்களின் அனுசரணையால் வெளிவந்தது. இப்போது அதன் முன்னுரையாக இருந்தது அரபாத்தினது அல்ல, கவிஞர் இக்பாலுடையதாகும்!

இன்னொரு இளங்கவிஞர் என்னை இரண்டொரு முறை சந்தி;த்து, தனது கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை தருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க நானும் கொடுத்தேன். அவரின் தொகுப்பு வெளிவந்தபோது அதில் என்னுடைய முன்னுரைக்குப் பதிலாக கவிஞரும் பேராசிரியருமான ஒருவருடைய முன்னுரை இருந்தது! பின்னர் ஒரு நாள் எதிர்பாராத விதமாக மேற்படி இளங்கவிஞரைச் சந்தித்த போது “உங்களுடைய முன்னுரை மிக அருமையாக இருந்தது சேர். ஆனால் பேராசிரியருடைய முன்னுரையைத் தொகுப்புக்கு போட வேண்டியதாயிற்று” என்றார் அசடுவழிய. இதுதான் இன்றைய இலக்கியத் தற்குறிகளான ஒருசில இளந் தலைமுறை எழுத்தாளர்களின் “இலக்கியப் போக்காக” உள்ளது. நாம் இவர்களின் இந்த இலக்கியப் பரிசோதனைகளின் களமாக இல்லாது பார்த்துக்கொண்டால் சரி.”

இது மு.பொ. அவர்களது அனுபவம். அணிந்துரை தமக்குப் பிடித்தமானதாக வரும் வரை இலக்கியப் புதிய தலைமுறையில் சிலர் ஆளை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். மு.பொவையும் ஓட்டமாவடி அறபாத்தையும் அப்பெண் ஒரு வகையில் அவமானப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை ஏ.இக்பால் அவர்களது அணிந்துரையும் தனக்குப் பிடிக்கவில்லை என்று அவர் கருதியிருந்தால் அவரையும் அப்பெண் அவமானப்படுத்தியிருக்கக் கூடும். இதே போன்ற அனுபவங்கள் பல மூத்த படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கின்றன. இளம் படைப்பாளிகளுடனான பல கசந்த அனுபவங்கள் ஒரு பெரும் கட்டுரைக்குரிய அளவில் எனக்கும் உண்டு. அவற்றை இந்த இடத்தில் சொன்னால் விரிவாகி விடும். ஆனாலும் ஒரு நாள் அவற்றை எழுதிப் பதிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

பொதுவாகவே இலக்கிய உலகில் மூப்பும் இளமையும் வயது அடிப்படை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு புத்தகம் கூட வெளியிடாத மூத்த படைப்பாளிகள் நம்மிடையே இருக்கிறார்கள். நான்கைந்து நூல்களை வெளியிட்ட இளந்தலைமுறைப் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். எனது அன்புக்குரிய நண்பர் நல்ல கவிஞரும் நாவலாசிரியருமான என்.ஏ.தீரன் என்று அறியப்பட்ட ஆர்.எம்.நௌஷாத் அவர்கள் “வளர்ந்து வரும் மூத்த எழுத்தாளர்” என்ற ஒரு வகையினரையும் தமாசாகக் குறிப்பிடுவார். இந்த நபர்கள் வயதால் முதிர்ந்தாலும் தமது எழுத்தால் முதிர்வை எய்தாதவர்கள். இருந்த போதும் ஒரு பெரும் எழுத்தாளனுக்குரிய பெருமையோடும் பகட்டோடும் அவர்கள் உலா வருவதைப் பார்த்து இரண்டு அல்லது மூன்று நூல்களை வெளியிட்ட இளந் தலைமுறைப் படைப்பாளிக்குப் பற்றிக் கொண்டு வருகிறது. அவர் வெளியிட்ட இரண்டு அல்லது மூன்று நூல்களும் நூல்களாக வெளியிடத் தகுந்தவையா இல்லையா என்பது வேறு விடயம்.

இலக்கிய உலகு விசித்திரமானது. நேர்மையாக இதற்குள் வாழ்வதற்கும் தாக்குப் பிடிப்பதற்கும் அசாத்தியத் துணிச்சல் தேவைப்படுகிறது. ஒரேயொரு புத்தகத்தை ஓசியில் வெளியிட்டு விட்டு உலகத்தில் எழுதப்படும் தமிழ்க் கவிதைகள் யாவும் அர்த்தமற்றவை, என்னுடைய கவிதைகள் மட்டுமே சிறந்த கவிதைகள், அல்லது தான் சிபார்சு செய்பவை மட்டுமே சிறந்த கவிதைகள் என்று உளறித் திரியும் அரைக் கிறுக்குகள், எங்கு யார் ஒரு விருது கொடுத்தாலும் தனக்குத் தரவில்லை என்றால் கொடுக்கப்பட்டவன் தகுதியற்றவன் என்றும் கொடுத்தவன் பைத்தியக்காரன் என்றும் எழுதும் கலைப் பதர்கள், இலக்கியப் போட்டிகள் நடத்தும் அமைப்புகளுக்குள் நுழைந்து தனக்கு வேண்டப்பட்டவனுக்குப் பரிசு கொடுக்கவும் வேண்டப்படாதவனின் புத்தகம் வந்தால் ‘கெற்றகரியை” மாற்றி அறிவிக்கவும் சிபார்சு செய்யும் அண்டகிறவுண்ட் ஆசாமிகள், எங்கு ஒரு விழா நடந்தாலும் தனக்கும் ஒரு சால்வை போர்த்தமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஒரு சால்வையைத் தானே வாங்கிக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு அதைப் போர்த்துவிக்கவும் விழாக்குழுவுக்குள் நுழைந்து சிபார்சு செய்யவும் ஆள் தேடி அலையும் அண்டங்காக்கைகள், சமகாலத்து அல்லது தனக்குப் பிறகு தோன்றிய படைப்பாளி ஒருவரின் படைப்புப் பற்றி விதந்துரைக்கப்படும் போது அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இன்றி அப்படைப்பையும் படைப்பாளியையும் எள்ளி நகையாடிக் குறைத்துப் பேசும் கோமாளிகள்... என்று பலநூறு வேடிக்கை மனிதர்கள் நிறைந்த உலகம் இது.


இந்த விசித்திர உலகத்துக்குள் நுழையும் ஒரு நேர்மையான இளம் படைப்பாளி பல முறைகளில் பல்வேறு அதிர்ச்சிக்குள்ளாகிறான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்களை நோண்டிச் செல்வது போல் சில விடயங்கள் நடப்பதைக் கண்டு விக்கித்துப் போகிறான். இவ்வாறான ஒரு பயங்கரவாதத்தைக் கண்டு பயந்து ஓடிப் போய் ஒதுங்கி நின்று எழுதும் நம்பிக்கை தரும் இளைஞர்களை நான் அறிவேன்.
தாம் இடுகிற எல்லாப் பதிகளும் இலக்கியத் தரம் வாய்ந்தவை, கவிதை எனத் தாம் எழுதுகிற வசனங்கள் அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்ற எண்ணத்துடன் இளைய தலைமுறை தம்மை முன் நகர்த்தி ஓர் அற்பப் பிரபல்யம் பெற நினைக்கும் எல்லா உள்ளோட்டச் செயற்பாடுகளும் அவர்களை வேடிக்கை மனிதர் குழாத்துள் கொண்டு சேர்க்குமே தவிர, சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் கடைசி இடத்துக்காவது வந்து சேர்வதற்கு இடமளிக்காது.


இலக்கிய உலகில் எழுத்துக்களால் அறியப்படுபவர்கள், பெயர்கள் கொண்டு அறியப்படுபவர்கள் என இரண்டு வகையான எழுத்தாளர்கள் உள்ளனர் என்று கவிஞர் அல் அஸ_மத் குறிப்பிடுவார். இவர்களில் பெயர்கள் கொண்டு அறியப்படுபவர்கள் யாரெனில் உப்பும் புளிப்பும் இல்லாத சமையலைப் பெருமளவில் சமைப்பவர்கள். பெயர் வந்தால் போதும் என்ற நோக்குடன் எல்லாப் பத்திரிகைகளிலும் எதையாவது தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள். எந்தவொரு படைப்பாளி தனது படைப்பைக் கொண்டு பேசப்படுகிறானோ அவனே மிகச் சிறந்த படைப்பாளியாவான். அவனால் மட்டுமே காலத்தை வென்று வாழும் பாக்கியத்தைப் பெற முடியும். படைப்புக்களைக் கொண்டு பார்ப்போமானால் நமது கடந்த காலச் சிறந்த எழுத்தாளர்கள் யார் எவர் என்பது புரிய வரும். யார், எவர் பம்மாத்துக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வரும்.

இதைப் புரிந்து கொள்ளாத வரை, உணர்ந்து கொள்ளாதவரை ஆயிரம் பொன்னாடைகளைப் போர்த்திக் கொண்ட போதும் அண்டர் கிரவுண்டில் ஓடியாடி விருதுகளைப் பெற்று ஆயிரம் புகைப்படங்களை எடுத்துப் பிரசுரித்த போதும் தனக்குப் பொருத்தமான, தன்னைப் பாராட்டித் திகட்டுமளவு அணிந்துரைகளை எழுதச் செய்து நூல்களை வெளியிட்ட போதும் அவர்களால் ஒரு போதும் வாசகர் நெஞ்சங்களை அடையவும் முடியாது. காலத்தை வென்று வாழவும் முடியாது.

இன்று வெளியாகும் நூல் முகப்புத்தகத்தில் உருவானது. எனவே புதிய தலைமுறையும் அது முகப்புத்தகத்தில் நடத்தும் இலக்கிய விளையாட்டுக்களும் பற்றியதாக என் உரை அமைந்திருந்தது. அப்படியாயின் முகப்புத்தகத்தில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் இல்லையா என்ற ஒரு கேள்வி எழுவது நியாயமானது.

இருக்கிறார்கள் என்பதுதான் எனது பதில். நம்பிக்கை தரும் பலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று வெளியிடப்படும் ‘ஒற்றையடிப் பாதை’ நூலின் ஆசிரியர் பஸ்லி ஹமீத்.

பஸ்லி ஹமீதுக்கு நான் சொல்லி வைக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது.

எல்லா ஒற்றையடிப் பாதைகளும் பத்து அடிப் பாதையியோ இருபது அடிப்பாதையிவோ எந்நேரமும் இருவழிப் போக்குவரத்து நடக்கும் நாற்பது அடிப் பாதையிலோதான் சென்று சேர்கின்றன. அடுத்த முறை அவரை நான் ஒற்றையடிப் பாதையில் சந்திக்காமல் நான் மேலே குறிப்பிட்ட ஏனைய மூன்று பாதைகளில் ஒன்றில் சந்திக்கவே ஆசைப்படுகிறேன்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

AH said...

மிக அருமை.... உண்மையில் இணையத்தில் இலக்கியம் மற்றும் எலக்கியம் பற்றிய உங்கள் பதிவு நன்றாக உள்ளது.

Shaifa Begum said...

எனக்கும் மிகப் பிடித்த படைபாளிகளுள் Fazly Hameed அவர்களும் ஒருவர்...
எதிர்பாராத அளவில் சிந்தித்து..அற்புதமாக ,நான்கு வரிகளில் பல விஷயங்களைச் சொல்வார்.
.ஆர்பாட்டேம் இல்லாமல் தன பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த படைப்பாளியின் பயணம் தொடர வாழ்த்துக்கள்
.
தவிர , இலக்கிய உலகின் நடைமுறைச் சிக்கல்களையும் ,குறைப் பிரசவ இலக்கிய தாரர்கள் கையாழும் சில குறுக்கு வழிகளையும் சேர் அழகாக சொன்னார்....மட்டுமல்லாமல் ,
நாம் பார்த்து அலுத்துக் கொள்ளும் சில விடயங்களை நாசூக்காக சொல்லி விட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..

”ஒரு படைப்பை, ஒரு பதிவை நான் இட்டிருக்கும் போது அதற்கு மேலால் எனது பக்கத்தில் இன்னொருவர் தனது அரை அவியல் பதிவை எனது அனுமதியின்றி இணைப்பதானது வேறொருவர் எனது முகத்தில் பசையைப் பூசித் தனது போஸ்டரை ஒட்டிவிட்டுப் போவதற்கு ஒப்பானது.”

Unknown said...

அருமையாகச் சொன்னீர்கள்,யாத்ரா நேற்றுக்கரம் கிட்டியது.வித்தியாசமாக இருந்தது.

Lareena said...

ஒரு நல்ல, பயனுடைய பதிவு.

இந்தக் கார(சார)மான பதிவைப் பார்த்துவிட்டு எத்தனை பேருக்குப் புரையேறிக்கொண்டதோ! :) (இல்லாவிட்டால் இதுவும் 'செவிடன் காதில் ஊதிய சங்'காயிற்றோ, யாரறிவார்!!)

இளங்கவிஞர், சகோ. ஃபஸ்லி ஹமீதுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! அவருடைய நூல், கண்டியிலோ கெலி ஒயாவிலோ கிடைக்கப்பெறுமானால், நாமும் வாங்கிப் படித்து இன்புறலாம்.

முகநூலில் அவரின் மணிக் கவிதைகளைப் படித்திருப்பினும், தனித் தொகுதியாய் வாசிப்பதில் சுவை அதிகம்தான் அல்லவா?

முகநூலின் இலக்கிய அரசியலை உள்ளது உள்ளபடி "நச்"சென்று பதிவுசெய்துள்ளீர்கள்! அதிலும், அந்த "முகப் போஸ்டர்" உவமை சூப்பர்!

இந்தப் பதிவில் உள்ள கருத்துக்களில் நாம் படித்துப் பின்பற்றத்தக்க பல அறிவுரைகளும் உள்ளதை உணர்கின்றேன், அல்லாஹ் உங்களுக்கு அருள்செய்வானாக!

நம் மரியாதைக்குரிய கவிஞர் ஏ.இக்பால் அவர்கள், //“எங்களது காலம் முடிந்து விட்டது. இனிமேல் வளரும் தலைமுறையை நீங்கள்தான் வழி நடத்த வேண்டும்.”// என்று சொன்னதை நானும் வழிமொழிகின்றேன், Sir.

இலக்கிய உலகில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் ஆளுமையும் மிக்க உங்களைப் போன்றோரின் வழிகாட்டல் இளைய சமுதாயத்துக்குக் கிடைக்கக்கூடிய முதுசொம் என்று கருதுகின்றேன்.

எனவே, முகநூல் இலக்கிய கலாசார வகையறாவுக்குள் நீங்கள் சுட்டிக்காட்டிய அரைவேக்காட்டுத்தனங்கள் அந்த வழிகாட்டல் பணியில் இருந்து உங்களைத் திசைதிருப்பி விடாதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தொடரட்டும் உங்கள் பணி இனிதே! நல்வாழ்த்துக்கள்! :)