Thursday, May 16, 2019

அலையழிச்சாட்டியம் - சிறுகதை

    அலையழிச்சாட்டியம்


- அல் அஸூமத் -


  சுவர் மீது கடமை நோன்பு கிடக்கும் மணிக்கூடு, 'நான் ஏழாகி விட்டேன்' என்று என்னை அடித்தெழுப்பியது.

    குடல் மூச்சுடன் எழுந்து கட்டில்மீது இருந்த போது, மனைவி தேனீருடன் அண்மி நின்றாள்.

    'போய்க்  கொலைக்காட்சியை - அட, தொலைக் காட்சியைப்போடு' என்று பணித்தது காட்சியவா.

    ஓர் ஆங்கிலப் பாடலின் முன்னிசைக் களவில், சுடலைப் பேய்களின் அச்சுறுத்தும் குரலில், 'ஷேடம், ஷீடம், ஷாடம், ஷூடம், ஷேடம், ஷீடம், ஷாடம்,ஷூடம்' என்று வையத்தை உருட்டி 'விஷேடம் டீஈஈஈஈஈஈஈஈஈஈ வீஈஈஈஈஈஈஈ' என்ற இழுப்போடு தமிள் நிகழ்ச்சி தொடங்கியது.

    ஓர் ஓலை விரிய, 'இன்ரு நமதே' எனப் பெண் குரல் அறையப் பொழுதறிவித்தல் நடந்து முடிய, அதே பெண் குரல் ஓர் அரிய அறிவுரையையும் திணித்தது.

    இன்னொரு முறையும் 'ஷேடம், ஷீடம்'  உருண்ட பிறகு, 'நியூஸ்ஸெய்தி' இடம் பெற்றது.

    'வன்கம்! முத்லில் தலிப்பு செய்திகள்,' என்றவாறு வேறொரு பெண்மணி எழினியில் முறைக்க, 'சி.பி.ம.நரசிம்ம ராவி' எனப் பெயர் காட்டப்பட்டது.

    தலிப்பு செய்திகள் வேறொரு பெண் குரலில் காட்சிகளுடன் தோன்றின:-

    'தலிப்பு செய்திஹால். மென்னாரிலிருந்த கெல்முனைக்கு கெருவாடு கொண்டு செல்லும் எனுமதியை எரசாங்கம் தடி செய்திருப்பதாக ஸ்வாதாரமிச்சர் அரிவித்தார்.'

    தெலுங்குப் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இடை வெட்டி, 'அக்கிய தேஸ்ய கச்சிப் பிரைநிய்கல் வவனியா பணயம் - பயணம்!' என்றார்.

    'நிலையத்தை மாற்றித் தொலையடா!' என்று சீறியது எனது தமிழ்.

    'கட்டுப்பெட்டிச் சனல்' பிடிபட்டது.

    '.... மதர்லேண்டில் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நெதர்லேண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, நம்நாட்டு அரசாங்கக் கட்சியே பெரும் பான்மை பெற்றிருப்பதால், நெதர்லேண்டுக்கே வந்து ஆட்சி அமைக்கும் படி அந்நாட்டு அரசாங்கம் வேண்டியிருப்பதாக அறிய வருகிறது. உலகிலேயே அதிக மகிழ்ச்சி யுடன் சிறுபான்மையினர் வாழும் நாடு இலங்கைதான் என்று :பிரிட்டிஷமேரிக்க ஜனாதிபதி :புஷ்பிளேயர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கிறார். இலங்கையில் மொழிப் பிரச்சினையோ இனப்பிரச்சினையோ பயங்கர வாதப் பிரச்சினையோ இல்லை என்றும், இங்கே உள்ள தெல்லாம் வட - கிழ - தென் பிரச்சினையே என்றும், இந்தத் திசைப் பிரச்சினையை ஊட்டி வளர்க்கும் 'நோவே'ப் பிரதி நிதிகளை உலகத்தை விட்டே துரத்த வேண்டும் என்றும், சகல உரிமைக் கட்சியும் கொள்கை விடுதலைக் கட்சியும் கூட்டறிக்கை விட்டிருக்கின்றன - மன்னிக்கவும், விட்டிருக்கிறது.
  
    'என்ன தலையிடியா?' என்று நகைத்தது உள்ளுணர்வு. 'வானொலியிடம் புகலடைந்து பார்!' என்றும் அறிவுறுத்தியது.
  
    காட்சிக் கருவியின் எரிச்சலால், 'விஷேடம் எஃபெம்' சிறிதே வன்மையோடு திறந்து கொண்டது. 'கெடுகுறிமணி'யின் கொலைக் குரல் வெடித்ததோடு, அடுத்த அறையில் உறங்கிக் கிடந்த எங்களின் குழந்தை மகள் அச்சத்தோடு வீறிட்டாள்!

    'ஐயோ புள்ள.....' என்று நிலைகுலைந்து ஓடிய மனைவியோடு நானும் ஓடினேன்.

    அழமுடியாது மூச்சடைக்க நடுங்கிக் கொண்டு கிடந்த செல்வத்தை வாரியெடுத்த அவள், ..தங்ங்ங்கம்... தங்ங்ங்கம்... இல்லடா... ராஜா... ம், ம், ம்ம்ம்...' என்றெல்லாம் தோளில் கிடத்தி முதுகில் தட்டி ஆறுதற் படுத்தினாள்.

    'அந்த எழவு சனியன் ரேடியோவ நிப்பாட்டித் தொலைங்களேன்பா!' என்று கெடுகுறி மணியை வெல்லும் பேய்க்குரலில் மனைவி என்மீது பாய்ந்தாள்!

    அந்தப் பாய்ச்சலை முன்னறியாதிருந்த நிலையில் நான் போய் அந்த இழவுமணியனைக் குறைத்த பிறகு இவளுடைய வசவு இன்னும்  நன்றாக என்னை எரித்தது:-

    'மனுசங்க மாதிரியாப் பேசுறானுங்க! வெசம் புடிச்சிப் போயில்லியா அலறிக்கிட்டுச் சாஹ்றானுங்க.... ...ச்சீ!...  .....அம்ம்ம்மா... அம்ம்ம்மா, இல்லடா தங்கம்| ஒங்கள ஒண்ணுமே சொல்லல ராஜாத்தி!... புள்ள பயந்து கியந்து நோய்கீய் புடிச்சிக்கிட்டா இவிய்ங்களா வந்து பாப்பாய்ங்க.. அஞ்சே அஞ்சி பாட்ட வச்சிப் போட்டுக் கிட்டு நாள் பூரா அஞ்சடிச்சிக்கிட்டுக் கிடக்கிறானுங்க| என்னத்தையோ அடச்சிக்கிட்டு அவனுங்க கத்துறத வீடான வீட்டில போட வேணாம்னா இந்தாளு கேக்கவா செய்யிறது? காலங் காத்தாலேயே கருமாதி வீடுமாதிரி!...'
        நாளேடுகளில் செய்திகளை மேலெழுந்தவாரியாகவாவது அறியலாம் என்றுதான் வானொலியை மூடாமல் இவளது வாயையும் மூடமுடியாமல் நிலத்தைப் போலிருந்தேன். கெடுகுறிக் கத்தல் நின்றதோடு வழவழத்தார் நாளேடுகளோடு வந்தார்:-

    'வணகம்!... மீண்டும் ஒரு ... அதாவது இன்றைய இனிய நாளுக்காக... உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!... ' என்று தொடங்கினார் உமிழ்நீர் வழவழத்தார். 'அதாவது இப்போது பத்திரிகைச் செய்திகள் இடம்பெறுகிறது. இன்ரு - அதாவது முப்பத்தி ஐந்து அதாவது முப்பது -ஐந்து - இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டாம் ஆகிய இன்ரு வெளிவந்த... பத்திரிகைகளில் ... அதாவது நாளேடுகளின் முக்கிய அதாவது பிரமாத அதாவது பிரதான செய்திகளை உங்களுக்கு... தர... தயாராகின்றோம். அதாவது நீங்கள்... வீட்டிலிருந்தபடியே இன்ரும் பத்திரிகை கேட்கலாம்! இன்ரைய பார்வைக்காக... ஏராளமான நாளேடுகள்... அதாவது பத்திரிகைகள் வந்திருக்கிறது. வீரகரணம், தினகரணம், கரணக்குரல், கரணச்சுடர் ஆகிய நான்கு பத்திரிகைகள் மட்டுமே இன்ரு எமக்கு... கிடைத்திருக்கிறது. முதலாவதாக வீரகரணம் பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்;. அந்த வகையில், இதன் முக்கிய - பிரதான - தலைப்பு.... செய்தியாக, ஒரு படைவீரர் ஒருவரின் ஒரு துப்பாக்கி ஒன்ரு.... தானாகவே வெடித்ததில் அதாவது தற்செயலாக வெடித்ததில், முப்பத்தி இரண்டு பேர் மரணம்.... நாப்பத்தி ஐந்து பேர் படு...காயம் என்ரு ஒரு முக்கிய தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. அதைப் போலவே அரிசி விலை... பன்னிரண்டு மடங்கு குறைந்திருப்பதாகவும் எரிபொருள் அதாவது பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றின் விலை பதினேழு மடங்கு கூடியிருப்பதாகவும் ஒரு முக்கிய செய்தி - பிரதான செய்தி பெட்டி கட்டி வந்திருப்பதாக தெரிகிறது.... இன்னும் அதைப் போலவே, ....ம்.... அதைப்போலவே, பிரபல மந்திரி அதாவது பிரதம் மந்திரி சவ்தி அரேபியா வுக்காக ஒரு... ஒரு உள்நாட்டுப் பயணத்தை...  அதாவது வெளிநாட்டு விஜயத்தை... கடைப்பிடித்திருப்பதாகவும் ஒரு முக்காத அதாவது முக்கியமல்லாத செய்தி இடம் பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. உபதலைப்பில் அதாவது தலைப்புக்கு... கீளே, சிறிய எளுத்தில், 'கைலஞ்சம் அதாவது கைலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பிடிப்பதற்காக.... கணனி வெடி அதாவது கன்னி வெடி வாங்குவதற்காக' என்றும் வந்திருக்கிறது. அதைப் போலவே, இம்முறை விசகம் அதாவது வீசாகம் பெருநாளை அதாவது பண்டிகையை முன்னிட்டு... நாட்டின் இலட்சக்கணக்கான பகுதிகளிலிருந்தும் அதாவது பல பகுதிகளிலிருந்தும் இலட்சக் கணக்கான மக்கள் - பொது மக்கள் படையெடுத்து அதாவது படைதிரண்டு வருவதாகவும் அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள்... பலப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி ஒன்ரு பிரசவிக்கப்பட்டு அதாவது பிரசுரிக்கப்பட்டிருப்பதாக... தெரிகிறது. அதைப்போலவே, சிறப்பு 'ளூனா', கொளும்பு எனும் வாக்கியத்தில் அதாவது சொல்லில் இருப்பதால், கொளும்பு நகரமானது, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்தே தமிளர்களின் வதிவிடமாக இருந்ததென்ரும் ஒரு தமிளாராய்ச்சி தெரிவிப்பதாக ஒரு முக்கிய செய்தி ஒன்றும் கீளே வந்திருக்கிறது. ஒரு விளம்பரம் ஒன்ரின் பிறகு அடுத்த செய்தியை பார்ப்போம்.'

    வானொலியை மூவிட்டு கழிப்பறைக்குப் போய் வந்தேன். வந்த பிறகு, வானொலியைத் திறந்து வேறொரு நிலையத்தைத் தேர்ந்தேன்.

    'ஈஈஈது ஊங்ங்ங்கள் அடக்க்க்க முடியாத :டார்ளிங் தமிள் ஏஃபேஏஏஏம்!' என்று கழுதித்தது ஒரு வன்குரல். '.....வணக்க்கம்! அதாவதிபொதுங்கள்கொருபூதிய.... பூதிய  தமிள் -  பாடலை - தருவதன்... மூலம் - எங்கநியள்ச்சி யளை யாரபிக்கிறோம்... இனிமேலிதேபாடலைமணித்... யாலதுகைந்துமுறை... யாவதுநீங்ளேட்டுமகீஈஈஈலவும்!... இன்ருமாலைகுளிபாடல் வெறுகதகபாளைய்ய்யபாடலா கியிடும்! இதன் பிறகுவே - ரெவருமிதைபு - தீயபடலென்ரு  ...சொந்தங்கொண் - டாடமூ - டீயாது! அதபாடலெழுது களை கவிபேர்சர் வீரவாளியறியதாக சொலபடுகிறது - தாலியறுவெலும - ஹோதைமானதி - மரய்யோன்னிய திலிருந்து அதாவதிதை நேயர்களுகாக நாங்கதான்மு தன்..முதலாக தருஹ்றோம்! இதோந்தபாடல்பாடியிர் பவர்ர்ர் ஆஆஆகுடல்நாதனிசைய்ய்ய் தகர - டப்பன்! ஈஈஈதோ கேட்டாருங்கள்ள்ள்!'

    'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்! -         இந்த
    நாறத்தீனி வயித்துக்குள்ளே கொண்டாட்டம்!...'

    'என்னை ஏன் கடிக்கிறாய்?' என்று சினந்தன என்னால் கடிக்கப்பட்ட எனது பற்கள். 'வேண்டுமானால் வேறொரு நிலையத்தை நாடிப்பார்!'

    ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூதானே இனிப்பு என்று மறுபடியும் விஷேடம் எஃபெம்!

    ஒரு திறனாய்வு தொடங்கியது. ஒரு சொல்லில் மறுமொழி தரக் கூடாது. அம்மறுமொழியில் பிற மொழிச் சொல்லே வரக் கூடாது என்று, பிறமொழிச் சொற்களா லேயே திறனாய்வு நெறிகளை விளக்கியது பெண்குரல்.

    கொல்லைப்பட்டி அழகேசு தொலையுரையாடியில் முந்திக் கொண்டார்.

    'எங்கள் அளகேசு வந்து விட்டீர்களா?'

    'ஹீஹீ... ஹீ... ஆமாக்கா! வணக்கம்'

    'வணக்கம்! மாலைக்குள் எப்படியாவது ஏளெட்டு முறையாவது நீங்கள் எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு விடுவீர்கள், அப்படித்தானே?'

    'ஹி...ஹீ...ஹீ!'

    'ஞ்சரி! போட்டியை ஆரம்பிப்போமா, அளகேசு?'

    'சரிங்கக்கா!'

    'நீங்கள் என்ன தொளில் செய்கிறீர்கள், அளகேசு?'

    'வாகனம் ஓட்டுறேன்க்கா!'

    'ஞ்சரி. என்ன வாகனம் ஓட்டுகிறீர்கள்?'

    'வேன் ஒன்று வச்சிருக்கிறேன்க்கா!'

    'ஹோ... ஹோ.. ஹோ...! ...வேண் என்று பிறமொளிச் சொல்லைப் பாவித்து விட்டீர்கள்! நீங்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்!'

    'வேன், வான் - அப்புடீன்னுதானே தமில்ல சொல்றோம்,'

    'இல்லை! அது ஆங்கிலச் சொல்!'

    'அப்ப தமில்ல எப்புடீக்கா சொல்றது?'

    'ஏன் மோட்டார் ஊர்தி என்றிருக்கலாமே?'

    'பெண்டாட்டி உதைத்தாலும் உனக்கு நாணம், சூடு, உணர்ச்சி எதுவுமே கிடையாது, போ!' என்று இளித்தது எனது மூளை.

    மறுபடியும் :டார்லிங் தமிள் எஃபெம்மிடமே புகலடைந்தேன்.

    'எந்தவி - டயத்தையும் முந்தித்தருவதூங்கள் :டர்லிங் தமிள் எஃபேம் மட்டுமே. நாங்களே முதல் - வன்ன்ன்! இதோங்கள்கான அவசரசெய்தியறிகையிதன் தோப்பாசிரியர் நியூஸ்ஸ்ஸ் மாமா! சரிபார்- தவர் லூஸ்ஸ்ஸ் மாமா! வாசிபவர் முதலாவது பெணறிவிபாளினி ரேஸ்ஸ்ஸ் மாமீஈஈஈ!'

    'வணஹம்! டாடடடடடடட டுடுடுடுடுடுடு! டடடடடடடடடிடடி டிட்டிட்டி. கட கட கட குடு குடு குடு இடி யிடி யிடி யிடி யிடி. டொரலட்டு டொட்டு, டர்ர லர லர லர பர பர பர பர டமீக்கிடிம்மீடும்மீ டும்மு டும்மு டுமுக்கிடி!...'

    ஆண் அறிவிப்பாளரை வென்ற விரைவுப் பெருமையில் ரேஸ் மாமி வணஹத்தைக்கூட மறந்துபோய் ஓடிவிட்டார்.

    'ஓரு..... ஒரு.... ஒரு.... ' என்றவாறே ஓர் இழுபறிக் குரல் புதிதாக அறுக்கத் தொடங்கியது. '...அதி.. முக்கியமான... ஒரு... செய்தியை... உங்களுக்கு தர... இப்போது... நாங்கள்.... தய்யாராகிக்... கொண்டிருக்கிறோம்.... அதாவது.... இன்ரு... அதிகாலை.... அதாவது... குறிப்பாக ஏளு மணி.... அளவில்... கொளும்புவிலிருந்து... சற்று... தொலைவில்... அதாவது... கொளும்புக்கு அண்மையில்... ஒரு... அதாவது... ஒரு குண்டு வெடிப்பு.... வெடித்ததில்.... சுமார்... ஆறுபேர்... வரையில்.... கொல்லப்பட்ட தாக.... அதாவது மரணமடைந்ததாக.... தெரியவருகின்றது... இந்த வைபவத்தின்போது... அதாவது விபத்தின்போது... இன்னும் ஸ்தலத்திலேயே... எமது நிருபர்... இருக்கிறார்.... இப்போது அவர்... நேயர்களுக்காக... தேச... அதாவது... சேத... விபரம் பற்றி... நேயர்களுக்காக... தொலைபேசியில்... விபரங்களை... எடுத்துரைப்பார்... சிறிசேன?'

    செய்தியாளர் சிரிசேன அழகாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இனிய சிங்களத்தில் கூறி முடித்தார்.

    'அடடா, இவ்வளவு இனிமையான மொழியை பாரதி கேட்காமல் போய்விட்டானே!' என்று நொந்து கொண்டது எனது உள்ளுணர்வு.

    'ஸ்த்தூத்தி, சிறிசேன!... அதாவது... எமது... நிருபர்... சிறிசேன... கூறியதை... இப்போது... நேயர்களுக்காக... தமிளில்... தருகிறோம்... அதாவது... இன்ரு... காலை...'

    'மூஞ்சி கழுவல்லியாப்பா?' என்றாள் மனைவி.

    'இந்த நியூஸ் முடியட்டும்,' என்றேன்.

    'அதுதான் சிரிசேன அழகா சொல்லிட்டதேப்பா, வாங்க!'

    'இந்த... விபத்து... பற்றிய... ஒரு... ஒரு... கலந்துரையாடலை... இப்போது... நேயர்களுக்காக... நாம்... ஏற்பாடு... செய்துகொண்டு... இருக்கிறோம்... மேலதிக... தகவல்களுக்காக... அதாவது.... நேயர்கள்... ஏதாவது கேட்க... விரும்பினால்... கேட்பதற்காக.... எம்முடனேயே.... இருங்கள்... எமது தொலை பேசி.... இலக்கம்... ஆறாறாறி... ஏளேளெளி... அதுவரையில்... ஒரு... சுபர்பட.... பாடலை.... கேட்டு... மகிழுங்கள்...'

    'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்!....'
    புலன்கள் செத்துப்போன நிலையில் வானொலியை அடக்கிவிட்டுப் போய் முகம் கழுவி வந்து மேலுமொரு தேநீரோடு தொலைக் காட்சியை இயக்க, விஷேடம் டீவியில் நரசிம்மராவி இன்னுமே வன்கொலை செய்து கொண்டிருந்தார்.

    '...சுமர் அய்ந்தண்டுக் கலமாக நோய்வைப் பட்டிருந்த அவர், நேட்ரு முன்தினம் கொலிசெய்யப் பட்டதக புலிஸ்மாதிபர் கூர்னர். கொலியலிகள் கண்டிவிலும் மாத்தளைவிலும் ஒளிந்துள்ளதகவும் ஆரம்பகட்ட விசரணைகளும் பெச்சு வார்த்தைகளும் முடிவுட்ரதகவும், நீதி மன்ர நடிமுறிகள் பின்பட்ரப்படுவதகவும் அவர் மேலும் தெரிவித்தர்... இன்ரு நாடளுமன்ரத்தில் ஐக்கியேஸியக் கச்சி வெளிநடுப்பு செய்ததக எமது செய்தி நிருபர் தெரிவிக்கின்ரர். இதை அனித்து ஊடகங்களும் கண்டித்துள்ளது. நாடல் மன்ரம் எதிரரும் பதினௌhம் தீய்தி குடுமென்ரு சபைநகர் அறிவித்துள்ள பொதிலும், நாளை மர்தினம் பார்ளு மன்ரம் குடுமென்ரு சர்வச்சி மாநட்டில் அமிச்சர் குர்நார். மாஜனைக்கிய முண்ணி இதை சர்வேஸ்ஸமுகத்திற்கு அறிவித்துள்ளனர். ... கல்வி பொது தரதர சாதர்ணதர பரிச்சை நாளை அரம்பமாகின்ரது.... தென்னிந்திய ரமேஷ்வரத்தில் மெலூம் பல அஹ்திகள் முகமிட்டிருப்பதக தமிள்நட்டு செய்திகள் கூர்கின்ரது.'

    புதிதாக ஓர் ஆண் குரல் பின்னணியில் வந்தது:-