Saturday, January 18, 2020

சோலைக்கிளியின் 'கப்புத் தென்னை' - நாடகம்


    சோலைக்கிளி பற்றிக் கேட்டால் முதலாவது அவர் ஒரு அசல் கவிஞர், இரண்டாவதும் அவர் ஒரு அசல் கவிஞர், மூன்றாவதும் அவர் ஒரு அசல் கவிஞர் என்றுதான் என்னால் சொல்லத் தோன்றும். அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவருடைய பேச்சும்கூட நகைச்சுவை ததும்பும் கவிதைத்தனமானதாகவே இருக்கும்.

    நாலாவதாகவும் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல நாடக எழுத்தாளர் என்பேன். கவிதைகளாலேயே அவர் பெயர்பெற்று விட்ட காரணத்தால் அவருக்குள் இருந்த நாடகாசிரியன் பற்றி பெருமளவில் யாரும் கவனித்ததில்லை.

    எண்பதுகளின் பிற்கூறில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சோலைக்கிளியின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாடகங்களில் நானும் நடித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நாடகங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது ஒலிநாடாவில் அவர் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த 13 நாடகங்களை ஓர் இறுவட்டாக எனக்குத் தந்தார். அவற்றுள் சில நாடாவில் இருக்கும்போதே மீள மீள ஒலிக்க விடப்பட்டிருப்பதால் ஒலியளவு மாறியிருந்தன.

    இவரது நாடகங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்த காரணத்தால் அதைப் பெற்று இறுவட்டிலிருந்து கணினிக்கு மாற்றி வைத்திருக்கிறேன். சில போது இலக்கிய மஞ்சரிக்காகவும் அவரது நாடகங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்தாண்டிருக்கிறேன்.

    ஒரு நூலை வாசித்து அது குறித்து எழுதுவதை விட ஒலிப்பதிவைக் கேட்டுக் குறிப்பெடுத்து எழுதுவது சிரமமான காரியம். அதை ஒரே மூச்சில் செய்து முடித்து விட முடியாது. நிறைய நேரம் தேவைப்படும். பொறுமையும் அவகாசமும் தேவை. இருந்த போதும் மனதில் எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாடகமாக எழுதி முடித்துவிடும் தீர்மானத்துக்கு வந்தேன்.

    'கப்புத் தென்னை' என்று ஒரு நாடகம். பொதுவாக தென்னை ஒற்றையாக நெடிதுயர வளரும். அபூர்வமாக மற்றொரு கிளை விடும் தென்னைக்குக் கப்புத் தென்னை என்று பெயர். ஆசிரியராகக் கடமையாற்றும் போது ஐம்பதாயிரம் ரொக்கம், நான்கு ஏக்கர் காணி, வீட்டுடன் திருமணம் செய்யும் பாருக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதும் கார் ஒன்றை வாங்கி ஓடினால்தான் கௌரவம் என்று நினைக்கிறான். எனவே மாமனாரிடம் உள்ள மீதி நான்கு ஏக்கர் காணியையும் தனக்குத் தர வேண்டுமென்று மனைவிடம் தினமும் சண்டை பிடிக்கிறான். தனக்கு மேலும் மூன்று சகோதரிகள் இருந்தும் தன்னிடமிருந்த எட்டு ஏன்னர் காணியில் பாதியை மூத்த பிள்ளை என்று தனக்குத் தந்ததை அவள் எடுத்துச் சொல்லியும் அது தனது பிரச்சனை அல்ல என்று வாதிடுகிறான் பாருக்.

    இதே வேளை பாருக்கின் தந்தையும் தாயும் அவனது வேண்டுகோள் நியாயமானது என்று மகன் பக்கம் நின்று பேசுகிறார்கள். மாமனாருடன் நேரடிப் பேச்சு முற்றி வீட்டை விட்டு வெளியேறுகிறான் பாருக். விவாக ரத்துக்குப் பின்னர் பாருக் வசதி வாய்ப்பான ஓரிடத்தில் காரொன்றை சீதனமாகப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். அவனது மனைவியும் மறுமணம் செய்து கொள்கிறாள். பாருக்கின் பிள்ளையுடன் சேர்த்து புதியவன் அவளை நன்றாக வாழ வைக்கிறான்.

    பாருக்கின் நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்து பாருக்கையும் அவனது தந்தையாரையும் சந்தித்து விட்டு பாருக்கின் முதல் மனைவி, அவளது தந்தையார் ஆகியோரைச் சந்திக்கும் காட்சியில்தான் பாருக் ஒரு காருக்காக எடுத்தது தப்பான முடிவு என்பதை அவர்களே சொன்ன வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறான்.

    பாருக் மனைவியுடன் சண்டையிட்டுத் தன் வீட்டுக்கு வந்ததும் - அவனுடைய தந்தையிடம், 'என்ன.. மகன் கோவிச்சுக்கிட்டு வந்துட்டாராமே..' என்று மற்றவர்கள் கேட்பதைப் பற்றி மனைவியிடம் சொல்லும் போது, 'ஒரு சின்னப் பெரச்சின எண்டா ஊரானுக்கு என்ன சந்தோஷமா இருக்குடா வாப்பா..' என்கிற இடமாகட்டும் - பாருக்கின் தாயார் கணவனிடம் சம்பந்தி குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'மாப்புள கேட்டு வரக்குள்ள கருகின வாழப்பழத்தக் கொண்டாந்த குடும்பம்தானே அது..' என்று சொல்லும் இடமாகட்டும் - வெளிநாட்டிலிருந்து வந்த பாருக்கின் நண்பரிடம் தனது புதிய மருமகளைப் பற்றிச் சொல்லும் போது, 'அவ ஒரு ஊத்தக் கிடா.. தலைக்கி எண்ணெய் வெக்காளுமில்ல.. குளிக்காளுமில்ல..' என்று சொல்லுமிடமாகட்டும் நம்மையறியாமல் சிரிப்புப் பீறிடுகிறது. இதே மாதிரி சோலைக் கிளியின் கிண்டலான வசனங்கள் நாடகம் முழுக்க இடம்பெற்றுள்ளன.

'நான் பிழை செய்துட்டன்.. என்ட காசிலயாவது அவனுக்கு ஒரு காரை வாங்கி நான் குடுத்திருக்கணும். பொண்டாட்டியோட சண்ட புடிச்சிக்கிட்டு வந்தவனை ஏசி திருப்பி அனுப்பியிருக்கணும்' என்று பாருக்கின் தந்தை சொல்வதுடன் நாடகம் முடிவடைகிறது.

    இந்த நாடகத்தில் பாருக்கின் தந்தையாக மறைந்த கே.ஏ.ஜவாஹர் அவர்களும் தாயாக நூர்ஜஹான் மர்ஸூக் அவர்களும் மனைவியாக ஞெய்றஹீம் ஷஹீத் அவர்களும் பாருக்கின் மாமனாராக ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களும் நண்பனாக மஹ்தி ஹஸன் இப்றாஹீம் அவர்களும் நடித்துள்ளனர். பாருக் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தது நான்தான்.

    நாடகத்தின் தொடக்கக் காட்சியில் பாருக்கின் தந்தை இறைச்சிக் கறியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எச்.ஐ.எம். ஹூஸைன் பிச்சைக்கானாக வருவார். 'சனியனுகள்... சாப்பிடுற நேரம் பாத்துத்தான் பிச்சையெடுக்க வருவானுகள்' என்று அவர் சாப்பிட்டுக் கொண்டே கொம்புவதும் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சோறு கேட்பார். சோறு இல்லை என்றதும் 'எங்கேயோ இறைச்சிக் கறி வாசம் வருகிறது' என்று பிச்சைக்காரன் சொல்லுவதும் வெகு சுவாரஸ்யமாகத் தூக்கி விடுகிறது.

18.01.2020

Friday, January 17, 2020

மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் 'நிழலைத் தேடி'



மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'நிழலைத் தேடி'யை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த நூல் 2017ம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 'ஜலசமாதி' 2008 இல் வெளிவந்திருக்கிறது.

ஏ.எஸ். உபைத்துல்லாஹ் ஒரு நல்ல சிறுகதையாளர் என்று முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். 2016ல் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாடு சம்பந்தமான பிரதேசவாரியான எழுத்தாளர் சந்திப்பின் போது ஒரு மாலை வேளை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

திருமலை மாவட்டத்தின் இயற்கை அழகு, கடலும் ஆறும் அண்மிய நிலம், அப்பிரதேச ஊர்களின் கடந்த காலமும், நவீன மயப்படுதலும், அப்பிரதேச மக்களின் ஒற்றுமையான வாழ்க்கை, சுனாமி, இனப்பிரச்சனை ஏற்படுத்திய வடுக்கள், இடப்பெயர்வின் துயரம், மீள்குடியேற்றமற்றுச் சீரழியும் ஏழை - எளியவர்களது வாழ்க்கை, சிறிய வரலாற்றுக் குறிப்புகள், பிரித்தாளும் அரசியல் தந்திரங்கள், பிரதேச கல்வி என்றெல்லாம் நிறைய விடயங்களைத் தனது கதைகளுடே உபைத்துல்லாஹ் பேசுகிறார். திருமலையும் அதனுள்ளடங்கும் பிரதேசங்களும் நீர் வளம் நிரம்பியவை என்பதால் அவரது கதைகளில் கடல், ஆறு, கிணறு என்று நீர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

'தண்ணீர், தண்ணீர்' இத்தொகுதியின் முதலாவது கதை. குடும்பத்தில் வலது குறைந்த பிறந்த,  ஒரு பக்கம் காலை இழுத்துக் கோணி நடக்கும் மம்மறாயன் - முகம்மது இப்றாஹீம் -  நேர்மையாக வாழ வேண்டும் என்ற லட்சியமுடையவன்.  அக்காலத்தில்  வீடுகளில் உள்ள கிணற்று நீர் உவர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்தபடியால் மக்கள் குடிநீருக்கு அலைந்த போது தூரத்தே இருந்த நன்னீர் கிணறுகளில் நீர் பிடித்து வந்து வீடுவீடாகக் கொடுத்து அவர்கள் கொடுப்பதைப் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தான். குடங்களில் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு தள்ளு வண்டியை ஒரு நல்லவர் கொடுக்கிறார். ஏழ்மை நிறைந்த அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் குழாய் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது ஒரே வருமான வழியும் இழக்கப்பட்ட நிலையிலும் வலது குறைந்த மம்மறாயன் மனைவியிடம் சொல்கிறான்.. 'பாத்தும்மா யோசிக்காத... இந்த உலகத்துல தண்ணி யாவாரம் மட்டுந்தான் ஒரு தொழிலா? எத்தனையோ தொழில் இருக்கு.. நமக்குப் பொருத்தமான ஒன்றைத் தேடிக் கொள்ளுவம்..!'

'கொடி பறக்குது' என்ற கதை வெள்ளை மணல் அருகே இருக்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசல், அங்கு வருடா வருடம் விழாவாக நடக்கும் கந்தூரி, பெயர் தெரியாத நாற்பது முழ அவுலியா (இறைநேசர்) அடக்கஸ்தலம், அதனோடு இணைந்த 1815ல் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஆகியவற்றை ஜூனைதீன் என்ற முதியவர் நினைவு கூரும் கதை. இப்போது இந்த இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லி ஒரு பெருமூச்சுடன் முடிவடைகிறது.

நீண்ட நெடுங்காலமாக மூதூர், கிண்ணியா பிரதேசப் பயணத்தைத் தோணி மற்றும் மிதவை மூலம் கடந்த மக்கள் பாலங்கள் அமைக்கப்பட்டதும் அதில் ஒரு சுற்றுலாத் தலம் போல் போய் நின்று மகிழ்ச்சியனுபவித்ததையும் பாலங்கள் அமையுமுன் எப்படியெல்லாம் மக்கள் சிரமங்களை அனுபவித்தார்கள் என்பதையும் நினைவூட்டுகிறது 'நீலக் கடல் தாண்டி' என்ற கதை.

'ஓயாத அலைகள்' என்ற கதையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரதேசத்தின் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு தினத்தில் சென்று கற்பிக்கும் சேவையைச் செய்து கொண்டிருப்பதையும், சிறு வகுப்பு முதல் ஏ.எல் வரை நடக்கும் டியுஷன் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதையும் பேசுகிறது. பாடமற்ற வேளை வேறு ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை அதிபர் கோர, அதை மறுத்துப் பேசும் ஆசிரியர் ஒருவருக்கு உதவிக் கல்விப் பணிப்பாளராகத் தரமுயரும் கடிதம் வருவதோடு கதை முடிகிறது.

மிக அண்மைக் காலம் வரை அறபிகள் பள்ளிவாசல் கட்டித் திறப்பதற்காக வருவதும் அந்தப் பள்ளிகள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் வாழ்வதற்கு வீடுகள் இல்லாத நிலையில் வாழும் மீனவர்கள் பற்றியதுமான கதை 'ஏமாற்றம்.'  'ஊர் துறந்து' என்ற கதை புலிகளுக்கும் அரச படையினருக்கும் நடந்த ஷெல், மோட்டார் வீச்சில் மரித்தவர்களதும், ஊர் துறந்து அகதிகளாகச் சென்றவர்களதும் கதை. 'நிழலைத் தேடி' என்ற கதையும் இனப் பிரச்சனை காரணமாக ஊர் துறத்தலைத்தான் பேசுகிறது. ஆனால் மூவின மக்களும் எப்படித் தத்தம் தொழிலைச் செய்தபடி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதைப் பேசும் ஓர் அருமையான கதை இது.

'வாயில்லாப் பூச்சிகள்' வீடற்ற பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் நிராகரிக்கப்படுவதையும் 'வாழத்துடிப்பவர்கள்' என்ற கதை உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்பும் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதையும் பேசுகிறது.

'அம்மா என்றால் அன்பு' என்ற கதை பாடசாலையில் கொடுக்கும் கஞ்சியை வீட்டிலிருக்கும் தாயாருக்கு எடுத்துச் செல்லும் வறுமைப்பட்ட குடும்பச் சிறுமி பற்றியது.

 மூதூரின் நொக்ஸ் வீதிக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்பதை கப்பல் மாலுமியான நொக்ஸின் வருகை தந்ததை வைத்து உண்டாகியிருக்கிறது என்பதை ஒரு கதையிலும் மலை நாட்டில் இருந்த ஜேம்ஸ் என்ற ஒரு வெள்ளைக்காரன் பொழுது போக்குக்காக திருமலை வந்து அங்கேயிருந்த ஒரு பிரதேசத்தில் தெங்குத் தோட்டம் அமைத்ததையும் அதில் கூலிக்கு வேலை செய்தவர்களையும் கதைகளில் குறிப்பிடுகிறார். பொதுவாக எல்லாக் கதைகளிலும் சாதாரண மக்களின் வாழ்வியல் உபைத்துல்லாஹ்வினால் எடுத்துக் காட்டப்படுகிறது. தான் வாழும் பிரதேசம் பற்றிய அவருடைய ஆழமான அறிவு விதந்துரைக்கத்தக்கது.

Monday, January 13, 2020

கவிஞன் எப்படி இந்தக் காலத்தில்நிலா பார்ப்பான்?


கவிஞர் சோலைக்கிளி 

இந்தப்பிரதேசத்தின் முக்கியமான படைப்பாளி ஒருவரின் நிகழ்வில் சிறப்புரையாற்றுவதையிட்டுமகிழ்ச்சியடைகிறேன்.

சிறப்புரையாற்றுவது சந்தோசமான ஒரு விடயம்தான். வெளியீட்டுரை, விமர்சன உரை, நன்றி உரை, வரவேற்புரை, போன்று ஓர் எல்லைக்குள் நின்று பேசத்தேவையில்லை. காற்றுமாதிரி அங்கும் இங்கும் அலைந்து பூக்களைப் பொறுக்கிக் குவிக்க வேண்டிய ஒன்றுதான் சிறப்புரை. சிறப்புரை ஆற்றுகின்றவனும், அந்த உரையை நிகழ்த்தும்போது ஆனந்தப்படுவான். நான் ஆனந்தப்படவில்லை! இது ஆனந்தப்படுகின்ற ஒருநேரமில்லை.

விடிந்தால் என்ன நடக்குமோ என்று எழும்புகின்றோம். விஷக்காற்று வீசி நமது ஈரல்குலைகள் அழுகிப்போய் இருக்கின்றன. நமக்கு உள்ளிருக்கும் குயில் இப்போது பாடுவதை நிறுத்தியிருக்கிறது. நமது மனதின் புல்வெளி கருகிப்போனது. எப்படி சிறப்புறையாற்றலாம்? சிரித்த முகத்தோடுஎப்படி சபையில் பேசலாம்? எப்படி ஆனந்தம் அடையலாம்?

என் அன்புக்குரியவர்களே! அஸ்ரப் சிஹாப்தீன் முக்கியமான ஒரு படைப்பாளி. கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஒலிபரப்பு, ஒளிபரப்பு,  நிகழ்ச்சித் தயாரிப்பு என்று பல பக்கங்களைக் கொண்டவர். பல பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பதற்கு நீண்ட காலம் எடுப்பதைப் போல, பல பக்கங்களைக் கொண்ட ஒரு மனிதனைப் பற்றிப் பேசுவதற்கும்: அவகாசமும் ஆறுதலான சூழலும் அச்சமில்லாத நிலமையும்  நமக்கு வாய்க்க வேண்டும். இன்று இவைகள் நம்மத்தியில் உள்ளனவா? வெள்ளைக் காகிதத்தைக் கசக்கி எறிந்ததைப் போல விஷக்காற்று நம்மை கசக்கி எறிந்து விட்டதல்லவா?. நாம் குப்பையில் உருளுகின்ற கடதாசிகளைப் போல ஆகிவிட்டோம். நம்மை ஏறி மிதித்துக் கொண்டு கால்கள் நடக்கின்றன. கவிஞன் எப்படி இந்தக்  காலத்தில்நிலா பார்ப்பான்?. அழுகிய தோடம் பழம் போல நிலவு கண்ணீர் வடிக்கிறது. வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே! நான் எப்படி இங்கு சிறப்புரையாற்ற முடியும்? ஆனந்தப்பட முடியும்?

நான் மனமிழந்து போன மனிதனாக இருக்கிறேன். என் அன்றாட வாழ்க்கை கெட்டுவிட்டது. விடிந்தால் வாசலுக்கு வந்து விரிந்திருக்கும் மல்லிகைப் பூவை ரசித்தநான், இப்போது வெயிலேறிய பிறகுதான் வாசலுக்கு வருகிறேன். எதிலும் பிடிப்பற்றுப் போன கூதல் பிடித்த பூனையைப் போல வாசலை முகர்கிறேன். காலையில் மனைவி தரும் தேநீரின் ஆவிபறக்கும் போது இரவு ஏதோ ஒன்று பற்றி எரிந்திருக்கிறது என்ற எண்ணம்தான் வருகிறது. ஒருகிழவனைப் போல மனம் சதாவும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் சுவை குன்றிப் போன ஒரு காலமாக இது இருக்கிறது. பத்திரிக்கைகளைப் பிரித்தால் அனேகமாக எல்லாம் அபத்தமான,அச்சம் தரும் செய்திகளாக இருக்கின்றன. யாருடன் யார் கம்பி நீட்டினான் என்ற இனிப்பானசெய்திகளைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இந்தச் செய்திகளில் சுவை இல்லை. எந்தமணமகனுக்கு எந்த மணமகள் பொருத்தம் என்று பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்ற பகுதியைப் பார்த்து கணித்து மகிழ்ந்த எனக்கு, இப்போது வேலை இல்லை. யாரும் இப்போதுகம்பி நீட்டுவதில்லை. அதைப் பிரசுரிக்க பத்திரிகைகளில் இடமும் இல்லை. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? மேடையில் ஒருகுருவியாக நான் எப்படிப் பறப்பது?

 இதற்குள் நாங்கள் எழுதுவதே ஒரு போராட்டமாக இருக்கிறது. அச்சத்துள் வாழ்ந்து அச்சத்தையே சாப்பிடுகிறோம். அச்சத்தால் ஆடைகட்டுகிறோம். பேனைக்குப் போராட்டம் பிடிக்கும். அதனால் அது சோரவில்லை. நாம் தான் சோர்ந்து  விட்டோம். அஸ்ரப் சிகாப்தீன் துணிச்சலான ஒருபேனைக்காரன். இந்தச் சூழலிலும் அவர்  நிமிர்ந்து நிற்பவர். வாயால் கதையளந்து பெரியஎழுத்தாளனாக முயற்சிக்காதவர். எழுத்தோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருடைய மண்ணில் அவருடைய இரண்டு புத்தகங்கள் இன்று வெளிவருகின்றன. சொந்த மண் எல்லோருக்கும் சுவையானது. அதில் ஒட்டும் கொசுக்கள்தான் நாங்கள் எப்போதும். இதில் என்னை சிறப்புரையாற்றக் கேட்டிருக்கிறார்கள். எப்படி சிறப்புரையாற்றுவது? நான் தண்ணீராக ஓடுவது? இப்போது முடியுமா?

நாம் எப்படித்தான் எழுந்து நின்றாலும், உன்னிப் பறக்கும் சிறகுகள் சோர்ந்துவிட்டனவே!. நாம் எப்படித்தான் நம்மை தயார் செய்து எடுத்தாலும் நாமாக  நடக்கமுடியாமல் இருக்கிறதே! நமது சோற்றுப் பாத்திரங்களில் காகங்கள் குந்திக் கழிக்கின்றனவே! நமது விளை நிலங்களில் எருதுகள் படுத்து பயிர் செய்ய விடாமல் அழிச்சாட்டியம் செய்கின்றனவே! பன்றி வயற்காரனை வெட்டிவிட்டுப் போகிறது. இரவுகளில் நான் பாடிவைத்துவிட்டுப் படுத்த கவிதையைக் காலையில் தேடினால் காணவில்லை. அது களவு போய் இருக்கிறது.  நண்பர்களின் முகங்களில் சிரிப்புகள் போனதைப் போல, என் மேசை வாடிக்கிடக்கிறது. புன்னகைகள் ஊரில் ஒறுத்துப்போய் விட்டன. பதர்கள் உசும்புவதைப்போல மக்கள் உசும்பித் திரிகின்றார்கள். நெல் மணிகள் குறைந்துவட்டன. வயல் செய்தவன் வெறுங்கையோடு வீடு வருகிறான். கவிஞனைப் போல! 'கலவெட்டியில்' பிச்சை கொடுக்கவும் என்னிடம் மகிழ்ச்சி இல்லை. நான் மகிழ்ச்சிக்கு பிச்சை எடுக்கின்ற ஒரு காலம் வந்துவிட்டது. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? என் கவிஞனை விட்டுவிட்டு நான் தன்னந்தனியே சிறப்புரையாற்ற முடியுமா? அவன் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்வா?

 அவன்தானே எனக்கு குதிரை. அவனில்தானே எனது பயணமெல்லாம். எனது கவிஞன் காலக் கொடுமையினால் ஆடிப்போய் சின்னப் சின்னப் பிள்ளையைப் போல யோசனையுடன் நகம் கடித்துக் கொண்டிருக்கிறான். துப்பு துப்பு என்று தலையில் அடித்தாலும், துப்புறானில்லையே! அவனை எழுப்புவது சிரமமாக இருக்கிறது.

சிறப்புரை என்றால், சொல்லாத பல செய்திகளை அது சொல்ல வேண்டும். கேட்டிருப்போர்  மெய்சிலிர்க்க வேண்டும். சிறப்புரை என்றால் அதில் ஒரு கவர்ச்சி, அதில் ஒரு இனிமை, அதில் ஒரு உண்மை, அதில் ஒரு ஆறு ஓடவேண்டும். சிறப்புரை என்று சொல்லிக் கொண்டு, அதில் ஒரு ஓணானாவது ஓடாமல் உரையாற்ற எனக்குவிருப்பமில்லை.

அஸ்ரப் சிகாப்தீனும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக தலைமுடி வெட்டியவர்கள் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் எழுத வந்த காலத்தில்தான்  நானும் எழுத வந்தேன். அவர் பேனை வாங்கிய நேரத்தில் தான் நானும் பேனை வாங்கினேன். கடதாசியும் வாங்கினேன். நானும், அவரும் என்ற இந்த இரண்டு மீன்பிடிக்காரனுக்கும் அவரவருக்கென்று தனித்துவமான வள்ளங்களும் வலைகளும் இருக்கின்றன. இது எழுத்தாளன் என்ற மீன்பிடிக் காரனுக்குமுக்கியமானது. அவர் மீன் பிடிக்கும் முறையும் வேறு வேறானது. இதனால் இவர் இந்தக் கடற்கரையில் இப்போதும் தனித் தன்மையோடும் இருக்கிறவர். எனக்கு இந்தத் 'தண்டையல்' காலம் கடந்துதான் பழக்கமானார். சோலைக்கிளி என்ற தண்டையலும், அஸ்ரப் சிகாப்தீன்  என்ற தண்டையலும் நாட்பட்டு உறவாகிய 'செம்படவர்கள்.
'
எனது மீன்பிடியில் அவர் எந்த இடத்திலும் குறுக்கு வலைபோடவில்லை. என் வலையை வெட்டவில்லை. சிலர்  செம்படவர்களாக மீன்பிடிக்க வந்து தங்கள் 'சிறுவால்களை' இழந்ததுதான் மிச்சம். அறுநாக் கொடியும் அறுந்து போனார்கள். அவர்களை அடையாளப் படுத்தும் அளவுக்கு அவர்களுக்கென்று ஒரு தோணி இல்லை. ஒரு வலை இல்லை. கடல் அவர்களை ஏற்கவில்லை. ஓட்டைவலையில் எப்படி மீன் பிடிப்பது? நிர்வாணம் கடலுக்குப் பிடிக்காது. தன்னில் குளிக்க வந்தசிறுவர்களை விரட்டுவதைப் போல கடல் அவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது.

எனது இந்த உரை ஒரு சிறப்புரையாக அமையாது விட்டாலும், ஒரு சின்னக் காற்று மாதிரி இந்தச்சபையின் மனதைத் தடவும் என்று நினைக்கின்றேன். உங்கள் அகத்துக்குள் நுளைந்து கிளுகிழனுப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நகத்துக்குள் நுளைந்து ஊத்தை எடுக்கும் என்று கருதுகின்றேன். அனேகமாக எனது உரைகளை சபையோர் காதுகளுக்குள் வெந்நீர் ஊற்றுபவையாக இருக்காமல் பார்த்துக்கொள்வது எனது பழக்கம். நான் போன பல கூட்டங்களில் சிலர் ஊற்றிய வெந்நீரால்தான் எனதுகாது பொசுங்கியது. அந்த அனுபவம் எனக்குப் பேசுகிறது.

இப்போது நான் அந்தரத்தில்இருக்கிறேன். எனது எதிரிகள் ஏசும் போது சிரிக்கிறேன். அது என்னவென்று விளங்காமல், விளங்காமல் இருப்பது வாழ்க்கைக்கு நல்லதுதான். நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நல்ல மனிதனாக பெயர் வாங்கலாம் விளங்காமல் இருந்தால்தான். சமுகத்தில் உயர்ந்தும் போகலாம். இந்தச்'செவிடன்'எப்படி சிறப்புரையாற்றுவது?

நீங்கள் கைதட்டுவதே எனக்குக் கேட்கவில்லை. இலக்கியக் கூட்டங்களுக்குப் போய் போய் எனது கேட்கும் திறனை இழந்து வருகிறேன். அதுதான் நான் எந்தக்கூட்டத்திற்கு யார் பேசுகிறார் என்று பார்த்துப் போவது. அண்மையிலும் ஒரு நாவலாசிரியர் என்னை அழைத்தார். நான் போகவில்லை. அங்கு முழங்க இருந்த பீரங்கிகளைப் பார்த்துப் பயந்துவிட்டேன். யுத்தங்களுக்குப் பாவிக்கும் தளபாடங்கள்! நான் மலர் கொய்பவன்தான். மலை உடைப்பவனல்ல. சிலர் மலை உடைக்கிறார்களே கூட்டங்களில்இ ஏன்? மனிதன் இப்படியான நிகழ்வுகளுக்கு வரக்கூடாதென்றா?

இங்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஒரு பூந்தோட்டத்தைப் பார்ப்பது போன்றே இருக்கிறது. மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிகிறது. இது என்னால் உண்டான மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை. உங்கள் அஸ்ரப் சிகாப்தீன் உண்டாக்கிய மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தாளனால் ஊருக்கு மகிழ்சிசி, ஊரால் எழுத்தாளனுக்கு மகிழ்சிசி என்ற நிலை கண்டு நானும் மகிழ்கிறேன். 'பசுமை'இலக்கிய வட்டத்தையும் பாராட்டுகிறேன்.

 இனிய சபையோர்களே! நேரம் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் வால் எரிந்து அலறிக் கொண்டிருக்கிறதல்லவா? இவ்வளவு தூரம் இருந்து வந்து, உங்கள் முன் ஒரு சிறப்புரையாற்றாமல் போவது எனக்கும் கவலைதான். முதல் முதலாக நான் கொடுத்த காதல் கடிதத்தை அவள் கிழித்ததைப்போல.
நிலா வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரவுக்குள் சிறு பூச்சியைப் போலஊர்ந்து ஊர்ந்தாவது நான் ஊர் போய்ச் சேரவேண்டும். என் பூச்சி புழுக்களைப் பார்க்க வேண்டும். நான் போகும் போது ஊர் இருக்குமோ தெரியாது! எவன் வெட்டிச் சாய்த்து அதைத் தோளில் சுமந்து போகிறானோ! நான் அறியமாட்டேன்.! போகும் போது வழிகாட்டநிலாவையும் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும். பகலிலும் இருட்டுப்பட்ட ஊராகிவிட்டதே நமதுஊர்கள்!  அதற்குள் ஒரு சிறப்புரையை ஆற்றிவிடலாமென்றால் முடியாமல்தான் இருக்கிறது. கோழிதான் முக்கி முக்கி முட்டையிடுகிறது. பேச்சாளன் முக்கி முக்கி உரையாற்றலாமா? அது நதி போல ஓடிவரவேண்டுமல்லவா! மழைபோல பெய்து சபையோர் குடைபிடிக்க வைக்கவேண்டும் அல்லவா!

பேச்சு கட்டிப்போனது. அதற்கான காற்று இப்போது இல்லை. மணக்கின்ற காற்றில்தான் மனம் குளிர்ந்து, வார்த்தைகள் துள்ளுகின்றன. காற்றுப் பிழைத்தால் வார்த்தைகளும் சமாதியாகிவிடும். நான் வார்த்தைகளின் எலும்புக் கூடுகளைவைத்துக் கொண்டு எப்படி இங்பு சிறப்புரையாற்றுவேன்? நீங்கள் என்னில் குறை நினைக்கக்கூடாது. நாம் உறவுக்காரர்கள்! அப்படி எடுத்ததற்கெல்லாம் என்னில் குறை நினைக்க நீங்கள் எனக்கு சீதனம் தந்து பெண்னும் தந்த மாமனும் இல்லையே!.

அன்புள்ள சபையோர்களே! நான் உங்களிடம் வந்து கடன் பட்டுக்கொண்டு செல்கின்றேன். காலத்தால் பால்ஒழுகி, நான் நானாகும் போது உங்களுக்கான எனது சிறப்புரையை நிச்சயம் தருவேன். ஒரு புத்தகத்தை படித்து விட்டுத் தருகிறேன் என்று வாங்கினாலும், தராதவன்தான் எழுத்தாளன். இவன் பொய் சொல்லுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் அப்படியல்ல! எனது சோற்றுக்குள் தலை முடியையும் பொறுக்கி எடுத்துஇ இது யாருடையது என்று வினவி உரியவரிடம் ஒப்படைப்பவன். எனது சிறப்புரைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கலாம். காலமும் சரிவரத்தான் போகிறது.

இந்த உலகத்தில் எதுதான் நிரந்தரமாக இருந்தது? கண் இருந்த இடத்தில் மூக்கும், மூக்கு இருந்த இடத்தில் கண்ணுமா, எப்போதும் மனிதன் வாழமாட்டான். அவை உரிய உரிய இடங்களுக்கு வந்துதான் ஆகவேண்டும். எனது கண்ணும் மூக்கும் உரிய இடங்களுக்கு வந்தவுடன் எனது சிறப்புரையும் வரும். ஒரு பறவையாகவேனும் வந்து நின்றுதான் உங்களின் வாசலில் பேசுவேன். காலம்  புரளக்கூடியது. அதை நமது பெருமூச்சுகள் புரட்டிவிடும். நமது சூரியோதயங்களை எவரும் தொடர்ந்து தடுத்துக் கொள்ள முடியாது. இறைவன் எல்லோருக்கும் நீதியானவன். இந்தநம்பிக்கையை நாம் விட்டு விடக்கூடாது. இந்தச் சிறப்புரையை முடிக்கிறேன்.
   
(04.09.2019ல் ஓட்டமாவடியில் நடைபெற்ற இரு நூல்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றப்பட்ட சிறப்புரை - எழுத்துத் தொகுப்பு - எஸ்எம். முர்ஷித், தலைவர், பசுமை கலை இலக்கிய வட்டம் - வாழைச்சேனை)


Friday, January 10, 2020

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'எனக்குள் நகரும் நதி'


நூல் அறிமுகம் : முஹம்மத் றிழா

பத்திரிகைப் பத்திகள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி, அஷ்ரஃப் சிஹாப்தீனின் இரண்டாவது பத்திகளின் தொகுப்பாகும். இவரது முதலாவது பத்திகளின் தொகுப்பாக தீர்க்க வர்ணம் 2009ம் ஆண்டு வெளிவந்தது. இந்த தொகுப்பு பல்சுவை பத்திகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. இந்த பத்தித் தொகுப்பிற்கும் தற்போது வெளிவந்துள்ள பத்தித் தொகுப்பிற்கும் வித்தியாசங்கள் நிறையவே உண்டு. இதனை நூலாசிரியரும் ஏற்றுக் கொள்கிறார். தீர்க்க வர்ணம் பத்தித் தொகுப்பில் இடம்பெற்ற பத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை. முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய விடயங்கள் குறித்தே எனக்குள் நகரும் நதியை நான் எழுதினேன் என்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

இலங்கையில் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் தமிழ்மொழி பத்திரிகையான மீள்பார்வைப் பத்திரிகையில் அஷ்ரஃப் சிஹாப்தீன் பத்தி எழுதினார். அவருக்கென தனியான பகுதியொன்றை மீள்பார்வை வழங்கியிருந்தது. அவர் அப்பத்திரிகையில் எழுதிவந்த காலங்களில் அவரது பத்தி எழுத்துகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்ததை நான் அறிவேன். மீள்பார்வை பத்திரிகையை தொடர்ந்து வாசித்த அனுபவம் எனக்குண்டு என்ற வகையில் நூலாசிரியரால் எழுப்பப்பட்ட கேள்விகள் முஸ்லிம் சமூக, சமய செயற்பாட்டாளர்களுக்கு நெருடலாக அமைந்திருக்கும் என்பது திண்ணம். அவர் இந்த பத்தி எழுத்துக்கள் மூலம் முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு முறை மீள்பரிசீலனை செய்யுமாறு, தனக்கான மொழியில் அழகுறச் சொல்லியிருப்பார். இது அவருக்கேயான தனித்தன்மை என்று கருதுகிறேன்.

எமது பிரதேச எழுத்தாளர்களில் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை நான் புரிந்துகொண்டது ஏனைய எழுத்தாளர்களைச் சங்கடத்திற்கு உட்படுத்தும் என்றிருந்தாலும்,அவர்களை விட இவர் வித்தியாசப்படும் புள்ளியை இங்கு பதிவுசெய்துதான் ஆகவேண்டும். இதனை ஏனைய எழுத்தாளர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எனது நம்பிக்கை மனங்கொள்கின்றது. எமது பிரதேசத்தில் 80களில் எழுதவந்த எழுத்தாளர்களுள் எதுவித சோர்வுமின்றி இன்றுவரை எழுதியும் நூல்களை வெளியிட்டும் வருவர் அஷ்ரஃப் சிஹாப்தீன். இந்த மன உறுதி அவரிடம் இருப்பதே என்னை அவர் மீது ஈர்க்க பிரதான காரணமானது. அவரது ஏனைய அனைத்து நூல்களையும் வாசிக்க முடியாது போனது எனது துரதிஸ்டம். அவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க முடியாது போனதால் அவர் பயணித்துவந்துள்ள கருத்தியல் தளத்தினை என்னால் ஆழமாக புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் இந்த நூல் குறித்தான எழுதுகையை அறிமுகக் கட்டுரையாகவே அமைத்து கொள்ள வேண்டிய நிலை எனக்குள் ஏற்பட்டது.

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைபாளியும் ஒளி, ஒலிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் பன்முக ஆளுமை கொண்டவர். 1978ம் ஆண்டு தினபதி பத்திரிகையின், தினபதி கவிதா மண்டலம் பகுதியில் தனது முதலாவது மரபுக் கவிதையை எழுதுவதன் மூலம் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுத்துலகத்திற்குள் வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து,பயண அனுபவ குறிப்புகள், முகநூல் எழுத்து என்று எழுத்தும் செயற்பாடும் என தன்னை வடிவமைத்துக் கொண்டார்.இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பதன் மூலமும், வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலமும் இலங்கை ஒளி, ஒலிபரப்பாளர் தளத்தில் தனக்கான இடத்தை தடம்பதித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் (1999), என்னைத் தீயில் எறிந்தவள் (2008),தேவதைகள் போகும் தெரு (2018)ஆகிய கவிதைத் தொகுதிகளையும்,புள்ளி (2007), கறுக்கு மொறுக்கு - முறுக்கு (2009),புல்லுக்கு அலைந்த மில்லா (2009) ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களையும்,விரல்களற்றவனின் பிரார்த்தனை (2013) எனும் சிறுகதை தொகுதியையும்,உன்னை வாசிக்கும் எழுத்து (கவிதை) (2007), ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011), பட்டாம்பூச்சிக் கனவுகள் (சிறுகதை) (2015),யாரும் மற்றொருவர் போல் இல்லை (கவிதை) (2017), வெய்யில் மனிதர்கள் (நாவல்)(2019) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும்,பல்சுவைப் பத்திகளின் தொகுப்பான தீர்க்க வர்ணம் (2009),பயண அனுபவ குறிப்பான ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை (2009),உண்மைக் கதைகளின் தொகுப்பான ஒரு குடம் கண்ணீர் (2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரதுஎன்னைத் தீயில் எறிந்தவள் கவிதை தொகுதிக்கும், பட்டமாம்பூச்சிக் கனவுகள் சிறுகதைத் தொகுதிக்கும் அரச சாஹித்தய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.ஓட்டமாவடி அஷ்ரஃப் எனும் பெயரில் ஆரம்பத்தில் எழுத்திய இவர் பின்னர் அஷ்ரஃப் சிஹாப்தீன் என தனது பெயரை மாற்றி கொண்டார். யாத்ரா எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்சிகையின் ஆசிரியராகவுள்ளார். தற்போது இலக்கிய படைப்புகள் ஒலித் தொகுப்புகளாக வெளிவந்து கொண்டுள்ள சமகாலத்தில் யாத்ரா சஞ்சிகையினை இணைய ஒலிச் சஞ்சிகையாக வெளியிட்டு வரவேற்பையும் பெற்றுக் கொண்டார். நாட்டவிழி நெய்தல் எனும் பெயரில் தனது எழுத்துகளை வலைப்பதிவில்; பதிவேற்றமும் செய்துவருகின்றார்.

யாத்ராவின் பதிப்பதில் வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி பத்திரிகைப் பத்தியை தனது தந்தை வழிப் பாட்டனார் மிஷின்கார லெப்பை என அறியப்பட்ட மீராலெப்பை ஆலிம் அவர்கள் நினைவுக்கு என சமர்ப்பணம் செய்துள்ளார். 26 தலைப்புகளை உள்ளடக்கியுள்ள இந்த நூல் பல்வேறு விடயங்களை பேசுகிறது.

எழுத்துச் சேவை, மொழியாள்கை,மன்னரே முதல்வர், ஒரு நாடகமன்றோ நடக்குது,கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்,வற்றாத கடலில் ஓயாத அலைகள்,தெற்கே உதித்த சூரியன்,கண்ணுக்குத் தெரியாத கபட வலை,முகத்திரண்டு புண்ணுடையார்,நுணலும் தன்வாயால் கெடும்,மூக்குகளால் சிந்திப்பவர்கள்,குகைவாசிகள்,நடத்தை காட்டும் நல்வழி, நீ சொன்னால் காவியம்,அவனன்றி அணுவும் அசையாது, அடைந்துகொள்ளப்படாத ஆயுதம்,எல்லைக்குள் எட்டப்படா இடங்கள், மூன்று காட்சிகள், வேர்கள் இறக்கும் விதம், அவளுக்கும் அழுகை என்று பெயர், நோன்புக் குழந்தைகள், அஸ்ஸலாமு அலைக்கும், ஆர்ப்பரிக்கும் ஆசை, ஹஜ் - காசாகி நிற்கும் கடமை, உன்புகழ் கூறாத சொல்லறியேன், அனல் ஹக் ஆகிய தலைப்பில் இந்நூல் பேசுகிறது.

எழுத்தாளனின் பற்றிய சமூகப் புரிதல்,ஒவ்வொரு இஸ்லாமிய முகாமும் இஸ்லாமிய சிந்தனைக்கு முழு வடிவம் கொடுக்காது தங்களை முழுவடிவமாக சமூகத்தில் அடையாளப்படுத்தியதால்; ஏற்பட்ட விளைவுகள், அறபிகளின் அரசியல், பழங்காலப் பெருநாள் கொண்டாட்டமும் அதை தடுத்துநிற்கும் நிலமற்ற வாழ்வியலும், பிரிந்துள்ள முஸ்லிம் அரசியலும் தேர்தலின் பின்னரான உறவும், எகிப்திய ரிஹாம்களாக மாறும் மனங்கள், மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் குறித்த பதிவு, போதைப்பொருள் பாவனையும் சமூக சீரழிவுகளும், பௌத்த போதனையிலுள்ள இஸ்லாமிய வாழ்வு, சிக்கலும் பிரச்சினையும் நிறைந்த குடும்ப வாழ்வை திருப்தியாக வாழ்தல், பிள்ளை வளர்ப்பு, வறுமையும் உதவியும், அன்பு கொள்ளச் செய்யும் தாஈ றபீக், கருத்தை ஏற்றலும் மதித்தலும்,மருதூர் ஏ மஜீதின் மஞ்சமாமாவும் நம்மிடமுள்ள புரிதலும், கவிஞர் கா.மு. ஷரீப் என்ற அற்புதமான கவிஞர் குறித்த பார்வை, மஹ்மூத் தர்வீஷின்யூஸூப் (அலை) பற்றிய கவிதை சொல்லும் செய்தி, ரமளான் மாதமும் நகர் வாழ்வும், பாவம் செய்தல், பெண் கல்வி, நோன்பு, சீர்திருத்தம் வேண்டிநிற்கும் குத்பா பிரசங்கம், இலாபமீட்டும் தொழிலாக மாறியஹஜ் கடமை, வைக்கம் முகம்மது பஷீரின் அனல் ஹக் சிறுகதையும் நாமும் போன்ற விடயங்களை பிரதான பேசு பொருளாக்கியுள்ளார் நூலாசிரியர்.