Tuesday, June 18, 2013

பலசேனாக்களுக்கு நான் சொல்ல விரும்புவது!


இலங்கையில் பௌத்தர்கள் குறைந்து வருகிறார்கள்,பௌத்தம் அழிந்து வருகிறது என்பதுதான் பொதுபலசேனாவின் கவலையாக இருக்கிறது என்று அது சொல்லிக் கொள்கிறது. இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தவே அவ்வமைப்பு போராடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக எல்லாச் சிறுபான்மை இனத்தோரையும் பௌத்தம் அல்லாத மதத்தோரையும் கொலை வெறியுடன் எதிர் கொள்ள முயற்சிக்கிறது.

பல் இனம் வாழும் ஒரு தேசத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் வளர்ச்சி கண்டு வருகிறது என்றால் அதற்குக் காரணம் அச்சமூகங்கள் பின்பற்றும் மதங்களின் வெற்றி மட்டுமல்ல, பெரும்பான்மையோர் பின் பற்றும மதத்தி்ன் காவலர்களது இயலாமையும் ஆகும். சிறுபான்மை மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு உள்ள வசதி வாய்ப்புகளை விட பெரும்பான்மை மதத்துக்கும்
அதைப் பின்பற்றுவோருக்கும் இருக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகமாகும்.

அகிம்சையை, அமைதியைப் போதித்த புத்தபெருமானின் வழிகளைப் பின்பற்றுவதாகக் கூறுவோர் ஞர்னத்தின் வழியில் தங்களது கவலைக்குப் பொருள் தேடாமல் வழி காணாமல் புத்த பெருமானின் கொள்கைகளுக்கு மாற்றமாகச் சிறுபான்மைகள் மீது கொலை வெறி கொள்வதும் அதற்காகக
வன்முறை வழிகளைத் தேர்வதும் சுட பௌத்தத்தின் தோல்வியாகும். இந்த விடயத்தில் பல பௌத்த பிக்குகள் மிகத் தெளிவாக இருந்த போதும் பொதுபலசேனா, சிஹல ராவய போன்ற அமைப்புகளுக்கும் அவ்வியக்கங்கள் சார்ந்த பிக்குகளுக்குப் புரியாமல் இருப்பதும் பௌத்தம் செல்லும் வரலாற்று வழியில் கருப்புக் கோடுகளாகவே அமைந்து விடப் போகின்றன.

இவ்விடயம் சம்பந்தமாக புரிந்து கொள்ளும் பௌத்த பிக்குகளும் கூட மாற்று வழிகள் பற்றி எதுவும் பேசாமல் இவ்வமைப்புகள் தடம் புரண்டு செல்கின்றன என்ற விமர்சனத்தோடு மாத்திரம் நின்று கொள்கிறார்கள்.

பெரும்பான்மை அரசியல்வாதிகளில் பலர் நிலைமை புரிந்திருந்தும் கூட தமது இன வாக்குகள்
பற்றிய கணக்கெடுப்புத் தளர்ந்து விடும் என்ற பயத்தில் இருக்கிறார்களே தவிர நாட்டுக்கும்
தமது மதத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்ற விடயத்தைக் கண்டு கொள்ளாமலேயே
இருந்து வருகின்றனர்.

பல்லினம் வாழும் ஒரு தேசத்தில் வாழும் சிறுபான்மையினர் வர்த்தகம், கல்வி, தொழில்துறையென்று எல்லாவற்றிலுமே பெரும்பான்மையினரோடு, அதன் அரசோடு முட்டி மோதி, போராடி, சிரம்ங்களை எதிர்நோக்கியே வாழ்ந்து எதிர் நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்லப்
போனால் - தனது வாழ்க்கைக்காக ஒரு பெரும்பான்மை இனத்தான் சிந்தும் வியர்வையை விட சிறுபான்மை இனத்தான் சிந்தும் வியர்வை அதிகமாகும்.

பிக்குகள் உழைப்பதில்லை. அவர்களுக்குப் பொதுமகன் படும் சிரமங்கள் எதுவும் கிடையாது. பௌத்தம் என்ற ஒன்றுக்காக அவர்கள் வாழ்கிறார்கள் என்றால் அம்மதம் பின்னடைவு காண்கிறது என்றால் அதற்குத் தாமும் முக்கிய காரணகர்த்தாக்கள் என்பது புரியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய வெட்கக் கேடு.

எனவே இந்த அமைப்புகள் சார்ந்த பிக்குகள் நாட்டு முன்னேற்றம் கருதியும், தங்களது மத முன்னேற்றம் கருதியும் சிறுபான்மை இனங்களின் மேல் பாய்வதைத் தவிர்த்து விட்டுச் சில நல்ல காரியங்களைச் செய்ய முடியும்.

01. பன்றிகள் கொல்லப்படும் இடங்களில் கொல்லப்படும் பன்றிகள் நோயற்றவை என்பதை உறுதிப்படுத்துதல்.

02. பல்பொருள் அங்காடிகளில் அரை நிர்வாணமாக வரும் யுவதிகளுக்கு அறிவு புகட்டல்.

03. கசினோ போன்ற சூதாட்டக் கழகங்களுக்கும் சாராயக் கடைகளுக்கும் வருகை தரும்  பெரும்பான்மை இன மக்களுக்குப் போதனை புரிதல்.

04. தங்களது பிரதேச பன்சலைகளை மையப்படுத்தி இளைஞர், யுவதிகளைத் திரட்டி பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பிரதேச பாதைகள் போன்றவற்றில் சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தல்.

05. முடியுமானால் அரச நிறுவனங்களில் கூட (உ-ம்) தபாலகளில் தபால்தலை வி்ற்றல்) போன்ற தொழில்களில் ஈடுபடல்.

06. சட்ட விரோத கசிப்பு, போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராகச் செயற்படல்.

07. போதைப் பொருள் பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வளிப்பதிலும் அவர்களுக்குப் போதனை செய்வதிலும் ஈடுபடல்.

08. பிரதேசங்களில் சிறு சிறு சச்சரவுகளைத் தீர்த்து வைத்தல்.

09. வைத்தியசாலைகளில் நோய்களால் பாதிப்புற்றவர்களைச் சந்தித்து ஆறுதல் தருதல். முடியுமானால் நிறுவன ரீதியாகச் செயற்பட்டு அவர்களுக்கு உதவுதல்.

10. சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்குப் போதனை செய்தல்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: