Monday, November 25, 2013

இளம்பிறை எம்.ஏ.றஹ்மான் இலங்கை வருகை


கடந்த 23.11.2013 அன்று “இளம்பிறை” எம்.ஏ. றஹ்மான் அவர்கள் இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அன்று பிற்பகல் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் சார்பில் அவருக்கு வரவேற்பும் அவரது ஐந்து நூல்கள் வெளியீடும் நடைபெற்றது.


இலங்கையில் அவர் வசித்த காலத்தில் “இளம்பிறை” சஞ்சிகை வெளியிடப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் பெயர் பெற்ற ஓர் இலக்கியச் சஞ்சிகையாக அது விளங்கியது. இதனால் அவருடைய பெயருடன் அச்சஞ்சிகையின் பெயர் இணைந்து கொண்டது.


நூல்களின் முதற் தொகுதியைப் புரவலர் அல்ஹாஜ் பாயிக் மக்கீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அனைவரும் அவருடனான நட்பு குறித்தும் அவரது வெளியீடுகள், மற்றும் சஞ்சிகை குறித்தும் ஞாபகித்துப் பேசினார்கள்.


எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் “இளம்பிறை”ச் சஞ்சிகையின் அட்டைப் படம் ஒன்றைக் கொண்டு வந்து அனைவருக்கும் காட்டிப் பேசினார். அவ்வட்டையில் வ.மி. சம்சுதீன் அவர்களின் படம் பிரசுரமாகியிருந்தது. வ.மி. சம்சுதீன் இலங்கையில் வாழ்ந்த பெருமகன். இவர் அக்காலத்தில் மற்றொரு தமிழறிஞருடன் சேர்ந்து “ருபாயாத்” தை மொழிபெயர்த்து வெளியிட்டவராவார். 2007ல் சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இந்நூல் மீள் பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


எம்.ஏ.றஹ்மான் அவர்கள் ஒரு எழுத்தாளராகவும் சஞ்சிகையாளராகவும் மட்டுமன்றி பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். புலவர் மணி ஆ.மு ஷரிபுத்தீன் அவர்களின் “நபிமொழி நாற்பது”, வ.அ. இராசரத்தினம் அவர்களது “தோணி”, அறுபதுகளில் மருதமுனையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான ”இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள், “அண்ணல் கவிதைகள்”, மகாகவியின் “குறும்பா”, “கண்மணியாள் காதை”, சானாவின் “பரியாரியார் பரமர்”, எஸ்.பொ. வின் “வீ” என்பன உட்படப் பல நூல்களை தனது “அரசு வெளியீடு” மூலம் பதிப்பித்தவர்.


இலங்கையில் அவர் வாழ்ந்த காலத்தில் எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்திருந்தவர். முற்போக்கு அணிக்கு எதிராகச் செயற்பட்ட அணியில் இருந்ததோடு எஸ்பொ.வுடன் இணைபிரியா நண்பராகவும் இருந்தவர்.


அவருடனான நாடக அனுபவங்களை கலைஞர் கலைச் செல்வன் பேசினார். 


தனது தந்தையாரான நீலாவணனுடன் எப்படி றஹ்மான் குடும்ப நண்பராக இருந்தார் என்பதையும் அவரது பதிப்பகத்துள் சென்ற ஞாபகங்களையும் எஸ்எழில் வேந்தன் எடுத்துச் சொன்னார். “வரலாற்றில் வாழ்தல்” என்ற நூலில் நிறையப் பொய்கள் இருப்பதாக மு.பொன்னம்பலம் குறிப்பிட்டார். இதுபற்றிய கவனத்தை அந்தனி ஜீவாவும் தனது உரையில் கவர்ந்தார்.


நான் றஹ்மானை இதற்கு முன்னர் சந்திததில்லை. ஆனால் அக்காலத்திலேயே பிரமாதமாக இருந்த அரசு வெளியீடுகள், இளம்பிறை சஞ்சிகை ஆகியவை என்னைக் கவர்ந்திருந்ததையும் அதற்காகவே அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்ததையும் நான் குறிப்பிட்டேன். இளம்பிறை சஞ்சிகைதான் தன்னை வளர்த்து விட்டது என எழுத்தாளர் மொயீன் சமீன் குறிப்பிட்டார்.


கே.எஸ்.சிவகுமாரன், எஸ்.எச்.எம். ஜமீல், மு.பொன்னம்பலம், ஏ.எம். நஹியா, கலைச்செல்வன், அல்ஹாஜ் பாயிக் மக்கீன், எஸ்.எழில்வேந்தன், கலைவாதி கலீல், யாழ் அஸீம், டாக்டர் தி.ஞானசேகரன், மொயின் சமீன், காத்தான்குடி பௌஸ், மானா மக்கீன், த.மணி, திக்குவல்லை கமால், பொத்துவில் அஸ்மின், குமரன், தில்லை நடராஜா, ஜூனைதீன், திருஞானசுந்தரம், வேலணை வீரசிங்கம், இளநெஞ்சன் முர்ஷிதீன், எம்.ஏ.எம். நிலாம், எஸ்.ஐ.நாகூர்கனி, கே.பொன்னுத்துரை, நியாஸ் ஏ. சமத், கதிர்காமநாதன், மர்ஸூம் மௌலானா, ராமதாஸ், அஷ்ரஃப் சிஹாப்தீன், ஸ்ரீதரசிங், தமிழ்த்தென்றல் அலி அக்பர், நஸ்முல் ஹூஸைன், எம்.எஸ்.எம். ஜின்னாஹ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள்.



இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார் இளம்பிறை எம்.ஏ.றஹ்மான்.

வெளியிடப்பட்ட நூல்கள்
------------------------------------
01. இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்
02.காந்தி போதனை
03.மரபு
04.இளமைப் பருவத்திலே
05. சிறுகை நீட்டி

(புகைப்படங்கள் தெளிவின்மைக்கு வருந்துகிறேன்!)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: