Wednesday, August 1, 2012

தப்புத் தாளங்கள்

கடந்த 27ம் திகதி இரவு முகநூலின் எனது பக்கத்தில் பின்வரும் வினாவை கருத்துக்களை அறிவதற்காக இட்டிருந்தேன்.

“ஒரு சமூகத்துக்கு என்ன சிக்கல்கள் ஏற்பட்டாலும் அச்சமூகம் சார்ந்த அரசியல்வாதிகளை நோக்கி மட்டுமே எல்லா விரல்களும் நீட்டப்படுகின்றன. இது சரியா?”

தனிப்பட்ட முறையில் அரசியல்வாதிகளை விமர்சிக்காமல் 10 முதல் 15 வரிகளுக்குள் தெரிவிக்கப்படும்  பொருத்தமான கருத்துக்கள் “யாத்ரா” சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டு தினங்கள் கடந்தும் மூவருக்கு மேல் கருத்துக்களைத் தெரிவித்திருக்கவில்லை. (இந்த நிமிடம் வரைக்கும் அதே நிலைதான்.)

எனவே ஒரு நாள் கழிந்த பின்னர் வேண்டுமென்றே பின்வரும் குறிப்பை முகப்புத்தகத்தின் எனது பக்கத்தில் இட்டேன்.

“தமிழ்ச் சினிமாக் கதாநாயகிகள் இப்போது நடிப்பதே இல்லை. கடந்த காலங்களில் மிகச் சிறந்த நடிகைகள் நடிப்பில் உன்னதம் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒருவரையாவது நடிப்புக்கு உதாரணம் காட்ட என்னால் முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

அடுத்த நாள் விடிந்தது 18 பேர் இது குறித்துக் கருத்துக்களை இட்டிருந்தார்கள்.
பதினெட்டாவது நபரது கருத்துக்குப் பின்னர் நானும் இத்தலைப்பின் கீழ் ஒரு கருத்தை இட்டேன். இதுதான் அது-

ஒரு நாளைக்கு முன்னர் அதாவது இதற்கு முன்னர் நான் இட்ட “யாத்ரா - 22”க்கான பதிவுக்கு (அரசியல்வாதிகளைக் குறை சொல்வது பற்றி) 3 பேர் மாத்திரம் கருத்துச் சொல்லியிருந்தது என்னைக் கவலைக்குள்ளாக்கியிருந்தது. எனது நட்பு வட்டத்தில் இருப்போரின் அமைதி ஒரு சந்தேகத்தை உண்டு பண்ணியது. எனவே “இப்போது தமிழில் யார் நம்பர் வண் நடிகை?” என்று ஒரு வினாவைப் போட்டுப் பார்ப்போமா என்று எண்ணிய நான் அதைத் தவிர்த்து “நடிகைகள்” பற்றிய பதிவை இட்டேன். விடிவதற்குள் 18 கருத்துக்கள் இடப்பட்டுள்ளன.


சரி. தத்தமக்குப் பிடித்த தலைப்பில் கருத்துக்களைத் தெரிவிப்பதும் அவசியமில்லை என ஒருவர் கருதும் கருத்துக்குப் பதிலளிக்காமல் விடுவதும் அவரவர் உரிமை.

தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஒட்டியும் வெட்டியும் எனக்குக் கருத்துக்கள் இருந்த போதும் அதில் மீண்டும் நான் மூக்கை நுழைக்கவில்லை.

முகப்புத்தகத்தில் “சீரியாஸான” விடயம் என்று ஒருவர் கருதும் ஒன்றுக்கோ இதற்கு நான் கருத்துச் சொல்லத் தேவையில்லை என்று கருதும் ஒன்றுக்கோ கருத்துச் சொல்லாமல் விட்டு விடுவார்கள். அநாவசியச் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்று நினைப்பவற்றையும் தவிர்த்து விடுவார்கள் என்பதை நான் இட்ட குறிப்புகளில் உணர்ந்து கொண்டேன்.

நடிகைகள் குறித்து நான் என்ன நோக்கத்துக்காகக் குறிப்பை இட்டிருக்கிறேன் என்பதை நான் பகிரங்கமாகத் தெரிவித்த பின்னரும் கூட இத்தகவல் திரிக்கப்பட்டு பகிரங்கத் தளங்களில் பேசப்பட்டிருக்கிறது என்ற காரணத்தால்தான் இதனை இங்கு நான் எழுத நேர்ந்தது.

“நடிகைகள் கவர்ச்சி காட்டுவதாக இல்லை” என்ற அர்த்தம் பட நான் குறிப்பு இட்டதாகச் சில அன்பர்கள் தகவல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியொன்று இன்று எனக்குக் கிடைத்தது. எனது குறிப்புக்களை முழுவதும் படித்த ஒரு நபர் இந்த விடயம் திரித்துக் கதைக்கப்பட்ட ஒரு சூழலில் நின்று ”இல்லை. அது அப்படி அல்ல... இப்படித்தான் எழுதியிருந்தார்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆக... எனக்கேற்பட்ட கவலைகள் பின்வருமாறு.

01. இந்தக் கணினி யுகத்திலும் குறிப்புகளை, தகவல்களை உண்மைத் தன்மையை அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.

02. இத்தகையவர்கள் எனது நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள் என்பது.

03. சம்பந்தப்பட்ட நபர் எதை எழுதியிருக்கிறார் என்று கூடப் பார்க்காமல் வாய்க்கு வந்தபடி கதைப்பது.

04. நோன்பில் நடிகைக் கவர்ச்சி பற்றி எழுதியருக்கிறார் - என்ற பாவத்தைச் செய்து விட்டதாக அதே நோன்புடன் ஆய்ந்து பார்க்காமல் பேசுவதன் மூலம் தாமும் பாவம் செய்கிறோம் என்பதை உணராமல் இருப்பது.

05. மற்றவன் இன்னொருவனைப் பற்றி தப்பாக எதைச் சொன்னாலும் அதை நம்பித் தகவல் பரப்புவதன் மூலம் கற்றவர்கள் ஜாஹிலிய்யத்தில் (அறியாமையில்) இருப்பது.

(ரமளானில் இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களில் யாருக்காவது வேறு வழிகள் தெரிந்தால் சொல்லுங்களேன்.)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

6 comments:

Shaifa Begum said...

ஆஹா......... சேர் இதற்கு ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை.. நாங்களும் ஒரு கறுப்புக் கண்ணாடியை வாங்கிப் போட்டுக் கொண்டு போயிட்டே இருகக்னும்.. திரும்பிப் பார்க்கத் தேவையில்ல....திரும்பிப் பார்த்தால் தான் கவலையும் பிரச்சினையும்..சும்மமா தட்டிவிட்டு போயிடனும்.....

Abufaisal said...

நீங்கள் சொன்ன அந்த ஸ்டேடஸை உண்மையாகவே நான் கவனிக்கவில்லை எனக்கு வரும் ஷேர்கள் காரணமாக அது கடை கோடிக்கு போயிருக்கலம் அதை நான் கண்டிருந்தால் நிச்சயமாக கருத்துரைத்திருப்பேன் பாய்.....

இப்படி கவுத்துப்புட்டிங்களே.... :-)

Kalaimahan said...

சேர்,
“ஆதியும் தெரியாமல் அந்தமும் தெரியாமல்” சிலர், முகநூலில் வாக்குவாம் புரிவதற்கெனவே நிற்கிறார்கள். அவர்களில் காத்திரமான கருத்துக்கள் இல்லை. நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் இன்னும் இந்த கணனி யுகத்திலும் ஏதுமறியா மாந்தர்களாகவே இருக்கிறார்கள். நீங்கள் அடுந்த வினாவை இடுவதற்கான காரணத்தைச் சொல்லியும், அதுபற்றித் தெரிந்து தனது கருத்தை அழித்துவிடலாமல்லவா? அப்படிச் செய்யமாட்டார்கள். இப்படித்தான் நாம்சார்ந்த சமூகம். கண்ணாடி கறுப்பாக இருக்கிறது... நாம் வெளிறிய கறுப்புக் கண்ணாடி அணிந்து அவர்களைப் பார்க்க வேண்டும். (அப்போதுதான் நாம் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. நமக்குப் புரியும்.) கயிறு திரிப்பவர்கள் திரித்துக் கொண்டிருக்கட்டும். உங்களைப் போன்ற நல்ல உணர்வுபூர்வமான நல்ல துறைசார் கலைஞர்களை அவர்களது மனம் உள்வாங்க மறுக்கிறது. அதுதான் எல்லாவற்றுக்கும் தலை. தாளத்திற்கேற்ற நடனம் நாம்தான் ஆடவேண்டியிருக்கிறது இவர்களால்....

Lareena said...

என்னத்தச் சொல்ல!

இன்று அறிவியல் தொழினுட்பம் எல்லாம் முன்னேறித்தான் உள்ளன. ஆனால், நம்மவர்களின் மனப்பாங்கு மட்டும், வம்பு தும்புகளைத் தேடி அலையும் பழைய பாமர நிலையிலேயே இன்னும் இருக்கிறது என்ற கசப்பான நிதர்சனத்தையே உங்கள் பதிவில் இடம்பெற்ற சம்பவம் நமக்குணர்த்துகிறது! :(

Abufaisal said...

பொதுவாக ஒரு சமூகத்தை அரசியல் ரீதியாக வழி நடத்துவது அரசியல்வாதிகள்தாம்.... சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் அங்கீகாரங்கள் உரிமைகள் உதவிகள் பெற்றுத்தருவதும் பிரச்சனை என்றால் மக்கள் சார்பாக குரல் கொடுப்பதும் அவர்கள்தாம்... இந்நிலையில் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் முதலில் நம்புவது இவர்களைத்தான்... மக்கள் நம்பிய இவர்கள் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கவில்லையெனில் மக்களின் கைகள் மட்டுமல்ல கோபமும் இவர்கள் மேல் திரும்புவது தவிர்க்க முடியாதது....
(10 வரியாவது வந்ததா...)

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பதிவு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)