Thursday, October 16, 2014

தியாகத் திருநாள் வானொலிக் கவிதை

01
பேதம் என்ற சொல் இல்லை 
பெரியோன் சிறியோன் என்றில்லை
மோதும் தேச முரணில்லை 
மொழியால் வேறு பாடில்லை
போதம் ஒன்றே கலிமாவால்
போர்த்திக் கொள்ளும் யாவர்க்கும்
சேதம் இல்லை என்றோதும் 
சிறப்பை ஓதும் திருநாளாம்!

02
ஆசியன் என்ற தாழ்வில்லை 
அறபிக் கென்றொரு இடமில்லை 
பேர்சியன் என்று பிரிப்பில்லை 
பெருங்கரு நிறத்துக் கிழிவில்லை
நேசங் கூட்டும் நெஞ்சோடு 
நெருங்கி ஒன்றாய்க் கூடுவதில்
பாசங்கொண்டால் ஒளி கூட்டும் 
பண்பார் ஹஜ்ஜூப் பெருநாளாம்!

03
கண்டம் என்ற கணிப்பில்லை 
கல்வி கொண்டோர் தனியில்லை
விண்ட வேந்தர்க் குயர்வில்லை 
வலியார் என்று வரம்பில்லை
அண்டி நின்று அல்லாஹ்வின் 
அணிசேர் மாந்தர் யாவருமே
கண்டார் நேசம் என்றாலே 
களிகூர்ந் திடுமிப் பெருளாம்!

04
கண்ணின் நிறங்கொள் கணிப்பில்லை 
கட்டை நெட்டை விதியில்லை
மண்ணைக் கொண்டு மதிப்பில்லை 
மாற்றணி அரசியல் மறுப்பில்லை
எண்ணம் எல்லாம் மானுடமே 
என்று கொள்ளும் மனம் வாய்க்கும்
திண்ணம் ஆகும் திற னோர்ந்தால் 
தித்திக் கும்இப் பெருநாளாம்!

05
அன்பு தவிர வேறில்லை 
அருகே நிற்போன் எதிரியில்லை
தன்னை மட்டும் நினைப்பதில்லை 
தாழ்ந்தோர் என்றோர் பிரிவுமில்லை
உன்னை மட்டும் நாடிவந்தேன் 
உள்ளம் கழுவத் தேடி நின்றேன்
என்பது மட்டும் எண்ணமெனில் 
ஏற்றம் இந்தப் பெருநாளாம்!

06
பெருமை கொள்வதில் பெருமையில்லை 
பேதமை கொண்டு பிரிவதில்லை
வெறுமையிவ் வாழ்வு சதமில்லை 
வேகும் நரகில் விருப்பில்லை
அருமை நபிகள் ஆணையிட்ட 
அன்பும் கருணையும் ஆளுவதில்
ஒருமைப் பட்டு உயர்வதெனில் 
ஒளிரும் இந்தப் பெருநாளாம்!

07
விட்டுக் கொடுப்பதில் வலியில்லை 
விருப்பைத் துறப்பதில் இழப்பில்லை
கட்டி ஆள்வதில் களிப்பில்லை 
கபுருவரை அவை வருவதில்லை
தொட்டுக் கொள்ள இப்றாஹீம் 
தூய நபிகள் காட்டியதைத்
விட்டுவிடாது வழிதொடரின் 
வெளிச்சம் இந்தப் பெருநாளாம்!

08
இன்னுயி ரெனினும் பெரிதில்லை 
இகத்தில் எதுவும் உயர்வில்லை
பின்னைய வாழ்வில் குறையில்லை 
பெருந்தியா கத்துக் கழிவில்லை
தன்னை இழக்க முன்னின்ற 
தகையோர் இஸ்மா யீல் நபிகள்
பண்ணிச் சென்ற முன்வழியைப் 
பழகின் பனிக்கும் பெருநாளாம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: