Thursday, August 31, 2017


நான் ரோஹிங்யா

அலி ஜொஹார் (புதுடில்லி)

ஆம்! நான் ரோஹிங்யா
நான் மியன்மார் தேசத்தான்
ஆயினும்
நானும் ஒரு மனிதன்!

எங்கேனும் நான் கொடுமைக்குள்ளானவன்
எங்கேனும் நான் சித்திரவதைக்குள்ளானவன்
எங்கேனும் நான் கொல்லப்பட்டவன்
எங்கேனும் நான் கடத்தப்பட்டவன்

ஆம்! நான் ரோஹிங்யா
எங்கேனும் நான் கட்டுப்படுத்தப்பட்டவன்
எங்கேனும் எனது உரிமைகள் மறுக்கப்பட்டவன்
எங்கேனும் நான் அவமரியாதைக்குள்ளானவன்
எங்கேனும் எனக்கான நியாயங்கள்
தாமதப்படுத்தப்பட்டவன்

எங்கேனும் நான் எல்லை கடக்கிறேன்
எங்கேனும் நான் பின்னுக்குத் தள்ளப்படுகிறேன்
எங்கேனும் நான் கடலுக்கு இரையாகிறேன்
எங்கேனும் நான் களவாகக் கடத்தப்படுகிறேன்

எங்கேனும் நான் முகாமொன்றுள் அடைக்கப்படுகிறேன்
எங்கேனும் நான் தின உணவு கிடைக்கப்பெறாதவன்
எங்கேனும் நான் தங்க ஓரிடமிருக்கலாம்
எங்கேனும் நான் இடமற்றவனாகிவிடுகிறேன்

எங்கேனும் நான் தடுக்கப்பட்டு வாடுகிறேன்
எங்கேனும் நான் வரையறைக்குள் வளர்ந்து வந்தேன்
எங்கேனும் நான் பாடசாலை மறுக்கப்பட்டேன்
எங்கேனும் நான் காரணமின்றி சிறை வைக்கப்பட்டேன்

எங்கேனும் நான் குப்பை பொறுக்குகிறேன்
எங்கேனும் நான் பட்டினியில் இருக்கிறேன்
எங்கேனும் நான் குழந்தைத் தொழிலாளியாகிறேன்
எங்கேனும் நான் வேலைசெய்ய வற்புறுத்தப்படுகிறேன்

எங்கேனும் எனக்குக் கூரை இல்லை
எங்கேனும் எனக்குக் கட்டில் இல்லை
எங்கேனும் எனது குழந்தைகள் நிர்வாணிகள்
எங்கேனும் நான் ஒரு போர்வையின்றி உறங்குகிறேன்

எங்கேனும் நான் வன்புணர்வுக்குள்ளாகிறேன்
எங்கேனும் நான் பாலியல் அடிமையாயிருக்கிறேன்
எங்கேனும் நான் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறேன்
எங்கேனும் நான் வாழ்வதற்காகப் பாலியலில் ஈடுபடுகிறேன்

எங்கேனும் நான் மனைவியைத் தொலைத்தேன்
எங்கேனும் நான் ஒரு தனித் தாயாகவுள்ளேன்
எங்கேனும் நான் குடும்பத்தைத் தொலைத்து விட்டேன்
எங்கேனும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்

ஆம்! நான் ரோஹிங்யா
சிலர் நான் நாடற்றவன் என்று எண்ணுகின்றனர்
சிலர் நான் அகதி என்கிறார்கள்
சிலர் நான் வேற்று நாட்டவன் என்கிறார்கள்
சிலர் மாத்திரமே என்னை உண்மையாக அறிவர்

எங்கேனும் என்னை 'கலார்' என்கிறார்கள்
எங்கேனும் என்னை 'பங்காளி' என்கிறார்கள்
சிலர் என்னை 'அறபி' என்கிறார்கள்
ஆனால் நானோ அவர்களைச் சேர்ந்தவனல்லன்

எங்கேனும் எனக்கான ஒரு தொழில் இல்லை
எங்கேனும் எனக்கான கல்லூரி தடைசெய்யப்பட்டுள்ளது
எங்கேனும் நான் ஒரு கூட்டில் அடைபட்டுள்ளேன்
எங்கேனும் நான் எந்த உதவியுமற்றவன்

ஆம்! நான் ரோஹிங்யா
நான் மியன்மார் தேசத்தான்
ஆயினும்
நானும் ஒரு மனிதன்
நானும் இவ்வுலகின் ஓர் அங்கத்தவன்
எனக்கும் உங்களைப் போல
ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்
எங்களை இனச்சுத்திகரிப்பு மூலம்
அழித்து விடாதீர்கள்!


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: